Navigation


RSS : Articles / Comments


அவலங்கள் நூல் குறித்து.தோழர் சம்சுதீன் ஹீரா

4:41 AM, Posted by sathiri, No Comment

அவலங்கள் நூல் குறித்து.புதிய புத்தகம் பேசுது இதழில் தோழர் Samsu Deen Heera
 
சரியான தருனத்தில் பேசப்படாத உண்மைகள், பொய்களை மட்டுமல்ல பேரழிவையும் ஏற்படுத்தி விடுகின்றன..

ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகம் சொல்லத் தயங்கி நிற்கும் பொருளை, அந்தச் சமூகத்தை நோக்கி, சமூகத்தின் சார்பாக, சமூகத்தின் குரலாகப் பேசவேண்டுமென்பார் சா. தமிழ்ச்செல்வன். நீண்ட நெடிய ஈழ விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த காலத்தையும் அது வீழ்ச்சியடைந்த காலத்தையும் எவ்வளவோ இலக்கியங்கள் இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டமாக அவற்றில் பெரும்பாலான இலக்கியங்கள் நாயக பிம்பங்களைக் கட்டமைக்கவோ அல்லது ஏற்கனவே கட்டிவைக்கப்பட்டிருந்த புனித பிம்பங்களின் மீது சிறு கீரலும் விழாதவாறு கவனமாகப் பூசி மொழுகவோதான் செய்தன. அவற்றிலெல்லாம் பேசப்படாத நுண்ணரசியலை, தற்போதைய இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் நவீன இலக்கியங்கள், மக்களின் குரலில் உரக்கப் பேசத்துவங்கியிருக்கின்றன. இப்போக்கானது ஈழ இலங்கியங்களில் ஆரோக்கியமான முன்னெடுப்பையும் காத்திரமான விவாதங்களையும் வலுவாகக் கோரி நிற்கின்றன.
இலக்கியங்கள் என்பவை சமூகத்தின் விளைபொருள். ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னைப்பாதித்த சமூகக் கூறுகளைத் தன்வழியே மக்களுக்குக் கடத்துகிற ஒரு ஊடுகடத்தி மட்டுமே. ஒரு தூய்மையான ஊடுகடத்தியாக இருக்கும் வரையில்தான் நேர்மையான படைப்புகளை ஒரு படைப்பாளனிடம் எதிர்பார்க்க முடியும்.


அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று உலகமே பதட்டமடைந்து கொண்டிருந்தபோது, உலகம் முழுவதும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்தும் சில அமெரிக்க ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பின.
பறவை மோதினாலே உடைந்து சிதறக்கூடிய மெல்லிய உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் விமானத்தின் மூக்குப்பகுதி அவ்வளவு பெரிய கட்டிடத்தைத் துளைத்துக் கொண்டு கொஞ்சமும் சேதமில்லாமல் வெளியே வந்தது குறித்து, அந்தக் கட்டிடங்களில் வேலை செய்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான யூத ஊழியர்கள், தாக்குதல் நிகழ்ந்த அன்றைய தினம் சொல்லி வைத்ததுபோல விடுமுறை எடுத்துக்கொண்டது குறித்து, அவ்வளவு பெரிய கட்டிடம் சீட்டுக்கட்டுபோல சரிந்ததற்கான முகாந்திரம் குறித்தெல்லாம் கேள்விகளை முன்வைத்தன. தேசநலன், தேசபக்தி, பணம், சலுகைகள் என்று பல வழிகளில் அவற்றின் வாயை அடைத்தது அமெரிக்க அரசு. தொடர்ச்சியாக அப்பாவிகளின் மீது பழியையும் போர்களையும் தினித்து எண்ணெய் வளமுள்ள நாடுகளைச் சூரையாடியது அமெரிக்க வல்லரசு. சரியான தருனத்தில் பேசப்படாத உண்மைகள், பொய்களை மட்டுமல்ல பேரழிவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.

