Navigation


RSS : Articles / Comments


9:30 AM, Posted by sathiri, One Comment





பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா??

இந்தவார ஒரு பேப்பரிற்காக

தலைப்பைப் பார்த்ததும் சாத்திரிக்கு என்ன நடந்தது மாற்றுக்கருத்தாளர் என்கிற பெயரிலை கொஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றப்பக்கம்: தாவிவிட்டாரா?? அல்லது ஏதோ பரபரப்பிற்காக இப்பிடியொரு தலைப்பை வைச்சாரா எண்டு தலையைப் பிய்க்க வேண்டாம். நடந்தது இதுதான்.கடந்த 30.03.08 அன்று ஜெர்மனியில் உள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் ஜெர்மனியில் கற்றிங்கன்( HATTINGEN )நகரில் ஒரு புத்தக அறிமுக விழா ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் புத்தகத்தின் பெயர் நெருப்புப்பூக்கள் .புத்தகத்தினை எழுதியிருந்தவர் மட்டு மாவட்டத்தின் கல்லடி றொபேட் என்பவர்.இவர் சுமார் எட்டு ஆண்டுகளிற்கு மேலாக சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறையில் வாடுகின்ற ஈழத்தமிழர்களின் விடுதலையை நேசிக்கின்ற ஒரு போராளிக்கலைஞன்.

இவரது கவிதைத் தொகுப்பே இந்த புத்தகமாகும்.ஆயுள்தண்டனை பெற்று தனது காலத்தினை சிறையிலேயே கழித்தபடி வாழ் நாளில் விடுதலையாவேனா அல்லது தன்வாழ்வு சிறையிலேயே முடிந்து போகுமா என்கிற கேள்விகளிற்கு விடை தெரியாத பொழுதுகளிலும் தன் உணர்வுகளை கவிதையாய் வடித்து அதனை ஒரு புத்தகமாக்கி அந்தப் புத்தகத்தினை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் கொண்டு போய் சேர்த்து அதில் வருகின்ற பணத்தினை ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறுவர்களின் எதிர் காலத்திற்கு உதவியாக்குவதே அவரது நோக்கமாகும். இதனைப் படிப்பவர்கள் அனைவரிற்கும் அந்தக் கல்லடி றொபேட் என்பரை பற்றியும் அவரது உயரிய நோக்கமும் புரிந்திருக்கும்.

இந்தப் புத்தகத்தினை வெளியீடு செய்வதற்கு புலம் பெயர் தேசத்தில் முயற்சிகளை சிலர் எடுத்திருந்த போதும் இதே சர்வதேச புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பினைச் சேர்ந்த சிலர் முட்டுக் கட்டைகளைப் போட்டு தடுத்துக்கொண்டிருந்தனால் இந்தப் புத்தகம் கால தாமதமாகி கடைசியாய் சுவிஸ் நாட்டில் வேறொரு அமைப்பினரால் வெளியீடு செய்யப்பட்டது.அதே புத்தகத்திற்குத்தான் புத்தகத்தினை வெளியிட முட்டுக்கட்டை போட்ட அமைப்பினரே ஜெர்மனியில் அறிமுக நிகழ்வினை செய்திருந்திருந்தனர்.அந்த அமைப்பின் தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையில் வேறு நாட்டிற்கு போகவேண்டி இருந்ததால் உபதலைவரான திருமதி விக்னா பாக்கியநாதன்.

இவரது பட்டங்கள் (பி.ஏ. மற்றும் கவிதாயினி ). இவர் கலைவிளக்கு என்கிற பத்திரிகையின் ஆசிரியர் மட்டுமல்ல ஜெர்மனியில் தமிழாலயம் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கிறார். பாடசாலைப் பிள்ளைகளிற்காக இலக்கணப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது தலைமையிலேயே அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. புத்தக வெளியீட்டு நாளன்று வேறு இரண்டு புத்தகங்களின்செருகல்களுடன் மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவாக நடந்தது.சரி இனித்தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு சம்பந்தமான விடயம்.இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் உரைக்களம் அதாவது பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பட்டி மன்றத்தின் தலைப்பு பெண்களின் சாதனைகள் மதிக்கப்படுகின்றதா அல்லது மழுங்கடிக்கப்படகின்றதா என்பதே.இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கியும் அதனை ஒழுங்கு படுத்தியும் இருந்தவர் அந்த அமைப்பின் உறுப்பினரும் அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளருமான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் என்பவர். இவரது பட்டங்கள்( ஊடகவியலாளர் மற்றும் கவிதாஞானவரிதிஎன்பன.) ஊடகவியலாளர் என்பதெல்லாம் பட்டமா?? இவர்களின் பட்டங்கள் பற்றிய விபரங்கள் இந்தக் கட்டுரைக்கு எதற்காக என்று நீங்கள் யோசிக்கலாம் கட்டுரையின் இறுதியில் அது உங்களிற்கு புரியும்.

