Navigation


RSS : Articles / Comments


யார் இந்த சிறீதரன் எம்.பி? பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல்! மாவீரர் குடும்பம் ஒன்றின் சோகக்கதை

3:31 AM, Posted by sathiri, No Comment




மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது.

அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இலங்கைப் படையை விட யுத்தம் முடிந்தவுடன் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதில்…அப்பாவிகளைத் தனது வலைக்குள் சிக்க வைப்பதில் இந்தத் தமிழன் இன்று கில்லாடி…

அப்பாவிப் பெண்களை, அபலைகளை ஏமாற்றலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், தற்போது வெளிச்சத்துக்கு வந்தவர்கள் சிலரே. வர வேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். வெளியில் தமிழ்த் தேசியம்.... உள்ளே அனைத்தும் வேஷமாகச் செயற்படும் இவர் யார்? என்ன செய்கிறார்?

தனது குடும்ப வறுமையைத் தனக்குத் தெரியாமலே விளம்பரப்படுத்தி தனது உறவுகளிடையே சிக்கல்களை உருவாக்கி தனக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் இல்லாமல் செய்து விட்டார் என மனமுடைந்து போன இந்தத் தாய்… உதவியும் வேண்டாம்.

எனது பிள்ளைக்குச் சத்திர சிகிச்சையும் வேண்டாம். தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு மண்டியிட்டுக் கெஞ்சும் இந்தத் தாயின் வாழ்க்கையே இன்று மனிதாபிமானமற்றவர்களால் அழிக்கப்படும் நிலை…

கணவனையும் இழந்த நிலையில் வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை விளம்பர வியாபாரியாக்கி பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றவர் யார்…?

வன்னி மண்ணில் சிங்களவர்களால் மனிதர்கள் தான் புதைக்கப்பட்டார்களென்ற செய்தியை இன்று மிஞ்சி நிற்கிறது ஒரு தமிழனால் புதைக்கப்பட்டுப் போன மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தைப் புதைத்த தமிழன் தான் யார்?

தமிழினத்தின் வாக்குக்களால் வென்று இத்தகைய பெண்களின் வறுமையை விளம்பரமாக்கும் மேன்மை தங்கிய மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தான். அது மட்டுமல்ல.. ஸ்ரீதரனின் செயலாளரான பொன்காந்தனால் இன்று அந்தப் பெண் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.

இணையத்தள வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சமான்யப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பிக் கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

அந்தப் பெண் இன்று தன் நிலை அறிந்து எதுவும் செய்ய முடியாத நிலமையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வளவுக்கும் ஆளான அந்தப் பெண் யார்..? அவளின் கதை என்ன படியுங்கள்..

இந்த விடயம் தொடர்பில் நேசக்கரம் அமைப்பினால் எமக்கு வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனின் கோரிக்கைககு இணங்க ஜெர்மனியில் இயங்கும் அமைப்பான உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு 22.12.2010 இல் தமிழ் வின் இணையத்தளத்தில் பிரபாகரன் கலாரஞ்சினி என்ற ஒரு பெண்ணின் கோரிக்கையொன்றை வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கான உதவிகள் அவரது பிள்ளைக்கான வைத்திய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பன நேசக் கரம் அமைப்பினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மகன் தமிழன்பன் என்பவரின் சிகிச்சைக்காகக் கொழும்பில் சுமார் ஆறுமாதங்கள் முயற்சி செய்த பின்னர் தமிழ் நாட்டிலும் வைத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.


தமிழ் நாட்டு வைத்தியர்களினாலும் அவரது குறைகள் என்பன பிறப்பில் இருந்தே இருப்பதால் அவருக்குக் காது கேட்பது கதைப்பது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியாதெனக் கூறி விட்டனர். ஏற்கனவே பணம் பிடுங்கிகள் சிலர் 25 லட்சரூபாய் தந்தால் குழந்தையை பேசவும் காது கேட்கும் வலுவையும் ஏற்படுத்துவோம் என இப்பெண்ணிடம் கேட்டிருந்தனர்.

இந்த விடயம் எம்மையும் எட்டியதால் எம்மிடம் வருகின்ற மருத்துவ உதவிகளுக்கான மிகப்பெரும் உதவியாக இருக்கும் மருத்துவருக்கு இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். நேரடியாக உரிய மருத்துவர் இப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம்பிடுங்கிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

அத்தோடு துறைசார் மருத்துவர் ஒருவரையும் நியமித்து கலாரஞ்சனிக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறித்த மருத்துவர் குழந்தை தமிழன்பனின் மருத்துவ அறிக்கைகளை தமிழ்நாடு வைத்தியர்களை நாடி மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் குழந்தையின் மருத்துவத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய மருத்துவக் குழுவின் பிரதான மருத்துவரும் உடனுக்குடன் தகவல்களை எமக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதன் விளக்கங்களை ஏற்று நாமும் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கான உதவிகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் நேசக்கரம் அமைப்பு சேமித்து வைத்துள்ளது.

அப்படி அவரது தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்பெண்ணுக்கான உதவிகள் கோரி மீண்டும் தமிழ் வின் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து குழப்பமடைந்த நாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிதரன் (பா.ம.உறுப்பினர்) பற்றியும் அவர் உரையாடிய உரையாடல்களும் மற்றும் கலாரஞ்சனி தெரிவித்த விடயங்களும் எம்மை அதிர்ச்சிக்கும் மிகுந்த கவலைக்கும் உள்ளாக்கின.

சிறீதரன் உதவுவதாகக் கூறி இந்தப் பெண்ணை ஒருவர் சிறீதரனிடம் அழைத்துச் சென்றபோது, சிறீதரன் அவர்கள் தானும் போராளிகளுடனும் போராட்டத்துடனும் மிகவும் ஒன்றியிருந்ததாகவும் மனம் திறந்து தன்னிடம் அவரது குறைகளைக் கூறுமாறும் அந்தப் பெண்ணிடம் கேட்ட போது தனது குறைகளை அவர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு நிரந்தர அரச தொழில் வாய்ப்பை சிறீதரன் பெற்றுத் தருவார் என்று நம்பிப் போன காலரஞ்சினி சிறீதரனின் சாதுரியமான கதைகளை நம்பி தனது கணவர் குடும்பம் குழந்தையின் நிலமைகளையும் கூறியுள்ளார். சிறீதரனோ தனது நண்பர் ஒருவரின் குழந்தையும் இதே பிரச்சினையில் இருப்பதாகவும் பிறப்பிலுள்ள குறைபாட்டை 28 லட்சம் ரூபா செலவு செய்து மாற்றியுள்ளார்கள் எனவும் கூறி உங்கள் மகனை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று சத்திர சிகிச்சை செய்து குறைகளைத் தீர்க்கலாமென வாக்குறுதியளித்து தான் உதவுவதாகவும் கூறியிருந்தார்.

அந்நேரம் கலாரஞ்சினியையும் அவரது குழந்தையையும் சிறீதரன் நிழற்படமும் எடுத்துள்ளார். ஒரு தாயாக தனது பிள்ளையின் குறைபாடு நீங்கி தனக்காக உள்ள ஒரே குழந்தை ஆரோக்கியமடையலாம் என்ற நப்பாசையில் தனது துயரங்களை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். (நாம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருப்பின் இந்த வெளிப்பாடு இயல்பானது.)

இன்றைய இன்டெர் நெட் வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சாமானியப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பி கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையங்களில் சிறீதரன் அனுப்பிய செய்தியும் வீடியோப் பதிவும் வெளியாகிய அதேநேரம் யாழ் தினக்குரலில் கலாரஞ்சினியினதும் தமிழன்பனினதும் படத்தையும் பிரசுரித்து பண உதவி கோரிய விபரங்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதே தனது விபரங்களை சிறீதரன் ஊடகங்களில் வெளியிட்டு பணம் சேகரிக்கும் விடயம் தெரியவந்தது.

ஏற்கனவே பல வகைகளில் பாதிக்கப்பட்டு கணவனையும் இழந்து வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்ற சிறீதரனை கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாத நிலமையில் எம்மிடம் மீண்டும் உதவி கோரியிருந்தார் கலாரஞ்சினி.

சிறீதரனின் பொறுப்பற்ற விளம்பரத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார் இந்தப்பெண். தனக்கு இத்தகையதொரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது பற்றி சிறீதரனுக்குத் தெரிவித்த போது சிறீதரன் பதவியில் இருக்கும் அதிகாரத்துடன் பதிலளித்தமை அவளை மேலும் துன்புறுத்தியுள்ளது.

தன்னிடம் உதவி கோரி வந்தால் இதுவெல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்தச் செய்தியால் ஏற்பட்ட அசௌகரியம் சில நாட்களில் மாறி விடும் என்றும் அதுவரையில் வேறொரு தொலைபேசியைப் பாவிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு காலரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது குடும்ப வறுமையை விளம்பரப்படுத்தி ஏனைய தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கி இருந்த கொஞ்ச நிம்மதியையும் குலைத்த சிறீதரனால் ஏதாவது விபரீதம் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர் கலாரஞ்சனியும் அவரது குடும்பத்தினரும்.

தன்னைப் பற்றிய விளம்பர வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட சிறீதரனின் சகோதரரின் இணையங்களான லங்காசிறி, தமிழ்வின்னிலிருந்து அழிக்குமாறு வேண்டியும் இதுவரை சிறீதரன் எவ்வித அக்கறையும் எடுக்காதுள்ளார்.

இச்செய்தி தொடர்பாக உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் யேர்மனி கணேசலிங்கம் அவர்களிடம் கேட்டபோது சிறீதரன் சொன்னார் நாங்கள் செய்தியைப் போடச் சொன்னோம் என்றும் பொறுப்புமிக்க ஒரு பா.ம.உறுப்பினர் தரும் தகவல் உண்மையென்பதாலேயே தாம் தமது பெயரில் செய்தி போட ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி வீடியோவை பொன்காந்தன் (சிறீதரனின் செயலாளர்) தந்ததாகவும் கூறியிருந்தார்.

அடுத்து சிறீதரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது செய்தியாளர் இச்செய்தியை வெளியிட்டதாகவும் தன்னிடம் வரும்போது இப்படியெல்லாம் செய்தி வருமென்பதை அறியாதது கலாரஞ்சனியின் பிழையெனவும் இன்ரநெற் என்றால் என்ன ஊடகம் என்றால் என்ன என்பது பற்றி அறியாது இருப்பது கலாரஞ்சனியின் பிழையெனவும் கூறிய அதே நேரம் அவருக்கென சேகரிக்கப்பட்ட பணத்தை தாம் வேறு உதவி தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.



உதவியும் வேண்டாம் பிள்ளைக்கு சத்திர சிகிச்சையும் வேண்டாம் தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு கலாரஞ்சனியும் நாங்களும் சிறீதரனிடம் கேட்டும் அது செவிசாய்க்கப்படாதுள்ளது எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மட்டுமல்லாமல் சிறீதரன் பா.உறுப்பினர் மீது பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.


தற்போதைய வன்னி நிலமைகளை அறிந்து கொண்டுள்ள சிறீதரன் அவர்கள் அதுவும் இந்தப்பெண் போன்ற நிலமையில் இருக்கும் ஒருவருக்கு இவரது இத்தகைய விளம்பரப்படுத்தல் நிதிசேகரிப்பு மூலம் எத்தகைய நெருக்கடிகள் வரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சாதாரணமான ஒருவரல்ல.


வன்னிக்குள் எத்தனையோ விரும்பத்தகாத முறைகேடுகள் பெண்கள் மீதான அத்துமீறல்கள் துன்புறுத்தல் நடப்பது சிங்களவர்களால் மட்டுமல்ல சிறீதரன் போன்றவர்களாலும் என்பதனையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

பல பெண்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள் தொலைபேசி அழைப்புக்களிலிருந்து பலரது கோர முகங்களும் அவர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதனையும் உணர முடிகிறது.

ஆனால் இத்தகைய செல்வாக்கு மிக்கவர்களுடன் சமானமாக நின்று போராடும் வலுவை நாம் இழந்து போனோம் என்பதனையும் வேதனையுடன் கூறிக்கொள்கிறோம். இதேவேளை, இந்த அப்பாவிப் பெண் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, தான் விற்றுப் பிழைக்கப்பட்டுள்ளதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலைக்கும் தயாரானாதாகவும் நெஞ்சை நெருடும் தகவல் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.
http://www.youtube.c...player_embedded

http://www.youtube.com/watch?v=JC6EsXyv3i8
பிற்குறிப்பு :-
மேலே இணைக்கப்பட்டுள்ள உரையாடல் சிறிதரன் எம் பியின் உதவியாளர் பொன் காந்தனிற்கும் நேசக்கரம் சாந்தி ரமேசிற்கும் இடையில் நடந்ததாகும்.
கலாரஞ்சனி விடயத்தைக் கையண்டவர்களுடனான ஒலிப்பதிவுகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் யாவும் உள்ளன. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடுவோம் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

மேலும் உதவிக் கரம் நீட்டும் தர்மக் கரங்களும் உதவி கோரும் எமது உறவுகளும் இவ்வாறான இடைத் தரகர்களையும் விற்றுப் பிழைப்போரையும் நம்பி ஏமாற வேணடாம் என்ற ஒரு செய்தியினையும் இங்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்..

உங்கள் குழந்தைகளிற்கு கல்வியினை கொடுங்கள்.. நேசக்கரம் இணைப்பாளர் தீபச்செல்வன்

3:01 PM, Posted by sathiri, No Comment




நேசக்கரம் அமைப்பினால் 09.11.01 அன்று கிளிநொச்சி மாவட்டம் மணியன்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களிற்கான சுயஉதவித்தொழில் திட்ட அடிப்படையில் பதினைந்து குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாய்கள் உதவிகள் வழங்கப்பட்டதுடன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குமான உதவியாக இலங்கைரூபா 170000ரூபா(ஒருஇலட்சத்து எழுபதாயிரம்ரூபா) இவ்வுதவிகளை நேசக்கரம் அமைப்பின் இணைப்பாளர் தீபச்செல்வன் அவர்கள் நேரடியாக அம்மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருந்தார்.

இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வின்போது த.தே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்களின் உதவியாளர் கவிஞர் பொன்காந்தன்.மணியன்குளம் கிராம சங்கத்தலைவர் திரு சூரி மற்றும் மாதர்சங்கத் தலைவி ரஜனி ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன்.அந்த மக்கள் நம்பிக்கைகளை இழந்து போகாமல் மீண்டும் அவர்கள் வாழ்வினைக் கட்டியெழுப்ப உறுதியோடு உழைக்கவேண்டும் என்பதோடு அவர்களின் குழந்தைகளிற்குக் கல்வியினைக் கட்டாயமாகவும் தொடர்ச்சியாகவும் வழங்க முன்வர வேண்டுமென்றும், அதற்கான உதவிகளையும் வழிவகைளையும் அந்த மக்களிற்குப் பெற்றுக்கொடுப்பதற்காக என்றென்றும் நேசக்கரம் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் உறுதுணையாக இருப்போம் என்கிற உறுதியினையும் தீபச்செல்வன் அவர்கள் அம்மக்களுடனான உரையாடலின்போது தெரிவித்திருந்தார்.



