Navigation


RSS : Articles / Comments


பயணம் .....................

3:20 PM, Posted by sathiri, 6 Comments

பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந்தவர்கள எமக்காகவே வாழ்ந்தவர்கள்;. அவர்கள் அனைவரும் முள்ளிவாயக்கால் முடிவின் பின்னர் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்து போயிருந்தார்கள் எனவே அவர்களனைவரையும் மீண்டும் சந்தித்து கதைத்து இனி தமிழனால் ஆயுதப் போர் சாத்தியமாகாது அடுத்தது பொருளாதாரப்போர்தான் தமிழனை காப்பாற்றும் என்பதால் இதுவரை ஆயுதப் போரிற்கு உதவியவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் பொருளாதாரப் போரிற்கு உதவ வேண்டும் எனக் கேட்டு அடுத்தகட்டமாக அவர்களது ஆற்றல் அறிவு பொருளாதரவளம் என்பவற்றை மீண்டும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தற்கு உதவ வழிவகை செய்வதே எனது நோக்கமாக இருந்தது

எயார் பிரான்ஸ் விமானத்தில் நான் வசிக்கும் நகரத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த விமானத்தில் நேராக மும்பை செல்லவேண்டும் அதன்படி பாரிசில் மும்பைக்கான விமானத்தில் ஏறியதும் பிரெஞ்சுக்கார விமானப்பாணிப்பெண்ணின் என்னைப்பார்த்து நமஸ்த்தே என்றாள் நான் சிரித்தபடி பிரெஞ்சில் ( bonjour )என்றதும் சிரித்தபடி அவளும் பதிலுக்கு bonjour சொன்னாள்.விமானத்தில் உள்ளே முதல்வகுப்பு பகுதியை கடத்து போகும்பொழுது நோட்டம்விட்டேன். பத்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் வெள்ளையர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் முதல் வகுப்பு பகுதி இந்தியர்களால் நிரம்பியிருந்து ஒருசில வெள்ளைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிவருகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் என மனதில் நினைத்தபடி நடந்துகொண்டிருந்தபொழுது எனக்குத்தெரிந்த நம்மவரும் ஒருத்தர் அங்கு அமர்ந்திருந்தார்.
அவரும் ஒரு குட்டித் தொழிலதிபர்தான். என்னைக்கண்டதும் கையசைத்து ஆ....எப்பிடி சுகம் எங்கை இந்தியாவுக்கோ?? எண்டொரு கேணைத்தனமான கேள்வியையும் கேட்டார். இல்லை இடையிலை டுபாயை கடக்கேக்குள்ளை குதிக்கலாமெண்டிருக்கிறன் என்றேன். அசடுவழிந்தவராய் உனக்கு எப்பவும் நக்கல் சரி சீற்நம்பர் என்ன என்றார். எப்பவும் போலை கடைசி வாங்குதான் சரி இடத்தை தேடிப்பிடிச்சிட்டு ஆறுதலாய் வாறன் என்படி முன்னேறினேன்;.அதற்கு மேலும் அங்கு நின்றால் எனக்கு பின்னால் நிற்பவர்கள் என்னை ஏறிமிதித்தபடி போய்விடுவார்கள். எனது இருக்கையை தேடிப்பிடித்து கைப்பையை மேலே வைத்துவிட்டு அமர்ந்ததும் பக்கத்தில் இருந்த கொஞ்சம் நடுத்தர வயதான பிரெஞ்சு காரசோடியை பார்த்து சிறிய புன்னகையுடன் மரியாதை வணக்கம் ஒன்றை வைத்தேன். பதில் வணக்கம் சொன்வர்கள் உடைனேயே நீங்கள் இந்தியரா எந்த பகுதி எந்தமொழி என்று விசாரணையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள்

இப்படியான கேள்விகள் நீண்டதூர விமான 'இரயில் பயணங்களில் நேரத்தினை போக்கடிப்பதற்காக ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கேட்பது ஒன்றும் புதிதானதல்ல ஆனால் எனக்கு இந்தக் கேள்வி முதல் தடைவையாக மனதில் எரிச்லை தந்தது. ஏனெனில் முன்பெல்லாம் இப்படியான கேள்விகளை யாராவது கேட்டால் அவர்களிற்கு நான் இந்தியர் அல்ல இலங்கைத் தீவில் வடபகுதியை சேர்ந்த தமிழர் எனத் தொடங்கி எமது போராட்டம் பற்றியதொரு சிறு விளக்கத்தையும் கொடுத்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். வென்றுகொண்டிருக்கின்றோம் விரைவில் வெற்றி பெற்று சுதந்திர நாடு அமைத்துவிடுவோம் என நம்பிக்கையுடன் சொல்லி முடிப்பேன் அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர்களும் உங்களிற்கு சுதந்திர நாடு கிடைக்க வாழ்த்துக்கள் என வாழ்த்திப் போவார்கள். ஆனால் இந்தமுறை கேள்வி கேட்டவரிற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபொழுதுதான் எரிச்சல் வந்தது ஆனாலும் வேண்டா வெறுப்பாய் பிரெஞ்சுக்காரன் என்றேன். நான் கொடுத்த பதில் அவன் காதிற்குள் நுளையமுன்னரேயே ஓ நல்லது அப்படியானால் உனது வேர் என்ன? இந்தியாவா? என்றான்.மீண்டும் எரிச்சல்..... நான் மரம் இல்லை வேர் வைப்பதற்கு.. மனிதன் இந்தா பாக்கிறியா என்று எழும்பி என் பின்பக்கத்தை காட்டி பதில் கொடுக்கலாமா என யோசித்தாலும்.அறிந்துகொள்ள ஆவலில்தானே கேட்கிறான் அதுவும் பத்து மணிநேரம் பக்கத்தில் கூடவே வரப்போகிறவன் எதுக்கு பகைத்தக்கொள்வான் என நினைத்து எனது வேர்கள் இலங்கைத்தீவில் இருக்கிறது என்றேன்.


அவரும் ஓகோ சிறிலங்காவா? நான் பலதடைவை பயணம் செய்திருக்கிறேன் அழகான நாடு ஆனால் நான் அங்கு நான் சென்ற காலங்களில் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருந்தது அதனதல் சிறீலங்கவின் எல்லா பகுதிகளிற்கும் போக முடிந்திருக்கவில்லை ஆனால் தற்சமயம் உள்நாட்டு போரிற்கான தீவிரவாதக்குழு அழிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாமே இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளிற்கும் போகலாமென நினைக்கிறேன். அங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது தமூழ்(தமிழ்) என்கிற தரப்பு அவர்கள் வட கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். மற்றையவர்கள் சிங்களே(சிங்களவர்) நான் இவர்களுடன் தான் அதிகம் பழகியிருந்தேன் மிகவும் நல்லவர்கள் அன்பானவர்கள். கண்டி நுவரெலியா அழகான இடங்கள் நீ சிங்களேயா என்றார்... இல்லை நான் தமூழ் வடபகுதியை சேர்ந்தவன். இதுவரை நீங்கள் சொன்ன தீவிரவாத குழுவின் பலஆண்டுகால செயற்பாட்டாளன் என்றுவிட்டு எனக்கு முன்னால் இருந்த திரைத்தொடுகை தொலைக்காட்சியை தட்டத்தொடங்கினேன்.

என்னை ஆச்சரியமாக தலையை திருப்பிப் பார்த்தவாறு நீங்கள் தமிழ் புலியில் உறுப்பிராக இருந்தவரா என்றபடி அவசரமாக அவன் தனது கைப்பையை திறந்து ஒரு அடையாள அட்டையை எடுத்தபடி நான் வடக்கின் குரல்( la voix du nord )என்கிற பத்திரிகையில் ஆசிரியராகவிருக்கிறேன் . அடையாள அட்டையை காட்டியபின்னர் உங்கள் அமைப்பினை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ஏனெனில் நான் அறிந்தவற்றைவிட நீங்கள் சொல்வது உங்கள் பக்கத்து உண்மைத்தன்மையாக இருக்குமல்லவா என்றான். அவனிற்கு பதிலாக நானும் நீயென்ன பெரிய புடலங்காய் பத்திரிகையாளன் நானும்தான் பத்திரிகையாளன் என மனதில் நினைத்தபடி எனது எல்லைகளற்ற பத்திரிகையார் அமைப்பின் பதிவு அடையாள அட்டையை தூக்கி காட்டி நானும்தான் என்றேன். உடைனேயே மகிழ்ச்சியடைந்தவனாய் எனது கைகளை தானாகவே பிடித்து குலுக்கியபடி இந்தப் பயணம் எதிர்பாராத இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக மகிழ்ச்சியை தருகிறது போராடிக்கொண்டிருந்தவர்கள் தரப்பில் எவரையும் எனக்கு சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை பாரிசில் நிறைய தமிழர்கள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் யுத்தத்தின்போது பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்திகளும் கிடைத்திருந்தது . உங்களிற்கு அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கலாம் எங்கே சொல்லுங்கள் என்றான் .அதுவரை அவனது பேச்சினை எரிச்சலாகவும் அவனை ஏளனமாகவும் பார்த்த எனக்குள்ளும் ஒரு மாற்றம் வந்தது அதுவரை அவன் என்னை நீங்கள் என்று மரியாதையாய் அழைத்த பொழுதுகளிலெல்லாம் நான் ஒருமையில் அவனை நீயென்றே பேசிக்கொண்டிருந்த தால்.நான் அவனைப்பார்த்து இதுவரை நான் பேசியதில் உங்களிற்கு ஏதாவது சங்கடமேற்பட்டிருந்தால் மன்னிக்கவும் என்றபடி எமது போராட்டம் பற்றியதொரு நீண்ட விளக்கத்தினை ஆரம்பித்தேன்


முன்பெல்லாம் பயணங்களின் பொழுது எமது போராட்டம் பற்றி பதினைந்தே நிமிடத்தில் கொடுத்த விளக்கத்தினை தற்சமயம் இவரிற்கு ஒண்டரை மணித்தியாலத்திற்கு மேலாக கொடுத்தபின்னர் நாங்கள் தோற்றுவிட்டோம் உரிமைக்காக போராட தொடங்கியவர்கள் இன்று உணவிற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் அதில் எமது தவறுகளும் உண்டு சர்வதேசத்தின் தவறுகளும் உண்டு எங்களிடம் எண்ணெய் வளம் இருந்திருந்தால் இன்று நேட்டோ படைகள் எமது நிலத்தை பாதுகாத்திருக்கும். என்று முடித்தேன்;. அதுவரை எனது விளக்கத்தினை கேட்டவர் ஒரு பெரு மூச்சுடன் தனது இருக்கையை சரித்து அமர்ந்தவராய் உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது அது சரியாக எம்மிடம் எடுத்துவரப்படவில்லை அதே நேரம் உங்கள் அமைப்பு தற்கொலைத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது நடத்தாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பிரதிநிதிகளை தற்கொலை தாக்குதல் மூலம் கொலைகள் செய்ததும் அதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் பெரும் குற்றமாகத்தான் நாங்கள் பாரக்கிறோம் என்றார்... அதைதான் நானும் சொன்னேன் எமது பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றது. ஆனால் பொதுமக்களை இலங்கையரசும்தானே கொன்றது அது தவறில்லையா என்றேன்.அதுமட்டுமல்ல பிரெஞ்சு புரட்சின் போது லியோன் நகரத்தில் மட்டும் அரசு சார்ந்தவர்களின் நாற்பதாயிரம் பேரின் தலைகள் புரட்சியாளர்களால் வெட்டப்படவில்லையா ? அது கொலைகள் இல்லையா என்றேன்..

அவர் அமைதியாக உங்கள் நாட்டில் நடந்தது மக்கள் புரட்சியா?? இல்லைத்தானே ஏனெனில் நானும் ஒரு பத்திரிகையாளன் உங்கள் தேசத்தில் தமிழ் எத்தனை சதவிகிதம் அங்கு எத்தனை சதவிகிதம்பேர் போராடினார்கள்என்கிற அண்ணளவான விபரங்களின் தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும் என்றார்.அதற்கான பதில் என்டம் இருக்கவில்லை ஏனெனில் எனக்கே தெரியும் எமது சனத்தொகையில் குறைந்தது வட கிழக்கு 35 இலட்ச்சத்தில் வெறும் பத்து சத வீதத்தினர்கூட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. வன்னியில் கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே யாழில் புதுவருட கொண்டாட்டமும் நல்லுரில் திருவிழாவும் கொண்டாடியவர்கள் நாங்கள். என்னிடம் பதில் இல்லை எனவே அவரிடம் எனக்கு நித்திரை வருகிறது இரவு வணக்கங்கள் என சொல்லிவிட்டு எனது இருக்கையை பின்பக்கமாக சரித்தபடி படுத்துக்கொண்டேன்....

விமானம் இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு தரையிறங்கவேண்டும் விமானம் மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இறங்கத் தொடங்குகின்றது என்கிற விமானியின் அறிவிப்பை கேட்டதுமே மனைவின் முகம் இறுகிப் போயிருந்தது..மனதிற்குள் ஊரிலுள்ள எல்லா கோயிலிற்கும் நேத்திக்கடன் வைத்திருப்பாள் என எனக்கு தெரியும் .விமனம் தரை தட்டியதும் உங்கடை சினேகிதங்களிற்கொல்லாம் நீங்கள் வாற விபரம் குடுத்திட்டீங்கள்தானே ஒரு பிரச்சனையும் வராதுதானே என்றாள்.ஒரு பிரச்சனையுமில்லை பேசாமல் வா என்று அவளை அதட்டினாலும் எனக்கு ஏ சி குளிரிலும் வியர்ப்பதைப்போல ஒரு உணர்வு இருந்தது. விமானம் நின்றதும்பயணிகள் வெளியேறத் தொடங்கினார்கள். முதல் வகுப்பு பகுதியிலிருந்த எனக்கு தெரிந்த நம்மவர் எனக்காக காத்திருந்தவர் என்னைக் கண்டதும் முதலில் எங்கை இந்தியாவுக்கோ என்று கேட்டு அசடு வழிந்ததை மனதில் வைத்து இந்தத் தடைவை எங்கை மெட்ராசுக்கோ என கேட்காமல் மிக அவதானமாக..அடுத்த மெட்ராஸ் பிளேனுக்கு இன்னும் 6 மணித்தியாலம் காத்திருக்க வேணும் வா ஏதாவது லோஞ்சிலை போய் டீ குடிச்சபடி கதைக்கலாமென்றவரிற்கு. நான் மெட்ராஸ் போகேல்லை இஞ்சை பொம்பேயிலை வெளியாலை போறன் என்றதும். பொம்பேயிலையா??யார் இங்கை இருக்கினம் ஏதும் பிசினஸ்சோ? என்றவர் முடிக்கு முதலேயே ஓமோம் இஞ்சை பால்தக்கரேயை ஒருக்கா சந்திக்கவேணும் திரும்பவும் பிரான்ஸ் வந்ததும் போனடிக்கிறன் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டு குடிவரவு குடியகல்வு(இமிக்கிறேசன்) பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


பால்தக்கரேயா? என்று தலையை சொறிந்தவர் நான் உண்மையிலேயே வெளியேதான் போகிறேனா என எட்டியெட்டிப்பார்த்து உறுதி செய்தவர் தனது விமானம் மாறும் பக்கத்தை தேடிப் போய்விட்டார். இமிக்கிறேசனில் எனது முறை வந்தது நான் எனது மற்றும் மனைவியின் கடவுச்சீட்டுக்களை அதிகாரியிடம் நீட்டினேன். எனது கடவுச்சீட்டை பிரித்து விசாவினைப்பார்த்தவர் கடவுச்சீட்டை கணணிஇயந்திரத்தில் ஒரு இழுப்பு இழுத்து பார்த்துவிட்டு வெளியேறும் சீலை எடுத்து ஒரு குத்துக் குத்தினார் அப்பொழுது மனைவியை லேசாய் திரும்பிப் பார்த்தேன் அப்பொழுழுதான் அவள் கண்களில் கொஞ்சம் மகிழ்ச்சி இழையோடியது.அடுத்ததாய் மனைவியின் கடவுச்சீட்டை பிரித்தவர் முன்னும் பின்னுமாய் பிரட்டினார் மனைவியையும் கடவுச்சீட்டையும் மாறிமாறிப்பார்த்தார்.பின்னர் எங்கே பழைய பாஸ்போட் என்றார். பழைய பாஸ்போட் பிரான்சில். கொண்டுவரவில்லை என நான் பதில் சொன்னதுமே மனைவி முந்திக்கொண்டு அது முடிந்ததால்தான் பிரான்ஸ் இந்திய தூதரகத்தில புதிதாய் எடுத்தோம் என்றாள். கடுப்பான அதிகாரி அது எனக்கு தெரியும் அதுதான் பழையதை கேக்கிறேன் என தொடங்கியவர் அதுவரை புழக்கத்தில் இருந்த ஆங்கிலம் இருவரிடமும் கிந்திக்கு தாவியது. எனக்கு பாதி புரிந்ததும் புரியாமலும் போகவே அப்பாடா நம்ம பிரச்சனை முடிஞ்சுது நான் ஒரு ஓரமாய் நிக்கலாமென ஒதுங்கிக்கொண்டாலும் .என்னைத்தான் ஏதாவது நோண்டுவார்கள் என நினைத்துப்போனால் மனைவியை போட்டு நோண்டிக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாகவும் இருந்தது. மனைவிக்கும் அவரிற்குமான சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர்.மனைவியின் கடவுச்சீட்டிலும் சீலை ஓங்கி ஒரு குத்தி அனுப்பிவிட்டார்.

வெளியே வந்ததும் விமான நிலைய வாசலில் பெரிய மண்மூடைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பரண்களில் இந்திய இராணுவத்தினர் காவலில் இருந்தனர். இலங்கையில் இந்தியப்படை காலத்தில் எஸ்.எல். ஆர். மற்றும் எஸ்.எம்.ஜி துப்பாக்கிகளுடன் மட்டுமே பார்த்துப்பழக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கைகளில் ஏ.கே m s. T 56 தூக்கியபடி அங்குமிங்குபும் திரிந்தனர். ஆனால் வெளியில் காவல்த்துறையினரின் கைகளில் இன்னமும் மூங்கில் கொட்டான்களுடன்தான் திரிகின்றார்கள். வெளியே வந்ததும் வரவேற்பு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றிருந்தார்கள்.பாரிசில் சைபர் பாகை குளிரில் புறப்பட்ட எனக்கு 33 பாகை வெப்பம் முகத்திலறைந்து வரவேற்றது. விமான நிலையத்தில் எங்களை வரவேற்பதற்காக மனைவியின் தம்பியும் எனது நண்பன் டோனியலும்(டானியல்)வந்திருந்தார்கள்.அங்கிருந்த கூட்டத்தில் அவர்களை தேடி கண்டு பிடிப்பதே சிரமமாக இருந்த. அங்குமிங்கும் மிலாந்தியபடி நின்ற என்னை பார்த்து சியாம் என கத்தியபடியே பூங்கொத்துடன் ஒடிவந்த டோனியல் மனைவியின் கையில் பூங்கொத்தினை திணித்துவிட்டு என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டான். ஒரு சில செக்கன் மௌனம் மட்டும் பேசியது எங்களை விடுவித்துக்கொண்டு ஒருவரையொருவர் நேராக பார்த்போது எங்கள் இருவரின் கண்களுமே கலங்கியிருந்தது.

டோனியலால் அடக்கமுடியவில்லை அழுதேவிட்டான் அவனை தட்டி தேற்றியபடி மனைவியின் சகோதரரையும் தேடிப்பிடித்தோம். அங்கேயும் சில நிமிட பாசபரிமாற்றங்கள் முடிந்தபின்னர் ஒரு வாடைகைக் காரில் ஏறினோம்.கார் நகரத் தொடங்கியது .ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று சொல்லப்படும் தாராவிப் பகுதியில்தான் எனது நண்பன் குடியிருந்தான். எனக்காக அந்தப் பகுதியிலேயே ஒரு விடுதியை பதிவு செய்து வைத்திருந்தான். விடுதி நோக்கி போய்கொண்டிருக்கும் போதே டோனியலின் பேச்சு முழுதுமே நடந்து முடிந்த இறுதி யுத்தம் பற்றியதாகவேயிருந்தது.இடையிடை எல்லமே வீணாய் போச்சுதே என்று சொல்லிக்கொண்டே வந்தான். நானும் வெளியால் நோட்டம் விட்டபடியே அவனிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். மும்பை வெகுவாகவே மாறி விட்டிருந்தது அதிவேக வீதிகள் ..அகலப்படுத்தப்பட்ட சாலைகள் கட்டிடங்கள் என முன்னேறியிருந்தாலும் அதிகமான வாகனங்கள் புழுதி என்றும் முன்னேறியிருந்தது. நாங்கள் விடுதியயை வந்தடைந்ததும் மனைவியும் அவளது சகோதரரையும் விடுதியில் தங்கவைத்துவிட்டு நான் டோனியலுடன் அருகேயிருந்த அவனது அறைக்கு சென்றேன். குளவிக்கூடுகள் போல் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கள் நாற்றமெடுத்த சாக்கடை வாசனை குறுகலான பாதை தாண்டி அவனது அறைக்குள் நுளையும் போது பார்த்துவா தலையில் அடிபடப்போகுது என்றான்.

குனிந்து உள்ளே நுளைந்தேன். ஒரு பிளாஸ்ரிக் பாயை விரித்துவிட்டு உக்காரு என்றவன் ஒரு துணிப்பையிலிருந்து இரண்டு பியரை எடுத்து வாயால் கடித்து துறந்தபடி கிளாஸ் வேணுமா என்றான்.வேண்டாமென சொல்லி ஒரு போத்தலை வாங்கிய நான் அறையினை ஒருதடைவை மேயந்தேன்.ஒரு 3 மீற்றர் நீளம் இரண்டு மீற்றர் அகலம் மட்டுமே கொண்டதொரு அறை டோனியலும் அவனது நண்பனும் குடியிருந்தனர் ஒரு சிறிய தொலைக்காட்சிப்பெட்டி எந்தத் தளபாடங்களும் கிடையாது சுவரில் ஒரு கலண்டல் அதில் சிரித்தபடி ஜஸ்வர்யாராய். சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டு உடுப்புப் பெட்டிகள் இவ்வளவுதான். இந்தப் பகுதிகள் எனக்கு ஏற்கனவே பழகியிருந்தாலும் சுத்தமாக இருந்த ஜரோப்பாவில் நீண்டகாலம் இருந்துவிட்டு சாக்கடை நாத்தமும் அழுக்கான ஒரு இடத்தில் நுளையும் போது கொஞ்சம் சங்கடமாகத்தானிருந்தது.அதனை நண்பனிடம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அங்கிருந்து வெளியேறவேண்டும் போல இருந்தது.வாயேன் முன்னையை போல கடற்கரையில் போயிருந்து பியரடிக்கலாமென்றேன். கடற்கரை முன்னையை போல இல்லடா. அந்த அட்டாக்கிற்கு பிறகு (மும்பைத்தாக்குதல்)இரவிலை சரியான கெடுபிடி கண்டபாட்டிற்கு போலிஸ்காரன் அடிப்பான் இரவு நேரத்திலை கடற்கரையோரமா ஒதுங்கிற ஜோடிகளை கூட போலிஸ் விட்டுவைக்கிறதில்லை.நீயும் வெளிநாட்டிலையிருந்துவந்து அடிவாங்கப் போறியா என்றான்.