இந்தப்பட்டிமன்றத்தின் இறுதியில் கருத்துக்கூறிய பட்டிமன்றத்தின் நடுவரான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் எங்கள் தேசியத் தலைவர் அவர்களே மாமனிதர் என்கிற கெளரவத்தினை வழங்கும் பொழுது மனிதர் என்று ஆண்களை கெளரவிக்குமுகமாகவே வழங்குகிறாராரே தவிர மாமனிசி என்று பெண்கள்சார்பாக கெளரவிக்கப்படவிலை என்று கருத்தினைக்கூறினார் அப்படியானால் பெண்கள் சாதனைகளை எமது தேசியத் தலைவர் மழுங்கடிக்கின்றார் என்று கோசல்யா சொர்ணலிங்கம் சொல்கின்றாரா??என்று பார்வையாளர் வரிசையிலிருந்த பலர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சிலர் தலையிலடித்துக் கொண்டனர்.

அந்த ஏற்பாட்டினைச் செய்த அமைப்பினர் பலரும் மெளனமாகவே இருந்தது மட்டுமல்ல அந்த நிகழ்விற்கு தமைதாங்கிய திருமதி விக்னா பாக்கிய நாதனும் எதுவும் பேசாமல் மெளனமாகிய வேளையில் பிரான்சில் இருந்து அந்த நிகழ்விற்கு சென்றிருந்த கி.பி .அரவிந்தன் ஒலிவாங்கியை வாங்கி மாமனிதன் ஆண்பால் மாமனிசி பெண்பால் மாமனிதர் பலர்பால் என்று குழந்தைகளிற்கு பால் விளக்கம் குடுப்பதைப் போல 5 ம் வகுப்பு இலக்கணத்தை விளங்கப்படுத்திய பின்னனரும்.குழந்தையைப்போலவே தான் சொன்து சரியென்று கெளசல்யா சொர்ணலிங்கம் அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்ல நடந்த தவறிற்காக சம்பந்தப் பட்டவரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைப்போ வருத்தமோ கவலையையோ தெரிவிக்கவில்லை. அப்பொழுதான் புரிந்தது அவர்களிற்கு இலக்கணப்பிழை இல்லை தனைக்கனப்பிழையென்று. முக்கியமானதொரு நிகழ்வில் தங்களை தமிழ் சமுதாயத்தின் முக்கிய நபர்களாகவும் தமிழ் சமூகத்தின் வழி காட்டிகளாகவும் புத்திமான்களாகவும் அடையாளப்படுத்திக்கொண்டிருந்த இவர்களது கேலிக்கூத்துக்களை பட்டிமன்றம் என்கிற பெயரில் குப்பைத்தொட்டி மன்றமாக்கி மேடையேற்றி முடிந்தபின்னர். அந்த நிகழ்வுபற்றிய இந்தக் கட்டுரையை எழுத நினைத்து அந்த அமைப்பின்தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையை கழித்து வீடு திரும்பும் வரை காத்திருந்தேன் ஏனெனில் முன்னரும் நான் இந்த சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து ஒரு கட்டுரையை ஒரு பேப்பரில்எழுதியிருந்தேன்.அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தங்கள் அமைப்பினைபற்றி எழுதமுன்னர் தங்கள் பக்கத்து கருத்தக்களையும் கேட்டிருக்க வேண்டும் என்று அந்த அமைப்பினரால் என்மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