இந்த மக்களிற்கான உதவிகளை வழங்கி அவர்களிற்கான உங்கள் பாசக்கரங்களை நீட்டிய அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நேசக்கரம் அமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
உதவி வழங்கல் மற்றும் மணியன்குளம் கிராமம் பற்றி கருத்துக்களோடு தீபச்செல்வனுடனான உரையாடல் ஒலிப்பதிவினைக் கேட்க இந்த இணைப்பில் அழுத்தவும்.
உதவி வழங்கல் படங்களை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்தவும்.

Akka please call me…after 13.00pm

1:57 PM, Posted by sathiri, No Comment

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.
எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.
ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?
கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

1:51 PM, Posted by sathiri, 2 Comments

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்
போக்குவரத்து 100 ரூபாய்
உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய்
மொத்தம் 3000 ரூபாய்

ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய்






உதவ விரும்புவர்கள் நேசக்கரத்துடன் மின்னஞ்சல் முலமாகவோ அல்லது தொ.பே மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்..

இங்குள்ள பிள்ளைகளின் விபரங்கள் மற்றும் படங்களை நேசக்கரத்தின் அனுமதியின்றி வேறு அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ பயன்படுத்தி மேசடிகளில் ஈடுபட்டால் நேச்கரம் அமைப்பு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கும் என்பதனை அறியத் தருகின்றோம்.

இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு

9:47 AM, Posted by sathiri, No Comment

இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.வந்தவரையெல்லாம் வாழவைத்த வளமான வன்னி மண்ணின் சொந்தக்காரர்களிற்கு வந்த இடத்தில் கிடைத்தெல்லாம் வசைச்சொற்கள் மட்டுமே.அத்தனையையும் தாங்கி அனாதையாய் நின்றவர்களிற்குக் கைகொடுத்தது காமினி மகாவித்தியாலம் மட்டும்தான். இங்கு தற்சமயம் தங்கள் உடல் அவயவங்களையும் பெற்றோர்களையும் இழந்துபோன 84 மாணவர்களிற்கான கல்வி அடிப்படை வசதிகளையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இன்று அந்த பாடசாலை மாணவர்களின் நிலைமைபற்றி அதன் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்களிடமே கேட்போம்.

ஒலிப்பதிவினை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்

நன்றி

பல்கலைக்கழகமாணவர்கள் தற்கொலைகள் பகிர்கிறார் தீபச்செல்வன்

12:10 PM, Posted by sathiri, No Comment

நேசக்கரம் அமைப்பின் யாழ்மாவட்ட தொடர்பாளர்களில் ஒருவரும் யாழ்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளலுமான தீபச்செல்வன் அவர்களுடனான ஒரு உரையாடல்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களிடையே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயான தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாகிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது அவை வெறும் அன்றாட சம்பவங்களாகி போய்விட்டதொரு நிலைமையே தொடர்கின்றது.

இத்தகைய நிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த புலம்பெயர் சமூகம் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுடன் இதோ தீபச்செல்வனை தொடர்பு கொள்கிறோம்.

முன்னாள் போராளி முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்

1:14 AM, Posted by sathiri, One Comment

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவில் இருந்து ஆனையிறவு மீட்புப் போரில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பின்னரும் பெண்போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழில் நுட்பப்பிரிவில் தொடர்ந்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 16ந்திகதிவரை தன்னுடைய பங்களிப்பனை வழங்கிய ஒரு முன்னாள் போராளி இன்று தன் மருத்துவ செலவுகளிற்காக உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறான் அதே வேளை முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்..இங்கு அழுத்தி கேழுங்கள்..

உருக்கும் உண்மைகள் 3

2:59 PM, Posted by sathiri, No Comment

விரக்தியே வாழ்வாய்போன விதுசன்

விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியையும் பிடித்தபடி செல் வந்தபோதெல்லாம் வீ்ழ்ந்து படுத்தபடி ஓடிக்கொண்டேயிருந்தான். அப்படித்தான் கடந்த வருடம் பங்குனி மாதம் ஒரு காலையில் செல்கள் சீறிவரும் சத்தம் கேட்டது விதுசனும் பங்கரை தேடி ஓடமுதல் வீழ்ந்து வெடித்த செல்களின் சத்தங்களிடையே ..அய்யோ அம்மா என்றொரு சத்தத்துதடன் விதுசன் மயங்கிப்போனான்..

அவன் கண்விழித்துப்பார்த்தபொழுது செஞ்சிலுவைச்சங்க தற்காலிக மருத்தவ முகாம் ஒன்றில் படுத்திருந்தான் .அருகில் அவனது அப்பாவும் அழுதபடி தம்பியும் நின்றிருந்தனர்.. உடம்பின் இடப்பக்கம் ஒரே வலியாய் இருந்தது.இரு கைகளையும் ஊன்றி எழுந்திருக்க முயன்றான் அவனது வலக்கையை மட்டுமே ஊன்றக்கூடிதாகவிருந்தது..இடக்கையை ஊன்றமுடியவில்லை. அவனது இடக்கை முங்கைக்கு மேலே காணவில்லை..அந்த இடத்தில் ஒரு பந்தம் போல கட்டுப்போட்டிருந்தது..."அப்பா என்ரை கை என்று" அழுதான்..அவனது தந்தையும் அழுதார் அவனது தம்பியும் அழுதான் ..அவர்களால் அது மட்டுமே முடிந்தது..இது இவனிற்கு வீழ்ந்த இரண்டாவது இடி.. இராணுவம் முன்னேறிக்கொண்டேயிருந்தது மாத்தளனை நெருங்கிவிட்டார்கள்.ஒரு மாதமளவில் தற்காலிக மருத்துவ மனைகளையும் மூடிவிட்டு செஞ்சிலுவைச்சங்க வைத்தியர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். விதுசன் தங்கியிருந்த மருத்துவமனையும் மூடப்பட்டது. மிக மோசமான காயக்காரர்களை மட்டும் செஞ்சிலுவைச்சங்கக் கப்பலில் எற்றிக்கொண்டு புறப்பட்ட வைத்தியர்களிடம்.. "டொக்ரர் எனக்கு கை இன்னும் நோகுதுஎன்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ "என்றழுதான் அவர்கள் போய்விட்டார்கள்...புது மாத்தளன் பகுதியில் இறுதிப் பேரவலத்தின் முதலநாள் 16 ந்திகதி அதிகாலை 4' மணியளவில் இருளைக்கிழித்துக்கொண்டு மீண்டும் ஒரு குண்டுமழை... குண்டுச்சத்தங்களையும் மீறிய மனித ஓலம். இலட்சக்கணக்கான மக்கள் சில கிலோ மீற்றர் தூரத்தற்குள் பொறிக்குள் அகப்பட்டவர்களாய் யார் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். குண்டுச்சத்தத்தில் நித்திரையால் திடுக்கிட்டு விழித்த விதுசனும் அருகில் படுத்திருந்த தன் தம்பியின் கையை பிடித்தபடி தந்தைய தேடினான்.காணவில்லை

.அப்பா ..அப்பா ..என்று அலறியபடி தந்தையை தேடி ஓடிய விதுசனையும் தம்பியையும் யாரே ஒரு பதுங்கு குழிக்குள் இழுத்துப் போட்டார்கள்...சிலமணி நேர குண்டுச்சத்தம் புழுதியும் புகையுமாய் ஓய்ந்து போனது. மெல்ல சூரியவெளிச்சம் எழுந்தபொழுது ஒல்லோரும் சரணடையும்படி தமிழில் ஒலிபெருக்கி சத்தம கேட்டது அதைத்தொடர்ந்து சிங்களத்தில் கதைக்கும்சத்தங்கள்..இராணுவத்தின் நீட்டிய துப்பாக்கிகள் முன்னால் உடலில் உயிர் ஒட்டியிருந்த அனைவரும் கைகளை துக்கியபடி அவர்கள் காட்டிய பகுதியால் போய்க்கொண்டிருந்தனர்.விதுசனும் தன் ஒற்றைக்கையை துக்கியபடி தம்பியுடன் போய்க்கொண்டிருந்தான்..போகும் வழியெங்கும் பின்னர் அடுத்தடுத்து மாற்றப்பட்ட முகாம்கள் எங்கும் தன் தந்தையின் முகத்தை தேடினான்..காணவில்லை.. இது இவனிற்கான மூன்றாவது இடி....ஆறுமாதகால தடுப்பு முகாம் வாழ்க்கை முடிந்து தம்பியுடன் வடமராட்சி மணல்காடு இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பப்பட்டான்..அங்கு சென்ற அவனிற்கு மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. வடமராட்சி பகுதியில்தான் அவனது அம்மம்மா.(தாயின் தாயார்) வசித்துவந்தார்.முன்னர் தாய் தந்தையுடன் அவர்கள் வீட்டிற்கு போய்வந்த ஞாபகத்தை வைத்துக்கொண்டு தம்பியையும் அழைத்தபடி அம்மம்மாவின் வீட்டைத்தேடிப்போனான்.தன் மகளை இழந்து தவிக்கும் அம்மம்மா தங்களைக்கண்டதும் ஆசையில் ஓடிவந்து கட்டியணைப்பாரென தவிக்கும் கனவுகளுடன் அவர்களது கதவைத் தட்டியவனிற்கு ஏமாற்றமே..

» "என்ரை மகளே இல்லாமல் போட்டுது அது பெத்த நீங்கள் எனக்கென்னத்துக்கு அதிலை ஒரு சனியனிற்கு கைவேறை இல்லை உங்களை வைச்சு சோறு போட என்னாலை ஏலாது போய் தொலையுங்கோ" என்று துரத்தி விட்டாள்.ஆசையாசையாய் தேடிப்போன அம்மம்மாவும் துரத்திவிட்ட கவலையில் நான்காவது இடியையும் தாங்கியபடி தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மீண்டும் மணற்காட்டு முகாமிற்கு திரும்பிய அண்ணனும் தம்பியும். அங்கு முகாமில் தங்கியிருக்கு இன்னொரு தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் குடிசையில் முடங்கிப்போனார்கள்..இப்படியான நேரத்தில்தான் கடந்த மாதம்.(பங்குனி.2010.) எமது நேசக்கர உறுப்பினரான கமலாதேவி அவர்கள் மணற்காட்டு முகாமிற்கு சென்றவேளை விதுசனையும் அவனது தம்பியின் நிலைமைகளை தெரிந்து கொண்டு அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்கி பாடசாலைக்கும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் விதுசனின் எதிர்காலத்திற்காக வங்கியில் ஒரு தொகை பணமும் வைப்பிலடப்பட்டது.வழைமைபோல இந்த மாதம் குழந்தைகளிற்கான உதவிகளை வழங்குவதற்காக பாடசாலை சென்ற நேசக்கரம் உறுப்பினர்களிற்கு விதுசன் ஒரு வாரமாக பாடசலை வரவில்லையென்று அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களாய் அவனைத் தேடத் தொடங்கினார்கள். அவன் தங்கியிருந் வயதான பெண்ணின் வீட்டிலும் அவன் இல்லை அவனது தம்பிக்கும் அவன் எங்கு போனான் எனத்தெரியவில்லை. அவனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் தொடர்ச்சியான தேடுதலில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டான்.அப்பொழுதுதான் அவன் மீது விழுந்த 5 வது இடி பற்றிய விபரம் தெரியவந்தது..

விதுசனிற்கு நேசக்கரம் கல்வி உதவியுடன் பணஉதவி செய்த விபரம் அறிந்துகொண்ட அவனது சித்தப்பா முறையான ஒருவர். ஒருநாள் பாடசாலையால் வீடு திரும்பிக்கொண்டிருந்த விதுசனை அழைத்துப்போய் தன்னுடன் தங்கி இனி படிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி நேசக்கரம் ஊடாக கிடைத்த பணத்தினை தன்னிடம் தரும்படியும் வேறு யாரிடமும் கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.ஆனால் நேசக்கரம் அவனிடமோ வேறு யாரிடமோ பணத்தினை கொடுத்திருக்கவில்லை அவனது பெயரில் வங்கி கணக்கு ஒன்றினை தொடங்கி அதில் நிதந்தர சேமிப்பாகவே அந்தப் பணத்தினை இட்டிருந்தது. அதே நேரம் விதுசன் 18 வயதான பின்னர்தான் அவன் அந்தப் பணத்தினை வங்கியிலிருந்து எடுக்கலாம்..இந்த விபரங்கள் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அவனது சித்தப்பா கோபத்தில் விதுசனை அடித்து உதைத்திருக்கிறார். அவரிடம் இருந்து தப்பியோடி வந்த விதுசன் மீண்டும் சித்தப்ப்பா தன்னை தேடிவரலாம் என்கிற பயத்தில் பாடசாலைக்கும் போகாமல் முன்னர் தங்கியிருந்த வீட்டிற்கும் போகாமல் வேறொரு தெரிந்தவர்கள் வீட்டில் ஒழிந்திருந்தவேளை நேசக்கரம் உறுப்பினர்கள் அவனை மீண்டும் மீட்டெடுத்துள்னர்.தற்சமயம் அவனும் அவனது தம்பியும் வவுனியாவில் உள்ள நேசக்கர இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் அங்கிருந்தபடியே கல்வியினை தொடர்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன..


விதுசனின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..நன்றி

உருக்கும் உண்மைகள் 2

11:52 AM, Posted by sathiri, One Comment

எங்கே குட்டியண்ணா

வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்தபடி சியாமளா தொங்கிக் கொண்டே செல்வாள்.தன்னுடைய குடும்பத்தில் உள்ள மற்றைய சகோதர சகோதரிகளைப்பற்றி அவளிற்கு கவலையே இல்லை. இறுதி யுத்தத்த மேகங்கள் வன்னி மண்ணை முடிக்கொண்டபொது வானில் குண்டு வீச்சு விமானங்களின் சத்தம் கேட்டபோதெல்லாம் குட்டியண்ணா முதலில் தேடுவது இவளைத்தான் இவளையும் தூக்கியள்ளிக்கொண்டு ஓடிப்போய் பங்கரிற்குள் (பதுங்குகுழி)தள்ளி பாதுகாத்துக்கொள்வான்.

