Navigation


RSS : Articles / Comments


தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-

3:54 AM, Posted by sathiri, No Comment

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-

சாந்தி ரமேஷ் வவுனியன் -

'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை.சினிமா என்ற பெயரில் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை ஏற்கனவே 'பூ(ஈ)க்கள்" என்று கத்;தியும் துவக்கும் காட்டி எமது தொலைக்காட்சிகளும் தென்னிந்தியப் பெரும்பான்மைப் படங்கள் போடும் கனவுலக ஆட்டத்தையுமே புதுமையான பூக்கள் என்று பெயரிட்டு கொசுக்களைப் படம் காட்டிய கி.செல்லத்துரை அவர்கள் திரும்பவும் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை கொட்டி தனது மகனை கதாநாயகனாக்கி 'இளம்புயல்" என்ற பெயரில் திரைப்படம் என்று ஒன்றைத் தயாரித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல் வெளியீட்டினை கடந்த வெள்ளி 25.07.08 அன்று சென்னையில் நிகழ்த்தியுமிருக்கிறார்.

எம்மவர் சினிமா என இதற்குப் பெயரிட்டு எம்மவர்களுக்கான சினிமா இதுதான் என தமிழகத்தில் போய் நின்று வீரவிளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த உரையைக் கேட்கின்ற ஒவ்வொரு ஈழத்தவனும் நாக்கைப்பிடுங்கி (இவர்களுக்காக நாக்கைப் பிடுங்குவது அதிகம்தான்) சாகலாம் போலத்தானிருக்கும். இல்லை எங்கள் கால்களில் இருப்பதைக் கழற்றி எங்கள் முகத்தில் நாங்களே அடிக்கத் தான் தோன்றுகிறது. போதாமைக்கு ஈழத்தழிழர் இங்கிருந்தே (அதாவது இந்தியாவிலிருந்தே) ஈழத்துக்குப் போனோம் , இங்கிருந்து போர்வீரர்களாகப் போனவர்களின் வம்சமே இன்று போராடுகின்றது என அருளுரை வழங்கியிருக்கிறார். ஈழத்தமிழினம் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதும் எங்களுக்கான தனித்துவம் பண்பாடு கலாசாரம் மொழி உள்ளது என்பதும் எமது பூர்வீக நிலத்தை கொள்ளையிடும் சிங்களர்களுடன் நடக்கும் தமிழீழ விடுதலைப்போரின் வலிகளும் துயர்களும் டென்மார்க் வந்ததுடன் கி.செல்லத்துரைக்கு மறந்துவிட்டதா அல்லது ஞாபகப்பதிவில் மங்கிவிட்டதா ? சிங்கள இராணுவத்தின் கொலைப்பட்டியலில் குடும்பத்திலிருந்து 6பேரை கொடுத்துவிட்டு டென்மார்க் போனேன் என உருக்க உரை வழங்கியவருக்கு உண்மையில் ஈழத்தமிழரின் ஊற்று எங்கே தோற்று எங்கேயென்பது புரியாமல் கேவலக்கெட்ட ஒரு சினிமாவுக்காக எங்கள் இன மானத்தையே தமிழகத்தி;ல் போய் நின்று விற்றுவிட்ட வெங்காயச் சினிமா இயக்குனர் திலகம் கி.செ.துரையென்றால் மிகையில்லை.


குடும்பத்தில் ஆறுபேரை இலங்கை இராணுவத்திற்கு பலி கொடுத்தவருக்கு அந்த வலியிருந்திருப்பின் இப்படியான வார்த்தைகளைச் சொல்ல மனம் ஒப்புமா ? யாரோ சிந்தும் குருதியில் தங்களை வளர்க்கும் துரோகத்தை கி.செல்லத்துரையால் தான் செய்ய முடியும்.அதுமட்டுமல்ல தமிழ்சினிமாவில் இருக்கின்றவர்கள் இலங்கையிலே ஓர் இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல அதற்கு தமிழ் சினிமாதான் காரணம் என்பதைத் தமிழகத்தில் இருக்கின்ற சினிமாக்கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்கிறார் இந்த அறிவுசீவி. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் உட்பட சினிமாத்துறை சார்ந்த எம்மில் நேசமுள்ளவர்கள் ஈழத்தமிழினம் அதன் போராட்டம் என்ன என்பதைப் புரிந்து எங்களுக்கான பலம் தமிழகத்தில் பெருகியிருக்கிறது. இந்நிலையில் தனது சுய விளம்பரத்துக்காகவும் சொந்த இலாபத்துக்காகவும் கதையளக்கும் இவரிடமிருந்து ஈழத்தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ கற்க எதுவுமில்லை. தமிழக சினிமாவைப் பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே நடப்பதாக ஒரு மாயையான கனவை தமிழகக் கலைஞர்கள் மத்தியில் உரைத்த கி.செல்லத்துரையின் உதவாத சினிமாவை உலகம் முழுவதிலும் புறக்கணிக்கப் போகின்றது தமிழினம்.


இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இறந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களின் தியாகங்களும் இந்த விளக்கம் கெட்ட கி.செ.துரை காற்றாய்,கடலாய்,பெயர் சொல்லாமல் ஊர் சொல்லாமல் உயர்ந்த லட்சியத்துக்காய் தங்கள் இளைய உயிர்களை உதிர்த்த மாவீரர்களின் தியாகங்களெல்லாம் வெங்காயச் சினிமாவின் தாக்கம் என்கிறாரா ? தமிழக சினிமாக்களில் தலைவர்களின் பின்னால் நூறுபேர் நின்று தலைவர் வாழ்க தலைவர் வாழ்க என கி.செல்லத்துரைக்கும் கோஷம் போடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ சிவாஜி கணேசனின் 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" பாடலில் பாதிப்பு கி.செல்லத்துரையை தலையில் முடியைக் கூட உதிர்த்துவிட்டதாக உணர்ச்சி விழிம்பில் நின்று துடித்திருக்கிறார். அப்போ சினிமாவைப் பார்த்துத்தான் தங்கைக்கு வாழ்வமைத்துக் கொடுத்தாரா ? அப்போ சுய சிந்தனையே இவரிடம் இல்லையா ? எல்லாம் சினிமாவின் வழிநடநத்தல்தானா ? தன்னை ஒரு தமிழ் ஆசிரியானாக கலைஞனாக அறிமுகமாக்கிய மனிதரின் மூளை மண்டலமே சினிமாவின் இயக்குதலா ? வயது முதிர மனித உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் நிகழ்வது போல முடியுதிர்வும் இயற்கை. ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளவயதிலே நரையும் வழுக்கையும் பலருக்கு வந்துவிடுகிறது. காரணம் எமது இளைஞர்கள் ஒன்று இரண்டு மூன்று வேலைகளென்று செய்து உழைத்து தங்கள் தலைகளை விமான ஓடுபாதை நிலைக்கு வர வைத்துவிடுகிறார்கள். இப்படியான உழைப்பாழிகளின் பணத்தை இந்த மனிதர் தனது உதவாச் சினமாவுக்கு முதலீடாகவும் மாற்றுகிறார்.


ஈழத்தில் எத்தனையே தேவைகள் நிறைந்து கிடக்கிறது. நாளும் பசியிலும் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலிலும் ஆட்லறி வீச்சுகளிலும் பிணங்களாக எம்மினம் நாளும் சாகிறது. அந்த மண்ணுக்காக அந்த மக்களுக்காக இந்தப் பணத்தை உதவினால் எத்தனையே நல்லவை எங்கள் மண்ணில் நடக்கும். மனமிருப்போரிடம் பணமில்லை பணமிருப்போனிடம் கொடுக்கும் மனமில்லை. வீணாக தனது குடும்ப விளம்பரத்துக்காக எத்தனை கோடிகளையும் செலவு செய்யத் தயாராக இந்த ஈழத்தமிழன். (ஈழத்தமிழருக்கே இழிவு)அமீர் போன்றவர்கள் தமிழகசினிமாவை கதாநாயகப்பிடியிலிருந்து மீட்க போராட ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி ஒரு சதத்துக்கும் பயனில்லாத ஓடிப்பிடித்து விளையாடும் கனவுப்படம் காட்டும் கி.செல்லத்துரை அமீர் போன்ற இயக்குனர்களுக்கு உதவினால் கூட குறைந்த செலவில் நிறைந்தவொரு சினிமாவை தருவார்கள். நல்லதொரு சினிமாவுக்கான தளமாக தனது பொருளாதார வளத்தை பயன்படுத்தினால் எம்மவர்களே சிறந்த சினிமாவை எடுப்பார்கள். ஈழத்து இளைஞன் சோமிதரன் அண்மையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 'எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தைத் தந்திருக்கிறான்.


சோமிதரன் செய்திருப்பது ஈழத்தமிழனத்தின் ஒரு வரலாற்று ஆவணம். யாழ் நூலக எரிப்பின் நினைவுகளை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் ஆவணமாக்க அரும்பாடுபட்டு உழைத்திருக்கிறான். ஆயினும் இந்த இளைஞனது முயற்சிக்கு வீணாக இறைக்கும் பணத்தில் ஒரு பங்கைக் கொடுத்து உதவியிருப்பின் 'எரியும் நினைவுகள்" போல எத்தனையோ நினைவுகளை சோமிதரனும் சோமிதரன் போன்ற திறமையாளர்களும் தருவார்கள். மிகுந்த நெருக்கடிக்குள் சிறந்த தொழில்நுட்ப வசதியற்ற வன்னிக்குள்ளிருந்து வெளியான போராளிக்கலைஞர்களின் திரைப்படங்கள் எத்தனையோ அவையே எங்கள் ஈழத்து சினிமாவின் ஊற்றான ஆணிவேர்கள். இவையெல்லாம் தமிழக சினிமாவிலிருந்து பிறந்தவையல்ல எங்கள் கலை எங்கள் கண்களுக்குள்ளிருந்து எங்கள் மனிதர்களுக்குள்ளிருந்து பிறந்தவை. இதை விலைபேச டென்மார்க்கிலிருந்து புறப்பட்டு ஈழத்தமிழர் போராட்டமானது இந்தியா சினிhவிலிருந்து பிறந்ததென கதைவிடும் கி.செல்லத்துரையின் 'இளம் புயல்" தமிழர் வாழும் எந்த தேசத்திலும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேலாக ஈழத்தமிழர் படும் துயரை ஒற்றை வரிக்குள் ஒளித்து எங்கள் வாழ்வின் வலியை சாதாரண சினிமாவுக்கு ஒப்பாக்கிய இந்த கி.செல்லத்துரையின் இரண்டாவது படமான 'இளம் புயல்" அனைத்துத் தமிழர்களும் புறந்தள்ளி சிறந்த படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும். இறுதியாக , பணத்துக்காக தமிழகக்கலைஞர்களின் தமிழக சினிமா உலகின் படைப்புக்களை திருடி வலைப்பதிவேற்றி பல்லாயிரம் டெனிஸ்குரோணர்களை இலாபமாகப் பெறுகிறார் கி.செல்லத்துரை.

