உதவி.
சிறுகதை.
கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி
யோகநாதன்
கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப்
கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும்
மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து
விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும்
மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து
கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை
பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி
இருக்கு என்று தனக்கு தானே சொல்லி சமாதானமாகிக் கொண்டாலும் முதன்
முதலாக குமுதினியை பார்க்கப்போகிறோம் அவள் தன்னுடைய வயதை 56 எண்டு எடை
போட்டு விடுவாளா?என்கிற கவலை அவரது மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது.
விடுதியின் அறையை விட்டு வெளியேற முதலும் ஒருதடைவை தன்னை கண்ணாடியில்
பார்ததுக் கொண்டவர் குமுதினிக்காகவும் அவரது மகளிற்காகவும் வாங்கிய
உடைகளின் பையை எடுத்ததோடு குமுதினிக்காக கொடுக்க எடுத்து வைத்திருந்த
பணத்தை ஒரு என்பலப்பில் போட்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வெளியே
வீதிக்கு வந்து ஆட்டோக் காரன் ஒருவரை அழைத்து குமுதினியின் விலாசத்தை
நீட்டினார். ஆளைப் பார்த்ததுமே ஆட்டோக் காரன் ஜயா எந்த நாடு என்றான்
.அவன் ஜயா என்றது எரிசச்லாக இருந்தாலும் வெளிநாடு எண்டு எப்படி கண்டு
பிடித்தான் என்று யோகநாதன் ஆச்சரியத்தோடு பிரான்ஸ் என்றார்.ஓ அப்பிடியா
நல்லது நானும் சுவிசிலை இருந்தனான் விசா இல்லாததாலை நாட்டிலை
பிரச்சனையும் முடிஞ்சிட்டுதெண்டு பிடிச்சு டிப்போட் பண்ணிட்டாங்கள்
என்றபடி ஆட்டோவை இயக்கினான். யோகநாதனோ ஆட்டோக் காரனின் கதையை காதில்
வாங்காமல் குமுதினியோடு எப்படியெல்லாம் கதைக்கவேண்டும் என்னவெல்லாம்
சொல்லாம் எது சொல்லக் கூடாது என்று மனதிற்குள் ஒரு ஒத்திகையே
பார்த்துக்கொண்டிருந்தார் அவ்வப்பொழுது ஸ் பீட் பிறேக்கர் வந்து ஆட்டோ
அதில் ஏறி விழும்போதெல்லாம் பிரான்சிலிருக்கும் அவர் மனைவி கனகமணி
நினைவிற்கு வந்து போய்க்கொண்டிருந்தாள்.
00000000000000000000000000
87
ல் பிரான்சிற்கு போயிருந்த சங்கானையை சேர்ந்த யோகநாதனின் மனைவி
கனகமணி பருத்தித் துறையை சேர்ந்தவர் .ஒப்பிறேசன் லிபறேசனை சாட்டாக
வைத்து தான் குடும்பமாய் பருத்தித் துறை யிலைதான் இருந்தாகவும் ஆமிக்காரன்
வீட்டை உடைச்சு தரைமட்டமாக்கிட்டான் தன்னையும் பிடிச்சு பூசாவிற்கு
ஏத்துறதிற்காக கொண்டு போன நேரம் தப்பி வந்திட்டன் மனிசி பிள்ளையை
காணேல்லை என்று சொல்லி அசைலம் அடிச்சு விசா எடுத்ததோடை காணாமல்
போயிருந்த அவரது மனைவி கனகமணியையும் மகனையும் கண்டுபிடித்து
பிரான்சிற்கும் கூப்பிட்டிருந்தார்.இத்தனைக்கும் யோகநாதன் கலியாணம்
முடிந்த கையேடையே கொழும்பிற்கு வந்து சேர்ந்தவர் கோயில்
திருவிளாவிற்குத்தான் சங்கானைக்கோ பருத்தித் துறைக்கோ போயிருக்கிறார்
என்கிற விடயம் பிரான்ஸ் அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கிற
ஒவ்றாகாரனிற்கு(O.F.P.R.A) தெரியாமல் போனது யோகநாதனது
அதிஸ்ரமே.கனகமணியும் வந்துசேர பிறகு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள்
பிறந்தார்கள். இப்பொழுது யோகநாதனிற்கு வெளிநாடுகளில் வாழும்
சராசரித்தமிழ்க்குடும்பங்களைப்போல ஆசைக்கு ஒண்டு ஆஸ்த்திக்கு ஒண்டு
அலெக்கேசனுக்கு(உதவித்தொகை)ஒண்டு என்று மூன்று பிள்ளைகள்.
அடுத்தது
என்ன சொந்தவீடு வாங்கவேண்டும் ஆனால் சொந்த வீடு வாங்க யேகநாதனின்
தனிச்சம்பளம் காணாது அதாலை கனகமணியும் வேலைக்கு போகவேண்டிதாய்
பேச்சுது.இரண்டு பேரின் சம்பள பணத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்த
கடன்தருகிற வங்கிக் காரன் காணாது என்று வாயைப்பிதுக்க.என்ன செய்யலாமென
தலையை சொறிந்து கொண்டு நின்ற யோகநாதனிற்கு ஒருதன் சொன்னான் பாரிஸ் லா
சப்பலிலை புத்தகக் கடை கவைச்சிருக்கிற சந்திரனை போய் பார் எல்லாம் வெண்டு
தருவான் என்றான். அமெரிக்கா கஸ்ரப்பட்டு ஆம்ஸ்ரோங்கை அனுப்பி பார்த்த
சந்திரனை விட புத்தகக்கடை சந்திரனை சந்திப்பது சிரமமாகவே இருந்தது எப்போ
போனாலும் முதலாளி இல்லை என்கிற வேலைக்காரனின் பதில் ஆனாலும் யோகநாதனின்
விடா முயற்சியால் முன் தலையில் முழுச் சந்திரனை தாங்கிய புத்தகக் கடைச
சந்திரனை சந்தித்தார்.
