Navigation


RSS : Articles / Comments


சபீதா-சிறுகதை

1:29 PM, Posted by sathiri, No Comment

 

சபீதா-சிறுகதை-சாத்திரி

சாத்திரி 

இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கும் குரூரம் இது போன்றவற்றை இரசிக்கத் தோன்றும் என்றும் உளவியல் சொல்கிறது. எனக்கு அது பற்றியெல்லாம் ஆழமாகத் தெரியாது. உணவுச் சங்கிலி இப்படிதான் உலகம் இயங்குகின்றது என்றது மட்டும் தெரியும். அன்றும் சிறுத்தையொன்று மானை துரத்தத் தொடங்கியிருந்தது. ஆனால், மான் எப்படியோ உச்சிவிட்டு ஓடிவிட ஏமாற்றத்தோடு  சிறுத்தை என்னையே பார்ப்பதுபோலவிருக்க,  ‘ச்சே  ..மான் தப்பிவிட்டது’ என்று வலக்கை முஸ்டியை இறுக்கிப் பொத்தி இடக்கையில் குத்தி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன்.

கடையத் திறந்து கதிரைகளை வெளியே அடிக்கிக் கொண்டிருக்கும்போதே வழமைபோல முதுகில் புத்தக சுமையோடு ஓடி வந்த ஜோய் லேசாய் மூச்சு வாங்க வணக்கம் சொல்லி விட்டு நிற்க. சிறிது தூரத்திலேயே புன்னகைத்தபடி சபீதா வந்துகொண்டிருந்தாள். பூவைப்போல வட்ட வடிவில் செருகி வைக்கப்பட்டிருந்த லாலிபாப் ஒன்றை எடுத்து அவன் கையில் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு குனிந்து நின்ற என்கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு அதைப்பிரித்து  வாயில் வைக்க, அப்போதான் அருகில் வந்து சேர்ந்த சபீதா  வணக்கம் சொல்லிவிட்டு  ‘வேலைக்கு நேரமாகி விட்டது போகிறேன்’ என்றபடி ஜோயை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தாள்.

கொரோனா வந்ததால் சபீதாவைப்போலவே நிறைய தோழிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தத்தோடு சொல்லும் வணக்கத்தை இழந்து விட்டிருந்தது பெரும் கவலை. அப்போதான் நகர சபையில் வீதி துப்பரவு வேலை செய்யும் ராபிக் வந்துகொண்டிருந்தான். என் காலை வாடிக்கையாளர்களில் முக்கியமானவன்.  என்ன வேண்டுமென்று கேட்கத்தேவையில்லை. கிளாசை எடுத்துக் குழாயை திறந்து நுரை ததும்பும் பியரை நிரப்பி மேசையில் வைத்து விடுவேன். அதை உறுஞ்சிய படியே ஜோயை இழுத்தபடி போய்க்கொண்டிருந்த சபீதாவையே பார்த்துக்கொண்டிருந்தவன், ‘ அவளின் உடையும் நடையும் ‘ .. என்றவன் அரபியில் சில கெட்ட வார்த்தைகளைத் துப்பிவிட்டு மீண்டும் பியரை உறுஞ்சினான். அரபியில் கெட்ட வார்த்தைகள் எனக்கும் புரியும் என்பதால்,

“அவளை ஏன் எப்போதும் வெறுப்பாகவே பார்க்கிறாய் ?”  என்றதும்,

“அவளைப்பார். பர்தா தான் போடவில்லை, இந்தளவு குட்டைப்பாவாடை தேவையா? இதெல்லாம் மார்க்கத்துக்கு விரோதமானது, உனக்குத் தெரியுமா?” என்றவனிடம்,

“நீ பியர் குடிப்பது கூட மார்க்கத்துக்கு விரோதமானது தான், அதுவும் காலங்காத்தாலேயே…”  நான் சொல்லி முடிக்க முதலே,

“எனக்குத் தெரியும். அவள் கணவனும் இறந்து விட்டான். உன்னோடுதான் நல்ல நெருக்கமாக இருக்கிறாள்.” என்றபடி பியரை உறுஞ்சினான். முட்டாள்களின் கடைசி ஆயுதம் அவதூறு என்பதால் அவர்களோடு  விவாதம் செய்வதை எப்போதுமே நான் விரும்பியதில்லை. லேசாய் புன்னகைத்தபடியே என் வேலையை தொடர்ந்தேன்.

சபீதாவை எனக்கு பல வருடங்களாகவே தெரியும்,நல்ல நண்பியும் கூட. மருத்துவ தாதி. அல்ஜீரிய தம்பதிகளுக்கு பிறந்த பிரெஞ்சுக்காரி. அவள் தோலின் பழுப்பு நிறத்திலும் பெயரிலும் மட்டுமே இன்னமும் அல்ஜீரியாவின் மிச்சம் சொச்சமாகவுள்ளது. ஒரு போத்துக்கல் நாட்டவனை திருமணம் செய்திருந்தாள்.  அவனும் நல்லவன்தான். ஆனால் போதைக்கு அடிமையாகி விட்டிருந்தான். போதையின் பழக்கத்தால் அவன் செய்து கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி ஓட்டும் வேலை பறிபோனது மட்டுமல்லாமல் சாரதி அனுமதிப்பத்திர உரிமையும் பறி போனதால்  வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாமல் போதையின் பாதையிலேயே போய்க்கொண்டிருந்தான். வீட்டில் தொடங்கிய அவர்களுக்குள்ளான சண்டை வீதிகளிலும் தொடரச் செய்தது. போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு கெஞ்சியபடியே, அவனும் திட்டிய படியே அவளும் போகும் காட்சிகளை அவ்வப்போது பார்க்கலாம். சில நேரம் கோபத்தில் பணத்தை எடுத்து வீதியில் எறிந்து விட்டு அழுதபடி அவள் போய்க்கொண்டிருக்க, அவனோ சிரித்தபடி அதை பொறுக்கிக்கொண்டு போவான். போதையேறியதும் கடற்கரையிலுள்ள அந்தோனியார் கோவில் வாசல் தான் அவனது இருப்பிடம். அங்கே வந்து படுத்துக் கொள்வான். அவள் வேலை முடிந்து போகும்போது அவனை அடித்து இழுத்துக்கொண்டு போவாள்.

‘எதுக்கு இவனோடு கிடந்தது மாரடிக்கிறாய் பேசாமல் துரத்தி விடேன்’ என்று நானே ஒரு தடவை அவளிடம் சொல்லியிருக்கிறேன்.

“உனக்குத் தெரியுமா, அவனிடமிருக்கும் இந்தப்பழக்கத்தை தவிர  மிக நல்லவன். ஜோய் மீதும் மிக அன்பாக இருக்கிறான். இன்னமும் அவனை காதலிக்கிறேன்.” என்று கண்கள் கலங்க அவள் சொன்னபோது,

’என்ன காதலோ… எனக்கு விளங்கவில்லை. சரி எதோ செய்’ என்று சொல்லி விட்டிருந்தேன். அதன் பிறகு அவனைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஜோய்க்கு ஒவ்வொரு நாளும் லாலிபாப் கொடுத்து முத்தம் வாங்குவதோடு  சரி. அது எப்படி தொடங்கியது என்றும் சொல்லி விடுகிறேன். அன்று அவன் பாடசாலை முதல் நாள் போகும் வழியில் சபீதா என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த லாலிபாப்பை  கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த நான், ஒன்றையெடுத்து அவன் கையில் கொடுக்கவும் அம்மாவை அண்ணாந்து பார்த்தான். ‘வாங்கிக்கொள்’ என்று அவளின் சம்மதம் கிடைத்ததுமே குனிந்து நீட்டிய என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தபடி வாங்கிக் கொண்டான். அவள் நீட்டிய அதுக்கான பணத்தை நான் வாங்கவில்லை. அன்றிலிருந்து இந்தப்பழக்கம் தொடங்கியது, நான் பணம் வாங்குவதில்லை என்பதால் வாரச்சந்தையில் ஏதாவது வாங்கி ஜோயின் கைகளில் கொடுத்து என்னிடம் சேர்ப்பித்து அவளும் கணக்கை தீர்த்துக்கொண்டிருந்தாள்.

அப்படியான குளிர்கால இரவொன்றில் வேலை முடிந்து ஜோயையும் அழைத்துக்கொண்டு போய் அந்தோனியார் கோவில் வாசலில் படுத்திருந்த கணவனை கோபமாய் அடித்து எழுப்பியிருக்கிறாள் அவன் அசையவில்லை. அவளின் அலறல் கேட்டு நானும் ஓடிப்போய் பார்த்தேன். அவன் அசையவேயில்லை. நோயாளர் காவு வண்டியொன்றில் அவனை ஏற்றி அனுப்பி விட்டிருந்தேன். அவன் இறந்துபோனது அவளுக்கு கவலையும் மகிழ்ச்சியுமில்லா ஒரு வெறுமைமையை கொடுத்திருந்தது. மனக்காயங்களுக்கு காலமே மிகப்பெரிய மருந்து என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல ஒரு வருடம்  ஓடியிருக்கும், சபீதாவையும் காலம் மாற்றி விட்டிருந்தது. வழமையான காலைப்பொழுதொன்றில் பியரை ராபிக் உறிஞ்சிக்கொண்டிருக்க, ஓடி வந்த ஜோய்க்கு லாலிபொப்பை  எடுத்துக் கொடுத்து அவனின் முத்தத்தை வாங்கிவிட்டு நிமிர்ந்தேன். பின்னால்  இன்னொருவனோடு வந்துகொண்டிருந்த சபீதா, அருகில் வந்ததும் ‘இவன் பெயர் அலெக்ஸ். என் காதலன்’ என்று வெட்கம் கலந்த புன்னகையோடு அறிமுகப் அறிமுகப் படுத்தியதும் கிளாஸ் உடைந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ராபீக்கின் பியர் கிளாஸ் உடைந்து கிடக்க, ‘கை தவறி விட்டது மன்னித்துக்கொள்.என்றான்’. சபீதாவின் புதிய காதல் கேள்விப்பட்ட கோபத்தில் உடைத்திருப்பானென்று எனக்குத் தெரியும். ‘சரி பரவாயில்லை என்றபடி’, அலெக்சிடம் என்னை சபீதா அறிமுகம் செய்ததும் ஒரு புன்னைகையோடு வணக்கம் சொல்லி விட்டு, உடைந்த கிளாஸ் துண்டுகளை ஒரு தட்டில் துணியால் வழித்துப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, லாலிபாப்பை வாயில் வைத்திருந்த ஜோயின் தலையை தடவியபடி, ‘உனக்கு மிகவும் பிடிக்குமா?’ என்று சிரித்தபடியே அலெக்ஸ் பணத்தை எடுத்து நீட்டினான். அந்தச் சிரிப்பும் பணத்தை நீட்டிய விதமும் எனக்கு எதோ உறுத்தலாகவே இருக்க சபீதாவை பார்த்தேன். அவள் சங்கடத்தால் நெளிந்தபடியே,

“இல்லை…… அவன்பணமெல்லாம் வாங்க மாட்டான்” என்றாள்.

“இதுவரை  எப்படியோ ஆனால் இனிமேல் பணம் கொடுத்து விடு.” என்றபடியே மேசையில் பணத்தை வைத்து விட்டு,  இன்னொரு லாலிபாப்பை எடுத்து உரித்து தன் வாயில் வைத்தவன், ‘போகாலாம்’ என்றான். முதல் சந்திப்பே அவனோடு எனக்கு ஒட்டவில்லை .போய்க் கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது தூரம் போயிருந்த சபீதாதிரும்பிப் பார்த்தாள். அவள்  கண்ணில் கெஞ்சல் தெரிந்தது.

வழித்தெடுத்த கிளாஸ் துண்டுகளை குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பியரை கொண்டுபோய் ரபீக்கின் முன்னால் வைத்ததும்,

“பார்த்தியா ..பார்த்தியா……..முதல்ல போத்துக்கல் காரன், இப்போ பிரெஞ்சுக் காரன். அதுவும் திமிர் பிடிச்சவன். இப்போ கூட அவளுக்கு என்னை கண்ணுல தெரியேல்லை, ஒரு வணக்கம் கூட இல்லை”. என்று பியரை உறுஞ்சினான் ராபிக்.

“உனக்குத்தான்  ஊரில் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களே! பிறகெதுக்கு புலம்புறாய் ..?”

“அது ஊரில ..இங்க நான் தனியாத்தானே இருக்கிறேன். இரண்டாவது சந்தர்ப்பத்தை எனக்குத் தந்திருக்கலாமே….?

“உன்னை மாதிரி சந்தர்ப்பத்துக்கு அலையிறவனுகள் தான் கலாசார காவலர்கள்” என்று விட்டு என் வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டிருந்தேன் .

அதன் பின்னர் ஓடி வரும் ஜோய்க்கு லாலிபாப் கொடுக்கும்போதெல்லாம் பின்னல் சபீதாவோடு வரும் அலெக்ஸ் பணம் கொடுப்பதும் அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் அதை நான்  வாங்குவதும் ராபிக் கிளாசை உடைப்பதுமாக போய்க்கொண்டிருந்தது.

நீண்ட காலத்துக்கு பின் சபீதா மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. வழமை போல அன்று வந்தவள், ‘வேலையிடத்தில் ஒரு பயிற்சி முகாமுக்காக வேறொரு நகரத்துக்கு மூன்று நாட்கள் போகவேண்டியிருக்கு. ஜோய் வழமை போல அலெக்ஸ்சோடு வருவான்’ என்கிற தகவலை சொன்னதும் கூடவேயிருந்து என்னைப் பார்த்து சிரித்த அலெக்சின்  மூஞ்சையில் குத்த வேணும் போலவேயிருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டேன். கிளாஸ் உடையும் சத்தம் கேட்டது.

அடுத்த நாள் நகரின் மத்தியூடாக சென்று கொண்டிருந்தபோது புகையிரத நிலையத்துக்கு முன்னாலிருந்த பாலியல் பொருட்கள் விற்கும் sex shop னுள் அலெக்ஸ் நுழைவதை கவனித்தேன். சாபீதா ஊரில் இல்லை இவன் எதுக்கு இங்கே போறான் என்று யோசித்தாலும் சரி எனக்கெதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி என்று கடந்து போய் விட்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஓடி விட்டிருந்தது. அன்று காலையும் வழமை போல தேநீரை எடுத்துக்கொண்டு வந்து டி வியை போட்டேன். பரந்து கிடந்த புல் வெளியில் மான் கூட்டமொன்று மேய்ந்து கொண்டிருக்க, கூட்டத்தில்  மேய்ந்து கொண்டிருந்த மானொன்றில் குட்டியொன்று பால் குடித்துக்கொண்டிருந்தது. அடுத்த கோணத்தில் மரத்தில் சில குரங்குகள் காய், பழம் என்று சப்பித் துப்பிக் கொண்டிருக்க, அப்பிடியே கமெரா வேறு பக்கம் திரும்பியது. உற்றுப் பார்த்தபோதுதான் ஒரு சிறுத்தை தரையோடு தரையாக பதுங்கியிருந்தது தெரிந்தது. நான் உசாராகி விட்டிருந்தேன். அது பதுங்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்பும் லேசாக அதிகரிக்கத் தொடக்கி விட்டிருந்தது. அது  பால் கொடுத்துக்கொண்டிருந்த மானை  நெருங்கி விட்டது. இனி ஒரே பாச்சல் தான். என் மனம்  ‘பாய் ..பாய் …’ என்று சொல்லிக் கொண்டிருக்க,  மரத்திலிருந்த குரங்குகள் சிறுத்தையை கவனித்து விட்டு சத்தம் போட்ட படி பாய்ந்து ஓடத் தொடங்க, மான் கூட்டமும் சிதறி ஓடத் தொடங்கியது. ‘ச்சே ..சனியன் பிடிச்ச குரங்கு.’ மேசையில் ஓங்கியடித்து விட்டு தொடர்ந்து கவனித்தேன். குட்டி மான் ஓடாமல் அங்கேயே நின்றபடி சுற்றிவர பார்த்துக் கொண்டு நின்றது. துரத்தில் நின்று தாய் மான் குட்டியை பார்த்து தவித்துக்கொண்டிருந்தது. இப்போ கமெரா சிறுத்தை, மான் குட்டி, தாய் மான் என்று மூன்றையும் மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தது. இப்போ எனக்குள் இருந்த வெறி அடங்கி குட்டி மான் மீது பரிதாபம் வரத் தொடங்கியிருந்தது. எப்படியும் சிறுத்தை அதைக் கொன்று விடும் என்று நினைத்து அதை பார்க்க விருப்பமில்லாமல் டிவியை நிறுத்த ரிமோட்டை எடுத்தேன். குட்டியருகே போன சிறுத்தை, அதை ஒரு வலம் வந்து விட்டு மணந்து பார்த்து அதன் நெற்றியில் ஒரு தடவை நக்கி விட்டு வந்த வழியே போய்க்கொண்டிருந்தது. மிருகத்துக்குள்ளும் இரக்கம் இருக்குமா என்று எனக்குள் ஒரே ஆச்சரியம்.

வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன், சபீதா வீட்டை  கடக்கும் போது வரிசையாக காவல்துறை வாகனமும் தீயணைப்பு வண்டிகளும் நின்றிருக்க வண்டியை ஓரம் கட்டினேன். அருகில் போக முடியாதவாறு போலீசார் தடுப்பு போட்டிருந்தார்கள். பிணப்பையில் பொதி செய்யப்பட்ட உடலொன்றை காவுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக சபீதாவின் போனுக்கு அழைத்தேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த போலிஸ்காரரிடம், ‘என்னாச்சு’ என்றதும், விறைப்பாக ‘ஒரு வன்முறை இடத்தை விட்டு நகருங்கள்’ என்றார். அதுவரை அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி மெதுவான குரலில்  இந்த குடியிருப்பில் ஒரு நர்ஸ் இருக்கிறாள். எங்கேயோ போய் விட்டு இன்று காலையில் தான் வந்தவள். தன் காதலனை கொலை செய்து விட்டாளாம். ஏனென்று தெரியவில்லை என்றாள். அப்போ விலங்கிடப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட  சபீதா என்னை கவனித்திருக்க வேண்டும். தலையை குனிந்த நிலையிலேயே காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்ள, பின்னாலேயே பெண் போலிஸ் ஒருவர் ஜோயை அணைத்தபடி அழைத்துக்கொண்டு வந்து இன்னொரு வாகனத்தில் ஏற்றினார். அவன் வாயில் லாலி பாப் …….