இவரது மேற்பார்வையில் இயங்கும் பல இணையத்தளங்கள் திரைக்கு வந்ததும் வராததுமாக திரைப்படங்களை திருடி தனது சுய வருவாயைப் பெருக்கிக் கொள்கின்ற பெருச்சாளி. இத்தகைய இழிவான தொழில் செய்யும் கி.செல்லத்துரை மீதும் அவரது குழு மீதும் தமிழக சினிமாவுலகம் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை எவ்வளவோ செலவுகளின் மத்தியில் தமிழகத் தயாரிப்பாளர்கள் வெளியிட வீட்டுக்குள் இணைய இணைப்பும் இணைய வழங்கலுக்கான வசதியையும் பெற்று உங்கள் முதுகிலேயே சவாரி செய்யும் இந்தத் துரோகத்தனத்தை இந்தியத் திரையுலகம் இனங்காண வேண்டும். இறுதியாக ஈழத்தமிழர்கள் இத்தகைய வெளியிடுகளைப் புறக்கணிப்போம். சிறந்த படைப்புக்களை வரவேற்போம். ஈழம் தமிழகம் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறந்த சினிமாக்களையும் வரவேற்போம். பருத்திவீரனைத் தந்த அமீர் , ஆணிவேரைத் தந்த ஜான் போன்ற இயக்குனர்களை வரவேற்போம். 'பூக்கள்" 'இளம்புயல்" என்று ஆக்களை ஏமாற்றும் கி.செல்லத்துரையிடமிருந்து சிறந்த படைப்புக்கள் கிடைக்குமாயின் அதை ஊக்குவிக்கவும் தயாராகவுள்ளோம். கி.செல்லத்துரை நீங்கள் தயாரா ? அல்லது இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பாட்டுப்பாட உங்கள் பிழைகளை மறைக்க புனைபெயர்களைத் தேடுவீர்களா ? அல்லது பூக்கள் நாயகர்களை அனுப்பி துப்பாக்கியால் சுடுவீர்களா ? எதுவாயினும் வாருங்கள். கருத்தை கருத்தால் வெல்வோம். சிறந்த கலைப்படையல்களைப் படைப்போம்.

மாயாவி

7:01 AM, Posted by sathiri, 2 Comments

மாயாவி

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை அடிபடத்தொங்கிச்சுது.அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்குமாம்.

யாராவது பிடிக்கப்போனால் முள்ளம்பண்டி மாதிரி முள்ளு சிலிர்த்து பிடிக்கிறவரை குத்திப்போடும். இப்பிடி ஒருகதை. ஆளை பிடிக்க ஏலாதாம் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓடிடுவானாம்.உடம்பு வழுக்கிற மாதிரி இருக்காம். சிலநேரம் திடீரெண்டு மறைஞ்சிடுவானாம்.இப்பிடி ஒருகதை . அதுக்கும் மேலைபோய் சிலநேரம் ஆகாயத்திலை எழும்பி பறக்கத்தொடங்கிடுவானாம். இருட்டுக்குள்ளை அவனின்ரை கண்கள் பச்சைக்கலரிலை மின்னுமாம்.இப்பிடி ஆளாளுக்கு அவிட்டு விட்டு வதந்தி ஊரெல்லாம் பரவி. ஊர்ச்சனத்துக்கெல்லாம் பயம்தொட்டிட்டுது. இரவிலை வெளியாலை போறதையும் சனம் குறைச்சுப்போட்டுது.