எனவேதான் அன் தலைவர் வீடு திரும்பியதும் அவரிடம் இந்த நிகழ்வில் நடந்த குளறுபடிகளிற்கு என்ன விளக்கம் அல்லது நடந்த சம்பவத்திற்கு நீங்கள் உங்கள் அமைப்பு சார்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். தங்கள் அமைப்பு ஊறுப்பினர்களை அழைத்து கலந்தாலோசித்து சொல்வதாக சொன்னவர். நான் மீண்டும் அவரைத் தொடர்புகொண்ட பொழுது தான் அனைவரையும் அழைத்ததாகவும் ஆனால்அந்த நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர்கள்யாரும் வரவில்லையென தனது இயலாமையினை தெரிவித்தார்.அப்படியானால் நடந்த சம்பவத்திற்கு நீங்கள் எவ்வித நடவடிக்கையோ அல்லது உங்கள் அமைப்பு சார்பில் ஏதாவது அறிக்கையே விடாது மெளனமாக இருப்பதால் பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரார் என்கிற கூற்றினை உங்கள் அமைப்பு எற்றுக்கொள்கிறதா என்று கேட்டேன்.அதற்கு அவரின் தடுமாறியபடி மழுப்பலாக சம்பந்தமில்லாதவிடயங்களையே பேசினார்.


சரி அடுத்த ஒரு பேப்பரிற்கு இது பற்றிய கட்டுரையை எழுதுகின்றேன் அதற்கு முன்னர் ஏதாவது நடவடிக்கையெடுத்தால் அல்லது ஏதாவது சொல்ல விரும்பினால் எனக்கு அனுப்பிவையுங்கள் என்றதும். தங்கள் அமைப்பு சார்பாக ஒரு அறிக்கையை வேறொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்பி வைப்பார் என்றார். நானும் மீண்டும் முருங்கை ஏறிய வேதாளம் போல அவர் சொன்னவரிற்கு தொலைபேசியடித்து விபரம் கேட்கவும் அவர் இன்னொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்புவார் என்றார்.இப்படியே ஒருவர் மற்றவரின் பெயரை சொல்ல நானும் அவர்களிற்கெல்லாம் மாறி மாறி தொலைபேசியடித்து விபரம் கேட்டுஅதற்கு மேலும் என்னால் முருங்கை ஏறமுடியவில்லை..அதற்கு மேல் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அந்த ஒன்றியம் சார்பில் ஒருவர் எனக்கு தொலைபேசியடித்து அன்று நிகழ்வில் நடந்த பட்டிமன்றத்திற்கு கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள்தான் முழுப்பொறுப்பும் தங்கள் அமைப்பிற்கும் அதற்கும்எவ்வித சம்பந்தமும் இல்லை எனவே அந்த சம்பவத்திற்கு பொறுப்பை எற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவரை அந்த அமைப்பில் இருந்து நீக்குவதாகவும் கடிதம் அனுப்புகின்றோம் என்றார்.ஒருவர் தேவைப்படும்பொழுது மட்டும் பன்னீர் தெளித்து பட்டாடை போர்த்தி படத்திற்கு முகம்காட்டி மகிழும் இவர்கள்.ஏதாவது பிரச்சனையென்று வரும் பொழுது மட்டும் அவரிற்கே மஞ்சள் தண்ணி தெளித்து ஒரு மாலையைப்போட்டு பலியாடாக்கி விட்டு மற்றவர்கள் தப்பித்து விடுவது ஒரு சுயநலமற்ற பொதுநோக்குடைய ஒரு அமைப்பிற்கு சிறப்பாகாது.இனிவரும் காலங்களில் இவர்கள் வேண்டுமானால் ஏதாவது கவிதை கதைப்புத்கங்கள் வெளியிடுவது பட்டங்கள் சூட்டி மகிழ்வது பொன்னாடை போர்த்திப்படம் எடுத்துக் கொள்வது என்று அவர்கள் பாட்டிற்கு எதையாவது செய்யட்டும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் எங்கள்அமைப்பு ஈழத்தமிழர் போராட்ட அமைப்பின் உபஅமைப்பு என்று புலுடா விட்டபடி ஈழப்போராத்தையும் தமிழர் தேசியத்தையும் நீங்கள்உங்கள் வசதிக்கேற்ப மற்றவர் காதில் வைத்து அழகு பார்த்து மகிழ அது பூ அல்ல. பல்லாயிரம் மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தில் வளர்த்த நெருப்பு அதில் உங்கள் மேதாவித்தனங்களை காட்டி தயவு செய்து குளிர் காய நினைக்காதீர்கள்கள்.

