Navigation


RSS : Articles / Comments


புத்தா-(மகனே )சிறுகதை-

3:16 PM, Posted by sathiri, No Comment

புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக ..

 
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%
 
பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. 

பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட்டியில் நிரப்பப் பட்டிருந்த தண்ணீரை ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு போய் கழிப்பறையில் வைத்து விட்டு “அப்பா தண்ணி ரெடி” என்று கத்தினான் குமார. இது அவனது அன்றாட நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது. இதை எப்போ தொடங்கினான் என்று தெரியாது. அவனுக்கு விபரம் தெரிய வந்த நாளில் ஒரு நாள் காலை வழமையாக பியசீலி தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளியதுமே “அம்மா நான் கொண்டு போய் வைக்கிறேன்.” என்று அந்த வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுபோய் கழிப்பறையில் வைக்கத் தொடங்கியிருந்தான். இப்போ மூன்று வருடங்களாக அந்த வேலையை ஒரு கடமையாக ஒருவித மன நிறையோடு அவன் செய்து வருகிறான். சத்தம் கேட்டதுமே குணதாச படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்திலேயே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை எடுத்து இரண்டு பக்கமும் கைகளுக்கிடையில் வைத்துகொண்டு எழும்பி கொஞ்சம் தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டு ‘டக்….. டக்….’ என்கிற சத்தத்தோடு ஒற்றை காலை நிலத்தில் தடவியபடியே கழிப்பறைக்கு போவதை பல் தேய்த்தபடியே அவர் எங்கும் விழுந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடு குமார கவனித்துக்கொண்டிருந்தான். 


“குமார……. பன்சாலைக்கு போகவேணும் கெதியா வா ” என்கிற பியசீலியில் சத்தம் கேட்டு அவசரமாக தொட்டி தண்ணீரில் குளித்து முடித்தவன், அவள் எடுத்து வைத்திருந்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு அவனது ஆடையை போலவே வெள்ளை வெளேரென முற்றத்தில் மலர்ந்திருந்த நித்தியகல்யாணி பூக்களை பிடுங்கி ஒருதட்டில் நிரப்பியவன் சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு, வரவேற்பறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த பலகையின் மேல் சிறிய கண்ணாடி கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் சிலைக்கு முன்னால் காய்ந்து போயிருந்த பூக்களை எடுத்து எறிந்து விட்டுப் பியசீலி கொடுத்த தேநீரை குடித்து முடிந்ததும் அவள் தலை வாரி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். காலைக்கடனை முடித்து முகம் கழுவிவிட்டு தட்டில் குமார வைத்த பூக்களை எடுத்து கண்ணாடிக் கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் முன்னால் வைத்து வணங்கிவிட்டுக் கதிரையில் வந்தமர்ந்த குணதாச முன்னால் பூக் கூடையை தூக்கியபடியே ஓடிப்போய் நின்றான். “உன் கோபத்தை குறைத்து நல்ல புத்தியை கொடுக்கும்படி புத்த பிரானை நன்றாக வேண்டிக்கொள்.” என்று பியசீலி வாரிவிட்ட தலையை லேசாய் கலைத்துவிட்டு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குணதாச கடை திறக்கவேண்டியதில்லை எனவே தொலைக்காட்சியை போட்டுவிட்டு கதிரையில் சாய்ந்துவிட பியசீலி சமையலில் இறங்கிவிட்டாள். 


சிறிது நேரத்திலேயே வீதியில் எதோ சத்தம் கேட்டது “நோனா….. நோனா….. ஓடியாங்க உங்களோட மகன் என்னோட மகனை போட்டு அடிக்கிறான். தயவு செய்து ஓடியாங்க”. என்கிற சத்தத்தோடு அதே தெருவிலிருக்கும் ரமணி ஓடி வந்துகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த பியசீலி வெளியே போய் ரமணியோடு சேர்ந்து ஓடினாள். குமார கொண்டுபோன மலர்தட்டு கீழே விழுந்து பூக்கள் எங்கும் சிதறிப்போய் கிடக்க அவன் ரமணியின் மகனை குப்புறப்போட்டு முதுகில் ஏறியிருந்து மாறி மாறி குதிக்கொண்டிருந்தான். பெரும்பாடு பட்டு அவனை பிரித்தெடுத்த பியசீலி “எதுக்கடா அவனை அடிக்கிறாய்? உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா?” என்றபடி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாலும் அது அவனுக்கு வலிக்கவில்லை . 

“அம்மா அவன் அப்பாவை கிண்டல் பண்ணினான்.அப்பா போல தாண்டி தாண்டி நடந்து காட்டினான். அதுக்காக அடிச்சது பிழையா?” என்று சத்தமாகவே கேட்டான் . 


“இல்ல நோனா அவன் நேற்று பந்து விளையாடும்போது உண்மையிலேயே மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதுதான் தாண்டியபடி நடக்கிறான்”. என்று பயந்தபடியே ரமணி சொல்லி முடிக்க. 


“சரி உன்னைப்பார் ஒரே அழுக்கு, இனி பன்சாலை போகவேண்டாம்.” என்றபடி கீழே விழுந்திருந்த தட்டை தூக்கியவள் குமாரவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வரும்போதே தடியை ஊன்றியபடி குணதாச பாதி வழிக்கு வந்து விட்டிருந்தான். “என்ன நடந்தது?” என்கிற அவனது கேள்விக்கு, “எல்லாம் உங்களாலைதான் .” என்றுவிட்டுப் பியசீலி வேகமாக கடந்து சென்றுவிட, தடியை ஊன்றி வேகமாக நடந்ததால் தோள் பட்டைகள் வலியெடுக்க அப்படியே கொஞ்ச நேரம் குனிந்து நின்று ஆறுதல் படுத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குதிரும்பியிருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே பியசீலிக்கும் குமாரவுக்கும் நடந்த கோபமான உரையாடல் அவன் காதில் விழுந்தது. 

“அம்மா நீ சொல்வது போல அவர்கள் ஒன்றும் நல்லவர்களில்லை. அவன் வேணுமெண்டே அப்பாவை கிண்டலடித்தான்..” 


“இல்லை மகனே அவர்கள் நல்லவர்கள். “எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்கள் ..” 


“இல்லை கெட்டவர்கள்…. அவர்களால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை. அவரை பார் எவ்வளவு சிரமப்படுகிறார்?” 

“அது வேற. இது வேறடா. புரிஞ்சுகொள் ……” 


“இல்லை அவர்கள் எல்லாமே அப்பிடிதான். அவர்களை அடிக்க வேணும். முடிந்தால் கொலை கூட …..” 

“டேய்…… நீ கூட ………?” 

என்று பியசீலி ஆத்திரத்தில் கத்தும் போது உள்ளே வந்து விட்டிருந்த குணதாச “வேண்டாம் நிப்பாட்டு……..” என்று அதை விட சத்தமாக கத்தினான். வேகமாக வீட்டினுள் புகுந்து தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு பின்புறமாக சென்ற குமார சுவரோடு பந்தை அடிக்கத் தொடங்கியிருந்தான். அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் தன் கோபத்தை குறைக்க அவன் செய்யும் வேலையது. சுவரில் பந்தை அடித்து அடித்து அது டமாலென வெடித்த பின்புதான் அவன் கோபம் ஆறும்.
பந்து சுவரில் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கிருந்தது. குணதாச கைத்தடிகளை கீழே போட்டு விட்டு நிலத்தில் அமர்து கொண்டு “என்ன பியசீலி நீ கூட….?” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது. 

“இல்லை இப்போ அவன் வளர்த்துவிட்டான். எல்லாம் தெரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டது. இனிமேலும் எல்லாத்தையும் மறைக்க முடியாது. அவனாக தெரிந்து கொண்டால் எங்கள் மீது வெறுப்பு வரும். எனவே சொல்லிதானே ஆகவேணும் ..?”
“சரி சொல்லலாம். கொஞ்ச நாளில பள்ளிக்கூட விடுமுறை வந்துவிடும். நாங்கள் எல்லோரும் ஒரு சுற்றுலா போகலாம். அப்போ நானே பக்குவாமா அவனுக்கு சொல்லுறேன். அதுவரை பொறுமையா இரு”. டமாலென்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சரி இன்னொரு பந்து வாங்கவேண்டும் என்றபடி பியசீலி வீட்டின் பின்புறமாக போனாள்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ 

இதே கிராமத்தில் இதே காணியில் இருந்த சிறிய குடிசையில் தன் தாய் சகோதரியோடு தான்  குணதாச வாழ்ந்தான். தந்தை யாரென்றோ அதைப்பற்றி அறியும் ஆவலோ அவனுக்கு இருந்ததில்லை. நீ வயிற்றில் இருக்கும்போதே, “அப்பா யாரோடோ ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்.” என அம்மா சொன்னதை தவிர வேறெந்த தகவலும் அவனுக்கு தெரியாது. தேயிலை பதனிடும் சிறிய தொழிற்சாலை ஒன்றில்தான் அவன் அம்மா வேலை செய்தார். குணதாசவுக்கும் படிப்பில் பெரிய ஆர்வமில்லாததால் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டு அம்மாவோடு அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு போக தொடக்கி விட்டிருந்தான். அவன் அக்கா பத்தாவது படித்து விட்டு வீட்டிலிருந்தபோது பன் சாலையில் வணங்க வந்த ஒரு போலிஸ் காரர் அவளைப் பிடித்துப்போய் பெண் கேட்டு வந்து திருமணமும் நடந்து அவர்களோடு அம்மாவும் கண்டி நகருக்கு போய்விட. வாழ்கையில் எந்த இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நாட்களை கடதிக்கொண்டிருந்த குணதாசவுக்கு தேயிலை தொழில்சாலையில் வேகமாக சுற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தின் பட்டி அறுந்து தோள்பட்டையில் அடிதபோதுதான் வாழ்கையின் முதல் வலி தெரிந்தது . அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போனதும் வலியை குறைப்பதுக்காக மென்மையான வலியோடு ஊசி மருந்தை செலுத்திய தாதி பியசீலியை முதன் முதலாக சந்தித்தான். பின்னர் அவளை சந்திப்பதுக்காகவே வலிக்கான வழியை தேடி கண்டுபிடித்து வைத்திய சாலையின் வாடிக்கையாளன் ஆனான். 