இரவு கள்ளடிக்க தனியப்போறவை கூட பொழுதுசாயமுதலே போத்தில்லை வாங்கியந்து வீட்டிலை வைச்சு அடிக்கத்தொடங்கிட்டினம்.அது மட்டுமில்லை இரவிலை தோட்டக்காவலுக்கு போறவையள் இரவு செக்கன்சோ (9 மணி கடைசிக் காட்சி ) படம் பாக்கப்போற வாலிபக்கூட்டங்களும் போகாமல் விட்டிட்டினம்.அந்த மர்ம மனிசனை சிலபேர் இரவிலைபாத்தும் இருக்கினம் ஆனால் ஆக்களைக் கண்டதும் அவன் எப்பிடியோ திடீரெண்டு இருட்டுக்குள்ளை மறைஞ்சிடுறான். அது வயற்கரை வைரவர்தான் உலாவுறார் பயப்பிடாதைங்கோ அப்பிடி யாரும் கண்டால் ஒரு தேவாரத்தை சொல்லுங்கோ ஒண்டும் நடக்காது எண்டு ஊருக்குள்ளை சில பழசுகளின்ரை புராணம். அதே நேரம் ஊருக்குள்ளை களவும் போகத்தொடங்கிட்டுது.சரி வைரவர்தான் இரவிலை உலாவுறாரெண்டால் கடவுள் ஏன்களவெடுக்கவேணும் எண்டொரு குளப்பம்.இந்த மர்ம மனிசன் திரியிறதை சாட்டா பயன்படுத்தி வேறை யாரோ களவுக்கு வெளிக்கிட்டினமோ எண்டும் இல்லை அந்த மர்ம மனிசன்தான் களவெடுக்கிறானோ எண்டும் சந்தேகம்.இப்பிடியான குளப்பத்திலை ஒருநாளிரவு வெள்ளரித் தோட்டத்துக்கு காவலுக்கு படுத்திருந்த வைத்திலிங்கத்தார் ஏதோ சத்தம் கேட்டு எழும்பி ரோச்லைற்றடிச்சு பாக்கிறதுக்கிடையிலை மர்மமனிசன் அவருக்கு கண்ணைப்பொத்தி அடிச்சுப்போட்டு ரோச்லைற்ரையும் பறிச்சுக்கொண்டு பறந்திட்டான். பயத்திலை அய்யோ எண்டு கத்திக் கொண்டு ஊருக்குள்ளை ஓடியந்த வைத்திலிங்கத்தார் மயங்கிவிழ. சனமெல்லாம் சேந்து தூக்கிக்கொண்டு போய் சங்கானை ஆஸ்பத்திரியிலை போட்டிச்சினம்.

அடுத்தநாள் ஊர்ச்சனமெல்லாம் ஒட்டுமொத்தமாய் நான்உட்பட சங்கனை ஆஸ்பத்திரியிலைதான் . போனவை எல்லாரும் வைத்திலிங்கத்தாரை வருத்தம் பாக்குறதுக்கில்லை . எல்லாருக்கும் அந்த மர்ம மனுசனை பற்றி அறியிறதுதான் முக்கிய நோக்கம். அவன் எப்பிடியிருப்பான் உயரமா கட்டையா??கறுப்பா சிவப்பா ??இல்லை கலர்கலரா இருப்பானா??உடம்பிலை முள்ளு இருந்ததா?? பறக்கிற செட்டை (இறக்கை)இருந்ததா?? எண்டு ஆளாளுக்கு கேட்ட கேள்வியிலை மயக்கம் தெளிஞ்ச வைத்திலிங்கத்தார் திரும்ப மயங்கிட்டார். எல்லாரும் வெளியாலை போங்கோ அந்தாளுக்கு உங்களாலை விசர் பிடிக்கப்போகுது எண்டு அங்கை நிண்ட நேர்ஸ் மார் சனத்தைக் கலைக்க. அதுக்குள்ளை ஒருத்தன் அய்யோ வைத்திலிங்கத்து விசராம் எண்டு சொல்ல. மர்மமனிசன் அடிச்சு வைத்திலிங்கத்துக்கு பைத்தியமாம் எண்டு புதுசா ஒரு புரளிவேறை உலாவத்தொடங்கிட்டுது.வைத்திலிங்கத்தாருக்கு விழுந்த அடியோடை சனத்துக்கு பயமும் கூடிட்டுது. அதாலை எல்லா வீட்டுக்காரரும் வீகளிலை கத்தி.பொல்லு.வாள்.எண்டு தற்காப்பு ஆயுதங்களை தயார்பண்ணி வீட்டுக் கூரை வேலியளுக்குள்ளை செருகிவைக்கத்தொடங்கினது மட்டுமில்லை. மர்ம மனிசன் வந்தால் மற்றை வீட்டுக்காரரையும் எழுப்புறதுக்கு சிலரின்ரை வீடுகளிலை மணி கூட வாங்கி கட்டித்தொங்க விட்டிருந்தவை. அது மட்டுமில்லை இரவிலை கோயில் மடத்திலை சாமம் வரைக்கும் இருந்து அரட்டையடிக்கிற எங்களுக்கும் நேரத்தோடையே வீட்டுக்கு வரச்சொல்லி வீட்டுக்காரரின்ரை கரைச்சல் தாங்கஏலாமல் நாங்களும் எங்கடை அரட்டை ஆராச்சியளை ஏழு எட்டு மணிகு்குள்ளையே முடிச்சிட்டு வீட்டை போய்விடுவம்.இப்பிடியே சில நாட்களாய் திகிலாய் இருந்த எங்கடை ஊர்க்கதை. மானிப்பாயிலை மர்ம மனிசன் திரியிறானாம் எண்டு மற்றைய ஊர்களுக்கும் பரவி பரபரப்பாய் கதை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை கொழும்புக்கு லொறியிலை சாமான்கள் கொண்டுபோய் வியாபாரம் செய்யிற ஒருத்தர் கோயிலடியிலை நிண்ட எங்களிட்டை ஒரு விசயத்தை சொன்னார்.எங்கடை ஊரிலை கட்டையன் எண்டொருத்தன் இருந்தவன். உயரம் குறைவாய் ஆனால் நல்ல உறுதியான உருண்ட உடம்பு.அனின்ரை பெயரை இதிலை எழுதாமல் விசயத்தை எழுதிறன்.

