Navigation


RSS : Articles / Comments


அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.

11:41 AM, Posted by sathiri, No Comment

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.
ஒரு பேப்பரிற்காக நினைவுப்பதிவு சாத்திரி

இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்த்து விடுவது என்கிற முடிவை எடுத்திருந்தனர்.

மோதல் தொடங்கி பதினைந்து நாட்களை கடந்து நீட்டுகொண்டு போனது. ஒரு 24 நாலு மணித்தியத்திலேயோ மிஞ்சி மிஞ்சிப் போனால் 48 மணித்தியாலத்தில் புலிகள் அனைவரையும் பிரபாகரன் உட்பட கைது செய்து ஆயுதங்களை பறித்துவிடலாமென நினைத்திருந்த இந்திய அரசியல் தலைமைகளிற்கும் அதிகாரிகளிற்கும் ஏமாற்றமாகி போனது மட்டுமல்ல அவர்களிற்கு புலிகளினுடனான யுத்தம் கௌரவப் பிரச்சனையாக மாறிவிட்டிருந்தது.அதே நேரம் இலங்கையிலிருந்த இந்தியப்படைகளின் கட்டளை யதிகாரி திபீந்தர் சிங்கிற்கு புலிகளை அழக்கும் நோக்கம் இருக்கவில்லை முடிந்தளவு அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவே விரும்பியிருந்தார். இதனால் இவரிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டிக்சித்திற்கும் முரண்பாடுகளும் தோன்றியிருந்தது. காரணம் டிக்சித்திற்கு புலிகளை விரைவாக அழித்து முடித்துவிடவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.


சமாதான காலத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளுடன் நல்லதொரு நட்போடு பழகியதாலும் தென்னிந்தி பட்டாலியன்கள் குறிப்பாக மெட்ராஸ் பட்டாலியன்களும் (தமிழ்நாட்டு இராணுவத்தினர்) முன்னணி நகர்வு படைகளில் இருப்பதால் தான் புலிகளை அழிப்தற்கு தாமதமாகின்றது என நினைத்த இந்திய உளவுத்துறையும் அரசியல் தலைமையும் இன்னொரு கட்டளை அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி மாற்றங்களை கொண்டுவர எண்ணினர் அதன்படி சீங்கியர்களின் காலிஸ்தான் போராட்டத்தில் இறுதியாக பொற்கோயில் தாக்குதலில் கட்டளையிடும் அதிகாரியாக திறைமையாக பணியாற்றிய தெய்வேந்திர சர்மாவை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இவர் திபீங்தர் சிங்கின் கட்டளைகளிற்கு கீழ்படியாமல் தன்னிச்சையாகவே நடவடிக்கைகளை எடுக்கும் சுதந்திரம் அவரிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாக பலாலியில் வந்திறங்கிய தெய்வேந்திர சம்மா உடனடியாகவே முன்னணி படையணிகளில் மாற்றங்களை கொண்டுவந்தார். புலிகளுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளை மாற்றியவர். தென்னிந்திய பட்டாலியன்களை பின்நகர்த்திவிட்டு (முக்கியமாக தமிழ்நாட்டு இராணுவத்தினர்) வட இந்திய பட்டாலியன்களான சீக்கிய. மராட்டிய.குர்கா படையணிகளை முன்னணிக்கு நகர்த்தினார். அத்தோடு மட்டுமல்லாது அவர் ..காலாட் படையணிகளிற்கு இட்ட கட்டளை என்னென்ன பொருள்கள் அசைகின்றதோ அத்தனையையும் சுட்டுத்தள்ளியவாறு முன்னேறுங்கள் என்றதுதான்.


அதே நேரம் புலிகளின் மோசமான கண்ணி வெடித் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னேறும் இராணுவத்தினரிற்கு கனரக ராங்கி படையணியினர் பாதைகளின் தடைகளை அகற்றி கொடுக்குமாறும் எந்தத் தடைகள் வந்தாலும் தாங்கிளால் தகர்த்தபடி முன்னேறும்படி கட்டளையிட்டிருந்தார். சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணும் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளை கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பெருள்களான நாய் பூனை ஆடு மாடு.மனிதர்களையெல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள. அசையாது நின்ற கட்டிடங்கள் மரம் செடியெல்லாவற்றையும் ராங்கிகள் தகர்த்தபடி முன்னேறினர். யாழ்குடாவின் பிரதான சாலைகளை சில நாட்களிற்குள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த இந்திய இராணுவத்தினரின் அடுத்த இலக்கு சுதுமலையம்மன் கோயில் ஆகும்.

அதற்கு காரணம் இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பொழுது பிரபாகரன் முதன் முதலாக மக்கள் முன் தோன்றி உரையாற்றியது சுதுமலையம்மன் கோயிலில்தான். அதே நேரம்.இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளை சந்திக்க வந்திறங்கியது இந்தியாவிலிருந்து பிரபாகரன் வந்திறங்கியது எல்லாமே சுதுமலையம்மன் கோயில் சுற்றாடலில்தான். அது மட்டுமல்ல அதே சுற்றாடலில் புலிகளின் இரண்டு பெரிய ஆயுத தொழிற்சாலைகளும் அப்பையா அண்ணை தலைமையில் இயங்கியது. இந்த விடையங்கள் இந்திய உளவுத்துறையினரிற்கு தெரியும்.