கடன் வாங்கித் தரலாம் எனக்கு பத்து வீதம் உனக்கு
மிச்சம் என்கிற டீலோடு இல்லாத கொம்பனியின் பேரில் கள்ள சம்பள கணக்கு
போட்டு வட்டிவீதம் கூடின கடனும் வாங்கி வீடும்
வாங்கியாகிவிட்டது.ஆளிக்கொரு அறையென பிள்ளைகளிற்கு மகிழ்ச்சி ஆனால் அறா
வட்டி வங்கிக் கடனை நினைத்தே யோகநாதனும் கனகமணியினதும் படுக்கையறையில்
நித்திரை காணாமல் போய் விட்டிருந்தது.அதே நேரம் அவர்களிற்கு பொருளாதாரமே
குறியாக இருந்ததால் ஊரில் நடக்கும் சண்டையைப் பற்றி எவ்வித கவலையும்
இல்லை. ஆயுதம். போராட்டம்.விடுதலை .தமிழீழம் என்கிற சொற்கள் எல்லாம்
அன்னியமானவையாகவே இருந்தது இப்படியாகப் போய்கொண்டிருந்த ஒரு நாளில்
யோகநாதனோடு வேலை செய்யும் ஆனந்தன் ஆனந்தமாய் ஆடியபடியே வேலைக்கு
வந்திருந்தான்.
என்னடா விசயம் என்று கேட்தற்கு அண்ணை
இயக்கம் ஆனையிறவை பிடிச்சிட்டாங்களாம் அப்பிடியே போய் இப்ப சாவச்சேரியிலை
சண்டை நடக்குதாம் அடுத்தது யாழ்ப்பாணம்தான் . அதையும் பிடிச்சால்
எல்லாரும் ஊருக்கு போலாம் எனறதும்தான் யோகநாதனுக்கு முளையில் பொறி
தட்டியது இயக்கம் யாழ்ப்பாணத்தை திரும்ப பிடிச்சால் பருத்துறையிலை இருந்த
அவரின்ரை சீதண வீடு வளவும் சங்கானையிலை வாங்கி விட்ட பனங்காணியின்ரை
நிலைமையும் என்னவாகும் எண்டு யோசித்துப் பார்த்தவர் அதுகளை முதலில்
வித்துத் தொலைக்கவேண்டும் என நினைத்தவர் அதே நேரம் ஊர் செய்திகளையும்
தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கியிருந்தார்.
அவர் பிரான்சிற்கு
வந்ததிலை இருந்து இயக்கத்திற்கு ஒரு யுரோ கூட குடுத்தது கிடையாது
இவங்கள் யாழ்ப்பாணத்தை பிடிச்சா ஊருக்கு போகேக்குள்ளை ஏதும் பிரச்சனை
தருவாங்களோ எண்டு யோசித்தவர் ஆனந்தனிடம் தயங்கிய படியே தம்பி..உண்மையாவே
யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவாங்களோ என்றார். என்னண்ணை விசர் கதை
கதைக்கிறியள் ஆனையிறவே விழுந்திட்டுது யாழ்ப்பாணம் சின்னப் பிரச்சனை என்ரை
மருமகன் காரன் ஒருத்தன் இயக்கத்திலை பெரிய ஆளா இருக்கிறான் அவனோடை
கதைச்சனான் பிடிச்சிடுவம் எண்டு சொன்னவன் என்று இயக்கத்திற்கு போய் எங்கே
இருக்கிறான் என்றே தெரியாத மருமகனோடு கதைத்தாய் கதைவிட்டான்
ஆனந்தன்.இப்போதைக்கு யேகநாதனிற்கு ஆனந்தன்தான் அன்ரன் பாலசிங்கம்
அவனிட்டை ஆலோசனை கேக்கிறதைத் தவிர வேறை வழியில்லை.
தம்பி
நான் இங்கை வந்திலையிருந்து இவங்களுக்கு காசு குடுத்ததேயில்லை ஊருக்கு
போகேக்கை ஏதும் பிரச்சனை தருவாங்களோ என்றர். என்னது ஒரு சதம்கூட
குடுத்ததேயில்லையா நீங்கள் எல்லாம் தேசத்துரோகியள் உங்களையெல்லாம்
போட்டுத் தள்ளவேணும் என்றவனிடம். சரி ஏதோ தெரியாத்தனமாய் பிழை
விட்டிட்டன் ஏதாவது பரிகாரம் இருக்கா என்று கேட்டவரிற்கு. சரி சரி அவங்கடை
அலுவலக்துக்கு போய் உங்கடை பங்களிப்பை செய்திட்டு அவங்கள் தாற
பற்றுச்சீட்டை பத்திரமாய் வைச்சிருங்கோ ஊருக்கு போகேக்குள்ளை அதை
கொண்டு போனால் ஒரு பிரச்சனையும் இல்லை ஊருக்கு போகேக்குள்ளை
சொல்லுங்கோ என்ரை மருமகனிட்டையும் சொல்லி விடுறன் என்றான். இப்ப யோக
நாதனிற்கு கொஞ்சம் நிம்மதி ஆனால் வேலைப்பழு அதே நேரம் காசு குடுக்க
மனமில்லாததாலும் நாட்கள் இழுபட்டுக்கொண்டே போக நோர்வேயின் அனுசரணையுடன்
சமாதானப் பேச்சு வார்த்தை என்று செய்தியில் படித்தார்.ஆனந்தன் வேறை
ஊருக்கு போய் விட்டிருந்தான் எதுக்கும் அவன் வரட்டும் ஊர் நிலைமையை
கேட்டு காணி என்ன விலை போகுது எண்டு அறிஞ்சு பிறகு இயக்கத்திக்கு காசு
குடுகக்லாமென முடிவெடுத்திருந்தார்.