அந்தக் கட்டையன் சாவச்சேரி சந்தையிலை மரக்கறி வித்ததை கண்டனெண்டு அந்த லொறிக்காரர் சொன்னதை கேட்டதும் எங்களுக்கு ஒரு பொறிதட்டிச்சிது.மரக்கறி விக்கிறதுக்கு கட்டையனிட்டை தோட்டம் இல்லை. மரக்கறியை வாங்கி விக்கிறதெண்டாலும் யாழ்ப்பாணத்திலை கிட்டமாய் கனக்க சந்தையள் இருக்கக்கூடியதாய் சாவச்சேரியிலை ஏன் விக்கவேணும் எண்டு யோசிச்சிட்டு கட்டையனை தீவிரமாய் கண்காணிக்கிறதாய் முடிவெடுத்து. வீடுகளிலை கணக்கெடுக்காத ஒரு ஏழெட்டுப்பேர் சேந்து இரவு ஒரு பன்னிரண்டு மணிவரைக்கும் ஆயுதங்களோடை தோட்டங்கள் வயல்பக்கமாய் சுத்திவந்தம்.ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை களவு போய்க்கொண்டுதான் இருந்தது. ஆயுதங்களோடை சுத்தினனாங்கள் எண்டதும் ஏதோ ஏகேயோடை சுத்தினதாய் நினைக்காதையுங்கோ. ஏகேயெல்லாம் நான் எட்ட நிண்டுதான் பாத்திருக்கிறன்.பொல்லுத்தடிகள்.மற்றது கோயில்லை வாழைவெட்டுறதுக்கு வைச்சிருந்த வாள் இதுதான் ஆயுதம்.இரவிரவாய் சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாததாலை எங்கடை திட்டத்திலை ஒரு மாற்றத்தை செய்து பாத்தம். அதாவது விடியப்பறம்(அதிகாலை) இரண்டுமணிவரைக்கு நித்திரை கொண்டிட்டு இரண்டு மணிக்கு எழும்பி எல்லாப்பெடியளும் ஊருக்குள்ளை சுத்திவாறதெண்டதுதான் அடுத்த திட்டம். ஆனால் இதெல்லாம் எங்கடை வீடுகளுக்குத்தெரியாமல் தான் நடந்தது. எங்கடை மாற்றுத்திட்டத்துக்கு இரண்டாவது நாளே பலன் கிடைச்சிது.மானிப்பாய் நவாலி தோட்டப்பகுதிக்குள்ளை ஒரு உருவத்தை கண்டிட்டம். மெதுவாய் பதுங்கிப்போய் உருவத்தை கிட்ட நெருங்கிப்பாத்தம்.அந்த உருவம் மளமளவெண்டு பயித்தங்காய் பிடுக்கிகொண்டிருக்க. நாங்கள் எல்லாரும் கத்தியபடி ரோச்லைற்றை அடிச்சுக்கொண்டு ஓடிப்போய் பாஞ்சு ஆளைப்பிடிச்சால் நாங்கள் சந்தேகப்பட்டபடி எங்கடை ஊர் கட்டையனேதான்.யாரும் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓட வசதியாய் உடம்பிலை எண்ணெயைப்பூசியிருந்தான்.அவனை பிடிச்சு கொண்டுவந்து எங்கடை கோயிலடியிலை கரண் கம்பத்திலை கட்டிவைச்சிட்டு அடுத்ததாய் என்ன செய்யலாமெண்டு யோசிச்சம்.