எனவேதான் காலிஸ்தான் அமைப்பினர் பொற்கோயிலை தலைமையிடமாக வைத்து அங்கு பெருமளவு ஆயுதங்களையும் குவித்து இந்திய இராணுவத்துடன் போரிட்டனரோ அதே போலவே புலிகளின் முக்கிய தலைவர்கள் சுதுமலையம்மன் கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாமென இந்திய இராணுவம் நினைத்தது. சர்மா தலைமையில் ஏழு முனைகளில் இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை நோக்கி நகர்ந்தது. 21 ந் திகதி நற்றிரவு சுதுமலை மானிப்பாய் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த இராணுவத்தினர் அனைவரது வீடுகளிலும் புகுந்து அங்கிருந்தவர்களை ஒரு அறைகளில் போட்டு பூட்டிவிட்டு அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அம்மன் கோயிலிற்குள் தாக்குதலை நடத்தி புகுந்து கொள்ள காலை புலரும்வரை காத்திருந்தனர்.

அதிகாலையானதும் மெல்ல நகர்ந்த டாங்கி படையணியினர் அம்மன் கோயிலை சுற்றி வழைத்து நிறுத்தப்பட்டனர். காலை 5.30 மணியளவில் டாங்கிகளின் குண்டுகள் அம்மன் கோயிலை நோக்கி சீறிப்பாய்ந்தது. கோயிலின் வடக்கு கோபுரம். மணிக்கூண்டு கோபுரம்.தெற்கு மதில் சுவர். எல்லாம் சிதறியது. கோயிலின் பின்னாலிருந்த நூற்றாண்டு கடந்து பரந்து விரிந்திருந்த ஆலமரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தது. அதுவரை காலமும் சனி விதரத்திற்கு போடும் சோத்தையு ம் பலிபீடத்து புக்கையையும் கொத்தி சாப்பிட்டு விட் சந்தோசமாய் அந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்ந்த காகங்கள் பலதும் செத்துவிழ மீதி காகங்களோ காலங்காத்தாலை எந்தச் சனியன்கள் எங்கடை கூட்டை பிரிச்சது எண்டு நினைத்தபடி கா கா எண்டு திட்டியபடியே பறந்து போனதே தவிர கோயிலிற்குள் இருந்து எந்த பதில் தாக்குதலும் வரவில்லை.

சில நிமிட இடைவெளி விட்டு மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியவர்கள் ஆச்சரியத்தோடு கோயிலின் உள்ளே நுளைந்து தேடினார்கள் யாரும் அங்கிருக்கவில்லை. சர்மாவுக்கு சரியான கோபம்.யாரடா இந்த கோயிலின்ரை பூசாரி தேடிப்பிடிச்சு இழுத்து வாங்கோ என்று கட்டளையிட்டார். அந்தக் கோயில் ஜயர் பக்கத்திலேயே தான் குடியிருந்தார். அவர் சின்ன வயதிலை போலியோ நோயாலை தாக்கப்பட்டு கால்கள் சூம்பிப் போய் சரியாக நடக்க முடியாதவர். அவரை தேடிப்பிடிந்து இரண்டு இராணுவத்தினர் தூக்கிக் கொண்டுவந்து சர்மாக்கு முன்னாலை போட்டார்கள். சர்மா ஜயரிட்டை எங்கை எல் டி டி ..எங்கை ஆயுதம்.. எண்டு ஆங்கிலத்திலை கத்த ஜயருக்கு ஒண்டும் விழங்கேல்லை உடைனை ஒரு தமிழ் ஆமி ஓடிவந்து எல் டி டி எங்கை ஆயுதம் எங்கை ஆயுதம் எண்டு கேட்டார். ஜயரும் எல் டி டியை. நீங்க ளும் அவைய அவையளும் இந்த கோயிலுக்கு முன்னாலை சந்திச்சு கதைக்கேக்குள்ளைதான் கடைசியாய் கண்டனான் என்றவர்

ஆயுதம் அங்கையிருக்கு எண்டு அம்மனின்ரை கையிலை இருந்த வாளையும் முருகனின்ரை கையிலை இருந்த வேலையும் காட்டினார். அதோடை அவர் நிப்பாட்டியிருக்கலாம் ஆனால் பக்கத்திலை பிள்ளையார் இருக்கிறார் அவரிட்டை ஆயுதம் இல்லை கையிலை மோதகம்தான் இருக்கு எண்டதும் நக்கலா....என்றபடி ஜயருக்கு நாலைஞ்சு அடி போட்டு கலைச்சு விட்டிட்டாங்கள். இயக்கத்தையும் ஆயுதத்தையும் காட்டிக் குடுக்க நான் என்ன விசரனோ எண்டு புறு புறுத்தபடி ஜயர் போயிட்டார். இந்திய இராணுவமும் கோயில் வீதியிலை பலஇடத்திலை கிடங்கு தோண்டிப்பாத்திட்டு போய் விட்டார்கள்.