ஊருக்கு போயிருந்த
ஆனந்தனும் திரும்பி வந்து யேகநாதனிற்கு கதை கதையாய் சொல்லத்
தொடங்கியிருந்தான் அண்ணை ஒரு பிரச்சனையுமில்லை ஏ 9 பாதையாலை யாழ்ப்பாணம்
போங்கோ கிளி நொச்சியிலை இறங்கி பியரும் அடிச்சிட்டு சேரனிலையோ
பாண்டியனிலையோ சாப்பிட்டு போகலாம் சாப்பாடு அந்த மாதிரி.ஆனா கட்டாயம்
திரும்ப சண்டை திரும்ப தொடங்கும் அதுதான் கடைசி சண்டை யாழ்ப்பாணத்தை
பிடிச்சிடுவம் எண்டுதான் எல்லாரும் சொல்லுறாங்கள் நீங்கள் காசு குடுத்த
றிசீற்றை கொண்டு போங்கோ இல்லாட்டி அங்கை வைச்சு பெரிய தொகையா
கேட்பாங்கள். கனடாவிலை இருந்த வந்த ஒருத்தர் கனடாவிலை
ஒருசதமும்குடுக்கேல்லையாம் ஓமந்தையிலையே ஆளை மறிச்சு காசு
கேட்டிருக்கிறாங்கள் அவரும் குடுக்கேல்லை பாஸ்போட்டை
பிடுங்கிபோட்டாங்களாம்.ஆனா கனடா காரரோ காசு குடுக்கிறேல்லையெண்டு
அடம்பிடிச்சு கண்காணிப்புக் குழுவிட்டைப்போய் முறைப்பாடு செய்து
கடைசியிலை கண்காணிப்புக் குழுக்காரர்தான் கிளிநொச்சி நந்தவனம்
அலுவலகத்திலை போய் பாஸ்போட்டையும் வாங்கிக் குடுத்து ஓமந்தைவரைக்கும்
கொண்டு வந்து விட்டவங்காளாம் என்று புளியை வேறு கரைத்துவிட்டிருந்தான்.
யோகநாதனிற்கு ஒரு சந்தேகம் ஏனடா சாப்பாட்டுக் கடையளின்ரை பெயரெல்லாம்
சேரன். சோழன் பாண்டியன் என்று பெயர் வைச்சிருக்கிறாங்களே ஏன் எங்கடை
நாட்டிலை அரசர்மார் ஒருத்தரும் இருக்கேல்லையோ??சங்கிலியன் பண்டார
வன்னியன் எண்டெல்லாம் இருந்தவங்கள்தானே என்றதற்கு. அண்ணை இப்பிடி
கேணைத்தனமான கேள்வி ஒண்டையும் அங்கைபோய் கேட்டிடாதையுங்கோ பிறகு
பங்கருக்கை போட்டு பாம்பும் பல்லியும் விட்டிடுவாங்கள் என்று ஆலோசனை கூறி
அனுப்பி வைத்தான்.
தமிழர் ஒருங்கிணைப்பக் குழு
அலுவலகத்திற்குள் நுளைந்து அங்கிருந்த ஒருவரிடம் போய் தயங்கிய படியே தம்பி
உங்களிற்கு பங்களிப்பு செய்ய வந்திருக்கிறன் என்றபடி இரண்டாய்
மடித்திருந்த 50 யுரோவை விரித்து நீட்டவே அவரை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து
பார்த்தவன் பற்றுசீட்டுப் புத்தகத்தை எடுத்து யோகநாதனது பெயர் விபரம்
விலாசம் எல்லாம் கேட்டு எழுதி யவன் அவரிடம் 50 யுரோவை வாங்கிவிட்டு
பற்றுச் சீட்டை நீட்டினான். அதை வாங்கியவர் இலக்கம் தலைவரின் கையெழுத்து
எல்லாம் சரியா இருக்கா என பார்த்து பத்திரப் படுத்திக்கொண்டு அங்கிருந்து
போய்விட்டார்.ஆனால் அவர் ஊருக்கு நேரமாய்பார்த்து மாவிலாறில் சண்டை
தொடங்கிவிட்டிருந்தது யாழ்ப்பாணம் விழட்டும் பிறகு போலாமென
காத்திருந்தவரிற்கு முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டது
என்று தெரியவந்ததும் ப்ச்.....50 யுரோ அனியாயமாய் போயிட்டுதே என்று
பொச்சுக்கொட்டியவர் அந்த றிசீற்றை எடுத்து கிழித்து எறியலாமென
நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர் எங்கள்
தலைவர் தென்னாபிரிக்காவில் தங்கியிருக்கிறார் விரைவில் வருவார் என்று
சொன்னதாய் இங்கத்தைய இணையத் தளம் ஒன்று வெளியிட்ட செய்தியை படித்தவர்
றிசீற்றை எறியாமல் பொலித்தீன் ஒன்றில் போட்டு பத்திரப்
படுத்திக்கொண்டார்.இப்ப உங்களிற்கு யோகநாதனைப்பற்றி ஓரளவு உங்களிற்கு
புரிந்திருக்கும் இனி அவரது மனைவி கனகமணியை பற்றி பார்ப்பம்.