ஆனால் இராணுவம் முன்னேறிவர இவர்களது வீடும் காணியும் பதுங்கிய பங்கரும் பறிபோக எங்கே போவதென்று தெரியாமல் போய்க்கொண்டிருந்த குடும்பத்துடனருடன் குட்டியண்ணாவின் கைகளை பிடித்தபடி போய்க்கொண்டிருந்தாள் சியாமளா.முற்றுகைக்குள் வீழ்ந்த முல்லைத்தீவு மண்ணில் முடங்கிப்போன மக்களில் இவர்களும் அடங்கினர்..இறுதி யுத்தம் குண்டுச்சத்தங்களும் அவலக்குரலும். மரண ஓலங்கள் மட்டுமே செவிகளில் கேட்கத்தொடங்கியிருந்தது. வீட்டிற்கொருவர் போராடபோகவேண்டும் என்றிருந்த நிலைமாறி வீட்டிலிருந்த அனைவருமே போராடவேண்டும் என்கிற நிலையையும் கடந்து வீடு வாசல் அத்தனையையும் இழந்து முற்றுகைக்குள் முடங்கிப்போன அனைவருமே வயது வித்தியாசமின்றி போராடவேண்டும் என்கிற இறுதிக்கட்டம்..அப்படியொரு பொழுதில் அவளது குட்டியண்ணாவையும் காணவில்லை ..போய்விட்டான்...குட்டியண்ணா எங்கே என்று சியாமளா சகோதரியிடம் கேட்டு அழுதாள்...வருவார் அழக்கூடாது கெதியாய் வருவார். இதைத்தான் அவர்களால் சொல்ல முடிந்தது..ஒரு நாள் இரண்டு நாட்களாகி. சிலவாரத்தில் முள்ளிவாய்க்காலும் வீ்ழ்ந்துபோக அத்தனை கொடிய கோர யுத்தம் எதவும் சியாமளாவை பாதிக்கவில்லைஅவளது கேள்வி தேவை எல்லாமே குட்டியண்ணாவைப்பற்றியதாகத்தான் இருந்தது. அவளின் நச்சரிப்பு தாங்கமுடியாமல்..குட்டியண்ணா வெளிநாடு போயிருக்கிறார்..எங்களுக்கு இருக்க வீடு பிள்ளைக்கு நல்ல உடுப்பு விரும்பின சாப்பாடு எல்லாம் வாக்கக்கூடியமாதிரி உழைச்சு நிறைய காசோடை திரும்பிவருவார்.அதுவரைக்கும் அழக்கூடாது என்றொரு பொய்யை சொல்லி சியாமளாவை தேற்றி வைத்திருக்கிறார்கள் அவளது சகோதரிகள்..

குட்டியண்ணா இன்று உயிருடன் இருக்கின்றானா??அல்லது ஏதோவொரு இரகசிய இராணுவத்தடுப்புமகாமில் வாடுகின்றானா என்பது எவரிற்கும் தெரியாது. சியாமளா சகோதரிகளுடன் மணல்காடு அகதி முகாமில் குட்டியண்ணா வெளிநாட்டிலிருந்து திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறாள். முகாமிற்கு தொலைபேசிமூலம் சியாமளாவுடன் கதைத்தபொழுது அவள் என்னிடம் கேட்டது மாமா நீங்கள் வெளிநாட்டிலை இருந்துதானே கதைக்கிறீங்கள் உங்களிற்கு குட்டியண்ணாவை தெரியுமா???என்பதுதான்.அப்பொது எனக்கு சியாமளாவின் கதை முழுதுமாகத்தெரியாததால் நானும் தட்டுத்தடுமாறி "பிள்ளை வெளிநாடு பெரிய இடம் இஞ்சை உங்கடை குட்டியண்ணாவை தேடுறது கஸ்ரம் ....கண்டு பிடிச்சால் உங்களோடை கதைக்க வைக்கிறேன்.என்று சொல்லி முடித்தேன்.பின்னர் அவளது சகோதரி முழுவிபரங்களும் சொன்னபொழுதுதான். சியாமளாவின் குட்டியண்ணா வெளிநாட்டில் எங்காவது கிடைக்கமாட்டானா என்கிறதொரு நப்பாசை எனக்குள் தோன்றியது..இப்படி பலநூறு சியாமளாக்கள் தங்கள் குட்டியண்ணாக்களின் வருகைக்காக எதிர்பார்த்து அந்த முகாம்களில் வாடிக்கிடக்கிறார்கள்..எங்களால் குட்டியண்ணாக்களாக மாறமுடியாது ஆனால் குட்டியண்ணா உயிருடன் இருந்தால் என்னென்ன தன் தங்கைக்கு செய்வாரோ அதையாவது எம்மால் செய்ய முடியுமல்லவா????????

சியாமளா என்கிற சிறுமியின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

உருக்கும் உண்மை கதைகள்..உறவு 1

10:33 AM, Posted by sathiri, 4 Comments


வணக்கம் உறவுகளே....
முன்னர் உண்மைசம்பவங்களை கதைகளாக்கியிருந்தேன் அது பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.அதே போல் மீண்டும் இங்கு நடந்து முடிந்த கோர யுத்தத்தினால் அவலப்படும் எமது உறவுகளின் இன்றைய நிலைகளை அவர்களுடன் தொலைபேசிஊடாக நேரடி உரையாடல் மூலம் சொன்னவற்றை அப்படியே கதையாக்குகின்றேன்.உங்கள் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் தொர்கிறேன்.நன்றி


வன்னிப்பெருநிலப்பரப்பில் தமிழீழ அரசு ஒன்று நடைமுறையிலிருந்த காலகட்டம். பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் குண்டுச்சத்தங்களும் ஓய்ந்து தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் தமிழீழ அரசின் நிருவாகம் என்கிற ஒரு கட்டமைப்பின் அடுத்த பரிமாணத்தில் புகுந்துவிட்டதொரு மகி்ழ்சியுடனும் வாழ்ந்த காலகட்டம்.அந்த மகிழ்ச்சியான காலகட்டத்தில் இளம்பருவத்தினனாக இருந்த புவிகரனிற்கும் ஒருத்தியின் மீது காதல் ஏற்பட்டது.வழைமைபோல காதல் என்றாலே எதிர்க்கிற எமது சமூகத்தின் எதிர்ப்பும் அவனிற்கு தேன்றவே காதலும் தமிழீழ காவல்துறையின் உதவியுடன் காதலித்தவளை கரம்பிடித்து புதுமணத்தம்பதிகளாய் கிளிநொச்சி நகர்பகுதியில் குடியேறினான்.அவர்களின் காதலின் அடையாளமாய் ஒரு பெண்குழந்தையும் பிறந்தது.அவன் செய்தது கூலிவேலைதான் ஆனாலும் குடும்பம் மகிழ்ச்சியாகவேயிருந்தது. தான் அதிகம் படிக்கவில்லை ஆனால் தன்மகளை பெடிய படிப்புகள் படிப்பித்து எதிகாலத்தில் தமிழர் நிருவாகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக்குவது என்கிற எதிர்காலக்கனவுகளுடன் அவனது வாழ்நாட்கள் உருண்டேடிகொண்டிருந்தகாலத்தில். இலங்கையில் மீண்டும் சிறிது சிறிதாக குண்டுச்சத்தங்கள் கேட்கத்தொடங்கியது.தமிழீழ நிருவாக எல்லைகள் சுருங்கத்தொடங்கிக்கொண்டிருந்தன.அதே நேரம் எல்லைகளிற்கு உள்ளேயும் ஆழஊடுருவும் படைகளால் கிளைமேர்தாக்குதல்களும் தொர்ந்துகொண்டிருந்தது.

ஆனாலும் …. அங்கு வாழ்ந்த மக்களைப்போல ஏதோ ஒரு நம்பிக்கையில் தனது அன்றாட வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.5ந்திகதி ஜப்பசி மாதம் 2008 ம் ஆண்டு அன்று வழைமைபேல தன்னுடைய மனைவி பிள்ளையிடம் விடைபெற்றுக்கொண்டு வேலைக்கு புறப்பட்டவன் கிளிநொச்சி உருத்திரபுரம் சாலையில் வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான் ஒரு மரத்தை தாண்டும்பொழுது அவனை ஒரு பயிரோ வாகனம் ஒன்றும் வேகமாகக் கடந்தது.டமால் என்றெரு பெரிய குண்டுச்சத்தம் அது மட்டும்தான் அவனிற்கு நினைவிருந்தது.கண்விழித்து பார்த்தபொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் அவனருகில் அழுதபடி அவனது மனைவி குந்தையும் நின்றிருந்தனர்.எழுந்திருக்க முயன்றான் முடியவில்லை உடலெல்லாம் ஒரே வலியாக இருந்தது.அவன் விழித்துவிட்டதை கவனித்த தாதியொருவர் அருகில் வந்து "அசையாமல் படுத்திருங்கோ கிளைமேர் அடியிலை உங்கடை இடக்கால் முறிஞ்சிட்டுது ஒப்பிறேசன் செய்திருக்கிறம் காலை அசைக்கவேண்டாம்" என்று ஆலோசனை கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள்..அப்பொழுதுதான் அவனிற்கு எல்லாம் நினைவிற்கு வந்தது.அடுத்தடுத்து பல சத்திர சிகிச்சைகள் நடந்தது.அவனது முழங்கால் மேசமாக பாதிக்கபட்டதால் அவனால் காலை மடிக்கமுடியாதென்பது பின்னர் தெரியவந்தது.

அவனது வருமானத்தை மட்டுமே நம்பியிருந் அவனது குடும்பமும் வறுமையில் வீழ்ந்தது.தன்னை பார்க்க வரும் மனைவி மகளிடம் " இன்னும் கொஞ்நாள் பொறுங்கோ நான் திரும்ப வந்ததும் நிலைமை சரியாயிடும் நான் என்ன பாடுபட்டாவது என்ரை பிள்ளையை படிப்பித்து பெரியாளாக்குவன் "என்று சொல்லிக்கொள்வான். நாளாக அவனது மனைவியும் வருவது குறைந்து போய் இறுதியில் வைத்தியசாலைப்பக்கம் வராமலேயே நிறுத்திவிட்டாள். அவள் எங்காவது வேலைக்கு போகத்தெடங்கியிருப்பாள் அதனால் நேரம் கிடைக்கமலிருக்கும் என அவனும் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான். மூன்றரை மாதங்களின் பின்னர் ஓரளவு குணமடைந்தவன் ஊன்று கோலின் உதவியுடன் நடக்கத்தொடங்கியிருந்தான். எப்பொழுது வீட்டிற்கு போகலாம் என்கிற அவனது நச்சரிப்பிற்கு ஒருநாள் வைத்தியரும் இனி போகலாம் அடிக்கடி வந்து காயத்திற்கு மருந்து கட்டவும் என்று சொன்னதுதான் தாமதம் அவன் தன்னுடைய கைத்தடியுடன் மனைவி மகளை பார்ப்பதற்காய் அவன் அத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆசைகளுடன் வீடு நோக்கி போனவனிற்கு வீட்டில் யாரும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தான்..அவர்கள் அங்கிருந்து போய் ஒரு மாதங்களாகிவிட்டது ஆனால் எங்கையென்று தெரியாது என்கிற பதில்தான் கிடைத்தது. தெரிந்தவர்கள் உறவினர்கள் என்கிற தேடல் தொடர்ந்தது..

ஒருவாறு அவள் இருக்குமிடத்தை அறிந்து அங்கு போய்விட்டான்..அங்கு போன பின்னர்தான் தெரிந்தது அவள் மனைவி அப்பொழுது இன்னொருத்தனிற்கு மனைவியாகிருந்தாள். அவர்களிற்குள் வாக்குவாதங்கள் நடந்தது பிள்ளையை தன்னிடம் தருமாறு சண்டைபிடித்தான். இறுதியாய் பிள்ளையை பலவந்தமாக தூக்கிக்கொண்டு கைத்தடியை ஊன்றியபடி நடக்க முயன்றவன் சாரம் அவிழ்ந்து போக சாரத்தையும் பிடிக்கமுயன்று தட்டுத்தடுமாறி நிலத்தில் விழுந்துபோனான். வேகமாய் வந்தவள் பிள்ளையை பறித்து விட்டு "உனக்கு காலும் ஏலாது இனி நீ பிச்சைதான் எடுத்து பிழைக்கலாம் நீ எப்பிடி பிள்ளையை வளக்கப்போறாய் எங்கையாவது போய் செத்து தொலைஞ்சு போ..."என்ற அவளது வார்த்தைகள் அவனிற்கு இன்னொரு கிளைமோர் வெடித்ததைப்போல இருந்தது..பிள்ளையையும் இழந்து அவனது எதிர்காலக்கனவுகளும் தமிழர் தாயகத்தின் எல்லைகள் போலவே சுருங்கிப்போய் சூனியமாய் நின்றது.

புவிகரனின் இன்றைய நிலையை அவனது குரலிலேயே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9

12:17 PM, Posted by sathiri, 3 Comments

ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9
- இரா.துரைரத்தினம் -
R.Thurairatnam
thurair@hotmail.com

முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி.
தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான்.
தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது.
ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது.
ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக எதிர்வரும் ஏப்ரல் 8ம்திகதி அமைய இருக்கின்றது.
இதை நான் சொல்லும் போது இவர் என்ன மகிந்தவின் பக்கம் சென்றுவிட்டாரா மகிந்தாவுக்காக அல்லது டக்ளஸ், கருணாவுக்காக பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?என்று நீங்கள் யோசிக்கலாம்.
வடக்கு கிழக்கில் தேர்தல் அரசியல் களநிலவரங்களை பார்க்கும் போது எமது அரசியல் பலத்தையும் மகிந்தவின் கைகளில் கொடுத்துவிடப்போகிறோம் என்று அச்சமே எழுந்திருக்கிறது.
சிங்கள தேசம் வகுத்த சூழ்ச்சியினால் வடக்கு கிழக்கில் இன்று ஒன்றுமையாக இருந்து செயற்பட வேண்டிய தமிழர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்வதும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமது பலவீனம் வெளிப்பட்ட நிலையில் அச்சமடைந்திருந்த டக்ளஸ், கருணா போன்றவர்கள் இன்று காலுக்கு மேல் காலைப்போட்டுக்கொண்டு நாம் படுகின்ற பாட்டைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்காக நமது தமிழர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
அது எப்படி சொல்லமுடியும். வடக்கு கிழக்கில் தமிழர்கள்தான் வெற்றிபெறப்போகிறார்கள். உங்களுக்கு என்ன பையித்திமா பிடித்து விட்டது என்று என்னை கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.
ஆனால் யதார்த்தம் எங்கள் விருப்பத்திற்கு மாறாகத்தான் இருக்கிறது.

