Navigation


RSS : Articles / Comments


ஒரு போராளியின் அனுபவங்கள்...

10:37 AM, Posted by sathiri, No Comment

ஒரு போராளியின் அனுபவங்கள்...

 http://www.senguruthi.com/


ஆயுத எழுத்துசாத்திரி 
திலீபன் பதிப்பகம் | விலை:400/-
நிறுவனமயப்பட்ட அனைத்துமே  அதிகாரம் சார்ந்ததுதான் .அதிகாரம் ஏனையோரை ஒடுக்குகிற கருவியாக உருமாறக்கூடியது என்பது எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதே .அது ஒரு புரட்சிகர அமைப்பாக இருக்கலாம், கலகக்குழுவாக இருக்கலாம், வர்க்க சாதிய விடுதலையை கோருபவையாக இருக்கலாம் அல்லது ஈழ மக்களின் துயர் தோய்ந்த நீண்ட நெடுநாளைய போராட்டமாக இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் மேற்கண்ட கூற்று எல்லாவற்றுக்குமே பொருந்தக்கூடியதே!
புறத்திலும் அகத்திலுமாய் விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பல்வேறு தகவல்களை நாம் வாசித்தும் கேட்டும் இருக்க கூடும் ஆனால் அந்த இயக்கத்தின் உள்நாட்டு வெளிநாட்டு பிரிவுகளின் நீண்ட வருடங்கள் பணியாற்றிய சாத்திரி கூறுகிற போது  சுவாரஸ்யம் மேலிடுகிற அதே சமயம் வெறுப்பும் உடனிணைந்து கொள்கிறது.
ஒருமொழி பேசும் இனமக்ககளை இன்னொரு மொழிபேசும் இனமக்கள் பூர்வகுடிகள் என்கிற ஒற்றை அதிகாரத்தை கொண்டு எல்லா வகைகளிலும் ஒடுக்க முனைவதை யாவராலும் ஏற்க முடியாது.அதை ஒடுக்க அல்லது வேரறுக்க கிளர்ந்தெழும் விடுதலை வேட்கைகொண்ட இயக்கங்கள் அச்சமூகத்தை நன்கு ஆராயாமல் அதன் வரலாற்று தன்மைகளை நிகழ்காலத் தேவைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் பேசும் சகல பண்பாட்டு வேறுபாடுகள் உடையவர்களையும் புறக்கணித்து தமிழ் இந்துக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று புறப்படுகிற போது என்ன வகையான விபரீதங்கள் எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் என்னென்ன வரலாற்று தவறுகளை உணர்ச்சிக்கு ஆட்பட்டு மனிதாபிமானமே இல்லாமல் செய்ய வேண்டி இருக்கும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் தான் விடுதலை புலிகள் இயக்கம்.
ஒரு இயக்கத்துக்கான கோட்பாடு அத்தலைமையினாலே மீறப்படும் போது அதை எதிர்த்து கேள்வி கேட்க்காமல் அப்படியே ஏற்று செயல்பட வேண்டிய மனோநிலையும் தலைமை செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் அல்லது அதை எதிர்த்து  நமக்கு நாமே சாவை தேடிக்கொள்ள வேண்டுமா  என்பதான கீழ்படிதல் ஒவ்வொரு இயக்கத்தின் சர்வாதிகார தனத்தை நிரூபிப்பதாக இருக்கிறது.இன விடுதலையின் பேரால் தமிழ் பேசும் பகுதிகளில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லீம்களின் உடமைகளையும் வலுகட்டாயமாக பறித்துக்கொண்டு வெறும் கையோடு வெளியேற்றிய கொடூரத்தை புனைவில்லாமல் சொல்லும் காட்சி நெஞ்சை கணக்க செய்கிறது.
ஒரு புரட்சிகர இயக்கம் தன் ஆயுத தேவைக்காகவும் இன்னபிற தேவைக்காகவும் என்னென்ன வேலைகளிலெல்லாம் ஈடுபட வேண்டி இருக்கும் என்பதை சாகசத்தோடு வெளிநாடுகளில்  நடைபெற்ற சம்பவங்களின் ஊடே சொல்லி இருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.இதுநாள்வரை நமக்கு சொல்லப்பட்ட செய்திகளை கடந்து புலிககளின் சர்வதேச தொடர்புகளையும் அவர்களின் வலைப்பின்னலும் பிரம்மாண்டமானதும் சாகசத்தன்மை வாய்ந்தது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
இந்திய அரசியல் ,இந்திய அரசியலுக்கு ஈழப் பிரச்சனைகள் கொடுத்த நெருக்கடிகள் ,நெருக்கடிகளால் இந்திய இராணுவ வருகை,வருகைக்கு பின்பாக ஈழத்தில் நடைபெற்ற அக்கிரமங்கள் அந்த அடாவடித்தனத்துக்கு புலிகளின் எதிர்வினை ,நள்ளிரவில் பிரபாகரனை சுட்டுக்கொல்ல டெக்ரா டூனில் இருந்து வான்வழியாக வந்திறங்கும் ஆயுதப்படை .இரவோடு இரவாக நடந்த சண்டையில் வந்த அநேகரும் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் மரித்துப்போக இது மேலும் சிக்கலை கொடுக்குமோ என்கிற பயத்தில் பின்வாங்கிய இந்திய ராணுவம் என ஒவ்வொரு காட்சியாக இந்திய -இலங்கை அரசுகளுக்குமான  தொடர்புகளின் வழியே அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி.ஆரின் உதவிகள் என ஈழ மக்களின் மீதான பரிவு விடுதலைப் புலிகளின் தமிழக ஆயுத பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும் முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இடம் பெற்றிருக்கிறது.கன்னி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேக போராட்ட யுக்தியாக இருந்தது என்பதை இந்நூலின் மூலம் காண முடிகிறது.அதே வேலை எத்தகைய மனோநிலையில் அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள் மரணத்தை முன் வந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கான புறச்சூழலையும் உணர்த்துகிறது.
பிரான்ஸ்,தாய்லாந்து,ஜெர்மனி,சுவிஸ்,இங்கிலாந்து,சிங்கப்பூர்,ருமேனியா,கம்போடியா,செக் குடியரசு,கிழக்கு ஆப்ரிக்கா,மியான்மார்,இத்தாலி,ரஷ்யா,பெல்ஜியம்,போலாந்து,இஸ்காண்டிநோவியா,இந்தோனேசியா,நைஜீரியா மற்றும் இந்நூலில் அரசியல் சூழல் கருதி குறிப்பிட முடியாமல் போன நாடுகளும் சேர்த்து உலகம் சுற்றும் வாலிபனாக வளம் வரும் வெளிநாட்டு பிரிவு ஊழியர்கள் மருந்து,ஆயுதம் மற்றும் இதர கொள்வினை செய்யும் போது எதிர்கொள்ளும் துனீ கர செயல் குறிப்பாக ஆப்ரிக்க கள்ளச்சந்தை தலைவனிடம் ஆயுத கொள்வினைக்காக சந்திக்கும் தருவாயும் இந்தியாவின் பெங்களூரில் துறைமுக அதிகாரியிடம் மருந்து கொள்வினைக்காக இசைந்து போகவேண்டிய சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் ஆண் தன்மையை உணர்த்துவதோடு..... இயக்க உறுதிமொழிகளும் கட்டுப்பாடுகளும் இங்கு எடுபடாது என்பதை நடைமுறை எதார்த்தத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.          
மொத்தம் 32 விடுதலைக் குழுக்கள் இயங்கியதாக சொல்லும் சாத்திரி ஒவ்வொரு குழுவும் யாருடைய நிதியின் மூலம் இயங்கின அவைகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் சக குழுக்களோடு கொண்ட முரண்பாடு முற்றி பகையுணர்வாக உருமாறி ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்ட சம்பவங்கள் பின் அதன் தொடர்ச்சியாய் புலிகளால் அனைத்து குழக்களும் ஒழித்துகட்டபட்ட கதைகள் என நீள்கிறது. சமகால படிப்பினையாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தோற்றமும் மறைவும் நம் கண்முன்னே மனிதத் தன்மையற்ற ஒரு காட்சியாய்  இன அழிப்பாய் நடந்துமுடிந்தபோதிலும் ஒரு புரட்சிகர இயக்கம் சரியான திசைவழியில் பயணிக்காமல் போனால் அது தானாகவே நீர்த்துப்போகும் என்பதன் சமகால எடுத்துக்காட்டு தான் ஈழப் பிரச்சனையில் விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவமாகும்.
புலிகள் அமைப்பின் தலைவர்கள் கிட்டு,பொட்டு அம்மன்,ஆண்டன் பாலசிங்கம்,அவரின் மனைவி அடேல்,மாத்தையா,கருணா,நடேசன்,குமரன் பத்மநாபன்,எல்லாவற்றுக்கும் முன்பாக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் என ஒரு இன விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கூறுகளை அதன் அரசியல் தத்துவார்த்த நடைமுறை முரண்பாடுகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது ஆயுத எழுத்து.
நெருக்கடி ,உல்லாசம்,காமம்,வேட்கை,காதல்,சாகசம்,சுவாரஸ்யம் என மனித வாழ்நிலையின் பல்வேறு அம்சங்களை சுமந்து நிற்கும் ஒரு இயக்கப் போராளியின்  அனுபவங்கள் நிறைந்த இத்தொகுப்பு முழுமையானதல்ல மிக சொற்பமான பகிர்வுகளே என்கிற போதும் உணர்ச்சி வேகத்தில் எடுக்கிற முடிவுகள் ஒருபோதும் நன்மை பயக்காது மாறாக விபரீதத்தில் தான் கொண்டு நிறுத்தும் என்பதை தான் சிறுவயது அனுபவத்தோடு சுட்டிக்காட்டி இருப்பது தான் இத்தொகுப்பின் தனித்தன்மையாக அமைந்திருக்கிறது.அப்பவே   படி....   படினு.... சொன்னாங்க நான் தான் கேக்கல.... என மனசாட்சி மறுகும்  மனித தடுமாற்றம் இயல்பானதே!

புரட் …சீ ( சிறுகதை )

2:09 PM, Posted by sathiri, No Comment

புரட் …சீ ( சிறுகதை ) / சாத்திரி ( பிரான்ஸ் )




காலை நித்திரையை விட்டெழுந்த கட்டிலில் இருந்து இறங்குவதற்குள் அருகில் கீழே படுத்திருந்த கார்க்கி துள்ளி எழுந்து மல்லிகா மீது பாய்ந்து வாலையாட்டியபடி முகத்தை நக்கத் தொடங்க அதன் தலையை மெதுவாய் தவிக்கொடுதவள் தனது கண்ணாடியை எடுத்துப் போட முயற்சிக்கும் போது மீண்டும் கார்க்கி அவள் மீது பாய கை தவறி கீழே விழ கார்க்கியை அதட்டியபடி கீழே விழுந்த கண்ணாடியை எடுத்துப் போட்டபடி கார்க்கியின் உணவை எடுத்து அதன் கிண்ணத்தில் போட்டுவிட்டு தேநீரை தயாரித்த மல்லிகா அதை எடுக்கும் போது கை தவறி தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்து போக.. திடுக்கிட்ட கார்க்கி மல்லிகாவை பார்த்து குரைத்து விட்டு மீண்டும் கிண்ணத்தில் தலையை விட்டு கொறிக்கத் தொடங்கியது.