நேர்காணல்

3:57 PM, Posted by sathiri, No Comment

சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார்.
போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம்
எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்டும்.. அதுவேளை வெறும் கற்பனைகளிலும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளிலும் தொடர்ந்தும் இருந்து விட முடியாது என்று சொல்லும் சாத்திரிக்கு தமிழ்ச் சூழலில் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு.
இதனால் சாத்திரியின் எழுத்துகள் கடும் சர்ச்சைகளை உண்டு பண்ணி வருகின்றன. ஆனாலும் அவர் பின்வாங்கவேயில்லை. அண்மையில் (2015 ஜனவரியில்) தான் எழுதிய “ஆயுத எழுத்து“ என்ற புதிய நாவல் ஒன்றைச் சாத்திரி சென்னையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு நிகழ்வே பல எதிர்ப்புகளின் மத்தியில்தான் நடந்தது. இந்த வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த சாத்திரியிடம் பேசினேன்.
- கருணாகரன்
——————————————————————————————————————————————————————————————————————-
1-உங்களுடைய நாவல் ஆயுத எழுத்தை சென்னையில் வெளியீடு செய்வதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு அமைப்பினர் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில் சேப்பாக்கத்தில் காவல்துறையினரின் பாதுகாப்போடு நிகழ்வு நடந்ததை பார்த்தேன் .இந்த நாவலை எதிர்க்கும் அளவுக்கு என்ன முக்கியமான விடயங்கள் என்ன இதில் உண்டு ? யார் எதிர்க்கிறார்கள்?
இந்த நாவலை நான் எழுதி வெளியிட தீர்மானித்த போதே அதுக்கான எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்த்ததுதான். பொதுவாகவே விமர்சனம் என்கிற ஒன்றை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாதபெரும்பாலானவர்களை கொண்ட ஒரு சமூகமாகத்தான் தமிழ் சமூகம் உள்ளது.தவறுகளை தட்டிக் கேட்காமலும் அதை மழுப்பி மறைத்து விட பழக்கப் பட்டவர்களாகவே நாம் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளோம்.இந்த மன உணர்வு தான் எனது நாவலையும் எதிர்க்கத் தூண்டி யிருக்கலாம்.
காரணம் முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தில் நடந்த சில தவறான சம்பவங்களை – தவறான விடயங்களை – எனது நாவலில் பதிவு செய்துள்ளேன் . அந்தச் சம்பவங்கள் – அந்த விடயங்கள் – வெளியே வந்துவிடக் கூடாது அவைகளை மீள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதில் தமிழகத்தை சேர்ந்த தீவிர தமிழ் தேசிய வாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலர் முனைப்புடன் செயற்படுகின்றனர் .அவர்களே எனது நாவல் வெளியீட்டையும் தடுக்க முயன்றனர்.ஆனால் நான் வெளியீட்டு மண்டபத்துக்கு செல்லுமுன்னரே தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு எந்த அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்தியதோடு நிகழ்வு எந்தவித இடையூ றும் இன்றி நடக்க உதவினார்கள் .
2 – வெளியீட்டில் கலந்து கொள்வதாகத் தெரிவித்திருந்த பேச்சாளர்கள், திரைப்பட இயக்குனர் வீ.சேகரும் திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழியும் பங்கெடுக்காது விட்டதன் காரணம் என்ன?
வீ . சேகர் நிகழ்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் என்னோடு சில விடயங்கள் தனியாக பேசவேண்டும் என வீட்டிற்கு அழைத்திருந்தார்.அவரது வீடிற்கு சென்றிருந்தேன். எனது நாவல் வெளியீட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என பழ .நெடுமாறனும் இயக்குனர் கௌதமனும் அழுத்தம் தருவதாகவும் தான் நாவலை முழுமையாக படித்துவிட்டேன் அதில் தனக்கு சங்கடமான விடயங்கள் எதுவும் இல்லை ஆனால் நாவலை படிக்காமலேயே இவர்கள் ஏன் அப்படியொரு அழுத்தத்தினை தன்மீது பிரயோகிக்கின்றார்கள் என்று புரியவில்லை என்று கூறியவர், தான் இப்போ இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாலும் திரைத்துறையில் அடிவாங்கி நீண்ட காலமாக எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு இப்போதான் தனது மகனை வைத்து ஒரு படம் பண்ணிக்கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் யாரையும் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. தனது நிலையை புரிந்துகொள்ளுமாறு என் கைகளை பிடித்து கேட்டுக் கொண்டார்.சுமார் இரண்டு மணிநேரம் அவரோடு பேசிய பின்னர் அவரது நிலை புரிந்தது. நிகழ்வுக்கு அவர் வராது விடுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.அதன்பின்னர் எனது நிகழ்வை வீ.சேகர் புறக்கணித்தார் என்றொரு அறிக்கையை இயக்குனர் கௌதமன் வெளியிட்டதாக புலம்பெயர் தேசத்து இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது .
அடுத்ததாக அருள்மொழி அவர்கள் தான் கலந்து கொள்ளாத காரணத்தை தனது முகப்புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்ன காரணம் என்னவெனில் எனது நிகழ்வில் பங்கெடுக்க சம்மதம் தெரிவித்திருந்தாலும் அதில் பங்கெடுக்கும் மற்றவர்கள் பெயர்களை அழைப்பிதழில் சரியாக கவனிக்கவில்லை என்றும் நிகழ்வுக்கு கேர்னல் ஹரிகரன் வருவதால் ஒரு இந்திய இராணுவ அதிகாரியோடு ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வது தனது கட்சி சார்ந்து பல சர்ச்சைகளை கிளப்பும்.அவற்றை தவிர்க்கவே நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.இது தவிர தனக்கு வேறு அழுத்தங்களோ பிரச்சனைகளோ இல்லை என்று தெரிவித்திருந்தார் .இதுதான் நடந்தவை.
3 -புத்தக கண்காட்சியில் ஆயுத எழுத்தை விற்பனை செய்யக் கூடாது என்று சிலர் புத்தக கடைகளில் வந்து விற்பனையாளர்களை அச்சுறுத்தியிருந்தார்கள் .இது பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டதைப்போல கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று நீங்கள் எதிர்ப்புக்காட்டமல் விட்டது ஏன்?
சென்னை புத்தக கண்காட்சியில் எனது நாவலை சுமார் பதின்மூன்று கடைகளில் விற்பனைக்காக கொடுத்திருந்தேன்.அதில் நான்கு கடைகளில் மட்டுமே சிலர் வந்து மிரட்டிவிட்டுப் போயிருந்தனர் .மிரட்டப்பட்டவர்கள் புத்தகங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தார்கள்.ஆனால் பெருமாள்முருகனுக்கு நடந்த அளவுக்கு எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருக்கவில்லை என்பது மட்டுமல்லாது இது போன்ற பல பூசாண்டி விளையாட்டுக்கள் எனக்கு பழகிப்போன ஒன்று என்பதால் நான் சிறு பிள்ளைத்தனமான இந்த செயல்களை கண்டுகொள்ளவில்லை .
4 -ஆயுத எழுத்து நாவலை புலம்பெயர் தமிழர்கள் சிலரும் எதிர்க்கிறார்கள்.இந்த எதிர்ப்பின் அடிப்படை என்ன ? இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் ?
இங்கு எனது நாவலை எதிர்க்கும் புலம் பெயர் தமிழர் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.391 பக்கங்களை கொண்ட ஒரு நாவலின் அட்டைப் படத்தினை மட்டும் இணையத்தில் பார்த்துவிட்டு அதன் உள்ளே என்ன எழுதப்பட்டிருகின்றது என்பதை தீர்மானிக்கும் தீர்க்கதரிசிகளாக அவர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் தூரநோக்கு சிந்தனைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .இவர்களின் எதிர்ப்பினை சமாளிக்க ஐ.நா சபைக்கு நடந்துபோய் ஒரு மனு கொடுக்கலாமா என யோசிக்கவ முடியும்?
5-புலிகள் அமைப்பில் செயல்பட்ட நீங்கள் அந்த அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் இப்படியான விமர்சனங்களை முன் வைப்பது நல்லதல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது.இது தொடர்பாக உங்கள் பதில் என்ன?
ஆம் , இது போன்ற கருத்தினை முன் வைப்பவர்கள் யார் என்று பார்த்தால் தமிழகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்ந்துகொண்டு தலைவர் வருவார் தமிழீழம் வாங்கி வருவார் அல்லது இணையத்தில் ஈழம் பிடிக்கலாம் என்கிற கற்பனையில் வாழும் சிலரே புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் இயக்கம் மீது விமர்சனம் வைக்க வேண்டாம் என்கின்றனர் .2009 ம் ஆண்டுக்கு பின்னர் புலிகள் அமைப்பின் இறுதிக்கால செயற்பாடுகளை விமர்சிக்கும் படைப்புகள் அல்லது கட்டுரைகளை எழுதிய .நிலாந்தன் , கருணாகரன், தமிழ்க்கவி ,யோ.கர்ணன் போன்றவர்கள் மீதும் இதே கருத்து வைக்கப் பட்டது மட்டுமல்லாது அவர்களை துரோகிகள் பட்டியலில் இணைத்து அவதூறுகளும் அள்ளி வீசப்பட்டது.அதேதான் எனக்கும் நடக்கின்றது.
ஆனால் புலிகள் இல்லாத காலத்தில் தான் நான் அவர்கள்மீது விமர்சனம் வைக்கிறேன் என்பது தவறு.புலிகள் இருந்தபோதும் அமைப்பில் இருந்தபடியே உள்ளே நான் விமர்சனங்களை வைத்திருக்கிறேன் .எனது விமர்சனம் என்பது பிரபாகரன் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மேலும் பல விடயங்களை நாவலில் பதிவு செய்துள்ளேன். அப்போது ஒரு கட்டமைப்பு இருந்தது. நிருவாக பிரிவுகள் அதற்கான பொறுப்பாளர்கள் இருந்தார்கள். ஆகவே எனது விமர்சனங்கள் கருத்துக்களை நேரடியாக பிரபகரனிடமோ அல்லது நிருவாக பொறுப்பாளரிடமோ தெரிவித்து அதற்கான தீர்வுகளும் கண்டிருக்கிறேன் .ஆனால் இன்று புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இல்லாது போய் விட்டபின்னர் விமர்சனங்களை பொதுவெளியில் மட்டுமே வைக்க முடியும்.ஏனெனில் இப்போ புலிகளின் பிரதிநிதி என்று யாரும் இல்லை.
6. நீங்களும் பிறரைக் கடுமையான முறையில்தானே விமர்சிக்கிறீர்கள். விமர்சனத்துக்கு அப்பாலான முறையில் தனிநபர் மீதான தாக்குதல்களில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அதைப்போல ஒரு காலத்தில் நீங்களும் மாற்றுக்கருத்தாளர்களை மதிக்காமல் நடந்தவர் என்ற அபிப்பிராயமும் உள்ளதே?
விமர்சனம் என்றால் அது கடுமையாகத்தான் இருக்கும்.அப்படி இருந்தால்தான் அது விமர்சனம் ஆகும்.கடுமை இல்லையேல் தடவிக்கொடுதல் ஆகிவிடும்.அடுத்தது தனி நபர் தாக்குதலில் ஈடுபடிருந்தேன் என்பது உண்மைதான்.அதனை நான் மறுக்கவில்லை.அதற்கு பின்னாலான காரண காரியங்களும் இருந்திருக்கின்றது. அவற்றையெல்லாம் சொல்லி என்னை நான் நியாயப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.காரணம் அன்று பாடப் புத்தகங்களை தூக்கி வீசி விட்டு ஒரு நோக்கத்துக்காக துப்பாக்கிகளை சுமந்தபடி இடையில் எதிரே வரும் எதையும் பற்றிக் கவலைப்படாமல் தட்டித் தள்ளி விட்டபடி விவேகமற்ற வேகத்தோடு இலட்சியத்தை மட்டும் இலக்காக வைத்து நடந்து கொண்டிருந்தோம்.
அதிலிருந்து அப்படியே எழுத்துக்கு வந்த நானும் கையில் துப்பாக்கியோடு நடக்கின்றதைப்போலவே எதைப்பற்றியும் கவலைப்படாதவனாய் பத்திரிகை ,சஞ்சிகை எனப் பொது வெளியில் எழுதிக்கொண்டிருந்தேன்.இலக்கை நோக்கி நடக்கும்போது இடையில் தடக்குப்படுபவை எல்லாம் ஒரு பொருட்டு அல்ல என்பதே எனது நினைப்பாக இருந்தது.இலக்கு சூனியமாகிவிட்ட பின்னர் அந்த சூனிய வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும்போது வலிக்கத்தான் செய்கிறது.எமது தோல்விக்கு இவைகளும் ஒரு காரணமோ என எண்ணி எல்லாவற்றையும் மறு பரிசீலனை செய்யத் தோன்றுகிறது.ஒரு வேளை இலக்கை அடைந்திருந்தால் இந்த வலி இல்லாது போயிருந்திருக்கும்.
அடுத்ததாக மாற்றுக் கருத்தாளர்களை நான் மதிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முன்பு ஒரு விடயம் என்னைப்பொறுத்தவரை மாற்றுக் கருத்தாளர் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருத்தாளர்கள் தான்.பலரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களோடு உரையாடுவதிலும் நட்பு பாராட்டுவதிலும் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் ஐரோப்பவில் ஒரு சிலர் தங்களை தாங்களே மாற்றுக் கருத்தாளர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு தங்களுக்கென எந்தவித அரசியலோ நோக்கமோ இலக்கோ எதுவுமின்றி எல்லாக்காலத்திலும் எல்லா இடத்திலும் தங்களை முன்னிலைப் படுத்துவதே நோக்கமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள்.எதுக்கும் யாருக்குமே பிரயோசனமற்று வெறும் கருத்துக் கந்தசாமிகளாக வாழும் சிலரை நான் மதிக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே கருதுகிறேன் .
7-இந்த நாவலில் சொல்லப்படும் விடயங்களும் அதில் வரும் பெயர்களும் உண்மையானவைகளாக இருக்கின்றது.இப்படி நீங்கள் உண்மை சம்பவங்களை பதிவுசெய்து விட்டு அதனை ஒரு புனைவு என்று எப்படி சொல்லமுடியும்?
உங்கள் கேள்வி நியாயமானதுதான் ஈழத்தின் போரியல் நாவல்கள் எல்லாமே அனேகமாக உண்மைச்சம்பவங்களின் பதிவுகளாகத்தான் வெளிவந்துள்ளது.அண்மையில் வெளியான தமிழ்க்கவியின் ஊழிக்காலம் .யோ கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள்,குணா கவியழகனின் நண்சுண்டகாடு என்பனவும் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பை சிறிது புனைவு கலந்து நாவல் வடிவில் கொடுத்துள்ளனர் .எனது ஆயுத எழுத்தும் அதேபோன்று சிறிது புனைவுகள் ஊடாக பல உண்மைச்சம்பவங்களை பதிவுசெய்துள்ளது.முழுக்க முழுக்க உண்மைச்சம்பவங்களின் தொகுப்பாக வெளிவந்தால் அது ஒரு ஆவணமாக மாறிவிடுவதோடு நாம் சொல்லவந்த விடயம் பலரையும் சென்றடையாது போய்விடும்.அடுத்ததாக அது சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்பதால் உண்மைச்சம்பவங்கள் நாவல் வடிவில் எழுதப்படுவது தேவையாக இருக்கின்றது.
8-ஆயுத எழுத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் பற்றிய விபரங்களை பதிவாக்கியிருக்கியிருக்கிறீர்கள் இதனை உங்கள் சாட்சியமாக கொள்ளமுடியுமா ?அல்லது உங்கள் தரப்பில் இருந்து சொல்லப் படும் நியாயமாக கொள்ளமுடியுமா ?
எனது சாட்சியமாகவும் எனது தரப்பு நியாயமாகவும் இரண்டு வகையிலும் எடுத்துக் கொள்ளலாம் .
9 -அடுத்ததாக எதாவது நாவல் எழுதும் திட்டம் ஏதும் உள்ளதா?
நிச்சயமாக.. .என்னுடைய அனுபவங்களில் ஏறக்குறைய நாற்பது சதவிகிதம் மட்டுமே இந் நூலில் பதிவு பெற்றுள்ளது. .ஆயுத எழுத்து நாவலில் விடுபட்டுப்போன பல விடயங்கள் உள்ளது அவற்றை வைத்து அடுத்த நாவலை விரைவில் எழுதுவேன். எதிர்ப்புகள் தீவிரமாக செயற்பட வைக்கின்றன..
10 -சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்துப் படைப்புகள், புலம்பெயர் தமிழர் படைப்புகள் பற்றி உங்கள் பார்வை என்ன?
இந்தத் தடவையும் சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்து மற்றும் புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்கள் நிறையவே வந்திருந்தது மகிழ்ச்சி.ஆனால் தங்கள் படைப்புக்களை சந்தைப்படுத்தும் விடயத்தில் சிலரே வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு நாவல் சந்தைப்படுத்தலில் வெற்றி பெற்று பலரது கைகளையும் அது சென்றடையும் போது தான் அந்த படைப்பே வெற்றி பெறுகிறது.இல்லாவிட்டால் நானும் ஒரு நாவல் எழுதினேன் என்கிற நின்மதியோடு அந்தப் படைப்பாளி காணமல் போய் விடுவான் .எனது நாவல் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் கண்ணாக இருக்கிறேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்.
11-நாவல் தவிர்ந்த எழுத்துகளிலும் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். ஆயுத எழுத்தைப்போல அந்தக் கதைகளிலும் உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்ட விடயங்கள் பேசப்படுகின்றன. இவையெல்லாவற்றுக்கும் மறுப்பாக – எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன. இதில் எது உண்மை என்று எப்படி வாசகர்கள் தீர்மானிப்பது ?
இங்கு ஒரு விடயத்தினை சொல்ல விரும்புகிறேன் நான் எனது எழுத்துக்களால் இந்த உலகத்தையோ சமூகத்தையோ திருத்தவந்த மகான் அல்ல.எனக்கு தெரிந்த பார்த்த பல சம்பவங்களை புனைவுகளோடு பதிவாக்குகிறேன்.எனது படைப்புகள் பொது வெளிக்கு வந்தபின்னர் அது எனக்கு சொந்தமானது அல்ல.அதைப் படிப்பவர்கள் எதிக்கலாம் .மறுக்கலாம்.பாராட்டலாம் அது அவரவர் விருப்பம்.ஒரு வாசகன் எனது படைப்பை எப்படி தீர்மானிக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிக்க முடியாது .
12-தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை எப்படி உருவாக்கமுடியும் ? விமர்சனம் என்ற பெயரில் நடக்கின்ற அவதூறுகளை நாம் அனுமதிக்க முடியாது என்று ஒரு தரப்பினர் சொல்வதில் நியாயம் இல்லை என்கிறீர்களா ? அவர்களுடைய நியாயத்தை எப்படி மறுக்கிறீர்கள் ?
தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை உருவாக்கத் தேவையில்லை.அளவில் குறைவானதாக இருந்தாலும் ஒரு நாகரிகமான விமர்சன சூழல் கடந்த தலைமுறைவரை நல்லதொரு நிலையிலேயேஇருந்திருக்கின்றது.ஆனாலும் விமர்சனமே தேவையில்லை அல்லது விமர்சனம் வைக்கவே கூடாது என்கிறவர்களையும்.விமர்சனம் என்கிற பெயரில் விசமங்களை வைக்கும் பெரும்பான்மையை கொண்ட சமூகமாகத்தான் எமது சமூகம் இருக்கின்றது.இதற்கு வளர்ந்துவிட்ட தகவல்தொழில்நுட்பமும் சமூகவலைத்தளங்களும் பெரிதும் துணையாக இருக்கின்றது.அவதூறுகளை அனுமதிக்க முடியாதுதான். ஆனால் முகமூடிகள் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் அவதூறுகளுக்கெல்லாம் நின்று நிதானித்து பதில் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயமாகவே நான் கருதுகிறேன்.இவைகளுக்கெல்லாம் பேசாமல் கடந்துபோவதே புத்திசாலித்தனம் என நினைக்கிறன் .
13-உங்கள் எழுத்துகளை புலிகள் அமைப்பில் செயற்பட்ட ஒரு போராளியின் சாட்சியங்கள் என்று கொள்ளப்படுவதா ? அல்லது புலிகளை எதிர்க்கும் ஒருவருடைய விமர்சனங்கள் என்று பார்க்கப்பட வேண்டுமா ? அல்லது ஒரு வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க முனையும் படைப்பாளியின் மனவெளிப்பாடுகள் என்று கவனிக்க வேண்டுமா ? அல்லது ஈழவிடுதலைப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கும் தோல்விக்கும் காரணமான விடயங்களை மீள்பார்வைக்குட்படுத்தும் ஒருவனின் செயல்கள் என்று கொள்ள வேண்டுமா ?
இந்தக்கேள்விக்கான பதில் ஏற்கனவே சொன்னதுதான். என்னை புலி என்பார்கள்.. நான் புலியில்லை என்பார்கள் . என்னை எழுத்தாளன் என்பார்கள் , இன்னும் சிலர் விமர்சன எழுத்து என்பார்கள். எனக்குத் தெரிந்தது நான் எழுதுகிறேன் படிப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
14-உங்கள் நாவலில் மற்ற இயக்கங்களை நீங்கள் சித்தரிக்கும் பார்வையில் அந்த இயக்கங்களை சார்ந்தவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாததல்லவா?
யார் வேண்டுமானாலும் எந்த இயக்கத்தை சேர்ந்தவரானாலும் தாரளமாகத் தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். இனிமேலும் விமர்சனங்களை வைக்கக்கூடாது என்றோ அல்லது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற சமூகமாகவோ நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது.விமர்சனங்களை வைக்காமல் எனக்கேன் வம்பு என்று பலர் ஒதுங்கிப் போனதும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டதும் எமது தோல்விகளுக்கு ஒரு காரணம் என்று கருதுகிறேன் .
ஆனால் இந்த நாவலை படித்த இரண்டு பேர் எனக்கு வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்தார்கள்.ஒருவர் ரெலோ அமைப்பு போராளி.சுவிஸ் நாட்டில் வசிக்கும் அவர் தொடர்புகொண்டு என்னிடம் சொன்னது என்னவெனில் சிறிசபாரத்தினத்தின் இறுதிக்கண ங்களை தங்கள் அமைப்பைச் சேர்ந்த எவருமே இதுவரை பதிவு செய்திருக்கவில்லை. அதனைப் பதிவாக்கியதுக்கு நன்றி என்றார். இன்னொருவர் தமிழகத்தில் வசிக்கும் ஈ .பி .ஆர் .எல் .எப் . நண்பர். எனது நாவலில் ஈ .பி .ஆர். எல் .எப் பற்றிய பகுதி வரும்போது ஒரு புலிப்போராளி பொறுப்பாளரிடம் போய் ஈ .பி அமைப்பை எப்போ தடை செய்யப்போகிறோம் எனக் கேட்பார். அதற்குப் பொறுப்பாளர் சும்மா இருக்கிற பல்லியை அடித்து பாவத்தை தேடக் கூடாது. கொஞ்சநாள் பொறுப்போம் என்று சொல்வார் . அந்த வசனத்தைச் சுட்டிக் காட்டிய நண்பர் சிரித்தபடியே உங்களுக்கெல்லாம் அந்த நேரம் எங்களைப் பார்த்தால் பல்லி போலவா இருந்தது? என்று கேட்டார் .
முழுக்க முழுக்க ஆயுத பாணிகளாக இருந்த புலிகள் அமைப்பு பெரும் பலத்தோடு இருந்த ரெலோ அமைப்பை அழித்து முடித்த இறுமாப்பில் இருந்த நேரம் பெருமளவு ஆயுதங்கள் இல்லாதிருந்த மற்றைய இயக்கங்கள் எல்லாமே அவர்களுக்கு பல்லிதான். இது புலிகள் அமைப்பில் இருந்த ஒவ்வொருவரினதும் மனநிலையாக இருந்தது. அது தவிர்க்க முடியததாகவும் இருந்தது என்பதே எனது பதில். இதுவரை இப்படியான கருத்துக்கள்தான் வந்திருக்கிறது. இனிவரும் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் வரலாம் .வரவேண்டும்.
15-நீங்கள் எழுதுகின்ற போது, பெண்களை உடல்சார்ந்து அதிகமாக எழுதுகிறீர்களே. இதுவொரு கண்டனத்திற்குரிய பார்வை இல்லையா?
இங்கு ஒரு விடயத்தினை குறிப்பிட விரும்புகிறேன். நான் முற்றும் துறந்த முனிவனோ உணர்வுகள் அற்றுப்போன சடமோ அல்ல. அதே நேரம் ஊருக்காக ரொம்ப நல்லவன் வேடம் போடவேண்டிய தேவையும் எனக்கில்லை. நான் இயற்கையாகவே இருக்க விரும்புகிறேன். என்னைப்பொறுத்தவரை . ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு அழகு உள்ளது. அதை நான் ரசிக்கிறேன். அதை அப்படியே எழுதுகிறேன். அவ்வளவுதான். அப்படி ரசிக்காவிட்டால், எழுதாவிட்டால் நான் நல்லவன் என்று அர்த்தம் கிடையாது. என்னில் எதோ குறைபாடு உள்ளது என்றுதான் அர்த்தம் .
பாலியல் வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், பிள்ளைவரம் வேண்டி கோவிலுக்கும் சாமியர்களிடமும் போகும் அறிவியல் அற்ற, நேர்மையற்ற, ஒழுக்கமற்ற பெரும்பான்மையினரை கொண்ட சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம் .. அதேநேரம் பழைய இலக்கியங்களில் எழுதிவிடாத எதையும் நான் புதிதாக எழுதவில்லை. அவைகளோடு ஒப்பிடும்போது நான் எழுதுபவைகள் ஒன்றுமே அதிகப்படியானவை இல்லை.
16-விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்படாது இருந்தால் இந் நேரம் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருப்பீர்கள்? இப்படியான எழுத்துக்களை எழுதி இருப்பது சாத்தியமா?
விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது போன பின்னர் நான் எழுதவரவில்லை. அதற்கு முன்பிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். விடுதலைப் புலிகள் இருந்தாலும் தமிழீழம் கிடைத்திருந்தலும் எழுதிக்கொண்டுதான் இருந்திருப்பேன். நான் முன்னரே சொன்னதுபோல புலிகள் அமைப்பின் குறைகளையும் விமர்சனங்களையும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வைத்துவிட்டு எனக்கு சரியென்று பட்டதை எழுதிக்கொண்டிருப்பேன் .
17-பிரான்ஸில் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள் நிறையப்பேர் உள்ளனர். அதற்கேற்ற மாதிரி பல நிலைப்பாடுகளும் அணிகளும் உள்ளன. கி.பி. அரவிந்தன், ஷோபாசக்தி தொடக்கம் இன்றைய ஆக்காட்டி அணியினர் வரையில். இலக்கியத்தில் இவர்களின் முக்கியத்தும், ஐக்கியம், செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்.
வாசிப்புத் தன்மையை அதிகமாக கொண்ட நாடக பிரான்ஸ் இன்னமும் இருக்கின்றது. நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும்பாலானவர்கள் கணணிக்குள்ளும் கைத்தொலைபேசிக்குள்ளும் தொலைந்து போய்க்கொண்டிருக்கும் காலகட்டத்திலும் பயணங்களின்போதும் பூங்காக்களிலும் இன்னமும் கையில் சஞ்சிகையோ புத்தகமோ படிப்பவர்களைப் பெரும்பாலாக இங்கு காணமுடியும். அதே பழக்கம் தமிழர்களிடமும் இங்கு இருப்பது மகிழ்ச்சியான விடயம் .ஆனால் தமிழ்ப்படைப்பாளிகள் பெரும்பாலும் தனித் தனித் தீவுகளாகவே பிரிந்து கிடக்கிறார்கள் ஒரு பொதுநிகழ்வில் கூட பலரை ஒன்றாக பார்க்கமுடியாது என்பது மட்டுமல்ல மறைந்துவிட்ட ஒரு படைப்பாளியின் அஞ்சலி நிகழ்வு கூட பல பிரிவுகளாக நடாத்தப்படும் நிலைதான் இங்குள்ளது.
அடுத்ததாக இரண்டு பெயர்களை நீங்கள் நேரடியாக குறிப்பிட்டு கேட்டதால் அவர்கள் பற்றியும் சொல்லி விடுகிறேன் .கி .பி . அரவிந்தன் அவரது தனிப்பட்ட சில காரணங்களால் எழுத்துலகில் இருந்தும் பொதுவெளியில் இருந்தும் ஒதுங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்தது ஷோபாசக்தி. இவர் நல்லதொரு கதைசொல்லி. அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு குழப்பவாதி. தன்னுடையது மட்டுமே எழுத்துக்கள் , மற்றயவை எல்லாம் கழிவறைச் சுவரில் இருக்கும் கிறுக்கல்கள் என்பதுபோலவே மற்றைய படைப்பாளிகளின் படைப்புகள் மீதான இவரது விமர்சனம் இருக்கும். மற்றைய படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சிக்காது படைப்பாளிகளை விமர்சிப்பவராக இருக்கிறார்.அதனாலேயே இலங்கை இந்தியப் படைப்பாளிகள் என்கிற பேதமின்றி பெரும்பாலானவர்களை அவர் பகைத்துக்கொண்டுள்ளார். இது அவருக்கு ஆரோக்கியமானதல்ல. இதே நிலை தொடருமானால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு காணாமல் போய் விடக் கூடும். ஆனால் வயதும் அனுபவங்களும் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கிறேன் .
இறுதியாக… பிரான்ஸ் நாட்டில் இதுவரை பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் தோன்றி காணாமல் போய்விட்டன. சில தொடர்ந்தும் வெளிவருகின்றன. அதேபோலத்தான் அண்மையில் ஆட்காட்டி சஞ்சிகை மட்டுமல்ல முகடு என்றொரு சஞ்சிகையும் சில இளையோரால் வெளியிடப்படுகின்றது. இது வரவேற்கப் படவேண்டிய விடயம். ஆனால் குறிப்பிட்ட சிலரே அதில் தொடர்ந்து எழுதி ஒரு குழுவாத சஞ்சிகையாக மாறிவிடாது பரந்துபட்ட எழுத்தாளர்களை ஊக்குவித்து தொடர்ச்சியாக வெளிவருவதே சஞ்சிகையின் வெற்றியாகும். பொறுத்திருந்து பார்க்கலாம் .