முந்திக் காலங்களிலை ஊரிலை நடக்கிற களவுகள் இல்லாட்டி கள்ளரைப்பிடிச்சால் அதை ஊர் விதானையாரிட்டைதான் பொறுப்புக் குடுக்கிறது வழக்கம். அதுமாதிரி நாங்களும் ஊர்விதானையார் மற்றது ஊர்பெரியாக்களிட்டை கள்ளனை பொறுப்பு குடுக்கலாம் எண்டு நினைச்சு. பிடிச்ச உடைனை நாலைஞ்சு அடியும் போட்டிட்டு அவனை கொண்டு வந்து எங்கடை கோயிலடியிலை இருந்த கரண்டு(மின்கம்பம்)கம்பத்தோட சேர்த்து அவன் இருக்கக்கூடிய வசதியாய் பின்பக்கமாய் கையை கட்டிப்போட்டு இரண்டுபேரை போய் விதானையாரையும் வேறை ஊரிலை பெரியாக்கள் சிலபேரையும் கூட்டிக்கொண்டுவர அனுப்பிப்போட்டு மற்றாக்கள் கட்டையனுக்கு காவல் நிண்டம்.என்ரை நண்பன் இருள்அழகன் வீட்டிலையும் கொடியிலை காயப்போட்டிருந்த உடுப்புகள் களவு போயிருந்தது.அதாலை கட்டிப்போட்டிருக்கிற கட்டையனைப்பாத்ததும் இருள்அழகனுக்கு வீரம் பெருக்கெடுத்து வந்திட்டுது. அதாலை கட்டையனைப்பாத்து டேய் எங்கடை வீட்டிலை காயப்போட்டிருந்த துணியளையும் நீயா களவெடுத்தனி என்று கேட்டபடி கட்டிப்போட்டிருந்த கட்டையனின் கன்னத்தை குறி வைத்து காலால் ஓங்கி அடிச்சான். அடிச்சதுதான் தாமதம் அய்யோ எண்டு கத்தினபடி இருள்அழகன் சுருண்டு விழுந்து கத்தினான். இதென்னடா அடிவாங்கினவன் அப்பியே அசையாமல் இருக்க. அடிச்சவன் ஏன் அய்யேவெண்டு சுருண்டு விழுந்து கத்திறாணென்டு எங்களுக்கு ஒண்டும் விழங்கேல்லை. பிறகுதான் புரிஞ்சுது இருள்அழகன் காலாலை ஒங்கிஅடிக்க அந்த நேரம் கட்டையன் தலையை குனிஞ்சிட்டான் அதாலை இருள்அழகன்ரை கால் கரண்கம்பத்திலை அடிபட்டிருக்கு.அதுவும் கொங்கிறீற் கம்பம் அடிஎப்பிடி இருந்திருக்குமெண்டு யோசிச்சுப்பாருங்கோ.அதுக்கிடையிலை ஊரிலை விதானையாரோடை கொஞ்சப்பெரிய மனுசர்எல்லாரும் நித்திரையாலை எழும்பி கோயிலடிக்கு வந்திட்டினம். இனிவந்தவை சும்மாவே இருப்பினம் எல்லாரும் கட்டையனுக்கு ஆளுக்கொரு அடிபோட . கட்டையன் எங்களைப்பாத்து "ஏன் என்னை கட்டிவைச்சு அடிக்கிறியள் சரியான ஆம்பிளையளாய் இருந்தால் என்னை அவிட்டு விட்டிட்டு யாராவது ஒற்ரைக்கு ஒற்றை தனியஅடிபட வாங்கோ. நான் தோத்திட்டால் உங்கடை தண்டனையை ஏத்துக்கொள்ளுறன்." எண்டு கத்தினான்.

களவெடுத்ததும் இல்லாமல் திமிரைப்பார் எண்டு சில பெருசுகள் புறுபுறுத்தாலும் அடிபட ஒருத்தரும் தயாராய்இல்லை.அப்பதான் என்ரை நண்பனொருவன் கட்டையனை அவிட்டு விடுங்கோ நான் அடிபடத்தயாரெண்டு முன்னுக்கு வந்தான் அவன் கராட்டியிலை கறுப்பு பட்டியும் எடுத்திருந்தவன்.சரியெண்டு நாங்களும் கட்டையனை அவிட்டு விட்டிட்டு ஏதோ வித்தை பாக்கிறதுக்கு நிக்கிறமாதிரி அவை இரண்டு பேரையும் நடுவிலை விட்டு நாங்கள் சுத்திவர நிண்டம்.என்ரை நண்பனும் கையைக் காலை வழைச்சு நெளிச்சு கராட்டி வித்தை எல்லாம் காட்டி தயாராக . கட்டையனும் தன்ரை பங்கிற்கு கையை காலை ஆட்டினவன் திடீரெண்டு சுத்திவர நிண்ட ஒருத்தரை தள்ளிவிழுத்திப்போட்டு வயல்வெளிக்குள்ளாலை இறங்கி ஓடத்தொடக்கிட்டான்.நாங்களும் கலைச்சுப்பாத்தம் அதோடை இருட்டாயும் இருந்தபடியாலை அவனைப்பிடிக்க முடியேல்லை.அதுக்குப் பிறகு கட்டையனை ஊர்ப்பக்கம் காணவேயில்லை.கன காலத்துக்குப் பிறகு ஒருநாள் நான் சைக்கிளிலை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை ஒரு இயக்கத்தின்ரை முகாமுக்கு முன்னாலை ஒருதன் குத்திப் போட்டு எறியிற குண்டை கையிலை வைச்சிருந்தபடி என்னை மறிச்சு " தம்பி என்னை ஞாபகம் இருக்குதோ எண்டு கேட்டான். உற்றுப்பாத்தன். அது எங்கடை கட்டையன். பிறகென்ன என்ரை ஏசியா சைக்கிள் ஏறோப்பிளேன் வேகத்திலை அந்த இடத்திலை இருந்து மறைஞ்சிட்டுது.