00000000000000000000000000000000000000000000
கடனை
கட்டுவதற்காக ஓடியோடி இரண்டு வேலை இடையில் கிடைக்கிற நேரத்தில் மெகா
சீரியல்களை ஒரேயடியாகப் பார்த்துமுடிப்பது தீவிர கடவுள் பக்தி
கொண்டகொஞ்சம் அப்பாவித்தனம் அவ்வளவுதான்.வேலைக்கு போய்விட்டு வீடு
திரும்பிக் கொண்டிருந்த ஒரு குளிர் மாலைப் பொழுதில் சலையோரத்தில்
குவித்திருந்த பனியில் கால் கால் வழுக்கிவிழுந்த கனகமணிக்கு முதுகு
வலி.வலிக்கு விக்சை தடவிக்கெண்டு வேலைக்கு போய்க்கொண்டிருந்தவர் சில
மாதம் கழித்து ஒரு நாள் காலை கட்டிலை விட்டு எழும்பமுடியாமல் போகவே
அம்புலன்சிற்கு போனடித்து வைத்தியசாலைக்கு போய் ஸ்கான் எடுத்த
பார்த்தபோதுதான் அவரது முள்ளந்தண்டு எலும்பு ஒண்டு வெடித்து இரத்தம்
கண்டிப்போயிருந்தது. விழுந்த உடனேயே வைத்தியம் பாக்கததால் இப்பொழுது
சத்திர சிகிச்சை செய்து பழுதடைந்த முள்ளந்தண்டு எலும்பைஎடுத்து அதுக்கு
பதிலாக செயற்கை முள்ளந்தண்டை பொருத்தவேண்டும். அதுவும் பொருத்தியாகி
விட்டது ஆனால் இப்பொழுது கனகமணிக்கு இரண்டு வேலையில்லை ஒரு வேலைக்குகூட
ஒழுங்காய் போக முடியாத நிலை பாரம் தூக்க முடியாது நீண்ட நேரம் கதிரையில்
இருக்க முடியாது முடிந்தளவு படுத்தே இருக்கவேண்டும்.இப்பவெல்லாம் அவரிற்கு
சீரியல் பார்க்கவும் அக்கம் பக்கம் இருந்த தமிழ் குடும்பங்களோடு அரட்டை
அடிக்கவும் அதிகளவு நேரம் கிடைத்திருந்தது.அதே நேரம் தான் தெரியாமல்
செய்த பாவம்தான்தான் ஏதோ தனக்கு இப்படி வருத்தம் வந்து விட்டது என
நினைத்து அதற்கு பரிகாரமாக ஊரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
சிலரிற்கு உதவியும் செய்யத் தொடங்கியிருந்ததோடு இப்போ சண்டையும்
முடிந்து நாலுவருசமாகி சனமெல்லாம் ஊருக்கு போய் வருவதால் யோகநாதனையும்
ஊருக்குப் போய் வீடு காணிகளை வித்துப்போட்டு வரும்படிநச்சரிக்கத்
தொடங்கியிருந்தார்.
பிரான்சில் நடந்த ஊர்வலங்களிலையெல்லாம்
புலிக்கொடியோடைமுன்னுக்கு நின்ற ஆனந்தன்கூட அதே ஏ.9 பாதையாலை
ஊருக்குப் போய்விட்டு வந்து அண்ணை ஒரு பிரச்சனையும் இல்லை றோட்டெல்லாம்
அந்தமாதிரி போட்டிருக்கிறாங்கள் கிளிநொச்சியிலை சேரன் இல்லாதது
மட்டும்தான் சின்னக்குறை என்று சொன்னதன் பின்னர்தான் ஊருக்குப் போகும்
முடிவினை யோகநாதன் எடுத்திருந்தார்.அந்தநேரம்தான் வழக்கமாக அரட்டை
அடிக்கப்போகும் சங்கீதா வீட்டிலிருந்து ஒரு படத்தோடைவந்த கனகமணி
யோகநாதனிம் இஞ்சாருங்கோ இந்தப் பிள்ளை இயக்கத்திலை இருந்ததாம் புருசன்
காரனும் இயக்கத்திலை இருந்து கடைசி சண்டையிலை செத்துப் போனானாம்.5 வயதிலை
ஒரு மகள் இருக்காம் சொந்தத்தொழில் தொடங்க உதவி கேட்டிருக்கு எண்டு
சங்கீதாவுக்கு தெரிந்த ஆரோ கேட்டிருந்தவையாம் நான் ஒரு நூறு யுரோ தாறன்
அனுப்பி விட்டிட்டு நீங்கள் உருக்கு காணி விக்கப் போறீங்கள் தானே காணி
வித்து வாற காசிலை கொஞ்சத்தை இந்தப் பிள்ளைக்கு குடுத்து ஏதாவது தொழில்
தொடங்கிற வசதி செய்து குடுத்திட்டு வாங்கோ என்று இதிலை அந்த பிள்ளையோடை
தொடர்பு கொள்ள ஒரு கொமினிக்கேசன் நம்பரும் விபரமும் இருக்கு எண்டு ஒரு
பேப்பரையும் நீட்டினாள். அதனை பெரிய அக்கறையில்லாமல் வாங்கி மேசையில்
வைத்தவர்.இரவு கிளாசில் விஸ்கியை ஊற்றி கோலாவை கலக்கத்தொடங்கியபோது
இந்தாங்கோ நாளைக்கு அந்தபக் பிள்ளைக்கு அனுப்பிற காசு என்று கனகமணி நூறு
யுரோவை மேவையில் வைத்துவிட்டு சீரியல் பாக்கப் போய்விட்டிருந்தாள்.
பிள்ளைகள்
எல்லோரும் வளர்ந்து விட்டதால் இப்பொழுதெல்லாம் அவர்கள் எங்கே போகிறோம்
எத்தனை மணிக்கு வருகிறோம் என்றெல்லாம் சொல்வதில்லை அதனால் யாரும்
வீட்டில் இல்லை.இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டவரிற்கு கனகமணி
கொடுத்த படம் நினைவிற்கு வர அதனை எடுத்துப் பார்த்தார் மெல்லிதாய்
நெற்றியில் திருநீற்று குறி இழுத்த முகம் அளவான அழகான உடல்வாகு கையில்
தூக்கிய குழந்தை.
