சாத்திரி
ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

2005-ம் ஆண்டு யூலை மாதம் 25 நள்ளிரவை தாண்டிய நேரம் பிரான்சின் அதிபருக்கு உளவமைப்பன டி ஜி எஸ்  சின் தலைவரிடமிருந்து அவசரமாக சந்திக்கவேண்டும்  மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரும் உடனிருந்ததால் விரும்பத்தக்கது என்றொரு தகவல் வந்திருந்தது.சிறிது நேரத்தில் அதிபரின் வீட்டிலேயே அந்த இரகசிய சந்திப்பு நடை பெற்றது. ஆப்கானிலிருந்த பிரெஞ்சு இராணுவத் தளத்திலிருந்து சங்கேத மொழியில் புலனாய்வு பிரிவு அனுப்பிய அந்த செய்தியை உளவமைப்பின் தலைவர் விபரமாக சொல்லி முடித்தபின்னர்,

“எல்லாமே தயார் நிலையிலுள்ளது. திட்டம் கூட வகுத்து விட்டார்கள்.உங்களின் சம்மதம் மட்டுமே போதும். நாளை காலை சூரியன் உதிக்கும்போது உலகம் முழுவதுக்குமே மகிழ்ச்சியான செய்தியை எங்கள் படை வீரர்கள் கொடுப்பார்கள்.”

என்று விட்டு அதிபரையே உற்றுப்பார்த்தார். எதுவும் பேசாத அதிபரோ மூன்று சம்பெயின் கிளாஸ்களை எடுத்து மேசையில் வைத்தவிட்டு பிரிஜ்சை திறந்து சம்பெயினை எடுத்து முடிந்தளவு சத்தம் வராமல் திறந்தவர் கிளாசில் ஊற்றி பொங்கும் நுரைகளோடு இருவர் கைகளிலும் கொடுத்து,’இது உங்கள் திட்டம் வெற்றியடைவதுக்காக’ என்று  சியஸ் சொல்லி சிரித்தார்.

000000000000000000000

அரபிக்கடலில் நங்கூரமிட்டிருந்த மிதக்கும் இராணுவத் தளமான சாள் டி கோல் விமானம் தாங்கி கப்பலில் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வீச்சு விமானங்களில் இரண்டு ரஃபேல் எம் மாடல் விமானத்தின் எரிபொருள் மற்றும் பொருத்தப்பட்டிருந்த ஏவு கணைகள் எல்லாம் சரி பார்க்கப் பட்டிருந்தது. சீருடை அணிந்து ஹெல்மெட்டோடு ஜோனும் பிலிப்பும் தயார் நிலையில் நின்றிருந்தனர். ஜோன் முதலாவதாகவும் முப்பது செக்கன்  இடைவெளியில் பிலிப் இரண்டாவது விமானத்தையும் கிளப்ப வேண்டும். இருவருமே விமானத்தில் ஏறி அமர்ந்ததும் ஜோன் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு சட்டைப் பையிலிருந்த படத்தை எடுதுப்பார்தான். மகன் ரயனை அணைத்தபடி காதல் மனைவி சோபி சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் கிளம்புவதுக்கான சமிக்கை கிடைத்தது. ‘இது என் தேசத்துக்கான யுத்தம் இதில் நான் வெற்றி பெற வேண்டும் என் இலக்கு தவறிப்போய் விடக்கூடாது’ என்று நினைத்தபடி வானத்தை அண்ணாந்து பார்த்து சிலுவை போட்டுக்கொண்டவன், கை கட்டை விரலை உயர்த்திக்கட்டி விட்டு காற்றை கிழித்துக்கொண்டு கப்பலை விட்டு கிளம்பினான். திட்டத்தின் படி இலக்கை முதலில் அவன் தாக்க வேண்டும். இலக்கு தவறினாலோ,ஏதும் பிசகினாலோ, ஏன் அவன் விமானம் சுடப்பட்டலோ அடுத்து வரும் பிலிப் அந்த இலக்கை தாக்க வேண்டும். எது எப்பிடியோ ஜோனுக்கு இதுதான் கடைசி தாக்குதல். புற்று நோயால் அவதிப்படும் தன் மனைவியை அருகிலிருந்து கவனிக்க பதவி விலகல் கடிதத்தை ஏற்கனவே கொடுத்து விட்டான். இந்த தாக்குதலில் தான் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதுக்காகவே விமானம் கிளம்பிய பின்னர் இன்னொரு தடவை சிலுவை போட்டுக்கொண்டான். சில நிமிட பறப்பின் பின்னர் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் நேவ்மலைப்பகுதியில் இருந்த அவன் இலக்கு ராடர் திரையில் மங்கலாக தெரிந்த அதே நேரம் ராணுவ கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்தும் கட்டளை கிடைத்தது. செங்குத்தாக விமானத்தை கீழிறக்கி இலக்கின் மீது இரண்டு ஏவு கணைகளையும் பாயவிட்டவன் அதே வேகத்தில் மேலே கிளம்பித் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போதே, இலக்கை அடைந்து விட்டோம். அடுத்த விமானமும் தளம் திரும்புமாறு சங்கேத மொழியில் கட்டளை கிடைத்திருந்தது.