ஓவ்வொரு மாவட்டமாக இருக்கும் களநிலவரங்களையும் வாக்குகள் எவ்வாறு பிரிக்கப்பட போகிறன என்பது பற்றியும் முதலில் பார்ப்போம். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு பின்னர் தமிழரின் அரசியல் தலைமை யாரிடம் இருக்கப்போகிறது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
இம்முறை தமிழர் பிரதேசங்களில் வாக்குகள் பிரிக்கப்பட்டு முன்னணியில் இருக்கும் தமிழ் கட்சிகளின் வாக்குவங்கிகளை குறைப்பதற்காகவும் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காகவும் மகிந்த ராசபக்ச அரசு மிகவும் திட்டமிட்டு செயற்பட்டிருக்கிறது.
இலங்கையிலேயே ஆகக்கூடிய கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடும் மாவட்டங்களில் அம்பாறை முதலாம் இடத்திலும் மட்டக்களப்பு இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

முதலில் யாழ்ப்பாண மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்( கிளிநொச்சி தொகுதி உட்பட) வாக்காளர்களாக தேர்தல் திணைக்களத்தால் 7இலட்சத்து 21ஆயிரத்து 359பேரின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. ஆனால் புள்ளிவிபரத்திணைக்களம் இறுதியாக 2008ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 18வயதிற்கு மேற்பட்டவர்கள் 3இலட்சத்து 70ஆயிரத்து 620பேரே இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், யாழ்மாவட்டத்தை விட்டு பல ஆண்டுகளுக்கு முதல் வெளியேறியவர்கள் உட்பட அங்கு இல்லாத பலரின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படாததன் காரணமாகவே 7இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதாக காட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கிருந்த வாக்காளர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் 7இலட்சம் வாக்காளர்கள் என்ற கணக்கை வைத்துக்கொண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்தார்கள் என்று கூட பிரசாரம் செய்தனர்.
2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்திலிருந்த 95வீதமான மக்கள் வாக்களித்தனர்.
தற்போது கிளிநொச்சி தொகுதி மற்றும் பருத்தித்துறை தொகுதியின் பெரும்பகுதியான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப்;பிரிவில் உள்ள மக்களில் பலர் இறுதிக்கட்ட போரின் போது இறந்துள்ளனர். பலர் யாழ் மாவட்டத்திற்கு வெளியில் வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். முகாம்களில் இருக்கும் பலர் இடம்பெயர்ந்த வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வில்லை. இதன் காரணமாக நடைபெறப்போகும் தேர்தலில் 2இலட்சத்து 50ஆயிரத்திற்கு குறைவானவர்களே வாக்களிக்கப்போகிறார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 27 அணிகள் போட்டியிடுகின்றன. 324 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்து பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் கட்சிகள் வரிசையில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, பிள்ளையான் அணி ஆகிய கட்சிகளும், சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் டக்ளஸ் போன்றோரும், ஐக்கிய தேசியக்கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவி உட்பட சிலரும், இடதுசாரி முன்னணியில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரும், போட்டியிடுகின்றனர். மகிந்த ராசபக்சவின் ஆதரவு பெற்ற மக்கள் கட்சியினால் நிறுத்தப்பட்டிருக்கும் சுயேச்சைக்குழுவுக்கு செங்கைஆழியான் க.குணராசாவும், சிறுபான்மை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழுவுக்கு எழுத்தாளர் தெணியானும் தலைமை தாங்குகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 44154 வாக்குகள் யாழ்.மாவட்டத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இம்முறை இந்த வாக்கு எண்ணிக்கை அக்கட்சிக்கு அதிகரிக்குமே ஒழிய அவை வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்பு இல்லை. வேட்பாளர்களின் தனிப்பட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் நிவாரணங்களை நம்பியிருக்கும் அகதி முகாம் மக்கள் அரசு தரப்பினருக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றமை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான வாக்கு இப்பொதுத்தேர்தலில் 50ஆயிரமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகுதியாக இருக்கும் ஒரு இலட்சத்து 60ஆயிரம் வாக்குகளைத்தான் ஏனைய 26அணிகளும் பிரிக்கப்போகின்றன.

சுயேச்சைக்குழுக்கள் ஆசனங்கள் எதையும் எடுக்கப்போவதில்லையாயினும் அவர்களும் கணிசமான வாக்குகளை பிரித்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெணியான் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழு சுமார் 10ஆயிரம் வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக சில சுயேச்சைக்குழுக்களும் கணிசமான வாக்குகளை பிரிக்கலாம். இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடும் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.
திருமதி மகேஸ்வரன் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி கூட சுமார் 15ஆயிரம் வாக்குகளை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.( 2000, 2001ஆண்டு தேர்தல்களில் மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
வெற்றிபெற முடியாதவர்கள் என கணிக்கப்படும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் என இந்த 24 அணிகளும் மொத்தம் 50ஆயிரம் வாக்குகளைப்பெறுவார்கள் என்பது திண்ணம்.
எனவே மிகுதி 85ஆயிரம் அல்லது 90ஆயிரம் வாக்குகளைத்தான் தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் தங்களுக்குள் பிரிக்கப்போகிறார்கள்.
இதிலிருந்து தமிழ் கட்சிகள் தங்களுக்குள் பிரிந்து நிற்பதால் யாழ்ப்பாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கு எவ்வாறு வெற்றிவாய்ப்பை தேடிக்கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு
,
வவுனியா, மன்னார் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னிமாவட்டத்தை பார்ப்போம். வடக்கு கிழக்கில் வன்னிமாவட்டம் மட்டுமே தமிழர் தரப்பிற்கு ஓரளவு நம்பிக்கை தரக்கூடியதாக இருந்தாலும் தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதாலும் தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதாலும் தமிழர்களுக்கு வர வேண்டிய இரு ஆசனங்கள் முஸ்லீம்கள் சிங்களவர்கள் கைகளுக்கு போகப்போகிறது என்பதே உண்மை.
வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 16 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 28அணிகளில் 253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்மாவட்ட வாக்காளர்களின் இனவிகிதாசார அடிப்படையில் 5 தமிழர்களும் ஒரு முஸ்லீமும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதால் அதிலிருந்து தெரிவு செய்யப்படப்போவர்கள் முஸ்லீம்களும் சிங்களவர்களுமாகத்தான் இருப்பார்கள்.
வன்னிமாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2இலட்சத்து 66ஆயிரத்து 976ஆக இருந்த போதிலும் இவர்களில் கணிசமானவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தின் போது இறந்துவிட்டார்கள். மிகுதிப்பேர் வன்னி மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். இந்நிலையில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை. இது தவிர வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 11ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சுமார் 7ஆயிரம் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் வன்னி மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறதே ஒழிய அதிகரிக்கவில்லை. இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு பிரதேசத்திலும் சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (சிலோன் பாம் உட்பட பல பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவது பற்றி பின்னர் தனியாக பார்ப்போம்)

வன்னி மாவட்டத்தில் 28அணிகள் போட்டியிட்டாலும் தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி இணைந்த ஐக்கிய தேசியக்கட்சி, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில்தான் கடுமையான போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.
இம்முறை கணிசமான தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்ற தமிழர்களும், அப்துல் ரிசாத் பதியுதீன், மக்ருப் போன்ற முஸ்லீம் வேட்பாளர்களும், பிரேமரத்ன சுமதிபால, சமிந்த உபுல் பாலசூரிய ஆகிய சிங்களவர்களும் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்றவர்கள் கணிசமான வாக்குகளைப்பெற்று அக்கட்சிக்கு கொடுத்தாலும் அவர்கள் அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படப்போவதில்லை. ஏனெனில் முஸ்லீம்கள் அனைவரும் ஒருமித்து தமது விருப்பு வாக்குகளை ரிச்சாட் பதியுதீன், மக்ருப் போன்றவர்களுக்கே அளிப்பார்கள். முஸ்லீம் வேட்பாளர்களே 30ஆயிரத்திற்கு மேற்பட்ட விரும்பு வாக்குகளை பெறும் சந்தர்ப்பமே காணப்படுகிறது. இவ்வளவு விருப்பு வாக்கை கனகரத்தினமோ கிசோரோ, பெற முடியாது. எனவே தமிழ் வேட்பாளர்கள் வாக்குகளை எடுத்து முஸ்லீம் சிங்கள வேட்பாளர்களைத்தான் வெல்ல வைக்க முடியும். அந்தக் காரியத்தை இந்த இருவரும் கச்சிதமாகச் செய்துமுடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இம்முறை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஒரு ஆசனத்தையும் பெறலாம் என நம்ப்படுகிறது. சில வேளைகளில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும் ஒரு ஆசனத்தை பெறலாம்.

திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சைக்குழுக்களுமாக 31அணிகளில் 217வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2,41,133 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களே பெரும் சர்ச்சையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த பொதுத்தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே இரு பிரதிநிதிகளை பெற முடிந்தது. இம்மாவட்டத்தில் இரு தமிழ் பிரதிநிதிகளும் முஸ்லீம்கள் சிங்களவர்கள் தரப்பிலிருந்து தலா ஒவ்வொருவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழ் வாக்குகள் பிரிக்கப்பட்டால் ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்பட முடியாத நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கிறது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, உட்பட சில தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, சிவாஜிலிங்கம் அணி போட்டியிடும் இடதுசாரி முன்னணி உட்பட சிங்கள கட்சிகளும் தமிழ் வாக்குகளைப்பிரிப்பதால் இம்முறை திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் சிறிலங்காவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

2004ம் ஆண்டு தேர்தலின் போது தமிழரசுக் கட்சி 68995 வாக்குகளினைப் பெற்றது. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 65187 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 31053 வாக்குகளினையும் ஐக்கிய தேசியக் கட்சி 15693 வாக்குகளினையும் பெற்றது.
கடந்த முறை தமிழரசுக்கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கும் இடையில் 3808 வாக்கு வித்தியாசமே காணப்பட்டது.
இந்த முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு சாதகமான விடயங்கள் சிலவும் காணப்படுகின்றன.
தற்போது சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஷ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிடுகின்றன. திருகோணமலையில் முஸ்லீம்களின் வாக்குகள் பிரிந்து போகாது இருப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சிங்களவர்களையும் தமிழர்களையும் இணைத்திருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக இருந்திருந்த மக்ருப் அவர்களை இம்முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கிறது. கடந்த முறை மக்ரூப் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக 4ஆயிரம் வாக்குகளைப்பெற்றிருந்தார். இது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ் கட்சியின் வாக்கு பலத்தை அதிகரிக்கவே செய்யும்.
அதுமட்டுமன்றி 2004ம் ஆண்டில் 74869 ஆக காணப்பட்ட மூதூர்தொகுதி முஸ்லீம் வாக்காளர்களின் தொகை 2010ம் ஆண்டில் 85401 ஆக அதிகரித்துள்ளது. 5ஆண்டுகளில் 10542 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனால் இம்முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 70ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக்கூடிய சாதகமான நிலையும் அக்கட்;சியே ஆகக்கூடிய வாக்குகளைப்பெறக்கூடிய கட்சியாகவும் காணப்படுகிறது.
அதே போன்று 2004ம் ஆண்டில் 63161 ஆக காணப்பட்ட சேருவில தொகுதியின் பதியப்பட்ட சிங்கள வாக்காளர் எண்ணிக்கை 2010இல் 69047 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளில் அத்தொகுதியில் 5886 பேர் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்காளர் தொகை வீழ்ச்சியடைந்திருக்கிறது.

முஸ்லீம் சிங்கள வாக்காளர் அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடும் போது கடந்த 5 வருடங்களில் 12ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் அதிகரித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக தமிழ் வாக்காளர் தொகை வீழ்ச்சியடைந்திருக்கிறது.
முஸ்லீம் சிங்கள வாக்காளர்கள் தொகை அதிகரித்த அதேவேளை அவர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருக்க கடந்த முறை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போட்டியிட்டு பெற்ற 68995 வாக்குகளைத்தான் அங்கு போட்டியிடும் 10க்கு மேற்பட்ட தமிழ் கட்சிகளும் 15க்கு மேற்பட்ட சுயேச்சைக்குழுக்களும் இம்முறை பிரிக்கப்போகின்றன.
தமிழரசுக்கட்சியைத்தவிர அங்கு போட்டியிடும் ஏனைய தமிழ் கட்சிகள் 10ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறப்போவதில்லை. தாங்கள் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என்று அங்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி சிறிதரன், பிள்ளையான் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். திருகோணமலையைப்பொறுத்தவரை தமிழ் கட்சிகளில் வெற்றிபெறக்கூடிய வாக்கு வங்கியைக்கொண்ட ஒரே ஒரு தமிழ்கட்சி தமிழரசுக்கட்சிதான். பல தமிழ் கட்சிகள் அங்கு போட்டியிட்டால் தமிழர் தரப்பில் ஒரு பிரதிநிதியும் கிடைக்கப்போவதில்லை என்றும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் சம்பந்தனை தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வெறியில் இவர்கள் அனைவரும் திருகோணமலையை குதறிவருகின்றார்கள்.
இம்முறை தமிழரசுக்கட்சி சார்பில் ஒரு பிரதிநிதியே தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அதுவும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்தான் அந்த ஒரு பிரதிநிதித்துவத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியும். ஒற்றுமையின்றி செயற்பட்டால் அது கூட கிடைக்காது 2000ஆம் ஆண்டில் ஏற்பட்டில் கிடைத்த பாதகமான முடிவைத்தான் தமிழ் மக்கள் சந்திக்க நேரிடும். 2000ஆம் ஆண்டில் மூன்று தமிழ் கட்சிகள் போட்டியிட்டே அந்த முடிவுவை சந்திக்க நேரிட்டது. இம்முறை 10க்கு மேற்பட்ட தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தாவது பாடங்களை கற்று தங்களின் சுயநலங்களை விட்டு திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் தமிழ் சமூகத்திடம் இல்லையே.