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

8:24 AM, Posted by sathiri, No Comment


இந்தவார ஒரு பேப்பரிற்காக
சாத்திரி

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27
இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்கள் மற்றையவர்கள் விலை போனவர்கள் இலங்கை இந்திய உளவாளிகள் என மாறி மாறி அறிக்கைப் போரும் தொடங்கி விட்டனர்.

இதில் ஒரு பிரிவினர் புலிகள் அமைப்பில் இருந்து மே 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படைகளிடம் சரணடைந்தும் வேறு விதங்களில் தப்பியோடி ஜரேப்பாவிற்குள் நுளைந்தவர்கள். இவர்களின் வாதமென்னவென்றால் கடந்த காலங்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பல தவறுகளை விட்டுவிட்டார்கள் அதுதான் புலிகளின் அழிவிற்கும் புலிகள் மீதான தடைக்கும் காரணம். பெருமளவான நிதியினையும் இவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள்
எனவே அந்த நிதி மற்றும் சொத்துக்களை தாங்கள் பொறுப்பெடுத்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை தாமே நகர்த்தப் போவதாகவும். இனி வருங்காலங்களில் தாமே புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.. இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது கடந்த காலங்களில் புலிகளின் அனைத்துலகச்செயலகத்தினரில் பலர் நிதி மோசடி. தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்காக மற்றைய உறுப்பினரை காட்டிக்கொடுத்தல்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை வியாபாரமாக மாற்றியது என பலவிடையங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் மாவீரர் நாள் புலம் பெயர் தேசங்களில் புனிதமாக நடைபெற வேண்டுமென மாவீரர் குடும்பங்கள் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் புதிதாய் வந்திறங்கியவர்கள். பழைய நிருவாக சீர் கேடுகளை மாற்றியமைப்பவர்களாகத் தெரியவில்லை.
அதற்கான காரணங்கள். புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்து விட்ட பிறகு இனி வரும் காலங்களில் அனைத்து போராட்டங்களும் ஆயுதமற்ற வன்முறையற்ற அரசியல் மற்றும் சனநாயக ரீதியிலான மென்முறைப்போராட்டங்களே. இதனை யாரும் ஒழித்திருந்து பலபெயர்களில் செய்ய வேண்டிய தேவையில்லை. பகிரங்கமாவே செய்யலாம் கைகளில் புலிக்கொடி ஏந்தி தலைக்கு மேலே தலைவர் பிரபாகரனின் படத்தை உயர்த்திப் பிடித்தபடியே செய்யலாம் எவ்வித தடையும் இல்லை.


ஆனால் புதிதாக வந்தவர்களோ ஒவ்வொரு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் அதுவும் புலிகளின் அமைப்பில் இருந்த தளபதிகள் அல்லது பழைய உறுப்பினர்களின் பெயர்களான வினாயகம்.சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்.கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன். என்கிற பெயர்களில் நடமாடுவதோடு. பல இரகசியக் கூட்டங்களை மட்டுமே இதுவரை ஜரோப்பிய நாடுகளில் நடத்தியுள்ளனர். தாங்களே இறுதிவரை தலைவருடன் முள்ளி வாய்காலில் நின்றதாக கூறிக்கொண்டு புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்.

அதே நேரம் ஜரோப்பிய நாடுகளில் இவர்களது அகதி தஞ்சக் கோரிக்கைகள் இன்னமும் அனுமதிக்படாமலேயே சரியான ஆவணங்கள் கடவுச்சீட்டு இன்றி இவர்களால் எப்படி எல்லைப் பாதுகாப்பு கூடிய இங்கிலாந்து சுவிஸ்.நோர்வே . டென்மார்க் போனற நாடுகளிற்கொல்லாம் சுதந்திரமாக போய் இரகசியக் கூட்டங்கள் நடாத்த முடிகின்றது என்பதனையும் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.விடுதலைப் புலிகள் தடைசெய்யப் பட்டுள்ள ஜரோப்பிய நாடுகளில். தாங்கள் அந்த அமைப்பின் அசல் பிரதிநிதிகள் என சொல்லித் திரியும் பொழுது இவர்களை இயங்கவிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்டு உளவுத்துறையினர் இவர்கள் விடயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என நாம் எடுத்துக்கொள்லாமா?? அல்லது தீவிரவாத எதிர்ப்பு அணுகு முறையின்(counter insurgency) அடிப்படையில் அவர்களது ஆதரவும் உள்ளது என எடுத்துக்கொள்லாமா??அல்லது எல்லாமே இந்த நாட்டு உளவமைப்புக்களிற்கு தெரியாமல் நடக்கின்றது என சொல்ல வருகின்றார்களா?? இது பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படும் வரை இவர்கள் மீதான சந்தேகங்கள் தொடரும்.அதுவரை இவர்கள் மீதான சந்தேகங்கங் தொடரும்.


அடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.

எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....மக்களும் வரமாட்டார்கள்.