 “என்ன இண்டைக்கு எல்லாமே அபசகுனமாவே இருக்கு” என்று நினைத்தபடி நிலத்தை துப்பரவு செய்தவள் சிறிது பதட்டத்தோடு மகன் டிராஸ்கிக்கு போனடித்தாள்.இன்று வார விடுமுறை நாள் டிராஸ்கி குடும்பத்தோடு அவளின் வீட்டுக்கு வரவேண்டிய நாள் போனை எடுத்த டிராஸ்கி “அம்மா …எதுவும் சமையல் செய்ய வேண்டாம் நானே சாப்பாடு கொண்டு வருகிறேன்” என்றதும் மகனுக்கு ஒன்றும் பிரச்னையில்லை என்கிற மன நின்மதியோடு அடுத்த தேநீரை தயார் செய்யத் தொடங்கியிருந்தாள்.ஆனாலும்யாருக்கோ எதோ நடந்து விட்டது என்று மனதில் லேசான ஒரு சஞ்சலம் இருந்தாலும் இப்போதெல்லாம் அவளது உலகத்தில் அவளும் அவளது மகன் மருமகள் பேரன். கார்க்கி. இவை மட்டுமே ..இவை தவிர்த்த வெளி உலகம் என்றால் தொலைக்கட்சி செய்திகள் சீரியல்கள் என்பதோடு சரி .. எனவே மனதை தேற்றிய படி அடுத்த தேநீரை தயாரித்து கவனமாக கையில் எடுத்தபடி வழமை போலஅவளது பன்னிரண்டாவது மாடியின் பால்கனி கதவை திறந்ததும் பாரிஸ் நகரத்தின் சித்திரை மாதத்து சில்லென்ற காற்று முகத்தில் அடிக்க லேசான பனி மேக கூட்டத்தில் கான்கிரீட் காடுகளை தாண்டி உயரமாக இரும்பு மரமாக உயர்ந்து நின்ற ஈபிள் கோபுரத்தை வழமை போலவே எரிச்சலோடு பார்த்தபடி தேநீரை உறுஞ்சவும் வீட்டு தொலை பேசி ஒலித்தது .வீடிற்குள் வந்து தொலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் ..”கலோ மல்லிகா தோழர் சுரேந்தர் இறந்துவிட்டார்”.. என்றது அவளது தோழியின் குரல் ..மல்லிகாவின் கைகள் நடுங்கத் தொடங்கிட்டது போல இருந்ததது தலை லேசாய் சுற்றவே காதில் போனை வைத்தபடி ம் ….ம் ….மட்டும் சொல்லிக்கொண்டு சோபாவில் சாய்ந்தாள் .
00000
காலம் 1972 ம் ஆண்டின் ஒரு அதிகாலைப் பொழுது முருங்கையில் படுத்திருந்த சேவல் கூவிக்கொண்டிருக்க வெளிச்சம் லேசாய் பரவத் தொடங்கியிருந்தது .ஊரின் ஒதுக்குப்புறமான பெரிய பனங்காணியின் ஓரத்தில் இருந்த சிறிய குடிசை வீடொன்றில் கண்விழித்த நல்லம்மா தன்மீது கலைப் போட்ட படி படுத்திருந்த மாயவனின் காலை விலக்கியதும் அவன் விரலை சூப்பிய படி சுருண்டு படுக்க போர்வையால் அவனை போர்த்தி விட்டு மறு பக்கம் பார்த்தவள் “குமாரகிட்டுது இன்னும் ஒழுங்கா படுக்கத் தெரியேல்லை” என்று புறுபுறுத்த படியே பக்கத்தில் படுத்திருந்த மல்லிகாவின் பாவடையை சரி செய்தவள் எரிந்து கொண்டிருந்த அரிக்கன் லாம்பை ஊதி அணைத்து விட்டு காலைக் கடனை முடிப்பதற்க்காக வாளித் தண்ணீரோடு பக்கத்திலிருந்த பனை வளவுக்குள் போகும்போது ஒரு உருவம் அசைவதை கவனித்தாள் .அந்தப் பகுதியில் பலரின் கழிப்பிடம் அந்த பனங்காணி தான் என்பதால் யாரோ ஒருவர் ஒதுங்குகிறார் என நினைத்தபடி கொஞ்சம் தூரமாக போய் குந்தியபோது அந்த உருவம் “ஐயோ அம்மா” என முனகுவது கேட்டது . முக்குகிற இடத்தில யாரோ ஒருத்தன் முனகுகிறானே என்று நினைத்தவள் வந்ததை அடக்கியபடி எழுந்து மெதுவாக போய் பார்த்தவள் அதிர்த்து போய் வீட்டுக்கு ஓடிப் போய் மகள் மல்லிகாவை தட்டி எழுப்பி டாச் லைட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் பனங்காணியை நோக்கி ஓடினாள் .

பனையோடு சாய்ந்திருந்த படி முனகிக் கொண்டிருந்தவன் மீது நல்லம்மா டாச் வெளிச்சத்தை அடித்ததும் .இருபதுகள் மதிக்கத் தக்க ஒருவன் தனது மேல் சட்டையை கழற்றி இடக்கால் தொடையை சுற்றி க் கட்டியிருந்தான்.அதிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது ..முகத்தில் விழுந்த டாச் வெளிச்சத்தை முகத்தில் படாதவாறு கையால் மறைத்தபடி முனகலோடு தண்ணி என்றான் .அதுவரை அம்மாவுக்கு பின்னல் அரைத் தூக்கத்திலிருந்த மல்லிகாவுக்கு அவனைப் பார்த்ததும் தூக்கம் பறந்து போய் பயம் பிடித்துக்கொள்ள அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள் ..நல்லம்மா அவனிடம் “தம்பி.. நீங்கள் யார் ? எந்த ஊர் ? என்ன பெயர்?” என்கிற விசாரணைகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மீண்டும் “தண்ணீ ” என்று மட்டுமே முனகினான் .நல்லம்மாளும் மல்லிக்கவுமாக சேர்ந்து அவனை கைதாங்கலாக பிடித்து வீடிற்க்கு அழைத்து வந்தவர்கள் வெளியே சாத்தி வைக்கப் பட்டிருந்த கயிற்றுக்கட்டிலை எடுத்து உள்ளே போட்டு அதில் அவனை இருத்தி விட்டு பானையில் இருந்த தண்ணீரை ஒரு செம்பில் அள்ளி கொடுத்தும் குடித்து முடித்து விட்டு அவர்களையும் வீட்டு சூழலையும் கவனித்தவன் அந்த இடம் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என உறுதி செய்துவிட்டு
“நான் மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்தவன் ரவிக்குமார்.இரவு நாங்கள் பிரச்சார நோட்டீஸ் ஒட்டிக்கொண்டிருக்க ரோந்து வந்த போலீஸ் எங்களை பிடிக்கப் பார்த்தாங்கள் நாங்கள் ஓடத் தொடங்க சுட்டிட்டங்கள் எனக்கு காலிலை சன்னம் பட்டிட்டுது ஓட முடியேல்லை என்னோட வந்த மற்றாக்கள் ஓட்டிடான்கள் “. என்று சொல்லி முடித்து விட்டு அவர்களைப் பார்த்தான்.

போலீஸ்காரன் சுட்டது என்பதை தவிர நல்லம்மாவுக்கு வேறு ஒன்றும் புரியவில்லை.மல்லிகாவுக்கு கொஞ்சம் புரிந்தது.அண்மைக்காலமாவே “அரச அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி ,அமைச்சரின் கார் மீது வெடிகுண்டு வீச்சு ,போலீஸ் ஜீப்பை கொளுத்தினார்கள்” என்று ஊரில் மட்டுமல்ல பத்திரிகைகளிலும் மக்கள் புரட்சி இயக்கத்தைப் பற்றி பேச்சு அடிபடத் தொடங்கியிருந்தது .இதை யெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியாது ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்கள் ஊரில் முருகன் கோவில் திருவிழா தொடங்கிய போது அவளது தந்தை கணபதி “முருகனை கும்பிட இந்த கணபதிக்கு உரிமையில்லையா” என்று கேட்டு கோவிலில் உள் நுழையும் போராட்டம் நடத்தியதால் உயர் சாதிக் காரர்கள் வெளியூர் சண்டியன் ஒருவனை கொண்டுவந்து கணபதியை கோவில் வீதியில் வைத்தே வெட்டிக்கொலை செய்து விட்டார்கள்.இதுவரை யாரும் கைது செய்யப்படவுமில்லை நல்லம்மாவும் நியாயம் வேண்டி போலிஸ் நிலையத்துக்கும் அதிகாரிகளிடமும் அலைந்து களைத்துப்போய் இப்போ குடும்பத்தை கவனிக்க சந்தையில் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டாள்.எனவே தங்களுக்கு நியாயம் பெற்றுத் தராத போலீசையும் அதிகாரிகளையும் மக்கள் புரட்சி இயக்கம் தாக்குவது சரியே என்கிற எண்ணம் மல்லிகவுக்குள் நிரம்பியிருந்தது.

இன்று அந்த அமைப்பில் ஒருவனை சந்தித்ததும் அவளுக்கு மகிழ்ச்சி .
நல்லம்மா தேநீர் தயாரிக்கத் தொடங்கியிருந்தாள்.அசையாமல் அவனையே பார்துக்கொண்டிருந்த மல்லிகாவிடம் .எனக்கு ஒரு உதவி செய்ய வேணும் ..
என்ன உதவி ?
நான் காயப்பட்டதை எங்கடை தோழர்களுக்கு தெரிவிக்க வேணும்.அப்பதான் என்னை வந்து கூட்டிக்கொண்டு போய் வைத்தியம் செய்வினம் .
அவையள எங்கை போய் சந்திக்கிறது ?
அவர்களை சந்திக்க முடியாது எல்லாருமே தலைமறைவா இருக்கிற ஆக்கள் .ஆனால் நாங்கள் பொதுவா தகவல் பரிமாறுகிற இடம் ஒண்டு இருக்கு. நான் ஒரு கடிதம் எழுதித் தாரன் அதை கொண்டு போய் குடுத்து உங்கடை வீட்டு விலாசத்தையும் அவரிட்டை சொல்லிவிட்டால் தோழர்கள் வந்து என்னை கூட்டிக்கொண்டு போவினம் .
மல்லிகா தனது பாடக்கொப்பி ஒன்றையும் பேனாவையும் அவனிடம் நீட்டியதும் அதில் ஒரு ஒற்றையை கிழித்து மளமளவென எதோ கிறுக்கி அவளிடம் நீட்டினான்.அதை வாங்கிப் பார்த்தாள் எதுவும் புரியவில்லை எதோ மந்திரம் போல இருந்தது. “இது என்ன எழுதியிருக்கு “?
அது உனக்கு புரியாது இதை குடுத்தால் தான் நீ சொல்லுற தகவலை நம்புவாங்கள் .