மட்டக்களப்பு மாவட்டம்
கல்குடா மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகளும் 28 சுயேச்சைக்குழுக்களுமாக மொத்தம் 45 அணிகளில் 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கையில் அதிக கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடும் இரண்டாவது மாவட்டம் மட்டக்களப்பாகும். அத்தனை சுயேச்சைக்குழுக்களும் அரசியல் கட்சிகளும் தமிழர்களின் வாக்குகளை பிரித்தெடுப்பதையே குறியாகக்கொண்டு களமிறக்கப்பட்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 3இலட்சத்து 33ஆயிரத்து 644 ஆகும். இம்மாவட்டத்தில் தமிழர்கள் 74வீதமாகவும் முஸ்லீம்கள் 25வீதமாகவும் காணப்படுகின்றனர். வாக்காளர் இனவிகிதாசார அடிப்படையில் தமிழர் தரப்பில் 4பேரும் முஸ்லீம்கள் தரப்பில் ஒரு முஸ்லீம் பிரதிநிதியுமே தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில் எதிர்மறையாக முஸ்லீம்களே அதிக பிரதிநிதிகளை பெறும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, புளொட், ஈழவர் ஜனநாயகக்கட்சி சிவாஜிலிங்கம் அணியினரின் இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் 28 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியகட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.
சுயேச்சைக்குழுக்கள், அரசியல் கட்சிகள் என 26தமிழ் அணிகள் போட்டியிட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை பெறக்கூடிய வாக்கு வங்கியை தமிழரசுக்கட்சி மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் ஏனைய தமிழ் கட்சிகள் ஆசனங்களைப்பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப்பெறக்கூடிய சாத்தியங்களே காணப்படுகின்றன. தமிழ் மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு நிட்சயம் ஆபத்து ஏற்படத்தான் போகிறது.
தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் லட்சுமி சுந்தரம், பிள்ளையானின் கட்சியில் போட்டியிடும் செல்வேந்திரன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப்பெற்றாலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. அவர்கள் வாக்குகளைப்பிரிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற சிங்கள கட்சிகளின் வெற்றிவாய்ப்பிற்கே வழிவகுக்க போகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 3,33,644 ஆகும். இம்மாவட்டத்தில் கடந்த 5வருட காலத்தில் 30ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 25 வீதமான முஸ்லீம்கள் 15ஆயிரம் வாக்காளர்களால் அதிகரிக்க 74வீதமான தமிழர்கள் 14ஆயிரம் வாக்களார்கள் மட்டுமே அதிகரித்திருக்கிறார்கள். இதனால் 75ஆயிரமாக இருந்த முஸ்லீம் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 90ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் வேட்பாளர்கள் 5பேரும் முஸ்லீம் வேட்பாளர்கள் 3பேரும் போட்டியிடுகின்றனர். அக்கட்சியின் முஸ்லீம் வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிஸ்புல்லா, அமிர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகியோரும் தமிழ் வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி, கணேசமூர்த்தி மற்றும் சத்தியவரதன், குலசேகரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த ஐந்து தமிழ் வாக்காளர்களும் தலா 5ஆயிரத்திற்கும் 10ஆயிரத்திற்கும் இடைப்பட்ட வாக்குகளை அக்கட்சிக்கு எடுத்துக்கொடுத்தாலும் விருப்பு வாக்கு அடிப்படையில் ஒருபோதுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தப்பித்தவறி மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டால் அவர்கள் மூவரும் முஸ்லீம்களாகவே இருப்பார்கள். அண்மையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் முஸ்லீம் மக்களுக்கு ஒரு அறிவித்தலை விடுத்திருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும் முஸ்லீம்கள் அனைவரும் ஹிஸ்புல்லா, அமிர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகிய மூவருக்கும் தமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும் என கேட்டிருந்தது. இதன் படி எப்படியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு குறைந்தது 40ஆயிரத்திற்கு குறையாத வாக்குகள் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த மூவரும் 40ஆயிரம் விருப்பு வாக்குகளைப்பெறுவது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் அக்கட்சியில் போட்டியிடும் தமிழர்களால் 15ஆயிரத்திற்கு மேல் விருப்பு வாக்குகளைப்பெற முடியாது. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் தமிழர்களால் அக்கட்சியில் உள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாக்குகளை சேகரித்து கொடுக்க முடியுமே ஒழிய கணேசமூர்த்தியாலோ அல்லது தங்கேஸ்வரியாலோ நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியாது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும் தமிழர்கள் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பறித்து முஸ்லீம்களுக்கு வழங்கப்படுவதற்காக பயன்படப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் முஸ்லீம்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கும் செல்ல வேண்டும். அதை விடுத்து தமிழர்களின் வாக்குகளில் முஸ்லீம்களோ முஸ்லீம்களின் வாக்குகளில் தமிழர்களோ பிரதிநிதியாக வருவது அந்த சமூகங்களுக்கிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும். முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் பகைமை உணர்வை வளர்த்துவரும் சிறிலங்கா அரசு இத்தேர்தல் மூலமும் இரு சமூகங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கவே வழிவகுத்திருக்கிறது.
பல சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவதாலும் தமிழ் கட்சிகள் வாக்குகளைப்பிரிப்பதாலும் தமிழரசுக்கட்சி கடந்த முறையைப்போன்ற ஒருவெற்றியை பெற முடியாவிட்டாலும் மூன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளையாவது பெறுவதாக இருந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டால் மட்டுமே அந்த இலக்குகளையாவது அடைய முடியும்.
தமிழ் மக்கள் இந்த ஆபத்துக்களை உணராது உதிரி தமிழ் கட்சிகளுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற சிங்கள கட்சிகளுக்கோ வாக்களித்தால் 4முஸ்லீம் பிரதிநிதிகளும் ஒரு தமிழ் பிரதிநிதியுமே தெரிவு செய்யப்படும் அபாயம் ஏற்பட்டு விடும். இதை உணர்ந்து மட்டக்களப்பு தமிழ் மக்கள் செயற்படாவிட்டால் வரலாற்று தவறு ஒன்றை இழைத்துவிட்டார்கள் என்ற பழி அவர்கள் தலையில் சுமத்தப்பட்டு விடும். இத்தவறை மட்டக்களப்பு தமிழ் மக்கள் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அம்பாறை மாவட்டம்
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த மாவட்டமாக அம்பாறை மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 18 அரசியல் கட்சிகளும் 48 சுயேச்சைக்குழுக்களுமாக 66 அணிகளின் சார்பில் 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கென 4அடி நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாகவும் இது வாக்காளர்களுக்கு மட்டுமல்ல வாக்கு எண்ணும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பெரும் சிரமங்களையே ஏற்படுத்தப்போவதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதிலும் முக்கியமாக தற்போது 18வீதமாக குறைந்திருக்கும் தமிழ் வாக்குகளை சிதைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தை பறிப்பதற்காக மகிந்த அரசு செய்த கைங்கரியம் என்றே அம்பாறை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்திலும் தமிழ் மக்களின் வாக்குகளைப்பிரிப்பதற்காக தமிழர் விடுதலைக்கூட்டணி, சிவாஜிலிங்கம் அணி, பிள்ளையான் அணி, ஆசனங்களைப்பெறக்கூடிய வாக்கு வங்கி இல்லாத பல தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 4இலட்சத்து 20ஆயிரத்து 835 வாக்காளர்களில் சுமார் 75ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் பட்சத்திலேயே ஆகக் கூடியது ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியும். பல தமிழ் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவது தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும். அம்பாறை மாவட்டத்தில் கிடைக்க கூடிய ஒரு ஆசனத்தை கூட தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற அச்சம் தற்பொழுது தமிழ் மக்களுக்கு எழுந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள தமிழரசுக்கட்சி இம்முறை ஒரு ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் அம்பாறை மாவட்ட மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இந்த ஐந்து மாவட்டங்களில் இருக்கும் நிலையை இப்பொழுது பார்த்திருக்கிறோம்.
இதன் படி அம்பாறை மாவட்டத்தில் மகிந்த ராசபக்சவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும் என்பது உறுதி.
திருகோணமலையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியே அதிக வாக்குகளைப்பெற்று போனஸ் ஆசனத்துடன் இரு ஆசனங்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு வன்னி யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கூட தமிழர்கள் பிரிந்து நின்று மோதிக்கொள்வது மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கே வழிவகுக்கும்.
அவ்வாறு வடகிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால் தமிழருக்கு கிடைக்கும் தோல்வியும் வீழ்ச்சியும் சாதாரணமானதல்ல.
மே 19ல் எத்தகையை வெற்றியை சிங்கள தேசம் பெற்றுக்கொண்டதோ அதற்கு சமமான ஒரு வெற்றி கிடைத்துவிட்டதாக ஏப்ரல் 9ஆம் திகதி மகிந்த தரப்பு எக்காளமிடப்போகிறது
தமிழர்களின் ஆயுதப்பலத்தை மட்டுமல்ல அரசியல் பலத்தை கூட வீழ்த்தி விட்டதாகவும் தமிழர் தலைமை தனது கைகளுக்கு வந்துவிட்டதாகவும் அவர்கள் ஆர்ப்பரிக்கத்தான் போகிறார்கள்.
தமிழ் மக்களுக்கு இப்பொழுது இருக்கின்ற ஒரே பலம் வடகிழக்கில் உள்ள அரசியல் தலைமை ஒன்றுதான்.
அந்த அரசியல் தலைமையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களே ஏப்ரல் 9ஆம் திகதி உங்கள் முன் இரு தெரிவுகள் தான் இருக்கப்போகிறது.
ஓன்று தமிழரின் அரசியல் தலைமையை அழித்து விட்டோம் என்ற மகிந்தவின் வெற்றிக்களிப்பில் பங்குகொள்வது
இரண்டு 2009ம் ஆண்டு மே 19க்கு பின் விடைதெரியாது தேம்பி...திகைத்து.....அழுது.....விழுந்தது போல மீண்டும் எழ முடியாத பாதாளத்தில் நின்று அழுவதுதான்.
யோசியுங்கள்....எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று.

உறவுகளிடம் கை நீட்டுகிறான்

10:56 AM, Posted by sathiri, No Comment


யுத்தத்தில் ஏற்கனவே தன்னடைய தாயாரையும் தந்தையையும் இழந்து இறுதி யுத்தத்தின் போது எறிகணையில் தன்னுடைய ஒரு கரத்தையும் இழந்து உடலில் இன்னனும் செல்துண்டுகளை தாங்கியபடி மருத்துவ வசதிகள் இன்றி தன்னுடை பத்துவயது சகோதரனுடன் முகாமில் தங்கியிருக்கும் இந்தச் சிறுவனின் பெயர் விதுசன் வயது பதின் நான்கு. அவனை அவனது சொந்தஉறவான அம்மம்மாவும் ஏற்காததையடுத்து தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் பராமரிப்பில் வளர்ந்துவரும் இவன் தனக்கு கல்வி கற்க உதவுங்கள் என்று புலம்பெயர் உறவுகளிடம் கை நீட்டுகிறான்..கரம் கொடுங்கள்..இங்கு அவனது வேண்டு கோளை நேரடியாக கேட்கலாம்.
http://nesakkaram.org/

சம்பந்தர் துரோகியா?

2:55 PM, Posted by sathiri, No Comment

சம்பந்தர் துரோகியா?

நிராஜ் டேவிட்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது.

இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்த தகுதியானதா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்று ஈழத் தமிழர்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகளா?

இதுபற்றித்தான் இன்று நாம் விரிவாக ஆராய இருக்கின்றோம்.

ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி த.தே.கூட்டமைப்பிற்குக் கிடையாது என்று புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அடித்துக் கூறுகின்றார்கள். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் உரை நிகழ்த்திய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரிவினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காண்பிக்கும் சிலர், த.தே.கூட்டமைப்பு ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து வெளிவரும் இணையத் தளங்கள், பத்திரிகைகள் சம்பந்தன் அவர்களைத் துரோகி என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தீண்டத்தகாத ஒரு அமைப்பு என்றும் குற்றம் சுமத்தி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

த.தே.கூ. தாம் தனி நாடு கோரவில்லை என்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தது சரியா?

இது தனிநாடு கோரி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட போராளிகள், பொதுமக்களுக்கு த.தே.கூ. இளைக்கின்ற துரோகம் இல்லையா? த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி என்று நாம் கூறுவதில் என்ன தவறு?

இன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் தேசியவாதிகள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.

ஒருவன் துரோகியா இல்லையா என்கின்ற முடிவினை எடுப்பதற்கு முன்னர், அவன் வாழுகின்ற சுழ்நிலையையும், அவனைப் பற்றிய உண்மையையும் நாம் புரிந்துகொண்டு அதன் பின்னரே நாம் அந்த முடிவினை எடுக்கவேண்டும். உணர்சிவசப்பட்டு, ஒரு முடிவினை எடுத்துவிட்டு ஒவ்வொருவரையும் துரோகியாக நாம் தீர்த்து, தீர்த்துத்தான், எமது விடுதலைப்பாதையில் துரோகிகளின் முகாம்களுக்கு பலரை நாம் அனுப்புகின்ற கைகங்காரியங்களை வெற்றிகரமாகச் செய்துவிட்டிருக்கின்றோம்.

முதலாவது, இலங்கை மண்ணின், சிறிலங்கா பேரினவாதத்தின் கொடுரமாக இரும்புக்கரங்களுக்கு நடுவில் நின்று, இன்றைக்கு யாருமே தமிழீழம் தனி நாடு என்று இலகுவாகக் குறிவிட முடியாது.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்கின்ற- உலகிலேயே மிகவும் கொடுரமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற சிறிலங்காவில், வெள்ளைவான் கடத்தல்கள், படுகொலைகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்ற அந்த மண்ணில், நீதிக்குப் புறம்மான ஆட்கடத்தல்கள், சட்டமே மேற்கொள்ளுகின்ற பயங்கரவாதங்கள் பரவலாகவே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அந்த சேத்தில்- நின்றுகொண்டு, தமிழீழம்தான் எங்கள் ஒரே முடிவு என்று ஒரு தலைவன் கூறினால், அவரனது உயிருக்கு அடுத்த கனம் என்ன நடக்கும் என்று யாருமே உத்தரவாதம் கொடுக்க முடியாது.

நாம் இங்கு புலம்பெயர்ந்த மண்ணில் நின்றுகொண்டு எதுவும் பேசலாம். வீரம் கதைக்கலாம் ஆனால் சிறிலங்கா போன்ற ஒரு இரக்கமற்ற தேசத்தில் இது முடியாது.

இல்லை, அது முடியும் என்று கூறுபவர்கள் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் அல்லது தமிழீழம் என்று எழுதப்பட்டு டீசேர்டுடன் ஒருதடவை சிறிலங்காவிற்கு சென்று பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இலங்கைக்கு உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்குக் கூட, ’வெள்ளைப் புலி’ முத்திரைகளைக் குத்துவதற்குத் தயங்காத ஒரு சர்வாதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தேசம்தான் சிறிலங்கா.

ஒரு தேர்தலில் போட்டியிட்டு 41 இட்டத்திற்கம் அதிகமான வாக்குகளைப் பெற்ற எதிர்கட்சி வேட்பாளரையே பிறடியில் அடித்து, முகத்தில் குத்தி தெருவில் இழுதஇதுச் செல்லுகின்ற அராஜகம் இடம்பெறுகின்ற ஒரு தேசம்தான் சிறிலங்கா.

அந்தத் தேசத்தின் தலைநகரில் நின்றுகொண்டு எங்களுக்குத் தனிநாடுதான் தேவை, நாங்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று த.தே.கூட்டமைப்பால் இலகுவாகக் கூறிவிடமுடியாது.

„இல்லை அது முடியும்“ என்று கூறுபவர்கள், தயவுசெய்து அங்கு சென்று அதனைச் செய்யுங்கள். உங்களை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையாக நாங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் பின் அணிதிரள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த இடத்தில் சில புலம்பெயர் ஊடகங்கள் முன்வைக்கின்ற மற்றொரு குற்றச்சாட்டுப்பற்றிப் பார்பது அவசியம்.

„தமிழீழம் கேட்கத் துனிவில்லாவிட்டால், பின்னர் எதற்காக த.தே.கூட்டமைப்பினர் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்? – என்று சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.


இந்தக் கேள்விக்கான பதிலை நாம் பார்பதானால், முதலில் இலங்கையின் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் பற்றி ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

இலங்கையில் தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கை மிகவும் உற்றாகமாக முன்வைக்கப்ட 80களின் ஆரம்பத்தில், தமிழீழத்தை சட்டரீதியாகத் தடைசெய்யு நோக்கத்தில் ஜே.ஆர் அரசு, ஒரு முக்கிய திருத்தச் சட்டத்தை சிறிலங்காவின் அரசியல் யாப்பில் இணைத்துக்கொண்டது.