போலிசிடம் அடிவாங்கிறதை விட இந்த நாத்தமே பறவாயில்லை என்று தோன்றியது. பியரை உறிஞ்சினேன். என்னடா இப்பிடியாயிட்டுதே என்கிற டோனியலின் புலம்பலை தவிர்ப்பதற்காக பொம்பே இப்ப எப்பிடி என்று தொடக்கினேன். பொம்பே இப்பொழுது கொலைகள் கொள்ளைகள் குறைந்திருக்கிறது. ஆனாலும் தாதா கும்பல்களின் கள்ள வியாபாரங்கள் தொடர்ந்து நடக்கிறது.அவர்களிற்குள் மோதல்கள் குறைந்துள்ளது.கலவரங்களை தொடர்ந்து பெரும்பாலான முஸ்லிம்கள் பொம்பேயை விட்டு வெளியிடங்களிற்கு சென்றுவிட்டார்கள்.என்று மும்பைபையை பற்றி பேசினாலும் அடிக்கடி முள்ளிவாய்க்காலிற்கும் போய் வந்தோம் நேரம் அதிகாலை 5 மணியாகிவிட்டிருந்தது என்னை விடுதிவரை கொண்டு வந்து விட்டவன் மறுநாள் சந்திப்பாதாக விடைபெற்றான்.
இந்த இந்தியப் பயணத்தில் நான் பல நண்பர்களையும் சந்தித்திருந்தாலும் எமக்கு ஒரு தேசம் தேவை என்பதற்காக தங்கள் வாழ்வு முழுவதையுமே அர்ப்பணித்த மூன்று முக்கியமான நண்பர்களை பற்றி இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த மூன்று பேரில் முதலாவதாக நான் இப்பொழுது சந்தித்திருப்பவன்தான் டோனியல்

டோனியல் பெங்களுரை சேர்ந்தவன் அவன் பொறியியல் படித்ததுக்கொண்டிருந்த 83ம் ஆண்டு காலகட்டத்தில்தான் இலங்கை தமிழர் படுகொலைகள் நடந்தது அதன் பாதிப்பால் 84 ம் ஆண்டளவில் இந்தியாவில் இயங்கிய ஈழ விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளை ஓற்படுத்தியவன் பின்னர் புலிகள் அமைப்புடன் நெருக்கமாகிக்கொண்டான்.ஆங்கிலம் கிந்தி கன்னடம் மராட்டி மலையாளம் என சரளமாகப் பேசக்கூடியவன். 91 ம் ஆண்டுகளிலிருந்தே நானும் அவனும் இணைந்து வேலைகள் செய்யத் தொடங்கியிருந்தோம். அதுவும் நானும் அவனும் 92ம் ஆண்டு கம்போடியா நாட்டில் திரிந்த காலங்கள் மறக்க முடியாதவை. எங்கள் இணைந்த வேலைத்திட்டங்கள் 2001 ம் ஆண்டுடன் நிறைவிற்கு வந்திருந்து

2001 ம் ஆண்டு புலிகள் அரசு பேச்சு வார்த்தைகள் தொடங்கியபோதே புலிகள் அமைப்பானது அமைப்பிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் பல அதிகார மற்றும் நிருவாக மாற்றங்களை கொண்டுவந்தனர். அதன்போது வெளிநாடுகளில் தனியாகவும் குழுக்களாகவும் இயங்கிவந்த பல தனிநபர் மற்றும் குழு செயற்பாடுகள் அனைத்தையும் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் நேரடிகட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அவற்றில் முக்கியமாக நிதி.ஆயுதம். இராணுவ மற்றும் சக தொழில்நுட்பம்.பரப்புரை அரசியல். .வழங்கல்.(கப்பற்போககுவரத்துக்கள்)வெளியக புலனாய்வு. இதரவளங்களான மருத்துவம்.உணவு எரிபொருள் என்பன முக்கியமானதாகும்.இவையனைத்துமே அனைத்துலக செயற்பாட்டின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்து பொறுப்புக்களையும் கட்டுப்படுத்தும் முடிவெடுக்கும் சக்திமிக்கஅதிகாரங்களனைத்தையும் மணிவண்ணன் எனப்படும் கஸ்ரோவின் கைகளில் புலிகளின் தலைமை ஒப்படைத்திருந்தது. அதனையடுத்தே புலிகள் அமைப்பின் மிகப்பெரிய வெளிநாட்டு கட்டமைப்பான ஆயுதம் வழங்கல் நிதி என பொறுப்பிலிருந்த கே.பி கொம்பனி எனப்படும் கே.பத்மநாதனின் நிருவாகம் அனைத்துலக செயலக்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து தனிதனியாகவும் சிறு குழுக்களாக இயங்கிய வேறு பொறுப்புக்களும் அனைத்துல செயலகத்திடம் ஒப்படைக்கும் உத்தரவு வெளிநாடுகளில் வழ்ந்தவர்களிற்கு அனுப்பப் பட்டது. புலிகள் அமைப்பானது தற்சமயம் ஒரு நாட்டினை நிருவகிக்கும் அரசு என்கிற நிகை;கு வந்து விட்டபடியால் நிருவாக இலகிற்காகவும்.அதே நேரம் சம்பந்தப் பட்ட துறைகளை நிருவகிப்பதற்கு அந்தத் துறை சம்பந்தமான கல்வியறிவு கொண்டவர்களால் நிருவகிக்கப்படவேண்டும் எனவேதான் இந்த மாற்றங்கள். எனவே தங்களால் அனுப்பப்படுவோரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்குமாறு ஆறு பேரடங்கிய சிறு குழுவாக இயங்கிக் கொண்டிருந்த எமக்கும் அதே உத்தரவு கிடைத்தது.

உத்தரவுக்கமைய அத்துடன் நானும் அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டு புதிதாக அனுப்பப்பட்டவரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயாரானேன்.கிழக்கு ஜரோப்பிய நாடென்றில் மருத்துவம் படித்து விட்டு வந்த ஒருத்தர் என்னை வந்து சந்தித்தார்.நானும் என்னிடம் இருந்த ஆவணங்களை எடுத்துச்சென்று அவரிடம் கையளித்து விட்டு எனது தெடர்புகளையும் அவரிற்கு அறிமுகம் செய்து விட்டு அவருடன் தைத்துக்கொண்டிருக்கும்போதே அவரின் படித்த ஆணவம் தான் தெரிந்தது.அதே நேரம் அவர் என்னுடைய ஆலோசனைகளையோ வேறு விபரங்களையே கேட்டுத் தெரிந்து கொள்பவராக இருக்கவில்லை. உங்கள் வேலை முடிந்து விட்டது நீங்கள் போகலாமென்றார்.குரங்கின் கையில் பூமாலையை ஒப்படைக்கிறேனே என்கிற ஆதங்கம் எனக்கு அப்பொழுதே எழத்தொடங்கிவிட்டிருந்தது. எனது பிள்ளையை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு போகின்ற மனநிலையில் அன்று எனது பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்துவிட்டு.எனது தனிப்பட்ட பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் புதியதொரு வாழ்வினை ஆரம்பிக்கவும்.பிரான்ஸ்நாட்டில் தமிழர்களே இல்லாத ஒரு மானிலத்தினை தேர்ந்தெடுத்து தற்சமயம் நான் வசிக்கும் நகரிற்கு வந்து குடியேறி திருமணமும் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாகிவிட்டேன்.என்னைப்போலவே என்னுடன் இயங்கிய மற்றையவர்களும் ஒதுங்கிக்கொண்டு தனிப்பட்ட வாழ்வினுள் நுளைந்தபொழுது டேனியலும் தன்னுடைய வீட்டிற்கு போயிருந்தான்.அவனது தாயார் ஏற்கனவே இறந்து போயிருந்தார். அவன் பலவருடங்கள் தொடர்புகளின்றி நாடுநாடாகத் திரிந்த காலங்களில் அவனது உறவுகளுடன் தொடர்புகளற்று இருந்தான்.

அந்தக் காலகட்டங்களிலேயே தந்தையாரும் இறந்துபோய்விட்டார் அந்தத் தகவல்கள் இவனிற்கு கிடைத்திருந்தாலும் அவனால் போக முடியாத நிலையிருந்தான். டோனியலின் தொடர்புகள் இல்லாததனால் அவனும் இறந்து போயிருக்கலாமென நினைத்த அவனது சகோதர சகோதரிகள் தங்களிற்குள் சொத்தினை பங்கு போட்டிருந்தனர்.டோனியலைக் கண்டதும் அவர்களிற்கு மகிழ்ச்சி அல்ல அதிர்ச்சியடைந்தனர். சொத்தில் பங்கு கேட்கப் போகிறான் என நினைத்து அவனுடன் யாரும் சரியாகவே பேசிக்கொள்ளவில்லை அதனால் மனம் வெறுத்தவன்.தனக்கு பழக்கமான கேரளாவிற்கே திரும்பி அங்கு தோத்தூர் பகுதியில் நண்பர்களின் உதவியுடன் ஒரு பலசரக்கு கடை ஒன்றினை திறந்து தன்வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தவன் .சில வருடத்திலேயே கடை ஒன்றினை செந்தமாகவாங்கி முதலாளியாகியுமிருந்தான்.அவ்வப்பொழுது எங்களிற்கான தொலைபேசி நலம் விசாரிப்பக்கள் நடக்கும். அப்பொழுதெல்லாம் என்னடா ஏதாவது ஒரு கேரள பெண்குட்டியை பிடித்துக்கொண்டு செட்டிலாகலாமே எனக் கேட்பேன். போடா தமிழீழம் கிடைக்கட்டும் பிறகு யாராவது ஒரு போராளி பெண்ணைத்திருமணம் செய்துகொண்டு செட்டிலாகலாமென்பான்.இப்படியாகவே காலங்கள் போய்க்கொண்டிருந்தபோதுதான் 2008 ன் நடுப்பகுதிகளில் என்னுடன் கதைக்கும்போது S.Oகொம்பனி(சூசை) தொடர்பெடுத்திருக்கினம் அவையளோடை வேலைசெய்கிறேன் என்றான். பின்னர் 2009 பங்குனி மாதமளவில் தொடர்பு கொண்டவன் அவசரமாக மருந்துகள் அனுப்பசொல்லி கேட்டிருந்தார்கள் அதன் பட்டியல் கிடைக்கவில்லையென்றான்.

பின்னர் பதினைந்து நாட்களின் பின்னர் அவனிற்கு அவசர முதலுதவி மருந்துகள் அடங்கிய பட்டியல் ஒன்று கிடைத்தது .வழமையாக அவனிற்கு கிடைக்கும் பட்டியலின் பொருட்களிற்கான பணம் வெளிநாடொன்றிலிருந்து அவனிற்கு கிடைத்துவிடும். ஆனால் இந்தத் தடைவை அவனிற்கு பணம் கிடைக்கவில்லை கால சூழ்நிலையை மனதில் வைத்து பட்டியல் கையில் கிடைத்ததுமே வேகமாக செயலில் இறங்கியவன்.கையிலிருந்தபணம் கொஞ்சம் கடன் மிகுதி வழைமையான கொள்வனவாளர்களிடமிருந்து கடனடிப்படையில் சுமார் 5 இலட்சம் இந்தியபணத்திற்கான மருந்துகளை கொள்வனவுசெய்துவிட்டு S.O கொம்பனிக்கு செய்தியனுப்பியிருந்தான் விரைவில் வண்டி வரும் என்று செய்தியும் கிடைத்திருந்தது.ஒரு நாள் இரண்டுநாளென நாட்களை எண்ணியவாறு குறிப்பிட்ட இடத்திற்கு ஒவ்வொரு இரவும் சென்று காத்திருக்கத் தொடங்கினான்.ஒவ்வொரு நாள் அதிகாலையும் எனக்கு நோ .......என எஸ் எம் எஸ் வரும்.நாட்கள் 50தை தாண்டியது

அன்று மே 20ந்திகதி அதே எஸ் எம் எஸ் வந்தது அவனுடன் தொடர்புகொண்டேன்.படபடப்பாக என்னடா ஒண்ணரை மாசமாயிட்டுது வாங்கின மருந்துகள் கனக்க தேதி முடியப்போகிறது வண்டி வந்தபாடில்லை என்ன பண்ணிறதெண்ணே தெரியலை சாலை பகுதி பிடிபட்டதா அடிபடுது ஒண்டுமே புரியலை என்றான். முப்பது வருடகால ஆயுதப்போராட்டத்தின் திகதியே முடிந்துவிட்டதென்பதை தெரியாமல் அவன் வாங்கிய மருந்துகளின் திகதிகளிற்காக கவலைப்பட்டுக்கொட்டிருந்தான்.அவனிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல். இனி வண்டி வருமென்று நான் நினைக்கவில்லை எனவே முடிந்தால் மருந்துகளை திரும்ப கொடுத்துவிட்டு உன்னுடைய வேலையை பார் என்றென். இல்லடா மனசு கேக்கலை இன்னம் கொஞ்சநாள் பாக்கிறேன். என்றான் அன்றிருந்த மனநிலையில் நானும் அவனுடன் அதிகம் பேசவில்லை.

சிலநாட்கள் காத்திருந்தவன் நிலைமைகளை அறிந்துகொண்டு மீண்டும் தொடர்புகொண்டு தழுதழுத்த குரலில் என்னடா இப்பிடியாயிட்டுதே என தொடங்கியவன் அப்படியே தொடர்ந்தபொழுது நீ வையடா நான் உனக்கு போன் அடிக்கிறன் உனக்கு வீணாய் செலவாவும் என்ற என்னிடம்.. அட போடா என்ன பணம் பெரிய பணம் எல்லாமே பேயிட்டுது பணத்தை வைத்து என்ன குண்டி துடைக்கவா என்றவன். இந்தமுறை கொள்வனவு பணம்கூட கிடைக்கவில்லை கடன் வாங்கியவர்கள் நெருக்குகிறார்கள். திரும்பவும் மருந்துகளை கொடுக்க முடியாது பிரச்சனை பெரிசானால் போலிஸ்... கேஸ்.... என்று போய் நான் ஜெயிலுக்கு போகவேணும்.அதுகூட பரவாயில்லை ஒரு வசனம்கூட பேசாலமெண்டால் இது வரை பணம் அனுப்பியவர்களின் தொலைபேசிகள் எதுவும் பதிலில்லை ஒரு வாட்டி நீ போனடித்துப்பார் என்று சில இலக்கங்களை தந்தான்.அதில் பல எனக்கு தெரிந்த இலக்கங்கள்தான் அந்த இலக்களிற்கு நானும் தொடர்புகெண்டு பார்த்தேன் அனைத்தும் செயலிழந்திருந்தது. அதனையும் அவனிடம் தெரிவித்திருந்தேன்.அதன் பின்னர் தன்னுடைய கடையை விற்று கடனை அடைத்தவன் மிகுதி பணத்துடன் மும்பைக்கு இரயிலேறிவிட்டிருந்தான். மும்பைக்கு வந்தவன் ஒரு அமைதியான வழ்வினை வேண்டி தனக்குத் தெரிந்த நட்பின் உடவிகளுடன் தன் வாழ்விற்கான ஒரு ஆதரத்தினை நிலை நிறுத்திக்கொள்ள மும்பையின் பிரபலமான நுற்றாண்டுகளை கடந்து நிற்கும் மலை மாதா தேவாலயத்தின் பாதிரியாரின் உதவியினை நாடியிருந்தான். அவன் உதவி தேடிப்போயிருந்த நேரம். அந்தப் பகுதியில் மெழுகுதிரி கடை வைத்திருந்த ஒரு வயதான பெண்மணி இறந்து போயிருந்ததால் அந்த இடம் காலியாயிருந்தது அந்த இடம் டோனியலிற்கு கிடைத்தது. தேவன் ஒரு வாசலை அடைத்தால் இன்னொரு வாசலை திறப்பார் என்கிற பைபிள் வசனம் யாரிற்கு பொருந்தியதோ இல்லையோ டேனியலிற்கு பொருந்தியது

டோனியலுடன் அதிகாலை 5 மணிவரை கதைத்துவிட்டு வந்து படுத்தாலும் புதிய இடம் தூக்கம் அதிகம் வரவில்லை காலை 9மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிட்டிருந்தேன்.மும்பையில் நான் சந்திக்கவேண்டியவர்களையெல்லாம் மலைமாதா கேயிலடிக்கே வரச்சொல்லியிருந்தேன். டோனியல் என்னை அழைத்து போவதற்காக ஒரு ஆட்டோவுடன் தயாராக வந்திருந்தான். இந்தியாவில் மும்பையில் மட்டுமல்ல மகாராஸ்ரா மானிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எனக்கு ஒரேயொரு ஆச்சரியம் என்னவென்றால். அங்கு அனைத்து ஆட்டோக்களிலும் மீற்றர் போட்டு அதற்கான பணம் மட்டுமே வாங்கினார்கள்.


மாதா தேவாலயத்திற்கு சென்று இறங்கியதும் டோனியல் தன்னுடைய கடைக்கு அழைத்துப்போனான். அங்கு ஒரு கால் சரியாக நடக்க முடியாத ஒரு 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெடியன் கடையை கவனித்துக்கொண்டிருந்தான்.அவனிற்கு என்னை கிந்தியில் அறிமுகப்படுத்தியவன்.என்னிடம் நான் இங்கை கடை தொடங்கிய காலத்திலை இந்தப்பய இங்கைதான் பிச்சையெடுத்திட்டு திரிஞ்சான். அனாதைப்பய அவனை பிடிச்சு பிச்சை எடுக்கிறது கூடாது வா நான் வேலை போட்டுத்தாறேன்.படிக்கிறியா என்று கேட்டேன் அவனும் ஆமான்னான்.பகலிலை கடையை பாத்துக்கிறான்.இரவு பள்ளியிலை சேத்திருக்கிறன். படிக்கப்போறான்.என்றான். மும்பையில் இறங்கியதுமே டோனியலிற்கு ஒரு சிறுதொகை பணத்தினை கொடுப்பதற்காக எடுத்து தயாராக வைத்திருந்தேன் அதனை அவன் கையில் கொடுத்தால் வாங்கமாட்டான்.என்பது எனக்கு தெரியும் அதற்கான சந்தர்ப்பம் இப்பொழுது எனக்கு கிடைத்திருந்தது.அவனுடன் பேசிய படியே கடையில் இரண்டு மெழுகு திரியை எடுத்தேன். என்ன அக்கா(எனது மனைவியை) கோயிலுக்கு போகணுமா என்றான் இல்லை நானும்தான் என்றேன் என்னை ஆச்சரியமாக பார்த்தவன் என்ன சாமிப் பக்தியெல்லாம் வந்திட்டுதா??என்றான்.


ஏனெனில் எனது சிறிய வயதில் தீவிர சாமிப்பக்தனாக இருந்த நான் எனது பதினாறு வயதுகளிலிருந்து நாத்திகனாக மாறிவிட்டிருந்தேன். அது டோனியலிற்கு தெரியும்.அதனால்தான் அவன் அப்படிக்கேட்டான். எங்கள் சுயநலத்திற்காகவும் எங்கள் தேவைகளிற்காகவும் சிலநேரங்களில் சாமியை நம்பவேண்டியிருக்கிறது என்றபடி நான் தயாராய் வைத்திருந்த பணத்தையெடுத்து அந்தப் பையனின் கையில் திணித்தோன். அந்தப் பையன் எதுவும் புரியாமல் முழித்தபடி டோனியலை பார்க்க டோனியல் இதென்னடா என்றான். இது மெழுகு திரிக்கானது இதனை வாங்காவிட்டால் எனக்கு மெழுகுதிரிவேண்டாம் நான் கோயிலுக்கு போகவில்லையென்றேன்.அதுக்காக என்று இழுத்தவன் சரி நம்ம கடைக்கு இப்படியான கஸ்ரமர் நிறைய வந்தால் நான் சீக்கிரமே மில்லியனர் ஆயிடுவேன்டா என்று சிரித்தபடி எனது மெழுகுவர்த்திகளை அவன் வாங்கியபடி மேலும் சில மெழுகுதிரிகளை கடையில் எடுத்தபடி கோயிலிற்குள் நடந்தான். நாங்களும் அவனுடன் கோயிலிள் நுளைந்து மெழுகுதிரிகளை ஏற்றிவிட்டு எனக்கு கடவுளிடம் வேண்டுதல்களை வைப்பதில் உடன்பாடில்லை எனவே எல்லாரும் நல்லா இருக்கவேணும் என மனதில் வேணடிவிட்டு.வெளியே வந்து காத்திருந்தேன்.

மற்றைய நண்பர்களும் வந்து சேர்ந்ததும் ஒரு உணவு விடுதியில் அனைவரும் மதிய உணவை உண்டபடி பேசிவிட்டு. மீண்டும் எப்பொழுதாவது சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போமென கூறி விடை பெற்றுக்கொண்டேன். அன்றிரவு பெல்கம் (கர்னாடகா மானிலம்)புறப்படவேண்டும் அங்குதான் மனைவியின் தாயார் குடியிருக்கிறார்.எனவே மனைவி கடைத்தெருவிற்கு போய் கொஞ்சம் பொருட்கள் வாங்கவேண்டுமென்றாள். பெண்களுடன் கடைக்கு பேவதென்றால் என்னவென்பது திருமணமான அனைத்து ஆண்களிற்கும் அனுபவப்பட்ட விடயம்தானே .அந்த அவஸ்த்தையை நான் அனுபவிக்க விரும்பாததால் நான் அறைக்குபோகிறேன் நீ போயிட்டுவா என வழியனுப்பி வைத்துவிட்டு அறைக்கு போய் விட்டேன் .டோனியலும் கடைக்கு போய் விட்டு இரவு வழியனுப்ப பஸ் நிலையம் வருவதாக கூறி சென்று விட்டான். நான் அறைக்கு சென்று ஓய்வெடுத்த பின்னர். அன்றிரவு எமது பெல்கம் நோக்கிய பயணம் தொடங்கியது. .....இந்தப் பயணம் பற்றிய தொடர் எழுதுவதற்கு எனக்குரிய வேலைப்பழுக்கள் மற்றும் நேரமின்மை காரணமாக விரிவாக எழுதாமல் சுருக்கமாக முக்கியமானவற்றை மட்டும் எழுத முடிவெடுத்துள்ளேன் அதன்படி எனது அடுத்த பயணமாக சென்னை நோக்கிய பணயம். அங்கு முக்கியதாக நான் சந்தித்தவர்கள்.சுசீந்திரன். யாழ்கள உறவும் பேட்டைக்காரனுமான வ.ஜ.ச.ஜெயபாலன்.இடதுசாரி கட்சி நண்பர் சி.மகேந்திரன்

சென்னைக்கு நான் வருவதாக நண்பர்களிற்கு சொன்ன திகதிக்கு போகமுடியவில்லை திடீரென புனேக்கு செல்லவேண்டி வந்ததால் பூனே பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு வாரம் கழித்துத்தான் சென்னைக்கு புறப்பட்டேன்..எனது சென்னைப் பயணம் எந்தக் காரணத்தாலும் அரசியலாகியோ பலரிற்கு அவலாகியோ விடக்கூடாது என்பதில் மிக கனவனமாக இருந்தேன்.அதனால் தனியாக தங்குவதற்கு சென்னை செல்ல முன்னரேயே நண்பர் சுசியிடம் சென்னையில் எனக்கு தங்குவதற்கு ஒரு இடம் பார்க்குமாறு கூறியிருந்தேன். இந்தச் சென்னை மகா நகரத்தில் தங்குவதற்கா இடமில்லை வாருங்கள் தாராளமாக இடம் இருக்கிறதென்றார். காலை 6 மணிக்கு சென்னை கோயம்பேடு அண்ணாச்சியின் சரவணபவான் சாப்பாட்டுக்கடை முன்னால் பஸ் நின்றது. இறங்கியதும் சுசிக்கு நான் வந்துசேர்ந்துவிட்டதாக தொலைபேயடித்தேன் அரைமணி நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லியிருந்தார். சரவணபவானிற்கு முன்னால் படிக்கட்டில் அமர்ந்நதபடியே இப்படி உலகம் முழுதும் கடையை துறந்து வைச்சிட்டு அண்ணாச்சி ஒரு பெண்ணைத்தொடப்போய் அனியாயமாய் உள்ளை கம்பிஎண்ணிக்கொண்டிருக்கிறாரே ஆசை யாரை விட்டதுஎன மனதில் நினைத்தேன். சுசி வந்து காரில் ஏற்றிக்கொண்டு விடுதியை நோக்கி போய்க்கொண்டிருந்தார் அவருடன் கதைத்தபடியே போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பூங்காவையும் அதனருகே ஒருசிலையையும் கவனித்த எனக்கு இந்த பூங்கா நல்ல பழக்கமானதொரு பூங்கா எனநினைத்தபடி சட்டென்று சுசியிடம் இது பனகல்பார்க்தானே என்றேன்.அதேதான் இது பாண்டிபஜார் இங்குதான் றூம்போடடிருக்கிறேன் போலீஸ் ஸ்ரேசன் பக்கத்திலைதான் அன்று பிரபாகரனை கைது செய்த இங்ஸ்பெக்ரர் நந்தகுமார் இப்போது உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ தெரியாது என்று சொல்லி சிரித்தார்.