தளம் திரும்பியவனை அத்தனை வீரர்களும் சேர்ந்து தோளில் தூக்கி கொண்டாடினார்கள். அவனோ சட்டைப்பையிலிருந்த படத்தை எடுத்து. ‘என் காதல் மனைவியே என் செல்லக் குழந்தையே நான் வெற்றி பெற்று  விட்டேன்.இதோ வந்து விடுகிறேன்’. என்றபடி முதமிட்டவனை உயரதிகாரி தன் அலுவலகத்துக்கு அழைத்தார். அவர் முன் சல்யூட் அடித்து நின்றவனின் தோளில் தட்டி பாராட்டியவர் சாட்டிலைட் மூலம் கிடைக்கப்பட்டிருந்த காணொளியை கணனியில் காட்டினார். மலையடிவாரத்திலிருந்த சிறிய கட்டிடமொன்றை ஏவுகணை தாக்கி வெடித்து பந்து போல் கிழம்பிய புகை மண்டலம் ஓய்ந்த பின். கட்டிடம் இருந்த இடத்தில்  ஒரு பள்ளம் தெரிந்தது. ஆனால் ஜோன் ஒன்றை கவனித்தான், அவன் ஏவிய ஏவுகணை  கட்டிடத்தை தாக்க சில வினாடிக்கு முன் புள்ளியாய் ஒரு உருவம் கட்டிடத்திலிருந்து வெளியேறுவது போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் பார்த்தபோது கலவரமாகவும் இருந்தது. சிறிது நேரத்திலேயே உளவுப்பிரிவின் செய்தி வந்துவிடும் என்று அவன் கையை அழுத்திப்பிடித்து அமைதியாக்கினார் அதிகாரி. சிறிது நேரத்திலேயே தாக்குதல் வெற்றி என்கிற என்கிற செய்தி உளவுப்பிரிவிடமிருந்து வந்துவிட்டிருந்தது.

000000000000000000000

கடந்த காலங்களில் ஆபிரிக்க அரபு நாடுகளில் அவன் நடத்திய தாக்குதல்களுக்காக பாராட்டி கொடுக்கப்பட்டிருந்த கேடயங்கள் பதக்கங்களோடு  புதிதாக இன்னொரு பதக்கமும் அந்த வரவேற்பறையை வடிவாக்கிக்கொண்டிருக்க, அவனது சீருடையும் அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது.

‘அல்கெய்தாவின் முக்கிய தளபதியான ஓமர் அப்துல்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டான். அவனது மனைவி குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.’’என்கிற செய்தி உலகம் முழுதும் அலறிக்கொண்டிருக்கும் போது, மகன் ரயனை ஒருபக்கமும் மெலிந்து போய் முடியெல்லாம் உதிர்ந்த தலையில் துணியொன்றை கட்டியிருந்த மனைவி சோபியை மறுபக்கமும் அணைத்தபடி செய்தியை பார்த்துக்கொண்டிருந்தான் ஜோன். அப்போ அவன் பக்கம் திரும்பியவள்,

“ஜோன் எனக்கொரு சத்தியம் செய்து கொடுப்பாயா..?”

“உனக்காக என்ன வேணுமானாலும் செய்வேன். என் காதலே .. சொல்.”

“ஒரு வேளை நான் இறந்துபோனால் நீ இன்னொரு துணையை தேடிக்கொள். அடுத்து மகன் ரயனை ஒரு போதும் உன்னைப்போல் ஒரு ஆள்கொல்லி விமானியாக்கி விடாதே. யுத்தம் பற்றிய செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் நான் படும் வேதனைகளை உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதன் விளைவுதான் எனக்கு இந்த நோயாக மாறியிருக்கக் கூடும்.”