நானும்அவனும்

4:31 AM, Posted by sathiri, No Comment

நானும்அவனும்
….................................

ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி ….


இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற்றி ஒரு இழுவை இழுத்து விட்டு கணணியை திறந்தேன் ஏனென்றால் இப்பிடியான சந்தர்ப்பங்களில் தான் எனக்கு கற்பனை தானாக வந்து கொட்டி ஏதாவது எழுதத் தோன்றும்..

அபோதான் கண்களை கூச வைக்கும் ஒரு பெரு மின்னல்.. சாத்தியிருந்த யன்னலையும் ஊடறுத்து அறை முழுவதையும் பகலாக்கி செல்ல .மழையின் கோரம் அதிகரித்திருந்தது அடுப்படியில் திறந்திருந்த கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டு அதை சாத்தி விட்டு வரலாமென எழுந்து போயிருந்தேன். ஏனெனில் அது பின்னால் உள்ள சிறிய தோட்டத்துக்கு செல்லும் பாதை மழையின் கோரத்தால் எலியோ பூச்சிகளோ அதுவழியாக உள்ளே வந்துவிடும் . கதவை சாத்திக் கொண்டிருக்கும்போது இதுவரை நான் கேட்டிராத பெரும் இடியோசை .சின்ன வயதில் நான் சொன்ன அருச்சுனா ()பத்து நினைவுக்கு வருமளவு சத்தம் அதே நேரம் மின்சாரமும் போய்விட மீண்டுமொரு மின்னல் அப்போதான் அந்த உருவத்தை தோட்டத்தில் பார்த்தேன் .

கொஞ்சம் திகைத்துப் போயிருந்தாலும் . கடவுளையோ பேயையோ நம்புகிறவனில்லை என்பதால் யாரோ கள்ளன் தான் வந்திருக்கிறான் என நினைத்து இருட்டில் தட்டித் தடவி வந்து என் போனை எடுத்து அதிலிருந்த டோச் வெளிச்சத்தை அடித்தபடி. கள்ளன் வந்தால் தாக்குவதுக்காக கதவுக்கு பின்னாலேயே மறைத்து வைத்திருந்த கொட்டானை எடுத்துக்கொண்டு டோச் வெளிச்சத்தில் தோட்டத்தை பார்த்தேன் . கொட்டும் மழையில் நெடிய, கறுத்த, ஆடைகளேதுமற்ற அம்மணமான அந்த உருவம் நின்றிருந்தது .அண்ணாந்து பார்த்தேன். மழைத்துளிகள் என் கண்ணில் வீழ்த்து மங்கலாக தெரிந்த அந்த உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது .."என்னடா நலமா".. என்று என்னைப் பார்த்து அது கேட்ட அதே நேரம் அதன் பின்னாலிருந்து வெளிவந்த சிவந்த கண்களையுடைய பெரிய கறுத்த நாயொன்று என் மீது பாய்ந்து அதன் கால்களை என் மார்பில் வைத்து முகத்தை நக்க தொடங்க.. அது வரை என் பின்னாலேயே பதுங்கியிருந்த என் பூனை மீனு பயத்தில் மழையென்றும் பாராமல் தோட்டத்தில் பாய்ந்து பின் மதிலையும் தாண்டி ஓடி விட்டிருந்தது .

இப்போ எனக்கு நினைவுக்கு வந்து விட்டிருந்தது "ஓ நீயா ..எத்தனை வருடங்களாகி விட்டது என்ன இப்பிடி திடீரெண்டு சரி உள்ளே வா" ..என்றதும்

அவன் வாசலால் குனிந்து உள்ளே வர நாயும் பின்னாலேயே உள்ளே வந்தது ..அதுக்கிடையில் நான் ஓடிப்போய் படுக்கையறை கதவு சாதியிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வந்தேன்.நனைந்து போயிருப்பாய் என்றபடி துவாயை எடுத்து நீட்டியபோது அவன் உடல் காய்ந்து விட்டிருந்தது நாய் மட்டும் உடலை ஒரு உதறு உதறி விட்டு படுத்துக் கொண்டது ..சோபாவில் சரிந்திருந்தவனின் இடுப்பில் துவாயை போட்டு விட்டு .எத்தனை வருசமாச்சு எப்படி என்னை தேடி வந்தாய் என்றேன்.

இத்தனை வருசமாச்சு என்னை நீ தேடி வந்தாயா. முறைத்தான் .

எனக்கு ஊருக்கு வர முடியாது ஆனா உன்னைப்பற்றி அடிக்கடி அம்மாவிடம் விசாரிப்பேன் ,.

என்ன சொல்லு  வா ..

புளிய மரத்தடியில வெறும் சூலமா ஒரு கொட்டிலுக்கு கீழ இருந்த உனக்கு இப்ப வசதி வாய்ப்பு எல்லாம் வந்திட்டுதாம். கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்து ஐயர் வந்து பூசை செய்யுறாராம் எண்டு சொன்னா..

வேற என்ன சொன்னவா ..

சின்னதா ஒரு தேரும் செய்து கொண்டிருக்கினமாம் ..

அதுவும் உண்மை தான் .அதை விட வேற ஒண்டும் சொல்லேல்லையோ ..

இல்லையே ..

நான் குடியிருந்த புளிய மரத்தையே தறிச்சுப் போட்டாங்கள்

அட நாசமறுப்பு.. என்னத்துக்கு தறிச்சவங்கள் ..

எனக்கு கோயில் கட்ட தான் ..

அந்தப்பெரிய மரத்தை எப்பிடி தறிச்சவங்கள் ..

மிசின் வைச்சு அரிஞ்சு தள்ளிட்டான்கள் ..

அட கடவுளே ….

ஓம் கூப்பிட்டனியே …

இல்ல ....ஓம்... நீ கடவுள் எண்டதை ஒரு செக்கன் மறந்து போனன் .மிச்சத்தை சொல்லு ..



நான் செவிடு எண்டு நினைச்சு ஒவ்வொரு நாளும் சவுண்ட் பொக்ஸ் வைச்சு பாட்டு போடுறாங்கள் .விளங்காத சமஸ்கிருதத்தில பூசை வேறை

ஏன் உனக்கு சமஸ்கிரதம் விளங்காதோ ..

அடேய் நான் தமிழ்க்கடவுளடா எனக்கெதுக்கு சில்லெடுத்த சமஸ்கிருதம்.அதுவும் அவன் எனக்கு கணபதி கோமத்தை சொல்லிக்கொண்டு இடைக்கிடை வைரவராய நமகா ..எண்டு அடிச்சு விட. விசர் சனமும் அது வைரவர் மந்திரமெண்டு நினைச்சு கும்புடுதுகள் . அதைவிட மோசம் இப்போவெல்லாம் பச்சையரிசி பொங்கல் அவல் மோதகம் . எனக்கே சுகர் வந்திடும் போலவிருக்கு வடை எப்போவாவது ஒருதரம் கண்ணுல காட்டுறாங்கள் அதையும் படைசுப்போட்டு தொட்டால் சுடுவேன் எண்டு ஐயர் தீபத்தை முகத்துக்கு முன்னாலேயே காட்டுறான் .





சரி .உலகம் முழுக்க சுத்தி நாய் களைச்சுப் போய் விட்டுது அதுக்கு கொஞ்சம் தண்ணி வைக்கிறாயா.. என்றதும் நான் ஓடிப்போய் பூனையின் கிண்ணத்தை கழுவி தண்ணீரைஅதில் வைத்ததும் நாய் லபக் லபக்கென்று குடிதுக்கொண்டிருக்கும்போதே வேறொரு லபக் லபக் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தேன் .மேசையிலிருந்த விக்கியை போத்தலோடு எடுத்து அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருந்தான். "வைரவா நீயா" ..என்றதும் பெரிய மீசையை வருடி விட்டு "என்ன நீயா நானா" எண்டு. உன் பாட்டன் எனக்கு தினமும் சிரட்டையில் கள்ளும் நண்டு மீன் பொரியல் என படைத்தது விட்டுதான் அவனே சாப்பிடுவான் விசேட நாளில ஆட்டுக்கறியும் கிடைக்கும் ம்.. அதெல்லாம் ஒரு காலம் ..பெருமூச்சொன்றை விட்டான் ..



ஒரு உடுப்பு கூட போடாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறியே வெட்கமாயில்ல..


இல்ல...ஏனென்டால் பட்டுத் துணியில எனக்கு கோவணம் வேற கட்டி விடுறாங்கள்.அதுதான் எனக்கு வெட்கமாயிருக்கு

குளிரேல்லையோ எண்டு கேட்டலும் இடக்கு முடக்கா ஏதும் பதில்தான்வரும் ..சரி இவ்வளவு தூரம் என்னை எதுக்கு தேடி வந்தனி ?..

எனக்கு நீயொரு கோயில் கட்டவேணும்...
நான் அதிர்ந்துபோய் "வைரவா என்ன விளையாடுறியா" நானிருக்கிறதே வாடகை வீடு .கனடாப்பக்கம் போய்ப்பார் ..அங்கைதான் ஐயப்பன் தொடக்கம் அம்மா பகவான்னெண்டு ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் கோயில் கட்டி வைசிருகிறான்கள் .கட்டாயம் உனக்குமொரு கோயில் யாராவது கட்டியிருப்பான்கள் ..


இப்பதானே சொன்னான் உலகம் முழுக்க சுத்தி வாறனெண்டு .அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை ஒரு வைரவர் கோயில் கூட இல்லை .

என்னட்டை அவளவு வசதியில்லையே வைரவா ..


நீ நினைக்கிற மாதிரி பெரிய கோயில் எல்லாம் வேண்டாம் எதோ ஒரு மரத்துக்கு கீழை ஒரு சூலம் மட்டும் போதும். எந்த சத்தம் சந்தடியுமில்லாமல் இருந்தாலே போதும் நீ விரும்பினா விஸ்கியோ வோட்காவோ அப்பப்போ ஒரு வடை மாலை அது போதும் .மொத்தத்தில என்னை நிம்மதியா இருக்க விட்டாலே போதும்.

உனக்கொரு ஐடியா சொல்லவா ..

ம் சொல்லு …

எதுக்கு.. கோயில் குளமெண்டு அலையாமல் பேசாமல் பேஸ் புக்கில ஒரு அக்கவுண்ட் திறந்து அதிலையே குடியிருக்லாமே ..

வைரவர் விழுந்து விழுந்து சிரிக்க நாய் வேற அவ்.... என்று உளையிட்டது ..

எதுக்கு இப்ப சிரிக்கிறாய் ..

அடேய் நான் பேஸ் புக்கில் குடியிருக்க தொடங்கினால் ஒவ்வொரு நாளும் ஒரு செல்பியாவது போடுவேன் அப்போ உங்கள் பிழைப்பு என்னாவது …...

அதுவும் உண்மைதான் வைரவா உன் உயரத்துக்கும் கலருக்கும்.. அதுக்கும் ..எல்லா லைக்கும் உனக்குத்தான் விழும் ..அதை விட உலகத்தில் உள்ள எல்லா வடையும் மாலையா வந்து உன் கழுத்தில தான் விழும் ..


வைரவர் மீண்டும் சிரித்தார் ...


சரி வைரவா உனக்கு வீட்டு தோட்டத்திலேயே நான் கோயில். ச்சே .. ஒரு சூலம் நடுகிறேன் கவலைப்படாதே என்றதும் எழும்பி மீண்டும் விஸ்கி போத்தலை வாயில் வைத்து உறிஞ்சி விட்டு வெளியே போக . நாயும் பின்னல் ஓடவே மீண்டும் ஒரு பெரும் மின்னல் தோன்றி மறைய அதன் வெளிச்சத்தில் கண்ணை மூடி திறந்து பார்த்தேன். வைரவரையும் அவரின் வாகனத்தையும் காணவில்லை

வைரவ ராசாவே உன் அற்புதமே அற்புதம். உன் நாமத்தின் பெயராலே.உன் வார்த்தையின் பெயராலே . சாத்தான்கள் விலகியோடட்டும்உனக்காக நாளை சூலம் நடுகிறேன் . என்று வாய் முணு முணுக்க தொடங்க ..

வைரவர் வீட்டுக்கு வந்திட்டுப்போனதை இப்பவே உடனே ஓடிப்போய் மனிசியை தட்டியெழுப்பி சொல்லமா எண்டு யோசித்தாலும். "ச்சே சும்மா தண்ணியை போட்டிட்டு புலம்பாதை" .. எண்டு எட்டி உதை விழும்.நாளைக்கு பக்குவமா எடுத்துச் சொல்லலாமெண்டு என்று நினைத்து பேசாமல் படுத்து விட்டேன் ..

ஆனாலும் நித்திரை வரவில்லை . வைரவருக்கு சூலம் நடுறதெண்டால் அவருக்கு பிடிச்சது பொதுவா புளிய மரம்தான் .இந்த ஊரில.. இந்த நாட்டிலையே புளிய மரமில்லை .வீட்டு தோட்டத்தில நிக்கிறது ஒரு வாழை மரம் . அடுத்தது தோடை மரம் .வாழை மரத்துக்கு கீழை சூலத்தை நட முடியாது ஏனென்டால் குளில் காலத்தில அது பட்டுப்போகும். அப்பிடி நிண்டு பிடிச்சாலும் குலை போட்டதும் வாழையை வெட்டும் போது வைரவருக்கும் வெட்டு விழும் . அதால தோடை மரத்துக்கு கீழயே நடலாம் அதுவும் புளித்தோடை தான். புளிக்கு புளி வைரவருக்கும் லொக்கேசன் செட்டாகும் .சூலத்துக்கும் சிரமப்பட தேவையில்லை கன காலமா கார் கராச்சுக்குள்ள நீள இரும்புக் கம்பியொண்டு கிடக்கு அதை இரண்டா வெட்டி ஒண்டை வளைச்சு மற்றதை நிமித்தி நடுவிலை ஒட்டி விட்டா போதும் வைரவர் ரெடி என்று நினைக்கும் போதே அந்த மகிழ்ச்சியில் நித்திரையாகிப் போனேன் .