பாண்டிபஜாரிற்கும் எமக்கும் ஏதோ பூர்வீக தொடர்பு இருக்கிறது போலை என்று நினைத்தபடியே. 1981ம் ஆண்டு அன்று பாண்டிபஜாரில் பிரபாகரனும் உமாவும் சந்திக்காமல் போயிருந்தால்????எனது மனதில் ஓடத்தொடங்கிய சிந்தனையை பலவந்தமாக கலைத்துவிட்டேன். வரலாற்றின் பக்கத்தில் தற்செயலான நிகழ்வுகள் சாதகமாக அமைந்துவிட்டால் அது தன்னால்தான் என மார்தட்டிக்கொள்ளும் மனிதர்கள். அவை தவறாகப்போய்விட்டால் அப்படி நடக்காமல் விட்டிருக்கிலாம்.அப்படி செய்யாமல் விட்டிருக்கலாம்.என ஆயிரம் ல்' களையும் ம்" களையும் மாறி மாறி போட்டுப்பார்த்து புலம்பிக்கொண்டிருக்கும். என்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தாலும் எமது தோல்விகளின் தாக்கம் இந்தியப்பயணத்தில் நானும் பல இடங்களில் அந்த ல்"களையும்.ம்" களையும் நினைத்துப்பார்த்து புலம்பியதும் உண்டு.

கார் தியாகராஜா வீதியில் ஒரு விடுதியின் முன்னால் வந்து நின்றது.அறைக்கு சொன்று ஓய்வெடுக்குமாறும் தான் மதியம் வருவதாக சுசி கூறிச்சொன்றுவிட்டார். தமிழ்நாட்டில் நான் நின்ற சமயம் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்த நேரம் எனவே செய்திகளை அறிவதற்காய் தொலைக்காட்சியில் சண் செய்திகளை போட்டுவிட்டு படுத்துக்கொண்டேன். நான் முதலேயே முன்று பேரை பற்றி எழுதுவேன் என சொல்லியிருந்தது போல் இப்பொழுது நான் சந்தித்திருக்கும் இரண்டாம் நபர் சுசீந்திரன். பெரும்பாலும் நம்மவர்கள் அறிந்த ஒரு பெயர்தான் ஆனால் பலர் இப்பொழுது மறந்திருப்பார்கள்.ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவான இன்னொருவர் இவர். இராஜீவ் காந்தி கொலை வழக்கின் போது இவரும் ஒரு முக்கிய நபராக சேரக்கப்பட்டு கைது செய்யப்பட்டு முதலில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒருவர் தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் எட்டரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்து விட்டு வெளியே வந்திரப்பவர்.

வெளியே வந்த பின்னர் இன்னமும் அதே வழக்கில் உள்ளே இருப்பவர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டக்கொண்டிருப்பவர்களில் ஒருவர்.தமிழினத்திற்கான இவரது பங்களிப்பு அர்ப்பணிப்பக்கள் ஏராளமானது அவற்றை இங்கு விபரமாக எழுதமுடியாவிட்டாலும் தமிழ் நாட்டில் ஈழத்தமிழனிற்காக தன் வாழ்க்கையை தொலைத்தவர்களில் இவருமொருவர்.ஈழத்தமிழையும் இந்திய தமிழையும் கலந்து பேசுவார் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் தொடர்புகளும் உள்ளவர்.ஆனால் எந்த அரசியல் வாதியையும் பிடிக்காது. மதியமளவில் எழும்பி குளித்து விட்டு ஜெயபாலன் அவர்களிற்கு போனடித்து நான் இருக்கும் இடத்தை கூறினேன்.பக்கத்தில்தான் இருக்கிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன் என்றார். அதற்கிடையில் சுசியும் வந்துசேர ஜெயபாலனும் வந்து சேர்ந்தார். அவர்களுடன் வன்னியில் இறுதி நேர யுத்தத்தில் காயமடைந்து தற்சமயம் தமிழ் நாட்டில் சிகிச்சை பெறும் நண்பர் ஒருவரும் வந்து சேர்ந்திருந்தார். பிறகென்ன அரசியல் விவாதம் சூடுபிடித்தது.

ஏன் எமக்கு இந்தத் தோல்வியென்று பல காரணங்கள் பலமணிநேரம் விவாதம் தொடர்ந்தது.அங்கிருந்த அனைவருமே ஏதோ ஒரு விடயத்தில் புலிகள் அமைப்புடன் அல்லது அதன் முக்கிய நபர்களுடன் இறுதிவரை தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்பதால். இதுவரை வெளிவராத அல்லது மெல்லமாய் வெளிவந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பலதும் சூடான விவாதங்களாகியது.இந்தியாவை நாம் எதிரியாகப் பார்க்கக்கூடாது இந்தியாவில் எவரையும் பகைக்கக்கூடாது எல்ரையும் அரவணைக்கவேண்டும். எதிரிகளானாலும் அரவணைத்துப்போகவேண்டும் என்று திரும்ப திரும்ப ஜெயபாலன் வலியுறுத்கொண்டிருந்தார். புலிகள் அமைப்பு பேச்சு வார்த்தை காலத்தில் விட்ட தவறுகள் இறுதி யுத்தத்தின் போது எடுத்த சில தவறான முடிவுகள் பலதையும் விமர்சித்தார்.அதே நேரம் சாள்சின் (பிரபாகரனின் மகன்) தவறான நடவடிக்கைகளாலும் அவனது எதேச்சையான போக்குகளாலும் பழைய அனுபவப் பட்ட மூத்ததனபதிகளே இறுதிச்சமரில் மனச்சோர்வடைந்து சரியாக தங்கள் படையணிகளை வழிநடத்தாமல் பின்வாங்கியிருந்தனர் என்கிற செய்தி நான் முதலே அறிந்திருந்ததுதான்.அதனையும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.

சாள்சின் நடவடிக்கைகள் மேசமானதாக இருந்தது என்பதனை அங்கிருந்த அனைவருமே ஏற்றுக்கொண்டிருந்தோம்.ஆனால் ஜெயபாலனின் பிரபாகரன் மீதான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளத்தயாராய் இருக்கவில்லை.30 வருட ஆயுதப்போரை நடாத்திய பிரபாகரன் சில தவறுகளை விட்டிருக்கலாம்.. ஆனால் அதனை விமர்சிக்கும் அருகதையை இந்த நுற்றாண்டில் வாழும் யாரும் கொண்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து.பிரபாகரனைவிட மேலானதொரு ஆயுத விடுதலைப்போரை நடத்தி வெற்றி பெற்ற ஒரு மனிதனே பிரபாகரனை விமர்சிக்கும் தகமையுடையன். என்றேன் நான்.எங்களது விவாதம் மதியத்திலிருந்து நள்ளிரவையும் தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. அரசியல் ஆயுதப்போர் விவாதங்களை பசி பின்னிற்கு தற்றியது.விடுதியின் உணவகத்தில் போய் உணவருந்திக்கொண்டிருந்தபோது ஒருவர் ஜெயபலனை பார்த்து அண்ணா நீங்கள்தானே ஆடுகளத்திலை பேட்டைக்காரன் என்றார். ஆமா நான் என்றவர் பெருமிதத்துடன் என்னைப்பார்த்து பாத்தியா....அந்தப் படத்தை பாத்தியா என்றார்.பாத்தேன் குரல்தான் சரியில்லை பொருந்தவில்லை டப்பிங்குடுத்து கெடுத்திட்டாங்கள் என்றேன். இறுதியாக ஜெயபலனிடம் நீங்கள் இந்தியாவில் பலதரப்பட்டவர்களுடனும் பலதரப்பட்ட மட்டங்களிலும் தொடர்புகளை பேணும் ஒருவர் அதுமட்டுமல்லாது அடிக்கடி இந்தியா வந்து செல்பவரும்கூட அதனால் எமது நேசக்கரம் தொடர்ந்து முன்னெடுக்கவிருக்கும் தாயகத்து மக்களிற்கான பொருளாதாரப்பணிகளிற்கு உங்களாலான உதவிகளை கட்டாயம் வழங்கவேண்டுமென கூறி விடைபெற்றுக்கொண்டேன். படுக்கைக்கு போகலாமென நினைத்து அறைக்கு திரும்பியிருந்தபோது தொலைபேசி மணி அடித்தது தொலைபேசியில் அழைத்தவர்.சி.மகேந்திரன் அவர்கள்;. இவர் இந்திய கம்யூனிஸ் கட்சியின் முக்கியஉறுப்பினர் ஆவார். தம்பி இன்னிக்குத்தான் சேலத்திலை தேர்தல் மனு தாக்கல்செய்யவேண்டியிருந்தது...முடிச்சிட்டோம் நாளைக்கு காத்தாலை எப்படியும் உங்களை வந்து சந்திக்கிறேன்

சேலத்திலிருந்து இரவோடிரவாக பயணம் செய்து சென்னை வந்தடைந்த மகேந்திரன் அவர்கள் காலை 7 மணிக்கொல்லாம் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார். காலை தேனீரருந்தியபடி தொடங்கிய எமது உரையாடல் நான்கு மணித்தியாலங்கள் நீடித்தது. நான் இந்தியாவில் சந்தித்திருந்த சாதாரணமானவர்களுடனெல்லாமே அதிகம் பேசியது அரசியல்தான்.இப்பொழுது ஒரு அரசியல் வாதியையே சந்திருக்கிறேன் எனவே பேசியதெல்லாமே 100 வீதம் அரசியல் மட்டும்தான். இவர்களது கொமினிச கட்சி கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் இணைந்திருந்தனர்.இந்தத் தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்கின்றது. தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் வை.கோ அவசரபட்டு உணர்ச்சி வசப்பட்டு வெளியேறிவிட்டார்.அதனால் வாக்குகள் பிரிந்து கொஞ்சம். தி.மு.க பக்கம் போகும் வாய்ப்புக்கள் உள்ளது.எங்களிற்கும் முதலில் தொகுதி பங்கீட்டுப் பிரச்சனை இருந்தது ஆனால் பொறுமையாக பேசி எமக்கான இடங்களை பெற்றுக்கொண்டோம். அவசரப்படாமல் ஆறுதலாகப் பேசியிருந்தால் வைகோவிற்காகவும் நாங்களே அந்தம்மாவுடன் பேசி ஒரு நல்ல முடிவிற்கு வந்திருக்கலாம் ஆனாலும் வெற்றி வாய்ப்பு எமது கூட்ணிக்குத்தான் அதிகமுள்ளதென்றார்.

இங்கு மகேந்திரன் அவர்களைப்பற்றி நான் அதிகம் எழுதவேண்டியதில்லை பெரும்பாலான எம்மவர்க்கு அவர் அறிமுகமானவொருவர்தான். ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளிற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்கள் நடாத்துவது மட்டுமல்லாமல் செயற்பாடுகளிலும் உள்ள ஒருவர். ராஜீவ் காந்தி கொலைச்சம்பவத்தின் பின்னர் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாகவும் வேண்டாத பொருளாகவும் இருந்த ஈழத்தமிழ் ஆதரவினைமீண்டும் ஊதி ஊதி பெரு நெருப்பாக்கியவர்கள் கொமினிஸ் கட்சியினர். அதில் மகேந்திரன் அவர்களின் கணிசமான பங்கு உண்டென்றால் அது மிகையாகாது. அதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் மாணவர்களின் எழுச்சி.வக்கீல்களின் போராட்டம். பொதுமக்களின் உண்ணாவிதரம். என ஆரம்பித்து உணச்சிவசப்பட்ட உறவுகளின் தீக்குளிப்பு என தமிழகமே கொந்தளித்த நிலைக்குள் வந்துகொண்டிருந்தபொழுது அதனை தனது அரசியல் சாணக்கியத்தால் கருணாநிதி கையாண்டு மாணவர் போராட்டங்களை தடுக்க கல்லூரிகளிற்கு கட்டாய விடுமுறையை அறிவித்துவிட்டு தானே ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடாத்தியும்.வக்கீல்களின் போராட்டத்தை பின்தள்ள தானே 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு இலங்கையில் போர் ஓய்ந்து விட்தென அறிக்கையும் விட்டு அனைத்து போராட்டங்களையும் பிசு பிசுக்க வைத்தது மட்டுமல்லாமல் உலகத்திலேயே 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரேயொரு நபர் என்கிற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

அது மட்டுமல்லாது பெரும் போராட்டங்களை முன்னின்று நடாத்திவந்த மகேந்திரன் அவர்களிற்கும் அன்றைய காலகட்டத்தில் ஒரு சதிவலை பின்னப்பட்டது. அப்பொழுது சென்னை இலங்கைத் தூதரகத்தில்: துணைத் தூதராக இருந்த அம்சாவினாலும்.(அம்சா இப்பொழுது இங்கிலாந்தில் இலங்கைத்தூதராக இருக்கிறார்)ஈழத்தமிழர் போராட்டங்களிற்கு எதிரானவர்கள் மற்றும் மகேந்திரன் அவர்களினை பிடிக்காத அவரது சில கட்சி உறுப்பினர்கள் பலரும் சேர்ந்து திட்டமிட்டு மகேந்திரன் அவர்களிற்கான சதிவலையை விரித்தனர். எந்த ஈழத்தமிழர்களிற்காக அவர் முன்னின்று போராட்டங்களை நடாத்திவந்தாரோ அதே ஈழத்தமிழ் பெண் ஒருத்தியை வைத்து மகேந்திரன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கிழப்பினார்கள். நடசத்திர விடுதி ஒன்றில் திடீரென தமிழகத்தின் பிரபல பத்திரிகைகள் அனைத்தையும் கூட்டிய அந்தப் பெண்மணி மகேந்திரன் அவர்களுடன் தனக்கு உறவு இருந்ததாகவும் தன்னை திருமணம் செய்வதாக கூறிஅவர் ஏமாற்றிவிட்டதாகவும் அதே நேரம் தன்னிடம் ஒரு தொகை பணத்தினையும் வாங்கி ஏமாற்றிவிட்டார் என ஒரு பரபரப்பு அறிக்கையை விட்டிருந்ததோடு பத்திரிகைகளின் கேள்விகளிற்கு பதிலளிக்காமல்.உடனடியாகவே இந்தியாவை விட்டு வெளியேறி தென்னாபிரிக்கா சென்றுவிட்டார்.

அந்த அறிக்கை பெரும்பாலான பத்திரிகைகளில் வெளிவந்த அதே நேரம் தமிழ்நாட்டில் வாடைகை வீடு ஒன்றில் தங்கியிருந்த சாதாரண ஒரு பெண்ணால் எப்படி நட்சத்திர விடுதியில் அனைத்து பிரபல பத்திரிகைகளையும் ஒரே நேரத்தில் கூட்ட முடிந்தது?? அதே நேரம் மகேந்திரன் அவர்கள் பணம் ஏமாற்றினார் என்பதனையும் நம்பமுடியவில்லை என பலகேள்விகளை எழுப்பியிருந்தனர். அதுமட்டுமல்ல பதவி பணம் சுகபோகம் இவை எவற்றையுமே விரும்பாத ஒரு அரசியல்வாதி இன்று தமிழ்நாட்டில் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சி.மகேந்திரன் என்று சொல்லிவிடலாம்.செய்தியறிந்த நான் உடனடியாக மகேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தேன். ஒருவரின் சிபாரிசுடன் சென்று மகேந்திரன் அவர்களிடம் உதவி பெற்ற பெண்மணிதான் அவர் என்பதனையும் அறிந்து கொண்டு.எமக்காக தொடர்ந்து போராடும் ஒருவர் மீது எம்மவர் ஒருவராலேயே ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை போக்குவது எமது கடைமை என நினைத்தேன்.வேகமாக செயலில் இறங்கியிருந்த நான் அப்பெண்மணியின் பூர்வீகம் அவர்எப்படியானவர் அவரது தில்லு முள்ளுக்கள் என்ன என்கிற அனைத்து விபரங்களையும் திரட்டி சிறு குறிப்பாக அனைத்து பத்திரிகைகளிற்கும் அனுப்பி வைத்தோடு மட்டுமல்லாமல்.அன்றைய காலகட்டத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு பேப்பர் என்கிற பத்திரிகையிலும் ஒரு விரிவான கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தேன். யாழிலும் இணைத்திருந்தேன்.கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்.
அத்துடன் அந்த விவகாரம் அமுங்கிப்போனது.


நடக்கவிருக்கும் தேர்தலில் யாருடைய கூட்டணி வெல்லும் என சரியாக தெரியாத குழப்பநிலையாகவே எனக்கு இருந்தது எனவே ஜெயலலிதா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எம்முடைய நேசக்கரத்தின் மனிதாபிமானப்பணிகளிற்கு மேலும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டதோடு அதே நேரம் ஜ.நா சபையால் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கை வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம் (இப்பொழு வெளியாகிவிட்டது) அப்படி அறிக்கை வெளியானாலும் அது எவ்வளவு தூரம் போர்க்குற்ற விசாரணையாக மாறும் என்பது சந்தேகமானதொன்றாகவே இருந்தது. அப்படி வெளியாகும் அறிக்கையை பாவித்து அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை செய்யலாம் என்பது பற்றியும் விவாதித்தோம். இறுதியாக எம்மால் மனிதம் வெளியீடாக வெளியிடப்பட்ட இலங்கை மனிதப் படுகொலைகள் 1956 ... 2008 என்கிற ஆவணப் புத்தகம் ஒன்றினையும் மகேந்திரன் அவர்களிற்கு கொடுத்தேன். அவரும் இலங்கை தமிழர் பிரச்சனைகள் பற்றி அவரால் எழுதி வெளியிடப்பட்ட தீக்குள் விரலை வைத்தால்.மற்றும் இந்திய அரசே நியாயந்தானா என்கிற இரண்டு புத்தகங்களை என்னிடம் தந்து விடைபெற்றார்.அத்தனை தேர்தல் பணிகளிற்கு மத்தியிலும் எனக்காத நேரம் ஒதுக்கி என்னை வந்து சந்தித்து நான்கு மணித்தியாலங்கள் என்னுடன் உரையாடிதற்காக அவரிற்கும் நன்றிகள் கூறியதோடு தேர்தல் பணிகளிற்காக வெளியூர்களில் தங்கியிருந்த நல்லக்கண்ணு அண்ணன் தா.பாண்டியன் அண்ணன் போன்றவர்களை சந்திக்கமுடியததற்கு வருத்தம் தெரிவித்ததோடு அடுத்தடைவை சென்னை வரும்போது நிச்சயமாக அவர்களையும் சந்திப்பதாக கூறிவிடச்சொல்லி மகேந்திரன் அவர்களை வழியனுப்ப விடுதியை விட்டு வெளியே அழைத்துவந்த நான் இறுதியாக மகேந்திரனிடம் அண்ணை நான் வை.கோ அவர்களை இந்தப் பயணத்தில் சந்திக்கவில்லை ஆனால் முடிந்தால் நீங்கள் அவரிடம் ஒரு விடயத்தை சொல்லிவிடுங்கள். வெளிநாடுகளில் உள்ள சிலரின் பேச்சைக்கேட்டு தயவு செய்து இனிவரும் காலங்களில் 5 ஆயிரம் படைகளுடன் பிரபாகரன் தயாராய் இருக்கிறார். 5 ம் கட்ட ஈழப்போர் விரைவில் வெடிக்கும் என ஆவேச அறிக்கைகள் விடாமல் உருப்படியாக அடுத்தகட்ட நடவடிக்கைளை எதையாவது செய்யச்சொல்லுங்கள்.என்றேன்.சிரித்தபடி தலையாட்டிய மகேந்திரன் அவர்கள் என்ன செய்ய தம்பி தமிழ்நாட்டு அரசியல் இப்படித்தான் அடுத்த தடைவை சந்திக்கும் போது கட்டாயம் சொல்கிறேன் எனக்கூறி விடைபெற்றார்

மறுநாள் மனிதம் அமைப்பின் இயக்குனர் அக்கினி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க வருவதாக கூறியிருந்தேன்.அவரின் அலுவலகம் ஜெமினிகாலனியில் இருந்தது.காலை ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தபடி அண்ணா மேம்பாலம் பக்கத்திலை ஜெமினி காலனி போங்க என்றேன்.ஆட்டோ அண்ணாசாலையல் புகுந்து மேம்பாலம் நோக்கி போய்க்கொண்டிருந்தது ஆட்டேவில் வெளியே பார்த்துக்கொண்டே போனேன்.முகத்திலடித்த அண்ணாசாலைக்காற்று ஆயிரமாயிரம் பழைய நினைவலைகளை மனதில் துண்டுக்காட்சிகளாய் மாற்றி மாற்றி போட்டுக்கொண்டே போனது.அண்ணாசாலையின் இரு மருங்குமே 5 ருபாய்க்கு பாட்டெழுதுவதற்காக சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பசொத்துக்களாகவே மாறியிருந்தது.ஆட்டோ மேம்பாலத்தின் கீழே திரும்பி ஜெமினிகாலனி முன்னால் நின்றது.இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும் இந்தியாவிலேயே எல்லா மானிலங்களையும்விட தமிழ்நாட்டில்தான் ஆட்டோவிற்கு அதிகளவு பணம் வாங்குகிறார்கள்.யாரும் மீற்றர் போடுவதில்லை.குறைந்த சவாரிக்கட்டணம் 50 ருபாய்.பணத்தை ஆட்டோவிற்கு கொடுத்துவிட்டு அக்கினி அவர்களின் அலுவலகத்திற்குள் நுளைந்தேன்.

அக்கினி சுப்பிரமணியம் மனிதம் என்கிற அமைப்பினை நடாத்துபவர்இவர்கள் மனிதவுரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக குரல்கொடுத்து வருபவர்கள்;.உலகம் முழுதும் தமிழர்கள் எங்கெங்கு பாதிக்கப்படுகிறார்களோ அவர்களிற்கான முதற்குரலாக மனிதம் அமைப்பின் குரல் ஒலிக்கும்.ஈழத்தமிழர் விகராத்திலும் இவர்களின் குரல் ஒலிப்பதுடன் பல உதவி நடவடிக்கைககளையும் செய்து வருகின்றனர்.அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களிற்கான உதவிகள் செய்ததற்காக சந்தேகத்தின் அடிப்படையில் அக்கினி அவர்களும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலை இலங்கையரசு திருப்பியனுப்பியிருந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே.அந்தக்கப்பல் தனது இயங்கும் காலம் முடிவடைந்து பாகங்களாக உடைக்கும் நிலையிருந்த ஒரு கப்பல் அது தனது இறுதி பயணமாகத்தான் வன்னி நோக்கி சென்றிருந்தது.

அது திருப்பி அனுப்பப்பட்டதும்.வன்னி மிசன் நடவடிக்கையை செய்தவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் கப்பலில் உள்ள பொருட்களை இந்தியாவில் எங்காவது இறக்கிவிட்டு கல்கத்தாவில் உள்ள ஒரு கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு அதனை அனுப்பத் தீர்மானித்திருந்தனர். அந்தத் தகவல் கிடைத்ததையிட்டே சாந்தி ரமேஸ் அவர்கள் பேரீச்சம் பழத்திற்கு போகும் வணங்காமண் கப்பல் என்றொரு கட்டுரையை எழுதி இங்கு யாழ் இணையத்திலும் வெளியிலும் பலர் அவரை திட்டித்தீர்திருந்தனர். http://www.yarl.com/...=1 கப்பல் கல்கத்தா நோக்கி செல்ல புறப்பட்டபொழுதுதான் தமிழ்நாட்டிலிருந்த ஈழ ஆதரவு அமைப்புக்கள் மற்றும் மனிதம் அமைப்பு என்பன இந்தக்கப்பல் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள். வணங்காமண் கப்பலை இலங்கையரசு திருப்பிய செய்தியறிந்ததும் கருணாநிதியும் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்.வணங்காமண் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு கிடைக்கவேண்டும் எனபதே அந்த அறிக்கையாகும்.அந்த அறிக்கையை உடனடியாக சாதகமாக பயன்படுத்த நினைத்தது மனிதம் அமைப்பு.கருணாநிதியை உடனடியாகவே சந்தித்த அக்கினிஅவர்கள் கப்பலை சென்னை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு அனுமதி வாங்கியதோடு வன்னி மிசன் குழுவுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி வேலைகள் வேகமாக நடந்தது.கப்பலில் உள்ள பொருட்கள் இறக்கப்பட்டு வேறொரு கப்பலில் மாற்றி இந்திய செஞ்சிலுவைச்சங்கத்தினரின் உதவியுடன்.பொருட்கள் இலங்கைக்கு அனுப்பட்டது.இந்த நடவடிக்கைக்குப்பின்னால் மனிதம் அமைப்பு பெருமளவு உழைத்திருந்தது.