அதுபோலவே ஈழப்போராட்ட வரலாற்றில், தங்களின் பலம் பலவீனம் குறித்த, சர்வதேச அரசியல் குறித்த புலிகளின் பொருத்தமற்ற மதிப்பீடுகள் ஒரு மாபெரும் இனப்பேரழிவுக்கு இட்டுச்சென்றது. இந்தியாவை, குறிப்பாக சில தமிழக அரசியல் கட்சிகளின் பொய்யான பிழைப்புவாத வார்த்தை ஜாலங்களையும், நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகளையும் தமிழீழ அரசின் தலைமை கடைசிக்கட்டம் வரை நம்பிக்கொண்டிருந்ததாக வரும் செய்திகள் உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கின்றன. புலிகளின் அரசியல் குறித்து, தமிழீழ அரசின் ஆட்சி குறித்து உலகத்தமிழர்களிடையே கட்டமைக்கப் பட்டிருந்த பிம்பங்களின் வழியே அதுவரை ஈழப்போராட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இந்த முடிவு பேரதிர்ச்சியாகவே இருந்திருக்கும். யாருமே இந்த முடிவை எதிர்பார்த்திருக்கவோ நம்பவோ செய்திருக்க மாட்டார்கள்.

எந்த ஒரு போராட்டத்தின் வீழ்ச்சியையும் நாம் ஆராயப் புகும்போது, புறக்காரணிகளோடு அதன் அகக்காரணிகளையும் சேர்த்தே ஆராயும் போதுதான் அதன் முழுப்பரிமாணம் தெரியவரும். எவ்வித புனிதக் கட்டுமானங்களின் பெயராலும் உண்மையை மறைக்க முயல்வதென்பது அழுகிய முட்டையை அடைகாப்பது போன்று எந்தப்பயனுமற்றது. புலிகளின் வீழ்ச்சியோடுதான் அந்த செயற்கை பிம்பத்தின் வீழ்ச்சியும் தொடர்கிறது.
தான் பேச வருகிற பொருள் குறித்து எந்த அடைப்புக்குள்ளும் அடங்கிக் கொள்ளாமல் பேசவேண்டுமென்ற வேட்கையாலும் நேர்மையான உந்துதலாலும் முன்நகர்த்தப்படும் படைப்பாளிகளால் மட்டுமே சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும். அவ்வகையில் சமீபத்தில் நான் வாசித்த ’அவலங்கள்’ சிறுகதைத் தொகுப்பை ஒரு நேர்மையான படைப்பாகக் கருத முடிகிறது. சாத்திரியின் எழுத்து, ஏற்கனவே கட்டமைக்கப் பட்டிருந்த பிம்பங்களுக்கும் உண்மைக்கும் இடையே ஊடறுத்துப் பயணிக்கிறது. பொது வெளியில் பேசப்படாத புலிகளின் கடந்த காலத்தை எந்தச் சமரசமுமின்றி உரக்கப்பேசுவதன் மூலம் கற்பனை பிம்பங்களை உடைத்தெறிகிறது. புதிய விவாதங்களுக்கான வெளியைத் திறந்து விட்டிருக்கிறது. அதனாலேயே சாத்திரி பலவித எதிர்ப்புகளைச் சம்பாதித்தும் கொண்டிருக்கிறார்.
பௌத்தப் பேரினவாத ஒடுக்குமுறையக் கண்டுவளர்ந்த, இன விடுதலையை இலட்சியமாகக் கொண்ட, தமிழீழ கணவுகண்டு இயக்கங்களில் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களைப்போலவே, யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து வளர்ந்த சாத்திரியையும் வீரஞ்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டம் தன்னுடன் இனைத்துக் கொண்டது. புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்ட சாத்திரி இப்போது பிரான்சில் வசிக்கிறார். அவரது கடந்தகால நினைவுகளைத் தொட்டுச் செல்லும் அவரது முதல் புதினமான ஆயுத எழுத்து வெளிவந்தபோதே பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டவர்.
பிரபாகரன் மரணத்தைத் தொடர்ந்து பலவிதமான குழப்பங்களும் வதந்திகளும் நிலவிய சூழலில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமான தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட நிகழ்வானது, எவ்வித விமர்சனங்களுக்கும் அஞ்சிடாமல் ஒளியைப்போல நேர்கோட்டில் பயணிக்கிற சாத்திரியின் உளவலிமைக்குச் சான்று. ஒரு மாபெரும் வரலாற்றுக் காலகட்டத்தின் நிகழ்வுகளையும், ஒரு பேரழிவைச் சந்தித்து நிற்கிற மக்களின் வாழ்வியலையும், தனது சொந்த அனுபவங்களையும் புனைவின் வழியே எந்தவிதப் பாசாங்குகளுமின்றி நேர்மையாகக் கடத்தத் துணிகிற யாருக்கும் தேவையான உளவலிமை சாத்திரிக்கு உள்ளது.
பதட்டத்தோடு ஓடிவருகிற ஒருவன் சட்டென நம் கைகளைப் பற்றிக் கொள்ளும்போது அந்த நபரது பதட்டம் நமக்குள்ளே கடத்தப்படுவதுபோல ’அவலங்களின்’ கதைமாந்தர்கள்; அதை வாசிக்கிற வாசகனுக்குள் ஒருவித பதட்டத்தோடு நுழைந்துவிடுகிறார்கள். அந்தப் பதட்டத்தை கொஞ்சமும் மிச்சமின்றி நமக்குள் இறக்கிவைத்து விடுகிறார்கள். சாத்திரியை வாசிக்கத் தயாராகும் ஒருவனுக்கு சாத்திரியைப்போலவே திடமான உளவலிமை தேவைப்படுகிறது. வெறுமனே அழுகைகளையும் துக்கங்களையும் எழுத்தாக்கி கழிவிறக்கம் தேடுகிற சராசரி யுக்திகளை சாத்திரி கையாளவில்லை.