தினமொரு வலியோடு தன்னை சந்திக்கவே வழி தேடி வருவதாக பியசீலி உணர்ந்துகொண்ட தருணத்தில் அவளுக்கும் அவனை பிடித்துப்போய் விடவே, “அடிக்கடி அடிபட்டு வராதே அன்பே. அன்போடு நானே உனை தேடி வருகிறேன். அப்பாவை வந்து பார்.” என்று அவள் சொல்லி விட்டாள். அவன் அவளின் அப்பாவை தேடிப்போனான். அவரோ, “வேலையென்ன? சம்பளமென்ன? இப்போவெல்லாம் வசதியான பெண்களை வழைத்து போட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு. போய் முடிந்தால் ஒரு வசதியான வீட்டை கட்டி முடி. அப்போதான் என் மகளை கட்டிக்கொடுக்க முடியுமென்று கறாராக சொல்லி விட்டார்”.
கூரை பிய்ந்து தொங்கிய குடிசையில் குந்தியிருந்து யோசித்தான். தேயிலை கொம்பெனியில் வேலை செய்து கூரை கூட வேயமுடியாது. வீடு எப்பிடி காட்டுறதாம்..? அப்போ தான் வாகனத்தில் வந்தவர்கள் வீசி விட்டு போன விளம்பரத்தை எடுத்தான். ‘எம் தேசத்தை நாமே மீட்க வேண்டும். இருக்கும் இந்த தீவு மட்டுமே எமக்கான இருப்பிடம். நான்கு பக்கமும் கடலால் மட்டுமல்ல எதிரிகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். இது அவசர தேவை. அதிக சம்பளம்.’
படித்து முடித்ததுமே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கைகளை மடக்கி மேலே உயர்த்தி தசைகள் புடைக்கிறதா என பார்த்து விட்டு அடுத்த நாளே அந்த விளம்பரதிலுள்ள விலாசத்துக்கு போவதென முடிவெடுத்திருந்தான். அன்றிரவே அவன் கனவில் அந்த இடத்தில் ஒரு மாடி வீடு பிளஸ் மொட்டை மாடியில் பிய சீலியை அணைத்தபடி அவன்……….
000000000000000000000 


இராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தவன் பயிற்சிகள் முடிந்ததுமே கட்டாய சேவையாக வடக்குக்கு அனுப்பப் பட்டிருந்தான். புதிதாக சேர்ந்தவர்களின் கடமையே இரவுநேர காவல் நிலைகளில்தான் தொடங்கும். சண்டை தொடக்கி விட்டால் முன்னுக்கு செல்பவர்களும் அவர்கள் தான். மூன்று வருடங்கள் லீவு எடுக்கமால் அவ்வப்போது பியசீலிக்கு மட்டும் கடிதமெழுதி அனுப்பி விட்டு கல்வீட்டை கட்டி காதலியை மனைவியாக்கும் கனவோடு கடமையிலிருந்தானே தவிர நாட்டை பற்றிய கவலையேதுமிருக்கவில்லை. சண்டை தொடங்கி விட்டாலே எரிச்சலாவிருக்கும். முடிந்தவரை எங்காவது பதுங்கி விடுவான். “சண்டையில் என்ன கிழித்தாய்?” என்று அவன் அதிகாரி கேட்கும் கேள்விக்காக வானத்தை நோக்கி சுட்டு விட்டு துப்பாக்கி ரவை தீர்ந்த கணக்கை காட்டுவான். சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாமென பேச்சு அடிபட்டுகொண்டிருந்த நேரம் தொடர்ச்சியாக விடுமுறையே எடுக்காத அவனுக்கு விடுமுறை கிடைத்தது. நேரடியாக பியசீலியின் வீட்டுக்கு சென்றவன் அவள் தந்தையிடம் “இதோ பொறுப்பான வேலையிலிருக்கிறேன். நல்ல சம்பளம். நாளையே ஒரு இஞ்சினியரை அழைத்துவந்து வீட்டுக்கு பிளான் கீறி அத்திவாரம் போடப்போகிறேன். தனி வீடு அல்ல மாடி வீடு”. என்று வாசலில் நின்றபடி சத்தமாகவே சொன்னான். 


இராணுவ உடையில் துப்பாக்கியோடு வேறு வந்திருக்கிறான். இதுக்கு மேலையும் முடியாது என்று சொன்னால் சுட்டாலும் சுட்டு விடுவான் என்கிற பயத்தில் உடனே அவர் ‘சரி’ சொல்லிவிட, எளிமையாக அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. வீடு கட்டும் வேலைகளும் ஆரம்பித்து விட்டதால் அவன் பியசீலி வீட்டிலேயே தங்கியிருந்தான். ஒரு மாத லீவு ஓடித் தீர்ந்துவிட அவளை வங்கிக்கு அழைத்துப்போய் அவள் பெயரை தன் கணக்கில் இணைத்தவன், “பணத்தை எடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது புது வீட்டுக்கு குடி போய் விடலாமென்றவன்.”, புதிய காதல் மனைவியை கண்ணீரோடு விடை பெற்றான். அப்போ சமாதான காலமென்பதால் அவனுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தது. கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்படிருந்த வீட்டுக்குள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற கவலை மனதுக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கியிருந்தது .
அங்கங்கே சிறு மோதல்களும் நடந்து பேச்சு வார்த்தை குழம்பி மீண்டுமொரு யுத்தம் தொடங்குவதுக்கான அறிகுறிகள் தோன்றியிருந்ததால் விடுமுறையில் போயிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அறிவித்தல்களும் வெளியாகியிருந்தது. சண்டை தொடங்கி விட்டால் இனி அடிக்கடி விடுமுறை கிடைக்காது எனவே வைத்தியரை போய் பார்த்து விடலாமென்று உள்ளுரிலிருந்த வைத்தியசாலையில் போய் பரிசோதனை செய்து பார்த்தார்கள். குறைபாடு குணதாசவிடமே என்றதும் அவனுக்கு மடியிலேயே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போலவிருந்தது. 

“இல்லை இவன் சரியில்லை. கொழும்பு போய் பெரிய வைத்திய சாலையில் பார்க்கலாமென்று” பியசீலி அவனை தேற்றினாள். மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையோடு கொழும்பு போனார்கள். அந்த வைத்தியசாலை பரிசோதனை முடிவுகளும் குணதாசவை நோக்கியே கையை நீட்டியது. அவன் வாழ்நாளில் நினைவு தெரிந்து முதன் முதலாக அழுதான். முழுதாய் உடைந்து போனவனை பியசீலி அணைத்து அழைத்து வந்தாலும் வீட்டில் மாட்டியிருந்த இராணுவ உடையில் கம்பீரமாக நின்றிருக்கும் அவனது படம் அவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது போலவேயிருந்தது. கண்ணை மூடும் போதெல்லாம் பியசீலியின் தந்தை, “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா ? உனக்கெதுக்கு ராணுவ உடுப்பு? கையில துப்பாக்கி தூ ………” என்று துப்புவது போலவேயிருந்தது. ஒரு நாள் முழுதும் துவண்டுபோய் வீட்டிலேயே படுத்திருந்தவனுக்கு பியசீலியின் நிலையை யோசித்தான். பாவம் என்னை நம்பி வந்தவள், அவளை சமாதானப் படுத்த வேண்டும்என்பதுக்காக, “சரி விடு. எல்லாம் புத்தபகவான் பார்த்துக்கொள்ளுவார். மருத்துவத்தால் மாற்ற முடியாததையும் அவர் மாற்றுவார்.” என்று தேற்றியவன், மறு நாளே சில வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருந்தான். வீடு மேல் தளம் கட்டுவதை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துவிட்டு அன்றே வேலைக்கு திரும்பி விட்டிருந்தான். 


சில நாட்களிலேயே யுத்தமும் தொடக்கி விட்டிருக்க அவனை மன்னார் தளத்துக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். இராணுவம் மன்னாரிலிருந்தே களமுனையை திறந்து விட்டிருந்தது. இந்தச் சண்டையில் எப்படியும் செத்துப்போய் விடவேண்டும் அப்போதான் அவளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். வேறு யாரையாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது மட்டுமே அவனது நோக்கம். இதுவரை காலமும் பதுங்கியிருந்து வானத்தை நோக்கி சுட்டவன் இப்போ முன்னுக்கு வந்து மூர்க்கமாகக் களமாடத்தொடங்கியிருந்தான். அவனது திறமையை பார்த்த அதிகாரியே அசந்துபோய் ஊடுருவி தாக்கும் சிறிய குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். இராணுவம் மடுவைத் தாண்டி பல குறுக்கு பாதைகளாலும் கிளிநொச்சியை அண்மித்துக்கொண்டிருந்தது. அவனும் யுத்த களத்தில் திறமையால் குவித்த வெற்றிகளை பாராட்டி குறுகிய காலத்திலேயே ஒரு படையணியை வழிநடத்தும் அதிகாரியாகி விட்டிருந்தான். பியசீலிக்கு அவ்வப்போது குறுஞ் செய்தி அனுப்புவதோடு அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் பதவிகளாலும் ‘நான் வீரமான ஒரு ஆண்மகன். எனக்கு எந்தக்குறையுமில்லை.’ என நம்பத் தொடங்கியிருந்தான்.
கிளிநொச்சியின் பாரிய மண் அணையை உடைத்து உள்ளே புகுந்த அணியில் அவனது அணியும் முக்கியமானது. பொது மக்களை சரணடையும்படி அறிவித்தல் கொடுத்ததுமே எங்காவது ஒரு வழி கிடைக்காதா என காயங்களோடும் பசியோடும் ஏங்கயிருந்த மக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் ஆண்களை, பெண்களை, வயதானவர்களை, காயமடைந்தவர்களை எனத் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். 

நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டிருந்தவரிசையில் ஒரு சலசலப்பு. அவன் என்னவென்று விசாரித்தான். யாரோ ஒரு இளம்குடும்பம் பெண் நிறைமாத கர்ப்பிணியாம். கணவன் அவளை தனியாக விடமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் கவனிதுக்கொண்டிருந்தவன் நேராகப்போய் அடம்பிடிதுக்கொண்டிருந்தவனை எட்டி உடைத்து விட்டு இழுத்துக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான். “ஐயா பெறு மாசம் ஐயா. இண்டைக்கோ நாளைக்கோ பிறந்திடும். அவள் வேற நோஞ்சான இருக்கிறாள். நான் பக்கத்திலை பாத்துக்கொள்ளுறேன். விடுங்கோ ஐயா.” எண்டு புலம்பியபடியே இருந்தவனை இராணுவத்தினர் தள்ளிக்கொண்டு போனார்கள்.
அவள் மொத்தமாக அழுது கண்ணீர் தீர்ந்திருக்க வேண்டும். வயிற்றைப்பிடித்தபடி பற்களால் உதட்டை கடித்து கண்களை மூடி நின்றிருந்தவளை இராணுவ பெண்ணொருத்தி அழைத்துக்கொண்டு போனாள். இரவானதும் சரணடைவு நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள் வரும்படி அறிவித்தார்கள். இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தம் அன்று கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அவர்களது தலைநகரம் வீழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் முற்றாக முடித்துவிடுவோம் என்று வெற்றிக்களிப்பில் நிறைந்திருந்த தன் அணியினர்ருக்கு வாழ்த்து சொன்னவன். தற்காலிக தங்குமிடமாகப் பாதி இடிந்தவீடு ஓன்றில் ஓய்வெடுக்க சென்றிருந்தான். ஜெனறேற்றரில் ஒரேயொரு பல்ப்புமட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாகக் கண்ணயர்த்து போகும் நேரம் மீண்டும் சலசலப்பு. வேகமாக வந்த ஒருவன் சலூட் அடித்துவிட்டு, “சேர் .. சரணடைந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப்போகிறது. வலியில் கத்துகிறாள் என்ன செய்யலாம்? ” என்றான்.
பல நாட்களுக்கு பின்னர் கழற்றி மாட்டியிருந்த சட்டையை போட்டுக்கொண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு போனவன் வலியில் துடிதுக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவன் அடித்து விரட்டியவனின் மனைவியேதான். “ராணுவ மருத்துவருக்கு தகவல் கொடுங்கள். அவளை என் தங்குமிடத்துக்குத் தூக்கிவாருங்கள்.” என்று கட்டளையிட்டு விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி விட்டான். 

அவளைக் கொண்டுவந்து நிலத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். வைத்தியர் வந்து சேரும்போது வலியில் முனகிக்கொண்டிருந்தவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். வைத்தியர் வந்ததுமே அவள் நாடித்துடிப்பை தொட்டுப்பார்த்து விட்டு வேகமாக இயங்கத் தொடங்கினார். குளுக்கோஸ் பையை எடுத்து ஒரு தடியில் கட்டி ஊசியை குழாயில் இணைத்து அவள் கையில் நரம்பை தேடிப்பிடித்து ஏற்றி விட்டு. சிறு பிளேட்டை எடுத்து அவளின் அடி வயிற்ரைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தவர், அதே பிளேட்டால் தொப்பிள் கொடியை வெட்டி விட்டு தண்ணீர் வேணுமென்றதும் குணதாசவே வாளியில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். அதில் குழந்தைதையை அமிழ்த்தி கழுவத்தொடங்கியதுமே அழத் தொடங்கியிருந்தது. “குழந்தைக்கு பால் கொடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று வைத்தியர் சொன்னதுமே, காவலுக்கு நின்ற ஒருவனை அழைத்து, “கைதானவர்களில் பால் கொடுக்கக் கூடிய தாய் யாராவதிருந்தால் உடனே வேகமாக அழைத்து வா..” என்று கட்டளையிட்டான். சில நாட்களுக்கு முன்னர் பிறந்த கைக்குழந்தையோடு ஒரு தாயை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் சைகை செய்ததுமே ஒருவன் அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அழுதுகொண்டிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்ததும் அங்கிருந்து ஓரமாக அவள் சென்றுவிட குழந்தையின் அழுகை சத்தம் நின்று போய் விட்டிருந்தது. 


தன் கடமைகளை முடித்த வைத்தியர் அவனிடம் வந்து, “தையல் போட்டிருக்கிறேன். நிறைய இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப்பெண் பலவீனமாக இருக்கிறாள். உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உயிருக்கு ஆபத்து. வசதியுள்ள பெரிய வைத்திய சாலைக்கு எடுத்துப்போங்கள்.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றுக்கொண்டான்.
வைத்தியர் போனதும் சுற்று முற்றும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் காவலுக்கு நின்றவர்களும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்ணும் சிறிது தூரத்திலேயே நிற்பது தெரிந்தது. அறைக்கு திரும்பி அசைவற்றுக்கிடந்த அவளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் வெளியே பார்த்தான். அருகாக யாருமில்லை. கதவை மெதுவாக சாத்தி விட்டு இடுப்பிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் அடி வயிற்றின் கீழே செருகி மேல் பக்கமாக இழுத்தான். அப்போதுதான் போடப்பட்டிருந்த தையல்கள் கத்திக்கு வழி விட்டு இலகுவாக ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டு சில அங்குலங்கள் அதையும் தாண்டி வந்து நின்றது. கத்தியை இழுத்தெடுத்து குளுக்கோஸ் குழாயை அறுத்தவன், அதிலிருந்து வழிந்த குளுக்கோசில் கழுவி மீண்டும் இடுப்பில் செருகி விட்டு குனிந்து பார்த்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தபடியே உடல் ஒரு தடவை அசைந்தது. எதோ சொல்ல முயற்சித்தது போலவிருந்தது. கழுதுப்பக்கத்தில் விரல்களை வைத்துப் பார்த்தான். நாடித் துடிப்பு அடங்கிப்போயிருந்தது . 


வெளியே வந்து லேசாக விசிலடித்ததும் ஓடி வந்த பாது காவலனிடம், ‘அவள் இறந்து விட்டாள். கொண்டு போய் புதைத்துவிடு.’ என்று சைகையிலேயே சொன்னதும், இயந்திரம் போல இயங்கிய பாதுகாவலன் இறந்தவளின் உடலை அவள் கிடத்தியிருந்த துணியிலேயே சுருட்டி தோளில் சுமந்தபடி இருளில் மறையத் தொடங்கியிருந்தான். அவளுடலில் வழிவதற்கு இரத்தம் இருந்திருக்கவில்லை. 

வெளியே பாலுட்டி முடித்திருந்தவளிடம் அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டுபோய் உள்ளே படுக்கசொன்னதும் அவள் குழந்தைகளோடு உள்ளே நுழைந்து இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி நித்திரையாகிப்போனாள். அரையிருளில் அறுந்துபோன குளுக்கோஸ் குழாயிலிருந்து இன்னமும் துளிகள் விழுந்துகொண்டிருந்தது.
0000000000000000000000000 


நீண்ட நாளின் பின் குணதாச தொலைபேசியில் பிய சீலியை அழைத்ததும் அதிகாலை நேரம் பயத்தில் பரபரத்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே…….? என்றவளிடம் , “இல்லை காலை விடிந்ததும் ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு வவுனியா வந்துவிடு. இராணுவ அலுவலகத்துக்கு போக வேண்டாம். ரயில் நிலைய பக்கமாக வந்துவிடு. அங்கேயே காத்திரு. நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தொலை பேசியை துண்டித்து விட்டான் .
நடந்த முழு உண்மையையையும் பியசீலியிடம் சொல்ல முடியாது. எனவே அவளுக்கு சொல்வதுக்ககவே ஒரு கதையை தயார் செய்ய வேண்டியிருந்தது .யோசித்தான். கதை இதுதான் : 

‘பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி பொது மக்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு கர்ப்பிணி பெண்ணும் கணவனோடு ஓடி வந்துகொண்டிருந்தாள். அப்போ பயங்கரவாதிகளின் சூடு பட்டு கணவன் இறந்து போய் விடக் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மட்டும் என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அன்றிரவே குழந்தை பிறந்துவிட பலவீனமாக இருந்த அந்தப்பெண் இறந்து விட்டாள். எவ்வளவோ முயன்றும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. புத்த பிரானே எமக்காக இந்த குழந்தையை என் கையில் கொடுத்ததாக நினைத்தேன். இனி இவன் எங்கள் குழந்தை……” இதை பலமுறை அவன் சொல்லிப் பார்த்துக்கொண்டான். 


அதிகாலையே எழுந்தவன் நித்திரையிலிருந்த பெண்ணிடம், “உன் குழந்தையை கொண்டுபோய் முகாமில் உன் உறவினர் அல்லது தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு வா.” என்றவன் பழைய துணியால் சுற்றியபடி நித்திரையிலிருந்த குழந்தையை தன்னுடைய இராணுவ சீருடை ஒன்றில் சுற்றி கையில் எடுத்து பார்த்தபடியே நிற்றிருக்கும்போதே அவள் வந்து விட்டிருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து ஜீப்பில் ஏற சொன்னவன், வண்டியை இயக்கியதும் அது ஏ 9 பாதையால் ஓடத் தொடங்கியிருந்தது. வழி நெடுகலும் அங்காங்கு இருந்த இராணுவ தடை கம்பங்கள் எல்லாமே அவனின் அடையாளத்தை உறுதி செய்து வழி விட்டுக்கொண்டிருந்தது. வவுனியா இரயில் நிலையத்துக்கு அருகில் வந்தவன் தொலைபேசியில் பியசீலியை தொடர்பு கொண்டதுமே, அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு, வண்டியிலிருந்தவளிடம் குழந்தையை வாங்கும்போதே அது வீரிட்டு அழத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் பலவந்தமாகவே குழந்தையை பிரித்தெடுக்கும் போது அவள் உதடுகளை கடித்து கண்களை மூடிய படியே பேசாமலிருந்தாள். பியசீலியின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், பியசீலிக்காக சொல்வதுக்கு தாயார் செய்து வைத்திருந்த கதையை வேகமாக சொல்லி முடித்துவிட்டு , 


“நீ ஊருக்கு போக வேண்டாம். அமாவிடம் விபரம் சொல்லியுள்ளேன். நேராக அவர்கள் வீட்டுக்கு போ. போகிற வழியில் குழந்தைக்கு வேண்டிய பால்மா, பால் போச்சி வாங்கி கொள்.” என்றவனிடம் குழந்தைக்கு என்ன பெயர் என்ற பியசீலியின் கேள்விக்கு, “குமார………..” என்று விட்டு ஜீப்பில் போய் ஏறிக்கொண்டான். 

மீண்டும் கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த வாகனத்தை யாருமற்ற காட்டுப் பகுதியில் நிறுத்தி அவளை கீழே இறங்கசொன்னவன் துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான். எந்த அசைவுமற்று நின்றவளிடம் “உனக்கு சாக பயமில்லையா?” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்?” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலுக்கு. “என்பெயரா….?” என்று கோபமாய் கேட்டான். 