ஆனால் வணங்காமண் கப்பலில் சென்ற நிவாரண உதவிப்பொருட்கள் வினியோகிக்கப்படாமல் இன்னமும் திருகோணமலையில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச்சங்க கட்டிடத்தில் கிடந்து வீணாய் போய்கொண்டிருக்கின்றது என்பது வேறுகதை. அங்கு வேலைசெய்யும் ஒரு தமிழர் அந்த பொருட்கள் வீணாய் போவதுபற்றி கவலைப்பட்டு அதனை ஏதாவது வழிபண்ணி மக்களிற்கு கிடைக்கச்செய்யமுடியாதா என பல மின்னஞ்சல்கள் எனக்கு அனுப்பியிருந்தார். எனது சக்திக்கு மீறி எல்லா பிரச்சைனைகளிற்குள்ளும் தலையை விட முடியாது என்பதால் மின்னஞ்சலை படித்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டேன்.

மே 18 முள்ளிவாய்க்கால் யுத்தத்தம் முடிவடைந்த பின்னர் வடகிழக்கு மனிதவுரிமை மையத்தின் (North East Secretariat On Human Rights - NESOHR)உறுப்பினர்கள் இருவர் காயமடைந்த நிலையில் சில வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவிகளுடன். வெளிநாட்டிற்கு தப்பிவந்திருந்தனர். இந்த அமைப்பின் இயக்குனராக இருந்தவர்தான் கிளி பாதர் என்றழைக்கப்பட்ட மரியாம்பிள்ளை கருணாரத்தினம் அடிகளார்.ஏப்பிரல் 20 2008 அன்று தேவாலயமொன்றில் ஞாயிறு பூசையினை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது மல்லாவி வவுனிக்குளம் வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டடார்.இதே அமைப்பில் இயங்கிய பிறவுண் அடிகளாரும் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். இவர்கள் இலங்கையில் நடந்த தமிழர்கள் மீதானஅனைத்து படுகொலைகளையும் முறைப்படி நேரடி சாட்சியங்களோடு உலக மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் சுமார் 5 வருடங்களாக உழைத்து ஆவணத்தை முழுமை செய்திருந்தனர்.அவற்றி பல அவ்வப்பொழுது வெளியே ஊடகங்களிற்கும் மனிதவுரிமை அமைப்புகளிற்கும் அனுப்பியிருந்தனர்.ஆனால் அதனை முழுமையான ஒரு ஆவணமாக்கி வெளியிடுவதற்கிடையில் வன்னியில் யுத்தம் மேசமடைந்துவிட்டிருந்தது.அந்த யுத்தத்தில் ர் தப்பிவந்த நபர் முதலில் அக்கினி சுப்பிரமணியத்துடன் தொடர்புகொண்டுவிட்டு பின்னர் என்னிடமும் தொடர்பு கொண்டிருந்தார்.

தப்பிவந்த நபர் எனக்கு ஏற்கனவே தெரிந்தவர்தான். தங்களது 5 வருட உழைப்பு வீண்போய்விடக்கூடாது அதே நேரம் இலங்கையில் நடந்த தமிழர் மீதான படுகொலைகள் பற்றிய முறையான பதியப்பட்ட ஆவணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவே எப்பாடு பட்டாவது இதனை வெளியிடுங்கள். ஆவணங்கள் அனைத்தும் பகுதி பகுதிகளாக ஒரு மின்னஞ்சலில் சேகரித்து வைத்திருக்கிறேன் அதனை எம்மிடம் தருவதாக கூறியிருந்தார்.அவர் சேகரித்த ஆவணத்தின் சில பகுதிகள் வன்னியில் செல்லடியில் அவரது கணணியுடன் அழிந்து போய்விட்டிருந்தது.ஆனால் 90 வீதமான பகுதிகள் எமக்கு கிடைத்தது. அவற்றை படித்தமே எப்பாடு பட்டாவது அதுவெளியில் வரவேண்டுமென தீர்மானித்தோம். அதனை வெளியிடுவதற்கான பொருளாதார மற்றும் விளம்பர உதவிகள் பலரிடம் கேட்டிருந்தோம்.இங்கு யாழிலும் அதன் விபரங்களை நான் ஆரம்பத்தில் இணைத்திருந்தேன்.யாருடைய உதவிகளும் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாது ஆவணங்கள் எமது கைகளிற்கு கிடைத்திருக்கின்றது என்பதனை அறிந்த புலம்பெயர் தேசியத்தூண்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலுள்ள புலிகள் அமைப்பின் ஏக பிரதிநிதிகளும் அதனை எப்படியாவது பறித்தெடுத்துவிடலாமென பல பாடுபட்டனர்.அதுபற்றி நடந்த விவாதங்கள் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அனைத்தும் சேகரித்தே வைத்துள்ளேன். ஆவணத்தை பறிக்க முடியாமல் போன கோபத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஜரோப்பாவில் உள்ள தேசியத்து பூசாரிகள் ஒரு கேவலமான வேலையையும் செய்தனர். அதாவது தப்பிவந்த வடகிழக்கு மனிதஉரிமை மையத்தின் அந்த உறுப்பினர் ஒரு ஆயுதப்பயிற்சி பெற்று சண்டையில் நின்ற ஒரு புலிஉறுப்பினர் எனவே அவர் ஆபத்தானவர் என இங்குள்ள அகதிகள் விவகாரங்களிற்கு பொறுப்பான அமைச்சகத்திற்கும் காவல்துறைக்கும் கடிதம் அனுப்பிவிட்டிருந்தனர். அதன் பின்னர் பல விசாரணைகளின் பின்னர் அவரிற்கு அகதி அந்தஸ்த்தும் கிடைத்து இப்பொழுது அவர் தானுண்டு தன்வேலையுண்டு என்று வாழ்கிறார்.

.இப்படியாக இரண்டரை மாதஉழைப்பின் பின்னர் புத்தக வேலைகளை அக்கினி சுப்பிரமணியம் சாந்திரமேசுடன் நானும் சேர்ந்து இரண்டரை மாதகாலமாக இரவுபகலாக வேலை செய்தோம்.ஆவணம் பலரால் பலவித ஒழுத்துருக்களில் கணணிதட்டச்சு செய்யபடடிருந்தது. அத்தனையையும் நானும் சாந்தி ரமேசும் பகிர்ந்தெடுத்து யுனிகோட்டில் தட்டச்சு செய்தோம். பின்னர் நாங்கள் அக்கினி அவர்களுடன் சேர்ந்து மூவருமாக சரி பிழைகளை திருத்தினோம்.இப்படியாக இரண்டரை மாதஉழைப்பின் பின்னர் மனிதப் படுகொலைகள் 1956 2008 என்கிற புத்தகம் மனிதவுரிமை வாதியன மருத்துவர் எலின்சாண்டாவின் முன்னுரையுடன் 360 பக்கங்கள் தாங்கி மனிதம் வெளியீடாக ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்தது. புத்தகங்கள் உலகிலுள்ள அனைத்து மனிதவுரிமை மையங்கள் மனிதவுரிமை வாதிகள் அரசியல் வாதிகள் ஆகியோரிற்கும் தொடர்ச்சியாக எம்மால் அனுப்பிவைக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றது. இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு எம்முடன் இணைந்து ஜெர்மனியை சேர்ந்த தேவிகா கங்காதரனும் பொருளாதார ரீதியான சத்தியசீலன் அண்ணா(முன்னைநாள் தமிழர் மாணவர் பேரவை நிறுவனர்)ஆகியேரது உதவிகள் குறிப்பிடத்தக்கவை. ஆரம்பத்தில் பல மொழிகளிலும் இதனை வெளியிடத் தீர்மானித்திருந்தாலும் பொருளாதார நிலை காரணமாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கள் வெளிவராமல் நிற்கின்றது வேதனையான விடயம்.அது மட்டுமல்லாது புலம்பெயர் தேசமெங்கும் தமிழ்தேசியம் பேசுவோரும் தேசிய ஊடகங்கள் என்போரும் எவருமே இந்தப் புத்தக்தினை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடவேண்டும்.இன்று இலங்கையரசின் மீது விசாரணை வேண்டும் என கோரும் தமிழ் தேசிய வாதிகள் கையில் உள்ள வெண்ணையை விட்டு காடுமேடெல்லாம் அலைகின்ற கதையாய் வெறும் அறிக்கைகள் மட்டும் வருகின்றது எம்மவரது செயற்படுகள் இப்படியிருக்க விகடன் நிறுவனம் 2010ம் ஆண்டிற்கான சிறந்த வெளியீடு என்கிற விடுதினை இந்தப் புத்தகத்திற்கு தந்து கொளரவித்திருக்கின்றது. அதே நேரம் ஈழத்து எழுத்தளரும் முன்னைய நாள் புலிகள் அமைப்பு போராளியுமான சோபா சக்தி என்பவர் மட்டும் இந்தப் புத்தகம் பற்றிய அவசியத்தையும் தன்னுடைய பார்வையையும் எழுதியுள்ளார். சோபா சக்திக்திக்கும் எனக்குமான முரண்பாடுகள் நீண்டது என்றாலும் இப்படியானதொரு பொது விடயத்தில் அவரை பாராட்டத்தான் வேண்டும்

அக்கினி அவர்களது அலுவலகத்தில் பல்வேறு விடயங்களையும் கதைத்துவிட்டு மதியம் எங்காவது உணவகத்தில் சாப்பிடலாமென முடிவெடுத்தோம்.இன்று வேறு ஏதாவது முக்கிய நிகழ்வுகள் இருக்கிறதா என என்னிடம் அக்கினி கேட்டார்.இல்லையண்ணா சென்னை வந்ததிலிருந்தே சீரியசான ஆக்ளையே சந்தித்து கதைத்தது ஒரே ரென்சனாகவே போய்க்கொண்டிக்கு எனவே இண்டைக்கு பிறீயாக இருக்கலாமெண்டு முடிவெடுத்திருக்கிறன். இண்டைக்கு ஒரு படம் பாக்கலாமெண்டு முடிவெடுத்திருக்கிறன் ஏனெண்டால் சென்னை வந்தவர்கள் படம் பார்க்காமல் போவது பாரிஸ் வந்தவர்கள் ஈபிள்கோபுரத்தை பார்க்காமல் போனது மாதிரி முட்டாள்தனம் எனவே சாப்பிட்டுவிட்டு படத்திற்கு போகலாமென்றேன். நானும் அகன்ற திரையில் படம் பார்த்து பல வருடங்களாகியிருந்தது. 3 வருடங்களிற்கு முன்னர் லண்டன் போயிருந்தபொழுது நண்பர்களான பார்த்தி மற்றும் பாரதியுடன் (ஒரு பேப்பர்) கமலின் தசாவதாரம் படம் தான் திரையில் பார்த்தது.

அதுமட்டுமில்லாமல் படங்களின் மீதான எனது ஆர்வமும் குறைவு பலர் பார்த்து இது நல்லபடம் என்று சொன்னால்தான் கணணியில் தேடிப்பார்ப்பதுண்டு. படம் பார்க்கலாம் என்றதும் ஆடுகளம் நன்றாய் ஓடிக்கொண்டிருக்கிறது ஆடுகளம் பார்க்கலாமா என்றார். ஜயோ அண்ணை ஆடுகளம் நான் கணணியிலை வந்த கள்ள சிடியிலை பாத்திட்டன் என்றேன் நல்லகாலம் ஜெயபாலன் பக்கதில் இருக்கவில்லை. வேறு சில படங்களின் பெயர்களை சொன்னார் பயணம் படமும் அப்பொழுதான் வெளியாகிருந்தது பயணம் படம் என்றதும் எங்கோ செய்திகளில் பிரகாஸ்ராஜ் நடித்திருப்பதாக படித்த ஞாபகம்.தமிழ் படங்களில் வித்தியாசமான வில்லன் ஹீரோ பாத்திரங்களில் சத்தியராஜ் ரகுவரனிற்கு அடுத்ததாக எனக்கு பிடித்தவர் பிரகாஸ்ராஜ். எனவே பயணம் வந்த இடத்தில் இன்னொரு பயணத்தையும் பாத்துவிட்டுபோலாமென முடிவெடுத்து பயணம் படத்திற்கு டிக்கற் எடுக்கச் சொன்னேன். பயணம் படத்திற்கு சத்யம் தியேட்டரில் இணையம் ஊடாக அனுமதி சீட்டை (ரிக்கற்) பதிவு செய்துவிட்டு மதிய சாப்பாட்டிற்காக ஆந்திரா ஸ்பெசல் உணவகம் ஒன்றினுள் நுளைந்தோம்.அக்கினி அவர்களே ஓடர் கொடுத்தார் ஆடு கோழி மீன் காய் கறியென வந்துகொண்டிருந்தது.எல்லாத்தையும் உள்ளே இறக்கிவிட்டு கடைசியாய் தயிருடன் சோற்றை இறக்க முடியாமால் பேய்விட்டது. பிசைந்துவிட்டு வைத்துவிட்டேன். அதற்கு பிறகும் வாழைப்பழம் இனிப்பு என்று வந்துகொண்டிருந்தது.சாப்பிடும் பொழுது மீன் குழம்பு ஒன்று புளிமாங்காய் போட்டு செய்திருந்தார்கள் அதை சுவைத்துவிட்டுஅண்ணா இது நல்லாயிருக்கே என்றதும் ..இதுதான் விரால் மீன் இது இலங்கை இந்திய கடல்லையில்தான் இது அதிகமாக அகப்படும் சுவையை போலவே விலையும் அதிகம் இதற்காகத்தான் எங்கள் மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று சூடுபட்டு இறந்து போகிறார்கள் என்றார்.

சாப்பிட்டு விட்டு கொஞ்சம் உலாவிவிட்டு சத்யம் தியேட்டரிற்குள் நுளைந்தோம். தியேட்டர் ஜரோப்பிய தரத்திற்கு இணையாக நன்றாக திருத்தியிருந்தார்கள். பெரியளவு கூட்டம் இருக்கவில்லை ஆனால் படம் ஆரம்பிப்பதற்கு விளக்குகளை அணைத்து சிறிது நேரத்திலேயே எங்கேயோ காத்திருந்த இளையவர் கூட்டம் மட மட வென நுளைந்தார்கள்.பெரும்பாலவர்கள் கல்லூரி மாணவர்கள் புத்தகப்பைகளுடன் வந்திருந்தார்.அப்பொழுதான் எனக்கு புரிந்தது. அன்று பாசாலைக்காலங்களில் களவாக படம் பாரக்கப் போவதற்காக நாங்கள் பாவித்த அதே ரெக்னிக்தான் இவர்களும் பாவிக்கிறார்கள்.விளக்குகள் அணைந்ததும் இருட்டில் ஆளாளிற்கு அடையாளம் தெரியாமல் புகுந்து கொள்கிறார்கள்.ஆனால் இன்று இவர்களோ கைத்தொலைபேசி வெளிச்சத்தில் இடங்களை தேடிப்பிடித்து அமர்கிறார்கள்.அன்று நாங்கள் தடக்கி விழுந்து யாருடையாவது காலை மிதித்து திட்டுவாங்கித்தான் இடத்தில் அமரவேண்டியிருந்தது.அதுமட்டுமில்லை இன்றைய இளைஞர்கள் சோடிகளாக பெண் நண்பிகளுடன் வந்திருந்தார்கள்.

அன்று நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இருக்கவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்டுகொண்டிருக்கும் பொழுதே படம் ஆரம்பமானது. படத்திற்கு கதையை எழுதியவர் கதைக்காக பெரிதாய் கஸ்ரப்பட்டிருக்கமாட்டார். இரண்டுவரியில் கதை என்பது போல இவர் இந்தியாவில் நடந்த இரண்டு சம்பவங்களை கலந்து கதையாக்கிருந்தார். ஒன்று தலிபான்களால் இந்திய விமானம் கடத்தப்பட்டது.இரண்டாவது சம்பவம் பாகிஸ்தான் சிறுமி ஒருத்திக்கு இதயஅறுவை சிகிச்சை இந்தியாவில் நடந்தது. இரண்டு சம்பவங்களையும் இணைத்து கடத்தப்பட்ட விமானத்தில் அறுவைச்சிகிச்சை முடிந்து பாகிஸ்தான் திரும்பும் சிறுமியும் தாயுடன் இருக்கிறாள். உண்மைச்சம்பவத்தில் இந்திய அரசு தலிபான்களின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்கள் கேட்ட நபர்களை விடுதலை செய்து பயணிகளை மீட்டது. ஆனால் இது சினிமாவாயிற்றே .அப்டியெல்லாம் காட்ட முடியுமா?? அதனால் ஒரு கொமாண்டோ தாக்குதல் மூலம் பயணிகளை மீட்கிறார்கள். இதுதான் கதை .ஆனால் படத்தில் உள்ள நகைச்சுவை காட்சிகளிற்காக படத்தை பார்க்கலாம்.அடுத்ததாக இந்தப் படத்தில் பாடல்கள் எதுவும் இல்லாதது பெரும் ஆறுதல். இல்லாட்டி அங்கிருந்து சுவிற்சலாந்திற்கோஅல்லது நியூசிலாந்திற்கோ போய் வந்திருக்கவேண்டும். படம் முடிந்ததும் அக்கினி அவர்கள் அன்றிரவு உணவிற்கு தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருந்தார்.மதியம் சாப்பிட்து செமித்தால் கட்டாயம் வருவதாக கூறிவிட்டு எனது அறைக்கு திரும்பினேன். மாலை சில நண்பர்களை ஒரு உணவு விடுதியில் சந்தித்து உரையாடினேன் நான் சென்னையில் நின்றிருந்த நேரம்தான் பார்வதி அம்மாவின் சாம்பல்( அஸ்தி )மெரினா கடற்கரையில் கரைத்த நிகழ்வு நடந்திருந்தது. ஏன் அந்த நிகழ்விற்கு வரவில்லையென பலரும் கேட்டனர்.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிலரை சந்திப்பதற்கு எனக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை அதனை தவிர்ப்பதற்காகவே நான் அங்கு வரவில்லையென அவர்களிற்கு தெளிவு படுத்தினேன்.இரவு அக்கினி அவர்களின் வீட்டில் அன்பான உபசரிப்போடு இரவு உணவை முடித்துவிட்டு விடைபெற்று வெளியே வந்தபொழுது என்னுடன் கூடவந்திருந்த நண்பன் என்iனைப்பார்த்து எங்போறது என்றான்.வேறையெங்கே அறைக்குத்தான் என்றேன். சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அறைக்கா அப்ப ஒண்டுமே இல்லையா என்றான். சாப்பிட்டாச்சே சாப்பிட்டு எப்பிடி தண்ணியடிக்கிறது என்றேன் அட இதெல்லாம் பெரிய விசயமா போத்திக்கிட்டு படுத்தாலென்ன படுத்திட்டு போர்த்தினாலென்ன இல்லாட்டி தூக்கம் வராது வாடா என்றான். டாஸ்மாஸ்க்கை மன்னிக்கவும் தமிழ்நாட்டில் நின்றபடி அதுவும் கலைஞர் ஆட்சியில் டாஸ்மாக் என்றது அழைக்கலாமா எனவே மது அருந்துகூடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்

இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜெயலலிதா ஆட்சியமைக்கப்போகிறார் என்பது மகிழ்ச்சியான செய்திதான் ஆனாலும் அவர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதும் கொஞ்சம் யேசிக்கவைக்கும் விடயங்கள்.ஏனெனில் கூட்டணி கட்சிகளின் ஆலேசனை இல்லாமல் அவர் தனியானவே முடிவுகளை எடுக்கலாம்.காங்கிரசுடனும் இணையலாம். அல்லது ஜெயலலிதாவை உள்ளே இழுப்பதற்கோ அடக்கி வைப்பதற்கோ அவரது பழைய வழக்குகள் எதையாவது நோண்டலாம்.அரசியலில் எதுவும் எந்தநேரமும் நடக்கும். ஆனாலும் வென்றவர்களிற்கு எனது வாழ்த்துக்களை மின்னஞ்சல்களின் அனுப்பிவைத்தேன். அதே நேரம் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய காலங்களில் நான் முன்னர் குறிப்பிட்டது போலவே தி.மு.க.கூட்டணியா அ.தி.மு.க கூட்டணியா வெல்லும் என்பதே பெரும் குழப்பமாகவே இருந்தது. கருத்துக்கணிப்புக்கள் பெரும்பாலும் தி.மு.க கூட்டணியே வருமென தெரிவித்திருந்தது. தி.மு.க விடம் முக்கியமாக ஊடக பலம் பண பலம் இருந்தது. அதே நேரம் தேர்தல் கமிசன் தனது சட்டங்களை கடுமையாக கடைப்பிடித்திருந்தது பணம் கொடுத்தல் இலவச பொருட்கள் கொடுத்தல்.இரவிரவாக பிரச்சாரம் செய்தல்.கட்டவுட் வைப்பது போஸ்ரர் அடித்தல் தடை.சாராயக் கடைகளை பூட்டுதல் என்று பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டுருந்தனர்.பெரிய வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை.

இதுவும் தி.மு.க வின் தகிடுத்தனங்களை கட்டுப்படுத்தியிருந்ததுஆனால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.காரணம் தமிழின உணர்வாளர்களின் பிரச்சாரங்கள் என்பதையும் தாண்டி தமிழ்நாடு காங்கிரஸ்காரரின் உட்பூசல் போட்டி அங்கு பகிரங்கமாக நடந்தது. தங்களிற்குள்ளேயே அடித்துக்கொண்டு சட்டையை கிழித்துக்கொண்டார்கள். பல இடங்களில் தங்கபாலுவின் கொடும்பாவியை காங்கிரசாரே கொழுத்தினார்கள். போஸ்ரர் உண்ணாவிரதம்.கொடும்பாவி எரிப்பு வீதி மறியல் என காங்கிரசிற்கு எதிராக காங்கிரஸ் காரரே போராடிக்கொண்டிருந்தனர். காங்கிரசிற்கு எதிரா பிரச்சாரம் செய்துகொண்டிருந்த ஒரு பொறியிலாளர் ராகேஸ் என்னை சந்திக்க வந்தவிடத்தில் சொன்ன வசனம் அண்ணே காங்கிரசிற்கு எதிராக நாங்கள் பெரிதாய் ஒண்ணும் பண்ணத் தேவையில்லை அவங்களே அடிபட்டு தோத்து போயிடுவாங்கண்ணே என்றார்..இனி தொடரிற்கு போகலாம்.

அன்று சென்னையிலிருந்து பெங்களுர் புறப்படவேண்டும். இரயிலில் ரிக்கற் எடுத்திருந்தேன் நள்றிரவு இரயிலேறினால் காலை பெங்களுரை அடைந்து விடலாம்.பெங்களுரில் நிற்கும்பொழுது ரங்கநாத்தையும் சந்திக்கலாமென நினைத்து சுசியை ரங்கநாத்திற்கு போனடித்துப்பாரக்கச்சொல்லி சென்னேன்.ரங்கநாத் இந்தப்பெயரும் எம்மவர்களிற்கு பழக்கமானதொரு பெயர்தான்.காரணம் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜன் குழுவினர்(ஒற்றைக்கண் சிவராசன்)இவரது வீட்டில்தான் தங்கியிருந்தபொழுது போலிசால் சுற்றி வழைக்கபட்டதில் தற்கொலை செய்துகொண்டனர். பின்னர் ரங்கநாத்தும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை பெற்று சிறையில் இருந்து வெளிவந்தவர். விசாரணை காலங்களின் பொழுது இவரிற்கு போலீஸ் முட்டிக்கு முட்டி தட்டி விழையாடியதில் மூட்டு வலிக்கு மூலிகை வைத்தியம் செய்வதற்காக கேரளாவிற்கு அடிக்கடி போய்வந்துகொண்டிருக்கிறார்.

நான் தொலைபேசியடித்த நேரமும் கேரளாவிற்கு போய்விட்டிருந்தார். இரண்டு வருடத்திற்கு முன்னர் ராஜீவ் கொலையில் காங்கிரஸ் காரர்களின் கை உள்ளது எனவே அவர்களை விசாரிக்கவேண்டும் என்று ஒரு பரபரப்பு அறிக்கையும் விட்டு இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அவருடன் கதைக்கும் பொழுது அடுத்த அறிக்கை எப்போவிடப்போறிங்க என்று கேட்டதோடு நான் கர்நாடகாவில் ஒரு வாரம் நிற்பேன் முடிந்தால் சந்திக்கலாமெ கூறி விடைபெற்றேன்.அன்றிரவு சுசி என்னை கொண்டுவந்து இரயிலேற்றி விட்டிருந்தார். இங்கு சுசீந்திரன் பற்றி இன்னொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். அது என்னவெனில் இராஜீவ் காந்தி கொலையை பின்னணியாக கொண்ட கதையை வைத்து வேறு மொழியில் வெளியான படத்தை தமிழில் குப்பி என தயாரித்து வெளியிட்டிருந்தார். அதனை தயாரித்திருந்தவரும் இவரே. எனவே அவரிடம் குப்பி தயாரிச்சீங்க அடுத்தது என்னபடம் தயாரிக்கப்போறீங் என்று கேட்டதற்கு நகைச்சுவையாய் அடுத்ததாய் குப்பி கடிக்கலாமெண்டிருக்கிறேன் என்றார். ஏனென்றால் குப்பி படம் அவரிற்கு கொடுத்திருந்த அனுபவங்கள் அப்படியானது. எம்மவர்கள் வெளிநாடுகளில் சாதாரண இந்திய மசாலா படங்களை வெற்றிபெற வைத்து கோடி கோடியாய் தயாரிப்பாளர் சம்பதிக்க வழி காட்டுவார்கள் ஆனால் குப்பி எல்லாளன் போன்ற படங்கள் வியாபார ரீதியில் தோல்வியில் முடிந்திருந்தது.ஆகவே புலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் தாயகம் தேசியம் பற்றிய உணர்வு அதிகம் என்கிற போலி மாயையும் இங்கு உடைபட்டுப் போகின்றது.