ஒரு பேரழிவு ஏற்படுத்திய பெருந்துக்கத்தின் வலிகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், அப்போது நிலவிய அரசியல் சூழல் ஏற்படுத்திய ஏமாற்றங்களை, துரோகங்களை, உள்ளார்ந்த வலிகளாகச் சுமந்து திரிகிற சாதாரனமான மனிதர்களின் கதைகள் இவை. அந்தக் கதைமாந்தர்கள் அரசியல் பேசவில்லை, ஆனாலும் அக்காலகட்டத்தில் செல்வாக்கு செலுத்திய அரசியல் நிலைமைகளை நமக்குப் புரியவைக்கிறார்கள். அந்தக் கதை மாந்தர்களின் வலியை, கதைக்களத்தின் அரசியலை நமக்குள் நேர்த்தியாகக் கடத்திவிடுகிற வித்தையில் சாத்திரி நிச்சயமாக வென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். உண்மைக்கும் புனைவுக்கும் இடையேயுள்ள மெல்லிய திவலைகளின்மீது இந்தக் கதைகளை அதன்போக்கில் மிதக்க விட்டிருப்பதே சாத்திரியின் வெற்றி.
சாத்திரியின் கதாப்பாத்திரங்கள் விசித்திரமானவர்கள். வாசிக்கிற அனைவரின் மனதிலும் பல நாட்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்களின் ஆழ்மனப் போராட்டங்கள், அவர்களின் அந்தரங்கங்கள், எதிர்கொள்ளும் சவால்கள், புலம்பெயர் வாழ்வின் வலிகள், துரோகங்கள், விரக்திகள் இவையனைத்தையும் திறந்த மனதோடு வாசிக்கிற ஒருவன், தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிற அத்துனை முன் முடிவுகளையும், புனிதக் கட்டமைப்பாக, நாயக பிம்பமாக அதுவரை ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து உருவகங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

1970 லிருந்து 2016 வரையிலான காலப்பகுதியைக் களமாகக் கொண்ட இக்கதைகள் 2006 லிருந்து 2016 வரையிலான வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் பெண்களின் பெயரைக்கொண்ட பண்ணிரெண்டு கதைகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு. ஈழத்திலும், புலம்பெயர்ந்த பிற தேசங்களிலும் ஈழத்தமிழர்களின் துயரார்ந்த வாழ்வியலை அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக பொருளாதார பண்பாட்டுச் சிக்கல்களை வெவ்வேறு களத்தில் கதைகளாக்கியிருக்கிறார் சாத்திரி. குறிப்பாக பெரும்பாலான கதைகளில் பெண்களையே மைய அச்சாகக் கொண்டு கதைக்களத்தை வார்த்திருப்பதன் மூலம் அந்தக் களங்களில் நிலவிவந்த ஆண்மைய அரசியலை அம்பலப்படுத்துகிறார்.
இந்திய அமைதிப்படையால் இழுத்துச்செல்லப்படும் ராணியக்கா சிதைந்த நிலையில் நிர்வாணமாய்த் தெருவில் கிடக்கிறாள். அதை விவரிக்கிற ஆசிரியர் இப்படிச் சொல்கிறார்.