சொல்லும் போதே வார்த்தைகள் அடைத்து கலங்கியவளை இழுத்து நெற்றியில் முதமிட்டவன்,

“சே .. என்ன இது. நானிருக்கிறேன். உனக்கு ஒன்றும் நடக்காது. ரயனை நிச்சயமாக விமானியாக்க மாட்டேன். பிரிவின் வேதனை எனக்கு நன்றாகவே தெரியும்.” என்றபடி அவள் கண்களை துடைத்து விட்டான் .

உலகின் சிறந்த ஆள்கொல்லி விமானி  இப்போ சிறந்த சமையல்காரனாகி விட்டி ருந்தான். அவனின் அன்பு அரவணைப்பு அத்தனையும் இருந்தாலும் சோபியை  காப்பாற்ற முயுடியவிலை. சோபியின் மரணம் ஜோனை வெகுவாகவே பாதித்திருந்தாலும், ரயனை கவனித்துக்கொள்ள அதிலிருந்து மீண்டு வரப் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. இப்போதெல்லாம் அவனின் அன்றாட கடமையாக காலை எழுந்து சமையல் செய்து ரயனை தயார்ப்படுத்தி  பாடசாலையில் கொண்டுபோய் விட்டு விட்டு, வழியில் உள்ள பூக்கடையில் வெள்ளை ரோஜா மலர்க் கொத்தொன்றை வாங்கிக் கொண்டு சோபியின் கல்லறைக்கு சென்று அதை வைத்துச் சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து விட்டு நேராக விசா வழங்கும் அலுவலகத்துக்கு வந்து விடுவான்.

இங்குதான் எனக்கு ஜோன் அறிமுகமாகியிருந்தான். கடந்த காலங்களில் ஆபிரிக்கா அரபு நாடுகளில் பணியாற்றியதால் அரபியை சரளமாக கதைக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொண்டிருந்தான். தன் தேசத்துக்கென நடத்திய குண்டுத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப் பட்டார்கள் அதிலெத்தனை அப்பாவிகள் குழந்தைகள் என்கிற கணக்கெல்லாம் அவனுக்குத்தெரியாது. யுத்தகளதில் உயிர்கள் என்பது வெறும் இலக்கங்களே. அந்த இலக்கங்களின் பின்னால் உயிரோடு கலந்த உணர்வுகளும் உறவுகளும் இருந்திருக்கும் என்பதை சோபியின் இழப்பின் போதுதான் உணர்ந்திருந்தான். அவற்றுக்கெல்லாம்  ஏதாவது கைமாறு செய்ய நினைத்தவன், யுத்தம் நடக்கும் ஆபிரிக்க அரபு நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு வதிவிட உரிமை வாங்கிக் கொடுக்க மொழிபெயர்ப்பு வேலைகளை இலவசமாகவே செய்யத் தொடங்கியிருந்தான். அது அவன் மனதுக்கும் பிடிதிருந்தது. அந்த இடதில் உனக்கென்ன வேலையென நீங்கள் யோசிக்கலாம். ஜோனைப்போலத்தான் சம்பளமில்லாத உத்தியோகம். என் நகரதில் வசிக்கும் எம்மவார்களுக்காக மொழிபெயர்ப்புக்கு செல்வேன். அப்படியான நேரதில் வேறு வேலைகள் ஏதுமிருப்பின் கூட்டிச்சென்ற நபரை அறிமுகப்படுத்தி விபரத்தை சொல்லி விட்டு சென்றால் ஜோன் எல்லாமே செய்து கொடுப்பான். மற்றும்படி  யுத்தம் பற்றிய கதைகளை தவிர்த்து மிகுதி எல்லாமே கதைப்போம். காலம் எல்லாவற்றையும் விழுங்கியபடி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால் அகதிகளாக எம்மவர்கள் வருவதும் குறைந்துவிட, நானும் விசா அலுவலகம்  போகும் தேவையில்லாததால் ஜோனை சந்திப்பதும் குறைந்து போய் விட்டிருந்தது. இந்த  வருட ஆரம்பத்தில் கையில் மலர்க்கொத்தோடு சோபியின் கல்லறைக்கு சென்றுகொண்டிருந்த வழியில் சந்தித்தவன், ‘ ரயன் காவல்துறையில் சேர்ந்து பயிற்சிக்காக சென்றிருப்பதாகவும் அவன் விமானப் படையில் சேராதது சோபிக்கு மகிழச்சியாக இருக்கும்’ என்று சொல்லி சிரித்துச்சென்றான்.