இங்கு இந்திய இரயில்வேயை பற்றியும் எழுதவேண்டும். இந்திய இரயில்களில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை ஏசி இரயில்கள் கூட அழுக்கானதாகவே இருக்கிறது கழிப்பறையை பற்றி சொல்லவே வேண்டாம். உள்ளை போனாலே சத்தி(வாந்தி)தான் வரும்.கழிப்பறை விடயத்தில் இந்தியாவில் மனில வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒரே ஒற்றுமை பொதுக்கழிப்பறை எல்லாமே மோசமானதாகவே இருந்தது. சுத்தம் செய்வதே கிடையாது என நினைக்கிறேன். இந்திய இரயில் பயணத்தில் எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமும் ஒன்று கிடைத்தது அது பெல்கம்மிலிருந்து பூனேக்கு போகவேண்டியிருந்ததால்.

இரவுப்பயணம் கையை காலை நீட்டி சுகமாக படுத்தபடி செல்லலாமென நினைத்து இரயிலில் படுக்கை வண்டி பதியலாமென பெல்கம் இரயில் நிலையத்திற்கு சென்றேன். கர்நாடகாவில் இரயில் உடனடி பயணங்களிற்கான பதிவுகள் செய்யமுடியாது. ஒரு மாதத்திற்கு முன்னரேயே பதிவு செய்து வைக்கவேண்டும் பின்னர் உள்ள இடங்கள் அனைத்தையும் அதற்கென உள்ள முகவர்கள். முகவர்கள் என்று சொல்ல முடியாது தரகர்கள் பதிவுசெய்து வைத்துவிடுவார்கள் கடைசி நேரத்தில் அவசரமாக வரும் பயணிகள் றிக்கற் கேட்டு இல்லையென திரும்பும் பொழுது இரயில் நிலையத்திற்கு வெளியே நின்றபடியே அதிக விலைக்கு இடங்களை விற்பதுதான் இவர்களது வேலை. சினிமா கள்ள றிக்கற் விற்பதுபோன்றதுதான் இதுவும். இதில் இரயில்வே நிருவாகத்திற்கும்.இவர்களிற்கும் மட்டுமல்லாது இரயில்வே போலிஸ் என தொடர்புகள் உண்டு.நான் ரிக்கற் வாங்க இரயில் நிலையம் சென்றபொழுதே உனக்கு உள்ளை றிக்கற் கிடைக்காது வெளியிலை வாங்கலாமென்றான். எனக்கு இலஞ்சம் கொடுப்பதில் விருப்பம் இல்லை எனவே எதற்கும் முயற்சி பண்ணி பாக்கலாமென நினைத்து போய் ரிக்கற் வாங்குமிடத்தில் பூனேக்கு படுக்கை இடங்கள் பதியவேண்டும் என்றேன். எப்பொழுது என்றார் நாளையிரவு என்றேன். நாளையிரவா இடமில்லை என்றார்.

படுக்கை வசதியில்லாவிட்டால் பரவாயில்லை சாதாரண இருக்கை இருக்கா என்றேன். வெளியூர்காரனா?? பதிவுகள்குறைந்தது ஒரு மாதத்திற்கு முதல் செய்யவேண்டும் வேண்டுமென்றால் றிக்கற் இடம் கிடைத்தால் இருந்து போ அல்லது நின்றபடிபோ என்று அலட்சியமாக பதில் சொன்லி விட்டு என்னை தள்ளி நிக்க சொல்லிவிட்டு அடுத்தவருடன் கதைக்க ஆரம்பித்து விட்டார். பத்துமணித்தியால பயணத்தை நின்றபடி போகச்சொல்கிறானே என்று கேபம் வந்தது ஆனாலும் போன இடத்தில் எங்கள் கோபம் ஒன்றும் ஆகாது என்று எனக்கு தெரியும்.. முதலேயே சொன்னன் கேட்டியா வா போய் ஏஜெண்டை பிடிக்கலாமென்றவன் அங்கேயே நின்ற ஒரு தரகரை பிடித்து இரண்டு றிக்கற் வேண்டுமென்றான்.பெவளியே நில்லங்கள் என்று பணத்துடன் போனவன் 5 நிமிடத்தில் இரண்டு றிக்கற்றுடன் வந்தான் அவனது இலஞ்சம் ஒரு இடத்திற்கு 150 ருபாய்கள். றிக்கற் வாங்கியாகி விட்டது மறுநாள் பூனேக்கு புறப்படதயாராகி இரயிலில் எமது பெட்டியை தேடிப்பிடித்து ஏறியாகி விட்டது.அந்தப் பெட்டியில் எமது இலக்க இடத்தை தேடிப்போனால் அங்கு எமது படுக்கை இடத்தில் இருவர் இருந்தார்கள் நான் அவர்களிடம் எனது றிக்கற்ரை காட்டி இது எனது இடம் என்றேன் அதற்கு அவனும் தனது றிக்கற்றை தூக்கி காட்டி இது எனது இடம் மூன்று மாதத்திற்கு முதலேயே பதிந்து வைத்திருந்தேன் என்றான். அதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது இது எனது இடம் எனறவும் அவன் ஏதோ கிந்தியில் எகிறினான். பதிலிற்கு எனது மனைவியும் கிந்தியில் எகிறவே உடைனையே எங்களை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது கொஞ்சம் சாந்தமான அந்த கிந்திவாலா சரி ரி.ரி.ஆர் வரட்டும் என்றான் அதுவரை படுக்கை இருக்கையாக இருக்கட்டும் அதிலேயே எம்மையும் இருக்கச்சொன்னான். எம்மை சுற்றி நின்ற கூட்டத்திற்கும் கிளைமாக்ஸ் இல்லாமல் படம் முடிந்தது போல ஏமாற்றத்தில் அவரவர் இடங்களிற்கு போய்விட்டார்கள். பிறகுதான் தெரிந்தது அதே பிரச்சனை எமக்கு மட்டுமல் பலரிற்கு ஒரே இடம் இரண்டுதடைவை விற்கப்பட்டிருந்தது. பலரும் ரி.ரி.ஆரின் வரவை எதிர்பார்த்து அவர் வருவாரா??என காத்திருந்தனர்.

என்ரை மனிசியோ றிக்கற் வித்த புரோக்கரை ஆசை தீர தமிழில் திட்டிக்கொண்டேவந்தாள். எமக்கருகில் வந்தவர் மனிசியிடம் என்னம்மா பிரச்னை என்றார். வந்தவர் தமிழர் மதுரைக்கார். அவரிற்கு நான் தமிழில் பிரச்னையை சொன்னேன் உடனையே என்னிடம் யவ்னாவா??என்றார்.ஓம் என்றேன் பாத்தீங்களா பேச்சை வைச்சே பிடிச்சிட்டமில்லை என்று பெருமையாக சொன்னவரிடம் நீங்க மதுரை பக்கமா என்றேன். சிரித்தார் நாங்களும் பேச்சை வைச்சே புடிச்சிடுவம்மில்லை..

றிக்கற்ரை பரிசோதித்தவர் கொஞ்சம் பொறுங்க பதிவு செய்த யாராவதுவராமல் இருந்தால் அந்த இடத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று விட்டு போனவர்.ஒரு மணித்தியாலத்தல் திரும்பி வந்தார்.இன்னொரு பெட்டியில் ஒரே ஒரு இடம் மேலே இருக்கின்றது படுக்க முடியாது இருந்து போகலாம் என்றார். இருந்து போய் சேர்ந்தாலே போதும் என்று அந்த இடத்தில் தாவி ஏறி அமர்ந்து பயணத்தை தொடர்ந்தோம். இடமே கிடைக்காதவர்கள் கிடைத்த இடங்களில் நடைபாதையில் என சரிந்து படுத்துக்கொண்டார்கள். அதிகாலை 5 மணியளவில் பூனேயை வந்தடைந்தோம் இரயில் கதவைத்திற்நததும் மூத்திர நாற்றம் முகத்திலறைந்து வரவேற்றது. பூனே வரவேற்கின்றது (பூனே சுவாகதே ) என்று கிந்தியில் அறிவிப்புவேறு..

கடந்த பதிவில் பெங்களுரிற்கு புறப்பட்டநான் புனேயில் கொண்டுபோய் விட்டு விட்டேன். எனவே பழையபடி பெங்களுரிற்கே வருவோம். பெங்களுரை காலை இரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்தது அங்கு என்னுடைய நண்பர் எனக்காக காத்திருந்தார். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. சீருடையில் போலிஸ் வண்டியிலேயே என்னை அழைத்துப்போக வந்திருந்தார். அவர் தற்சமயம் காவல்துறையில் உயர்பதவியென்றில் இருப்பதால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புகருதி அவர் பெயரை இங்கு தவிர்த்து போலிஸ் காரர் என்றே எழுதுகிறேன். அவரது வாகனத்தில் ஏறும்போது "வேறு ஏதாவது வாகனம் கொண்டுவந்திருக்கக்கூடாதாய்யா?? என்னை அரஸ்ற்;பண்ணிக்கொண்டு போறமாதிரியே இருக்கு என்றேன் "அவரிடம்.போலிஸ் வண்டியில் பந்தாவா போறமே எண்டு நினைப்பீங்க எண்டு பாத்தால் இப்படி நினைக்கிறீங்களே.எப்பவுமே திருடனுகளுக்கு போலிசை பாத்தாலே அரஸ்ற்பண்ணிடுவாங்களோஎன்கிற பயம்தான் என்றபடியே சிரித்தார்.

இதைவிட வாயை வைச்சுக்கொண்டு சும்மாயிருந்திருக்கலாம்.
அவரிற்கு அன்று வேலைநாள் என்பதால் என்னை விவேவக் நகரில் இருக்கும் நண்பர் வீட்டில் இறக்கிவிடும்படி கூறியிருந்தேன் அவரிற்கு வேலை முடிந்ததும் மாலை பெங்களுர் மஜெஸ்ரிக் சிற்றியில் சந்திப்பதாக முடிவுசெய்திருந்தோம். விவேக்நகரில் உள்ள அரசகுடியிருப்பில் போலிஸ்வண்டி நுளைந்து நின்றது. அங்கிருந்த பலர் போலிஸ்வண்டி ஏன்இங்கு நிற்கிறது என்கிற கேள்விக்குறியுடன் எட்டி எட்டி பார்த்தனர். எனது போலிஸ் நண்பனிடம் மாலை சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டு நான் போக வேண்டிய மாடிக்குடியிருப்பை நோக்கி நடந்தேன்.பலரது கண்களும் என்னையே பார்த்படி இருந்தது.அந்தக் கண்களிற்கு சொந்தக்காரர்கள் சிலர் நானும் போலிஸ்காரனாயிருப்பனோ??என நினைத்திருக்கலாம்.அல்லது யாரே ஒரு திருடன் போலிஸ் கொண்டுபோய் விசாரித்துவிட்டு கொண்டுவந்து விட்டிருக்கிறான்கள் என்றும் நினைத்திருக்கலாம்.ஆனால் ஏரியாவிற்கு புதிசாயிருக்கிறானே யாராயிருக்கும் என்கிற கேள்வி அவர்களது பார்வையிலேயே தெரிந்தது. எனது நண்பன் ஒரு மாடிக்குடியிருப்பில் குடியிருக்கிறான் அவனும் மனைவியும் வேலைக்கு போகின்றவர்கள்.ஒரேயொரு மகள் பாடசாலைக்கு போகிறவள். எனவே வீட்டு திறப்பை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு போவதாகவும் அவர்களிடம் விபரம் சொல்லியிருப்பதாகவும் மத்தியானம் வந்துவிடுவதாகவும் முதலேயே தொ.பேசியில் சொல்லியிருந்தான். பெங்களுரில் பெரும்பாலானவர்கள்வெளிநாட்டைப்போலவே குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகிறார்கள்.

இல்லாவிட்டால் பெங்களுரின் வீட்டு விலைவாசியை சமாளிக்க முடியாது.அவன் சொன்னபடி அவனது பக்கத்து வீட்டு அழைப்பு மணியை அமத்தினேன்.கதைவைத்திறந்த அம்மணியிடம் நான் ஆங்கிலத்தில் பாக்கியாவின் நன்பண் வீட்டு சாவி வேண்டுமென்ற என்னை மேலும் கீழும் பார்த்தவர் தமிழில் பாரிசிலை இருந்து வந்தவங்களா என்றார் அவரது கேள்வி சந்தேகமாயிருந்தது.ஒரு நிமிசம் என்று உள்ளே போனவர் எனது நண்பனிற்கு போனடித்து கதைத்துவிட்டு என்னிடம் தொ.பேசியை நீட்டினார் நான் வாங்கி காதில் வைத்ததும் வந்துட்டியா சாவியை வாங்கி போய் வீட்டிலை றெஸ்ற் எடு கொஞ்ச நேரத்திலை வந்திடறேன் என்றான்.பின்னர் தொ.பே வாங்கி நான் சரியான ஆள்தானா என உறுதி செய்தபின்னர் சாவியை நீட்டியபடி சாறிங்க என்றார். றெம்ப ஊசாராய் இருக்கிறாங்க என்று நினைத்தேன். சிலவேளை எனது கோலத்தை பார்த்ததும் பாரிசில் இருந்து வந்தவர் போல இல்லாமல் சென்னை பாரிஸ் கோணரில் இருந்து வந்தவர்போல இருந்திருக்கும்.

வீட்டில் போய் கொஞ்சநேரம் நித்திரை கொண்டுவிட்டு மதியமளவில் வந்த நண்பனுடன் சேர்ந்து சாப்பிட்டு அவனுடன் அரட்டையடித்துவிட்டு மாலை 6 மணியளவில் மெஜிஸ்ரிக் சிற்றி போவதற்காக பஸ்சில் ஏறினேன்.பஸ் வாகன நெரிசல்களில் மணிக்கு 10கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருந்தது அது அன்றைய எமது சி.ரி.பி பஸ்சை நினைவிற்கு கொண்டுவந்தது. இந்தியாவிலேயே தரமான அரசு பஸ் என்று பார்த்தால் தமிழ்நாட்டிற்கு முதலிடம் கொடுக்கலாம் தரமானதாக இருந்தது.பஸ் மெஜிஸ்ரிக்கை அடைவதற்கு முன்னர் அந்த பேலிஸ்காரரைப்பற்றியும் கொஞ்சம் உங்களிற்கு சொல்லிவிடலாம்.இவரும் ஒரு தமிழ் உணர்வாளர்தான் 84 களில் புலிகளின் மூத்த தளபதிகளின் ஒருவரான புலேந்திரன் பெங்களுரில் சிலகாலம் தங்கியிருந்தார் அன்றைய காலகட்டத்தில் புலேந்திரனின் நெருங்கிய நண்பராக இருந்தவர். தொடர்ச்சியாக ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு உதவிகள் செய்துவந்தவர் ராஜீவ்காந்தி கொலையை அடுத்து ராஜன்(சிவராசன்) குழுவினர் பெங்களுரில் வந்து தங்கியிருந்தனர். ஆனால் ஏற்கனவே பெங்களுரில் ஒரு வீட்டில் புலிகள் அமைப்பினை சேர்ந்த காயடைந்து சிகிச்சை பெறுபவர்கள் வேறு வேலைகளிற்காக தங்கியிருந்தவர்கள் என ஏழுபேர் கொண்ட குழுவென்று தங்கியிருந்தனர்.இவர்களிற்கு ராஜன் குழுவினர் பெங்களுர் வந்த விடயம் தெரிந்திருக்கவில்லை.

ராஜன் குழுவினர் போலிசாரால் சுற்றிவழைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஊடகங்கள் வாயிலாகவே இவர்களிற்கு தெரியவந்தது. அந்தச் சம்பவத்தையடுத்து பெங்களுரில் தமிழர்களிற்கெதிரான கலவரம் ஒன்றும் வெடித்தது தமிழர்கள் எல்லாமே புலிகள் என்கிற தோரணையில் தங்கள் தலைவனை கொன்றவர்கள் என கன்னடர்கள் குறிப்பாக காங்கிரசார் தமிழர்களை தாக்கத் தொடங்கினார்கள் சிவாஜி நகரில் இருந்த பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். எங்கும் போலிஸ் காவல் தேடுதல் என நடந்து அங்கு தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் பலரும்கைது செய்யப்பட்னர். ஏழுபேர் பற்றிய விபரங்களை கிட்டு எனக்கு அறிவித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.அப்பொழுது அந்த பேலிஸ்கார நண்பருடன் நான் தொடர்பு கொண்டு அந்த ஏழுபேரையும் பாதுகாக்கும்படி கேட்டிருந்தேன். அவரும் அந்த ஏழு பேரையும் பத்திரமாக கர்நாடகத்தின் கிராமப்புறமான சிக்மங்களுர் பகுதியில் கொண்டுபோய் தங்கவைத்திருந்து நிலைமைகள் சீரானதும் அவர்கள் அங்கிருந்து வெளியேற உதவியிருந்தார். அவர்களில் சிலர் இலங்கைக்கும் மற்றையவர்கள் வெளிநாடுகளிற்கும் வந்துவிட்டார்கள்.இப்படி அவர் செய்த உதவிகள் பல.அந்த போலிஸ்காரரும் பல ஊராக வேலைபார்த்து இப்பொழுது மீண்டும் பெங்களுரிலேயே ஒரு அதிகாரியாகி வந்திருக்கிறார். இராஜீவ் காந்தி சம்பந்தமான விடயங்கள் சிலவற்றையும் எழுதலாமென நினைக்கிறேன்.இந்தக் கொலை பற்றி பல்லாயிரம் கட்டுரைகளும் பல புத்தகங்களும் வெளிவந்து விட்டன இன்னமும் வரலாம். சிலர் எழுதியவற்றை படித்தால் சிரிப்பு வரும். அந்தக் கொலை பற்றிய விசாரணைகளில் இருந்த ஒரு அதிகாரியும் ஒரு சிடி வெளியிட்டிருந்தார் பெயர் ஞாபகத்தில் இல்லை அதில் இராஜீவ் காந்தி கொலையை பொட்டம்மானும் பிரபாகரனும் யாழ்ப்பாணத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் திட்டமிட்டனர் என சொல்லிருந்தார். எனக்குத் தெரிந்து யாழ்ப்பாணத்தில் பனங்கூடலும் ஈச்சம் பத்தை அல்லது நாயுருவிப் பத்தையுமே உள்ளது. அடர்ந்காடு எங்கே இருக்கு என்று மண்டையை போட்டுடைத்தேன்.

இப்படி விறுவிறுப்பிற்காக பலரும் பலவிடையங்களை கற்பனைகளாக சேர்த்தே எழுதியிருந்தனர். ஆனால் விசாரணை அதிகாரிகளுள் ஒருவராக இருந்த ரகோத்தமன் எழுதிய புத்கத்தில் பலவிடயங்களை மிகைப்படுத்தல் இல்லாமல் எழுதியிருந்தாலும். டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலிற்கு உதவியவர்கள் பற்றிய விடயங்கள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை அது மட்டுமல்லாது இந்த திட்டத்தில் வேறு அமைப்புக்கள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் வேறு பெரும்புள்ளிகள் என்பவர்களின் தொடர்புகள் என்பன பற்றி பல பொதுவான சந்தேகங்களை தீர்க்காமல் தனியாக முழுக்க முழுக்க புலிகளின் சதித் திட்மே அதற்கு சிலர் உதவினார்கள் என முடித்திருக்கிறார்.ஆனால் ராஜீவ் காந்தியை கொல்லும் திட்டத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மூன்று மானிலங்களில் மூன்று குழுக்களாக திட்டமிடலை மேற்கொண்டனர். மூன்றில் எது மிக சாதகமாக அமைகிறதோ அதனை இறுதித் தெரிவாக்கலாமென புலிகளின் தலைமை முடிவெடுத்திருந்தது.டெல்லியில் ஒரு குழுவும் ஆந்திராவில் ஒரு குழுவும் தமிழ்நாட்டில் ஒரு குழுவும் இயங்கியது. டெல்லியில் இருந்த குழுவை வழிநடத்தியவர் சிறி என்பவர் இவர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்தவர் ஒரு சீக்கிய பெண்ணை மணமுடித்திருந்தார் இவரிற்கு டெல்லியில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் டெல்லியில் புலிகள் அமைப்புடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் வேற்று மொழிக்காரர்களும் இயங்கியதால் பொதுவாக ஆங்கிலம் நன்றாக கதைக்கத்தெரிந்த ஒருவர் புலிகள் அமைப்பிற்கு தேவையாக இருந்தது அதற்காக கனகரத்தினம் அவர்களை புலிகள் அமைப்பு டெல்லிக்கு அனுப்பிவைத்தது கனகரத்தினம் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாவார். அடுத்ததாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இயங்கிய குழுக்ளைபற்றி அடுத்த தொடரில் பார்ப்தோடு இந்திய இராணுவ வருகையுடன் சம்பந்தமேயில்லாத ஜெயலலிதாவின் பெயரையும் புலிகளின் கொலைப்பட்டியலில் இணைந்தது பற்றியும் எழுதுகிறேன்.


நான் மஜெஸ்ரிக் சிற்றி வந்திறங்கிவிட்டேன்.போலிஸ்காரருடன் மஜெஸ்ரிக் பகுதியில் இருந்த பார் ஒன்றில் புகுந்து தாக சாந்தி செய்துவிட்டு வருகிறேன். பொறுத்திருங்கள் தொடரும்.........


பிற் குறிப்பு இராஜிவ் காந்தி பற்றிய சம்பவத்துடன் சிலரது பெயர்களை நேரடியாக குறிப்பிட்டு எழுதியுள்ளேன் காரணம் அவர்கள் தற்சமயம் உயிருடன் இல்லையென்பதாலேயே அவர்களது பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.உயிருடன் இருப்பவர்கள் பெயர்கள் அவர்களது பாதுகாப்புகாரணங்களிற்காக தவிர்க்கப்படும். நன்றி

புதிதாக நான் எதையும் எழுதவேண்டிய தேவையில்லை அதனை விசாரணை சம்பந்தப்பட்ட அமிகாரிகள் பலரும் எழுதிவிட்டார்கள். ஆனால் மேலதிகமாக சில விடயங்களை புலிகள் சம்பந்தப்பட்டவையை மட்டுமே இங்கு விபரமாக எழுதுகிறேன் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு, ஷாஹீத் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவரான மகந்த் சேவா தாஸ் சிங் அளித்த வாக்குமூலம்தான் அது. அதை மட்டும் அப்படியே தருகிறோம்!

மகந்த் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26, 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர் (ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர்ன் கோர்ட், மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன். அங்கு காலிஸ்தானின் அலுவல கமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான், பிரதம மந்திரி சந்திரசேகரைச் சந்தித்தேன். நான் லண்டனுக்குப் புறப்படுவதாக சந்திரசேகரிடம் தெரி வித்தேன். அவர், என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். 'பஞ்சாபில் வன்முறையை நிறுத்திவிட்டு, பஞ்சாப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’ என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின்அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றேன். இருவரும் தேநீர் அருந்தி னோம். அந்த இடத்தில் ஏற்கெனவே 10 அல்லது 12 நபர்கள் இருந்தனர். சௌகான் என்னை கீழ்த்தளத்தில் இருந்த காலிஸ்தான் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு தொலைத் தொடர்புக்குத் தேவை யான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொடர்புகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம், மேல்தளத்தில் கூடி இருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன். அவர்கள் பப்பர்கல்சா, காலிஸ்தான் கமண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ-யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ-யின் ஆர்.எம்.பிரதியும் இருந்தார். நான் பிற நபர்களின் பெயர்களைக் கேட்கவில்லை.