இதை எங்கை கொண்டு போய் குடுக்கிறது ?
உரும்பிராய் சந்தியில ஒரு பலசரக்கு கடை இருக்கு அங்க தாடி வளர்த்த ஒருவர் இருப்பார் .பெயர் பாலா அவரிட்டை குடுத்தால் சரி .
கடிதத்தை வாங்கியவள் தனது பாடப் புத்தகத்தினுள் அதை வைத்துவிட்டு வேகமாக முகம் கழுவி பாடசாலை சீருடையை அணிந்து தயாராக நல்லம்மாவும் மாயவனை எழுப்பி பாடசாலைக்கு தயார்பண்ணி அனைவருக்கும் தேநீரை கொடுத்து விட்டு சந்தைக்கு போய் விட்டாள் .மல்லிகா பெண்கள் கல்லூரி ஒன்றில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள் மாயவனை அவனது பள்ளியில் கொண்டுபோய் விட்டு விட்டு தனது பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கண்ணில் படாமல் கடிதத்தை கொண்டுபோய் கொடுத்து விட்டு ரவிக்குமாருக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்று திட்டமிட்டவள். சாகசமான ஒரு வீரச்செயலை செய்யப் போவது போன்ற மன நிலையில் புத்தகப் பையை சைக்கிள் கரியரில் மாட்டிவிட்டு மாயவனையும் ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதித்தாள் .
……
மதியமளவில் இருவர் இரண்டு சைக்கிள்களில் மல்லிகாவின் வீடிற்கு வந்தார்கள்.வந்தவர்களில் ஒருவன் தன்னை சுரேந்தர் என்று மெதுவான குரலில் அறிமுகப்படுத்திக் கொண்டான் பார்ப்பதற்கு சாதுவானவன் போல இருந்தது . சற்று தூரத்திலேயே விறைப்பாக நின்றிருந்தவனை காட்டி அவன் பெயர் லெனின் என்று சொன்னவன் உங்கள் உதவிக்கு எங்கள் இயக்கம் சார்பாக நன்றி. தோழரை அழைத்துப் போகிறோம் என்றதும். “தேத்தண்ணி போடுறன் குடிச்சிட்டு போங்கோ” என்று அவசரமாக கேத்திலை தூக்கிய மல்லிகாவிடம் “வேண்டாம் இன்னொரு தடவை கட்டாயம் வருகிறோம் “என்றபடி ரவிக்குமாரை கைதாங்கலாக அழைத்துப்போய் சைக்கிளில் இருத்தியதும் ரவிக்குமாரும் நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.அதன் பிறகு சுரேந்தர் அடிக்கடி தனியாகவும் வேறு சிலரோடும் மல்லிகா வீட்டிற்கு வந்து போவான் ரவிக்குமார் எப்போதாவது வருவான் .மல்லிகாவின் வீடு ஒதுக்குப்புறமான இடத்தில் தனியாக இருந்ததால் மக்கள் புரட்சி இயக்கத்தினருக்கு பாதுகாப்பாக அவர்கள் சந்திக்கும் இடமாக மாறிப்போயிருந்தது.அங்கிருந்த மாமரத்தின் கீழேயிருந்து காரா சாரமாக விவாதிப்பார்கள் வருகிறவர்களுக்கு தேநீரோ சாப்பாடோ நல்லம்மா அவசரமாக தயாரித்துக் கொடுக்க அவர்கள் பேசுவதை கவனித்தபடியே மல்லிகா பரிமாறுவாள் .

சுரேந்தர் எப்போதுமே கையில் புதகங்களுடந்தான் வருவான் ஒருநாள் தனியாக அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவனின் முன்னால் போய் நின்ற மல்லிகா தயங்கிய படியே “எனக்கும் உங்கடை இயக்கத்தில சேர விருப்பம் சேர்த் துக்கொள்ளுவீங்களா ?” என்றாள்.தலையை நிமிர்த்தி அவளையே சிறிது நேரம் பார்த்தவன் “எங்கள் பாதை மிக மிக கடினமானது ஆனால் உன்னைப்போன்ற உழைக்கும் வர்க்கத்து துணிச்சலான பெண்ணை எங்கள் இயக்கத்தில் உள் வாங்காது பயணிப்பதும் தவறு .சரி எங்கள் அடுத்த கூட்டத்திற்கு உன்னை அழைத்துப்போய் எங்கள் மற்றைய தோழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்து விட்டு உன்னை இயக்கத்தில் இணைத்துக்கொள்கிறேன் ஆனால் ஒரு விடயம் இயக்கத்தில் இணையும்போது உனக்கு வேறு பெயர் வைக்கவேண்டும் எங்கள் இயக்கத்தில் எல்லோருக்கும் அப்படிதான்”.. என்றவனை இடை மறித்து “அப்போ உங்கடை பெயரும் பொய் பெயரா ?”
லேசாய் சிரித்தவன் “அப்படிச் சொல்லக் கூடாது இது புரட்சியாளர்களுக்கான புனை பெயர் .அவர்களின் பாதுகாப்புக்கானது “..
அப்போ எனக்கு என்ன பெயர் வைக்கப் போறிங்கள் ?…
கொஞ்சம் யோசித்தவன் ..”ம் ..நீலவ்னா ”
தலையை சொறிந்தபடி .என்ன “நீல வண்ணவா இது கண்ணன் பேரெல்லோ” ..
நீல வண்ணா இல்லை நீலவ்னா ..
அப்பிடியெண்டால் என்ன அர்த்தம் ?..
ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து நீட்டியவன் “இதைப் படி நீலவ்னா என்கிற பெயரின் அர்த்தம் புரியும்” என்றவனிடம் புத்தகத்தை வாங்கிப்பார்த்தாள் .அதன் மட்டையில் “தாய் மார்க்சிம் கார்கி “என்று எழுதியிருந்தது.சரி படிக்கிறன் என்று தலையாட்டிய படியே புத்தகத்தைவாங்கிப்போய்விட்டாள்.
……
லீவு நாளொன்றில் சுரேந்தர் மல்லிகாவை அவர்களது கூட்டத்திற்கு அழைத்துப் போனான் யாரோ ஒருவரின் வீடு. வயதானவர் ஒருவர் வரவேற்றார் உள்ளே போனதும் வீட்டின் அறையில் அப்போதுதான் தாடியும் மீசையும் முளைக்கத் தொடங்கிய இளையவர் சுமார் இருபது பேர் வரை அமர்த்திருந்தார்கள்.சுரேந்தரை கண்டதும் எழுந்து வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்தாலும் அனைவரது கண்களும் மல்லிகா மீதே இருந்தது .சிலர் தங்களுக்குள் குசுகுசுத்தார்கள் .சிறிது நேரத்தில் ரவிக்குமாரும் லெனினும் வந்து சேர்ந்ததும் மீண்டும் அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லி அமர்ந்ததும் ரவிக்குமார் வணக்கம் சொன்னபடியே கையை உயர்த்தி அனைவரையும் அமரச் சொன்ன பின்னர் மல்லிகாவை பார்த்து கையை நீட்டி “தோழர்களே இவர்தான் நீலவ்னா. நான் காயமடைந்த வேளை இவர்கள் வீட்டில் தான் தஞ்சமடைந்திருந்தேன் . நமது அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுரேந்தர் மூலமாக நீலவ்னா இப்போ எமது இயக்கத்தில் இனைய வந்துள்ளார். சமூகப் புரட்சியையோ வர்க்கப் புரட்சியையோ பெண்களின் பங்களிப்பின்றி வென்றடைய முடியாது.அவர்களையும் சமமாக எம்மோடு இணைத்துப் போராடவேண்டும் .எமது இயக்கத்தின் முதலாவது போராளி நீலவ்னாவை வரவேற்பதோடு மேலும் பெண்களை எமது இயக்கத்தில் உள்வாங்க வேண்டும்”.என்று சொல்லி முடித்ததும் சிலர் கை தட்ட முயற்சித்த போது ..”வேண்டாம் தோழர்களே யாரும் கை தட்ட வேண்டாம் நாம் அரசியல் வாதிகளின் பேச்சை கேட்டுக்கேட்டு கை தட்டியே களைத்துப் தட்டுக்கெட்ட இனமாகிப்போய் விட்டோம் இனியும் கையை தட்டாமல் கைகளை எமது இனத்தின் விடுதலைக்காக உயர்த்துவோம் தாக்குதல்களை தீவிரப் படுத்துவோம்.எமது இராணுவ பிரிவு பொறுப்பாளர் லெனினின் திட்டங்களை செயல்ப்படுதுவோம்” என்று ஆவேசமாக பேசி முடித்ததும் அந்த இடம் அமைதியானது .

ரவிக்குமார்தான் அந்த இயக்கத்தின் தலைவர் என்பது அப்போதுதான் மல்லிகாவிற்கு தெரியவந்தது .அப்போது கூட்டத்தில் ஒருவன் கையை உயர்த்தி “புதிதாக இணைத்த நீலவ்னாவை தோழர் என்று அழைப்பதா அல்லது தோழி என்று அழைப்பதா” என்றன் .
ரவிக்குமார் சுரேந்தரை திரும்பிப் பார்க்க அனைவருக்கும் முன்னால் வந்த சுரேந்தர் தோழர்களே பெண்களும் எமக்கு சமமானவர்கள் அவர்களை தோழி என்றழைப்பது அவர்களை சிறுமைப்படுத்தும் எனவே அவர்களையும் தோழர் என்றே அழைப்போம் .என்றபடி தனது பேச்சை தொடர்ந்தான் .அவனது பேச்சில் இலயித்து நின்ற மல்லின் முகத்தில் மாஸ்கோவின் சில்லென்ற காற்று முகத்தில் லேசாய் அறைந்து போனது.ஸ்டாலின் கிராட்டின் வீரம் நரம்புகளில் பாய்ந்தது .இரஷ்ய தெருக்கள் மனக்கண்ணில் விரிய செம்படை வீரர்கள் விறைப்பாய் நடந்து திரிந்தார்கள்.அவன் பேசி முடிக்கும்போது எப்படியும் எமக்கான ஒரு நாடு கிடைத்து எமது முதலாவது தூதரகத்தை மாஸ்கோவில் திறந்துவிடுவோம்… என்கிற நம்பிக்கை மல்லிகா வைப்போலவே அங்கிருந்த அனைவருக்கும் வந்திருக்க வேண்டும் தங்களை மறந்து கை தட்டினார்கள் .அதன் பின்னர் சுரேந்தரின் பேச்சை கேட்பதற்காகவே அவள் கூட்டங்களுக்கு போகத் தொடங்கியிருந்தாள் .
….
சில நாட்கள் கழிந்த காலைப்பொழுதொன்றில் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்த மல்லிகா சந்திக்கடையில் தொங்கவிடப்பட்டிருந்த பத்திரிகைகளில் ரவிக்குமாரின் படம் இருப்பதைப் பார்த்து அவசரமாக வாங்கிப் பிரித்தாள் ..”மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் மானிப்பாய் மக்கள் வங்கி கிளையை கொள்ளையிட முயற்சித்த போது போலீசாருடன் நடந்த மோதலில் அதன் இயக்கத் தலைவர் ரவிக்குமார் கொல்லப்பட மற்றயவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள் .அந்த அமைப்பை சேர்ந்தவர்களை இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் தலைமையிலான குழு தேடி வலை வீச்சு” ..

படித்ததும் மல்லிகாவின் தலை லேசாய் கிர்ர்ர்….. …தேடப்படுவோர் பட்டியலில் முதலாவதாக சுரேந்தர் பெயர் இருந்தது.அவளது பெயர் அதில் இல்லை என்கிற ஆறுதலோடு அவசரமாய் பத்திரிகையை மடித்து புத்தகப் பையில் செருகிவிட்டு பாடசாலைக்கு போகாமல் வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தாள் .வீடு வந்தவளுக்கு இன்னொரு அதிச்சி அங்கே சுரேந்தர் சோகமாய் அமர்ந்திருந்தான்.மல்லிகா அவனிடம் நீட்டிய பத்திரிகையை வாங்கிப் படிக்காமலேயே வானத்தை வெறித்தபடி “எங்கடை இயக்கத்தை வளர்கிறதுக்கான முதல் முயற்சி தோற்று விட்டது .தோழனையும் இழந்து விட்டோம்.ஆனாலும் தோற்றுப் போகமாடோம் தொடர்வோம்” ..என்றான் .
சந்தைக்குப் போன நல்லம்மாவும் சங்கதி கேள்விப்பட்டு மாயவனையும் அழைத்துக்கொண்டு திரும்பி வந்திருந்தாள்.அன்றைய பொழுது மௌனமாகவே மாலையகிக்கொண்டிருந்தது .அரிக்கன் லாம்பை துடைத்து எண்ணெய் விட்டுக்கொண்டிருந்த நல்லம்மாவின் காதுக்குள் வாகன சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தும் போதே போலிஸ் ஜீப் ஒன்று அந்த காணிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.ஓடத் தயாரான சுரேந்தரின் கைப்பிடித்து இழுத்து நிறுத்திய மல்லிகா வேகமாக அங்கு சாத்தி வைக்கப்பட்டிருந்த சாக்குக் கட்டிலை எடுத்து குடிசைக்குள் போட்டவள் சுரேந்தரை அதன்மீது தள்ளிவிட்டு “அம்மா எனக்கு காச்சல் “என்றபடி கழுத்துவரை போர்த்தபடி கட்டிலில் படுத்துவிட்டாள்.விளக்கை கொளுத்தி முடித்த நல்லம்மாவுக்கு முன்னால் வந்த அதிகாரி “அம்மா இங்கை மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பெடியள் வாறவங்களா “?..