இலங்கையின் அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச்சட்டம் 1983ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைமுறைக்கு வந்தது.

இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்பது, இலங்கையின் ஒருமைப்பாட்டடை வலியுறுத்தும் ஒரு முக்கியமான சட்டம்.

இந்த ஆறாவது திருத்தச் சட்டம் என்ன கூறுகின்றதென்றால், இலங்கையில் யாருமே பிரிவினை கோரமுடியாது. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக யாருமே கோரிக்கை முன்வைக்க முடியாது. அப்படிக் கோரிக்கை முன்வைத்தால், அது சட்ட விரோதமானது என்று இந்த இலங்கையின் ஆறாவது திருத்தச் சட்டம் கூறுகின்றது.

இதை இன்னும் தெளிவாகக் கூவதானால் இலங்கையில் யாருமே தனிநாடு கோரமுடியாது. அப்படிக் கோரினால் சட்ட ரீதியாக அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களைத் தண்டிக்க முடியும்.

இந்த ஆறாவது திருத்தச் சட்டத்திற்கு இன்னும் ஒரு விசேஷமும் இருக்கின்றது. இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை மீறமாட்டோம்- அதாவது தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை எழுத்து மூலம் வழங்கித்தான் எவரும் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்லமுடியும்.

நாடாளுமன்றம் செல்ல மாத்திரம் அல்ல, பிரிவினையை மறுதலிக்கும் இந்த 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டபின்னர்தான் இலங்கையில் எவருமே எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமுடியும்.

இதுதான் சட்டம். இதுதான் இலங்கையில் இருக்கின்ற நடைமுறை.

’இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று கூறித்தான் 1983ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அந்தநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும், அவருடன் சேர்த்து - தற்பொழுது த.தே.கூட்டமைப்பு தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட 16 தமிழர் விடுதலைக் கூட்டனி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளைத் துறந்து, வெளியேறியிருந்தார்கள்.

அதாவது தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுவதாக ஒப்புக்கொள்ளும் 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறித்தான் அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலான த.வி.கூட்டனியினர் தமது நாடாளுமன்றக் கதிரைகளைத் துறந்தார்கள்.

ஆனால் அதனைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அரசியல் செய்த அனைவருமே இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக் கையொப்பம் இட்டுத்தான் அரசியல் செய்தார்கள்.

இன்னும் தெளிவாகக் கூறுவதானால், தமிழீழக் கோரிக்கையை உத்தியோகபு1ர்வமாக, பகிரங்கமாகக் கைவிட்டே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் இலங்கையில் அரசியல் செய்தார்கள்:

மாமனிதர் ஜேசப் பரராஜசிங்கமாக இருந்தாலும் சரி, மாமனிதர் ரவிராஜாக இருந்தாலும் சரி மாமனிதர் சந்திரநேருவாக இருந்தாலும்சரி, வல்வைச் சிங்கம் சிவாஜிலிங்கமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சிகளில் த.தே.கூட்டமைப்பை வாங்கு வாங்கென்று வாங்கித்தள்ளுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஜெயாணந்தமூர்த்தியாக இருந்தாலும் சரி, யாழ்பாணத்தில் இருந்து 40ஆயிரம் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சூழுரைத்த கஜேந்திரனாக இருந்தாலும்சரி - இவர்கள் அனைவருமே தமிழீழத் தனியரசுக்; கோரிக்கையை கைவிட்டுத்தான் இலங்கையில் அரசியல் செய்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டு சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் நாடாளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களுமே, தாம் தனிநாடு கோரமாட்டோம் என்று கையொப்பம் இட்டுவிட்டுத்தான் அரசியல் செய்திருந்தார்கள்.

இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம்.

இலங்கையை அரசியலைப் பொறுத்தவரையில் தமிழீழம் கோரி யாரும் நாடாளுமன்றம் செல்வது கிடையாது. அப்படி தமிழீழம் கோரிக்கொண்டு நாடாளுமன்றம் செல்லவும் யாராலும் முடியாது.

தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் ஈழத் தனியரசை நிறுவுவதற்காக அல்ல.

அவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்வது, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்காகத்தான்.

தமிழ் மக்களின் தேவைகளை உலக அரங்கிற்கு நசுக்காகக் கொண்டு செல்வதற்காக...

சர்வதேச நாடுகளிடம் இருந்து தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை தேடிக்கொள்வதற்காக...

சிறிலங்காவின் கோர முகத்தை, அதன் ஜனநாயக விரோத முகத்தை, அது மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்துவதற்காக...

-இதுபோன்ற இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளுவதற்காகத்தான் தமிழ் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்:

தவிர தமிழீழம் கோருவதற்கு எந்தத் தமிழ் தலைவர்களும் பாராளுமன்றம் செல்வது கிடையாது.

இன்றைய காலகட்டத்தில், த.தே.கூட்டமைப்பும் தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்காகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் வழிகளை தேடுவதற்காகவுமே, சிறிலங்கா தேசத்தில் அரசியல் செய்யத் தலைப்படுகின்றார்கள்.

எனவே சிங்கள மண்ணில் நின்றுகொண்டு கட்டப்பொம்மன் பாணியில் தமிழீழம் அது இது என்று அவர்கள் வீர வசணங்கள் பேசுவேண்டும் என்று புலம்பெயர்ந்து பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எதிர்பார்பது நல்லதல்ல என்றே நான் கருதுகின்றேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வினைச் செய்யவேண்டிய நிலையில் இருக்கின்ற ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமையான த.தே.கூட்டமைப்பு, தனது வியூகங்களுக்கு ஏற்றாற் போன்று வெளிப்படையான சில பேச்சுக்களைப் பேசித்தான் ஆகவேண்டும். உலகிற்காக என்று நிலைப்பாடுகளையும் எடுத்தத்தான் ஆகவேண்டும்.

தமிழீழத்தை தாம் கோரவில்லை என்று அவர்கள் உலகிற்குக் கோருவது, உலகை நம்ப வைப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஆதாயப்படுத்துவதற்கும்தான்.

பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வீறுநடைபோடுவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதுதான் - தற்போது தமிழ் இனம் செய்யவேண்டிய முக்கிய நகர்வு.

இதைத்தான் இராஜதந்திரம் என்று அழைப்பார்கள்.

இந்த இராஜதந்திரத்தைத்தான் த.தே.கூட்டமைப்பு தற்பொழுது செய்துகொண்டிருக்கின்றது.

இது ஒருபுறம் இருக்க, இந்தச் சந்தர்பத்தில் மற்றொரு உண்மையையும் நான் ஞபகப்படுத்த விம்புகின்றேன்.

தமீழக் கோரிக்கையைக் கைவிட்டு அல்லது தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக எதிரியையும் உலகையும் நம்பவைத்து, தமக்குத் தேவையான கால அவகாசத்தைத் தேடிக்கொள்ளும் இராஜதந்திரத்தை தமிழீழ விடுதலைப் புலிகளும் வரலாற்றில் செய்திருக்கின்றார்கள்.

„என்ன விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டிருந்தார்களா? யாருக்கு இந்தக் கதையை கூறுகின்றீகள்? நிராஜ் ஒரு துரோகி... இந்திpய றோவிடம் அல்லது சிறிலங்கா அரசாங்கத்திடம் நிராஜ் பணம்பெற்றுக்கொண்டு இவ்வாறு எழுதுகின்றார்’ என்று உடனடியாகவே என்னில் கோபம் கொண்டு பலர் என்னை திட்டித் தீர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அதுதான் உண்மை.

ஓரிரு சந்தர்ப்பங்களில் மாத்திரம் அல்ல. பல சந்தர்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத் தனிஅரசுக்கான தமது போராட்டத்தை தாம் நிறுத்தியுள்ளதாக, தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டதாக - மற்றவர்களையும் உலகையும் நம்பவைத்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் உண்மை. இதுதான் வரலாறு.

அந்த வரலாற்றுச் சந்தர்பங்கள் சிலவற்றை அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.

த.தே.கூட்டமைப்பின் பின்னால் உள்ள இரகசியங்கள்..

9:33 AM, Posted by sathiri, One Comment

த.தே.கூட்டமைப்பின் பின்னால் உள்ள இரகசியங்கள்..

-நிராஜ் டேவிட்

த.தே.கூ. ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்தத் தகுதியானதா?

த.தே.கூ. நம்பகத்தன்மை வாய்ந்ததா?

த.தே.கூ. தவிர்த்து ஈழ மண்ணில் அரசியல் நடாத்த வேறு வேறு சக்திகள் அங்குள்ள ஈழத் தமிழருக்குக் கிடையாதா?

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பாரிய வியூகங்களை வகுக்க,த.தே.கூ. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதிப்பிரதிவாதங்கள் இருந்து வருகின்றன.இலங்கையின் அரசியல் அரங்கில் தமிழ் மக்களுக்கு இன்று இருக்கின்ற ஒரே தெரிவு, த.தே.கூட்டமைப்பாகவே இருக்கின்றது என்று ஈழத் தமிழர்களில் ஒரு தரப்பு வாதாடி வருகின்றது.

சிறிலங்காவின் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருக்கும் கருணா என்பவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருப்பதுடன், இலங்கையில் தமிழருக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை, அவர்களுக்கு அரசியல் தீர்வு எதுவும் தேவை இல்லை என்று சிங்கள அமைச்சர்களை விட உரக்கக் குரல் கொடுத்து வருகின்றார்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகானத்தின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தன், கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளார்.

மறுபக்கம், மத்திய ஆட்சியில் இருப்பவருக்கு சாமரம் வீசியபடி, பிரிக்கப்பட்ட யாழ்பாணத்தில் ஒரு குறுநிலமன்னணாக ஆட்சி செய்ய நினைக்கின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தா.

இந்த நிலையில் தமிழ் தேசியம், வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களுக்கு என்று சுயாட்சி அல்லது சமஷ்டி என்ற நிலைப்பாட்டில் தேர்தல் களத்தில் நிற்கும் ஒரே கட்சி த.தே.கூட்டமைப்புத்தான் என்று எம்மில் ஒரு பகுதியினர் அடித்துக் கூறிவருகின்றார்கள்.த.தே.கூ. நம்பகத்தன்மை இல்லாத ஒரு அமைப்பு என்றும், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்படியான போக்கு த.தே.கூ. இடம் காணப்படுகின்றது என்றும்- மற்றொரு தரப்பு குற்றம் சுமத்துகின்றது. த.தே.கூ. ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்து வருகின்ற ஒரு அமைப்பு என்று அந்தத் தரப்பு கட்டுரைகளையும் இணையத்தளங்களில் வெளியிட்டு வருகின்றது.

த.தே.கூ. தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள்,என்று பல இருந்தாலும் கூட, அவைகள் அனைத்தையும் கடந்து, இலங்கை வாழ் தமிழர்களுக்காகவென்று இன்று எஞ்சி இருப்பது இந்த த.தே.கூ. மாத்திரம்தான் என்று புலம்பெயர்ந்த மண்ணில் இருக்கின்ற சில புத்திஜீவீகள் தெரிவிக்கின்றார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எதிர்வரும் காலங்களில் அவர்களது போராட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? இதுதான் எம்மத்தியில் இன்று இருக்கின்ற மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது.

வதந்திகள்

வன்னியில் 20,000 போராளிகள் மறைந்திருக்கின்றார்கள், முக்கிய தளபதிகள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கின்றார்கள், தென்ஆபிரிக்காவில் புலிகளின் படை அணிகள் இலங்கைக்குக் கிளம்ப தயார் நிலையில் நிற்கின்றன, ஈழத் தமிழரைக் காப்பாற்ற அமெரிக்கப்படைகள் வரப்போகின்றன - இப்படி பல வதந்திகள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு தரப்பால் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் எந்த நகர்வையும் செய்யத் தேவையில்லை. அடித்துத்தான் எதையாவது நாம் பெற்றாகவேண்டும். அதுவரை நாம் காத்திருப்பது அவசியம் என்று இந்தத் தரப்பினர் மக்களிடம் கூறிவருகின்றார்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய உண்மையை நாம் நன்றாக விளங்கிக்கொள்ளவேண்டும்.தமது போராட்டப் பாதையில் ஈழத் தமிழர்கள் என்பவர்கள் தமது இராணுவப் பலத்தை முற்றாகவே இழந்துவிட்டுள்ளார்கள். இதுதான் உண்மை. அத்தோடு ஒரு சக்திவாய்ந்த அரசியல் பலத்தை உருவாக்கவேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இன்று நின்றுகொண்டிருக்கின்றார்கள்..- இதுதான் யதார்த்தம்.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சிறிது காலத்திற்கு அரசியல் ரீதியான பாதையில்தான் பயணம் செய்தாகவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

„அரசியல் ரீதியான ஒலிக்கும் எமது குரல் சிங்களப் பேரினவாதத்திடம் ஒலிக்காது.. அரசியல் ரீதியாக நாம் நகர்ந்தால் எமது கோரிக்கைகள் பலவீனமாகிவிடும். பேரினவாதச் சிந்தனை கொண்ட சிங்களவர்களிடம் எமது சாத்வீகத்தின் குரல் ஒருபோதும் எடுபடாது.“- இப்படி பல எச்சரிக்கைகள் எம்மில் சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த எச்சரிக்கைகளில் உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்த விடயத்தில், இன்று நாம் இருக்கின்ற நிலையில் - எங்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை.

எம்முன் இன்று இருக்கின்ற ஒரே தெரிவு- அரசியல், பொருளாதார, இராஜதந்திரப் போராட்டங்கள்தான்.இந்த அரசியல், பொருளாதார, இராஜதந்திரப் போராட்டங்களை நாம் இங்கு புலம் பெயர் தேசங்களில் ஒரு வரையறுக்கப்பட மட்டத்தில்தான் செய்யமுடியும். இந்த அரசியல், பொருளாதார, இராஜதந்திரப் போராட்டங்களை நாம் இலங்கை மண்ணில் செய்தால்தான் எம்மால் அதனை முன்கொண்டு செல்லமுடியும். இலங்கை மண்ணில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அங்கு எமக்கு ஒரு அரசியல் தளம் தேவையாக இருக்கின்றது. இதுதான் இன்று ஈழத் தமிழர் முன் இருக்கின்ற அவசரத் தேவைகளுள் முதன்மையானதாக இருக்கின்றது.

இன்று இருக்கின்ற நிலையில், இலங்கை மண்ணில் அரசியல் சக்திகளாக டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றார்கள். இவர்களது அரசியல் இருப்பையும், அரசியல் வளர்சியையும் யாராலும் தடுத்துவிடமுடியாமல் இருக்கின்றது.