நான் சௌகானிடம், 'எப்படி சந்திரசேகர்ஜி ஐந்து வருடங்களுக்குப் பிரதம மந்திரியாக நீடிப்பார்?’ எனக் கேட்டேன். அதற்கு சௌகான், 'சந்திரசேகர், ராஜீவ் காந்தியை அழிப்பார்’ என என்னிடம் கூறினார். 'ராஜீவ் அழிவுக்குப் பிறகு காங்கிரஸில் முக்கியமான தலை வர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர், காங்கிரஸ், சந்திரசேகரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளும். எனவே சந்திரசேகர் ஐந்து வருடங்கள் பதவியில் இருப்பார்’ என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படு வார் எனக் கேட்டேன்... 'சீக்கியர்கள் மட்டும் அல்ல... தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்குத் தயாராக இருக்கலாம்’ என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்வீந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா’ (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறிய விரும்பினேன். ஆனால் அவர்கள், 'அதைக் கேட்கக் கூடாது’ எனக் கூறினர்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து, 'ராஜீவ் அழிக்கப்படுவார்’ என் பதை நான் சந்திரசேகரிடம் கூற வேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம், 'புது தில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவைக் கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது’ எனக் கூறினார். நான் அவரிடம், 'இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புது தில்லியில் வைத்து ராஜீவ் கொலை செய்யப்பட்டால், இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர்கூட உயிருடன் தப்ப முடியாது’ என்று சொன்னேன். 'நாங்கள் ஏற்கெனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்ட மிட்டுவிட்டதால், அந்தப் பாதையில் இருந்து விலக மாட்டேன்’ என்று அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த் தளத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர் மனதை மாற்றினேன். 'ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக்கொள்வதோடு, வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலையை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன்’ என்று அவர் கூறினார். 'எனக்கு சந்திராசாமியிடம் தொடர்பு உள்ளது’ என்றார். சந்திராசாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றிக் கேட்டபோது, தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியைக் கொல்லப் போவது இல்லையென முடிவு செய்து இருப்பதாகத் தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன்... சௌகான் என்னிடம் மூன்று கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திர சேகருக்கு... நான் அங்கிருந்து கிளம்பும்போது, இந்தியத் தலைவர்களான சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா, சந்திராசாமி மற்றும் இண்டியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன், சர்தார் பல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்ததாக சௌகான் என்னிடம் தெரிவித்தார். ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸ்பிரஸ் டவரில் நடந்தது. அந்தக் கூட்டம் 'காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது மற்றும் ராஜீவ்காந்தியை அழிப்பது’ ஆகிய விஷயங்கள் சம்பந்தப் பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விஷயங்களை நான் ராஜீவ் காந்தியிடம் (பிப்ரவரி 10, 1991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விஷயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்துவிட்டதாகக் கூறினேன். சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ் காந்திக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. அவர் கோபமடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991, பிப்ரவரி 14 அல்லது 15-ல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக, இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார். இதே அளவு ஆபத்தான விஷ யத்தை நான் அவரிடம் தெரிவித்ததாகவும் ராஜீவ் கூறி னார். சௌகானுக்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்து இருந்தனர்... ராஜீவ்ஜியின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார்!'' என்று விலாவாரியாக விவரிக்கிறது அந்த வாக்குமூலம்.

அந்த பாரில் தண்ணியடித்துக்கொண்டிருக்கும் போது நான் கோழிபொரியலிற்கு ஓடர் கொடுத்தேன் அப்பொழுது என்னிடம் அதிகமா சாப்பிடவேணாம் டின்னர் எங்களது வீட்டிலைதான் வீட்டுக்காரிட்டை ரெடிபண்ண சொல்லிட்டன் என்றார். கொஞ்சம் ஆச்சரியமாக அவரை பார்த்தேன். ஏனென்றால் எனக்கும் அவரிற்கும் குறைந்தது இருபது வருடங்களிற்குமேல் பழக்கம். ஒரநாள்கூட அவர் தன்னுடைய பாதுகாப்பு கருதி என்னை வீட்டிற்கு அழைத்து கிடையாது அதே நேரம் நாங்களும் அவரிடம் கொடுத்த வேலையை செய்து முடித்ததும் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு போய்கொண்டேயிருப்போம். அவரது தனிப்பட்ட வாழ்புபற்றி அறிய முற்பட்டதில்லை. அவர் என்னை வீட்டிற்கு விருந்திற்கு அழைத்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. சிலநேரம் ஒரு மரியாதைக்காக கூப்பிட்டிருக்கலாமென நினைத்து வேண்டாங்க எனக்கு பசியில்லை நீங்க போயிடுங்க என்றேன். இல்லப்பா இத்தினை வருசமா பழகியிருக்கோம் பலவாட்டி கூப்பிட நிசை;சிருக்கேன் ஆனா என்று இழுத்தார் ...புரியிது அதுதான் வேணாம் என்கிறன் என்றேன். ஆனா இப்ப அப்படியில்லை கட்டாயம் வரணும் நான் சொன்னா கேக்கமாட்டிங்க என்றுவிட்டு திடீரென அவரது மனைவிக்கு போனடித்து என்னம்மா அவரு வரமாட்டேங்குரார் நீயே பேசு என்று போனை எனது காதில் வைத்தார் நான் அவரது மனைவியை அதற்குமுதல் பார்த்ததோ பேசியதோ கிடையாது அவர் என்னிடம் அண்ணா எல்லாம் பண்ணியாச்சு கட்டாயம் வரணும் கட்டளைமட்டும் போனில் வந்தது நானும் தட்டுத்தடுமாறி சரிங்க வரேன் வரேன் ...என்று இழுத்து நிறுத்தினேன். சிரித்தபடி போனை நிறுத்திவிட்டு உங்களையெல்லாம் அவங்களிற்கு தெரியாது ஆனால் நிறையவே சொல்லியிருக்கேன். எனக்கு பையன் பிறந்தப்போ புலேந்திரன் என்னு பெயரை நான் செலக்ற் பண்ணினப்ப என் வீட்டுக்காரி இதென்ன பேரு என்னு றெம்ப பிரச்சனை பண்ணினா பின்ன அவனை பத்தி சொன்னப்புறம் ஓத்தக்கிட்டா என்றார்.

அவரது வீட்டில் சாப்பிடபோவதென்று முடிவெடுத்து விட்டதால் அளவுடன் நிறுத்திவிட்டு போகலாம் என்றேன். ஆனால் போலிஸ் காரரோ ஒரு போத்தலை வாங்கியபடி இது வீட்டிலை என்றபடி புறப்பட்டார். அவரது வீட்டில் அன்பான உபசரிப்பு சாப்பாட்டின்போதும் நண்பர் கிளாசில் விஸ்கியை ஊற்றிக்கொண்டேயிருந்தார். தலை கிறுகிறுத்தாலும் எல்லாம் நல்லபடியாய் நடக்கவேணும் என்று மனதில் நினைத்தபடி சாப்பிட்டு முடித்துவிட்டு விடை பெற்றபொழுது நானே கொண்டாந்து விடறெனே என்றபடி நண்பர் எழுந்து வந்தார். போலிசே தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது நான் ஆட்டேவிலையே பேயிறேன் என்றுவிட்டு சரிங்க நான் கிழம்புறேன் என்று அவரது மனைவியை பார்த்து கூறியபொழுது அவரும் மகனுமாக திடீரென எனது கால் அருகில் குனிந்து தொட்டு கும்பிட்டது எனக்கு ஏதோபோல் ஆகிவிட்டது அதன்பிறகு போலிஸ்காரரும் என்னை இறுக்க கட்டிப்பிடித்தபடி சே இப்படியாயிட்தே .. என்றார். அதுவரை நான் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் சிந்தனைகள் எல்லாமே கண்ணீர் துளிகளாகமாறிவிட்டிருந்தது. முடிந்தவரை அடக்கிப்பார்க முயன்றேன் முடியவில்லை. ஒரு மனிதன் போதையில் இருக்கும்போதும் உணர்வுகளை அடக்க முடியாதென்பதை அந்தத் தருணங்களில் உணர்ந்தேன்.

வெளியே என்னுடன் கூடவந்த நண்பன் அங்கு நின்றிருந்த ஒரு ஆட்டோவை கூப்பிட்டு (ஆட்டே காரர் தமிழர்தான்) என்னை ஏற்றிவிட்டு பணம் எதுவும் அவங்ககிட்டை கேக்காதை எங்கிட்டை வாய்யா நான் கொடுக்கிறேன் என்றுவிட்டு மீண்டும் ஒருமுறை கட்டிப்பிடித்து விடைபெறும்போது மெதுவாக காதருகில் இருக்கிறாரா என்றான்...தலையசைவை மட்டும் பதிலாக்கிவிட்டு ஆட்டேவில் ஏறி அமர்ந்தேன். அவர் வீட்டின் முன்னால் இருந்த பூச்சாடியை காலால் ஓங்கிஅடித்துவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார் .ஆட்டோ விவேக் நகர் நோக்கி நகர ஆரம்பித்தது.. விவேக் நகரில் என்னை இறக்கிய ஆட்டோ காரரிடம் எவ்வளவு ஆச்சுப்பா என்றதும் ஜயோ வேணாங்க அவரு சொன்னப்புறம் வாங்கினா நம்ம பிழைப்பு ஆகாது என்றபடி விடைபெற்றார். அடுத்ததாக கதையின் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல் மூன்றாவது நண்பன் பற்றி அடுத்ததாக பாக்கலாம்....

மறுநாள் கலைஎழுந்து நண்பனிடம் விடைபெற்றுக்கொண்டு எனது அடுத்த பயணத்தினை தொடர்ந்தேன்.அடுத்த பயணம் அன்ரனிதாசை பாரக்கவேண்டும். அவன் பெங்களுரில் இருந்து சுமார் 270 கி;மீற்றர் துரத்திலிருக்கும் கணேஸ்பூர் என்கிற குக்கிராமத்தில் வாழ்கிறான். கூகிளில் தேடினாலும் கிடைக்காத அந்தக் குக்கிராமத்திற்கு போவதற்கு நான் முன்று பஸ்மாறி ஏறியிறங்கவேண்டும். அதுவும் உள்ளுர் பஸ்சில்தான் போகவேண்டும் அது அத்தனை நிறுத்தங்களிலும் நின்று நின்றுதான் போகும் (கர்கால்) பெங்களுரில் முதலாவது பஸ்சில் ஏறியாகிவிட்டது காலை எட்டுமணிக்கு ஏறியபஸ் ஆடியசைந்தபடி தனது பயணத்தை தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல வெய்யிலும் ஏற புழுதி வெக்கை முதல்நாள் இரவு அடித்த தண்ணியின் தாக்கம் எல்லாம் கலந்து தலையை தாக்கியது. நேரத்தை போக்குவதற்காக மகேந்திரன் அவர்கள் தந்த புத்தகத்தை படிக்கலாமென நினைத்து படிக்கத் தொடங்கினேன் முடியவில்லை.


தலையிடிக்கு தயாராய் வைத்திருந்த குளிசையை எடுத்து போட்டுக்கொண்டேன்.மதியம் கடந்து இரண்டாவது பஸ்சும் மாறிவிட்டிருந்தேன் பசிப்பதுபோல் இருந்தது ஆனாலும் சாப்பிட்டால் சத்தி (வாந்தி)வந்துவிடும் போல் இருந்தததால் அவ்வப்பொழு நிறுத்தங்களில் இளநீரை மட்டும் வாங்கிக் குடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். நேரம் மாரை 5 மணியை தாண்டிஓடிக்கொண்டிருந்தது எனக்கு பணயங்களின் போது நித்திரை வராது ஆனாலும் நேரத்தை கொல்வதற்காய் கஸ்ரப்பட்டு கண்ணை மூடிக:;கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் கொஞ்ச கட்டிட தொழிலாளர்கள் ஏறினார்கள் எனக்குப்பகத்தில் இருந்த இடத்தில் ஒருவர் அமர்ந்தார் பஸ் ஓடத்தொடங்கிய சிறிது நேரத்தில் அவரிற்கு வலிப்பு வந்துவிட்டது வலிப்புவந்தவர் கீழே விழுந்து இழுத்படி இருந்தார். அவர் விழுந்த சத்தத்தில் வில்லங்கத்திற்கு கண்ணை முடியபடி இருந்த நான் கண்ணை திறந்து பார்த்தேன். வேறு யாருமே அவரை கண்டுகொள்ளவேயில்லை அவருடன் வந்திருந்த தொழிலாளர்கள் உட்பட.எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை வலிப்பு வந்தவர்களிற்கு கையில் இரும்பை கொடுத்தால் நிற்கும் என்கிற நாட்டு வைத்தியமும் தமிழ் சினிமா வைத்தியமும் நினைவிற்குவர அவரது கையை பிடித்து இருக்கையின் கீழ் இருந்த கம்பியில் அமத்தினேன் அவர் அதை பிடித்தபடியே துடித்தார்.


அதே நேரம் அவர் என்னை செருகிய கண்களால் பார்ததது என்னை ஏதோ செய்தது.உடனேயே பஸ்சின் முன்பகம் போய் நடத்துனரிரை தட்டி தெரிந்த கன்னடத்தில் பேசி அவரை காட்டினேன். பஸ் நடத்துடர் பஸ்சை நிறுத்துமாறு கத்தி விட்டு இன்னெருவரின் உதவியுடன் வலிப்புவந்தவரை கீழே இறக்கி அங்கிருந்த கடை ஒன்றின் முன்னால் கிடத்திவிட்டு அவரது பையையும் அவரருகில் போட்டுவிட்டு ஓடிவந்து விசிலடித்தார் பஸ் புறப்பட்டது. நான் யன்னால் எட்டிப்பார்த்படியே இருந்தேன் வலிப்பு வந்தவரே துடித்துக்கொண்டேயிருந்தார்.அவரைச்சுற்றி மக்கள் கூடத்தொடங்கியிருந்தனர். அவரையாரவது வைத்தியசாலையில் சேர்த்திருப்பார்களா?? அல்லது வலிப்பு தானாக நின்றிருக்குமா?? என கொஞ்சநேரமாக அவரது நினைவாகவே இருந்தது.இரண்டாவது பஸ்சும் மாறி மூன்றாவது பஸ்சை பிடித்தாகிவிட்டது இனியும் அன்ரனிதாசைப்பற்றி சொல்லாமல் கதையை நகர்த்முடியாது

86ம் ஆண்டு சித்திரை மாதம் 17 ந்திகதியன்று மாதகல் கடற்கரையிலிருந்து சில கடல்மைல்கள் தொலைவில் புலிகள் மூன்று படகுகள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் அழிக்கப்டுகின்றது.
படகில் இருந்தபொருட்களில் முக்கியமான பொருட்கள் தாக்குதலில் சேதமடையாதவை. படகுகள் அழிக்கபட்ட இடமும் பெரும் ஆழம் இல்லாத பகுதி என்பதால் சுழியோடிகளை வைத்து பொருட்களை தேடிப்பார்பதென புலிகள் முடிசெய்திருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில்தான் புலிகளின் ஆரம்பகால போராளிகளில் ஒருவரான தளபதி அருணாவும் கொல்லப்பட்டதாக புலிகள் நினைத்து அஞ்சலி செலுத்திய பொழுதே ரெலோவுடனான முறுகல் ஏற்பட்டது அதனை விபரமாக நான் ஏற்கனவே இங்கு எழுதிவிட்டபடியால் அதை விடுத்து தொடர்கிறேன். சுழியோடுவதற்காக தமிழ்நாட்டிலிருந்து திறைமையான நான்கு சுழியோடிகள் அழைத்துவரப்பட்டனர் அவர்களுடன் எமது சுழியோடிகள் ஜந்துபேருமாக சேர்ந்து அந்தப் பொருட்களை தேடி சுழியோடினார்கள். அந்த சம்பவத்திற்காக வந்தவர்களில் ஒரவன்தான் அன்ரனிதாஸ்.புலிகள் அமைப்பிடம் நவீன வசதிகள் ஏதுமற்ற அன்றைய காலகட்டத்தில் நீச்சலிற்காக பயன்படுத்தும் கண்ணாடிகளை மட்டும் போட்டுக்கொண்டு பலரும் சுழியோடினார்கள்.அதில் திறைமையாக அதிக நேரம் அன்ரனிதாசும் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரும் சுழியோடி பொருட்களை எடுத்தனர். அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட சுழியோடிகளை மாதகலில் ஒரு வீட்டில் தங்கவைத்து அவர்களது தேவைகளை நானே கவனித்திருந்தேன். சுழியோடும் நிகழ்வுகள் முடிவடைந்ததும் மற்றைய மூவரும் இந்தியா திரும்பிவிட அன்ரனிதாஸ் மட்டும் அங்கேயே தங்கிவிட்டான்.பின்னர் புலிகள் அமைப்பிற்கு வண்டி(வள்ளம்)ஓட்டுனராக மாறிவிட்டிருந்தான்.அன்று எனக்கும் அவனிற்குமான பழக்கம் பின்னர் நல்லதொரு நட்பாக மாறிவிட்டிருந்தது. 94ம் ஆண்டு கடலில் நடந்த இலங்கைப்படையின் தாக்குதலில் குண்டடிபட்ட அன்ரனிதாஸ் அவனது நண்பர்களால் தமிழ்நாட்டிற்கு காப்பாற்றி கொண்டு செல்லப்பட்டான்.அன்ரனிதாசின் இடுப்பில் பாய்ந்த குண்டுகள் அவனது முதுகெலும்பையும் பாதித்திருந்தது அதனால் இரண்டரை ஆண்டுகள் எழுந்து நடக்கமுடியாமல் சிகிச்சை பெற்று தேறிவந்தான்.

அவன் காயம் பட்டவருடம்தான் திருமணமும் செய்திருந்தான் .கர்ப்பமாக இருந்த அவனது மனைவி இவன் வைத்திய சாலையில் இருந்த காலங்களில் இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிள்ளையை பெற்றுக்கொண்டதுடன் அதனை அன்ரனிதாசின் தயார் வீட்டில் போட்டுவிட்டு அவனுடன் போய்விட்டாள். கொஞசம் தேறி நடக்கக்கூடிய நிலையில் வைத்திய சாலையை விட்டு வெளியே வந்த அன்ரனிதாஸ் தன்னுடைய கிராமத்தில் வாழவிரும்பாமல் தாயாரிடம் பிள்ளையை விட்டுவிட்டு நண்பன் ஒருவனின் உதவியுடன் கர்நாடகாவின் கணேஸ்பூர் கிராமத்திற்கு வந்து சேர்கிறான்..........

கணேஸ்பூர் கிராமம் இன்னமும் பஞ்சாயத்து ஆட்சியில் உள்ளதொரு கிராமம். இந்தக் கிராமத்திற்கு வந்த அன்ரனிதாஸ் அங்குள்ள ஏரியில் மீன்பிடிக்கும் உரிமையையும் அதனை சுற்றியிருக்கும் புளியந்தோப்பையும் குத்தகைக்கு எடுத்துவிட்டான்.அத்துடன் தன்னுடர் கிராமத்தில் வேலைவெட்டியில்லாமல் திரிந்த சில இளைஞர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தொழிலை நடாத்தி வருகிறான்.வருமானத்திற்கு பஞ்சமில்லை. மாதா மாதம் பிள்ளைக்கும் தாயாருக்குமான செலவை அனுப்பிவிட்டு மீதிப்பணம் அத்தனையையுமே செலவுசெய்துவிடுவான்.ஏரியின் அருகே உள்ள பஞ்சாயத்து மண்டபம்தான் அவனது வீடு.திருமணமாகாத அவனது சீடர்களும் அங்கேயே மண்டபத்தில் தான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

மூன்றாவது பஸ்சையும் பிடித்து இரவு எட்டுமணியளவில் இறுதி இடமான கர்க்காலை வந்தடைந்தேன்.அதுவரை தான் பஸ் போகும் அங்கு எனது நண்பன் வண்டியுடன் வந்து காத்திருந்தான். நான் பஸ்சை விட்டு இறங்கியதுமே ஒரு இளைஞர்குழு என்னை அலாக்காய் துக்கிக்கொண்டுபோய் சிறிய லொறிபோல இருந்த ஒரு வண்டியில் போட்டார்கள் வண்டிக்குள் காத்திருந்த நண்பன் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டவன். எத்தினை வருசமாச்சு கொஞ்சம் எடை போட்டிருக்கிறாய் என்றான் கொஞ்சமல்ல கனக்கவே போட்டிருக்கிறேன் என்றேன். வண்டிக்குள் சாக்குகளும் மீன் கூடைகளுமாய் இருந்தது மீன் மணம் மூக்கை துளைத்து சென்றது.வண்டிக்குள் சாக்கினை விரித்து விட்டு எல்லாரும் அமர்ந்துகொண்டோம்
வண்டி நகரத் தொடங்கியது

அங்கு மீன் கூடைக்குள் இருந்த விஸ்கிபோத்தலை எடுத்த நண்பன் பாத்தியா உனக்காவே பாரின் சரக்கா தேடி வாங்கி வைத்திருக்கிறென் என்றபடி ஒரு பிளாஸ்ரிக் கோப்பையில் ஊற்ற இன்னொருவன் தண்ணீர் பக்கற்றை பல்லால் கடித்து துப்பிவிட்டு அதனுள் ஊற்ற அதனை என்னிடம் நீட்டிளான். வேணாண்டா காத்தாலையிருந்து சாப்பிடேல்லை ஏதாவது சாப்பிலாமென்றேன். உடைனேயே தயாராய் இருந்த பிரியாணி பசல் ஒன்றினை எடுத்து பிரித்து என்னிடம் நீட்டினான். பாதை கரடுமுரடாக இருந்ததால் வண்டி குலுங்கத்தில் சரியாக சாப்பிடமுடியாமல் போனது மட்டுமல்லாது ஓரே இருட்டாகவும் இருந்ததால் வண்டியை ஒருஇடத்தில் நிறுத்திவிட்டு வண்டி வெளிச்சத்சத்தில் சாப்பிட்டேன். பின்னர் வண்டி பயணத்தை தொடர்ந்தது நாங்கள் பழைய விடயங்கள் பலதையும்பற்றி பேசினேம் பலரை அவன் என்னிடம் விசாரித்தான். வண்டியில் தமிழ் கன்னடம் கிந்தி என கலந்து மாறி மாறி அனைவரும் பேசிக்கொண்டார்கள்.வண்டியோ வயல் காடுகள் ஊடான சிறிய பாதையில் சுமார் ஒன்றரை மணிநேல பயணத்தின் பின்னல் ஒரு ஏரியின் அருகில் காடு போன்ற மரங்கள் நிறைந்த இடத்தில் நின்றது.

நம்ம அரண்மனை வந்தாச்சு இறங்கு என்றான். அதுதான் அவன் தங்கியிருக்கும் பஞ்சாயத்து மண்டபம். ஒருவன் ஓடிச்சொன்று இரண்டு வாளிலாம்புகளை பற்றவைத்தான். இந்த வாளி லாம்பை பாத்துத்தான் எத்தனை வருடமாகிறது இதனை மீனவர்கள்தான் பாவிப்பார்கள். ஒருகாலத்தில் மாதகல் கடற்கரையிலும் தமிழ்நாட்டு கரையிலும் முல்லைத்தீவு பாளி ஆற்றங்கரைகளிலும் இதே வாளி லாம்புகளுடன் கழிந்த இரவுகளும் இதே லாம்பு வெளிச்சத்தில் மீனவர்களின் கரைவலைச் சொதியும் அவியலும் சாப்பிட்ட நட்களும் ஞாபகத்திற்கு வந்தது. நீண்டநேரம் நாங்கள் கதைதுக்கொண்டிருந்தோம் மற்றையவர்கள் மதுவின் மயக்கம் ஏறிவிட பிரியாணி பாசல்களை அவிழ்த்து சாப்பிட்டுவிட்டு சாக்குகளை எடுத்து நிலத்தில் போட்டபடி படுத்துக்கொண்டார்கள். எனக்கும் கண்ணை சுழற்றியது நண்பனிடம் படுக்கலாண்டா காத்தாலை பேலாம் என்றேன் உடனேயே வண்டியை நோக்கி போனவன் அதனுள் இருந்த ஒரு புதிய பெற்சீற்றை எடுத்துகொண்டுவந்தபடி நீ பாரின்லை இருந்து வந்திருக்கிறாய் இங்கை படுக்க உனக்கு ஆவாது . அதுக்காத்தான் நான் பஞ்சாயத்து பிரெசிடன் வீட்டிலை ஒழுங்கு பண்ணியிருந்தேன் நீதான் வேணாம் எண்டிட்டியே சரி உன்னோடை தலைவிதி இங்கையே கிட. அதுதான் இன்னிக்கு ஒரு பெட்சீட் தேடி வாங்கினேன் நல்ல குவாலிட்டிதான் பஞ்சு மெத்தை மாதிரி இருக்கும் இதிலை படு என்றபடி நிலத்தில் விரித்தான்.