“ஐயா இயக்கப் பெடியங்களை எனக்கு தெரியாது நாங்கள் தனியா இருக்கிற படியாலை பொதுவாவே எந்தப் பெடியளையும் வீட்டை கூப்புடுறேல்லை” ..
அவள் பதிலை அதிகமாய் ரசிக்காத அந்த அதிகாரி குடிசைக்குள் நுழையப் போகும் போது ..”ஐயா ..உள்ளை மகள் படுத்திருக்கிறாள் அம்மை போட்டிருக்கு” என்றதும் நல்லம்மா கையிலிருந்த லாந்தரை வாங்கி குடிசைக்குள் உயர்த்திப் பிடித்து கண்களால் துளாவ .. மல்லிகா லேசாய் தலையை திருப்பி யாரது ..என்று கேட்கவும் திரும்பி வந்து லாந்தரை கீழே வைத்து விட்டு “அம்மா உங்கடை நன்மைக்குத்தான் சொல்லுறன் இயக்கப் பெடியள் யார் வந்தாலும் பாதுகாக்க வேண்டாம் பிறகு குடும்பத்தோடை உள்ளை போக வேண்டி வரும் ” என்று கடுமையாக சொல்லிவிட்டு போவதற்கு புறப்பட்டவர் எல்லாவற்றையும் பார்த்து பயந்து போய் நின்றிருந்த மாயவனின் தலையை லேசாய் தடவியபடி இங்கை யாரவது அண்ணை மார் வந்தாங்களா?. “இல்லை” யென்று தலையசைத்தான் .என்னுடைய பெயர் என்ன தெரியுமா ?..மீண்டும் “இல்லை”யென்று தலையசைதவனிடம் ..இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் என்று விட்டு அங்கிருந்து போய் விட்டார் .
இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் என்கிற பெயரைக் கேட்டதுமே மல்லிகாவின் இதயத் துடிப்பு அதிகமாகி ..கொட்டிய வியர்வையில் மொத்தமாக நனைந்து போயிருந்தவள் காதோரம் உரசிச் சென்ற சுரேந்தரின் மூச்சுக்காற்றின் சத்தம் சுயத்துக்கு கொண்டு வரவே அவன் தனது இடை கையால் வளைத்து இறுக்கி தலையை தோளில் புதைத்திருந்ததை உணர்ந்தாள்.சட்டென்று அவனை விலக்கி எழுந்துவிட நினைத்தாலும் அதுவரை அவள் அறியா அந்த அணைப்பில் அமிழ்ந்து போய் கிடந்தாள் .அவனுக்கும் அப்படித்தான் . “மல்லிகா அவங்கள் போயிட்டங்கள்” ..என்கிற நல்லம்மாவின் சத்தத்தைக்கேட்டு சுரேந்தர் சட்டென்று அவளிடமிருந்து பிரித்துக்கொண்டு எழுந்து விட்டாலும் . “சே இன்னும் கொஞ்ச நேரம் இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் இங்கை நின்றிருக்கலாமே” என்று அவள் மனது அலையானது .அதன் பின்னர் பல பொழுதுகள் போலிஸ் வராமலேயே அவர்கள் சாக்குக் கட்டிலில் போர்த்திக்கொண்டு பதுங்குவது பழகிப்போனது ..
……
இயக்கத்தை வளர்க்க வேண்டும் அதில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் அதற்கு கிழக்கு மலையகம் எல்லாம் போய் பிரசாரம் செய்துவிட்டு வருகிறேன் அப்போ இங்கு போலிஸ் கெடுபிடிகளும் குறைந்து விடும். நான் திரும்ப வந்ததும் எமது இயக்கத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்ய வேண்டும் அதுவரை இங்கு லெனின் பொறுப்பாக இருப்பான் பத்திரமாக இரு என்று விட்டு சுரேந்தர் போய் விட்டான் .மல்லிகாவில் மாற்றங்கள் தெரிந்தது ..சுரேந்தரின் புரட்சி அவள் வயிற்றில் வளரத் தொடங்கியிருந்தது .நல்லம்மாவுக்கும் லெனினுக்கும் மட்டுமே இவர்களது காதல் கதை தெரிந்திருந்தது .சுரேந்தர் போன பிறகு லெனினும் வேறு சிலரும் அடிக்கடி அங்கு வந்து போவர்கள் அவர்களிடம் சுரேந்தர் பற்றி விசாரிப்பாள்.
மூன்று மாதங்கள் கழிந்த ஒரு நாளில் வளர்ந்த தாடியும் பரட்டைத் தலையுமாய் தோளில் தொங்கும் சிகப்பு பையோடு மல்லிகாவைத் தேடி வந்திருந்த சுரேந்தரிடம் . .
இது என்ன கோலம் ..?
இதுதான் புரட்சியாளர்களின் கோலம் ..அக்கம் பக்கம் பார்த்து விட்டு மல்லிகாவை இழுத்து அணைத்து. “நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்” ..
நானும்தான் ..
என்ன சொல்லு ?..
நீங்கள் முதலில் சொல்லுங்கள் ..
எமது இயக்கத்திற்கு நிறையப்பேரை சேர்த்து விட்டேன் அடுத்த வாரம் இயக்கத்தின் மத்தியகுழு கூடப் போகின்றது புதிய தலைவரை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் அடுத்த தலைவர் பதவி எனக்கும் லெனினுக்குமிடையில் தான் பலத்த போட்டியாக இருக்கப் போகின்றது .நீ யாருக்கு ஓட்டுப் போடுவாய் ?..
வேறை யாருக்கு ..உங்களுக்குத் தான் ..
அவளின் மீதான அணைப்பை மேலும் கொஞ்சம் இறுக்கியவன் .”எனக்குத் தெரியும் அடுத்த தலைவன் நான் தான் ..இது எனது இலட்சியம் ..எனது தலைமையில் தான் இந்த தேசத்துக்கு விடியல் கிடைக்கும் .எல்லாமே நான் நினைத்தபடி தான் நடக்கும் ..சரி உனது மகிழ்ச்சிக்கு காரணம் என்ன”?..
வெட்கத்தோடு தலையை குனிந்தபடி ..”நீங்கள் இயக்கத்துக்கு தலைவராக மட்டுமல்ல குழந்தைக்கு அப்பாவாகவும் போகிறீர்கள்” .
சட்டென்று அவளை விடுவித்தவன் ..”வேண்டாம் ..அழிச்சிடு” .
ஏன் ??
எமது புரட்சிப் பாதைக்கு இது தடைகள் ..தடைக்கல் .தேசத்தின் விடியலுக்காக போராடும் நாம் குடும்ப பாசத்தில் முழுகி விடக் கூடாது..
தடைக்கல் என்பதை நீங்கள் தழுவும் போதே நினைத்திருக்க வேண்டும் ..
அதுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல .நீயும்தான் ..என்னை மட்டும் குற்றவாளியாக்காதே .இந்த விசயம் வெளியே தெரிந்தாலே எனது தலைவராகும் கனவே பாழாகி விடும். வேண்டாம் ..
உங்கள் தலைவர் பதவியாசைக்காக என் குழந்தையை பலி குடுக்க முடியாது ..
கொஞ்சம் யோசித்தவன் ..”சரி மத்திய குழு கூட்டம் முடியட்டும் அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு” ..என்று விட்டு போய் விட்டான் .

இரண்டு நாட்கள் கழித்த அதிகாலையில் போலிஸ் ஜீப் ஒன்று வேகமாக மல்லிகாவின் கணிக்குள் நுழைந்தது.ஜீப் சத்தத்தில் நித்திரையி லிருந்த மல்லிகா விழித்து கண்களை கசக்கி பாக்கும்போததே இங்ஸ்பெக்டர் செபஸ்டியன் அவள் முன்னால் நின்றிருந்தார்.அவரோடு வந்த பொலிசார் வீட்டை சோதனை போடத் தொடங்கியிருந்தனர் .
“எங்கயடி அவங்கள் ??எத்தனை நாளாய் இங்கை வந்து போறாங்கள் உனக்கு எவ்வளவு காலம் அவங்களோடை தொடர்பு” என்கிற அவரது கேள்விகளில் திகைத்து நின்ற மல்லிகாவை ஓங்கி அறைந்தவர் வா உன்னை கொண்டுபோய் விசாரிக்கிற முறையிலை விசாரிக்கிறன் என்றபடி கொத்தாய் அவளது தலை முடியை பிடித்து இழுத்துக்கொண்டு போகவே மாயவன் வீரிட்டுக் கத்தி அழத்தொடங்க காலைக் கடனை கழிக்கப் போயிருந்த நல்லம்மா சத்தம் கேட்டு அவசரமாக ஓடிவந்தாள் .அதற்கிடையில் மல்லிகாவின் கைகளுக்கு விலங்கை மாட்டிய செபஸ்டியன் அம்மாவும் மகளும் சேர்ந்து புரட்சியாடி பண்ணுறிங்கள் என்று ஓடி வந்த நல்லம்மவை எட்டி உதைக்கவே கீழே விழுந்தவள் ஐயா எங்களுக்கு யாரோடையும் தொடர்பு இல்லை எந்தப் புரட்சியும் செய்யேல்லை என்று அழுது புலம்பிக் கொண்டிருக்க சோதனை போட்ட ஒரு போலிஸ் காரர் கையில் ஒரு சிகப்புப் பையை கொண்டு வந்து “சேர்” ..என்று செபஸ்டியனிடம் நீட்ட. .அதை வாங்கிப் பிரித்து அதிலிருந்த பிரசுரங்களை எடுத்தவர் சிரித்த படியே “இது போதும் எனக்கு”..என்றபடி மல்லிகா நோக்கி “பொய்யா சொல்லுறாய்” என்றபடி எட்டி உதைக்கப் போகவே கீழே விழுந்து கிடந்த நல்லம்மா “ஐயா என்னை என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ மகள் பாவம் பிள்ளைத் தாச்சி அவளை ஒண்டும் செய்ய வேண்டாம் என்று ஓடிப்போய் என்று செபஸ்ரியனின் கால்களை ஓடிப்போய் கட்டிப் பிடித்துக்கொள்ள” ..ஓ அது வேறை நடக்குதா ?? என்றபடி மீண்டும் நல்லம்மாவை உதைத்தவர் மல்லிகாவை ஜீப்பினுள் இழுத்துப் போட ஜீப் அங்கிருந்து கிளம்பிப்போய் விட்டது..நல்லம்மாவும் மாயவனும் ஜீப்பின் பின்னாலேயே ஓடிக் களைத்துப்போக ஊரே கூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தது .
000
மக்கள் புரட்சி இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் புதியதொரு இடத்தில் கூடியிருந்தது .சுமார் முப்பது பேர்வரை கூ டியிருந்தார்கள் .அவர்களுக்கு முன்னால் சுரேந்தரும் அருகில் இடுப்பில் செருகிய ரிவால்வரோடு லெனினும் விறைப்பாக நின்றிருக்க .கூட்டத்திலிருந்த ஒருவனை அழைத்த சுரேந்தர் லெனினிடமிருந்த துப்பாக்கியை வாங்கிக் கொண்டு போய் வெளியே காவல் நிக்கும்படி சொல்லவே லெனினும் துப்பாக்கியை எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் கைகளை காட்டிய படி விறைப்பாக நின்றிருந்தான் .சுரேந்தர் பேசத் தொடங்கினான் ..”தோழர்களே இன்று முக்கியமா நாள் இது முக்கியமான கூட்டம் எங்களை யெல்லாம் வழி நடத்திய தோழன் ரவிக்குமாரின் வீர மரணத்தின் பின்னர் எமது இயக்கத்துக்கான அடுத்த தலைவரை இல்லையில்லை அப்படி சொல்லக் கூடாது வழிகாட்டியை தேர்ந்தெடுக்க நாங்கள் ஒன்றாக கூடியிருக்கிறோம். அதற்கு முன்னர் தோழன் ரவிக்குமாருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவோம்” என்றவன் தனது வலக்கை விரல்களை மடித்து இறுகப் பொத்தி தோளுக்கு மேலாக உயர்த்தி தலையை குனித்து கொள்ள அனைவரும் அதைப்போலவே அஞ்சலி செலுத்தி முடிந்ததும் .கையை இறக்கி தலையை நிமிர்த்தியவன் ..”தோழர்களே புதிய வழிகாட்டியை தேர்தெடுக்க முன்னர் உங்களுக்கு முக்கியமான அதிச்சி தரும் சோகமான ஒரு செய்தியை சொல்லவேண்டும் எமது தோழர் நீலவ்னா காவல்துறையால் கைது செய்யப் பட்டு விட்டாள் இப்போ அவள் கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டுக் கொண்டிருப்பாள் .