‘… ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும். அதனால் அவர் தலையை அசைக்க முடியாதபடி ஒரு பெரிய கல்லை தலைப்பக்கமாக வைத்து அதில் அவளது தலைமுடியைக் கட்டி, அமைதிகாக்க வந்த காந்தி தேசத்து அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக்கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.’
இந்திய அமைதிப் படை ஈழத்தமிழ்ப் பெண்களிடம் செய்த அக்கிரமங்களை இதைவிட எப்படி எளிமையாகச் சொல்லிவிட முடியும்? சுயநினைவு திரும்பிய பிறகும்கூட, பலரின் பலநூறு கேள்விகளுக்கு அஞ்சி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாகவே தன் வாழ்வைத் தொடர்கிற ராணியக்கா ஒருநாள் இறந்துபோகிறாள். கதையின் இறுதியில் இப்படிக்கேட்கிறார் ஆசிரியர். ‘இவ்வளவு கொடுமைகளை தன் இளம் வயதில் ராணியக்கா அனுபவிக்க அவள் செய்த பாவம்தான் என்ன?..இந்தக் கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியுமாகும்.’

சாதியப்படிநிலையில் கீழடுக்கிலிருக்கும் சிறுமி மல்லிகாவுக்கு அவனது உயர்சாதி நன்பன் கொடுத்த சட்டையை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். கீழ்சாதிக்காரச் சிறுமி இவ்வளவ நல்ல சட்டை அணிகிறாளென்றால் அது களவெடுத்த சட்டைதானென்று மல்லிகாவோடு அவளது தந்தையையும் அடித்து உதைக்கிறார்கள். உதிரம் கலந்த எச்சிலைத் துப்பிக்கொண்டு அழுதபடியே செல்கிற மல்லிகாவில் துவங்குகிற கதை, அந்தச்சமூகத்தில் முக்கியப் பங்காற்றிய சாதியப்பாத்திரத்தையும், கோவில் நுழைவுக்குக்கூட துப்பாக்கியேந்திப் போராடிய போராட்டங்களையும் சொல்லிச் செல்கிறது.
பெரும் புயலில் பிய்த்தெரியப்பட்ட குடிசைகளைப்போல போர்களால் சிதறடிக்கப்பட்டு மூலைக்கொன்றாய்த் தூக்கியெறியப்பட்ட குடும்பங்களின் அவலங்களை, புலம் பெயர் வாழ்வின் வலிகளை, இழந்துவிட்ட பூர்வீக வேர்களின் வாசத்திற்கும், தஞ்சமடைந்த தூரதேசத்தின் வாழ்விற்குமிடையே ஊசலாடும் உணர்வுப்பூர்வமான தடுமாற்றங்களைச் சொல்லும் சிமிக்கி என்ற கதை.

கடற்புலியாய் இருந்து கண்ணை இழந்து இளமையை இழந்து நம்பிக்கையை இழந்து எல்லாம் இழந்த அலைமகளை திருமணம் செய்துகொள்ளக் கேட்கும் ஜேக்கப்பிடம் ”இயக்கத்துக்குப் போகும்போதே இருபது வயது, பதினைந்து வருட இயக்க வாழ்க்கை, இப்போ வயது முப்பத்தெட்டைத் தொடப்போகிறது, ஒற்றைக்கண்ணும் இல்லை, வசதியும் இல்லை.. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதென்று தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறதில்லை ஜேக்கப்..” என்று சொல்கிற விஜியின் முடிவு உலுக்கியெடுக்கிறது. கடுங்குளிரில் உறைந்து போன விஜியைப் போலவே நமது மனமும் சிலவிணாடிகள் உறைந்துதான் போய்விடுகிறது.

புலம்பெயர் தமிழரான அமுதனைத்தேடி இருவர் வருகின்றனர். அதில் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் அப்பாத்துரையும் ஒருவர். சமீபத்தில் புலிகள் சில பகுதிகளைக் கைவிட்டு பின்வாங்கிய செய்தியை அவர்களிடம் கவலையோடு பகிர்ந்துகொள்ளும் அமுதனிடம், இது ஒரு தந்திரோபாயமான பின்வாங்கலென்றும், தலைவர் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகவும் அதுவே ‘கடைசி அடி’யாக இருக்குமென்றும் அதற்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறதென்றும் சொல்கிறார் அப்பாத்துரை.
பத்தாயிரம் சுவிஸ் பிராங்க் கேட்ட அப்பாத்துரையிடம் அவ்வளவு பெரிய தொகையைத் தன்னால் தர இயலாதென்று மறுக்கிறார் அமுதன். நீங்கள் நன்கொடையாகத் தரவேண்டாம் வங்கிக் கடனாகக் கொடுத்தால் போதும் இயக்கம் தவனை கட்டிவிடுமென்று சொல்லி அமுதனின் பாஸ்போட் விசா மற்றும் சில பத்திரங்களில்கையெழுத்தும் பெற்றுச் செல்கின்றனர்.
வங்கியிலிருந்து ஒரு லட்சம் பிராங்க் கடன் பெற்றதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிர்ச்சியடையும் அமுதன் அப்பாத்துரையிடம் அதுகுறித்துக் கேட்கிறார். இயக்கம் தேவை கருதி சிலரது கணக்கில் அதிகப் பணம் பெற்றதாகச் சொல்கிறார் அப்பாத்துரை.
ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை, முன்னேறிக்கொண்டிருக்கிறோம் வென்றுவிடுவோம் இதோ ஈழம் அமையப்போகிறது என்றெல்லாம் நம்பவைத்து அமுதனை ஏமாற்றும் அப்பாத்துரை, தன் மச்சினன் பெயரில் பிரம்மாண்டமான ரெஸ்ட்டாரண்ட் அமைத்து செட்டிலாகி விடுகிறார். அமுதன் கடன் காரனாகி, நொடிந்து, குடும்பத் தகராறு பெருகி விவாகரத்து வரை சென்று குடும்பமே சின்னாப்பின்னமாகிப் போவதை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது ’கடைசி அடி’ கதை.