இதெல்லாம் எதுக்கடா சாக்கிலேயே படுத்திருப்பன் சாக்கு கூட இல்லாமல் எத்தினை நாள் படுத்திருப்போம். சாக்கையே போடு என்றேன். அதில்லைடா இங்கை காத்தாலை லைற்றா குளிரும் அதுக்குத்தான் வாங்கினேன் என்றான் நாம ஜரோப்பாவிலை பாக்காத குளிரா சரி கொண்டா என்றபடி அதனை விரித்தேன் இங்கினை சரியான நுளம்பு என்றபடி என்னைச்சுற்றி நாலைந்து நுளம்புத்திரிகளை பற்றவைத்தன்நான் கைவசம் நுளம்பு மருந்து (ஸ்பிரே) கொண்டு போயிருந்தேன் அதனையும் எடுத்து உடம்பில் அடித்துவிட்டு அப்படியே துங்கிப்போனேன். காலை வெய்யில் முகத்தில் சுள்ளென்றடித்தது கண்ணை விழித்து பார்த்தபொழுது நான் மட்டும்தான் தனியாக அங்கு படுத்திருந்தேன்.மற்றையவர்கள் சிலர் ஏரியில் நீச்சலடித்துக்கொண்டிருந்தனர். நான் எழும்பிறதை பார்த்ததும் நல்லா தூங்கினியா என்படி கையில் கொண்டு வந்த வேப்பங்குச்சியை நீட்டினான். என்னிடம் பற்பசை இருந்தது ஆனாலும் நீண்டகாலத்தின் பின்னர் வேப்பங்குச்சியை பார்த்ததும் வாங்கி சப்பிவிட்டு பல்லை தீட்டத் தொடங்கினேன்.குச்சி முரசில் குத்தி இரத்தமும் கசிந்தது . பல்லைத் தீட்டியபடியே கவனித்தேன் எங்கள் குழுவில் இருந்தவர்கள் சிலர் காலைக்கடனை முடித்துவிட்டுவந்து அந்த ஏரியிலேயே கழுவி விட்டு கொஞ்சம் தள்ளி முகமும் கழுவிக்கொண்டிருந்தனர்.

இன்னொருவன் ஆட்டோ ஒன்றை கழுவிக்கொண்டிருந்தனான். டேய் குளிக்கிறியா என்றான் நண்பன். இந்தத் தண்ணிலை குளிக்கிறதா என நினைத்தபடி இல்லைடா மூஞ்சிமட்டும்கழுவிறன் என்றுவிட்டு ஏரிக்கரைக்கு போன எனக்கு முகம் கழுவவே ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால் ஒரு காலத்தில் இதைவிட மோசமான தண்ணியை கூட வன்னி காடுகளில் துணியை போட்டு உறுஞ்சியது ஞாபகத்திற்கு வந்தது. எனவே கண்ணை மூடியபடியே மளமளவென்று முகத்தை கழுவி விட்டு வந்தேன். எனக்கு காலையில் பிளேன்ரீ ஒன்று குடித்தால்தான் காலைக்கடனிற்கு போவது பழக்கமாகிவிட்டிருந்தது. எனவே நண்பனிடம் என்னடா ரீ கிடைக்காதா என்றேன். அங்கு அடுப்பு மூட்டி ஒருவன் தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தான். எனக்கு பால்தேனிர் குடித்து பழக்கமில்லை எனவே எனக்காக பிளேன் ரீ தனியாக செய்து கொடுத்தார்கள் .முதல்நாள் இரவு விஸ்கி குடித்த அதே பிளாஸ்ரிக் கோப்பையில் பிளேன் ரீயை கொண்டுவந்து ஒருத்தன் நீட்டினான் வாங்கி குடித்தேன் கோப்பை சரியாக கழுவாததால் தேயிலை மணத்துடன் விஸ்கியின் மணமும் கலந்தே அடித்தது பிளேன் ரீ உள்ளே போய்கெண்டிருக்கும் போதுதான் நினைத்தேன் இந்த ஏரித்தண்ணியில்தானே பிளேன் ரீ செய்திருப்பார்கள் என நினைத்திருந்தாலும் கொதிக்கவைத்த தண்ணியில் பக்ரீரியாக்கள் அழிந்து விட்டிருக்கும் என மனதை தேற்றியபடியே குடித்து முடித்ததும் எனது அடி வயிறு காலைக்கடனிற்கு தயாராகியதுகாலைக்கடனை கழித்துவிட்டு வந்து ஏரியில் கழுவ எனக்கு விருப்பம் இல்லாதிருந்ததால் முதல்நாளிரவு குடித்து முடித்திருந்த வெறும் விஸ்கி போத்தலை எடுத்து ஏரியில் தண்ணியை நிரப்பிக்கொண்டு ஒரு மரத்தின் பின்னால் ஒதுங்கினேன்..

அன்று அன்ரனிதாஸ் தனது வேலையாட்கள் எல்லோறிற்கும் லீவு கொடுத்து இன்றைக்கு எல்லாரும் நல்லா என்ஜேய் பண்ணுங்கடா என்று சொல்லியது மட்டுமில்லாமல். ஆட்டுக்கறி மாட்டுக்கறி பியர் வாங்கவென ஒவ்வொருவரை ஒவ்வொரு பக்கமாக அனுப்பினான். வாங்கிய கறிகளை சன்னம்மாவிடம் கொடுத்து சமைத்துவரும்படி சொல்லியிருந்தான். சன்னம்மா என்றொரு பெண் இளம் வயதுக்காரி திருமணமான புதிதிலேயே கணவன் ஒரு வீதி விபத்தில் இறந்துபோக கையில் ஒரு ஆண்குழந்தை மிக ஏழைக்குடும்பம் என்பதால் அவளிற்கு அவளது உறவுகள் உதவவில்லை. கணவன் இறந்து போனதால் அவள் ராசியற்றவள் என்று அவளது கணவனது பக்கத்திலும் எவ்வித உதவியும் இல்லாதிருந்தவள் கூலித் தொழிலாளர்களிற்கு சமைத்துக்கொடுக்கும் வேலையை ஆரம்பித்து தனதும் பிள்ளையினதும் வாழ்வாதரத்தேவைகளை நிறைவேற்றுகிறாள். அன்ரனிதாசிற்கும் அவனது சீடர்களிற்கும் அவளே சாப்பாடு போடுகிறாள் என அறிந்தேன்.இவர்களது வயிற்றுப்பசி மட்டுமல்லாது அவர்களது உடற்பசியையும் அவளிடமே தீர்த்தக்கொள்கிறார்கள் என்பதனையும் அவர்களது பேச்சுக்களில் அறிய முடிந்தது. வெறும் காமத் தேவைகளிற்காக மட்டுமே நாளிற்கொரு ஆளைத்தேடும் ஜரோப்பிய கலாச்சார வாழ்வில் நடுவே வாழ்ந்து பழக்கப்பட்டுப்போயிருந்த எனக்கு ஒரு இளம்வயது பெண் துணை அற்றவள் பொருளாதார வசதியுமற்றவள். ஆணாதிக்கம் மிகுந்து காணப்படும் ஆசிய கலாச்சாரத்தில் தன்னையும் காத்து பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்ற அப்படி நடந்துகொள்வது எனக்கு தப்பாகவே தெரியவில்லை.

மதியச்சாப்பாடு வரும்வரை நண்பனுடன் கதைத்தபடியே அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்து பொழுது போக்கிற்காக மீன்பிடிக்கத் தொடங்கினேன். வாழ்வாதரத் தேவைகளிற்காக தொழில்ரீதியாக மீன் பிடிப்பவர்களிற்கும் பொழுது போக்காக மீன் பிடிக்கும் எனக்கும் நிறைய வித்தியம் உண்டுதானே.தூண்டிலை போட்டுவிட்டு கம்பை கரையில் நட்டுவிட்டு பியரை உறுஞ்சியபடி இருந்த எனது தூண்டிலில் கன நேரத்திற்கு பின்னர் ஒரு அப்பாவி மீன் ஒன்று மாட்டுப்பட்டது. தூண்டிலில் இருந்து மீனை பிரித்தெடுக்கும் விதம் எனக்கு தெரிந்திருக்கவிலை எனவே நண்பன் மீனை எடுக்க உதவினான் பெருத்த சந்தோசத்தில் பிடித்த மீனை படமெடுத்தேன். பின்னர் நான் பிடித்த மீனுடன் மற்வர்கள் பிடித்தமீன்கள் சிலவற்றையும் சேர்த்து பியரிற்கு ருசியாக சுட்டுசாப்பிட்டோம். மதியம் தாண்டிப்போக நண்பன் தனது செல்போனை எடுத்து சாப்பாடு தயாராகிவிட்டதா என கேட்டவன் சாப்பாடு எடுத்துவர சிலரை வண்டியில் அனுப்பினான். இந்தியாவில் சாலை வசதிகளே இல்லாத கிராமங்களில் கூட செல்போன வசதி இருக்கிறது ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு செல்போனுகளுடன் அலைகின்றனர். சாப்பாடு எடுத்துவரப்போனவர்கள் சாப்பாட்டுடன் சன்னம்மாவையும் கூடவே அழைத்துவந்தனர். தாமரை இலையை காயவைத்து செய்த தட்டுக்களில் மண்டபத்தில் அனைவரையும் வரிசையாய் இருக்கவைத்து சன்னம்மா சாப்பாடு பரிமாறினாள்.

தாமரை இலைத் தட்டுக்கள் இந்தியாவில் பிளாஸ்ரிக் கோப்பைகளை விட மலிவாய் கிடைக்கிறது சுற்றுச்சூழலும் மாசடையாது. வரிசையில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராய் இருக்க முதலில் எனக்கு சன்னம்மா சாப்பாடு பரிமாறவந்ததும் புதிசா பாரின்லை இருந்து வந்தவரை கண்டதும் சன்னம்மா எங்களையெல்லாம் கைவிட்டாள் என்று நண்பன் சொன்னதும் மற்றையவர்கள் சிரிக்க..நீங்களெல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்தானே விருந்தாளி அதான் கவனிக்கிறன் என்றாள் சன்னம்மா. இப்படியான கிண்டல் கேலிப் பேச்சுக்களுடன் மதியம் சாப்பிட்டு முடிந்தது.சாப்பிட்டு முடித்த பாத்திரங்களையும் எடுத்துச்சென்று அதே ஏரியிலேயே கழுவிவிட்டு
வண்டியில் வைத்தவள் என்னிடம் வந்து வெத்திலையை நீட்டினாள்

எனக்கு வெற்றிலை போட்டு பழக்கமில்லை. அதனை மறுத்த என்னிடம் வெளிநாட்லை எல்லாரும் வசதியாய் வாழுறாங்களாமே என்னையும் அங்கை கூப்பிட முடியுமா சுத்தம் செய்யிறதோ சமைக்கிறதோ தன்னால் செய்யமுடியும் என்றாள். அப்பாவியாக ..அவளது கன்னடத்தில் எனக்கு புரிந்த பாதி மீதியை நண்பன் மொழி பெயர்த்தோடு இதோடா சன்னம்மா பிரான்ஸ் போகப்போறாளாம் என்று சொல்லி சிரித்தான். மற்றையவர்களும் அதைக்கேட்டு சிரிக்கவே அவளது முகத்தில் ஏற்பட்ட சோக மாற்றத்தை கவனித்த நான் என்ன சொல்வதென்று தெரியாமல். அவளிடம் பாக்கலாம் முயற்சி பண்ணுறன் என்று பொய் சொல்லிவிட்டு கொஞ்சம் பணத்தினை அவளது கைகளில் திணித்து போய்வா என்றேன். வண்டியில் ஏறியவள் என்னைப்பார்த்து கையசைத்து விட்டு கிழம்பும் பொழுது அவளது கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. அதே நேரம் எனக்கும் 87ம் ஆண்டு இறுதியில் யாழ் குருநகர் பகுதியில் என்னை இந்தியப்படையிடமிருந்து பதுக்கி பாதுகாத்த ஒரு பெண்ணின் முகத்தோற்றமென்று ஞாபகத்தில் வந்துபோனது..கையசைத்தேன். அன்று பகல் அன்ரனிதசுடனான் கழித்துவிட்டு அன்று மாலை அதே நண்பர் கூட்டம் என்னை கொண்டுவந்து பஸ்நிலையத்தில் பஸ் ஏற்றி விட்டார்கள்.அங்கிருந்து பெல்கம் நோக்கிய பயணத்தை தொடர்ந்தேன்.

பெல்கம்மில் நான் தங்கியிருப்பதற்காக பிரான்சிலிருந்து புறப்படுமுன்னரே ஒரு வீடு ஒன்று பார்க்கச்சொல்லி நண்பனிடம் சொல்லியிருந்தேன். ஏனென்றால் விடுதிகளில் செலவு அதிகம் அதைவிட நண்பர்கள் வந்தால் தங்கி போவதும் சிரமம்.எனவேதான் வீடு வாடைகைக்கு எடுத்து தங்க முடிவுசெய்திருந்தேன். வீடு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்த நண்பன் பெல்கம் காம்ப் பகுதியில் ஒரு வீடு இருக்கிறது ஆனால் அது பேய்வீடு என்று இங்கை கதைக்கிறாங்கள். ஒருவருசமாய் யாருமே அங்கை இல்லை .கடைசியாய் ஒரு முஸ்லிம் குடும்பம் ஒன்றுதான் இருந்தது அந்தக் குடும்பத்திற்கு பிறகு யாரும் அங்கு இல்லை என்கிற தகவலையும் சொல்லியிருந்தான். நாங்க பேயோடையே குடும்பம் நடத்திறவங்கள் இதற்கெல்லாம் பயப்பிடுவமா?? போசாமல் வீட்டை எடுத்திட்டு எவ்வளவு வாடைகை என்றுமட்டும் சொல்லு என்று நான் சொன்ன பதிலை கேட்டு என்ரை மனிசி நுள்ளின நுள்ளையும் தாங்கியபடி சொல்லி முடித்தேன்

வீட்டின் சொந்தக்காரர் பெங்களுரில் இருந்தார் அவரிற்கோ வீட்டில் போய் இருப்பதாக அந்தப்பகுதியில் கதை பரவியிருப்பதால் யாரும் வாடைகைக்கு வீடு கேட்டுவராத கவலையில் இருந்தார். அதனால் அவரிற்கு அந்த வீட்டில் யாராவது குடியிருந்து வீட்டில் பேய் இல்லையென்று அக்கம் பக்கதாரிற்கு நிருபித்தாலே போதுமானதாக இருந்தது. எனவே வாடைகையெல்லாம் வேண்டாம் ஏதோ பார்த்து கொடுக்கச்சொல்லிவிட்டார்.

மறுநாள் காலை பெல்கம் வந்திறங்கியிருந்தேன்.முதல் இரண்டு நாட்கள் சரியான நித்திரையில்லை பயணக்களைப்பு என்று சரியான அலுப்பாக இருந்தது. குளித்து காலை சாப்பிட்டுவிட்டு படுத்ததுதான் தெரியும் வீட்டின் கூரையில் யாரோ ஓடுவதுபோல சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து நேரத்தை பார்த்தேன் 6மணியாகி இருட்டத்தொடங்கியிருந்தது. நடுச்சாமத்தில் தானே பேயவரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதென் பேய் மாலையிலேயே நேரத்தோடை வந்திட்டிது என்று நினைத்து வெளியே வந்து பார்த்தேன் கூரையில் ஒரு ஆடு ஒன்று துள்ளி விழையாடிக்கொண்டிருந்தது.

கர்நாடகா மானிலத்தின் பெல்கம் பகுதி இந்தியாவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி முகாம்களில் பெலகம் இராணுவ முகாமும் ஒன்றாகும். இராணுவ தொழில் நுட்பக்கல்லூரியில் பூனேக்கு அடுத்ததாக பெல்கம் இராணுவத்தொழில் நுட்பக் கல்லூரியே பெரியது என்று சொல்லலாம். அதைத்தவிர சிறப்பு அதிரடிப்படை பயிற்சி முகாம். அனைத்துலக இராணுவ கூட்டுப்பயிற்சி முகாம்.இராணுவ வைத்தியசாலை இராணுவக்குடியிருப்புக்கள்.என பல ஏக்கர் பரப்பளவில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான இடமாக விரிந்திருக்கும் பகுதி. இங்கு 93 இறுதியில் புலிகள் அமைப்பு ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு திட்டம் தீட்டியிருந்தனர். அது முழுக்க முழுக்க இந்தியாவிலிருந்து வந்து புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களை வைத்தே மேற்கொள்ளப்படவிருந்த திட்டம். ஆனால் அதற்கிடையில் புலிகள் அமைப்பில் மாத்தையாவின் பிரச்சனையால் இந்தத் திட்டம் கைவிடப்படவேண்டியதாகிவிட்டது.

இந்திய உளவுப்பிரிவினரிற்கும் புலிகளின் உளவுப்பிரிவினரிற்கும் நடந்த கண்ணாமூச்சி விழையாட்டில். புலிகளின் உளவுப்பிரிவு மாத்தையா விடயத்தில் அவசரப்பட்டு இந்தியாவின் சதித்திட்டத்திற்கு பலியாகிவிட்டிருந்தனர் என்பதுதான் என்னுடைய கருத்து.விசாரணைகளின் பின்னர் மாத்தையா கொல்லப்பட்டார். அதனால் பல அனுபவமிக்க போராளிகளையும் புலிகள் இழக்கவேண்டி ஏற்பட்டது.ஆனால் அது சண்டைகள் நடந்தகாலம் என்பதால் அந்த இழப்புகளையும் மாத்தையா ஆதரவாளர்களிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள்கள் மற்றும் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்டிருந்த விரிசல் அனைத்து விடயங்களையும் பூனகரி தவளைப்பாச்சல் நடவடிக்கை மூலமும் புலிகள் ஈடுகட்டி அதிலிருந்து மீண்டிருந்தனர்.ஆனால் கருணா விடயம் சமாதான காலமென்பதால் புலிகளால் அதன் இழப்பிலிருந்து மீழமுடியாமல் போய்விட்டது.

93 ம் ஆண்டு திட்டமிடப்பட்ட பெல்கம் பகுதியில் அந்த நடவடிக்கை நடந்தேறியிருந்தால் இந்திய அரசு புலிகளிடம் பேரம்பேசும் நிலைக்கு வந்திருக்கும். புலிகளின் வராலாற்றியல் அது வளர்ச்சி பாச்சலாக இருந்திருக்கும். ஆனால் நான் ஆரம்பதிலேயே சொன்னது போல வெறும் ஊகங்களால் மட்டும் வரலாற்றை மாற்றிவிட முடியாது. எது எப்படி நடக்கவேண்டும் என்பதை காலம் தீர்மானித்து வரலாற்றை எழுதிச்செல்கின்றது. அதில் இப்படி நடந்திருந்தால் அப்படி நடக்காமல் போயிருகலாம் என நாம் உச்சுக்கொட்டத்தான் முடியும்.இங்கு முகாம் பகுதியில் உள்ளதொரு வீதிக்கு மெட்ராஸ் வீதி என பெயரிட்டுள்ளனர். காரணம் அங்கு இராணுவத்தில் உள்ளவர்களில் தமிழ் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் இந்த வீதியிலேயே குடியிருப்பதால் அதற்கு மெட்ராஸ் வீதியென பெயரிட்டுள்ளனர். இது இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதியெனபதால் கர்நாடகா மானிலத்தில் அடிக்கடி தமிழருக்கெதிரான வன்முறைகள் வெடிக்கும் போதெல்லாம் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் பாதுகாப்புத்தேடி மெட்ராஸ் வீதிக்குள் புகுந்துவிடுவார்கள். கர்நாடகாவில் தமிழருக்கெதிரான வன்முறைகள் மட்டுமல்ல மராட்டியருக்கு எதிரான வன்முறைகளும் அடிக்கடி நடக்கும். ஆனால் மராட்டியர்கள் கர்நாடகத்தில் வர்த்தகர்களாகவும் பணக்கரர்களாகவும் இருப்பதோடு மராட்டியர்களிற்கு ஆதரவாக பால்தக்கரே உடனே மும்பையில் போர்க்கொடி தூக்குவார். அதனால் கன்னடர்களின் பருப்பு அவ்வளவாக மராட்டியர்களிடம் வேகுவதில்லை. தமிழருக்காக தமிழ்நாட்டில் கவிதை எழுத மட்டுமே ஒரு தலைவர் இருந்ததனால் அதிகமாக அடிவாங்குவது தமிழர்களே.


நான் பெல்கம்மில் நின்றிருந்த நேரம்தான் வெளிநாடுகளில் நடக்கும் கணிவேல் போல ஆழும் பாரதீய ஜனதா அரசு கன்நாடகா மேளா என மிகப்பெரியதொரு நிகழ்வினை நடத்தியிருந்தனர். அனைத்து இடங்களில் இருந்தும் கன்னட பிரபலங்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். பிரதம விருந்தினராக ஜஸ்வர்யா ராய் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவர் கன்னடாவை பூர்வீகமாக கொண்டவர் என தெரிந்தது. மற்றும் எம்மவர்களிற்கு தெரிந்த பிரபலங்கள் ரஜனிகாந். எஸ்.பி பலசுப்பிரமணியம் ஆகியோரும் வந்திருந்தனர்.திறந்தவெளி மைதானத்தில் எஸ்.பி யின் கச்சேரியும் (கன்னடப்பாடல்கள்தான்)நடந்தது.ஜஸ்வர்யாவை பார்ப்பதற்காக இளைஞர் கூட்டம் அலைமோதியது.
இந்தியாவில் மராட்டியர்கள் எந்த மானிலத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் அதிகமாக வாழும் இடம்தில் தங்களின் தனித்துவத்தை நிலை நாட்ட மராட்டிய மன்னன் வீரசிவாஜின் சிலையை நிறுவியிருக்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் எந்த மானிலத்தில் வாழ்ந்தாலும் ராஜராஜ சோழனின் சிலை வேண்டாம் ஒரு வள்ளுவர் சிலையைகூட வைக்கவில்லை என்பது நெருடலாக இருந்தது.

பெல்கம்மில் இருந்து மீண்டும் மும்பை புறப்படும்வரை நான் அந்த வீட்டிலேயே தங்கியிருந்தேன் அங்கு அக்கம் பக்கத்தவர்ர்கள் சொன்னது போல் பேயோ பூதமோ எதுவுமே வரவில்லை. அங்கு முன்னர் குடியிருந்த முஸ்லிம் குடும்பத்தினர் பல மாதங்களாக வாடைகை கட்டமல் இருந்திருக்கிறார்கள். அதனால் வீட்டு முதலாளி வீட்டை காலி செய்யச்சொல்லி போலிசில் புகார் குடுத்திருக்கிறார்.அதனால்அங்கிருந்த குடும்பம் வீட்டை விட்டு போகும் போது அங்கு பேய் இருக்கிறது அதனால்தான் வீட்டை காலி செய்கிறோம் என்று கதையை பரப்பிவிட்டு போயிருக்கிறார்கள். அதனாலேயே வேறு யாரும் அந்த வீட்டை வாடைகைக்கு கேட்டு வராமலிருந்திருக்கிறார்கள்.

நான் அங்கு தங்கியபொழுது ஆரம்பத்தில் நான் காலைமை எழும்பி கதைவைத் திறக்கும் வரை நான் இருக்கிறேனோ இல்லாட்டி பேயடித்து போயிட்டனா என்று அறியும் ஆவலில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாசலை எட்டியெட்டிப்பார்த்தபடி இருப்பார்கள். சிலநாள் செல்ல பேயெல்லாம் இல்லையென்று அவர்களுக்கும் தெரியவர என்னை ஒருத்தரும் கணக்கிலையே எடுக்கேல்லை. எனக்கு இந்தியா போனதும் ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் கழிவறை பிரச்சனையாக இருந்தது. கீழே குந்தியிருக்கும் பொழுது முழங்கால் நோகத்தொடங்கியது அதே நேரம் பின் பக்கமாய் பிடரிஅடியுண்ட விழுந்துடுவனோ என்று பயத்தில் முன்னால் இருந்த தண்ணி வாழியை பிடித்தபடிதான் இருந்தேன். பின்னர் சரியாகிவிட்டது.நான் தங்கியிருந்த வீட்டிற்கு நான் போனதும் முதல் வேலையாக ஒரு போத்தல் பினாயில்(தொற்று நீக்கி) வாங்கி கழிவறையை நல்லாய் கழுவிய பின்னர்தான் நிம்மதியாய் போய்வர முடிந்தது. நான் பெல்கம்மில் நின்ற சமயத்தில்தான் உலக கிறிகற் விழையாட்டு நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் எல்லா வயதினரும் ஆண்கள் பெண்கள் வயது வேறுபாடின்றி தொலைக்காட்சியின் .முன்னால் இருந்து கிறிகற்றை ரசித்தனர்.