அவள் மூலமாக எங்கள் இரகசிய சந்திப்பு இடங்கள் தெரிய வந்திருக்கலாம் என்பதால் தான் இன்று புதிய இடத்தில் கூடியிருக்கிறோம் . ஆனால் நீலவ்னா எமது அமைப்பில் ஒருவனாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டு கைது செய்யப் பட்டுள்ளாள்” .என்று சொல்லி நிறுத்தினான் ..எங்களில் ஒருவனா ?? அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு யாரவன் ??யாரவன் ??என்கிற கேள்வி கூச் சலாக மாறியது .அனைவரின் இரத்தமும் சூடாகத் தொடங்கியிருந்தது.சொல்லுங்கள் தோழர் யாரவன் என்று சத்தமாகவே சிலர் கத்தினார்கள் .கையை உயர்த்திய சுரேந்தர் “அமைதி தோழர்களே” என்றவன் தலையை லேசாய் திருப்பி எனக்கு கிடைத்த நம்பிக்கையான தகவல்களின் படி அந்தத் துரோகி இவன்தான் என்று அருகில் நின்றிருந்த லெனினை பார்த்து கையை காட்டவும் .உணர்ச்சிக் கொந்தளிப்பில் நின்றிருந்த அனை வரும் லெனின் மீது வேகமாகப் பாய்ந்து அடித்துத் துவைக்கத் தொடங்கினார்கள் .
“தோழர்களே நான் காட்டிக் கொடுக்கவில்லை நம்புங்கள் நான் நிரபராதி.துரோகியில்லை” என்று கத்திய குரலை யாரும் அங்கு கேட்பதற்கு தயாராக இல்லை. “ஊர் புத்தியை காட்டிட் டான் ” என்றபடியே ஓங்கி முகத்தில் குத்த மூக்கும் முன்னம் பற்களும் உடைத்து . லெனின் மயங்கிப் போயிருந்தான்.ஒருவன் அவனது ஆடைகளை கழற்றி கை கால் களை கட்டி விட ஜட்டியோடு இரத்தம் கசிய மயங்கிக் கிடந்தவனை ஓங்கி மிதித்து விட்டு சுரேந்தரிடம் ..”தோழர் இவன் துரோகி இவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்றான் .”அமைதி தோழர்களே மரண தண்டனை எல்லாவற்றுக்கும் தீர்ப்பாகாது எமது இயக்கத்துக்கு அடுத்த வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய ஒருவனே இப்படி செய்தது கவலையான விடயம் .ஆனால் மரண தண்டனை வேண்டாம். இவனது துரோகத்தை ஊர் அறியச் செய்வோம் அதுவே இவனுக்கான தண்டனை .ஆனால் எமது இயக்கத்தின் அடுத்த வழிகாட்டி யார் “??சுரேந்தர் அனைவரையும் பார்த்தான் ..துரோகியையும் மன்னிக்கும் உங்களுக்கு பெரிய மனது தோழர் ..நீங்கள் தான் எமது இயக்கத்தின் அடுத்த வழிகாட்டி இதை நான் முன் மொழிகிறேன் என்று ஒருவன் சொன்னதும் .”வழி மொழிகிறோம் …வழி மொழிகிறோம் …வழி மொழிகிறோம் “..அனைத்துக் குரல்களும் ஒலித்தது .
…….
சைக்கிளில் வாழைக்குலையை கட்டியபடி அதிகாலை சந்தைக்கு போய்க்கொண்டிருந்த அருணாசலம் சந்தியை கடக்கும் போது தான் கவனித்தான் சந்தியின் தந்திக் கம்பத்தில் ஒருவன் ஜட்டியோடு தொங்கிக்கொண்டிருந்ததை ..சைக்கிளை அவன்பக்கமாக கொண்டுபோய் நிறுத்திப் பார்த்தான்.அவனை யாரென்று தெரியவில்லை .ஜட்டியோடு தொங்கிக் கொண்டிருந்தவனின் கழுத்தில் துரோகத்துக்கான தண்டனை .மக்கள் புரட்சி இயக்கம் ..என்று எழுதிய மட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.அருகில் சென்ற அருணாசலத்திடம் “அண்ணை என்னை அவிழ்த்து விடுங்கோ ..நான் துரோகியில்லை” என்று முனகினான் .இயக்கத்தின் பெயர் எழுதியிருப்பதால் எனக்கேன் தேவையில்லாத வம்பு.. போகிற வழியில் சுன்னாகம் போலிஸ் நிலையத்தில் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நினைத்து சைக்கிளை மிதித்தான் .”அண்ணை அவிழ்த்து விடுங்கோ ..தண்ணி” ..என்று அவனின் குரல் முனகிக்கொண்டேயிருந்தது .
நேரம் செல்லச் செல்ல வேலைக்கு பாட சாலைக்கு செல்பவர்கள் என கூட்டம் அதிகரித்து அனைவரும் கம்பத்தில் கட்டியிருந்தவனை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடி அவன் யாராயிருக்கும் என ஆராச்சி செய்துகொண்டிருந்தனர் .கொஞ்ச நேரத்தில் உள்ளூர் சண்டியன் மணியம் “யாரடா அது “என்று சத்தமாக கேட்டபடி அங்கு வர பலர் அவனுக்கு மரியாதையாக வழி விட்டு ஒதுங்கினார்கள் .பந்தாவாக வந்த மணியம் மட்டையில் மக்கள் புரட்சி இயக்கம் என்கிற பெயரைப் பார்த்ததும் பம்மியபடி அங்கிருந்து மறைந்து போனான் .வேகமாக வந்த விதானை நடராசா கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு “நானொரு விதானை எனக்கே இவன் யாரெண்டு தெரியேல்லையே “என்று தடையை சொறிந்தபடி யாராவது போலிசுக்கு போய் தகவல் குடுங்கோ என்று சொல்லும்போதே தூரத்தில் போலிஸ் ஜீப்பின் சத்தம் கேட்கத் தொடங்க அங்கிருந்த அனைவரும் வேகமாக கலையத் தொடங்கினார்கள் .அங்கு வந்த போலிஸ் காரர்கள் கம்பத்தில் கட்டப் பட்டிருந்தவனை அவிழ்த்து ஜீப்பில் போட்டுக்கொண்டு போய் விட்டார்கள் .
…..
சுன்னாகம் காவல் நிலையம்.. இங்ஸ்பெக்டர் செபஸ்டியனுக்கு முன்னால் விலங்கோடு கொண்டு வந்தவனை இரண்டு போலிஸ் காரர்கள் இருத்தினார்கள்.அவன் தலையை நிமிர்த்தி செபஸ்டியனிடம் “தண்ணீ “என்றான் .செபஸ்டியன் அருகில் நின்றிருந்த போலிஸ் காரரை பார்க்க அவர் வேகமாக ஓடிப் போய் ஒரு செம்பில் தண்ணி கொண்டுவர அவனின் விலங்கை கழற்றி விடச் சொன்ன செபஸ்டியன்.. முன்னால் இருந்த பைலை பிரித்து மெதுவாக ஒவ்வொரு பக்கங்களாக புரடிக் கொண்டிருந்தார் .தண்ணியை வாங்கி கடவாய் வழியே வழிந்த்தோட மடக் மடக்கென குடித்தவன் செம்பை மேசையில் வைத்து விட்டு “நன்றி” என்றான் .மெதுவாக புன்னகைத்த செபஸ்டியன் . உன்னுடைய சொந்தப் பெயர் டேவிட் அன்டனி .இயக்கப் பெயர் லெலின் ..பிறந்த இடம் மட்டக்களப்பு நிந்தாவூர் .மக்கள் புரட்சி இயக்கத்தின் இராணுவ பிரிவு பொறுப்பாளர் .காவல்துறை அரச அதிகாரிகளை தாக்கிய.. கொலை செய்ய முயற்சித்ததாக.. இருபத்தி நான்கு வழக்கு இதுவரை பதியப்பட்டிருக்கு .இலங்கையில் தேடப் படும் முக்கியமான குற்றவாளிகளில் நீயும் ஒருவன். பல காலமாக காவல்துறைக்கு தண்ணி காட்டி யிருக்கிறாய்.. இன்றைக்கு நீ வளர்த்த இயக்கமே உன்னை துரோகி என்று தொங்க விட்டிருக்கிறார்கள் சொல்லி முடித்து லெனினை உற்றுப் பார்த்தார் .

சட்டென்று வேகமாக எழுந்த லெனின் அருகில் நின்றிருந்த போலிஸ் காரரின் 303 ரைபிளை பிடுங்கியவன் “நான் தியாகியாக சாகாது விட்டாலும் பரவாயில்லை ஆனால் துரோகியில்லை” என்று கத்தியவன் தன் வாயில் துப்பாக்கியை வைத்து அதன் விசையை அழுத்தினான் .அவனது உச்சந் தலையில் ஊடுருவி காவல் நிலையத்தின் கூரை ஓட்டையும் உடைத்து வெளியேறியது துப்பாக்கியின் குண்டு . துப்பாக்கியை பறிகொடுத்த போலிஸ் காரரோ பயத்தில் நடுங்கியபடி “சார் தெரியாமல் நடந்திட்டுது. ஒரு செக்கனிலை இப்பிடி பண்ணிட்டான் .சார் மன்னிச்சு கொள்ளுங்கோ” என்று செபஸ்டியனிடம் கெஞ்சிக்கூத்தாடிக் கொண்டிருக்க. சத்தம் கேட்டு எல்லா போலிஸ்காரர் களும் அங்கு ஓடி வந்து விட்டிருந்தார்கள் .சாவகாசமாய் கதிரையை விட்டு எழும்பிய செபஸ்டியன் பயத்தில் நடுங்கிய படி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த போலிஸ் காரரின் முதுகில் தட்டி . “இது நடக்குமெண்டு உனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் எனக்குத் தெரியும்” ..” பிணத்தை வைத்திய சாலைக்கு அனுப்பிட்டு உள்ளூர் பத்திரிகைக்கு செய்தி குடுத்து விடுங்கள் .சொந்தமென்று யாரவது தேடி வந்தால் எந்தக் கெடுபிடியும் இல்லாமல் பிணத்தை ஒப்படைக்க வேணும்..நாங்கள் தான் இவனை சுட்டுக் கொன்றதாய் மக்கள் புரட்சி இயக்கம் பிரசாரம் செய்வார்கள் இனித்தான் நிறைய வேலையிருக்கு “.. என்று விட்டு பைலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து போகப் புறப்பட்டவர் இரத்தத்தில் சரிந்து கிடந்த லெனின் மீது உடைந்த ஓட்டின் ஊடாக சூரியஒளி விழுந்து கொண்டிருக்கவே கூரையை அண்ணாந்து பார்த்து விட்டு “யாரையாவது கூபிட்டு கூரையையும் திருத்துங்கள் மழை நாள் வருகிது “.என்று விட்டு போய் விட்டார் .
…..
நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு மட்டுமல்லாது அவர்களோடு தொடர்புகளை பேணியதாலும் மல்லிகாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை கிடைத்தது .சிறையில் பிறந்த அவளது குழந்தை காப்பகத்தில் வளர்த்து கொண்டிருந்தது .அவள் சிறையில் இருந்த போதே அடிக்கடி பார்க்கப் போகும் நல்லம்மா மூலமும் பத்திரிகைகளிலும் மக்கள் புரட்சி இயக்கத்தைப் பற்றி அறிந்து கொண்டிருந்தாள்.லெனின் தன்னைக் காட்டிக் கொடுத்திருந்தான் என்கிற செய்தி அவளுக்கு அதிர்ச்சியாகவும் நம்பமுடியாமலும் இருந்தது .அவள் சிறைக்கு வந்த அடுத்த வருடமே சுரேந்தர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தேசிய வங்கிக் கிளை ஒன்றை கொள்ளையடித்திருந்தனர்.கொள்ளையடிக்கப் பட்ட பணம் நகைகளோடு சுரேந்தரும் வேறு சிலரும் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக செய்தித் தாள்கள் முன் பக்கத்தை நிரப்பியிருந்தன .மக்கள் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப்பட வசதியான சிலர் வெளி நாடுகளுக்கு தப்பியோடி விட எந்த வசதிகளும் அற்றவர்கள் வேறு இயக்கங்களில் அடைக்கலமானார்கள்.