காலை கண்விழித்தபோது மனிசி குளியலறையில் பல் தீட்டிக்கொண்டிருந்த நேரம் வைரவர் வந்ததை சொல்லாமா என்று யோசித்தேன் . வேண்டாம் எல்லா கடவுளையும் கிண்டலடிக்கிறதா எனக்கு மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு அதால சூலத்தை தோடை மரத்துக்கு கீழ நட்டு .வடை மாலை போடும்வரை சஸ்பென்சாக வைத்து விட்டு சொல்லாமென நினைத்து ..அவரிடம் போய் "என்னப்பா எனக்கு கொஞ்ச நாளாவே வடை சாப்பிட வேணும் போலவிருக்கு" .. எண்டதும் வாயிலிருந்த பிரஸ்சை எடுத்து விட்டு தொட்டியில் துப்பியவர் ..."உனக்கு எப்ப பாத்தாலும் இதே நினைப்பு அதுவும் காலங் காத்தாலை" .. என்று அக்கிளில் ஒரு குத்து விழுந்தது ..

மீண்டும் பல்லு தீட்ட தொடங்கியவரிடம் .."இல்லை உண்மையாவே உளுந்து வடை சாப்பிட வேணும் போலவிருக்கு வேலை முடிஞ்சு வந்ததும் பத்து வடையாவது சுட்டு வைக்கேலுமோ" என்றதும் .மீண்டும் பிரஸ்ஸை வாயிலிருந்து எடுத்து தொட்டியில் துப்பியதுமே . குத்து விழலாமென நினைத்து சட்டென்று இரண்டடி பாய்ந்து நின்று கொண்டேன் .."சரி சரி போ" ...என்றார் .தோட்டத்தில் வந்து நின்று தோடை மரத்துக்கடியில் எந்த பக்கமாக வைரவரை நடலாமென யோசித்தாலும் நம்ம வைரவருக்குத்தான் வாஸ்து ஆகமம் எல்லாம் கிடையாதே எதோ ஒரு பக்கம் ஊன்றி விட்டா போதும் .மரத்தடியை கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன் .மனம் முழுதும் வைரவர் நினைப்பிலேயே நிரம்பியிருந்தது போகும் வழியில் இருந்த தேவாலயத்தின் உச்சியில் இருந்த சிலுவை கூட சூலம் போலவே தெரிந்தது பிதா, சுதன், பரிசுத்த வைரவரின் பெயராலே ஆமென் என்று சூலம் போட்டுக் கொண்டேன் ..

வேலை முடிந்து வீடு வந்ததுமே வடை வாசம் மூக்கை துளைத்தது.வண்டியை விட்டிறங்கி கராச்சுக்குள் புகுந்து இரும்பை தேடத் தொடங்கியிருந்தேன் காணவில்லை .தேடிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த மனைவி ..

என்ன வேலையால வந்ததும் கராச்சுக்குள்ள நோன்டிக்கொண்டிருக்கிறியள் ..

இங்கின ஒரு இரும்புக்கம்பி கிடந்தது அதை தான் தேடுறன் ..

அதுவா கன காலமா கிடந்தது கறள் பிடிச்சுப்போய் கிடக்கெண்டு பழைய சமான் லொறி வரேக்குள்ள எடுத்து போட்டிடேன் ..

எனக்கு நேற்றிரவு விழுந்த இடிச்சத்தம் இப்போ காதில் கேட்டது ..வைரவா ஏனிந்த சோதனை இருந்த ஒரேயொரு இரும்புக்கம்பியையும் மனிசி தூக்கி எறிந்சிட்டுது நான் என்ன செய்வேன் . புதுசா கம்பி வாங்கி உனக்கு சூலம் செய்து கோயில் வைக்கிற அளவுக்கு என்னட்ட வசதியில்லை என்னை மன்னிசுக் கொள் என்று வேண்டி விட்டு சுட்ட வடை வீணாகிப் போக கூடாது தானே என்பதுக்காக அதை துக்கிக் கொண்டு போய் தோட்டத்தில் உள்ள மேசையில் வைத்துவிட்டு சாப்பிட கதிரையில் அமர்ந்ததும் எங்கேயோ இருந்த தேனீ ஓன்று விர் என்று வடையில் வந்து குந்த .. "கன காலத்துக்கு பிறகு நானே இப்பதான் வடை சாப்பிட போறேன் .ச்சே ..போ" ..என்று நான் கையால் விசுக்கி கலைக்க..வேகமாகமேலே எழும்பி ஒரு சுற்று சுற்றி விட்டு என்னை நோக்கி வந்தது ..

ஐயோ ..சாமி கண்ணை குத்திட்டுது என்று கண்களை பொத்தியபடி கத்தினேன் …..

2:47 PM, Posted by sathiri, No Comment

‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி  

நடு இணைய சஞ்சிகைக்காக ....
%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%
 
வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது  தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ளலாமல் காலை வணக்கம் சொல்லியபடி  படிவத்தையும் பணத்தையும் என் அடையாளஅட்டையையும் நீட்டினேன்.  நீண்ட முக்கில் கண்ணாடி போட்டிருந்த பெண் அதை வாங்கி  சரிபார்த்தபடி, 

“நீங்கள் மொறோக்கரா ? என்றாள். 

“இல்லை…ஏன் ?” 

“மொறோக்கோவுக்குப் பணம் அனுப்புகிறீர்கள், அதான் கேட்டேன்.” 

“மொறோக்கர் தான் மொறோக்கோவுக்கு பணம் அனுப்பலாம் என்கிற புதுசட்டம் ஏதும் வந்திருக்கிறதா… ? நான் பல தடவை அனுப்பியிருகிறேனே?”  என்று கொஞ்சம் எரிச்சலாகவே கேட்டேன். 

“அப்படி எல்லாமில்லை. சும்மாதான் உங்களை பார்த்தால் மொறோக்கர் போல தெரியவில்லை. அதான் கேட்டேன்.” என்றபடி, பணத்தை வாங்கி கணணியில் விபரங்களை பதிவு செய்து  ஒரு படிவத்தை கையில் தரும்போது,
“என்னுடைய மூதாதையர்கள் மொறோக்கர்கர்கள். அதுதான் கேட்டேன். வேறொன்றும் தவறாக நினைக்க வேண்டாம்.” என்றபடி நீட்டினாள். 

“ஓ………  சரி மன்னிக்கவும். எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது. அந்த பதட்டம், நன்றி.”
என்றபடி அதை வாங்கி அங்கேயே மேசையில் வைத்து கைத்தொலைபேசியில் படமெடுத்து மொறோக்கோ இலக்கத்துக்கு அனுப்பிவிட்டு, வேகமாகப்  போய் வாசலில் கிடந்த பத்திரிகை கடிதங்களை பொறுக்கியபடி கடையை திறந்து, கோப்பி மெசினை இயக்கிவிட்டு பத்திரிகையை தலைப்புக்களை மட்டும் மேலோட்டமாக  பார்த்தேன். 

ஓய்வுதிய வயதெல்லை அதிகரிப்புக்கு எதிராகத்  தொடரும் போராட்டம். ஈரான் அமெரிக்க  முறுகல் வலுக்கிறது.  எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை. அவுஸ்திரேலியா தீ விபத்து, பல இலச்சம் விலங்குகள் உயிரிழப்பு என்று தொடர்ந்தது. 

“ச்சே……  வருசக்கடைசியானா ஒரே  இழவுச்  செய்தி. இந்த வருசம் விமான விபத்து, சுனாமி இரண்டும் தான் நடக்கேல்ல”. என்றபடி பத்திரிகையை ஏறிந்து விட்டு கோப்பியை உறுஞ்சியபடி அவளின் இலக்கத்துக்கு போனடிதேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. மீண்டும் சில தடவை முயற்சி பண்ணிப்  பார்த்து விட்டுப்   “பணம் அனுப்பி விட்டேன்.அதன் விபரமும் போட்டோ எடுத்து அனுப்பி விட்டேன்”. என்று செய்தி வைத்து விட்டுக் கதிரை மேசைகளைத் துடைத்து ஒழுங்கு பண்ணத் தொடங்கியிருந்தேன்.
‘இருவர் உள்ளே நுழைந்தார்கள். மேசை கதிரை அடுக்க முதலே காலங் காத்தாலையே குடிக்க வந்திட்டாங்கள்’.  என்று நினைக்கும்போதே முன்னால் வந்து நின்ற இருவரும், சட்டென்று அடையாள அட்டையை தூக்கி காட்டி, 

“டளிடாவை உனக்கு எப்படி தெரியும் ?” என்றார்கள். 

இரகசிய பொலிசாரின் திடீர் கேள்வியில் கொஞ்சம் தடுமாறிப் போனாலும் சமாளித்துக்கொண்டு, 

“தெரியும். கடைக்கு அடிகடி வருவாள். அவ்வளவுதான்.” என்றதும், 

“இப்போ சிறிது நேரத்துக்கு முன்னர் நீ அவளுக்கு பல தடவை போனடித்திருக்கிறாய். பணம் அனுப்பியதாக செய்தி வைத்திருக்கிறாய். என்ன பணம்? யாருக்கு அனுப்பினாய்?” 

இந்தக் கேள்வியில் எனக்கு லேசாய் தலைசுற்ற ஆரம்பித்திருந்தது.
“அது அவளின் அம்மாவுக்கு. அவளே அனுப்பச்சொல்லி கொடுத்திருந்தாள். அவ்வப்போது உதவியாக கேட்பாள். நானும் அனுப்புவேன்.” என்று சொன்னபடி, ஓடிப்போய் பணம்அனுப்பிய படிவத்தை  எடுத்துக் காட்டினேன். 

அதை பார்த்தவர்கள். “சரி நீ கடைசியாக எப்போ அவளை பார்த்தாய்?” 

“நேற்று இரவு எட்டு மணியளவில் கடைக்கு வந்து ஊருக்கு அனுப்பச்சொல்லி பணம் கொடுத்து விட்டு போனாள். பின்னர் நான் வேலை முடிந்து போகும்போது பதினோரு மணியளவில் அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்து தலையாட்டி விட்டு போய் விட்டேன்.” 
என்றதும், என் பெயர் விபரங்களை பதிவு செய்தவர்கள். புறப்படும்போது, 

“அவளுக்கு என்ன நடந்தது ? என்றதும், 

“உனக்கு செய்தி பார்க்கும் பழக்கம் உண்டா ?” 

“ஓம்……… ஒவ்வொரு நாளும் பார்ப்பேன்.” 

“அப்போ செய்தியை பார்த்து அறிந்து கொள்.” என்று விட்டு போய் விட்டார்கள்.
நான் அவளுக்கு போனடித்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு வேளை  அவளைக்  கைதுசெய்து வைதிருக்கிரர்களா?  ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்களா? குழப்பமாக இருந்தது. பாஸ்கலுக்கு போனடித்துக் கேட்கலாமென நினைத்து அவனது இலக்கத்தை அழுத்தினேன்.  அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
“மிகஅவசரம். என்னோடு தொடர்பு கொள்.”  என செய்தி வைத்து விட்டு வேலையை தொடங்கினாலும்  மனம் ஒரு நிலையிலில்லை.
00000000000000000 

அவளை பல வருடங்களாக தெரியும். நான் வழமையாக வேலைக்கு போய் வரும் கடற்கரை வீதில் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே சுயிங்கத்தை மென்றபடி வியாபர புன்னகையை வீசி நிக்கும் பாலியல் தொழிலாளிகள் எனக்கு பழகிப்போனதொன்று. இரவு பகல், விடுமுறை பண்டிகை என்று எல்லா காலத்திலும் இவர்களை காணலாம். அப்படிதான் நான் வேலை செய்யும் மதுச்சாலைக்கு அருகில் அவளை சந்தித்தேன். அவளும் வழமை போல வாயில் சுயிங்கம், வியாபாரப் புன்னகையோடு என்னை பார்ப்பாள்.
இப்பிடி எவ்வளோ பார்த்திருப்போம் என்று நினைத்தபடியே நானும் கடந்து போய்க் கொண்டிருப்பேன். ஒரு குளிர்கால இரவு, அடை மழை, கடையிலும் யாருமில்லை. வெளியே இருந்த கதிரை மேசைகளை உள்ளே எடுத்து வைக்கப் போயிருந்தபோது, மழைக்காக சுவரோரத்தில் ஒரு பல்லியைப்போல  ஒட்டிக் கொண்டிருந்த  அவளைப் பார்த்ததும், ‘வா……….’ என சைகை செய்தேன். நனைத்த கோழிக் குஞ்சைப்போல ஓடி வந்தாள். உள்ளே வந்தவளுக்கு ஒரு கோப்பியை  போட்டு நீட்டியதும், பர்சை திறக்க போனவளிடம், 

“வேண்டாம் இருந்து ஆறுதலாக குடி”. என்று விட்டுக்  கிளாஸ்களை துடைக்கத் தொடங்கியிருந்தேன். 

‘நன்றி’. சொல்லி விட்டு கோப்பியை உறுஞ்சியபடி,
“நீங்கள் இந்தியாரா…………?” 

“இல்லை.” 

“அப்போ……….  மொரிசியரா?” 

“இல்லை.” 

“அப்போ எந்த நாடு…….. ?” 

“நிச்சயமாக பிரெஞ்சுகாரர் இல்லை. ஆனால், இப்போ பிரெஞ்சு குடியுரிமை”. 

“நாட்டை சொல்ல விருப்பமில்லையா ?” 

“அப்பிடியில்லை. சொல்லி பெருமைப்படவும் அதில் ஒன்றுமில்லை. நான் ஸ்ரீ லங்கன். உன்னைப்பார்தால் மொரோக்கன் போலவிருக்கிறது.  என்ன பெயர்?”

“எப்படிக் கண்டு பிடித்தாய் ?” 

“பெண்களைப் பார்த்தாலே ஓரளவுக்கு நாடு கண்டு பிடித்து விடுவேன். உன் பழுப்பு நிறம். கரும் சுருண்ட முடி. முட்டைக்கண்கள். குறைந்த உயரம். சிறிய  அளவான …” 

“போதும் நிறுத்து. என் பெயர் டளிடா”. 

திடீரென அவளிடம் திரும்பி, 

டளிடவா………..? எனக்கு மிகவும் பிடித்த பாடகியின் பெயர். நீ டளிடாவை அறிந்திருகிறாயா?” 

லேசாக சிரித்தவள்,
“இல்லை ஒரு பாடகி என்று மட்டும் அம்மா சொல்லியிருக்கிறார். நானும் ஒரு பாடகியாக வர நினைத்து அந்த பெயரை வைத்திருக்கலாம்.” 

“அறுபதுகளில் தன் குரலால் உலகை கட்டிப்போட்ட ஒரு பாடகி. எண்பதுகளில் பாரிஸ் நகரில் தனிமையில் காலத்தை கழித்துக் கொண்டிருந்தவள், ஒருநாள் ஒரு கோப்பை விஸ்கியில் விசத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டிருந்தாள். காரணம் இன்றுவரை தெரியவில்லை. அவள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.” 

‘ம்.’என்றவள், பின்னர் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நான் கிளாஸ்களை துடைத்து அடுக்கி முடிந்ததுமே மழையும் லேசாகி விட்டிருந்தது. அவளும் கோப்பியை குடித்து முடித்திருந்தாள். நான் சாவியை கையிலெடுத்தும், கடையை பூட்டப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினாள். எங்களின் முதல் சந்திப்பு அதுதான். அதுக்குப்பின்னர் நான் அவளை கடந்து போகும்போது அவள் வீசும் வியாபார புன்னகை, நட்பு புன்னகையாக மாறியிருந்தது.
0000000000000000000000 

கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள். எனக்கு வேலை அதிகம் . தொடங்கும்  நேரம் முடியும் நேரத்துக்கு வரையறை இல்லை.  அவளுக்கும் அதே போலதான். அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாத . எப்போதாவது பார்த்துக்கொள்ளும் போது லேசான தலையாட்டல். கொடுங் குளிர் காலத்தில் கொட்டும் மழை இரவொன்றில்தான் மீண்டும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. 