“இல்ல… உன் பெண்சாதி பெயர் ..” கம்பீரமாய் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தவன் கொஞ்சம் தடுமாறி, 

“எதுக்கு….? என்றான். 

“அந்தக் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கொள்ள சொல்.” என்றதும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு, “சரி வந்து ஜீப்பில் ஏறு.” என்றான்.அவள் ஏறி அமர்ந்ததும் ஜீப் நகரத்தொடங்கியது.
இருவரிடமும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகளை வீணாக்க இருவருமே விரும்பவில்லை. ஜீப் மீண்டும் கிளிநொச்சி முகாமுக்குள் நுழைந்ததும் அவளை இறங்கி போகசொன்னவன்,
“உன் விசாரணைகளை விரைவாக முடித்து விடுதலை செய்ய சொல்கிறேன். நீ போகலாம்.” என்றதும் தன் பிள்ளை இருக்கும் இடத்துக்கு வேகமாக போய் கொண்டிருந்தவளிடம், 

“கொஞ்சம் நில்லு.” என்றவன், அருகில் போய்,
“அவள் பெயர் பியசீலி…… குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்வாள். இதை பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது. போ என்றான்.”
எபோதாவது செத்து தொலைந்து விட வேண்டும் என்பதுக்காகவே முன்னரங்கில் மூர்க்கமாக படை நடத்தி வெற்றிகளை குவிதுக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நகரத் தொடங்கியிருந்தான். ஒரு துப்பாக்கி ரவை கூட உரசிப் பார்க்கமேலேயே வாழ்க்கை வெறுத்துப்போயிருந்த காலங்கள் கடந்து போய் விட்டிருந்தது. இனி வாழ்ந்து விட வேண்டுமென முடிவெடுத்திருந்த அன்றிரவே அவனுக்கு பக்கத்தில் விழுந்து வெடித்த குண்டுச் சத்தத்தில் எழுந்த வலியோடு மயங்கிப் போயிருந்தான். ராணுவ வைத்திய சாலையில் கண்விழித்த போது, ஒற்றை காலடியில் குழந்தையோடு பியசீலி நின்றிருந்தாள். வலப்பக்கமாக பெரும் வலி. வலக்கால் பக்கமாக தொடைக்குக் கீழே வெள்ளை போர்வை மட்டுமே தெரிந்தது. ஆனாலும் விரல்கள் இருக்குமென்கிற நம்பிக்கையோடு அசைத்துப் பார்த்தான். முறிந்த பல்லியின் வால் போல அவனது தொடை மட்டும் கொஞ்சம் அசைந்தது. என்ன நடந்ததென ஞாபகங்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்து பார்க்க முயன்றதில் குண்டு வெடித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் வந்தது. அறுந்து போயிருந்த நினைவு மீண்டும் ஓட்ட வைத்ததில் ஒற்றைக் கால் இல்லாதவனாகப் படுக்கையில். அதுக்கு மேல் அவனால் நினைவுகளை மீட்க முடியவில்லை. பியசீலி குழந்தையை அவனருகில் கிடத்தியதும், அது இரண்டு கால்களையும் அடித்து எதோ சத்தம் போட்டபோது அவன் ஒற்றைக் கால்வலியை மறந்து போனான். 


காயம் ஆறும்வரை சில மாதங்கள் வைத்திய சாலையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் வெளியே வீதியெங்கும் பட்டாசு சத்தம். காவலரணில் நின்றிருந்த இராணுவத்தினரும் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை ஊழியர்களும் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடி முடித்த மறுநாள் வைத்திய சாலைக்கு வந்திருந்த ராணுவ அதிகாரி காயமடைந்திருந்த அனைத்து வீரர்களின் வாயிலும் ‘பயங்கர வாதத்தை வென்று அரக்கனை கொன்று விட்டோம்.’ என்ற படியே பால்ச்சோற்றை ஊட்டி விட்டுச் சென்று விட்டார். 


காயம் ஆறிப்போனதும் வீடு திரும்பியிருந்தவனுக்கு காயமடைந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் ஊக்கதொகையும் வேறு தொழில் தொடங்குவதுக்காக கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் வீட்டுக்கு முன்னாலேயே சிறிய தொலைபேசி திருத்தும் கடை ஒன்றை போட்டுக் கொண்டவனுக்கு ஒய்வுதியமும் கிடைதுக்கொண்டிருந்ததால் வாழ்க்கை சுமுகமாகப் போய்கொண்டிருந்தது. நாட்கள் செல்ல நடந்த சம்பவங்களும் நினைவிலிருந்து விலகிப்போய் இன்றுவரை நிம்மதியாகவே இருந்தான். இன்றைய சம்பவம் மீண்டும் அவனை பழைய நினைவுகளுக்கு இழுத்துக்கொண்டு செல்லவே, அடுத்த லீவுக்குக் குடும்பமாக கிளிநொச்சிக்குச் சுற்றுலாபோய் பியசீலிக்கு அவன் சொல்லி வைத்திருந்த அதே கதையை அங்குவைத்து நம்பும் படியாக குமாரவுக்கு சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தான்.
0000000000000000000000000000 


வாகனம் கிளிநொச்சி நகரை அண்டியிருந்தது. குணதாசவுக்கும் பியசீலிக்கும் நடுவில் கையில் பந்தை வைத்து உருட்டியபடியே குமார வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குணதாசவோ இறுகிய முகத்தோடு பல வருடங்களுக்கு பின்னர் ஒரு இடத்தைக்காட்டி “இதோ……. இங்குதான் நீ கிடைத்தாய்.” என மீண்டும் சொல்லப்போகும் அந்த கதையையே மனதுக்குள் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கிளிநொச்சி சந்தியில் சனக்கூட்டமாகவும் சத்தமாகவும் இருக்க, சந்தியில் இருந்த உணவகத்தில் ஏதாவது சாப்பிடலாமென நினைத்து வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டுத் தன் கைதடியைகளை எடுத்துக்கொண்டு இறங்கிய போது, வீதியின் மறுபக்கம் சனக்கூட்டமாக இருந்தது. “அங்கே என்ன நடக்கிறது?” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா? காணமல் போனவர்களுக்கான போராட்டம். இதுவே இவங்களுக்கு வேலையா போச்சு.” எண்டு சொன்னபடி போய் விட்டார். குமார வண்டியிலிருந்து இறங்கும்போது கையிலிருந்த பந்து நழுவி வீதியில் குறுக்கே உருண்டோட தொடங்கியதும் அதை பிடிப்பதுக்காக அவன் வீதியில் பாய மறுபக்கமிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று பிரேக் அடித்து நிக்க, ஓடிப்போன குமார திரும்பவும் மறுபக்கம் வந்து விழுந்திருந்தான். என்ன நடந்தது என எல்லோருமே யோசிக்க முதல் அது நடந்து விட்டிருந்தது. அனைவருமே உறைந்து போய் நின்றிருக்கும் போது குணதாச வீதியில் கிடந்தவனை பார்த்தார். குறுக்கே ஓடிய குமாரவை காப்பாற்ற அவனை தள்ளி விட்டு பேருந்தில் ஒருவர் அடி பட்டு கிடந்திருந்தார். யாரோ போனடித்து விட்டிருக்க அம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு போனதும் அங்கு வந்த போலிசார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து விசாரிக்க தொடங்கியிருந்தார்கள். குறுக்கே போன குணதாச தன் இராணுவ அடையாள அட்டையை காட்டி “என் மகனில் தான் பிழை. அவரை விட்டு விடுங்கள்.” என்றதும் போலிசாரும் “விசாரணைக்கு அழைக்கும்போது வரவேணும்.” என்று அவனை விட்டு விட்டார்கள். 


குமரவை காப்பாற்ற குறுக்கே விழுந்தவன் கையில் வைத்திருந்த எதையோ எறிந்து விட்டதை கவனித்திருந்த குணதாச அதை போய் எடுதுப்பார்த்தான். ஒரு பதாதையில் படம் ஒட்டியிருந்ததது. கீழே சிலவசனங்கள் . அந்த படம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து அப்படியே அடங்கிப்போனவளின் முகம். இன்னும் அவனின் நினைவிலிருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் “என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……”? என்று எழுதியிருக்கு என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அந்த படத்தை தனியாக பிரித்தெடுத்து சட்டைபைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான் . 

உணவகத்தில் சாப்பிட அமர்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியவில்லை. பியசீலியும் குமாரவும் கூட சரியாக சாப்பிடவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருந்தவர்கள் வண்டியில் ஏறியதும் “திரும்பவும் ஊருக்கே போ………” என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட எதுவும் புரியாமல் அவனும் வந்த வழியே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான். குணதாச மடியிலேயே தலை வைத்து படுத்திருந்த குமார,
“அப்பா……. எல்லாம் என்னால தானே…? அவருக்கு ஒண்டும் ஆகியிருக்காதே..?” என்றான். இல்லை ஒண்டும் ஆகியிருக்காது. அவர்களும் நல்லவர்கள் தான்”. என்று சட்டையை தடவிப் பார்த்துக் கொண்டான் குணதாச. ஊரை அடைந்திருந்தபோது இரவாகி விட்டிருந்தது. நீண்ட நேர மௌனத்தை உடைத்தவன், “இன்றைக்கு கொஞ்சம் குடிக்கவேண்டும்.” என்று பியசீலியிடம் மெதுவாக அனுமதி கேட்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. வாகனம் சாராய கடையை அண்மித்தபோது றைவரின் தோளில்த் தட்டிப் பணத்தைக் கொடுத்தான். வண்டியை நிறுத்தியவன் ஓடிப்போய் வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். இரவு பியசீலி அறைக்குள் போய் படுத்துவிட, அவன் குடிப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குமாரவை “வா…” என்று அழைத்தவன், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, அப்பா இப்போ உனக்கொரு கதை சொல்லப் போகிறேன்.” என்று சொல்லத் தொடங்கியிருந்தான்
000000000000000000000 

மறுநாள் காலை வழமையை விட தாமதமதமாக எழும்பிய குமார குணதாசவை பார்த்தபோது அவன் மூலையில் சிறிய கண்ணாடி கூண்டிலிருந்த புத்தர்சிலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த நந்தியாவட்டை பூக்கள் நிரம்பியிருந்தது. அருகில் ஒரு பெண்ணின் படம். ” குமார முகம் கழுவி விட்டு வா. தேநீர் தயார் செய்கிறேன்.” என்கிற பியசீலி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக சென்றிருந்தான். பந்து சுவரில்மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. குணதாச பியசீலியை திரும்பிப் பார்த்தான். அவள் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குணதாச நினைவு தெரிந்து வாழ்கையில் இரண்டாவது தடவையாக அழ ஆரம்பித்திருந்தான். டமால் என்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது .

பேச்சியம்மன்-சிறுகதை

5:41 AM, Posted by sathiri, No Comment

பேச்சியம்மன்-சிறுகதை-சாத்திரி   நடு இணைய சஞ்சிகைக்காக ..

 
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%எங்கள் ஊரின் பண்டதரிப்பு போகும் வழியில் ஒரு சிறிய ஒழுங்கையில் இறங்கி நடந்து மீண்டும் ஒரு கையொழுங்கையால் நடந்தால் ஒதுக்குப்புறமாக  ஒருபக்கம் தோட்ட காணிகளையும் மறுபக்கம் பனங்கூடலையும் கொண்ட அக்கம் பக்கம் வீடுகளற்ற  பகுதியில் பனங்கூடலுக்கு  நடுவில் ஒரு வேப்பமரத்தை பின்னிப்பிணைந்த பிரமாண்டமான ஆலமரம். அவற்றின் கிளைகள் பிரியுமிடத்தில் நடுவே ஒரு பனை மரம் வேறு வளர்ந்திருந்தது. அந்த மும்மரத்தின் அடியில்தான் பேச்சியம்மன் கோவில். அதை யார் எப்போ கட்டினார்கள் என்கிற விபரம் எதுவும் ஊரில் யாருக்கும் தெரியாது. ஒருவர் மட்டும் குனிந்துதான் உள்ளே போகலாம். அவ்வளவு சிறிய கோவில். ராசையா பூசாரி மட்டுமே ஒவ்வொருநாளும் மாலையில் உள்ளே போய் விளக்கேற்றி விட்டு சங்கெடுத்து ஊதுவார். அந்த வெளிச்சத்தில் மங்கலாக ஒரு கருஞ்சிலை தெரியும். அந்த சங்குச் சத்தம் மனதில் ஒரு திகிலை தரும். பேச்சியம்மனுக்கு பூசை,பொங்கல்,திருவிழா என்று எதுவும் கிடையாது. அங்கு போகவே பொதுவாக எல்லோருக்கும் பயம். வீடுகளில் யாருடையதாவது பசு கன்று போட்டால் அதனோடு சேர்ந்துவரும் இளங்கொடியை ஒரு சாக்கில் கட்டி கொண்டுபோய் அந்த ஆலமரத்தில் கட்டி விடுவார்கள். பசு அதிக பால் தருமென்பது அவர்களது நம்பிக்கை. அதை விட ஒன்னுமொரு நம்பிக்கையும் இருந்தது.திருமணமாகி நீண்டநாட்கள் பிள்ளை பிறக்காத பெண்களின் தூமைச்சீலையை அதில் கட்டி விட்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. மரத்தடியை சுற்றி, அதை தின்ன வரும் காகங்களும் இலையான் குழவி என ஒரே சத்தமாகவும் நாத்தமாகவும் இருக்கும். ஊரில் வீடுகளிலோ தோட்டங்களிலோ களவு போனால் சனமும் போலிசை நம்பியதை விட பேச்சியம்மனையே நம்பினார்கள். ஒரு முழம் பருத்தி நூலை மூன்றாக மடித்து மஞ்சள் குங்குமத்தில் நனைத்து நேர்த்திவைத்து ராசையா பூசாரியிடம் இழை கட்டி விட சொல்லி கொடுத்து விடுவார்கள். பேச்சியம்மனின் கையிலோ காலிலோ அந்த நூலை கட்டி விட்டால் களவெடுத்தவனின் கையோ காலோ வழங்காமல் போய் விடும். கழுத்தில்  கட்டினால் அவ்வளவுதான் ஆளே இல்லாமல் போய்விடும். ஆனால் ஊர் மக்கள்  கழுத்தில் கட்டுமளவுக்கு அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. பெரும்பாலும் கையிலேயே கட்டும்படி சொல்வார்கள். மென்போக்குள்ள சிலர் விரலில் கட்ட சொல்வதுமுண்டு. 

மக்கள் அந்தப்பக்கம் போகாததுக்கு இன்னுமொரு காரணமும் உண்டு. கையொழுங்கை பிரியுமிடத்தில் நின்ற நூற்றாண்டுகளை கடந்து நிக்கும் பெரிய புளியமரம். ஆறு ஏழு பேர் சேர்ந்தால் தான் அதன் அடிப்பக்கத்தை கட்டிப்பிடிக்கலாம். மரத்தின் கிளைகளில் காய்த்து தொங்குவதைப்போல நூற்றுக்கணக்கான தேன்குழவிக் கூடுகள். இதனாலேயே அதுக்கு ‘தேனிப்புளியடி’ என்கிற காரணப்பெயர். கீழே ஆளுயரத்துக்குப் பல கறையான் புற்றுகள். அதற்குள் குடியிருக்கும் பலரகப் பாம்புகள். மரத்தின் பொந்துகள் எங்கும் கூடு கட்டியிருக்கும் மூத்திரக்குழவி. அது போதாதென்று அருகிலிருக்கும் பனைமரங்களில் பந்து போலத் தொங்கும் கருங்குழவி கூடுகள். இவைகள் சிறகடிப்பு வீணையின் ஒற்றை நரம்பிலிருந்து எழும் சத்தம் போல இரைந்தபடியே எப்போதுமே அச்சத்தை தருவதாக இருக்கும். இரவு நேரத்தில் பேச்சியம்மன் அந்த புளியமரத்தில் வந்து  குந்தியிருந்துவிட்டு போவதாக ஒரு கதை ஊரில் உலாவிக்கொண்டிருந்தது ,அதனைச் சிலர் பார்த்துமிருகிறார்கள். அப்படிப் பார்த்து காச்சல் வந்து பேச்சு மூச்சில்லாமல் படுக்கையில் விழுந்து வைத்தியம் எதுவும் சரிவராமல் பேச்சியம்மனுக்கு நேர்த்தி வைத்து விளக்கேத்த தேங்காய் எண்ணெயும் திரியும் பூசாரியிடம் கொடுத்த பின்னர்தான் காச்சல் மாறியிருக்கிறது. அதே புளியமரத்தடியில் பேச்சியம்மன் சிலரை அடித்து கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. 

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் இந்தப்பக்கம் யாராவது போவார்களா ?.
அந்த மரத்தோடு சேர்ந்திருந்த பெரிய காணியின் நடுவில் செட்டிநாடு மற்றும் கேரள பாணி கலந்து சுண்ணாம்பால் கட்டப்பட்ட பெரிய நாற்சார வீடு. அந்த வீட்டு உரிமையாளர் பல வருடங்களுக்கு முன்னரே சிங்கப்பூரில் சென்று குடியேறிவிட்டதால் அங்கு யாருமில்லை. அதை தாண்டி கொஞ்ச தூரம் போனால் இரண்டு குடிசைகள் முதலாவது , மகனோடு தனியாக வசிக்கும்  கசிப்பு ராசாத்தியின் வீடு.  ராசாத்தியிடம் உள்ளூர் சாராயம் மட்டுமில்லை வெளிநாட்டு சாராயம் கூட கிடைக்கும். கள்ளிறக்கும் தொழில் செய்த அவரின்  கணவன் சாதி சண்டையில் இறந்துபோய்விட வருமானத்துக்காக அவர் தொடங்கியதுதான் சாராய வியாபாரம். சிங்கப்பூர் காரரின் வீட்டில் யாரும் இல்லாததால் சாராய போத்தல்களை மறைத்துவைக்கும் இடமாக பாவித்து மட்டுமல்ல அதனை பாதுகாக்க இரண்டு நாட்டு  நாயை வேறு வளர்த்து விட்டிருந்தார். அந்த வீட்டை தாண்டி சில நூறு மீற்றற்றில் அடுத்த குடிசை பால்ரொட்டி நாகம்மாவினுடையது. நாகம்மா பிறந்து சில காலத்திலேயே  தாயார் இறந்துபோக மகளை கவனிக்கவாவது வேறொரு திருமணம் செய்துகொள்ள பலர் வலியுறுத்தினாலும் மகளை நானே கவனிக்கிறேன் என்று  திருமணமும் செய்துகொள்ளாத   ஊரில் பெயர்போன சமையல்காரன் சித்திரவேலு. ஊரில் நடக்கும் சடங்குகளுக்கு கோவில் திருவிழாக்களுக்கு சமையல் வேலைசெய்வதை தவிர விவசாயமும்செய்தார். நாகம்மாவும் படிப்பை இடையில் விட்டுவிட்டு தகப்பனோடு சேர்ந்து சமையல் வேலைக்கு போகத்தொடங்கி அதை கற்றுக்கொண்டதோடு சொந்தமாகவே பல காரங்களும் செய்யத்தொ டங்கியிருந்தார். பலகாரம் தான் அவரது ஸ்பெசல். அதுவும் முக்கியமாக பால்ரொட்டி செய்வது. இளமையில் அழகாகவும் துடுக்காகவுமிருப்பார். தோட்டத்திலிருக்கும் வாழைக்குலை  காய்கறிகள் எல்லாம் எடுத்து சைக்கிள் கரியரில் கட்டி சந்தைக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார். அது மட்டுமல்ல அந்த புளிய மரத்துக்கு கீழால் சென்றுவரும் துணிச்சலான ஒரு சிலரில் நாகம்மாவும் ஒருவர். அப்படியிருந்த நாகம்மாவை திடீரென சில நாட்கள் ஊரில் காணவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் சித்தவைத்தியம் செய்யப் புத்தளத்தில் ஒரு  மௌலவியிடம் கொண்டுபோய் விட்டுள்ளதாகச் சித்திரவேலர் ஊரில் சொல்லியிருந்தார். சில மாதங்களின் பின்னர் நாகம்மா ஊருக்கு திரும்பி வந்திருந்தாலும் பழைய துடுக்குத்தனம் எதுவுமில்லாமல் அதிகம் வீட்டை விட்டு வெளியே வராமலும் இருந்துள்ளார். 