அநியாயம் ஆனால் உண்மை

6:46 AM, Posted by sathiri, 2 Comments



மேலே படத்தில் தாயாருடன் உள்ள பெண்ணின் பெயர் சமந்தா சிய்லர் வயது 21 .நான் வசிக்கும் நகரத்தில் வசிக்கின்ற ஒரு மாணவி.கடந்தவாரம் எங்கள் பிராந்தியப்பத்திரிகையான (nice matin) இவரது படத்துடன் வந்த செய்தி எங்கள் நகர மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் செய்தியினை தேவை கருதி தமிழில் தருகிறேன்.சிய்லர் ஒருநாள் பொழுது போக்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இணையத்தில் ஒரு விளம்பரத்தினை பார்க்கிறார். அது ஒரு இணையத்தின் மூலமான பயண முகவர் நிலையமொன்றின் ஒரு விழையாட்டு .அதில் வெற்றி பெற்றால் உலகின் பல இடங்களிற்கு ஒரு வார காலம் உல்லாசப் பயணம் போய் வருவதற்கான பயணச் சீட்டும் தங்குவதற்கான விடுதியும் பரிசாக அறிவிக்கப்பட்டு. பரிசு பெற்றால் போவதற்காக தெரிவு செய்வதங்காக சில நாடுகளின் பெயர் விபரங்களும் அதில் இருந்தது. போட்டிக்கான விதி முறைகள் சுலபமானதுதான். அதில் நீங்கள் ஆணா பெண்ணா.முழுப்பெயர் வயது மற்றும் மின்னஞ்சல் முகவரி இவற்றை பதிவு செய்து அனுப்பி விட வேண்டியதுதான்.இதனைப்பார்த்த சிய்லரும் சிலநேரம் அதிஸ்ரம் அடித்தால் இந்தக்கோடை விடுமுறையை குதூகலமாகக்களிக்கலாமென நினைத்து அதில் கேட்டிருந்த விபரங்களை பதிவுசெய்து அனுப்பிவிட்டார்.

ஒரு வாரத்தின் பின்னர் சிய்லருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.அதனைத் திறந்து பார்த்தவரிற்கு மகிழ்ச்சி அவர் நினைத்தது போலவே கோடை விடுமுறையை கொண்டாட்டமாக களிப்பதற்காக நீங்கள் போட்டியின் பரிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி஼br />?ீர்கள் என்று அவர் விபரங்கள் அனுப்பிய அந்த பயண முகவர் நிலையம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அத்துடன்சில ஆசிய மற்றும் தென்அமெரிக்க நாடுகளின் பெயர்ப்பட்டியலைப்போட்டு நீங்கள் செல்ல விரும்பும் ஒரு நாட்டினை தெரிவு செய்யும்படியும் கேட்டிருந்தனர்.சிய்லரும் தாய்லாந்தின் பத்தையா கடற்கரையோரம் கால் நனைக்கும் கனவுகளுடன் தாய்லாந்தினை தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்.ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் தற்சமயம் தாய்லாந்திற்கான ஒழுங்குகளை எங்களால் செய்யமுடியாமல் உள்ளது எனவே எங்கள் முகவர் ஒருவர் உங்களை நேரடியாக சந்தித்து நீங்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் மேலும் சில நாடுகளின் பெயர்ப்பட்டியலையும் காண்பித்து மேலதிக விபரங்களையும் தருவாரென்றும் .தொடர்புகொள்ளும்படி அதில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தினை வழங்கியிருந்தனர்.சியலரும் உடனே அந்த இலக்கங்களை அழுத்தினார். மறுமுனையில் ஒரு பிரெஞ்சுக்காரர் அல்லாத ஒரு ஆணின்குரல். தான்தான் அந்த பயணஏற்பாடுகளை செய்பவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நகரமத்தியில் ஏதாவது ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்திக்கலாமென ஒரு நேரமும் ஒதுக்கப்பட்டு ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்தித்தனர்.வந்தவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தென்அமெரிக்கா நாடுகளான வெனிசுலா.சிலி.பொரு. கொலம்பியா மற்றும்ஆஜென்ரீனா ஆகிய நாடுகளிற்கே தற்சமயம் ஒழுங்குகள் செய்யமுடியுமென்றும் அந்த நாடுகளின் விபரங்கள் சில படங்கள் என்று காடடியபடியே கதைக்கவும்.சிய்லர் ஆஜென்ரீனாவை தெரிவு செய்தார்.