அத்தோடு சுரேந்தர் பற்றிய செய்திகளும் மல்லிகாவுக்கு கிடைக்காமல் போய் விட்டிருந்தது .நான்கு வருடங்கள் கழித்து மல்லிகாவின் விடுதலை நாள் வெளியே போனதும் எப்படியும் சுரேந்தரை தேடிப் பிடிப்பதுதான் முதல் வேலை.மகன் டிராஸ்கியோடு திடீரென அவன் முன் போய் நின்றால் எப்படியிருக்கும்??.இன்னமும் என்னையே நினைத்துக்கொண்டிருப் பானா ?தாடி வழித்திருப்பானா ?? இப்படியாக ஆயிரம் கேள்விகளோடு சிறையை விட்டு வெளியே வந்தாள் .டிராஸ்கியோடு வந்திருந்த நல்லம்மாவை கட்டியணைத்து ஒருவர் மாறி ஒருவர் கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஜீப்பில் இருந்து செபஸ்டியன் இறங்கி வந்து கொண்டிருந்தார் .அவரைப் பார்த்ததும் மல்லிகாவுக்கு லேசாய் உதறல் எடுத்தபடி “நாலு வருசம் அனுபவிச்சது போதும் எதுக்கு இவன் திரும்பவும் இங்கை வாறான்” .என்று மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்தவர் “மல்லிகா உன்னை எப்பிடி இருக்கிறாய் என்று சுகம் விசாரிக்க வரவில்லை .வெளியிலை போய் இனியும் புரட்சி செய்யுறேன் என்று கிளம்பி திரும்பவும் இங்கை வரவேண்டாம்.உனக்கு இப்போ ஒரு குழந்தை வேறை இருக்கு அதை வளர்க்கிற வழியைப்பார்” . குனிந்தபடி தலையை ஆட்டினாள் . “உன்னை எனக்கு காட்டிக் கொடுத்தது யார் தெரியுமா “?
லெ னி ன் ….இழுத்தாள் …
சிரித்தவர் ..இல்லை அப்பிடிதான் எல்லாரும் நினைத்தவை உன்னை காட்டித் தந்து வீட்டிலை பிரசுரங்கள் இருக்கெண்டு மேலதிக தகவலும் தந்தது சுரேந்தர் தான் .நீ நினைக்கிற மாதிரி அவன் போரளியில்லை துரோகி .
அதிர்ச்சியில் அவளுக்குள் மொஸ்கோ நகரம் வெடித்துச் சிதறியது .தாய் நாவல் பக்கம் பக்கமாக கிழிந்து காற்றில் பறந்து கொண்டிருந்தது .லியோ டால்ஸ்டாய்;பியோதர்; தஸ்தாயெவ்ஸ்கி; குப்ரின்; கார்க்கி; கோகல் ;துர்கனேவ்; என்று சுரேந்தர் அறிமுகம் செய்து வைத்த அனைத்து ரஷ்ய நாவலாசிரியர்களையும் சபித்தபடி தலையை நிமிர்த்தி செபஸ்டியனை பார்த்தாள் . “நான் சொன்னால் நம்ப மாட்டாய் அம்மாவிட்டையே கேட்டுப் பார்”. என்றதும் தன் பக்கம் திரும்பிய மல்லிகாவிடம் “எல்லாம் உண்மை தானம்மா நீ மோசம் போயிட்டாய்”. என்று நல்லம்மா விம்மியள.எதுவுமே புரியாமல் பேந்திய படி நின்றிருந்த டிராஸ்கியின் கையில் கொண்டுவந்த சாக்லேட்டை கொடுத்துவிட்டு செபஸ்டியன் போய் விட்டார் .
0000
நண்பர்களின் உதவியோடு பிரான்சிற்கு மகனோடு வந்து சேர்ந்த மல்லிகாவுக்கு அவள் சிறையில் இருந்த ஆதாரங்கள் உதவியதால் இலகுவாக நிரந்தர வதிவிட உரிமையும் அரச உதவியும் கிடைக்கத் தொடங்கியிருந்தது .சுரேந்தர் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒரேயொரு தடவை நேரில் சந்தித்து ” எதுக்கடா இப்படி செய்தாய்” என்று மட்டும் கேட்டு விடவேண்டும் என்கிற கோபம் கொழுந்து விட்டுக் கொண்டிருந்தாலும் .நாளாந்த வாழ்க்கைப் போராட்டமும் மகனை நல்ல படியாய் வளர்த்து விடவேண்டும் என்கிற சிந்தனையும் மெதுவாக கோபத்தை குறைந்து விட்ட்டிருந்தது .ஆனால் வளர்ந்து கொண்டிருந்த டிராஸ்கி அப்பா எங்கே என்று கேட்கத் தொடங்கி அப்பா யாரம்மா? என்று கேட்ட கேள்விகளை அவர் ஊரில் இருக்கிறார் என்று எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள் .அவன் வளர வளர அப்பாவைப் பற்றிய ஒரே கேள்வி பல வடிவங்களில் வந்து கொண்டிருந்தது .ஒரு நாள் அவன் “அம்மா அப்பாவின் ஒரு படம் கூட இல்லியா ? இல்லை அப்பா யாரெண்டு உனக்கே தெரியாதா “? என்று அவன் முடிக்கு முதலே அவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தவள் உங்கப்பா செத்துட்டாரடா என்று விட்டு சத்தமாய் அழத் தொடங்கியவளை அறை வாங்கிய எந்த உணர்வுமின்றி கட்டியணைத்து அம்மா இனிமேல் அப்பாவை பற்றி கேட்டகவே மாட்டேன் இது சத்தியம் நீ அழாதை என்றவனை இழுத்து அணைத்து அன்று முழுதும் அழுது தீர்த்து விட்டிருந்தாள் .

அதன் பின்னர் டிராஸ்கியும் அப்பா என்கிற வார்த்தையே பாவிப்பதில்லை .சில வருடங்கள் கழிந்த நிலையில் பிரான்சில் ஒரு தமிழ் வானொலி தொடங்கியிருக்கிறார்கள் என்கிற செய்தியறிந்து சாட்டிலைட் அன்டெனா வாங்கிப் பொருத்தி அலை வரிசையை தேடித் பிடித்தபோது மீண்டும் இலங்கை வானொலி கேட்ட மகிழ்ச்சி மல்லிகாவுக்கு .அப்படியான ஒரு இரவுப் பொழுதின் கவிதை நேரத்தில் “வணக்கம் நேயர்களே இன்றைய கவிதை நேரத்தினை அலங்கரிக்க வருகிறார் யேர்மனியிலிருந்து தோழர் சுரேந்தர் .மக்கள் புரட்சி இயக்கத்தினை நிறுவியவரும் ஆயுதப் போராட்டம் மூலமே எமக்கு தனி நாடு கிடைக்கும் என முதன் முதலில் முழங்கியவவரும் இவரே ..இப்பொழுது எமக்கு ஏன் தனி நாடு தேவை என்பதை கவிதையாய் வடிப்பார் “.வாருங்கள் தோழர் சுரேந்தர் .. என்றதும் “வணக்கம் “என்று விட்டு .
எழுவோம் .
நிமிர்வோம் .
சிவப்பு என்பது
நிறமல்ல .
உதிரம் ..

வேகமாய் வானொலிப் பெட்டியின் வயரைப் பிடுங்கிய மல்லிகா வானொலி நிலையத்துக்கு போனடித்து சுரேந்தரின் இலக்கத்தை வாங்கியிருந்தாள் .போனடிக்கலாமா என பல தடவை யோசித்திருந்தாலும் மகனைப் பற்றி கேட்டு சொந்தம் கொண்டாடுவானோ என்கிற பயத்தில் போனடிகமலேயே விட்டு விட்டது மட்டுமல்ல வானொலி கேட்பதையும் விட்டு விட்டாள் .இப்போ சுரேந்தர் மாரடைப்பில் இறந்து விட்டான் என்கிற செய்தி யேர்மனியில் இருந்த தோழி சொன்னதன் பின்னர் பல வருடங்கள் கேட்காமலேயே விட்டிருந்த தமிழ் வானொலியை தேடிப் பிடித்தாள் .தமிழ் தேசியத்தின் ஒரேயொரு வானொலி என்கிற விளம்பரத்துடன் சுரேந்தருக்கான அஞ்சலிக் கவிதைகள் உலகெங்குமிருந்து குவிந்து கொண்டிருந்தது .இன்று மகனுக்கு அப்பா யார் அவன் எவ்வளவு துரோகி என்று சொல்லி விடலாம் என்று முடிவு செய்திருந்தாள் .கார்கி வாசலையும் பால்கனி யையும் மாறி மாறி பார்த்து குரைத்துக்கொண்டு ஓடிக்கொண்டேயிருந்தது.

வழக்கத்துக்கு மாறான கார்கியின் குரைப்பு எரிச்சலை கொடுக்க அதை அதட்டி படுக்க வைத்தவள் . மகன் வருகிற நேரமாகிவிட்டது இன்னமும் காணவில்லையே ஒரு போனடிதுப் பார்க்கலாம் என நினைத்து போனை எடுக்கப் போகும் போது அதுவே ஒலித்தது .எடுத்து காதில் வைத்தாள் .மறு முனையில் பிரெஞ்சு மொழியில் தன்னை ஒரு போக்கு வரத்து போலிஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்தவர் “BZ 176 CS இலக்க பச்சை நிற ரெனோல்ட் மெகான் வண்டி உங்களுடையதா” ? தட்டுத் தடுமாறியபடி “வண்டி என்னுடைய பெயரில் தான் உள்ளது மகன்தான் அதனைப் பாவிக்கிறார் ஏன் ஏதும் பிரச்சனையா “என்றதும் .”ஒ மன்னிக்கவும் அந்த வண்டி விபதுக்குளாகி விட்டது .அதில் இருந்த குழந்தை மட்டும் சிறு காயத்தோடு தப்பி விட்டது உடனடியாக மருத்துவ மனைக்கு வாருங்கள்” என்று விட்டு மருத்துவ மனை விலாசத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே மல்லிகாவுக்கு எல்லாமே மங்கலாக தெரியத் தொடங்கி தொலைபேசி நழுவி கீழே விழ கார்க்கி மீண்டும் குரைக்கத் தொடங்கியிருந்தது …
…………………………..

சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்

2:07 PM, Posted by sathiri, No Comment

சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்

 http://eathuvarai.net/?p=4824

 
391 பக்கங்களை கொண்ட இந்த நாவல் சாதாரணமான மனிதர்கள் , அழிவையே தரும் ஒரு அமைப்பொன்றின் அதிகாரத்தினுள் வந்தபின் எவ்வாறு கொலைகள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில், இயல்பாக எவ்வித குற்ற உணர்வுமின்றி பங்கெடுக்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறது. இந்த நாவலானது 83 கலவரத்தின் பின் விடுதலைப் புலிகளில் சேர்ந்த ஒரு இளைஞன் சந்தித்த அனுபவங்கள் மட்டுமல்லை, அவன் தன்னார்வத்துடன் புலிகளின் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய ஒரு பதிவு. விடுதலை புலிகளின், டெலோ மேலான படுகொலை தொடக்கம் பாரிசில் விடுதலை புலிகளின் முகவரான நாதனின் படுகொலை வரையாக நாவல் நீள்கிறது.எனது மனதை மிகவும் அழுத்திய நாவல்களில் இதுவுமொன்று.
raakavanஇந்த நாவலில் வரும் கதா பாத்திரம் ஒரு பெயரிலி. ‘அவன்’ என்று மட்டும் கதா நாயகன் விளிக்கப்படுகிறான். எனவே ‘அவன்’ என்றே நானும் விளிக்கிறேன்.அவன் வெறும் இயக்க கட்டளைகளை ஏற்றுக்கொண்டு மட்டும் செயல் படவில்லை. அதன் பங்காளனாகிறான். அவனதும், இயக்க உறுப்பினர்களினதும்  மானிட விழுமியங்களுக்கெதிரான ஒவ்வொரு செயலும் தினமும் சாப்பிடுவது உறங்குவது உறவு கொள்வது போன்ற அற்ப விடயங்களாக தினசரி நிகழ்வுகளாகின்றன. கொலைகள் சித்திரவதைகள் பழிவாங்கல்கள் ஏமாற்று என்பவை எவ்வித மனக்கிலேசமுமின்றி அரங்கேறுவதன் காலக்கண்ணடியாக ஆயுத எழுத்து இருக்கிறது.
ஒரு மோசமான அமைப்புக்கான தயார்படுத்தலை செயல்படுத்தலை தனது கடமையாக அவன் முன்னெடுக்கும் போது அனைத்து மானிட விழுமியங்களும் புதைக்கப்படுகின்றன. வெறும் உத்தரவுகளை நிறைவேற்றுபவனாக, ஒரு சிப்பாயாக அவன் காட்சிப்படுத்தப்படவில்லை. மாறாக அவன் ஒவ்வொரு நகர்வையும் தனது கடமையாக கருதி செயல்படுகிறான். அவன் மட்டுமல்லை அமைப்பில் அங்கம் வகிக்கும் பலரும் அவ்வாறே. ஒரு ராட்சச இயந்திரத்தின் சிறிய அங்கமாக அதன் சுழற்சிக்குள் அகப்பட்டு தொழில்படுகின்றான் என்பதைவிட அவனும் அந்த இயந்திரத்தின் சுழற்சிக்கு உந்து கொடுக்கின்ற முக்கிய பாத்திரம் வகிக்கின்றான் என்பதையே நாவல் உணர்த்துகிறது. .
ஒரு வகையில் தமிழ் மக்கள் மேலான 83 அரச வன்முறையை தொடர்ந்து அவனும் அவன் போன்றவர்களும் விடுதலை அல்லது இலங்கை அரசை பழி வாங்கல் என்ற ஆர்வத்துடன் புலிகளிலும் மற்றைய அமைப்புகளிலும் சேர்ந்தார்கள் என்பது உண்மையே. அதற்கான நியாயங்களும் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவன் அமைப்பில் சேரும் போது அவனுக்கு குடும்பம் பற்றிய நினைவுகள் ,காதலி , நண்பர்கள் பற்றிய நினைவுகள் போன்ற இயல்பான மனித உணர்வுகள் வரத்தான் செய்கிறது. இவ்வுணர்வுகளை படிப்படியாக அடக்குவதன் மூலம் தனது மனிதத்தை அவன் மழுங்கடிக்கிறான்.
ஆரம்ப காலகட்டத்தில் அவனுக்கோ மற்றும் பலருக்கோ அமைப்புகளின் முழுப் பரிமாணமும் தெரியவில்லை என்பதும் நியாயமே. அத்துடன் அமைப்புகளின், முக்கியமாக புலிகளின், வன்முறைசார்ந்த சர்வாதிகார தலைமைமுறை ஆரம்பத்தில் முழு பலமும் பெறவில்லை. ஆனால் ஒரு வகையில் அவன் பொறுமையற்றவனாக உடனடி நடவடிக்கையில் ஈடுபட விரும்பும் ஒருவனாக ஈ பி ஆர் எல் எப் இன் புத்தகப்படிப்பில் ஆர்வமற்று புலிகளின் ஆயுதங்களை நம்பி அவர்களுடன் சேர்கிறான். அவனது தெரிவுக்கு அவனது இளம் பராய வயது மற்றும் அரசின் நேரடியான வன்முறை காரணம் என்பதும் யதார்த்தமே.
நாவலின் பக்கங்கள் அவனது நடவடிக்கைகளின் தொகுப்பல்ல. ஹாலிவூட் பட நாயகனின் வீரக்கதையுமல்ல. மாறாக ஒரு வன் முறைக்கலாச்சாரம் எவ்வாறு சமூகத்தில் அங்கீகாரம் பெற்று சகஜமாக்கப்பட்டதென்பதே இக்கதை.நாவலில் வரும் அவன், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ,இந்திய அரச படைகள் ,ஆயுத அமைப்புக்களின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் பக்கங்களை தனது பங்களிப்புக்களூடாக எவ்வித ஒழிவுமறைவுமின்றி வெளிக்கொணர்கிறான். அத்துமீறல்கள், படுகொலைகள், கடத்தல்களுக்கான திட்டமிடுதல் அவற்றை நிறைவேற்றும் பாங்கு அனைத்தும் வெறும் சாதாரண நிகழ்வுகளாகவே அவனுக்குப்படுகின்றன. துப்பாக்கியின் விசை அழுத்தல் ஒரு பொழுது போக்காகிறது. எதிரி நண்பன் உறவினன் அனைவரும் துப்பாக்கி விசையின் முன் ஒரு புள்ளி. புளட் இயக்கத்தில் இருந்து விலகி வெளி நாடு செல்ல இருந்த தனது பால்ய நண்பனை திடீரென்று சந்திக்கையில் அவன் சுட்டு கொல்கிறான். நண்பனிடம் துப்பாக்கி இருக்குமென்ற சந்தேகத்தில். இங்கு அவனது நிலை கொலை நிலத்தில் வாழும் நிலையே. சிறிய சந்தேகம் துப்பாக்கி விசையின் அழுத்தத்தையே வேண்டி நிற்கிறது.
saaththiriஇக்கதை அறம், மனித விழுமியங்கள் பற்றிய சிந்தனைக்கான இடைவெளி இல்லாத அந்தகாரத்தில் விடப்பட்ட ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல; நடந்து முடிந்த ஒரு கோரமான வன்முறையின் பக்கங்கள் எவ்வாறு சாதாரண சம்பவங்களாக சகஜ நிலையாக பார்க்கப்பட்டன என்பதையும் நாவல் படம் பிடிக்கிறது. அவன் சம்பவங்களை நியாயத்தராசில் போடவில்லை ; மாறாக வாசகனிடம் அதனை விட்டுவிடுகிறான். சாத்திரியின் இந்த உத்தி அவரை தேர்ந்த கதை சொல்லியாக்கியிருக்கிறது.
மனிதத்துக்கெதிரான அப்பட்டமான குற்றசெயல்கள் ஸ்தாபனமயப்பட்டு எதிர்ப்பின்றி தினசரி நிகழ்வுகளாகும் போது இக்குற்றச்செயல்களின் பங்காளர்களுக்கு இது சாதாரணமான நிகழ்வுகள். மனிதத்துகெதிரான பாரிய குற்ற செயல்களானது அங்கீகரிக்கப்பட்டு வழமையாக்கப்படும் போது அதற்கெதிரான அறச் சீற்றமோ அரசியல் எதிர்ப்போ இன்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றதென்கிறார் ஹன்னா ஆரெண்ட் எனும் அறிஞர்.ஒரு ஆயுத அமைப்பின் பிறழ்வு, அதன் நாசகார சக்தி, அதில் இணைந்து கொண்ட இளைஞன் ஒருவனின் பங்களிப்பு இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவாறு கதை நகர்கிறது.
0000
இந்திய ராணுவத்தினதும் இலங்கை ராணுவத்தினதும் கோரத்தனங்கள் படுகொலைகள் பாலியல் பலாத்காரம் இவ்வதிகாரங்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுத அமைப்புக்களும் அவர்களின் வன்முறையும் அதற்கான புலிகளின் எதிர் நடவடிக்கைகள் ஊடாகவும் அவன் வருகிறான். வன்முறையே வாழ்க்கை முறையாகி ஒருமுழுச்சமூகத்தையும் காவு கொண்ட கதையை நாவல் சொல்கிறது.
இந்த நச்சு சூழல் மக்கள் மத்தியிலும் பரவியது யதார்த்தமே. கம்பத்தில் கட்டி கொல்லப்பட்ட மனிதர்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டபோது பலர் வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல அதனை நியாயப்படுத்தவும் தவறவில்லை. அது மட்டுமல்ல புலிகள், டெலோ மீது நடத்திய படுகொலைகளின் போது ஒரு சிலர்’ சுட்டு ‘ களைத்துப்போன’ புலிகளுக்கு சோடா கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அறிவு ஜீவிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் இவ்வழிவு கலாச்சாரத்தை நியாயப்படுத்தி முண்டுகொடுத்திருக்கின்றனர். அதற்காக ஒட்டு மொத்த சமூகமும் வன்முறைக்கலாச்சாரத்தை அங்கீகரித்ததென்பதல்ல. மாறாக வன்முறைக்கலாச்சாரமானது எவ்வாறு பல் பரிமாணங்களில் செயல்படுகிறது, அக்கலாச்சாரம் எவ்வாறு சாதாரண நிகழ்வாக்கப்பட்டு அங்கீகாரம் பெறுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இந்திய ராணுவ அட்டூழியம் அதனை தொடர்ந்த அவனது பிரான்ஸ் வருகை. அதன் பின் சர்வதேச ஆயுதக்கொள்வனவு என கதை நகர்கிறது. ஆயுத கொள்வனவு செய்கையில் பாலியல் தொழிலாளர்களிடம் போவதிலிருந்து ஜானி வாக்கர் விஸ்கி, நல்ல பிரஞ்சு வைன் தேடுதல் மற்றும் போதை பொருள் கடத்தல் வரை இயக்கத்துக்கான கடமையை எவ்வித கேள்விகளும் இன்றி அவன் செய்கிறான். விடுதலைப்புலிகள் கட்டுப்பாடான இயக்கம் என்ற முகத் திரை இங்கு கிழிந்து போகிறது.அதனை விட அவன் தயாரிக்கும் பெண் தற்கொலை போராளி மூலம் பொலிஸ் அதிகாரிகளை வலையில் விழுத்த அவன் திட்டம் போடுகிறான். அவளை அவர்களுடன் பாலியல் உறவு கொள்ள ஏற்பாடு செய்கிறான். அவள் அவனுக்கு ஒரு இயந்திரமாகவே தெரிகிறாள். அவள் இறந்த பின் அவளது முக அடையாளம் தெரியக்கூடாதென்பதில் கவனம் செலுத்தி வெடி மருந்து கொண்ட கழுத்துப்பட்டியும் மாட்டுகிறான்.
மற்றைய இயக்கங்களுக்கு மேலான புலிகளின் படுகொலைகள்,  தாக்குதல்கள் அவனுக்கு மட்டுமல்ல அவனுடன் சேர்ந்திருந்தவர்களுக்கும் நியாயமாகவே படுகிறது. டெலோவை அழிப்பதற்கு உறுப்பினர் பலரின் எவ்வித விசாரணையுமற்ற உற்சாகமான பங்கு பற்றலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