“சில காலத்திலேயே வெளியூர் போய் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வந்திருந்தார்களாம். அது நாகம்மாவின் குழந்தைதான், யாரோ அவளை ஏமாற்றி விட்டார்கள். வெளியூரில் போய் பிள்ளை பெற்றுக்கொண்டு வந்துள்ளாள்“ என்று ஊரில் ஒரு கதையும் உலாவியது.
அப்போதுதான் காற்றும் மழையும் பலமாக அடித்த ஒரு இரவில் ஊரை கலக்கிய அந்தக்கொலை நடந்திருந்தது . ஊரிலேயே மிகப்பெரிய சண்டியன் மணியத்தை அந்த புளியமரத்தின் அடியில் பேச்சியம்மன் அடித்து கொலை செய்திருந்தது. மணியன் பெரிய சண்டியன். உயரமான, பருமனான, முறுக்கிய மீசையோடு பார்க்க பயப்படும் ஒரு உருவம்.  ஏகப்பட்ட வழக்குகள் அவன்மீது பதிவிலிருந்தாலும் அரசியல் ,போலிஸ் செல்வாக்கோடு வெளியே வந்து விடுவான். வெளியே வந்ததும் அவன் மீது வழக்குப் போட்டவர் உரை விட்டு எங்காவது ஓடிவிடுவார். இல்லாவிட்டால் மணியம் அடித்தே கொன்று விடுவான். அதனால் பலர் வழக்கு போடவே பயந்தார்கள். போலீசாரிடமே கப்பம் வாங்கும் ஒருவன் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மணியத்தைத்தான் பேச்சியம்மன் அடித்து கொன்று விட்டது. செய்தி பரவி ஊரே கூடிமெல்லிய மழைத் தூறலில் நனைத்தபடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, தகவலறிந்து சங்கானை போலிஸ் அதிகாரி ஆறுமுகம் தலைமையில்ஒரு குழு வந்திருந்தாலும், அவர்களும் புளிய மரத்துக்கு கீழே போகப்பயத்தில் ஆளையாள் பார்த்துக்கொண்டிருந்தபோது, சித்திரவேலர் குழவி குத்திவிடாமலிருக்க ஒரு சாக்கை முதுகுப்புறம் போர்த்திக்கொண்டு பெரிய வடக்கயிறு ஒன்றின் நுனியை இடுப்பில் கட்டியபடி தவழ்ந்து போய் அதை  சடலத்தின் காலில் கட்டிவிட்டு மீண்டும் தவழ்ந்து வந்துவிடக் கையிற்றைப் பலரும் சேர்ந்துசடலத்தை இழுத்தெடுத்தார்கள். தலை பிளந்திருந்தது. சடலத்தினருகே முறிந்த புளியங்கிளை ஒன்றும்கிடந்ததால் பேச்சியம்மன் புளியம் கிளையையை முறித்து அதனால் மணியத்தின் தலையிலடித்து கொலை செய்து விட்டது என்கிற முடிவுக்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.

 அவன் குடும்பத்தினரைத் தவிர மணியம் செத்தது ஊரில் எல்லோருக்கும் ஒரு ஆறுதல் தான். போலிஸ் அதிகாரி ஆறுமுகம் ஒரு நின்மதிப் பெருச்மூசோடு சடலத்தை வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தவர், சில நாட்களிலேயே “பேச்சியம்மன் கனவில் வந்து தானே அந்த கொலையை செய்ததால் வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டாமென சொன்னதாக” சொல்லி பைலை மூடி விட்டாராம். அதே வருடத்திலிருந்து கோவில் திருவிழா நாளில் நாகம்மாள் மீது பேச்சியம்மன் இறங்கி உருவாடத் தொடங்கியதாம். இந்த சம்பவங்கள் நடக்கும்போது நான் அப்போ சிறுவன். எனவே பின்னர் எனக்குத் தெரிந்த நாகம்மா பற்றி சொல்கிறேன்.
எப்போதும் சாணி போட்டு மெழுகியிருக்கும் ஒரேயொரு அறை மட்டும் கொண்ட பனையோலையால் வேயப்பட்ட சுத்தமான குடிசை. அருகிலுள்ள சிறிய தாழ்வாரம் தான் அடுப்படி. திண்ணையில் ஒரு கயித்து கட்டில். அதனருகே பலகாரம் சுடும் பெரிய இரும்புச்சட்டியும் இடுப்பளவு உயரமான சல்லடைபோட்ட இரும்புக்கரண்டியும் சாத்தி வைக்கப்பட்டிருக்கும். முன்னால் விசாலமான முற்றத்தை தாண்டி பலவகை பூங்கன்றுகள் சுற்றிவர நிற்கும் பனைமர துலாவுடன் கூடிய கிணற்றடி. அதற்குமப்பால் சிறிய வீட்டுத் தோட்டம். எனக்குத் தெரிந்து ஊரில் முதலாவது பகுத்தறிவாளர் நாகம்மாதான். கோவிலுக்கெல்லாம் போக மாட்டார். காலையில் எழுந்ததும் கிணற்றடியில் உள்ள கமுகமரத்தில் கட்டித் தொங்கும் உமிக்குடுவையிலிருந்து சுட்ட உமியில் பல் தீட்டி குளித்து ஈரத் துணியோடு சுத்தமாக விளக்கிய பித்தளை செம்பில் நீர் நிரப்பி அதுக்குள் பலவகை பூக்களையும் பிடுங்கிப்போட்டு நடு முற்றத்துக்கு வந்து செம்பிலுள்ள பூக்களை முற்றத்தில் போட்டு தண்ணீர் தெளித்த பின்னர் சூரியனை அண்ணாந்துபார்த்து தலைக்கு மேல் கைகளை கூப்பி வணங்கிவிட்டு அன்றைய வேலைகளை தொடங்குவார். நாகம்மா மேல்சட்டை போடமாட்டார். சேலையால் மார்புக்கு மேல் குறுக்கு கட்டியிருப்பார். பெரும்பாலும் பச்சை சேலைதான். 

ஊரில் என்ன மங்கள நிகழ்வு நடந்தாலும் நிகழ்வு தொடங்குவதுக்கு மூன்று நாளுக்கு முன்னரே பால்ரொட்டி சுட்டு முதலாவதாக நன்றாக மொரமொறவென பொன் நிறத்தில் பொங்கி வரும் பால் ரொட்டியை அடுப்புக்கல்லில் நெருப்புக்கு படைத்தது விட்டே  பின்னர் நிகழ்வுக்கு வேண்டிய பலகாரங்களை சுடுவது வழமை. அப்படி முதலாவதாக சுடும் பால் ரொட்டி எண்ணெயில் போடும்போது பொங்காமல் சரியான பதத்துக்கு வேகாமல் வந்தால் அப சகுனம். அந்த நிகழ்வு சரியாக நடக்காது ஏதும் குழப்பங்கள் வருமென்பது ஒரு நம்பிக்கை. அதனாலேயே பலகாரம் செய்வதில் கைதேர்ந்த நாகம்மாவை எல்லோரும் அழைப்பது வழமை. முதல்நாள் பால் ரொட்டி சுடும் நிகழ்வுக்கு அவர் பணம் வாங்கமாட்டார். அவரின் வீட்டுக்குப்போய் வெற்றிலையில் ஒரு ரூபாய் வைத்து அழைக்கவேண்டும். அதை இரண்டு கைகளாலும் வாங்கி கைகளை உயர்த்தி ஆகாயத்தை நோக்கி கும்பிட்டு விட்டு அதை கொண்டுபோய் பலகாரம் சுடும் பெரிய இரும்புச்சட்டிக்கு பக்கத்தில் வைத்து மீண்டும் வணங்கிவிட்டுச் சரி சொல்லிவிட்டால் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்துவிடுமென்கிற மகிழ்ச்சியோடு அழைக்கப்போனவர் திரும்புவார். முடியாதென்று சொல்லிவிட்டால் …….மீண்டும் நாகம்மா சம்தம் சொல்லும்வரை அல்லது வேறொருவரை வெளியூரிலிருந்து அழைத்து வரும்வரை சில நிகழ்வுகள் தள்ளிப்போனதுமுண்டு. நாகம்மாளின் மகள் கல்யாணி ஊர் பாடசாலையில் என்னோடு ஒரே வகுப்பில்தான் படித்தாள். அவளும் நாகம்மாள் போலவே துணிச்சல்காரி. தனியாக அந்த புளியமரத்தை கடந்து பாடசாலைக்கு வந்து போவாள். நாகம்மாவும் என் அம்மாவும் நல்ல நண்பிகள் என்பதால் கல்யாணியும் எனக்கு நல்ல நண்பியாகிவிட்டிருந்தாள். காலப்போக்கில் சித்திர வேலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இறந்துபோய்விடக் கல்யாணி நாகம்மாவுக்கு உதவியாக சமையல் வேலைகளுக்குப் போக தொடங்கியிருந்தாள். 

 ஊர் பாடசாலையில் என் உறவினர்களும் ஆசிரியர்களாக இருந்ததால் அவர்களோடு ஏற்பட்ட தகராறில் நான் எட்டாவது படிக்கும்போதே அப்பா என்னை மானிப்பாய் இந்துவில் கொண்டுபோய் சேர்த்து விட்டார். அதற்குப் பிறகு கல்யாணியையும் நான் அடிக்கடி சந்திப்பது குறைந்து போனது. ஒருநாள் மாலை ஊரிலிருந்த மிகப்பெரிய அரிசி மில்லிலிருந்து சைக்கிளின் பின்னல் ஒரு மூட்டையை கட்டியபடி கல்யாணி வந்து கொண்டிருந்தாள். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்து பேசிய நினைவு. மில்லில் கீழே சிதறிக்கிடக்கும் தவிடு மற்றும் மாவை கூட்டி அள்ளிக்கொண்டு போய் மாட்டுக்கு உணவாக கரைத்து வைத்தால் நன்றாகப் பால் தரும் அதுதான் ஒவ்வொரு நாளும் மில்லுக்கு வந்துபோவதாக சொல்லிவிட்டுபோனாள். மில் முதலாளியின் மகன் சுரேசும் என் பாடசாலையில்தான் படித்தான். அவன் என்னை  விட ஒருவகுப்பு அதிகம். ஆசிரியர்களே சைக்கிளில் வந்து கொண்டிருந்த காலத்தில்  பாடசாலைக்கு பைக்கில்வந்த ஒரேயொருமாணவன் அவன்தான். செல்வ செழிப்பும் திமிரும் அவனிடமிருந்தது. அவனை சுற்றி ஒரு ஓசிக் கூட்டம் எப்போதுமிருக்கும். மாணவிகளும் அவனை ஒரு கதா நாயகன் போலப் பார்த்தால் எனக்கு இயல்பாகவே அவன்மீதொரு எரிச்சல் பெறாமை வளர்ந்து விட்டிருந்தது. எப்படியாவது அந்த வருட கோவில் திருவிழாவில் நண்பர்களோடு சேர்ந்து அவனுக்கு இருட்டடி போடுவதென்று முடிவெடுத்திருந்தேன். அந்த வருட திருவிழாவும் தொடக்கி விட்டிருந்தது. நானும் அவனுக்கு இருட்டடி போடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள் காலை சுரேசை புளியடியில் பேச்சியம்மன் அடித்து கொன்று விட்டது என்கிற செய்தி கிடைத்தது. எனக்கு லேசாக உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தொடங்கியிருந்தாலும் சைக்கிளை எடுத்து புளியடிப்பக்கமாக மிதித்தேன். பிணத்தின் காலில் கயிறை கட்டி தூரத்தில் நின்று இழுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள். 