படத்தில் அவளது கையில் இருந்த குழந்தை தனது கட்டை
விரலால் மறைத்தபடி மீண்டும் உற்றுப் பார்த்தார். கனகமணியை விட ஒரு நாப்பது
கிலோவாவது குறைவாய் இருக்கும். கலர் கொஞ்சம் குறைவுதான் ஆனாலும் களையான
முகம் கனகமணி வருத்தம் வந்து படுக்கையிலை விழுந்ததுக்கு பிறகு அவளிற்கு
பக்கத்திலை படுத்ததே பல வருசமாகிது ..சே ..வேண்டாம் என்று மேசையில் படத்தை
போட்டுவிட்டு மீண்டும் ஒரு கிளாசை நிரப்பி ஒரே மடக்கில் குடித்தவரிற்கு
மீண்டும் படத்தை பார்க்கவேண்டும் போல் இருந்தது. படத்தை எடுத்தார்
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரிவராதவரைக்கும்தான் ஒருவன் யோக்கியன்
.இரண்டுமே சரிவந்துவிட்டால் அனைவருமே அயோக்கியன்தான் இப்பொழுது தான்
யோக்கியனா??அயோக்கியனா ??என்கிற குழப்பம் யோகநாதனிற்கு.மறுநாள் கனகமணி
கொடுத்த விபரத்திற்கு பணத்தை அனுப்பிவிட்டு அவள் கொடுத்த விபரத்தில்
இருந்த கொமினிக்கேசன் இலக்கத்திற்கு போனடித்து குமுதினியை வரவளைத்து பணம்
எடுப்பதற்கான விபரங்களை கொடுத்திருந்தார்.குமுதினியுடன் கதைத்த பின்னர்
நீண்ட நேரமாகியும் குமுதினின்குரல் அவரது காதிற்குள்ளேயே
நின்றிருந்தது.அதற்கு பின்னர் கனகமணிக்கு தெரியாமலேயே ஒருதடைவை பணம்
அனுப்பி விட்டு சில தடைவைகள் கொமினிக் கேசனிற்கு வரச்சொல்லி கதைத்தும்
இருந்தவர் விரைவில் நேரடியாக சந்திப்பதாய் கூறியிருந்தார்.அவர் ஆழ்மனதின்
மூலையில் இத்தனைநாள்வரை ஓரமாய் உறங்கிக் கிடந்த மிருகம் மெதுவாய் எழுந்து
தனது முன்னங்கால்களை நீட்டி சோம்பல் முறிந்துக்கொண்டது.
000000000000000000000000000000000000000000000
கோப்பாய்
சந்தியில் இருந்த கொமினிக்கேசனிற்கு முன்னால் ஆட்டோ வந்து நின்றதும் ஜயா
இதுதான் நீங்கள் சொன்ன கொமினிக்கேசன் என்றதும் யோகநாதன் ஆட்டோக்காரன்
தன்னை மீண்டும் ஜயா என்று அழைத்த எரிச்சலுடன் இறங்கி பணத்தை கொடுத்து
விட்டு இறங்கினார்.குமுதினிக்கு தான் வரும் விபரத்தை ஏற்கனவே சொல்லி
இருவரும் கொமினிக் கேசனில் சந்திப்பதாக ஏற்பாடு செய்திருந்தனர்.இதுவரை
தொலைபேசியில் அண்ணா என்று அழைத்த குமுதினி தன்னை நேரில் பார்த்ததும்
ஆட்டோக் காரனைப்போல ஜயா என்று கூப்பிட்டு விடக் கூடாது என்கிற ஒரு
பயம்வேறு யோகநாதனிற்கு இருந்தது. கொமினிக்கேசனிற்குள் மகளோடு இருந்த
குமுதினியை இலகுவாக அடையளம்கண்டு கொண்டார்.படத்தில் பார்த்தை விட அவள்
அதே திறு நீற்றுக் குறியுடன் நேரில் இன்னமும் அழகாகவே இருந்தாள் மிருகம்
இப்பொழுது கொட்டாவி விட்டுக்கொண்டது.
அங்கேயே அவரை சந்தித்து
கதைத்துவிட்டுப்போகும் திட்டத்தோடு வந்திருந்த குமுதினியிடம் வீட்டிற்கு
போகலாமா என்றதும் அவள் தயங்கிய படியே அண்ணா நீங்கள் வாற அளவுக்கு வசதியான
வீடு இல்லை என்றதும் பரவாயில்லை கட்டாயம் வீட்டை கூட்ப்போகவேணும் என்று
வற்புறுத்தியதால் அங்கேயே கைதடி வீதிப் பக்கமாக அழைத்துப் போனாள் அங்கு
தென்னங்காணி ஒன்றை அடுத்து இருந்த வெளியில் பல குடிசைகள் இருந்தது
அனைத்துமே இறுதி வன்னி யுத்தத்தால் பாதிக்கபட்டு வந்தவர்களிற்கு தொண்டு
நிறுவனத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது அதில் ஒன்றுதான்
குமுதினியினுடையது.குடிசை வாசலில் ஒரு பிளாஸ்ரிக் கதிரையை போட்டு அண்ணை
இதிலை இருங்கோ என்று சொன்னதும் என்னை அடிக்கடி அண்ணை எண்டாமல் யோகன்
எண்டே கூப்பிடலாமென்றபடி தான் கொண்டு வந்த பொருட்களை அவளிடம் நீட்டினார்
மகளிற்கோ புது உடுப்பக்களை பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி அவற்றையே
புரட்டிப் புரட்டி பார்த்துக்கொண்டு நின்றவளிடம் குமுதினி பணம் கொடுத்து
ஓடிப்போய் பெப்சி வாங்கி வா என்று அனுப்பி விட்டிருந்தவள் யாரெண்டே
தெரியாத எங்களிற்கு கடவுள் மாதிரி வந்து எவ்வளவோ உதவியள் செய்யிறீங்கள்
நன்றி எனும்போதே அவளது கண்கள் கலங்கி தொண்டை லேசாய் அடைத்தது.