புலியொருவனை இராணுவத்திடமிருந்து அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றும் கைரி என்ற கிழவியின் மகன் வேறு இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற காரனத்தால் சக புலியால் கொல்லப்படுகிறாள். தேடி வந்தபோது கைரியின் மகன் அகப்படவில்லை என்கிற ஒரு காரணமே ’கைரி’ கொல்லப்படுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.
புரட்சிக்குத் துணையாய் வந்தவளுக்குப் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஜெர்மனிக்குத் தப்பியோடிய சுரேந்தர் அங்கிருந்து புரட்சிகர கவிதை பேசுவதை வாணொலியில் கேட்க நேரும் மல்லிகாவின் கதை.
அகதி அந்தஸ்த்து பெருவதற்காக அமைச்சரின் காரை முற்றுகையிடுகிற நாடகத்தை அறங்கேற்றப்போய் அம்பலப்பட்டு காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படும் ரமனனின் கதை.

ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படும் ஒருத்தி பிற்காலத்தில் அவளே பலரை அந்தத் தொழிலில் தள்ளிவிடுகிற நிலைக்குப் போகிற உளவியலை, வாழ்க்கைச் சூழலைச் சொல்கிற கதை பீனா கொலடா.
ஆபத்துகள் நிறைந்த ஆயுதக்கடத்தலில் ஈடுபடும் கடற்புலிகளில் ஒருவன் நடுக்கடலில் இறந்துவிட, அவனை ஒரு தீவில் புதைத்துவிட்டு வருகிற சக புலிகளின் பாசப்போராட்டத்தைச் சொல்கிற முகவரி தொலைத்த முகங்கள் கதை.
போதை மருந்துகளுக்கு அடிமையாகிச் சீரழியும் இளம் தமிழ்ப்பெண்ணின் துயரார்ந்த முடிவைச் சொல்லும் அஞ்சலி என்ற கதை.
என ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கிறபோதும் கண்களை மூடி சில விணாடிகள் பெருமூச்சு விடவைக்கும் அழுத்தமான களங்கள். ஈழப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறானது, அதில் பங்கெடுத்தவர்கள், வென்றவர்கள், தோற்றவர்கள், இனவாதப் பாசிசத்தால் தமிழ் மக்களின் மீது வலிந்து திணிக்கப்பட்ட போர்களால் உயிரிழந்து உடைமைகளையிழந்து வாழ்விழந்த சொத்துக்களையிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கதைகளைத் தன்னுள்ளே சுமந்துகொண்டு காட்டாற்று வெள்ளம்போலப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இக்கதைகள் அதைப் பற்றியவையல்ல.

இவ்வரலாற்றுப் பெரும் பயணத்தில் சொந்த இனத்தால் ஏமாற்றப்பட்ட வஞ்சிக்கப்பட்ட முகவரியற்ற அல்லது முகவரி தொலைந்த , அடையாளப்படுத்தப் படாமல் புறக்கனிக்கப்பட்ட எளிய மக்களின் கதைகள் இவை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முகத்தை எளிய மக்களின் வாழ்வியலை அதன் உள்ளார்ந்த தன்மை சிதையாமல் அழகியலோடு இலக்கியப் படுத்தியிருக்கிற சாத்திரிக்கு நன்றிகளும் வாழ்த்துதோழர்