ஒப்பாரி அழுகை சத்தத்தோடிருந்த சனக்கூட்டத்தை விலக்கி மெதுவாக எட்டிப்பார்த்தேன்.மண்டைபிளந்திருந்தது.நேற்றிரவு நித்திரையிலிருந்தவனை  பேச்சியம்மன் தான் இழுத்துக்கொண்டு வந்து புளியடியில் அடித்துக் கொன்று விட்டது என்று பேசிக் கொண்டார்கள். பேச்சியம்மன் கொல்லும் அளவுக்கு அவன் மோசமானவன் இல்லையே என்கிற சந்தேகமும் மக்களிடமிருந்தது.
ஊரில்விவசாயிகளிடமெல்லாம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்தால் தான் மில் முதலாளியை பழிவாங்க அவரின் ஒரே மகனை பேச்சியம்மன் கொன்று விட்டதாக சந்தேகத்துக்கான பதிலையும் அவர்களே கண்டு பிடிதுக்கொண்டார்கள். போலிஸ் அதிகாரி ஆறுமுகம் இப்போ ஒய்வு பெற்று விட்டதால் அவரிடத்திலிருந்த ரணசிங்க என்கிற சிங்கள அதிகாரி பிணத்தை வைத்திய சாலைக்கு அனுப்பும் வேலைகளை செய்து விசாரணைகளை தொடங்கியிருந்தார். பேச்சியம்மன் செய்த கொலையை விசாரணை செய்தால் அது சும்மா விடுமா என்ன .. ?
அப்போ விடுதலை இயக்கங்கள் வளரத் தொடங்கிய கால கட்டம் எதோ ஒரு இயக்கம் நடத்திய தாக்குதலில் ரணசிங்காவும் கொல்லப்பட சுரேசின் வழக்கும் காணாமல் போய் விட்டது. சில நாட்களில் கல்யாணிக்கு உடல் நிலை சரியில்லையென்று நாட்டு வைத்தியம் செய்ய அவளை  நாகம்மா புத்தளத்துக்கு அனுப்பிவிட்டதாக அறிந்தேன். சில மாதங்களின் பின்னர் கல்யாணி ஊர் திரும்பியிருந்தாள். இந்த கதையை படிக்கும் நீங்களே இப்போ ஓரளவு ஊகித்திருப்பீர்கள். ஆம் நீங்கள் நினைத்தது போலவே சில நாட்களில் கல்யாணியும் ஒரு ஆண் பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டு வந்திருந்தாள். அதுக்குப் பின்னர் ஊர் நிலவரங்கள் மாற்றமடைய நானும் வெளி நாடு வந்து விட்டேன். பேச்சியம்மன் பற்றிய கதைகளும் காணாமல் போய் விட்டிருந்தது.
இப்போ சுமார் முப்பதாண்டுகள் கழித்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஊர் திரும்பியிருக்கிறேன். அதுவும் ஒரு கொண்டாட்டதுக்காக, அது தங்கை கட்டிமுடித்த புது வீடு குடிபுகுதல்நிகழ்வு. நீண்ட காலத்தின் பின் உறவுகளை சந்தித்த மகிழ்ச்சியோடு வீடு குடி புகுதலுக்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போதான் எனக்கு அந்த சந்தேகம்,
“என்ன பலகாரம் எதுவும்சுடேல்லையா”? என்று கேட்டதுக்கு, யார் அதெல்லாம் இப்ப செய்து மினக்கெடுகினம்? பலகாரம் சாப்பாடு எல்லாம் ஓடர் குடுத்தாச்சு. அவர்களே அண்டைக்கு எல்லாம் கொண்டு வந்து பரிமாறிட்டு போவினம். எங்களுக்கு ஒரு வேலையுமில்ல.”  என்ற தங்கையின் பதில் ஏமாற்றமாக இருக்கவே,
“சரி சடங்குகளுக்கு நாள் பலகாரங்கள் பால் ரொட்டி இதெல்லாம் சுடுவினமே, அது கூட இல்லையா ?”என்றேன். 

“பால் ரொட்டி எண்டிற பலகாரமே இப்ப கனபேருக்கு மறந்து போச்சு. அண்ணை இப்பவும் அந்தக்காலத்திலேயே நிக்கிறார்.” எண்டு நக்கலாக சிரிக்க.
“இப்ப யாரும் சுடுறேல்லையோ? இல்லை சுடத் தெரியாதோ…….. ?”  என்ற என் கேள்விக்கு. “உண்மையை சொன்னா இப்ப யாருக்கும் சுட தெரியாது” என்ற அம்மாவின் பதில் குறுக்கே வந்தபோதுதான் எனக்கு மீண்டும் நாகம்மாவின் நினைவு வந்தது. அவரைப்பற்றி நான் கேட்க முதலே,
“முந்தி எண்டால் நாகம்மா இருந்தது. அவளும் செத்து போனாள். இப்ப மகள் இருக்கிறாள். அவளும் பால் ரொட்டி சுடுறதில கெட்டிக்காரி தான், ஆனால் நாகரீகம் மெத்திப்போனதில  ஒருத்தரும் இப்ப கூப்பிடுரேல்ல”என்று பெரு மூசோடுஅம்மா சொல்லி முடிக்க, “கல்யாணிதானே….. இப்ப எங்க இருக்கிறாள்.. ? “அவள் அதே நாகம்மாவின்றை வளவில்தான்.” என்று பதில் வந்ததுமே, “நீ என்னவெண்டாலும் செய். ஆனால் ‘நாள் பலகாரம்’ கட்டாயம் சுடவேணும். நான் கல்யாணியை போய் பார்த்திட்டு வாறன்..” என்றபடி, அங்கு நின்ற யாரோ ஒருவரின் சைக்கிளை எடுத்து மிதிக்க, “உனக்கு இடம்வலம் நினைவிருக்கோ ..”? என்று பின்னல் ஒலித்த அம்மாவின் குரலுக்கு, “என்ரை ஊரிலை எனக்கு இடம் தெரியாதோ”? என்றபடி மிதித்தேன். பூவரசம் வேலிகளெல்லாம் மதில்களாகவும் வெற்று காணிகள் கட்டிடங்களாகவும் நிறையவே மாறிப்போயிருந்த ஊரில் வீதிகள் கறுப்பு வெள்ளை படம்போல மனதிலிருந்தது. புளியடி ஒழுங்கைமட்டும் மாறாமல்  பல வருடமாக யாரும் பாவிக்காததால் புதரும் பற்றை காடுமாக வளர்ந்திருந்தது. முன்பு போலவே வேறு பாதையால் சுற்றி போயிருந்தாலும் கல்யாணியின் வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறியபடி விசாரித்து கண்டு பிடித்து போய்  சந்தேகத்தோடு வீட்டு இரும்பு படலையில் தட்டினேன். 

மெலிந்த தலை நரைத்து இப்போ பாடகி ஜானகியை பார்த்தது போல ஒரு உருவம் உள்ளிருந்து வந்து  யாரது என்றது .. “கல்யாணி … “என்று இழுத்ததும், “ஓம் நான் தான். நீங்கள்……… ? என்றாள். உள்ளே நாய் ஏதும் இருக்கிறதா என பார்த்துவிட்டு தைரியத்தோடு படலையை திறந்து உள்ளே போய் சைக்கிளை நிறுத்திவிட்டு சிரித்தபடி நிற்க. என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவள், 

“மன்னிக்கோணும் எனக்கு யாரெண்டு தெரியேல்லை” எண்டாள். “நான் தான் உன்னோட படிச்ச சிறி..  நாகேசின் மகன்.” என்றதும், சட்டென்று பல்லாயிரம் சூரியகாந்திப்பூ ஒரே நேரத்தில் மலர்ந்தது போல மாறிய புன்னகையோடு, “வாங்கோ .. வாங்கோ .. வந்திருக்கிறதா கேள்விப்பட்டனான். நானே வர இருந்தனான்.” என்று கதவை அகலத் திறந்து வரவேற்றாள். அப்படியே சுற்றிவர நோட்டம் விட்டேன். நாகம்மாள் வாழ்த்த குடிசை வேயப்பட்டு சாணியால் மெழுகி சுத்தமாக இருந்தது. அதே கயிற்றுக்கட்டில் அதேயிடத்தில் அருகில் அதே பெரிய இரும்புச் சட்டியும் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த கரண்டியில் சந்தனப்பொட்டு, கீழே காய்ந்துபோயிருந்த சில மலர்கள். கிணற்றடியும் சுற்றிவர பூசெடிகளும் ,பனைமரத் துலாவை காணவில்லை. மோட்டர் போடப்பட்டிருந்தது. வீட்டுத்தோட்டமிருந்த நிலத்தில் சிறிய இரண்டு அறை கொண்ட அழகான கல்யாணியின் கல்வீடு கட்டப்பட்டிருந்தது. உள்ளே போய் வழக்கமான விசாரிப்புக்களிடையே, “தனியாவா இருக்கிறாய்”? என்று கேட்டதுக்கு, 

 “ஓம்…..  மகன் கனடாவிலை. கலியாணமும் கட்டி மூண்டு பிள்ளையள். ஒவ்வொரு வருசமும் வந்து போவான். என்னையும் அங்கை இருக்க சொல்லி கூட்டிக்கொண்டு போனவன். எனக்கு அங்கை பிடிக்கேல்லை. திரும்பி வந்திட்டன். உங்கட அம்மாவும் பிரான்சுக்கு வந்திட்டு பிடிக்காமல் திரும்பி வந்ததா சொன்னவா”.
“ஓம்…….. அம்மாக்கும் வெளிநாடு பிடிக்கேல்லை. எனக்கும்தான் பிடிக்கேல்லை. ஆனால் என்ன செய்ய”? என்கிற ஆதங்கத்தோடு, நான் வந்த விடயத்தை சொன்னேன்.
“என்னது……… பால் ரொட்டி சுடவா?” என ஆச்சரியமாக கேட்டாள். “ஏன் உனக்கு சுடத் தெரியாதோ … » ?
“இல்லையில்லை இப்பவெல்லாம் ஒருத்தரும் செய்யிறேல்லை. என்னையும் கூப்பிடுறேல்லை.  இரும்பு சட்டியும் கறள் பிடிச்சுப்போச்சு.. “
“நான் கேட்டால் வருவாய் தானே … “
“உங்களுக்கு இல்லாமலே……..”என்றவளிடம்,
“அதென்ன நீங்கள் நாங்கள் எண்டு திடீர் மரியாதை? நீ .. நான் எண்டே சொல்லு.” 