2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் வெறும் 18,612 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்த ஈ.பி.டி.பி கட்சி, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 41,900 வாக்குகளைத் திரட்ட முடிந்திருப்பதானது, யாழ்ப்பாணத்தில் டக்ளசின் அரசியல் வளர்ச்சியை வெளிக்காண்பிப்பதாக இருக்கின்றது.

யார் எவர் என்று தெரியாத நிலையில் இருந்த பிள்ளையானுக்கு சந்தர்ப்பவசத்தால் கிடைத்த கிழக்குமாகாண முதலமைச்சர் பதவி, இன்று கிழக்கைப் பொறுத்தவரையில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக பிள்ளையானை உருவாக்கிவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியலில் வெற்றிடங்கள் உருவாக்கப்பட உருவாக்கப்பட, இன்றும் பல கருணாக்களும், பிள்ளையான்களும், டக்ளஸ்களும் அந்த வெற்றிடத்தை நிரப்பிட வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றார்கள்.

எனவே இன்றைய அரசியல் சூழலில் வியாக்கியானம் பேசிக்கொண்டு, கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுவிட முடியாத நிலையில்தான் தமிழினம் இருந்துகொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் தமக்கென்று ஒரு சக்திவாந்த அரசியல் பலத்தை உருவாக்கிக்கொள்ளும்வரைக்கும், அந்த வெற்றிடத்தை நிறப்புகின்ற பணியை யாராவது ஒருவர் மூலம் நாம் செய்துதான் ஆகவேண்டி இருக்கின்றது.காலம் என்பது எங்களுக்காக ஒருபோதும் காத்துக்கொண்டிருக்காது. காலத்தின் வேகத்தில் நாம்தான் ஓடவேண்டி இருக்கின்றது.

ஒரு நாடாளுமன்றத் தேர்தலை எமது சமூகம் எதிர்கொண்டபடி இருக்கையில், அந்த அரசியல் தளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால், அடுத்துவரும் 6 வருட காலத்தை கருணா போன்ற, பிள்ளையான் போன்ற, டக்ளஸ் போன்ற பிரகிருதிகள்;எமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நாமே வழியேற்படுத்திக்கொடுத்ததாகப் போய்விடும்.

ஈழத் தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு பல கோடாரிக் காம்புகள் எமது தலைவர்களாக வலம்வரும் அவலம் எமது இனத்திற்கு ஏற்பட்டுவிடும்.எனவே விம்பியோ விரும்பாமலோ, இந்த நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டி இருக்கின்றது.

எப்படி எதிர்கொள்வது?

நாடாளுமன்றத் தேர்தலை தமிழினம் எப்படி எதிர் கொள்வது? யாரை வைத்து எதிர்கொள்வது?

„இன்றைய நிலையில், தமிழ் தேசியம், வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம் - போன்ற விடயங்களை இலங்கை மண்ணில் பெயரளவிலாவது உச்சரித்துக்கொண்டிருக்கின்ற ஒரே கட்சி தமிழ் தேசிக் கூட்டமைப்பு மாத்திரம்தான். எனவே இந்த த.தே.கூட்டமைப்பை முன்னிலைப்படுத்தித்தான் சிறிது காலத்திற்கு ஈழத்தமிழ் இனம் அரசியல் செய்தாகவேண்டி உள்ளது“ என்று எம்மிடையே இருக்கின்ற ஒருசிலர் கூறுகின்றார்கள்.

எமது கைகளில் இருக்கின்ற சிறிய பலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று சிந்திப்பதுதான் நாம் இன்று செய்யவேண்டிய மிகப் பெரிய கடமையாக இருக்கின்றது என்றும் அவர்கள் வாதாடுகின்றார்கள்.

இப்பொழுது எம்முன் இருக்கின்ற கேள்வி இதுதான்.

த.தே.கூ. ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்தத் தகுதியானதா?

த.தே.கூ. நம்பகத் தன்மைவாயந்ததா?

த.தே.கூ. தவிர்த்து ஈழ மண்ணில் அரசியல் நடாத்த வேறு வேறு சக்திகள் அங்குள்ள ஈழத் தமிழருக்குக் கிடையாதா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பார்பதற்கு முன்னதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன, இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது என்று பார்ப்பது அவசியம் என்று நான் நினைக்கின்றேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது?

இந்த த.தே.கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் உருவாக்கினார்கள் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அப்படி அல்ல.

த.தே.கூ;டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தேவை கருதி த.தே.கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு உள்வாங்கியிருந்தார்களே தவிர, த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அப்படியானால், த.தே.கூட்டமைப்பு எப்படி உருவானது?

இது உண்மையிலேயே ஈழத் தமிழினம் அறிந்து வைத்திருக்கவேண்டிய ஒரு உண்மை.த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புகள், தியாகங்கள், இழப்புக்கள், இரத்தம் சிந்தல்கள் -இவைகள் அனைத்துமே ஒரு சிலருக்கு மாத்திரமே தெரிந்திருந்த இரகசியங்கள்.

இந்த விடயங்கள் பற்றித்தான் இன்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.

காலச் சூழல்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகுவதற்கான காலச் சூழல் பற்றிப் பார்ப்பது அவசியம்.

2ம் கட்ட ஈழப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும்படியான திட்டம், சிங்களத் தலைவர்களாலும், முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்று கூறப்பட்ட அஷ்ரப்பினாலும் தீட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வடக்கில் யாழ்குடா உட்பட பெரும்பாலான பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்ததன் காரணமாக, கிழக்கைக் குறிவைத்துத்தான் சிங்கள, முஸ்லிம் தலைமைகள் இந்தத் திட்டத்தை நகர்த்த முற்பட்டன.

தமிழர் தரப்பில் பலரை பல்வேறு கட்சிகளின் பெயரில் தேர்தலில் போட்டியிட வைப்பதன் ஊடாக, தமிழர் வாக்குகளைப் பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதுதான், எதிரிகளின் திட்டமாக இருந்தது.

தமிழ் மக்கள் மத்தியில் புரையோடிக் காணப்பட்ட பிரதேச வேறுபாடுகள், சாதிப்பிரச்சனைகள், மத பேதங்கள் -இவைகளைக் கருத்தில் கொண்டு, பல கட்சிகளிலும், சுயேட்சையாகவும் கூட, தமிழர்கள் பெருமளவில் தேர்தலில் போட்டியிட உற்சாகப்படுத்தப்படார்கள்.

தமிழ் தேசியம் பேசுவோரின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, அரசியல் ரீதியிலான தமிழரின் உரிமைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதே, எதிரியின் திட்டமாக இருந்தது.

சிங்கள முஸ்லிம் தலைமைகள், தாம் வகுத்த திட்டத்தை, 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதன் முதலில் பரிட்சித்துப் பார்த்திருந்தன.

1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பிரதிநித்துவம் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்தன் காரணமாக முஸ்லீம்களுக்கு சென்றிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர் விகிதாசாரத்தின் அடிப்படையில் நான்கு தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லீம் பிரதிநிதியுமே வரமுடியும். ஆனால் அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் அலிசாகிர் மௌலானாவும் , கிஸ்புல்லாவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்..

தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டம் நடைபெற்று வருகின்ற அதேவேளை தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்தான் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக பல்வேறு மட்டங்களின் பேச்சுக்கள் நடைபெற்ற போதிலும், வெறும் கலந்துரையாடல் என்கின்ற நிலையைக் கடந்த வேறு எதனையும் தமிழர் தரப்பால் செய்ய முடியவில்லை.

இப்படியான சூழலில்;2000.10.10 அன்று நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான தேர்தலாக அமைந்திருந்தது. தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளில் ஒரு பாரிய விளிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு தேர்தலாக அந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.

அந்தப் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழர் கூட தெரிவாகவில்லை. 53860 வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும், 46ஆயிரம் வாக்குகளைப்பெற்று ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணி 14090 வாக்குகளை மட்டுமே அந்தத் தேர்தலில் பெற்றிருந்தது.

இதேபோன்று, 5 தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லீம் பிரதிநிதியும் வரவேண்டிய வன்னி மாவட்டத்தில், 200ம் ஆண்டுத் தேர்தலில் மூன்று தமிழர்கள் மட்மே தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

4 தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லீம் பிரதிநிதியும் தெரிவாகவேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி இரு பிரதிநிதிகளை மட்டுமே பெற்றிருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படவில்லை.

பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் 23 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டிய இடத்தில் 14 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

விழிப்புணர்வு

தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அரசியல் விழிப்புணர்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக இந்தத் தேர்தல் அமைந்திருந்தது. எதிரிகளின் திட்டமிட்ட சதிக்கு எமது இனத்தின் அரசியல் அபிலாசைகள், அநியாயமாகப் பழியாகிப் போவதையிட்டு தமிழ் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் கவலை கொண்டார்கள்.

இது தொடர்பாக, இந்த ஆபத்தான நிலை தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள் மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. பிரபல ஊhடகவியலாளரும், அரசியல் இராணுவ ஆய்வாளருமான மாமனிதர் சிவராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில், கிழக்குப் பல்கலைக்களக விரிவுரையாளர்கள், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் என்பன பங்குபற்றியிருந்தன.

அந்த கூட்டத்தில் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

1. தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலையை மாற்றுவதற்கு அவர்கள் மத்தியில் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும்

2. களத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல்; கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் .

முதலாவது விடயத்தை, அதாவது தமிழ் மக்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமோ அல்லது கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமோ தனித்து நின்று செய்ய முடியாது என்றும் அதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாவது தீர்மாணத்தை கிழக்கிலங்கைச் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தனித்து மேற்கொள்ளுவது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

விஷப் பரிட்சை

தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது அந்த நேரத்தில் மிகவும் சவாலான, கஷ்டமான காரியமாக இருந்தது..

அந்த நேரத்தில் அது ஒரு மிகப் பெரிய விஷப்பரீட்சை. அதற்கு மேலாக விடுதலைப்புலிகள் அதற்கு சம்மதிப்பார்களா என்ற சந்தேகமும் பல கல்விமாண்களால் எழுப்பப்பட்டிருந்தன.

“தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும்” என சிவராம் உறுதியாக சொன்னார். அதற்கு கலாநிதி தம்பையா, விரிவுரையாளர் கெனடி, ஊடகவியலாளர் இரா. துரைரெத்தனம் போன்றோர் ஆதரவு தெரிவித்தார்கள்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஏனையவர்கள் ஒத்துழைப்புக்களை வழங்குதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயற்குழுவின் கூட்டம் மட்டக்களப்பு லேக்வியூ இன் ஹொட்டலில் நடைபெற்றது.

இதனையடுத்து மட்டக்களப்பு கத்தோலிக்க கழகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திலேயே தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கருத்தரங்கு உட்பட பல செயற்பாடுகளை தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் செய்தது.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தைச்சேர்ந்த கலாநிதி தம்பையாவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண். தவராசாவும், அரசசார்பற்ற இணையங்களின் செயலாளர் செல்வேந்திரனும் இந்தத் தமிழர் மறுமலர்சிக் கழகத்திற்கு இணைப்பாளர்களாக செயற்பட்டார்கள்:

மாமனிதர் சிவராம், இரா துரைரெத்தினம் போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இந்த கழத்தின் முக்கிய வழிகாட்டிகளாகச் செயற்பட்டார்கள்.

முக்கிய சவால்:

இந்த இடத்தில்தான் இந்தத் தமிழ் ஆர்வலர்கள் முக்கியமான சவாலைச் சந்திpக்கவேண்டி ஏற்பட்டது.

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து தமிழர்களுக்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டபோதுதான் மிகப் பெரிய சவால்கலை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முதற்கட்டமாக தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, கூட்டமைப்பு பற்றிப் பேசியபோதுதான், இது ஒன்றும் இலகுவான காரியமாக இருந்துவிடமாட்டது என்று அவர்கள் உணரத் தலைப்பட்டார்கள்.

தமது கூட்டமைப்பு உருவாக்கும் திட்டம்பற்றி நாடாளுமன்ற உறுப்பினரும், த.வி.கூட்டணியின் சிரேஷ்ட தலைவருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களிடம் பேசிய பொழுது, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற ஆயுதக்குழுக்களுடன் தாங்கள் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தங்களையும் நிராகரித்து விடுவார்கள் என்றும், முதலில் விடுதலைப்புலிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி, ஊடகவியலாளர்களின் இந்த முன்மொழிவுக்கு ஒரேயடியாக மறுப்புத் தெரிவித்துவிட்டார். இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தமிழ் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பு வைத்துக்கொண்டு, எந்த முகத்துடன் மக்கள் முன்நிலையில் சென்று வாக்குக் கேட்பது என்று தயங்கிய திரு பரராஜசிங்கம், இந்த நகர்வை கைவிட்டுவிடுங்கள் என்று ஊடகவியலாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார். அனேகமான மிதவாதக்கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருந்தது.

வெறுக்கப்பட்ட அமைப்புகள்

ஆம் அந்த காலகட்டத்தில், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற கட்சிகள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள், புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் மீது மிகவும் மோசமான தாக்குதலை மேற்கொள்வதிலும், அவர்களைச் சித்திரவதை செய்து கொலை செய்வதிலும் இந்த அமைப்புக்கள் மிக ஆர்வம் கொண்டு திரிந்த காலம் அது.

தமிழ் மக்களால், குறிப்பாக தமிழ் தேசியவாதிகளால் இந்த அமைப்புக்கள் வெறுப்புடன் பார்க்கப்பட்ட காலம் அது.

எனவே தமிழ் கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அதிகரிக்கவேண்டிய தேவையை முதலில் விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தும்படியான நடிவடிக்கையை செய்வது அவசியம் என்று இந்தக் குழு தீர்மாணித்தது.

இந்த விடயம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த கரிகாலன் அவர்களைச் சந்தித்து, தமது இந்தத் திட்டத்தை முன்நகர்த்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அவரகளுடனான சந்திப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பில், தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைத்து, அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முகமாக சிறிலங்காத் தலைமை மேற்கொண்டு வரும் சதி பற்றி, சிவராம் விளக்கம் அளித்தார். இந்தச் சதியால் தமிழர் தரப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவுகள், இழப்புக்கள் போன்றன பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.

ஊடகவியலாளர்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்த திரு.கரிகாலன், “நல்ல முயற்சி ஆனால் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆயுதங்களை கைவிட்டு வருவார்களா?” என்று தனது சந்தேகத்தை வெளியிட்டார். அந்த முயற்சியில் தாம் தொடர்ந்து இறங்கப்போவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்.

“தமிழ் கட்சிகளின் மனங்களில் எங்கோ ஒரு மூலையில் நிச்சயம் தமிழ் உணர்வு இருக்கத்தான் செய்யும். அதனை வெளிக்கொணர்வதில்தான் எங்களது வெற்றி தங்கியிருக்கின்றது. டெலோவின் கரங்களில் விடுதலைப் புலிகளின் இரத்தக்கறையும், புலிகளின் கைகளில் டெலோவின் இரத்தக்கறையும் பரஸ்பரம் இருக்கின்றன. எமது இனத்திற்காக பழயவைகளை மறப்பதுதான் நல்ல இராஜதந்திரம் என்று விளக்கம் கொடுத்தார்.