செருப்புப் பூசை

12:55 PM, Posted by sathiri, 2 Comments




செருப்புப் பூசை
அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்தில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன்.
அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்னை பழிவாங்குவார் என்று ஜெர்மனியில் இருந்து அவரது ஒரு பக்கதர் கடைசி எச்சரிக்கையும் தந்து .இரண்டாண்டுகள் ஓடி ஓய்ந்து போன நிலைமையில்.இந்த விளம்பரத்தில் இருந்த ஒரு வசனம் என்னை மீண்டும் எழுதத்தூண்டியது. அதாவது அபிராமி என்கிற லலிதாவின் பிறந்தநாளன்று (29.03.2008)அவரின் திருப்பாதுகைகளிற்கு விசேட அபிசேகமும் ஆராதனையும்.
அவர் சாமியாடினாரா அவதாரமெடுத்தாரா.என்பதெல்லாம் வேறு பிரச்சனை அனால் அவரின் செருப்பிற்கு அபிசேகம் செய்து பூசை செய்கிற அளவிற்கு எம்மவர் நிலைமை வந்து விட்டதா என்று நினைத்த பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்து.இந்தச் சம்பவம் நடந்தது அதீத மத நம்பிக்கையே மூட நம்பிக்கையாகி அறிவியல் வளர்ச்சியோ கல்லியறிவோ அற்று ஏதோ முலையில் இருக்கின்ற ஒரு இந்தியக் குக்கிராமத்தில் அல்ல.
கனடாவில் மொன்றியலில் days inn hotal( விளம்பரத்தில் பார்க்கவும்) என்கிற ஒரு விடுதியில் நடந்ததுள்ளது அதற்கு அங்:குள்ள ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலேபோய் கனடாவில் உள்ள ஒரு வானொலியில் அந்நத நிகழ்வு நேரடிஒலிபரப்பு வேறை நடந்தது.விளம்பரத்தினைப்பார்த்ததும் நான் அதில் உள்ள ஒரு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அந்தப் பூசை பற்றிய விபரங்கள் பற்றிக் கேட்டேன்.
அன்று அபிராமி அன்னையின் படத்திற்கு பூசையும் பஜனையும் இடம்பெறும் என்றார்கள். சரி ஏதோ திருப்பாதுகைகளிற்கு ஏதோ அபிசேகமும் பூசையும் என்று விளம்பரத்திலை இருக்கே அது புரியவில்லை அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு. அவை அம்மா அணிந்த பாதுகைகள் டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது அதற்குத்தான் பூசை என்றார்.திருப்பாதுகை என்றால் அது செருப்பா?? அல்லது சப்பாத்தா??என்கிற எனது அடுத்த கேள்வியை கேட்டதும் பதில் தந்தவர் பதறியவராய் அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.
திருப்பாதுகை எண்றுதான் சொல்லவேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளை பரதன் அரியணையில் வைத்து பூசை செய்து ஆட்சி செய்தது போல தாங்களும் கனடாவில் அம்மனின் பாதுகைகளை வைத்து பூசை செய்கிறோம் என்று பரதன் பூசை செய்ததை பக்கத்தில் நின்று பார்த்தவரைப்போல எனக்கு ஒரு உதாரணமும் தந்து மேலதிகமாக டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியும் பஞ்சாமிர்தமும் தேசிக்காயும் கொடுக்கப்படும் என்று சொல்லி தொடர்பினை துண்டித்து விட்டார். சரி டென்மார்க் குளிருக்கு லலிதாவால் செருப்பு போட இயலாது எனவே அந்த திருப்பாதுகை சப்பாத்தாகத்தான் இருக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்தாலும் எனக்கு இன்னொரு சந்தேகம்.