இப்போ அவள் கைகளில் கோப்பியல்ல, விஸ்கி. என் கைகளில் வழக்கம் போல துடைக்கப்படும் கிளாஸ். 

“உன் பெயரை சொல்லவில்லையே………?” 

“நீ கேட்கவேயில்லையே ………?” 

“சரி சொல்லு.” 

“சாத்திரி.” 

“காலியாணமாச்சா……….?” 

“ம்.  ஒரு மகளும். பெயர் மீரா.” 

திடுக்கிட்டவளைப்போல  விஸ்கி கிளாசை உறிஞ்சிவிட்டு,
“என்ன பெயர் சொன்னாய் ?” 

“மீரா.” 

“என் மகளுக்கு பெயர் மேரா. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?” 

“தெரியுமே…….  உலகம் முழுதும் உள்ள மொழிகளில் அனைத்திலும் உள்ள ஒரேயொரு பெயர். ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்று அர்த்தம். 

விரக்தியாய் சிரித்தவள், கிளாசை  நீட்டினாள்.  அதை பாதி நிரப்பி ஐஸ் கட்டிகளை போட்டு நீட்டியபடியே,
“உனக்கும் கலியாணமாச்சா……?” 

 “ம்……….  ஆச்சு.  ஆனால் ஆகேல்ல.” 

‘இவளென்ன வடிவேலு மாதிரியே…’
என்று நினைத்தாலும் நான் எதுவும் கேட்கவில்லை. கிளாசை முடித்துவிட்டு, ஐம்பது யூரோவை எடுத்து மேசையில் எறிந்து விட்டு போனவளிடம்,
“ஏய்……… மிச்ச காசு.” என்று மிகுதியை நீட்ட..

தலைக்கு மேலால் கையை ஆட்டி வேண்டாமென சைகை செய்துவிட்டுத் தள்ளாடியபடி போய்க்கொண்டிருந்தாள். சரி அடுத்த தடவை வரும்போது கொடுக்கலாமென அதை தனியாக எடுத்து வைத்திருந்தேன்.
அடுத்தடுத்த சந்திப்புக்களில் அதுவும் கொஞ்சம் போதை ஏறும்போதுதான் தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கியிருந்தாள். அப்பா இல்லை. அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவள். 

“திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. நன்றாக இருந்த குழந்தைக்குத்  திடீரென எதோ காய்ச்சல் வந்தது. வைத்திய சாலையில் கொண்டு போய் காட்டினேன். அதுவரை நன்றாக இருந்த குழந்தை சோர்ந்து போய் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்க தொடங்கியது. எதோ வைரஸ் காச்சல் என்றார்கள். எனக்கு அதன் விபரம் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் பார்வையே போய் விட்டது . அது மட்டுமில்லை மெலிந்து படுத்த படுக்கையாகி விட்டது. என் குடும்பம் பாவம் செய்ததால் சைத்தான் குழந்தையாக பிறந்து விட்டது என்று  கணவன் சில மந்திரவாதிகளிடம் கொண்டு போய்க்  காட்டினான். அவர்களும் ஏதேதோ செய்தார்கள் சரிவரவில்லை. அவன் ‘தலாக்’ சொல்லிவிட்டு போய் விட்டான். குழந்தையைமீண்டும் வைத்தியரிடம் கொண்டு போனேன். அவள் வியாதிக்கு எதோ பெயர் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்திர சிகிச்சை செய்தால் மீண்டும் பார்வை வந்து விடும். அதுவும் பல கட்டமாகத்தான் செய்யவேண்டும் என்றபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனால் சிகிச்சைக்கு அவர்கள் சொன்ன தொகையை கேட்ட போது தான் வந்த வேகத்திலேயே நம்பிக்கை திரும்பவும் போய் விட்டது. அம்மா தான் தன் கதைகளை சொல்லி எனக்குள் மீண்டும் நம்பிக்கையை வரவளைத்தாள். குழந்தையை அம்மாவிடம்  கொடுத்து விட்டு வேலை தேடி நகரத்துக்கு போன போதுதான் ஒரு முகவர். ‘பிரான்ஸ் போனால் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னதும் அதை நம்பி இங்கு வந்து விட்டேன்.” 

இவை நீங்கள் சுவாரசியமில்லாமல்  படித்து முடித்ததை போலவே அவள் வேகமாக சொல்லி முடித்தது. 

அடுத்து அவள் மெதுவாக அடுத்தடுத்த சந்திப்புக்களில் சொன்னது:
“என் முகவரே கடவுச் சீட்டு எடுத்து ஒரு வாரம் பிரான்சுக்கான சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஒரு விடுதியில் தங்க வைத்து விட்டு கடவுச் சீட்டை பிடுங்கி வைத்துக் கொண்டான். ஒரு கிழமை முடிந்ததும் என்னிடம் வந்தவன்,
“இப்போ உனக்கு விசா முடிந்து விட்டது. இனி ஊருக்கு போக வேண்டுமானால் முதலில் ஜெயிலுக்கு போக வேண்டும். அதை விட நான் சொன்னபடி கேட்டால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. உனக்கும் வேகமாக அதிக பணம் தேவை. எனக்கும் தான். ஏனென்றால் உனக்காக நானும் நிறைய செல்வழித்திருக்கிறேன். உன்கருப்பு முடி , பழுப்புத்  தோல் நிறத்துக்கு இங்கு நல்ல கிராக்கி. இரண்டு பேருமே ஒரு உடன்படிக்கைக்கு வருவோம்.  நீயும் முரண்டு பிடிக்க கூடாது.” என்றான்.
“எனக்கும் அப்போ வேறு வழியிருக்கவில்லை. அவனே வாடிக்கையாளர்களை கூட்டி வருவான்.  நான் அறையை விட்டு எங்கேயும் போகமுடியாது. சாப்பாடு தண்ணி கூட வாடிக்கையாளரைப்போலவே அறைக்கு வந்து சேரும்.  எனக்கும் குடும்பத்துக்குமான தொடர்பு குறைவுதான். எப்போதாவது அவனின் தொலைபேசியில் தொடர்பெடுத்து சில நிமிடங்கள் மட்டுமே பேச தருவான். ஆனாலும் அவனும் நல்லவன்.  வீட்டுக்கு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் எனக்கும் அவனிடம் நம்பிக்கை வந்து விட்டிருந்தது. அதுக்காகவே நானும் அவன் சொன்னபடியெல்லாம் நடக்கத் தொடங்கியிருந்தேன்.  இப்படியே மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அறைக்கு தேடி வருபவர்கள் குறையத் தொடங்கினார்கள். உலகின் தொழில் நுட்பம் எப்படி வேகமாக மாறி வருகிறதோ அதுபோலவே எங்கள் தொழிலின் நுட்பத்தையும் மாற்றவேண்டியிருந்தது. நான் வீதிக்கு வந்து விட்டேன். இப்போ எனக்கும் கொஞ்சம் நின்மதி. வெளி உலகம். நிறைய மனிதர்களோடு பேசிப் பழகலாம். அதை விட முக்கியம், எல்லா பணத்தையும் அவனிடம் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு இருநூறு யுரோ அவனுக்கு கொடுத்தால் போதும். நான் எவ்வளவு சம்பாதித்தாலும் அது எனக்கே. ஆனால் அறை வாடகை, சாப்பாடு என்செலவு . 

“இப்போதான் நீ வெளியே வந்து விட்டாயே ? பிறகெதுக்கு அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும்?” 

“தெரியாத மாதிரியே கேக்கிறியே………..? இந்த மாதிரி தொழில் நம்பிக்கை மட்டுமே மூலதனம். ஒருவரை ஒருவர் ஏமாத்திறதா சந்தேகம் வந்தாலே அவ்வளவுதான். யாரோ ஒருத்தர் உயிரோடு இல்லை. எனக்கோ  ஊரில் உள்ள குடும்பத்துக்கோ ஏதும் நடந்து விடக்கூடாது என்கிற பயம் தான்.” 

என்று விட்டு, விஸ்கி கிளாசில் கடைசி துளியை அண்ணாந்து நாக்கால் துடைத்து விட்டு,
“கணக்கில் எழுதிக் கொள்.” என்றவள் சிகரெட்டை பற்றவைத்து ஊதியபடியே வழமையான  இடத்தில் போய் நின்று கொண்டாள். 

இப்போது அவள் என் வாடிக்கையாளர். கற்பனையைக்  கண்டபடி ஓட விடவேண்டாம். அதாவது கடைக்கு மட்டும். அப்படியான நாளில் தான்  ‘ஒருஉதவி’ என்று கேட்டிருந்தாள். 

“என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. கொஞ்சம் பணம் அம்மாவின் பெயருக்கு அனுப்பி விட முடியுமா?”
என்றாள். அன்றிலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது. அது மட்டுமில்லை ஒருநாள் கொஞ்சம் பதட்டமாகவே வந்தவள், இன்னொரு உதவி என்றாள். 

“என்ன சொல்லு.” 

“கொஞ்சம் அதிகமாகவே பணம் அனுப்பவேண்டும். மகளுக்கு கண் சிகிச்சை செய்யப்போகிறார்கள். பணம் அறையில்  இருக்கிறது.  நீ வந்தால் எடுத்து கொடுத்து விடுவேன்.” 

“நீயே கொண்டு வந்து கொடேன்.” 

“இல்லை அது அதிகபணம். எவ்வளவோ சிரமப்பட்டுச் சேகரித்தது. யாராவது பறித்து விட்டால்…….? அது என் மகளின் எதிர்காலம். அதுதான் பயமாக இருக்கிறது.” 

“நீ இவ்வளவு பயந்தாங்கொள்ளி என்று நினைக்கவில்லை. சரி வேலை முடிந்து போகும் போது வருகிறேன்.” 

வேலை முடிந்து போகும்போது அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்தேன். நின்றிருந்தாள்.  அவளை காரில் ஏற்றிக்கொண்டு அவள் காட்டிய பாதையில் போய்க்கொண்டிருந்தேன்.அதிக தூரமில்லை. வண்டி பழைய நகரத்துள் நுழைந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தோம். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முந்திய நகரம்.  எனக்கு பழக்கமான நகரம்தான். குறுகிய சாலைகள். எலாப்பக்கமும்  படிகட்டுகளும், பழைய கட்டிடங்களும் மட்டுமே. கோடை காலத்தில் உல்லாச பயணிகளால் நிரம்பி வழியும் தேவதைகளின் நகரம். குளிர் காலத்தில்  குப்பையைக்  கிளற வரும் பெருச்சாளிகளை விட வீதியில் யாரையும் காண முடியாது.  அப்போ அது பேய்களின் நகரம். 

ஒரு பழைய மரக்கதவைத் தள்ளி திறந்தவள், லைட்டைப் போட்டுவிட்டு முதலாம் மாடிக்கு ஏறிப் போய் நின்று விட்டு, “இங்கேயே நில்.” என்றவள் இரண்டாம் மாடிக்குப் போய் அங்கிருந்த ஒரு பூச்சாடியில் கையை வைத்து திறப்பை எடுத்துக் கொண்டு வந்து அறையை திறந்தாள். 

“திறப்பை எதுக்கு பூச் சாடியில் வைத்திருகிறாய்……?” 

“ஒரு தடவை என் கைப் பையை இரண்டு சிறுசுகள் பறித்து விட்டார்கள். கஞ்சாவோ கட்டையோ புகைப்பவர்களா இருக்கலாம். பாவம் அவர்களுக்கு பணத் தேவை. அதிலிருந்த பணம், வீட்டு திறப்பு எல்லாமே பறி போய் விட, நான் வீட்டுக்கு உள்ளேயே போக முடியாமல் இரவு முழுவதும் இந்த படியிலேயே படுத்திருந்து விட்டு அடுத்த நாள் மேல் வீட்டுக் காரரின் உதவியோடு கதவை உடைத்து பூட்டை மாற்றி விட்டேன். அதுக்குப்  பிறகு திறப்பை எங்காவது ஒளித்து வைத்து விட்டு போவேன்.” என்றபடி கதவைத் திறந்து, “உள்ளே வா.” என்றழைத்தாள். 

மிகச் சிறிய அறை. எல்லா வாசனைத்திரவியங்களும் கலந்த ஒரு வாசனை. ஒரேயொரு சோபா மட்டுமே. அதை விரித்து கட்டிலாகவும் பயன்படுத்தலாம். சிறிய அலமாரி. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிக்கு முன்னால் அவளது அலங்காரப் பொருட்கள். கொண்டோம் பாக்கெட்டுகள். அதுக்கடுத்து குளியலறையும் கழிப்பறையும் சேர்ந்த டூ இன் வண் அறை. “இரு.” என்றபடி, அவசரமாக சோபாவின் கீழே கிடந்த ஜட்டி ஒன்றை காலால் ஒரு முலையில் தள்ளிவிட்டு,  “
சிறிது நேரத்துக்கு முன்னர் வந்து விட்டுப் போனவன் ஒருவனுடையது. எதோ அவசரத்தில் இதை போட மறந்துவிட்டு போய் விட்டான். சில நேரம் அதை தேடி திரும்பவும் வரலாம்”. என்று சிரித்தவள்,
அறையை பார்த்தாயா? ஏதாவது குடிக்கிறயா? என்று கேட்க மாட்டேன். இங்கு எதுவுமில்லை.” 

இன்னொரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சப்பாத்து பெட்டிகளில் ஒன்றை எடுத்து அதிலிருந்த சப்பாத்து ஒன்றினுள் கையை விட்டு இழுத்தாள். சுருட்டி வைக்கப்பட்டிருந்த யூரோ நோட்டுக்களை என்னிடம் நீட்டியவள்,
“ஏழாயிரம் வரையுள்ளது. முடிந்தளவு விரைவாக அனுப்பிவிடு.” என்றாள். 

‘ஏழாயிரமா………..?’ என மனதில் உள்ளே திடுக்கிட்டாலும் காட்டிக் கொள்ளாமல்.
“பணத்தை எதுக்கு சப்பாத்துக்குள் ஒழித்து வைத்திருக்கிறாய் ?” 

“எனக்கென்ன வங்கி கணக்கா இருக்கு போட்டு வைக்க. அதைவிட வரும் வாடிக்கையாளர்கள்  யாராவது நான் குளியலறைக்குள் போனதும் களவெடுத்துக்கொண்டு ஓடி விடுவார்கள். ஒரு தடவை நடந்திருக்கிறது. அதுக்குப் பின்னர் தான் இப்படி ஒழித்து வைக்கிறேன். ஆனாலும் எப்போதும் ஒரு பயத்தோடு அடிக்கடி சரி பார்த்துக்கொள்வேன். பணத்தை நாளைக்கே அனுப்பி விடுவாயா……..?” 

“அதிகமான பணம் ஒரேயடியாக முடியாது. இரண்டு மூன்று தடவை பிரித்து தான் அனுப்பலாம். உன் அம்மாவின் பெயர் விலாசம், தொலைபேசி இலக்கம் எல்லாம் என்தொலைபேசிக்கு அனுப்பிவிடு.” என்றபடி அவளை மீண்டும் ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் விட்டு  பணத்தை கடையில் கொண்டுபோய் வைத்து விட்டு போய் விட்டிருந்தேன். 

இப்போநான், அவளின் வங்கியாக மாறி விட்டிருந்தேன். அவ்வப்போது கொண்டு வந்து கொடுக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். கொடுக்கும்போதெல்லாம் ஒரு துண்டில் திகதி தொகை எழுதி அவளுக்கு காட்டி விட்டு தனியாக ஒரு பெட்டியில் போட்டு வைத்து விடுவேன். பணம் அனுப்பி இரண்டு வாரம் கழித்து மகிழ்ச்சியாக வந்தவள், பாருக்கு முன்னால் கதிரையை இழுத்துப் போட்டு விட்டு ‘ஒரு விஸ்கி’ என்றாள். 