000000000000000000000

அன்றும் வாழமை போல விசா அலுவலகம் சென்றிருந்தவனை நோக்கி, ‘அஸ்சலாமு அலைக்கும்’ என்றபடி முன்னால் வந்து நின்றவனை பார்த்தான். பரட்டைத் தலை, இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடை  அழுக்காகி கசங்கிப்போயிருந்தது. இருபது மதிக்கத்தக்க களைத்துப் போயிருந்த முகம்.

“நான் ‘மசூத்’ ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறேன்.” என்றான். ஆப்கான் என்றதுமே ஜோனுக்கு அவன்மீது ஒரு அக்கறை அவனையறியாமலேயே வந்திருந்தது.  கடவுச்சீட்டை வாங்கி அகதி விண்ணப்ப படிவத்தில் பெயர் விபரம். அகதிக்கோரிக்கைக்கான விபரங்களை எழுதி அவனிடம் கையெழுத்து வாங்கியவன், அவனின் படத்தையும் இணைத்து அலுவலகத்தில் கொடுத்து தற்காலிக விசா ஒன்றை வாங்கிக்கொடுத்தான். மறுநாள் அவனை வரச்சொல்லி மகன் ரயனின் அதிகம் பாவிக்கப்படாத உடைகளையும் எடுத்துப்போய் கொடுதிருந்தான். பின்னர், மசூத்தை  சந்திக்கும் போதெல்லாம் அக்கறையோடு விசாரித்து பணஉதவிகள் கூட அவ்வப்போது செய்திருக்கிறான்.

இன்று ஜோனுக்கு முக்கியமான நாள். வழமையை விட நேரத்துக்கே எழுந்து பரபரப்பாகவே இருந்தான். காரணம், காவல்துறை பயிற்சியை முடித்து வந்திருந்த ரயன் இன்று கடமையை பொறுபேற்கப் போகும் நாள். சீருடை அணிந்தபடி கம்பீரமாக முன்னே வந்து நின்றவனை கட்டியணைத்து முத்தமிட்டான்.

“வா முதலில் உன் அம்மாவிடம் போய் ஆசிகள் வாங்கிக்கொண்டு அப்படியே தேவாலயத்திற்கும் சென்று வணங்கிவிட்டு  நீ உன் பணிக்காக செல்… நான் விசா அலுவலகம் செல்கிறேன்.” என்றவன், போகிற வழியிலேயே வழமைபோல் பூக் கடைக்குச் சென்று வழமையை விட அதிகமான மலர்களால் செய்த பூங்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு சவக்காலைக்கு சென்று சோபியின் கல்லறையில் காய்ந்து கிடந்த மலர்களை சுத்தம் செய்து புதிய மலர்க்கொத்தை வைத்து மண்டியிட்டான். கண்மூடி தலை குனிந்து,

‘என் காதல் மனைவியே எங்கள் காதலின் அடையாளம் ரயன் இதோ நிற்கிறான். உனக்கு வாக்கு கொடுதபடியே அவனை இராணுவதில் இணைக்காமல் காவல்துறை அதிகாரியாக்கி என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இனி உன்னோடு வந்து சேரும் காலத்தை நாட்களாக எண்ணிக் கடப்பதைத் தவிர எனக்கு வேறு பணிகள் ஏதுமில்லை.

என்று சிலுவை போட்டுக் கொண்டு கண்களில் வழிந்த நீரை ரயனுக்குக்கு காட்டிக் கொள்ளாமல் துடைத்துக்கொண்டவன் அடுத்ததாக ரயனோடு தேவாலயதிநூள் நுழைந்திருந்தான். தேவாலயத்துக்கேயுரிய நிசப்தத்தில்  பத்துப் பேரளவில் பிரார்த்தனையில் இருந்தனர். அவர்கள் ஏற்றி வைத்த மெழுகு வர்த்திகளின் ஒளியில் என்னால் எதுவுமே முடியாதென கையை விரித்தபடி சிலுவையிலறையப்பட்ட  ஏசுநாதர் மங்கலாகத் தெரிந்தார். வரிசையாக அடுக்கப் பட்டிருந்த வாங்குகளின் கடைசி வரிசையில் ரயன் நின்று கொள்ள. மெழுகு வர்திகளை  ஏற்றுவதுக்காக ஜோன் முன்னே சென்றிருந்தான். அப்போ பின் பக்கமிருந்து சலசலப்பு சத்தம் கேட்டு திரும்பிய ஜோன் திடுக்கிட்டு நின்றான். ரயனின் கழுதில் கத்தியை ஒரு கை அழுத்திப் பிடித்திருக்க மறு கை அவனின் தலை முடியை கொத்தாக பிடித்து பின்பக்கமாக  இழுத்து அண்ணாந்த நிலையில் வைத்த படி மசூத், ‘யாரும் வெளியே போகக்கூடாதென’ அரபியிலும் அரை குறை பிரெஞ்சிலும் கத்திக்கொண்டிருந்தான். கையிலிருந்த மெழுகு வர்த்திகளை  எறிந்துவிட்டு முன்னே சென்ற ஜோன்,