தங்கள் தரப்பிலும், தலைமையுடனும் பேசிவிட்டு முடிவை சொல்வதாக தெரிவித்திருந்தார் கரிகாலன்.

“இது நாய்வாலை நிமித்தும் முயற்சி” என்று கரிகாலன் அவர்களுடன் இருந்த சில புலித் தளபதிகள் ஊடகவியலாளர்களிடம் தமது அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள்.

புலிகளின் பதில்:

சரியாக ஒரு வாரகாலம் கழித்து கரிகாலனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. கரிகாலன் அவர்களை;மீண்டும் சந்தித்த போது அவர் சாதகமான ஒரு பதிலை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார்.

இந்த விடயத்தில் விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை, புலிகளின் தலைமை தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேஷ்ட தலைவர் திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கும் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழர் விடுதலைக்கூட்டணியினரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒருவாறு சம்மதித்தார்கள்.

இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் சிலர் தயக்கம் காட்டிய போதிலும் மாமனிதர் ரவிராஜ் தமிழ் கட்சிகளை இணைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவராக காணப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர் விடுதலைக்கூட்டணியை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரே இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் பின்னடித்தனர்.

அக்கட்சியின் சார்பில் தீர்மானம் எடுக்க கூடியவராக அந்த நேரத்தில் திருமதி குமார் பொன்னம்பலமே இருந்தார். தமிழ் காங்கிரசுடனான சகல சந்திப்புக்களும் குமார் பொன்னம்பலம் அவர்களுடைய வீட்டிலேயே நடைபெற்றன.

அப்படி தமிழ் கட்சிகள் இணைக்கப்பட்டாலும் தங்களுடைய கட்சியிலேயே அனைவரும் போட்டியிட வேண்டும், தமிழ் காங்கிரசின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டிபோட வேண்டும் என்ற நிபந்தனைகள் கூட விதிக்கப்பட்டன. தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டாலும் கூட, முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் சேர்வதற்கான தயக்கம் பெருமளவில் வெளிக்காண்பிக்கப்பட்டது.

இரத்தக்கறை

முன்னாள் ஆயுதக் குழுக்களின கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளதாகவும், அவர்கள் இரத்தகறைபடிந்த கரங்கள் என்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியினரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் குற்றம் சுமத்தினார்கள்.

தமிழர் விடுதலைக்கூட்டணியினருடனான ஒரு சந்திப்பின் போது இவ்வாறு சிலர் தெரிவித்த போது, சிவராம் கடும் கோபம் கொண்டவராக “நீங்கள் தானே அவர்களை உருவாக்கினீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். “1989ஆம் ஆண்டு ஆயுதங்களோடு இருந்தவர்களுடன் இணைந்து போட்டியிட்டீர்கள். இப்போது அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் நிரோட்டத்திற்கு வந்திருக்கின்ற போது நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று கடுமையாக வாதிட்டார்.

1989ஆம் ஆண்டு இந்த குழுக்களுடன் சேர்ந்து தாங்கள் போட்டியிட்டபோது தங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தையும் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி சின்னத்தில் இந்த கட்சிகள் போட்டியிட்ட போதிலும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முழுக்க முழுக்க ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களே தெரிவு செய்யப்பட்டனர் என்பதையும் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் சுட்டிக்காட்டினர்.

பல சந்திப்புக்கள், நீண்ட இழுபறிகள் போன்றனவற்றின் பின்னர், தமிழ் ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைப்பதற்கு த.வி.கூ மற்றும் தமிழ் காங்கிரஸ் என்ற இரண்டு மிதவாதக் கட்சிகளும் சம்மதித்தன.

அடுத்த பயணம்:

இதனைத் தொடர்ந்து, சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கிக் கொண்டிருந்த அமைப்புக்களைச் சந்திக்கும்படியான பயணத்தை ஆரம்பித்தார்கள்- உடகவியலாளர்கள். அந்தப் பயணம் கூட, அவ்வளவு இலகுவான பயணமாக இருந்துவிடவில்லை.

முதலில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றன.

இந்த அமைப்புக்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1. இந்த அமைப்புக்கள் இனிமேல் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது.

2. அவர்களது இராணுவ பிரிவுகளைக் கலைத்து விட வேண்டும்.

3. தமிழ் தேசிய விடுதலையையும், அந்த விடுதலையை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்

ஊடகவியலாளர்களின் இந்த நிபந்தனைகள் தமிழ் ஆயுதக் குழுக்களை பெரிய அளவில் உணர்ச்சிவசப்படுத்தின.

அது என்ன ஏக பிரதிநிதித்துவம்? புலிகளும் விடுதலைக்காகப் போராடினார்கள் நாங்களும் விடுதலைக்காகப் போராடினோம். புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஒன்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார் டேலோ முதல்வர் சிறிகாந்தா.

மற்றய அமைப்புக்களின் உடனடி பிரதிபலிப்புக்களும் இப்படியாகத்தான் இருந்தது.

ஆனால் இவை அனைத்தையும் கடந்து, அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய பலவீனம் இருந்தது. அந்தப் பலவீனத்தின் மீது ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அடிக்க, அடிக்க, அந்த அமைப்புக்கள் கூட்டமைப்புப் பற்றி யோசிக்கத் தலைப்பட்டன.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட, ஈ.பீ.ஆர்.எல்.எப், டெலோ, புளொட், போன்ற அமைப்புகள், 10 வருடங்கள் கடந்துவிட்டிருந்த நிலையிலும் புலிவாலைப் பிடித்த கதையாக அந்தப் பாதையில் இருந்து மீழ முடியாமல் தவிர்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அன்னியப்படும் ஆபத்துக்களையும்; அவர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். வடக்கு கிழக்கின் ஒரு சில பிராந்தியங்களைத் தவிர வேறு பிரதேசங்களில் செல்வாக்கு அற்றவர்களாகவே இந்த அமைப்பினர் இருந்தார்கள்.

தம்மீதுள்ள இரத்தக்கறையை எப்படித் துடைத்துக் கொள்வது, தமது அரசியல் எதிர்காலத்தையும் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ளவது என்ற தடுமாற்றம் அவர்கள் மத்தியில் அந்தக் காலகட்டத்தில் இருந்து வந்தது.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான், தமிழ் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் போன்றனவற்றை இணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி பற்றி அவர்களுக்கு முன்மொழியப்பட்டது.

டெலோவின் நிபந்தனை:

சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்கள் முதலில் டெலோ அமைப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்: ரெலோ அமைப்புடனான சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா, பிரசன்னா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் பேசப்பட்டது.

கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு கொள்கை அளவில் சம்பதித்த இந்த இரு கட்சிகளும், ஒரு முக்கிய முன் நிபந்தனையை விதித்தார்கள்.

ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிந்தது. அந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக் குழக்களாகச் செயற்பட்ட இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுதலைப் புலிகளால் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டு வந்தார்கள். எனவே, விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து தமது உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வளங்கப்படவேண்டும் என்று, இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்ததார்கள்.

விடுதலைப் புலிகளுடன் பேசி, அந்த உத்தரவாதம் விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து பெறப்பட்டது.

இந்தச் சந்தர்பத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க முயற்சியைக் குலைக்கும்படியான ஒரு சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

டெலோ அமைப்பின் ஒரு முக்கியஸ்தரும், மட்டக்களப்பு ஆரையம்பதிப் பிரதேச சபைத் தலைவருமான ரொபர்ட் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு நகரில், வைத்தியசாலை வீதியில் வைத்து ரெலோ ரொபர்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது மரணச் சடங்கு இடம்பெற்ற தினம் மாலை ஊடகவியலாளர்களை டெலோவின் தலைமை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது.

ரெலோவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சிறிக்காந்தா, விடுதலைப் புலிகள் வழங்கிய உத்தரவாதத்தை மீறிவிட்டார்கள். எங்களை நீங்கள் சந்தித்து கூட்டமைப்பு உருவாக்கம் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது ரொபட் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறரே. இந்த நிலையில் எப்படி நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடும்படி எமது உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது. யார் எங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள்? என்று விசனம் தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியாது

ஊடகவியலாளர்கள் மறுநாள் கரிகாலனை சந்தித்தார்கள்.

ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரிய கரிகாலன், “நீங்கள் எடுக்கின்ற முயற்சி புலிகளின் அரசியல் பிரிவினருக்கு மாத்திரமே தெரியும். இராணுவ மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்னமும் தெரியாது. அதனால்தான் இது நடந்து விட்டது. இனிமேல் இதுபோன்று நடைபெறாது பார்த்துக்கொள்கிறோம்” என்று கரிகாலன் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் கூட்டமைப்பு முயற்சிகளை முற்றாக பாதித்து விடும் என்பதையும் கரிகாலனுக்கு ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்;.

அதன் பின்னர் முதற்தடவையாக செல்வம் அடைக்கலநாதனையும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தனித்தனியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுபிரதேசத்திற்கு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அழைத்து சென்று கரிகாலனுடனான சந்திப்பை ஏற்படுத்தினார்கள்.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி தொடர்பாக தகவல்கள் ஊடகங்களில் வெளிவரக்கூடாது என்றும் ஏற்கனவே உறுதியான தீர்மானம் ஒன்றை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் எடுத்திருந்தது. ஊடகவியலாளர்களே இந்தப் பணியில் நேரடியாக ஈடுபட்டதன் காரணமாக, ஊடகங்களில் இந்தச் செய்திகள் கசியவில்லை. நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் ஊடகங்களில் வெளிவராத போதிலும், ஊடகவியலாளர்களையும் மீறி சுரேஷ் பிரேமசந்திரன் கரிகாலனை சந்தித்தது தொடர்பான செய்தி கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றில் வெளிவந்து விட்டது. அந்த செய்தியை பின்னர் டெயிலி மிரர், சண்டே ரைம்ஸ் உட்பட ஆங்கில சிங்கள ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.

ஊடகவியலாளர்கள் கொழும்பு ஊடகங்கள் மத்தியில் தங்களுக்கு இருந்த தொடர்புகளைப் பாவித்து, இந்த சந்திப்புக்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவராமல் தடுத்திருந்தார்கள்.

புளொட்டின் நிலைப்பாடு

புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றது. ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் ஆயுக்குழுவை கலைத்து விட்டு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்தாலும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் முக்கியமாக வவுனியாவில் உள்ள சிலர் அதற்கு சம்மதிக்காததால் புளொட் அமைப்பை கூட்டமைப்பில் சேர்க்கும் முயற்சி கைவிடப்பட்டது.

ஒரு சந்திப்பின் போது சித்தார்த்தன் தங்கள் அலுவலக வாசலில், சென்றிருந்த இளைஞனைக்காட்டி கூறினார், “நான் ஆயுதப்பிரிவை கலைத்து விட்டு வந்து அரசியல் செய்யலாம். ஆனால் எம்மை நம்பி வந்த இந்தச் சிறுவர்களை எப்படி பராமரிப்பது? இவர்களது எதிர்காலம் என்ன? என்று கூறி, கூட்டமைப்பில் தமது அமைப்பினை இணைத்துக்கொள்ளத் தயங்கினார்.

மட்டக்களப்பு புளொட் அரசியல்பிரிவு பொறுப்பாளர் பாக்கியராசா தமிழ் கட்சிகளுடன் தங்களை இணைக்க வேண்டும் என ஆர்வம் காட்டிவந்தார். ஆனால் அவர்களின் இராணுவப்பிரிவு அதற்கு இடம்கொடுக்கவில்லை.

முதலாவது கூட்டம்

இதன் பின்னர் 2001ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முதலாவது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. சிவராம் தலைமையில் ஊடகவியலாளர்கள், சில பேராசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தில்தான் ததே.கூ. பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை இணைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் ஊடகவியலாளர்கள் தீர்மானித்துக்கொண்டார்கள். இதை அந்த முதலாவது கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பிடம் ஊடகவியலாளர்கள் தெரிவித்துக்கொண்டார்கள்.

அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த நான்கு கட்சிகளும் இணைந்து வெளித்தலையீடுகள் இன்றி வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட்டன.

அந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய நிலைப்பாட்டின் கீழ் போட்டியிட்டு 17 தமிழ் உறுப்பினர்கள் நடாளுமன்றத்திற்குத் தெரிவானார்கள்.2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்தார்கள்.. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பல வேட்பாளர்களின் பெயர்களை விடுதலைப்புலிகளே முன்மொழிந்தனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

தேசியக் கடமை:

த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் இருந்த பல முக்கியஸ்தர்கள் இன்று உயிருடன் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ஏரோ ஒரு வகையில் பங்காற்றியிருந்த பல தமிழ் ஆர்வலர்களும் தற்பொழுது உயிருடன் இல்லை.

த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பிதாமகர் என்று கூறக் கூடிய ஊடகவியலாளர் சிவராம், ஊடகவியலாளர் நடேசன், பேராசிரியர் கலாநிதி தம்பையா போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண் தவராஜா, விரிவுரையாளர் கெனடி, விரிவுரையாளர் மோகன், மருத்துவ கலாநிதி நீதிராசா, ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், ஊடகவியலாளர் வேதநாயகம் உட்பட பல ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.

மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமது தேசியக் கடமைகளை நிறைவேற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதனுடைய கூலிப்படைகளினாலும் இவர்கள் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டார்கள்:

த.தே.கூட்டமைப்பு

ஆக, த.தே.கூ. என்பது, மிகுந்த பிரயாசைகளினால், பலத்த இழப்புக்களுடன், தமிழ் மக்களின் நன்மைகருதி தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.

சிங்களப் பேரினவாதம் அமைத்துக்கொண்டுள்ள ஒரு அரசியல் மேடையில் தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த குரல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக, தமிழ் ஆர்வலர்களால் வகுக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகம்.

தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அவ்வப்பொழுது உலகிற்கு வெளிப்படுத்திக்கொள்ள, தமக்குத்தாமே அவர்கள் அமைத்துக்கொண்டுள்ள ஒரு ஜனாநாயகத் தளம்தான், இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.இப்படிப்பட்ட இந்தத் த.தே.கூ. தமிழ் மக்களின் அபிலாசைகள உண்மையாகவே பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா?

த.தே.கூ உருவாக்கப்பட்டதன் நோக்கத்தின் பாதையில் அது பயணித்துக்கொண்டிருக்கின்றதா?

தனிநாட்டுக் கோரிக்கையை நாம் முன்வைக்கவில்லை என்று இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது கூறுகின்றதே, பின்னர் இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?

-இப்படி பல கேள்விகள் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தொடர்ந்து பலதும் பத்தில் விரிவாக ஆராய்வோம்.