“என்ன மகிழ்ச்சியாக இருகிறாய் போல…” 

“ஓம்……. மகளுக்கு ஒரு கண்ணில் சிகிச்சை முடிந்து ஓரளவு பார்வை வந்து விட்டதாம். போனில் சொன்னாள். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டுமாம். முடிந்தளவு விரைவில் அடுத்த கண்ணையும் சிகிச்சை செய்யச்சொல்லி வைத்தியர் சொல்லியிருக்கிறாராம். 

விஸ்கியை ஊற்றி கொஞ்சம் கோலா கலந்து நீட்டியபடி, 

“பிறகென்ன மகிழ்ச்சியான செய்தி. அடுத்த கண்ணையும் செய்ய வேண்டியது தானே…….? 

“எனக்கும் ஆசை தான். அதுக்கு இன்னுமொரு பத்தாயிரம் யூரோக்கள் வேணுமே…….? 

“பத்தாயிரமா…….? உன்னிடம் இப்போ வெறும் ஆறுநூறு தானே இருக்கு?”
“ம்…….அதை சேர்க்க இன்னும் மூன்று நாலு வருசம் தேவைப்படும். சரி பார்க்கலாம்.” என்று தொடங்கிய உரையாடலோடு குடித்துக்கொண்டேயிருந்தாள். 

இடையில் கடைக்கு வந்தவனொருவன்,
“அவளிடம் என்ன போகலாமா ?”  என்றதும்.
“நான் இன்று லீவு என்னை குடிக்கவிடு. போடா. என்று திட்டி அனுப்பிவிட, அவனோ என்னை கோபமாக பார்த்துவிட்டு வெளியேறி விட்டான்.
கடை சாத்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. இப்போ குளிர் காலமென்பதால் அதிக வாடிக்கையாளர்களில்லை. வந்திருந்த மதுப்பிரியர்களும் தள்ளாடியபடி விடை பெற்றார்கள். 

“சரி கடை சாத்த வேண்டும்”. என்றதும், 

நீ வேலை நேரத்தில் குடிக்க மாட்டாய் எனக்குத் தெரியும். ஒரு நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து  நிறைய குடிக்க வேண்டும். சரியா………?” என்றபடி நடக்கத் தொடங்கியிருந்தாள். கடையை சாத்தி விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்த நேரம் கீல்ஸ் சப்பாத்துக்களைக் கழற்றி கையில் பிடித்தபடி தள்ளாடிய படியே போய்க்கொண்டிருந்தவளிடம்,
“ஏய்…………  வந்து ஏறு. வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்.” என்றதும், அதுக்காகவே காத்திருந்தவளைப்போல ஓடி வந்து ஏறிக்கொண்டவள். வீடு வந்ததும், 

வீட்டுக்கு வாயேன். போன தடவை வந்த போது எதுவும் கொடுக்கவில்லை. இப்போ ஒரு ஒரு போத்தல் விஸ்கி உள்ளது. ஒரு கிளாஸ் குடித்து விட்டு போ.” 

“வேண்டாம்……… நீ நிறைய குடித்திருக்கிறாய். போ. இன்னொரு நாளைக்குப்  பார்க்கலாம்.” 

“என்ன……… பயப்பிடுறியா ? நான் ஒண்டும் செய்ய மாட்டேன். வா.” 

ஒரு பெண் ஒருவனைப்பார்த்து பயப்பிடுறியா என்கிற ஒரு வார்த்தையே அவனை உசுப்பி விடும். 

“எனக்கா………..பயமா……..?” என்றபடி அவள் பின்னல் போயிருந்தேன்.

 புதிதாக இருந்த விஸ்கியை எடுத்து என்னிடம் நீட்டி,
“நீயே திற.” என்றபடி இரண்டு பிளாஸ்டிக் கப்புகளை எடுத்து நிலத்தில் வைத்து விட்டு, அவள்  நிலத்திலேயே குந்திவிட சமஅளவில் விஸ்கியை ஊற்றிய போது தான், ‘ஐயையோ  கலக்க எதுவுமே வாங்கவில்லை .மறந்து விட்டேன்’. என்றவளிடம், “பரவாயில்லை.” என்றபடி ‘சியஸ்’ சொல்லி ஒரே மடக்கில் விழுங்கி விட்டேன். 

லேசாய் எரிந்தபடி இதயத்தை ஊடறுத்து இறங்கியது. “இன்னும் கொஞ்சம்……” என்றாள். அடுத்த தடவை எரியவில்லை. “சரி போகிறேன்.” என்று எழுந்தபோது, தட்டுத்தடுமாறி எழுந்தவள் என்னை  இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ளத்  தள்ளி விடவும் முடியாமல், அணைக்கவும் முடியாமல் அசையாமல் நின்றிருக்க.

 ஒரு கை என்சட்டைக்குள் நுழைந்து முதுகில் வருடிக் கொடுக்க, உள்ளே போன விஸ்கியும் அவளின் அரவணைப்பும் சூடேறத் தொடங்கியிருந்தது. 

“உனக்கு கட்டிப் பிடிக்கத் தெரியாதா……….. ? “என்று காதருகில் லேசாக கேட்டாள். 

“இல்லை விடு…….. நான் போக வேணும்.” 

அவளின் மறுகை என் பிடரியில் தழுவி தலையை பலவந்தமாக இழுத்து குனிய வைத்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தபோது, எனக்கு என் மேலேயே சந்தேகம் வரத் தொடங்கியிருந்தது. ‘இதுக்குமேல் போனால் எல்லாமே கட்டுப்பாட்டை இழந்து விடும். ஓடு’ என்று உள் மனது துரத்தியது.
“மனைவி காத்திருப்பாள் போகவேணும்.” என்றபடி கொஞ்சம் பலவந்தமாகவே அவளை விடுவித்துக்கொண்ட போது சோபாவில் அமர்ந்து.
“என்ன பயந்துட்டியா………?” என்றபடி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

 வேகமாக வெளியே வந்து காரில் ஏறி உள்ளே லைட்டை போட்டு கண்ணாடியில் முகத்தை பார்த்தேன். அவளின் லிப்ஸ்டிக்  உதட்டில் ஓட்டியிருந்ததது. தண்ணீர் போத்தலை எடுத்து முகத்தைக் கழுவித்  துடைத்து விட்டுக் காரில் ஏறினாலும் மீண்டும் வெளியே வந்து சட்டையை கழற்றி நன்றாக உதறிப்போட்டுக் கொண்டேன். 

ஏனென்றால் சாப்பாட்டில் நீள முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்திருக்கும்  உறவு நீடிக்குமாம் என்று மனைவி சாவகாசமாக சொல்லி விடுவாள். என் சட்டையில் ஒருநீள  முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்தது என்று தப்பிக்க முடியாது. நீலப்பட நாயகனைப்போலவே என்னை பார்ப்பாள். அதனால் கால்சட்டையையும் கழற்றி உதறி போட்டுக்கொண்டு வீடு போனாலும், டளிடாவின் பெர்பியூம் வாசனை என்னில் ஒட்டியிருப்பது போலவேயிருந்தது. நல்லவேளை மனைவி நித்திரை. மெதுவாக குளியலறையில் நுழைந்து ஆடைகளை அவிழ்த்து அழுக்கு கூடையில் போட்டு விட்டு ஒரு குளியல். படுத்து விட்டேன். 

மறுநாள் கடைக்கு வரும்போதே புதுமணப் பெண்ணைப்போல வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவள், 

“என்ன நேற்று நன்றாக உறங்கினாயா ?” என்று கிண்டலாகவே கேட்டாள். 

 “என்ன நக்கலா……….? உனக்கு சரியான போதை போல. 

“உண்மையை சொல்லவா… ? எனக்கு அவ்வளவு போதையில்லை. ஆனால் முதன்முதலாக என் மனதுக்குப்பிடித்த ஒருவனை  கட்டித் தழுவிக்கொண்டேன். 

கொஞ்சம் திடுக்கிட்டவனாகவே, 
“என்னது ………?” 

“பயப்பிடாதே. அவ்வளவும் தான். இனி அப்படியொரு தர்ம சங்கடத்தை உனக்கு நான் கொடுக்க மாட்டேன்.” என்று விட்டு போய் விட்டாள். கோடையும் குளிருமாக மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அவ்வப்போது  வழமை போல பணம் அனுப்பவும் சேமிப்பில் வைக்கவும் வந்து போய்க்கொண்டிருந்தவள், இந்தவருடக்  குளிர் காலத்து இரவொன்றில் கொஞ்சம் சோர்வாக வந்தவளிடம், 

“என்ன கோப்பி போடவா ?” என்றதும், 

“இல்லை எனக்கு விஸ்கி.” என்றாள். 

“உன்னை வீட்டில் மட்டும் கொண்டு போய் விட மாட்டேன்.” என்றபடி விஸ்கி கிளாசை நீட்டியதும், 

“சிரிக்கும் மனநிலையில் நானில்லை.” என்றபடி அதை உறிஞ்சியவளிடம், 

“ஏன் ஏதும் பிரச்சனையா…………? 

“ம். ஓரளவு சரி வந்த பார்வையும் மகளுக்கு மீண்டும் மங்கலாகிப் போய்க்கொண்டிருக்கிறதாம். உடனடியாக அடுத்த சிகிச்சை செய்தாக வேண்டும். இப்போதைக்கு எதோ ஊசி போட வேண்டுமாம். அதுக்காக கொஞ்சம் பணம் தருகிறேன். நாளை அனுப்பி விட முடியுமா?” எனப்  பணத்தை நீட்டினாள். அதை வாங்கியபடி,
“சிகிச்சையை செய்ய வேண்டியதுதானே… ? சேர்த்திருக்கும் பணத்தை அனுப்பி விடலாமே…….? 

“எவ்வளவு சேர்ந்திருக்கிறது……..?”
நான் குறித்து வைத்த துண்டை எடுத்துப்பார்த்து விட்டு.
“இப்போதைக்கு ஆறாயிரத்து இருநூறு.” 

“இன்னும் குறைந்தது இரண்டாயிரம் தேவை. அதுக்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?” 

“என்னிடமும் இப்போ அவ்வளவு தொகை இல்லை. யாரிடமாது கேட்டுப் பார்கிறேன். கிடைத்தால் நல்லது.” 

“சரி விடு. எல்லாம் அவன் நினைத்தபடி நடக்கட்டும்.” என்று மேலே காட்டியவள், வெறும் கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பிவிட்டு, 

“நீ இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது ?” 

“ஏழு வருசமிருக்கும்.” 

“அதுக்கான ஆதரரம் ஏதாவது இருக்கா ?” 

“பாஸ்போட் மட்டும்தான். அதுவும் என்னிடமில்லை.” 

“நன்றாக யோசித்துப்பார். வேறை ஏதாவது…….?” 

“வேறை ஏதாவதென்றால் ஆரம்பத்தில் வீதியில் நிக்கும்போது சில தடவை வீசா இல்லாததுக்காக என்னை கைது செய்திருகிறார்கள்.” 

“மேசையில் தட்டிய நான், 

“அது போதும். எப்போதாவது இரவு தடுத்து வைதிருந்தார்களா? நீதிபதி ஒருவர் முன்னால் கொண்டுபோய் உன்னை நிறுத்தியிருந்தர்களா?” 

“அது முதல் தடவை. அப்படி நடந்தது.” 

“அப்போ உன்னை விடுதலை செய்யும்போது ஏதாவது பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதில் ஒரு பிரதி உன்னிடம் கொடுத்தார்களா ?” 

“எதுக்கு இதெல்லாம் கேட்கிறாய்………?” 

“கேட்டதுக்குப் பதில் சொல்லு.” 

“ம்…….. கொடுத்தார்கள். அதை எங்கேயோ தொலைத்து விட்டேன். 

“அது போதும். நாளைக்கே உன் அம்மாவுக்கு போனடித்து உன் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை உடனடியாக அனுப்பி வைக்கச் சொல்லு.” 

“எதுக்கு…….? 

“பிரான்சில் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்த ஆதாரத்தோடு நிரூபித்து வதிவிட உரிமை வாங்கி விடலாம். அது மட்டுமில்லை, உன் மகளை இங்கு வரவழைத்து சிகிச்சை கூட செய்து விடலாம். 

“உண்மையாகவா……..? அவள் கண்கள் விரிந்தது. 

“உண்மை. விண்ணப்ப படிவங்கள் ஒன் லைனிலேயே எடுக்கலாம். நான் அதை செய்கிறேன். அதே நேரம் உன்னை இத்தனை வருடங்களாக தெரியுமென மூன்று பிரெஞ்சுக்காரர்களின் கடிதம் வேண்டும். ஒன்று நான் எழுதலாம். உனக்கு தெரிந்த இருவரின் கடிதம் எடுக்க வேண்டியது உன் பொறுப்பு.” 

கொஞ்சம் யோசித்தவள்,
“வழமையாக கொண்டோம் வாங்குகிற பாமசிக் காரரிடம் வாங்கலாம். இன்னுமொருவர்…….ஓகே. அவரிடமும் வாங்கலாம்.” 

“யாரந்த முடி திருத்தும் கடை வைத்திருக்கும் கிழவன் தானே……..?” 

“உனக்கெப்படித் தெரியும்.” கொடுப்பினுள் சிரித்தாள். 

“அடிக்கடி உன்னோடு கதைத்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். நல்ல மனிதர் தான்.  பிள்ளைகள் இல்லை. மனைவி பல வருடங்களுக்கு முன்னர்  இறந்து விட்டார். நான் கூட முன்னர் அவரிடம் தான் முடி வெட்டிக் கொள்வேன். இப்போ அவருக்கு வயசாகி விட்டதால் கை நடுங்குகிறது. அதனால் அவரிடம் போவதில்லை.” 

“நல்ல மனிதர் தான். பேச்சுத் துணைக்காக என்னிடம் அடிக்கடி வருவார். பின்னர் வாரத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் கடையை சாத்தி விட்டு சமையல் செய்து வைத்து  என்னை அழைப்பர். பகல் முழுவதும் அவரோடேயே கழிப்பேன். பணம் வேண்டாமென மறுத்தாலும் பலவந்தமாக திணித்து அனுப்பி விடுவார்.” 

“அதெல்லாம் இருக்கட்டும். கடிதத்தை வாங்கி விடு. அது சரி, பின்னர் போலிஸ் உன்னை கைது செய்வதில்லையா?” 

“இல்லை. எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. அவர்களுக்கு வேண்டியதை அவ்வப்போது கொடுத்து விட வேண்டும்.” 

“கொஞ்சம் அதிர்ச்சியாகவே, என்னது இலஞ்சமா……….? இந்த நாட்டு போலீசா…….? 

“நீ நினைப்பது போல பணமாக இல்லை. அவர்கள் இரகசியமாக தனித்தனியாக  அழைப்பார்கள். நாங்களும் அவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். அவர்களும் எங்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். ஒரு எழுதப்படாத ஒப்பந்தம்.” 

“உண்மையாகவா………?” 

“உன் நண்பன் பாஸ்கல் கூட அவ்வபோது அழைப்பான். அவனிடம் கேட்டு விடாதே. அவன் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். பாவம் தெருவில் என்னோடு நிக்க வேண்டும்.” என்று சிரித்தபடி கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பினேன். 