“மசூத் இங்கே என்ன செய்கிறாய்..?  உன் மூளையை  தவறவிட்டு விட்டாயா? என்று கத்தினான். மசூத்தும் ஜோனை அங்கு எதிர்பார்திருக்கவில்லை.

“நீ இங்கே என்ன செய்கிறாய்? இது எனக்கு கணக்கு தீர்ப்பதுக்கான நேரம்.”

“மசூத் உன் பிடியிலிருப்பது என் மகன். அவனை விட்டுவிடு. கத்தியை கீழே போடு.”

“இல்லை எனக்குத் தெரியும். நீ மிக நல்லவன், இவனைக் காப்பாற்ற பொய் சொல்கிறாய்.”

“அவன் என் மகன் தான். இதோ இங்கிருக்கும் கர்த்தர் மீது சத்தியமாக சொல்கிறேன் என்னை நம்பு.”

லேசாக புன்னகைத்தபடியே,

“அது கடவுளல்ல, சாத்தான். அது வெறும் சிலை,  ஹராம். அல்லாஹ் ஒருவனே இறைவன். இறுதியாக ஒரு சந்தர்ப்பம் தருகிறேன், வெளியே போய் விடு.”

“அவசரப்படாதே மசூத் நீ வாழ வேண்டிய இளைஞன், அதுக்கான வழிகள் ஏராளம் இங்கு நிறைந்து கிடக்கிறது. உனக்கு நானே உதவுகிறேன். தயவு செய்து சொல்வதைக்கேள்.”

“இங்கு நடப்பது புனிதப் போர் ஜோன். உனக்கது புரியாது. நான் வாழ்வதுக்காக இங்கு வரவில்லை. நான், என் நாட்டில்  ஒரு குண்டு வீச்சில் எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவன். என் குடும்பதில் அத்தனை பேரும் கொல்லப் பட்டபோது ‘அல்லாஹ்’ என்னை மட்டும் காப்பாற்றியிருக்கிறானென்றால் ஏதோ காரியம் அவனுக்கு நடக்க வேண்டியிருந்திருக்கிறது, அது தான் இது.”

“யுத்தத்தில் புனிதமென்று ஏதுவுமில்லை, சிலரின் சுயநலனே உள்ளது. அதுக்கான பலியாடுகள் நாங்கள்.” என்றபடி ஜோன் மசூத்தை நோக்கி முன்னேறினான். வெளியே காவல்துறை வாகனத்தின் சைரன் ஒலி கேட்கத்தொடங்கியிறருந்தது.

“ஜோன் உனக்கான நேரம் மட்டுமல்ல இங்குள்ள அனைவரோடும் சேர்த்து எனக்கான நேரமும் முடிந்து விட்டது என்னை மன்னித்துக் கொள்.” என்றபடி வியர்த்து வழிந்துகொண்டிருந்த ரயனின் கழுதில் இருந்த கத்தியை மேலும் ஆழமாக அழுத்தி ‘சரக்’ என்று இழுத்தவன் ‘அல்லாகு அக்பர்…….’ என்று கத்தினான். பெரும் வெடியோசை சத்தத்தால் அந்தப் பகுதி மட்டுமல்ல கை விரித்து நின்ற கர்த்தரும் அதிர்ந்து போனார். ஜோனின் உடலையும் குண்டுச்சிதறல்கள் துளைத்துச்செல்ல மயங்கிச் சரிந்தவனின் கண்ணில் மங்கலாக நேவ் மலைப் பகுதியிலிருந்த கட்டிடதிலிருந்து புள்ளியாய் ஒரு உருவம் வெளியேறிக்கொண்டிருந்தது.

பிற் குறிப்பு :

29.10.2020 அன்று நான் வசிக்கும் நீஸ் நகர தேவாலயதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவதை வைத்து இக்கதை எழுதப்பட்டது .