அந்தச் சப்பாத்து NIKE காய் இருக்குமா அல்லது ADIDAS சா?? இல்லாட்டி ஊர்ப்பழக்கத்திலை இன்னமும் BATA தானா??? பஞ்சாமிர்தத்தை டென்மார்க்கில் இருந்தா கொண்டுவரவேண்டும் கனடாவில் பழங்கள் கிடையாதா?? அதுதான் போகட்டும் தேசிக்காய் என்னத்திற்கு என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றினாலும்.அதில் இருந்த மற்றைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அந்த பூசை பற்றிய ஏதாவது படங்கள் கிடைக்குமா என்று விசாரித்தேன்.
படங்கள் அந்த நிகழ்வினை ஒழங்கு பண்ணியவர்களின் அனுமதி தந்தால் தரமுடியும் என்றார்கள் அந்த நிகழ்வினை ஒழுங்கு பண்ணியவர் யாரென்று விசாரித்தப் பார்த்தால் அவர் எனக்கு எற்கனவே இந்த டென்மார்க் லலிதா பற்றிய கட்டுரை சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டவர்தான். இவர் சுவிஸ் நாட்டில் இருக்கின்ற லலிதாவின் ஏழாலை கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை இவர் எற்கனவே சுவிசில் லலிதாவிற்கு கிளைகளை ஆரம்பித்தள்ளார். அதன் விரிவாக்கம் தான் இந்த கனடாவில் செருப்புப் பூசை என்று தெரியவந்தது. எங்கள் ஊரில் சைவத்திற்கும் தமிழிற்கும் மிகப்பெரிய தொண்டு செய்த விபுலானந்த அடிகள் யோகர் சுவாமிகள் ஆறுமுக நாவலர் போன்றவர்களே தாங்கள் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஒரு போதும் ஏமாற்றிது இல்லை
பாதணிகளையோ ஏன் பாதடிகளையோ கூட யாரும் பூசை செய்தது கிடையாது.ஆனால் சிலர் தாங்கள் அவதாரம் என்றும் அற்புதம் செய்கிறோம் என்று ஊரில் வித்தை காட்டிய அனைவரும் கம்பங்களில் கட்டிவைத்து அடித்த அடியில் அவர்களது அற்புதங்களும் மறைந்து அந்த அவதாரங்களும் காணமல்போனதை நானறிவேன். தான் பராசக்தியின் அவதாரம் என்று கதைவிடும் லலிதாவிற்கு உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் என்னவென்று உண்மையான அர்த்தம் தெரியுமா என்று சந்தேகமே.
புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் கடவுளின் அவதாரம் என்பது பூவுலகில் அனியாயமும் அக்கரமமும் அதிகரிக்கும் பொழுது நியாயத்தை நிலைநாட்டவும் எவ்வித பாவமும் செய்யாது துன்பப்படும் மக்களை காப்பாற்றவே கடவுளின் அவதாரங்கள் சித்திகரிக்கப் பட்டுள்ளது.புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக்கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை.
லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.
அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.அதுமட்டுமா பெண்தெய்வங்களின் உருவப்படங்களில் தன்னுடையை படத்தை ஒட்டி கிராபிக் விழையாட்டுகள் செய்தும் (வெளிநாடு வருவதற்காக கள்ள பாஸ்போட்டில் தலை மாத்தின பழக்கதோசமாய் இருக்கலாம்) அரை மி.மீ அளவு மாணிக்கக்கல்லை வாயாலை எடுத்து அற்புதம் செய்கிராராம். மனிதன் மனிதனின் காலில் விழுவதையே மிகப்பெரும் கேவலமாக நினைக்கின்ற ஈழத்தவர்கள் இன்று புலம்பெயர்ந்து வந்த தேசத்தில் அறிவியல் உலகில் நின்று கொண்டு கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு மூட நம்பிக்கைக்குள் வீழ்ந்து ஒரு போலி பெண்சாமியாரின் பாதடிகளை வணங்குவதை நினைத்தும் மக்களிற்கு வழிகாட்டியாய் இருந்து வழிநடாத்தவேண்டிய ஊடகங்களான் பத்திரிகைகள் மற்றும் வானொலிகளும் லலிதான் ஏமாற்றிற்கு துணைபோய் மக்களையும் மூட நம்பிக்கைக்கு துணைபோகத்தூண்டுவதை நினைத்தும் என்னுடய திருப்பாதுகையை கழற்றி( சப்பாத்தைத்தான்) எனக்கு நானே அடித்துகொள்கிறேன்.