“எனக்காக அந்த டளிடா பாடலை ஒருக்கா போடுகிறாயா ?” என்றதும் யூ டியுப்பில் அதை எடுத்து ஓட விட்டேன்.
Je ne rêve plus, je ne fume plus
Je n’ai même plus d’histoire
நான் இனி கனவு காணவில்லை, இனி புகைப்பதில்லை
என்னிடம் இப்போது ஒரு கதை கூட இல்லை
நீங்கள் இல்லாமல் நான் அழுக்காக இருக்கிறேன்
நீங்கள் இல்லாமல் நான் அசிங்கமாக இருக்கிறேன்
நான் ஒரு ஓய்வறையில் அனாதை போல இருக்கிறேன்
நான் இனி என் வாழ்க்கையில் வாழ விரும்பவில்லை
நீங்கள் வெளியேறும்போது என் வாழ்க்கை முடிகிறது
எனக்கு இனி வாழ்க்கை இல்லை, என் படுக்கை கூட இல்லை
இது ஒரு நிலைய தளமாக மாறுகிறது
நீங்கள் கிளம்பும்போது
எனக்கு உடல் நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
இரவில் என் அம்மா வெளியே சென்றது போல
அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள்
எனக்கு உடல் நலமில்லை
நீங்கள் எப்போது என்று உங்களுக்குத் தெரியாது
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது
அது விரைவில் இரண்டு ஆண்டுகள் ஆகிறது
நீங்கள் கவலைப்படவில்லை என்று
ஒரு பாறை போல
பாவம் போல
நான் உங்களிடம் தொங்குகிறேன்
நான் சோர்வாக இருக்கிறேன்
அவர்கள் இருக்கும்போது மகிழ்ச்சியாக நடிப்பது
நான் ஒவ்வொரு இரவும் குடிப்பேன்
ஆனால் அனைத்து விஸ்கிகளும்
என்னைப் பொறுத்தவரை எங்களுக்கும் அதே சுவை இருக்கிறது
எல்லா படகுகளும் உங்கள் கொடியை சுமக்கின்றன
நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை
எனக்கு உடல் நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
நான் உங்கள் இரத்தத்தை உங்கள் உடலில் ஊற்றுகிறேன்
நீங்கள் தூங்கும் போது நான் ஒரு இறந்த பறவை போல இருக்கிறேன்
எனக்கு உடல்நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள்
என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய்
இன்னும் உங்கள் தோலுக்கு முன் எனக்கு திறமை இருந்தது
இந்த காதல் என்னைக் கொல்கிறது
அது தொடர்ந்தால்  தனியாக இறந்துவிடுவேன்
ஒரு முட்டாள்தனமான குழந்தையைப் போல என் வானொலியின் அருகில்
பாடும் என் சொந்தக் குரலைக் கேட்பது
எனக்கு உடல்நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
இரவில் என் அம்மா வெளியே சென்றது போல
அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள்
எனக்கு உடல் நலமில்லை
அது சரி, எனக்கு உடல் நலமில்லை
எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள்
என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய்
என் இதயம் முற்றிலும்  சரியில்லை
சுற்றிலும் தடுப்புகள் உள்ளன
என் உடல் நலமில்லை ஏன்  என்று கேட்கிறீர்களா?
 
அவளும் சேர்ந்தே பாடியவள், அடுத்த கிளாசையும் முடித்து விட்டு,  “பணத்தை மறக்காமல் அனுப்பி விடு.” என்று விட்டு போய் விட்டாள்.
வேலை முடிந்து போகும்போது தொலைத்துவிட்ட எதையோ தேடுபவளைப்போல  சிகரெட்புகையை ஊதியபடி  லேசாக தள்ளாடிய படியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அன்றிரவு குளிர் வேறு அதிகமாக இருந்தது. கடலில் அலை வேறு அதிகமாக இருந்தது. மழை பெய்யுமென வானிலை அறிக்கை வேறு போனில் காட்டிக் கொண்டிருந்தது. காரை நிறுத்தி வீட்டில் கொண்டு போய் விடவா என கேட்க நினைத்தாலும், அன்றைய அனுபவத்துக்கு பிறகு நான் அப்படியொரு முயற்சியை எடுத்ததில்லை. எனவே கையசைத்து விட்டு போய் விட்டேன். அதுதான் நான் கடைசியாகப் பார்த்தது.
Ooooooooooooooooooooooooo 

அன்று பாஸ்கலின் வரவுக்காகவே காத்திருந்தேன். இந்தக் கிராமத்தின் காவல்துறை அதிகாரி அவன், நீண்டகால நண்பன். இரவு அவன் வரும்போதே, “செய்தி தெரியுமா?” என கேட்டபடி வந்தான். 

“என்ன ஸ்ட்ரைக் தானே……..? 

“இல்லை……… டளிடா விடயம்.” 

“அதுக்குதான் உனக்கு போனடிதேன். காலை இரண்டு சிவில் போலிஸ் வந்து விசாரித்து விட்டு போனார்கள் என்ன நடந்தது?” 

“ஓ………. தெரியாதா? அவள் இறந்து போய் விட்டாள். யாரோ நேற்றிரவு அவளை கொண்டுபோய் காட்டுப்பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு எரித்துக் கொன்று விட்டார்கள்.” 

இழவுச் செய்திகள் எனக்கு புதிதில்லை தான். ஆனாலும் அது டளிடா என்றதும் லேசாகத்  தலை கிறுகிறுத்தது. 

“நிச்சயமாக தெரியுமா ? அது அவள் தனா?” 

“ம்.  அவள்தான். நானும் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன். அவளின் கைப்பை பற்றைக்குள் கிடந்தது. அதில் அவள் தொலைபேசி இருந்தது. அதிலுள்ள விபரங்களை வைத்துத்தான் அடையாளம் கண்டோம். ஏனென்றால்  டயரை போட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.  உடல் அடையாளம் காண முடியாதவாறு எண்பது வீதம் எரிந்து விட்டது.” 

“என்ன கொடுமை. யாரென்று தெரியுமா………?” 

“காட்டு பகுதிக்கு செல்லும் வீதியில் உள்ள சி சி டி வி காமராவையும் அவள் உடல் கிடந்த இடத்தில் இருந்த கார் டயர் அடையாளத்தையும் வைத்து ஒருவனை கிரைம் பிரிவு கைது செய்திருக்கிறார்கள். அவன் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்றின் உறுப்பினர். விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு அவ்வளவு தான் தெரியும்.” 

“ஏன் செய்தான்……….?” 

“நிச்சயமா ஒருத்தன் தனியாக செய்திருக்க முடியாது. விசாரணை முடிவில்தான் தெரியும். வெளிநாட்டவர்களைக் குறிப்பாக பாலியல்தொழில் செய்யும் பெண்களை, அதுவும் இஸ்லாமியப்  பெண்களை குறிவைத்து இயங்குகிறார்கள். அது அவர்களுக்கு இலகுவான இலக்கு. கைது செய்யப் பட்டாலும் இலகுவாக கொஞ்ச நாள் தண்டனையோடு வெளியே வந்து விடுவார்கள்.” 

“என்ன……. நீயே இப்பிடி சொல்கிறாய்?” 

“ம்……இறந்து போனவர் சட்டத்துக்கு புறம்பாக இங்கு தங்கியிருந்தவர். சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்தவர். அவர் சார்பாக வாதாட கூட யாரும் வர மாட்டார்கள். இவ்வளவும் போதுமே குற்றவாளிக்கு.” 

“ஆனால் சட்டம் என்று ஒண்டு இருக்கு தானே……?” 

லேசாக சிரித்தபடி, “ஒரு பியர்.” என்றான். 

அவனுக்காக கிளாசில் நிரப்பிய பியரின் நுரையைப் போலவே அவளின் நினைவுகள் அத்தனையும் என்னுள் ஒருதரம் பொங்கி அடங்கியது. மூளையின் ஓரத்தில்சின்னதாக ஒட்டியிருந்த அவள் மகளின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாவது போலவிருந்தது. அவனுக்கான பியரை வைத்துவிட்டு கழிப்பறையில் போய் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்திய குளிர் நீரால் அடித்து கழுவி துடைத்து விட்ட பின்தான் அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்க முடிந்தது. ஒரு முடிவெடுத்தேன். 

அவளின் மத முறைப்படி இறந்துபோனால் உடல் சூடு ஆறுவதுக்கு முன்னரே மசூதிக்கு கொண்டுபோய் வாழ்நாளில் ஏதும் பாங்கள் செய்திருந்தால் அதுக்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்தித்து புதைத்து விடுவார்கள். அப்போதான் ஆன்மா சொர்க்கம் போகும் என்பது அவர்களது நம்பிக்கை. உடல் கிடைக்கா விட்டால் என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்கள் முறைப்படி உடலை எரித்து சாம்பலை கடலிலோ ஆற்றிலோ நீரில் கரைத்து சடங்கு செய்வார்கள்.
பியரை உறுஞ்சிக் கொண்டிருந்த பாஸ்கலிடம் போய்,
“அவள் எரிக்கப்பட இடத்திலிருந்து கொஞ்சம் சாம்பல் மட்டும் எடுத்துக் கொடுக்கிறாயா……?” 

திடுகிட்டவன், “என்ன என் வேலைக்கு முடிவு கட்ட போகிறாயா…………?” 

“இல்லை. ஒன்றும் பிரச்னை வராது. கொஞ்சாமா ஒரு பிடி மட்டும்………..” 

“விசாரணை முடியும்வரை அதெல்லாம் முடியாது. இப்போ அந்த இடம் கிரைம் பிரிவின் கட்டுப் பாட்டிலிருக்கு.” 

“இருக்கட்டுமே……….நீ கூட அவளை பாவித்திருக்கிறாய். அந்த நன்றிக்காவது செய்.” 

“ஓ…….. சொல்லி விட்டாளா? சரி நாளை கொண்டு வந்து தருகிறேன்.” 

ஆனாலும் எனக்கு அவனில் நம்பிக்கையில்லை கடுதாசியை கொளுத்தி அந்த சாம்பலை கொண்டுவந்து கொடுத்து போலிஸ் புத்தியை காட்டி விடுவான். எனவே,
“சரி வேண்டாம். சனமேயில்லை. பியரை குடித்து முடி. கடையை பூட்டி விட்டு இரண்டு பேரும் போகலாமென முடிவெடுத்து இரண்டு பேருமே போனோம். அவன் காட்டிய இடத்தில காரை நிறுத்திவிட்டு போனில் உள்ள டோச் வெளிச்சத்தில் நடந்துபோய்  ‘போலீஸ்’ என என எழுதப்பட்டிருந்த சிவப்பு வெள்ளை நாடா கட்டியிருந்த இடத்தில் கொஞ்சம் சாம்பலை அள்ளி தயாராய் கொண்டுபோயிருந்த பொலிதீன் பையில் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டிருந்தோம். 

அடுத்தநாள் காலை தபால்நிலையத்தில் பணத்தை அனுப்பிய பின்  மொரோக்கோ இலக்கத்துக்கு விபரத்தையும் அனுப்பி விட்டு கடையை திறந்து  விஸ்கி போத்தலின் மூடியை திறந்து வாயில் கவிழ்த்து அது தொண்டை வழியே களக்  களக் என்று இறங்கும் சத்தம் நீண்ட நாளின் பின்காதில் கேட்டது. பாதி முடிந்து விட மீதியை எடுத்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு  முடி திருத்தும் கடைக்கு போயிருந்தேன்.  கடை பூட்டியிருந்தது. அண்ணாந்து பார்த்தால்  கிழவன் கடற்கரையை பார்த்தபடி வீட்டு பல்கனியில் நின்றிருந்தார். பெரிய டைடானிக் ஜாக் எண்டு நினைப்பு. 

“ஓய்ய்…….என்ன கடை பூட்டா ?”  என்றதும், 

“ஓம்.  இன்று புதன் கிழமை. கடை லீவு என்றார். 

அவள் இனி வர மாட்டாள். வந்து கடையை திற.”  என்றதும் வேகமாக வந்து கடையை திறந்து என்னை உள்ளே தள்ளி,
“என்ன சொன்னாய் ? நான் காத்திருப்பது உனக்கு எப்பிடித் தெரியும்?” என்றவரிடம், 

“முதல்ல மயிர வெட்டு. பிறகு சொல்லுறேன்.” 

சாதாரணமாவே கை நடுங்கும் அவருக்கு இன்னமும் வேகமா நடுங்கத் தொடங்கியிருந்தது. 

“எப்பிடி வெட்ட வேணும்………. சொல்லு.” 

“மொட்டை.” 

“என்னது…….? மொட்டையா? நீ குடித்திருக்கிறாய். உளறாதே ………” 

“சொன்னதை செய்.”  என்றதும், மெசினை எடுத்து வழித்தார். கண்ணாடியில் மொட்டைத்தலையைச்  சரி பார்த்த போது நிலத்தில் கொட்டியிருந்த மயிரையெல்லாம்  கூட்டிக் கொண்டிருந்தார். எல்லா இனத்தினதும் மதத்தினதும் சாதியினதும்  மயிரெல்லாம் குப்பையாய் ஒரு மூலையில் குவிந்து கிடந்தது. 

“சரி இப்பவாவது சொல்லேன். எப்பிடித் தெரியும்? ஏன் வர மாட்டாள்?” 

“அவளுக்காக என்ன சமைத்து வைத்திருக்கிறாய் ?” 

 லேசான வெட்கத்துடன், “அவளுக்கு பிடித்தமான  மட்டன் தஜின் செய்து வைத்திருக்கிறேன்.” 

“சரி போய் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வா.” 

கொஞ்சம் தயங்கிய படியே மேலே வீடுக்கு போய் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் மட்டன் தாஜின்  கறியும் அதுக்கு மேல் ஒரு பாண் துண்டையும் வைத்து கொண்டு வந்து நீட்டியவர், இனியாவது சொல்லலாம் தானே என்பது போல பார்த்தார். 

“செய்தி படித்தாயா ? பெண் எரித்துக்கொலை.” 

“ம்……… படித்தேனே.” 

“அது அவள்தான்.  இனி வர மாட்டாள்.” 

“ஓ………. ஏசுவே……. யார் செய்தது?” 

“யாரோ உன்னைப்போலவே ஏசுவை நம்பும் ஒருத்தன்.”
அவரின் கண்களில் வழிந்த கண்ணீரை எனக்கு தெரியாமல் திரும்பி துடைத்துக் கொண்டார். 

“என்ன அழுகிறாயா ? இவ்வளவு அன்பு வைத்திருந்தால் நீ அவளை திருமணம் செய்திருக்க வேண்டும். சரி இந்த கிண்ணம் உனக்கு தேவையா?
‘இல்லை.’ என்று தலையசைத்தபடி  கதிரையில் அமர்ந்தவர், அங்கிருந்து வெளியேறிய என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். 

வெளியேவீதியை தண்டி  வந்து  கடலைப் பார்த்தேன். மெல்லிய அலைகள் மட்டுமே. மீனைத் தேடி வளைய வரும் நீர் காகங்களைத் தவிர யாருமில்லை. நிலத்தில் மண்டியிட்டு போத்தலை திறந்து மேலும் சில மிடறுகளை விழுங்கி விட்டு, 

“ஓ………. அல்லாஹ் உனை எப்படி தொழுவதென்று எனக்குத் தெரியாது. டளிடா தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்திருக்கலாம். அவள் பாவங்களை மனித்து சொர்க்கத்தினுள் அனுமதிக்குமாறு ரிழ்வான் மலக்கிடம் கட்டளையிடும். அவள் ரூஹ்   சாந்தியடையட்டும்.” 

என்றபடி சாம்பலை எடுத்து கடலில் தூவி,  மிச்சமிருந்த விஸ்கியையும் கடலில் தெளித்துவிட்டு. 

‘டளிடா நீ என்னை எவ்வளவு நேசித்தாயோ அவ்வளவு நானும் உன்னை உன்னை நேசித்தேன்’ என்றபடி மட்டன் தஜினை கிண்ணத்தோடு கடலில் விட்டேன். அது தள்ளாடிய படியே அசைந்து கொண்டிருந்தது. கடல் நீரை கொஞ்சமெடுத்து தலையில் தெளித்து விட்டு.  நான் மொட்டையடித்த காரணத்தை மனைவி கேட்பாள் என்ன சொல்லலாமென  யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.