ஆனால் அந்த முகவரோ ஆஜென்ரினாவிற்கு செல்வதற்கு பிறேசில் விமான சேவையிலேயே இடம் இருக்கிறது ஆனால் பிறேசிலில் இருந்து ஆஜென்ரீனாவிற்கான விமானத்திற்காக நீண்ட நேரக்காத்திருப்பு எனவே கொலம்பியாவை தெரிவு செய்யலாம் இங்கிருந்தே நேரடிவிமானத்தில் இலகுவான பயணம்.என்று கதைத்து சிய்லரை அந்த முகவர் சம்மதிக்க வைத்து விட்டார்.பிறகென்ன சில நாட்களில் மீண்டும் சிய்லரை நேரில் அழைத்த அந்த நபர் அவரிற்கான விமானசீட்டும் தயார் என்று கூறி விமானச்சீட்டையும் அவரின் செலவுகளிற்காக ஒரு உறையில் 1000 யுரோ பணத்தையும் கொடுத்து கொலம்பியா போனோ விமான நிலையத்தில் உங்களை எங்கள் முகவர் ஒருவர் வரவேற்று மேலதிக உதவிகளை செய்வாரென்று வழியனுப்பிவைத்தார்.சிய்லரும?? கொலம்பியா போனோ விமானநிலையத்தில் இறங்கியதும் திட்டமிட்டிருந்தபடியே அங்கு ஒரு முகவர் சிய்லரை அழைத்துப்போய் ஒரு விடுதியில் தங்கவைத்து சிய்லரிற்கு ஒருவாரகாலத்திற்கு அவர் சுற்றிப் பார்ப்பதற்காக உதவியாக ஒரு வழிகாட்டியையும் ஏற்பாடு பண்ணிவிட்டு போய் விட்டார்.ஒரு வார காலம் சிய்லரின் பயணம் நன்றாகமுடிந்தது. மீண்டும் பிரான்சிற்கு திரும்பவேண்டிய நாள் வந்தது . கொலம்பியாவில் வரவேற்ற அதே நபரே வழியனுப்பிவைக்க வந்திருந்தார்.ஒரு வாடைகைக்காரில்( taxi ) சிய்லரையும் ஏற்றிக்கொண்டு விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் அவர்களது வாடைகைக்கார் நின்றுவிட அதில் ஏதோ கோளாறு எனவே வேறொரு வாடைகைக்காரில் போகலாமென இன்னொரு காரில் மாறி விமான நிலையம் வந்தடைந்தனர்.

விமான நிலையத்தின் உள்ளே இடப்பதிவுசெய்யும்( bording ) இடம்வரை சிய்லரின் பொதிகளை கொண்டுவந்து கொடுத்து விட்டு அந்த முகவர் நல்ல பயணமாக அமையட்டும் என்று கூறி விடைபெற்றார். சிய்லரும் தன்னுடைய பொதிகளை பதிவுசெய்து விட்டு தன்னுடைய இருக்கைப் பதிவினைபெற்றுக்கொண்டு புறப்படும் பொழுது ஒரு விமான நிலைய அதிகாரி ஒருவர் வந்து சிய்லரை சில கேள்விகள் கேட்கவேண்டும் ஒரு நிமிடம் ஒத்துழைக்கமுடியுமா எனக் கேட்டுள்ளனர்.சிய்லரும் இது ஏதோ சாதாரண விமான நிலைய சம்பிரதாய விசாரணை என நினைத்து தாராளமாக ஒத்துளைக்கிறென் என்று கூறவும். அவர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து செல்ல அங்கு கொலம்பிய விமான நிலைய காவல்துறையினரும் சிய்லரின் பயணப்பொதியும் இருந்தது.அங்கிருந்த காவல்துறை அதிகாரி சிய்லரைப்பார்த்து இது உங்கள் பொதிதானே என்று கேட்கவும். சிய்லரும் சாதாரணமாக தன்னுடையதுதான் என ஒத்துக்கொள்ள அவரது பொதியினை காவல்த்துறையினர் திறந்தனர். பொதியை திறந்ததும் செய்லரிற்கு ஆச்சரியம் காரணம் உள்ளே இருந்தவை அவருடைய துணிகள் அல்ல. அதற்கடுத்ததாய் அதிர்ச்சி உள்ளே ஒரு பாசல் அதில் 14 கிலோ நிறையுள்ள கொக்கெயின் போதைமருந்து. சிய்லர் இப்பொழுது போனோ சிறையில் இருக்கிறார். பிரெஞ்சுத் தூதரகம் இவரின் நலன் மற்றும் வழக்குகளை கவனித்து வருகின்றது.ஆனால் பிரான்சில் இது இரண்டாவது சம்பவம். சுமார் மூன்று ஆண்டுகளிற்கு முன்னரும் பாரிஸ் புற நகர்பகுதியில் வசிக்கும் ஒரு மாணவி இதே பாணியில் கொலம்பியாவிற்கு சென்று போதை மருந்துகளுடன் பிடிபட்டு அவர் நேரடிக் குற்றவாளி அல்ல ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் அவருடைய பயணப்பொதியில் போதை மருந்துகள் இருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். எனவே எம்முடைய தமிழ் இளம் சமுதாயமும் காலையும் மாலையும் கணணியிலேயே கடலை போட்டுக்கொண்டு கவிண்டு கிடப்பதால் இதுபோன்ற கணணி விளம்பபரம் மற்றும் விழையாட்டுக்களில் கவனமாக இருக்கவேண்டியே இந்தச் செய்தியை தமிழில் தருகின்றேன் இல்லா விட்டால் களி சாப்பிட்டபடி கம்பி எண்ணப்போறம் எண்டு அடம்பிடிச்சால் உடைனையே கொலம்பியாவிற்கு ஒரு றிக்கற்..எடுங்கோ .............................