செருமி
சமாளித்தபடி எங்களைப் பற்றி போனிலை எல்லாம் சொல்லிட்டன் ஆனா உங்களைப்
பற்றி எதுவுமே கேக்கேல்லை உங்களுக்கு எத்தினை பிள்ளையள்? மனிசி சுகமாய்
இருக்கிறாவோ ?என்றதும். பொய் சொல்லுவதை அவள் கண்டு பிடித்துவிடாமல்
இருக்க அவளிடம் இருந்து பார்வையை திருப்பியவர் எனக்கு ஒரேயொரு மகன்
மனிசி .. மனிசி வந்து ..என்று இழுத்தவரிற்கு கனகமணி கண்முன்னே வந்ததால்
எதுவும் பேசாமல் வலக் கையை நீட்டி வானத்தை நோக்கி காட்டவே ..ஓ
மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்ன நடந்தது என்று குமுதினி பரிதாபமாக
கேட்டாள்.அக்சிடன்ட் ....ஒரு நாள் காலைமை வேலைக்கு போறதுக்காக பஸ்சுக்கு
காவல் நிண்டநேரம் தண்ணியடிச்சிட்டு வந்த லொறிக்காரன் ஒருத்தன் அடிச்சு
விட்டிட்டான் என்று இதயத்தை தடவினார். மிருகம் தனது நாவால் உடலை நக்கத்
தொடங்கியிருந்தது .
மகள் கொண்டு வந்த பெப்சியை வாங்கி குடித்துவிட்டு
விடை பெற்றவர் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ச்சியாக குமுதினியை
சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அவளையும் மகளையும் வெளியே கோயிலிற்கும்
கடைகளிற்கு அழைத்துசெல்லவும் தொடங்கியிருந்தார். இது ஆரம்பத்தில்
குமுதினிக்கு சங்கடமாக இருந்தாலும் பிறகு அவளிற்கும் இது ஒரு மாற்றமாகவும்
கணவனின் நினைவுகளில் இருந்தும் போராளியாக இருந்து காதலித்து சாதிக்
கட்டமைப்புக்களை உதறி திருமணம் செய்ததால் இப்பொழுது தனது உறவுகளாலேயே
ஏற்கப்படாமல் தனித்துப்போன கடந்தகால மன அழுத்தங்களில் இருந்தும்
விடுபட்டு ஒரு ஆறுதலையும் கொடுத்திருந்தது.
ஒவ்வொரு
நாளும் குமுதினியை சந்திக்கப் போகு முன்பு மீசையிலும் தலையிலிலும் நரை
தெரிகின்றதா என்று பரிசோதனை செய்வதே யோகநாதனிற்கு பெரும் வேலையாய்
இருந்தது ஆரம்பத்தில் நல்லூர் கோயிலிற்கு வருவதற்கே தயங்கிய குமுதினி
நாலு நாள் கழித்து இன்று கடற்கரைக்கும் பின்னர் படத்திற்கு வர
சம்மதித்திருந்தாள்.இந்த மாற்றத்திற்காகத்தான் அவரும் காத்திருந்தார். படம்
பாக்கப் போக முதல் கடற்கரையில் வைத்தே குமுதினியை வழிக்கு
கொண்டுவந்துவிடுவது இதுதான் அவரது திட்டம்.
..........................................
காரைநகர்
கசோரனா கடற்கரையில் வாங்கிக் கொடுத்த பட்டத்தோடு குமுதினியின் மகள்
ஓடிக்கொண்டிருந்தாள். அவள் நல்லா வரவேணும் நல்லா படிக்கவேணும் நல்லதொரு
எதிர்காலம் அவளிற்கு கிடைக்கவேணும் ஆனால் நீ இங்கையிருந்து இந்த
சமூகத்திலை தனியாளாய் உன்னாலை அதை செய்ய ஏலுமா??என்று குமுதினியின்
அனைத்து கவலைகளையும் யோகநாதன் தன்னுடைய கவலைகளாக்கி சொல்லிவிட்டு
இதெல்லாம் எப்பிடி செய்யப்போறாய் என்று விட்டு அவளைப் பார்த்தார். அவளின்
பதிலோ பெரு மூச்சோடு குனிந்து கடற்கரை மணலில் கால் பெருவிரலால்
கீறுவதாகவே இருந்தது.இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரிக்க அவளிடம்.
அதுக்கு ஒரு வழி இருக்கு வெளிநாடு போகவேணும் அங்கை போனால் எல்லாமே நடக்கும்.
எப்பிடி??
போறது சுலபம் ஆனால் அது உன்னிலைதான் இருக்கு
என்னிலையா??
ம்....
எப்பிடி ??
எனக்கும் துணை இல்லை உனக்கும் துணை இல்லை..
அவளையறியாமலேயே
அவளது கை இடுப்பை நோக்கிப் போனது அங்கு பிஸ்ரல் இல்லை பழைய பழக்க
தோசம் என்று புரிந்தது.தலையை சாய்த்து அவனை பார்த்தாள்...
உனக்காவும்
உன்ரை மகளின்ரை எதிர் காலத்துக்காவும்தான் சொல்லுறன் மற்றபடி
எனக்கொண்டும் இல்லை நீ விரும்பினால் வெளிநாடு வரலாம் அவ்வளவுதான்.