0000
மனிதன் சுதந்திரமானவன் என்பது தீர்மானகரமானது. ஏனெனில் இவ்வுலகில் அவன் எறியப்பட்டபின் அவனது ஒவ்வொரு செயலுக்கும் அவனே பொறுப்பென்கிறார் சாத்தர். அவனும் அவனை சேர்ந்த பலரும் அழிப்புகளை உற்சாகத்துடன் செயல்படுத்துகின்றனர். டெலோ அமைப்பை அழிப்பதற்கான புலிகளின் தலைமையின் நியாயப்படுத்தலை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டு அவர்கள் செயல் படுகின்றனர். ஒருவகையில் புலிகளின் தலைமையானது மாற்று இயக்க முரண்பாடுகளை அழிப்பு முறையை விடுத்து தீர்ப்பதற்கான வழிவகைகளை கைக்கொள்ளவில்லை என்பது யதார்த்தமெனினும் அந்த அழிப்பை முன்னின்று நிகழ்த்த துணை புரிந்த உறுப்பினர்களின் பாகத்தை எவ்வாறு கணக்கிடுவது? விசாரணையின்றி மற்றைய இயக்கங்களுக்கு மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? ஹன்னா ஆரெண்ட் அடொல்ப் ஐச்மன் என்ற நாசி கொலையாளியை பற்றி ஆயும் போது அவன் கொலைகளை செய்தான் ஆனால் அதனை ஐச்மனுக்கு பகுத்தறிவாக சிந்திக்கும் திறன் இருக்கவில்லை என் கிறார். இன்னிலையை கெடுதியின் இயல்பாகம் (banality of evil) என்கிறார் அவர். அவனது செயல்களை banality of evil எனக்கொள்வதா அல்லது சாத்தர் சொல்வது போல் மனிதனின் செயலுக்கு அவன் பொறுப்பா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
பாரிசில் விடுதலை புலிகளின் காசை கையாடுகிறார் என குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நாதன் வரை அவனது பங்களிப்பு தொடர்கிறது. அவனும் கொலை செய்வதற்காக இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட தேர்ந்த கொலையாளியை பாதுகாப்பாக பிரான்ஸ் கொண்டு வருவதிலிருந்து கொலை செய்தபின் அவனை பாதுகாப்பாக பிரான்ஸிலிருந்து வெளியேற்றுவது வரை முழு பொறுப்பையும் நிறைவேற்றுகிறான். கொலையைச் செய்து விட்டு அதனை இலங்கை அரச உளவாளிகளின் தலையில் சுமத்துவது ,மக்களை தம்வசப்படுத்துவது ,அதிக பணம் சேர்ப்பது என்ற திட்டத்துடன் கொலை நிறைவேறுகிறது.
அல்பேர்டோ மொறவியாவின் -கொன்ஃபொர்மிஸ்ட் -என்ற நாவலை இரண்டு வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். பாசிஸ்ட் இத்தாலியில் புலனாய்வு துறையில் தொழில் புரியும் மார்சலோ என்ற பாத்திரத்தின் புனைவு அக்கதை . பாசிச எதிர்ப்பாளரான தனது முன்னை நாள் பேராசிரியரை பாரிசில் வைத்து கொலை செய்ய புலனாய்வு துறையால் மாசலஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அப்போது தான் திருமணமான அவன் தனது தேன்னிலவை கொண்டாட பாரிசை தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தனது இரகசிய நடவடிக்கைக்கு அது துணை போகுமென்று. கொன்பொர்மிஸ்ட் நாவலில் ஒரு இடத்தில் மாசலசின் செயல் பற்றி இவ்வாறு…” அக்கணத்தில் அவளை விருப்புடன் கொன்றிருப்பான் . அவள் எதிரியாக இருந்துகொண்டு உயிருடனும் இருப்பது அவனுக்கு சகிக்கவில்லை. அவள் இறப்பதை காண மனப்பயம் இருப்பினும் அவள் தன்னை நேசிப்பதை விட அவளது இறப்பு அவனுக்கு அதிக மகிழ்வை தந்தது”.
0000
306938-gun

அது போல் ஆயுத எழுத்து அவன் இலங்கை பொலிசிடம் சிக்கி சித்திரவதை படும் போது ,ராணி என்ற விசாரணையாளரிடம் சிக்குகிறான். ராணி அவனை சித்திரவதைக்குள்ளாகி பின்னர் அவன் மேல் காதல் கொள்கிறாள். தனது கதையையும் சொல்கிறாள். தனது கணவன் ஈ பி ஆர் எல் எப் இலிருந்து விலகி இருக்கையில் புலிகளால் அனியாயமாக சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை விவரித்து புலிகளை பழி வாங்க பொலிஸில் சேர்ந்ததாக தெரிவித்தாள். இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அவன் பொலிசில் பிடி பட முன்னர் கச்சிதமாக ஒரு தற்கொலையாளியை தயார் செய்து குண்டு வெடிப்பொன்றை நிகழ்த்த ஏற்பாடு செய்துவிட்டான்.
தீவிரமான விசாரணைகளின் பின் அவன் விடுவிக்கப்பட்டு திரும்ப வெளி நாடு செல்ல விமான நிலையத்தில் நிற்கையில் தொலை பேசி அழைப்பு ராணியிடமிருந்து. உடனே அவன் எங்கு குண்டு வெடிப்பு நிகழ இருக்கிறதோ அங்கு அவளை வர சொல்கிறான். அவள் அந்த குண்டு வெடிப்பில் தப்பமாட்டாள் என அவன் திருப்தி அடைகிறான். தனது கணவன் அநியாயமாக புலிகளால் கொலை செய்யப்பட்டபின் பொலிஸில் அவள் இணைவதற்கான காரணம் அதன் சரி பிழைகளுக்கப்பால் அவனுக்கு உறுத்தவில்லை. அவள் அழிந்து போவது அவசியம் என நம்புகிறான்.
தனது தந்தை தன்னை கண்டிப்புடன் நடத்தியதை சிறு வயதில் இருந்து வெறுத்த அவன் ஒரு முறை இயக்கத்தில் இருந்து வீடு செல்கிறான். அங்கு முற்றத்தில் ஒரு கோழியும் சேவலும் உறவாடக் காண்கிறான். அச்சமயம் அவனது தந்தை அவனை திட்டி தீர்க்கிறார் . அவன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சேவலை சுட்டு கொல்கிறான். தகப்பன் மேலான அவனது ஆத்திரம் கோழியுடன் உறவு கொண்டிருந்த சேவல் மேல் வந்தது. அவன் கோழியை கொன்றது பற்றி மன உறுத்தல் கொள்ளவில்லை, மாறாக கோழிக்கறியை சாப்பிடாமல் விட்டது தான் அவனுக்குப் பிரச்சனை. ஒருவகையில் தந்தை மேலான தீர்க்கப்படாத பகைமை சேவல் உறவு கொள்ளும் போது அதை கொல்ல தூண்டியதா எனவும் கருதத் தோன்றுகிறது
000000
பிரான்சுக்கு வரும் அவன் ஒரு பிரஞ்சு பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் அவன் தன்னை விடுதலைப் புலிகளின் ஒரு பாகமாகவே நினைக்கிறான். . மற்றவர்களை தயார்படுத்த அவன் தொடர்ந்தும் முனைகிறான். அவளுக்கு தெரியாமல் பாரிசை விட்டு வெளிவருகிறான்.அவன் அழகையும் அன்பையும் காதலையும் உணரக்கூடியவான இருப்பினும் இவை தன்னை ஆட்கொள்ள கூடாதென உறுதியாக இருக்கிறான். தான் அங்கத்தவனாக இருக்கும்  அமைப்பிற்கான கடமையுணர்வு மேலோங்க தான் செய்யப்போகும் நடவடிக்கைகள் மேலான ஈர்ப்பு ,அன்பு இரக்கம் போன்ற விழுமியங்களை இழக்க அல்லது அடக்க செய்கிறது.
இந்த நாவலில் 1990களில் நிகழ்ந்த முஸ்லிம் வெளியேற்றம் பற்றிய பதிவானது நாவலுக்கு வெளியில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஏனெனில் அவன் அதுவரை நிகழ்வுகளை நேரடி அனுபவங்களூடாகவே சொன்னான். ஆனால் இது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையாக தனியாக பதிக்கப்பட்டது அல்லது புகுத்தப்பட்டது போன்ற உணர்வை தந்தது. அதனை விட பதிப்பாளர்கள் எழுத்துப்பிழைகளை சீர்பார்த்திருக்க வேண்டும். பெரிதாக எழுத்துப்பிழை இல்லாவிடினும் அதில் கவனம் செலுத்துவது அவசியம்.
-கொன்ஃபொர்மிஸ்ட் -இல் வரும் மாசலோவின் இறப்பு முசோலினியின் பாசிச இத்தாலியின் ஆட்சி முடிவுடன் நிறைவேறுகிறது. காரில் செல்லும் மாசலோ நேசப்படைகளின் விமான குண்டு வீச்சில் சிக்கி இறக்கிறான். இது பாசிசத்தின் முடிவுக்கான ஒரு குறியீடாக அந்த நாவலில் வருகிறது. ஆயுத எழுத்து நாயகனும் மே 2009 இன் பின் புலிகளின் அழிவின் முடிவுடன் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டது கதா நாயகனல்ல, புலிகளின் வன் முறைக்கலாச்சாரமே என்கிறது ஆயுத எழுத்து.
ஆனால் வன்முறை கலாச்சாரமானது வெறும் தமிழ் பகுதிகளுக்கு சொந்தமானது அல்ல. ஆயுதகலாச்சாரம் இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்திலும் வேரூன்றியதுதான் யதார்த்தம். 80 களில் நிகழ்ந்த ஜேவி பி யினரின் கொலைகள் 1970 களிலிருந்து இலங்கை அரச படையினர் தமிழ் சிங்கள மக்கள் மேல் நிகழ்த்திய அப்பட்டமான படு கொலைகள் மனித உரிமை மீறல்கள். இதற்கு மகுடம் வைத்தது போல் முள்ளிவாய்க்காலில் அரச படைகள் நிராயுத பாணிகளை சித்திரவதை செய்து படுகொலைகள் செய்துவிட்டு அக்காட்சிகளை கைத்தொலைபேசிகளால் படமெடுத்து மகிழ்ந்ததும் ,அப்படங்களை வெற்றி சின்னங்களாக வரித்ததும் வன்முறைக்கலாச்சாரத்தின் இன்னுமொரு பிரிக்க முடியாத அங்கமே. இவை பற்றி அனைத்து பிரிவினரிடமிருந்தும் பதிவுகள் வர வேண்டும்.
முடிவாக சாத்திரி தரமான நாவலை மட்டுமல்ல ஆயுதக்கலாச்சாரத்தின் நச்சு சூழல் பற்றிய நல்லதொரு பதிவையும் தந்திருக்கிறார்.
00