என்றபடி வரும்போதே கடையில் தயாராய் வாங்கி வந்த வெற்றிலை பாக்கை பையிலிருந்து எடுத்து இரண்டு ஆயிரம் ரூபாய் தாள்களையும் நடுவில் வைத்து நீட்டினேன். லேசாக சிரித்தவள், “சில்லறை இல்லையா?” “ஓம் இருக்கே……” என்றபடி கால்சட்டை பையில் கையை விட்டு துளாவியதில் ஒரு ரூபாய் நாணயம் அகப்பட எடுத்து  இந்தா என்றதும், “சரி வெளியே வா……..” என்றவள், முற்றத்தில் போய் நின்று, “ஒரு ரூபாயை மட்டும் வெத்திலையில் வைச்சு குடு………”.
அவள் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல் பின்னாலேயே போய் ஒரு ரூபாயை மட்டும் வெற்றிலையில் வைத்து பக்குவமாக நீட்டினதும், அதை வாங்கியவள் வானத்தை அண்ணாந்து பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்த செம்வரத்தை மரத்திலிருந்து ஒரு பூவையும் பிடுங்கி சேர்த்துக் கொண்டுபோய் இரும்பு சட்டியும் கரண்டியும் இருந்த இடத்தில் வைத்து வணங்கி விட்டு, “சரி எப்ப வரவேணும்…… ? அவள் சரி சொன்ன மகிழ்ச்சியில் “இண்டைக்கே……” என்றேன். 

“சரி போ………. நான் இதெல்லாம் எடுத்து கழுவிக்கொண்டு வாறன்.”
அன்று மாலை வீட்டுக்கு வெளியே அடுப்பு வைத்து கல்யாணி பால்ரொட்டி சுடுவதை உறவுகள் எல்லாருமே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள். எல்லாருக்கும் அதை உடனே சாப்பிட்டு விட வாயூறினாலும் குடி புகுதலன்று சாமிக்கு படைக்காமல் சாப்பிடக்கூடாது என்று அம்மா கறாராகச்  சொல்லி விட்டார். அனைத்தையும் அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்த  என் மகளிடம்  அதிலொன்றை களவாக கையில் கொடுத்த கல்யாணி, “எங்காவது ஓடிப்போய் ஒழிச்சு நின்று சாப்பிடு.” என்றதும் என்ன செய்வதென்று தெரியாமல் என்னை பார்த்தவளுக்கு லேசாய் தலையசைத்து சம்மதம் சொன்னதும் மாயமாய் மறைந்து விட்டாள். நிகழ்வுகள் எல்லாம் நல்லபடியாய் நடந்து முடிந்து நீண்ட காலத்துக்கு பின்னர் உறவுகள் அனைவரையும் சந்தித்த மகிழ்ச்சிவேறு. விடுமுறை முடிந்து பிரான்சுக்குத் திரும்ப நாலு நாட்களே இருந்தது. மாலை நேரம்  பழைய நண்பனொருவனைப் பார்த்துவிட்டு வரலாமென சைக்கிளில்  கிளம்பி பிரதான வீதியால் சந்தியை கடக்கும்போது, மூன்று பைக்குகளில் ஆறு இளைஞர்கள் கதைத்தபடி நின்றிருக்க, அவர்களை தாண்டும்போது ஒருவன் கையை காட்டி மறிக்க, திடீரென இன்னொருவன் பைக்கில் செருகியிருந்த வாளொன்றை உருவி சைக்கிள் கைப்பிடி பகுதியில் ஓங்கி வெட்டி விட்டு, “நீ யார் ? ஊருக்கு புதிசா இருக்கு.” என்றான். சட்டென்று நான் கையை எடுத்து விட்டதால் தப்பித்தேன். கொஞ்சம் பிசகியிருந்தாலும் என் கையில் வெட்டு விழுந்திருக்கும். அதை நான் கொஞ்சமும் எதிர் பார்க்காததால் சைக்கிளை கீழே போட்டுவிட்டு, “நான் இந்த ஊர் தான். வெளி நாட்டிலை இருந்து வந்தனான்.” எண்டு தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தபோது. வாளால் வெட்டினவன், “உன்ர பேரென்ன”? என்று விசாரணையை தொடங்கும்போதே எதிரே வந்துகொண்டிருந்த கல்யாணி, “டேய்……… அவரை விடுங்கோடா. பரதேசியள். உங்களுக்கு இதே வேலையா போச்சு……..”  என்று கத்தியபடியே வர  சனமும் கூடத்தொடங்க அவர்கள் பைக்குகளில் ஏறி சத்தம் போட்டபடியே போய் விட்டார்கள். 


என்னை பழைய நிலைக்கு கொண்டுவந்து கீழே கிடந்த சைக்கிளை எடுத்தபோது அருகில் வந்துவிட்ட கல்யாணி,
“உனக்கு ஒன்டுமில்லைத்தானே”? கோபம் அவமானம் இரண்டையும் அடக்கியதால் வார்த்தைகள் வராமல் இல்லையெண்டு தலையை மட்டும் ஆட்டினேன்.
“வெளிநாட்டு காசு……. ஆளுக்கொரு பைக்கும் போனும். வேலை வெட்டியில்லை. மண்டையிலை கோலம் போட்டு கலரும் அடிச்சுக்கொண்டு ரவுடித்தனம் செய்யிறதுதான் வேலை. நாசமா போவார். என்ர மகன் வந்து நிகேக்கையும் அவனோட பிரச்சனைப்பட்டு காசு பறிச்சுப்போட்டங்கள். உவங்களுக்கு நல்ல சாவே வராது.” என்று திட்டித்தீர்த்தவள்,
“சரி நீ இந்த நேரம் எங்கை போறாய் … »? எனக்கு இன்னமும் பேச்சு வரமறுத்தது. தொண்டையை செருமி சரி செய்துகொண்டு, “ஒரு சிநேகிதனை பார்க்க போனன்”. சரி….. பார்த்துப்போ.” என்று விட்டு போய் விட்டாள். வேடிக்கை பார்த்தவர்களும் கலைந்துபோக அப்படியே வீடு திரும்பிவிட்டேன். இரண்டு நாளாக அந்த நிகழ்வே மனதில் கிடந்தது உழன்றுகொண்டிருந்தது. “என்ன ஒரு மாதிரியிருக்கிறாய்” ? என்று வீட்டில்கூட கேட்டு விட்டார்கள். இரண்டு நாள் கழித்து மனது கொஞ்சம் லேசாகிவிட்டிருந்தது. நாளை ஊரை விட்டுவெளிக்கிட வேண்டும். நேற்றிரவு அடித்த மழை இன்னமும் லேசாக தூறியபடிஇருந்தது. கல்யாணி பலகாரம் சுட்டதுக்கு பணம் வாங்க மறுத்து விட்டதால் அவளுக்காக ஒரு பச்சை நிற சேலை வாங்கி வைத்திருந்தேன். வாள்வெட்டு மன உளைச்சலில் அது  மறந்து விட்டது. கொண்டுபோய் கொடுத்து விடை பெற்று வரலாமென நினைத்து அவசரமாக வெளிக்கிட்டு பிரதான வீதியிலிருந்து புளியடி ஒழுங்கையை கடக்கும்போது ஒரே சனக்கூட்டமாக இருந்தது. போலிஸ் வாகனமும் நின்றிருக்க, யாரோ ஒருவனின்உடலை.காலில்கயிறுபோட்டு கட்டியிழுத்துக்கொண்டிருந்தார்கள். 

எட்டிப்பார்த்தேன். மூன்று நாளுக்கு முன்னர் என்னை மறித்து வாளால் வெட்டிய அதே இளைஞன். சட்டென்று எனக்கு தலையில் யாரோ ஓங்கி அடித்தது போல ஒரு உணர்வு. என்னையே எல்லோரும் பார்ப்பது போலவும் இருந்தது. “யாரோ இழைகட்டியிருகிறாங்கள். பேச்சியம்மன் கனகாலத்துக்குப் பிறகு ஒருத்தனை பலி வாங்கியிருக்கு”. என்று கூட்டத்தில் கதைப்பது காதில் விழுந்தது. சைக்கிளை எடுத்து அங்கிருந்து வேகமாக மிதித்தேன். வீட்டு முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்யாணி,
“நேற்றிரவு சரியான மழை. செடியெல்லாம் சரிஞ்சு போய் கிடக்கு.”என்றவள், “என்னை பார்த்து என்ன பேயடிச்ச மாதிரி வந்திருக்கிறாய்  …. “? இல்லை,
“பேச்சியம்மன் அடிசிட்டுதாம். வாற வழியிலை பார்த்தன்”.
“ஒ………… சனம் இப்பவும் இதையெல்லாம் நம்புதோ……… ?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் சனத்துக்கு எப்பவுமே ஒரு நம்பிக்கை தேவையாயிருக்கு”.  இந்தா………  என்று சேலையை அவளில் கைகளில் கொடுத்தேன்.  பிரித்து பார்த்தவள்,
“அம்மாவுக்கு பிடிச்ச நிறம்,  எனக்கும் பிடிக்கும். சரி எப்ப திரும்ப போறாய் … “? “நாளைக்கு.”
“சரி இனி இங்கை வராதை. நல்லபடியா போ………….. “என்றவள் வீட்டுக்குள் போய் விட, கொட்டிலில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் கரண்டியை பார்த்தேன். அது சுத்தமாக கழுவி பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த பூக்கள்.