பட்டம் குத்தி கடல்நீரில் விழுந்ததில் கிழிந்துபோக அதைத் துக்கியபடியே அவள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
பேரூந்து
யாழ் நகரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது இறுகிய முகத்தோடு
அமர்ந்திருந்த அவர்களிற்கு நடுவில் குமுதினியின் மகள் சந்தோசமாய்
சொக்லேற் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தாள்.தனது மகளின் எதிர்காலம் பற்றிய
பெரியதொரு கேள்வியும் அதைப்பற்றிய பயமும் நிரவியிருந்த இடத்தை மெல்ல
மெல்ல வெளிநாட்டுக் கனவு விழுங்கத்தொடங்கியிருந்தது.பேரூந்து நகரத்தில்
நின்றிருந்தது மெதுவான குரலில் குமுதினி நீ விரும்பாட்டில் போகலாம் ஓட்டோ
பிடிச்சு விடுறன் என்றார்.ஆனால் அவள் அங்கேயே மொளனமாய்
நின்றிருந்தாள்.தனது சட்டைப்பையில் ஏற்கனவே எடுத்திருந்த பட
றிக்கற்றுக்ளோடு யோகநாதன் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பிக்க குமுதினி
மகளோடு பின்தொடரத் தொடங்கியிருந்தாள்.
...................................................................
கெழும்பில்
பிரபல நட்சத்திர விடுதியொன்றில் தனித்தனியாக இரண்டு கட்டில்கள் போடப்
பட்டிருந்த அறை ஒன்றில் பகல் முழுதும் கொழும்பை சுற்றி பார்க்க அலைந்ததில்
குமுதினியில் மகள் உறங்கிப் போயிருந்தாள். குமுதினியும் களைத்துப்
போயிருந்தாள்.நாளைக்கு பாஸ்போட் எடுக்கிறதுக்கு போகலாம் எனக்கு தெரிஞ்ச
ஒரு பெடியன் இருக்கிறான் அவனிட்டை காசைக் குடுத்தால்சரி அலுவல் எல்லாம்
கெதியா முடிச்சுத் தருவான் என்றபடி கிளாசில் இருந்த விஸ்கியை ஒரே மடக்கில்
குடித்தவர் குமுதினியை திரும்பிப் பார்த்தார்.மகளிற்கு பக்கத்தில் சுவரில்
சாய்ந்தபடி அமர்ந்திருந்தவள் ம்...என்கிற பதிலை மட்டும் கொடுத்தாள்.
இன்றைய இரவின் இந்த தனிமைக்காகத்தான் யோகநாதன் அவளை கொழும்பிற்கு
அழைத்து வந்திருந்தார். மகளை விட்டிட்டுவந்திருந்தால் இன்னும்
நல்லாயிருந்திருக்கும் ஆனால் தனிய விடமாட்டன் எண்டு அடம் பிடிச்சு
கூட்டியந்திட்டாள் என்கிற சின்ன கோவமும் யோகநாதினிற்கு
இருந்தது.வெளிநாட்டு கனவையும் அவளது மகளது எதிர் காலம் பற்றியும் திரும்ப
திரும்ப சொல்லி குமுதினியை மூளைச் சலவை செய்து அவர் என்ன சொன்னாலும்
தலையாட்டும் நிலைக்கு குமுதினி வந்திருந்தாள்.இரண்டாவது கிளாசையும்
முடித்தவர் மெதுவாக எழுந்து அறை விளக்கை அணைத்துவிட்டு குமுதினிக்கு
அருகில்போய் அவளது கன்னத்தை மெதுவாக தன விரல்களால் தடவத்
தொடங்கவும்.மற்றைய கட்டிலில் மாறி இருந்தவள்.
பயமாயிருக்கு...
நான் தான் இருக்கிறனே பிறகென்ன?
என்னை கைவிட்டிட மாட்டீங்களே..
எத்தனையாவது தரம் இதையே கேக்கிறாய் சத்தியமா கைவிடமாட்டன் என்றபடியே அவரது கைகள் கழுத்துவழியாக கீழே இறங்கத் தொடங்கியிருந்தது.
மகள் இருக்கிறாள் வேண்டாம்.
அவள் நல்ல நித்திரை..
பாதுகாப்பு உறையெல்லாம் இருக்கா?
இன்பம்
எப்பவும் இயற்கையா இருந்தால்தான் எனக்கு பிடிக்கும் என்றபடி .தனது பையில்
இருந்து எடுத்த குளிசைகளில் ஒன்றை அவளது உள்ளங்கையில் வைத்து இதைப் போடு
என்று தண்ணீர் போத்தலையும் நீட்டினார். உணர்வுகள் என்பது தூண்டப் படாதவரை
மட்டுமே கட்டுப் படுத்தமுடியும் குமுதினி குளிசையை வாயில் போட்டு தண்ணீரை
குடித்து முடித்து படுக்கையில் சரிந்து கொண்டாள். இரை இப்போது
மிருகத்தின் கால்களிற்கிடையில்...
.......................................