அப்பொழுது அரையிறுதி ஆட்டம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் வந்துவிட்டது. அதில் வெல்பவர்கள் ஏற்கனவே இறுதி சுற்றிக்கு தெரிவாகியிருந்த சிறீலங்காவுடன் விழையாவேண்டும்.நான் தங்கியிருந்த பகுதியில் கணிசமான முஸ்லிம்களும் குடியிருந்ததால் அந்தப் பகுதி கொஞசம் பதற்றமாகவே இருந்தது. இந்தியர்களிற்கு அதுதான் இறுதியாட்டம் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்பதுதான் அனைத்து இந்தியர்களின் பிரார்த்தனையாக இருந்தது. பாகிஸ்தானின் ஒவ்வொரு விக்கட்டும் விழுந்ததும் வாணவேடிக்கை மேளதாளம் என்று அமர்க்களமாகவே இருந்தது. பாகிஸ்தான் வீழ்ந்ததும் பிறகென்ன விடிய விடிய மேளதாளமும் வானவேடிக்கையாவும் இருந்தது. பெரும்பாலான முஸ்லிம்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. சில இடங்களில் சின்னதாய் பிரச்சனைகளும் நடந்திருந்தது. அடுத்ததாய் இறுதியாட்டம் இலங்கைக்கும் இந்தியாவிற்குமானதாய் இருந்தது. என்னிடம் ஒரு நண்பன் கேட்டான் நீ எந்த அணிக்கு ஆதரவு என்று. எனக்கு பொதுவாய் கிறிக்கட்டில் ஆர்வம் இல்லை கால்பந்துதான் எனக்கு பிடித்த விழையாட்டு எனவே எனக்கு எந்த அணி வென்றால் என்ன தோத்தால் இரண்டும் ஒன்றுதான் என்று சென்னேன். பாகிஸ்தானை வென்றதன் பின்னர் இந்தியா இலங்கையிடம் தோற்றாலும் பரவாயில்லை அவங்கள் நம்ம பசங்கள் என்பதே பெரும்பாலன இந்தியர்களிடம் இருந்தது. அவர்களிற்கு இலங்கையர் என்றாலே தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்தும் சிங்களவர்கள் ஓரிசாவிலிருந்தும் போய் குடியேறியவர்கள்.இரண்டுமே நம்ம பசங்கள்தான் ஏதோ அடிச்சிக்கிறாங்கள் நாம ஒரு தட்டுதட்டி வழிக்கு கொண்டுவரலாம் என்பதே இந்தியாவின் சாதாரண குடிமகனில் இருந்து இந்தியாவை ஆட்சிசெய்கிறவர்கள் வரை மனதில் பதிந்திருக்கின்டறதொரு விடயம். அதனாலேயே பெரும்பாலானவர்கள் எமது பிரச்சனையை ஆழமாய் போய் ஆராய்வதோ அதனைப்பற்றி சிந்திப்பதோ இல்லை. அது கிறிகெட் விழையாட்டிலும் தெரிந்தது பாகிஸ்தானை வென்றபொழுது இருந்த ஆர்ப்பாட்டம் இலங்கையை வென்று வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியபொழுது இருக்கவில்லை. ஆர்ப்பாட்டமெல்லாம்அதிகாலை 2 மணியளவிலேயே ஓய்ந்துபோயிருந்தது.

பெல்கம்மில் நான் தங்கியிருந்த காலங்களில் பலநண்பர்களையும் நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்து உரையாடியிருந்தேன். இந்த பயணக்கதையை எழுத ஆரம்பித பொழுதே இந்தக் கதையில் மூன்று நண்பர்களை பற்றியே முக்கியமாக எழுதப் போவதாக குறிப்பிட்டிருந்தேன். அதே போல அவர்களைப்பற்றி எழுதிவிட்டேன் அதே நேரம் மற்றைய பல விடயங்களையும் மேலோட்டமாக தொட்டுச்சென்றிருந்தேன். சில விடயங்களை ஆழமாக தொடமுடியவில்லை ஆழமாக நான் தொட நினைத்த விடயங்கள் பல எதிர்ப்புக்களால் தொடரவில்லை. இவை இப்படியே போக இந்தியா என்கிற நாடு உலகின் வல்லரசாகவும் .அடுத்த நூற்றாண்டின் பொருளாதாரத்தை உலகில் நிர்ணயம் செய்யும் நாடு என்று ஆய்வுகள் கூறுகின்றது ஆனால்.என்னைப்பொறுத்தவரை பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கின்றது உண்மைதான் நவீனமயமாகியிருக்கின்றது. உண்மைதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட விகிதமே. ஆனால் இந்தியா ஒரு போதும் வல்லரசாகவோ சிறந்த பொருளாதார வசதியுடன் அந்த நாட்டின் அனைத்துமக்களும் அடிப்படை வாழ்வாதரம்உயர்ந்த சிறந்த நாடாக மாறப்போவதில்லை. காரணம் அந்த நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கும் ஆட்சியளர்களிலும் அதிகாரங்களிலும் அரசநிறுவனங்களிலும் ஊழல்..அதிகார துஸ்பிரயோகமே நிறைந்திருக்கின்றது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். இதுதான் இந்தியா.

நான் கதையை தொடரும் பொழுது ஆரம்பத்திலேயே சொன்னது போல் இந்தியா என்பது நான் இயக்கத்தில் இணைந்த 84ம் ஆண்டிலிருந்தே பரிச்சயம் ஆனது அங்கு பயிற்ச்சிக்கு போனதிலிருந்தும் பின்னரும் பலதடைவைகள் களவாக கடற்பயணங்களிலும் பின்னர் பல தடைவைகள் விமானப்பயணங்கள் என்று 2001 வரை தொடர்ந்தது. அதில் எத்தனையோ பல நல்ல நட்புக்கள் உறவுகள் என தொடர்புகள் ஏற்பட்டது. அவை இன்றுவரை தொடர்கின்றது. இனிமேலும் அவை தொடரும் என நம்புகிறேன். எமது இந்திய நட்புக்கள் அனைவருமே ஈழத்தமிழனிற்காக எவ்வளவோ உதவிகளை செய்தவர்கள் அதற்காக அவர்கள் கொடுத்த விலைகளும் அதிகம். பல வருடங்கள் சிறைகளில் வாடியிருக்கிறார்கள் பலர் குடும்பங்களையே இழந்திருக்கிறார்கள். இதனை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் ஈழத்தமிழனின் முள்ளிவாயக்கால் அவலத்தின்போது அருகே ஆறு கோடி தமிழினம் என்ன செய்தது என்று பொதுவானதொரு ஆதங்கம் எம்மவர்களிடம் இருந்தது. ஆறு கோடி தமிழினத்தில் 60....70 தமிழர்களாவது துடித்தார்கள் முத்துக்குமார் தொடங்கி தங்களையே அழித்தவர்கள் பட்டியலும் உண்டு. வன்னியில் பேலவலம் நடந்தபொழுது குண்டுச்சத்தம் கேட்கும் தூரத்திலிருந்த யாழ்குடாநாட்டிலிருந்த 5 லட்சம் மக்களாலேயே எதுவும் செய்ய முடிந்திருக்காதபோது எம்மைப்பற்றிய செய்திகளே சரியாக சென்றடையாத ஆறு கோடி தமிழரை நாம் நொந்து பிரயோசனம் இல்லை. . இங்கு பெரியளவில் யாரும் பதிவாக்காத நடந்த சம்பவத்தையும் எழுதி எனது பயணத்தை நிறைவு செய்கிறேன். 1983 ம் ஆண்டின் இறுதியில் யாழ்பல்கலைக்கழகத்தில் மதி(மதிவதனி) அனோஜா.ஜெயா. லலிதா என நான்கு பல்கலைக்கழக மாணவிகள் இலங்னையரசின் அடக்குமுறைகளிற்கெதிராக உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கின்றனனர்.

இலங்கையரசிற்கெதிராக எந்த அமைதியான எந்த சாத்வீகப் போராட்டமும் பிரயேசனமற்றது.ஆயுதப் போராட்டமே அவர்களிற்கான சரியான வழி எனவே உண்ணாவிரதத்தினை கைவிடும்படி புலிகள் அமைப்பால் அந்த மாணவிகளிடம் கோரிக்கை வைக்கப்படுகின்றது. அதனை அவர்கள் மறுத்து உண்ணாவிரதத்தினை தொடர்ந்தபொழுது புலிகள் அமைப்பின் மூத்த போராளிகளில் ஒருவரான அருணா மேலும் இருவருடன் இணைந்து அவர்கள் நான்கு பெண்களையும் கடத்தி தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்கிறார். இவர்கள் தமிழ் நாட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நேரம்.84 ம் ஆண்டளவில் அந்த நான்கு பேர் கொண்ட குழுவிலிருந்த மதிக்கும் பிரபாகரனிற்கும் காதல் என்கிற செய்தி அடிபடத் தொடங்கியிருந்தது..ஆனால் அது வதந்தியாகவே இருக்கும் என புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் பலரும் நம்பினார்கள். காரணம் புலிகள் அமைப்பில் முன்னர் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அந்த அமைப்பின் உறுப்பினரான ஊர்மிளாவுடன் காதல் தொடர்பு ஏற்பட்ட காரணத்தினாலேயே புலிகளின் மத்திய குழுவைக்கூட்டி பிரபாகரன் ஊமாவை வெளியேற்றியிருந்தார். உமாவுடன் வேறு சிலரும் வெளியேற புலிகள் அமைப்பு சிதைவுபட்டு மீண்டும் ஒரு கட்டமைப்பாக உருவாகியிருந்தது. அந்த சம்பவத்திற்கு பின்னர் புலிகள் அமைப்பின் தலைமைப்பதவியை ஏற்ற பிரபாகரன் புலிகள் அமைப்பில் இணைபவர்கள் காதல் மற்றும் திருமண பந்தத்தில் இணையக்கூடாது அது புலிகளின் இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் தடையாக அமையும். எனவே அப்படி யாராவது காதலித்து திருமணம் செய்ய விரும்பினால் அமைப்பிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்கிறதொரு கடுமையான விதிமுறையையும் அறிமுகம் செய்திருந்தார். அதன் காரணமாக புலிகள் அமைப்பில் இணைந்த பலர் தங்கள் காதல்களை உதறிவிட்டு வந்த சம்பவங்களும் உண்டு. இப்படியான ஒரு விதிமுறையை ஏற்படுத்திய பிரபாகரனே காதலிப்பார் என்று புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நம்பவில்லை. ஆனால் பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததும் புலிகள் அமைப்பின் மூத்த போராளிகள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களை அழைத்து பாலா அண்ணர் கதைத்து சமாதானப்படுத்தியிருந்தார்.

ஆனால் 84 ம் ஆண்டு புலிகள் இயக்கமானது அடுத்த கட்டவளர்ச்சிக்குள் சென்று விட்டிருந்தது. பலநூறு போராளிகள் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலும் இலங்கை வடக்கு கிழக்கிலும் பல பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் நடந்துகொண்டிருந்துமட்டுமல்லாமல் பலநுறுபேர் பயிற்சிகளை முடித்து புதிய முகாம்களை அமைத்துக்கொண்டு தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தனர். பிரபாகரனின் திருமண விடயத்தில் மத்திய குழுவில் இருந்தவர்களை விட இரண்டாம் கட்டபொறுப்பாளர்கள் மற்றும் பின்னர் இணைந்த போராளிகளிடமே பெரும் எதிர்ப்புக்கிளம்பியிருந்தது.காரணம் அவர்கள் இயக்கத்தின் புதிய விதிகளிற்கு கட்டுப்பட்டு இயக்கத்தில் இணைந்திரந்தனர். அதே நேரம் மத்திய குழுவில் குலம்.கிட்டு.காக்கா போன்றவர்கள் எதிர்ப்பு அணியிலும். இன்றைய புலம்பெயர் ஊடகங்களில் சர்ச்சைக்குரியவராக கருதப்படும் கே.பி. பேபி சுப்பிரமணியம்.ராகவன் ஆதரவு அணியிலும் மற்றையவர்கள் அமைதியாவவும் இருந்தனர். ஆனாலும் மத்திய குழுவினரிற்கு புலிகள் இயக்கம் மீண்டும் ஒரு உடைவை சந்திக்கக்கூடாதென்பதே அவர்களது கவலையாகவும் ஆதங்கமாகவும் இருந்தது. அதே நேரம் உறுப்பினர்களிடம் விவாதங்கள் போய்க்கொண்டிருந்தது புதிய விதியின் படி பிரபாகரனை தலைவர் பதவியிலிருந்து நீங்கினால் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதே.அதில் முதன்மையாக ராகவன்.மாத்தையா.பண்டிதர் என ஆராயப்பட்டது.பெரும்பாலனவர்கள் ராகவனையே முன்மொழிந்தனர். ஆனாலும் யாரும் ஒரு முடிவிற்கும் வரவில்லை. மத்திய குழுஉறுப்பினர்களை பாலா அண்ணர் கதைத்து சமாதானப்படுத்தியபின்னர். அடுத்தகட்ட பொறுப்பாளர்கள் போராளிகளை சமாதானப்படுத்துவது பிரபாகரனிற்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. அவர்களை சமாதானப்படுத்த பாலசிங்கத்தாரை அனுப்பமுடியாது காரணம் வேகம் மட்டுமே கொண்ட இளையவர் கூட்டம் அவர்களிற்கு அதிகமாக தைத்தாலே அறிவுரைகளோ பிடிக்காது. எனவேதான் மிக தந்திரமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்தவர்களை சமாதானப்படுத்த பொன்னம்மானையும் நாட்டில் உள்ளவர்களை சமாதானப் படுத்த பண்டிதரையும் அனுப்பிவைத்தார். இவர்கள் இருவரைப்பற்றியும் அவர்களுடன் பழகியவர்களிற்கே நன்றாக தெரியும். இவர்கள் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளிற்கு தாயைப் போன்றவர்கள்.

ஆரம்பகாலங்களில் பெரியளவு பொருளாதார வசதிகற்றிருந்த இயக்கத்தில் இவர்களது பொறுப்பில் இருந்த முகாம்களில் அனைத்து போராளிகளும் சாப்பாடு.உடைகள் மருத்துவம் என எந்தக் குறைகளும் இல்லாமலும் சிக்கனமாகவும்.கவனித்துக்கொள்வார்கள்.மற்றையவர்கள் உணவுப்பொருட்களை வீணக்கிவிடுவார்கள் என்பதால் பெரும்பாலும் இவர்களே சமைப்பார்கள்.பழகுவதற்கும் இனிமையானவர்கள் எனவே இவர்கள் பேச்சை மற்றையவர்கள் நிராகரிக்கமாட்டார்கள் எனபதும் பிரபாகரனிற்கு நன்றாகவே தெரியும். நான் அப்பொழு எனது பயிற்சிகளை முடித்துவிட்டு நாட்டிற்கு போய்விட்டு மீண்டும் ஜொனிதலைமையில் ஒரு சிறப்புப் பயிற்சிக்காக செல்வதற்காக தமிழ்நாட்டில் நின்றிருந்தேன்.இந்த திருமண விடயம் கேள்விப்பட்டபொழுது அதன் எதிர்ப்புக்குழுவில் நானும் முக்கியமானவனாகியிருந்தேன். பயிற்சி முகாம்களில் இருந்தவர்களை சந்தித்து சமாதானப்படுத்திய பொன்னம்மான் எம்மை சந்திக்க வருவதாக தகவல் அனுப்பியிருந்தார். வரசளவாக்கத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த பெரிய வீடொன்றில் அன்றிரவு அடுத்த கட்ட நிலையிலிருந்த முக்கியமான போராளிகள் நாற்பது பேரிற்கு மேல் கூடியிருந்தோம். தன்னுடன் வந்த மெய்பாதுகாவலர் இருவரையும் வெளியே தூரத்தில் நிறுத்திவிட்டு கையில் ஒரு ரேப்றைக்கோடரோடு பொன்னம்மான் தனியாக உள்ளே வந்தவர் சிரிதத்படி என்ன பெடியள் எப்பிடி இருக்கிறீங்கள் என்றார்.எல்லோரிடமும் இறுக்கமான மொனம். கொஞ்சம் வார்த்தைகள் தவறாக வந்து விழுந்தாலே பெரியபிரச்சனையாகிப் போகும் நிலமை எல்லோரையும் ஒருதடைவை ஊடுருவிப்பார்த்தார்.சிலர் அவரது ஊடுருவல் பார்வையை தவிர்ப்பதற்காக தலையை குனிந்து கொண்டனர்.சில செக்கன் மொனம்...இஞ்சை பிரபாகரனிற்காக பிரபாகரனை மட்டுமே நம்பி போராட வந்தவையள் கையை தூக்குங்கோ என்றுவிட்டு எல்லோலையும் பார்த்தார்.

எவருமே கையைத்தூக்கவி ல்லை அனைவரிடமும் அந்த கேள்வி வந்த ஒரு செக்கனில் இறுக்கத்தை குறைந்திருந்தது.எனக்கு அருகில் நின்றிருந்த கலீசம்மான் எனது காதில் "... பொன்னன் கவித்திட்டான்ரா "என்று கிசு கிசுத்தான். அதை கவனித்த பொன்னம்மான் கலிசை தனக்கு பக்கத்தில் கூப்பிட்டு சொல்லுறதை எல்லாருக்கும் கேக்கிறமாதிரி சொல்லு என்றார். கலிசும் சத்தமாக நாங்கள் அண்ணைக்காக போராட வரேல்லை மக்களுக்காகத்தான் போராட வந்தனாங்கள் என்றான். பிறகென்ன பிரச்சனை முடிஞ்சுது இதுக்குப்போய் ஏன் இவ்வளவு ரென்சனாய் இருக்கிறீங்கள். நீங்கள் எங்கடை மக்களுக்காவும் எங்கடை மண்ணை மீட்கவும்தான் போராட வந்தனீங்கள் எண்டிறது உண்மையெண்டால் இடையிலை பிரபாகரன் கலியணம் கட்டுறது பொன்னம்மான் இயக்கத்தை விட்டிட்டு போறது எண்டதெல்லாம் ஒரு காரணமே இல்லை.நீங்கள் உங்கடை இலட்சியத்திற்காக தொடரந்து போராடவேணும் என்று விட்டு கையில் கொண்டு வந்திருந்த ரேப்றைக்கோடரில் இருந்த 3 நிமிடம் அளவிலான பிரபாகரனின் உரையை போட்டுக்காட்டினார்.

அதில் தான் திருமணம் செய்து கொளவதனால் தமிழீழம் என்கிற இலட்சிய போராட்டத்திற்கான பாதையில் இருந்து எந்தக்காலத்திலும் விலகிவிடப்போவதில்லையென்றும்.அப்படி தமிழீழ இலட்சியப்பாதையில் இருந்து விலகி தமிழீழ இலட்சியத்தை கைவிட்டால் உங்களில் ஒரு போராளி என்னை சுட்டுக்கொன்று விட்டு போராட்டத்தை தொடரலாம் என்கிற பின் நாளில் பிரபலமான வசனம் அந்தத் தருணத்தில்தான் செல்லப்பட்டிருந்தது.சிலவேளை தமிழீழத்தை கைவிட்டுவிட்டு மாகாணசபையையோ.வேறு ஏதாவது ஒரு தீர்வை பிரபாகரன் ஏற்றிருந்தாலும் யாரோ ஒரு புலிப்போராளியின் குண்டென்று பிரபாகரனின் உயிரை குடித்திருக்கலாம். எனவேதான் பிரபாகரன் தனது கொள்கைகளில் ஒன்றை கைவிட்டாலும் மற்றொன்றில் இறுதிவரை உறுதியாக இருந்திருந்தார்..அந்த ஒலிப்பதிவு முடிந்ததும் தங்களிற்கு இந்த சமாதானம் எல்லாம் வேண்டாம்.நாங்களும் காதலை கைவிட்டிட்டுத்தான் இயக்கத்திற்கு வந்தனாங்கள் என இருவர் மட்டுமே தாங்கள் இயக்கத்தை விட்டு போவதாக அடம்பிடித்தனர்.அதில் ஒருவர் ஜெர்மனியிலிருந்து இயக்கத்திற்கு வந்திருந்தவர். போகிறவர்கள் எழுதித் தந்து விட்டு போகலாம். என்றவர்.தம்பி உங்களையெல்லாம் விரைவிலை சந்திப்பார் அதுவரை உங்களின்ரை வேலையளை தொடர்ந்து செய்யுங்கோ என்றுவிட்டு பொன்னமமான்; போய்விட்டார்.பின்னர் 1984ம் ஆண்டு ஜப்பசி மாதம் பிரபாகரனிற்கும் மதிக்குமான திருமணத்தினை போருர் கோயில் ஒன்றில் எளிமையாக கே.பி முன்நின்று நடத்திவைத்திருந்தார். இதனை நான் இங்கு எழுதியதன் காரணம் பிரபாகரன் இல்லாது போனதாலேயோ புலிகள் இயக்கம் அழிந்து போனதாலேயோ. அந்த மக்களின் போராட்டமானது முடிந்துவிட்தாகவே பொதுவான புலம்பெயர் மக்கள் கருதுகின்றனர்.ஈழத்தமிழர் லரலாற்றில் பலிகள் பல அத்தியாயங்களை மட்டுமே எழுதியவர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர்களிற்கான வாழ்வாதார பிரச்சனைகள் இருக்குமட்டும் போராட்டம் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்துகொண்டே தானிருக்கும். அந்தப் போராட்டத்தில் தியாகி துரோகி என்கிற பதங்கங்கள் என்னைப்பாதிக்காது எனது உயிர் இருக்கும்வரை என்னுடைய பயணமும் பங்களிப்பும் இருந்துகொண்டேதானிருக்கும்.ஏனெனில் நான் பிரபாகரனிற்காக போராடப்போனவனல்ல...

இன்னொரு பதிவில் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.

6 Comments

Samy @ 6:45 PM

Sathiri,long post.I cleared many doubts. Thank you for your time. Always your samy.

Anonymous @ 7:10 AM

அழகான ஒரு பயண குறிப்பு. ஆங்காங்க்கே நான் ஒரு பெரிய ஆளு என்ற சொல்ல பல இட்டு கதைகளும் கலந்து இருக்கு. அத விட்டு விடுவோம். எந்த எழுத்தாளர் தான் இட்டுகதை இல்லாமல் எழுது இருக்கிறார்.

என் கருத்துகள் சில
1. பெல்காம் முகாமை அன்றே புலிகள் தாக்கி இருந்தால் முள்ளிவாய்கால் பல வருடங்களுக்கு முன்பே வந்து இருக்கும்.

2. ஏதோ கர்நாடகா என்பது தமிழ் விரோத மாநிலம் என்பது போல எழுதி இருக்கீங்க. அது தவறு என்பது உங்களுக்கும் நன்றாக தெரியும். 91 கலவரத்துக்கூட காரணம் புலிகளே. அதை உங்களால் ஏற்று கொள்ள முடியாது வழக்கம் போல இட்டு கதை சொல்லி இருக்கீங்க. ஏதோ தமிழர் கன்னடா வார இறுதியீல் பொழுது போகாம சண்டை போடுவது போல எழுதி இருப்பது காமேடி

மற்றபடி எல்லாம் ஓகே

siva @ 12:24 PM

nice . vasivakumar009@gmail.com

siva @ 12:25 PM

nice. vasivakumar009@gmail.com

siva @ 12:25 PM

ok

Anonymous @ 8:01 AM

ஓத்தா உங்களை போன்ற அகதி நாய்களால் தான் நாங்களும் கர்நாடகாவில் முன்பு அடிபட்டோம். தெவடியா மவனே பெல்மாக் முகாமை அடிக்கிறையா அன்னைக்கே உங்க யாழ்பாணைத்தை சரச்சு இருப்போம்