கொழும்பில்
பத்துநாட்கள் மகிழ்ச்சியாக கழித்தவர்கள் ஊருக்கு
திரும்பியிருந்தார்கள்.கோநாதனும் பருத்துறை வீடு காணியை
விற்றுவிட்டிருந்தார். சங்காளை பனங்காணிக்கு விலை சரிவரவில்லை காரணம்
காணிக்குள் பனைகளே இருக்கவில்லை.திரும்பவும் ஒரு ஆறு மாதத்தால் அதை சாட்டாக
வைத்து திரும்பவும் வருவதாக முடிவு செய்திருந்தார்.குமுதினியும் குடிசையை
விட்டு வாடகை வீட்டிற்கு மாறியிருந்தாள்.அடுத்தடைவை வரும்போது ஸ்பொன்சர்
அலுவல் எல்லாம் செய்து கலியாணம் எழுதுவதாக சத்தியம் செய்து விட்டு
பிரான்சிற்கு திரும்பிவிட்டிருந்தார் அதற்கு பிறகு வாரத்தில் ஒரு தடைவை
தொலைபேசிமட்டும் குமுதினிக்கு வரும். நாட்கள் ஓடிக்கொண்டிருந்த ஒரு
பொழுதில் திடுக்கிட்ட குமுதினி யோகநாதன் வந்து போன மாதங்களில் இருந்து
கைவிரலில் திரும்ப திரும்ப எண்ணிப் பார்த்தாள்.இதயத் துடிப்பு அதிகரிக்கத்
தொடங்கியிருந்தது.ஊரில் இருந்த ஒரு வைத்தியரிடம் போனதும் அவரும் உறுதி
செய்திருந்தார் .பயம்.மகிழ்ச்சி .கோபம். என்று எல்லாம் கலந்த கலவையாய்
அவசரமாக கொமினிக்கேசனிற்குள் புகுந்து யோகநானிற்கு போனடித்து எடுக்கச்
சொல்லி விட்டு காத்திருந்தவளிற்கு அழைப்பு வந்தது.தயங்கியபடி விடயத்தை
சொன்னதும் ஏன் குளிசை ஒழுங்கா போடேல்லையோ எனத் தொடங்கியவர் கருவை
உடனடியாக கலைத்துவிடும்படியே பதில் வந்தது. நாலு மாதமாகிவிட்டது உள்ளுரில்
செய்யமுடியாது செய்தால் விடயம் ஊர். முழுக்க பரவி விடும் வெளியூரில் போய்
செய்வதற்கு எனக்கு ஆட்களைத்தெரியாது நீங்கள் தானே கலியாணம் செய்யிறதாய்
சத்தியம் பண்ணீங்கள் பிறகெதுக்கு அழிக்கச் சொல்லுறியள் என்று அழுதாள்
கெஞ்சினாள் அழித்துவிடு என்பது மட்டுமே பதிலாக வந்து கொண்டிருந்தது
இறுதியில் ஊரிலை யாரிட்டையோ வாங்கின பிள்ளைக்கெல்லாம் நான் அப்பாவாக
முடியாது என்கிற வசனத்தோடு தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
குமுதினிக்கோ
இரண்து கிபீர்கள் பறந்து வந்து பக்கத்தில் குத்துக்கரணமடித்து குண்டு
போட்டதைப்போல ஒரு உணர்வு திரும்ப போனடித்துப் பார்த்தாள் வேலை
செய்யவில்லை. கோபத்தில் ஏதாவது அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்
அடுத்தநாள் போன் வரும் என எதிர்பார்த்தாள் வரவில்லை தானே
கொமினிக்கேசனிற்கு போய் போனடித்துப்பார்தாள் வேலை செய்யவில்லை இப்படியே
ஒவ்வொரு நாளும் போனடித்துப் பார்த்தே இரண்டு வாரங்கள் கழிந்து
விட்டிருந்தது.
அன்றும் வழைமைபோலமகளுடன் கொமினிக் கேசனிற்குள்
நுழைந்ததுமே அங்கிருந்தவன் ''என்ன வழைமையான நம்பருக்குத்தானே என கேட்டபடி
இலக்கங்களை அழுத்தியவன் உதட்டைப் பிதுக்கி தலையாட்டியபடி வேலை
செய்யவில்லையென்றவன் என்ன ஏதும் பிரச்சனையோ என்றான். ஓம் இருக்கிறதை
விட்டிட்டு பறக்கிறதக்கு ஆசைப் பட்டிட்டன் என்றபடி அங்கிருந்து
வெளியேறியவள் வயிற்றைத்தடவிப் பார்த்தாள் கொஞ்சம் வெளியே தெரியத்
தொடங்கியிருந்தது.மகளிற்கு பிடித்தமான ஜஸ்கிறீம் சொக்லெற் எல்லாம்
வாங்கிக் கொடுத்துவிட்டு ஒரு உணவகத்தினுள் புகுந்து இரண்டு பிரியாணி
பாசல்களும் வாங்கிக் கொண்டு வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.
0000000000000000000000000000000000
பக்கத்து
வீட்டிற்கு அரட்டையடிக்கப் போயிருந்த கனகமணி பதட்டத்தோடு என்னப்பா
செய்தி அறிஞ்சனியளோ என்றபடி வந்தவளை இடை மறித்து நான் ஊரிலை இருந்து வந்த
உடைனை யே சொல்ல நினைச்சனான் அவள் சரியில்லையெண்டு ஆனா நீ கவலைப்
படுவாயெண்டு விட்டிட்டன் என்றபடி தனது கையிலிருந்த ஜ பாட்டினை தட்டி
தமிழ்த்தேசிய முன்னணி செய்தித் தளம் ஒன்றில் இருந்த செய்தியை படித்துக்
காட்டத் தொடங்கினார்.
முன்னைநாள் பெண்போராளி மகளை கொலை செய்து தானும் தற்கொலை.
கோப்பாய்
பகுதியில் வசித்தவரும் முன்னை நாள் பெண் போராளியுமான குமுதினி வயது 34
உணவில் விசம் கலந்து கொடுத்து தனது 5 வயது மகளை கொலை செய்து விட்டு
தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மருத்துவ பரிசோதனைகளில் இவர்
கர்ப்பம் தரித்துள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவர் புனர்வாழ்வு
முகாமிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் இராணுவப்புலனாய்வாளர்களுடன்
நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் அதுவே அவரது கர்ப்பத்திற்கு
காரணம் என்றும் விடயம் வெளியே தெரியவந்ததும் தற்கொலை செய்து
கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணத்தின்
கலாச்சாரச் சீரளிவுகளிற்கு இவரைப் போன்றவர்களும் காரணம் என்பதும்
குறிப்பிடத் தக்கது.
.............................................................................................................................................................................................
கதை உண்மைச் சம்பவத்தை தழுவியது.