Navigation


RSS : Articles / Comments


துவாரகா என்னும் தூ வானம் .. யாரால் .. எதுக்காக ..

8:26 AM, Posted by sathiri, No Comment

துவாரகா என்னும் தூ வானம் .. யாரால் .. எதுக்காக .. இலங்கையில் உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்து விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது மனைவி பிள்ளைகள் அனைவருமே குடும்பத்தோடு கொல்லப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும் மழை விட்டாலும் தூவானம் விடவில்லையெனபாதைப்போல அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் நான் அவரோடு பேசினேன் என்று வருடா வருடம் யாராவது ஒரு புரளியை கிளப்பிக்கொண்டிருப்பார்கள். அப்படி புரளி கிளப்புகிறவார்களில் தமிழ் நாட்டிலிருக்கும் நெடுமாறனும் . காசியானந்தனும் முக்கியமானவர்கள். வழமை போல இந்த வருட ஆரம்பத்திலும் அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைத்து பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் மேலதிகமாக அவர் விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்றொரு அறிவிப்பையும் செய்து விட்டிருந்ததால் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அவர் வருவாரா என்றொரு சலசலப்பு ஏற்பட்டது . இன்றைய அவசர உலகில் அந்த செய்தியும் அப்படியே அனைவருக்கும் மறந்து போனது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இது பற்றியெல்லாம் எந்தக்கவலையுமில்லை ஏனெனில் அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதோடு இன்றைய அவர்களின் தேவைகளும் வாழ்வியலும் வேறொரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டது மட்டுமல்ல யுத்தம் என்கிற வார்த்தையையே அவர்கள் வெறுக்கிறார்கள் . பிரபாகரன் வருகிறார் என்கிற அறிவிப்பை எல்லோரும் மறந்து விட்டிருந்தவேளை யுத்தத்தில் மரணித்த புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்தபோது அதே நெடுமாறனும் காசியானந்தனும் ஒருஅறிவித்தலை வெளியிட்டார்கள் இந்தத்தடவை பிரபாகரன் அல்ல அவரின் மகள் துவாரகா உயிரோடு இருக்கின்றார் அவர் மாவீரர் தினத்தன்று மக்களுக்கு உரையாற்றுவார் என்கிற அறிவிப்புதான் அது . சரி இந்த அறிவிப்புகள் எதற்கு .. யாரால் என்று பார்த்து விடலாம் .. புலிகள் தோற்றக்கடிக்கப்பட்டு அதன் தளபதிகளும் தலைமையும் அவர் குடும்பமும் கொல்லப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் புலிகளினதும் அவர்களின் பினாமிகளின் பெயர்களில் இருந்த பல மில்லியன் சொத்துக்களை பிரித்தெடுப்பதிலும் இறுதி நேர யுத்தத்தில் மக்களிடம் பெறப்பட்ட பணத்தை பங்கு போட்டுக் கொள்வதிலும் அந்த அமைப்பின் வெளிநாட்டில் இயங்கிய கிளை அமைப்புகளான அனைத்துலக செயலகம் . தலமை செயலகம் . தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆகியவற்றுக்குள் மோதல்கள் இடம்பெற்றதோடு அனைத்துலக செயலகத்தின் பிரான்ஸ் பொறுப்பாளர் பரிதி என்பவர் கொல்லப்படும் அளவுக்கு நிலமைகள் மோசமாக இருந்தன. சொத்துக்களை பிரித்தெடுப்பதுக்காக கால அவகாசம் தேவைப்பட்டதாலும் அதற்குள் நடந்த பிரச்சனைகளை மக்களுக்கு மறைப்பதுக்காகவுமே பிரபாகரன் இறந்து விட்டார் என்கிற செய்தியை மறுத்து அவர் உயிருடன் இருக்கிறார் விரைவில் வருவார் என முதன் முதலில் அறிக்கை விட்டதே இந்த அமைப்புக்கள் தான் . இந்த மோதல்களினால் அந்தந்தநாட்டு காவல்துறை தலையிட்டதும் இது புலிகளின் பினாமி சொத்துக்களுக்கான சண்டை என்றறிந்து சில சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப் பட்டது. முதலுக்கே மோசம் வந்து விட்டாதென்று சண்டையிட்டவர்கள் விழித்துக்கொண்டு மேல் மட்டங்களிலிருந்த பொறுப்பாளர்கள் சமாதானமாகி சொத்துக்களை பிரித்தெடுத்துக்கொண்டு வெவ்வேறு திசையாக சென்று விட .. மக்களிடம் இறங்கி வேலை பார்த்து அவர்களிடம் நிதி சேகரித்துக் கொடுத்த அடுத்த நிலையிலிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் .. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்களே அது போல நிதி சேகரித்து கொடுத்து அதில் ஒரு பகுதியை பொறுப்பாளர்களிடமிருந்து பெற்று வேலைக்கு செல்லாமல் அதிலேயே வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக்கு செல்வதென்பது பெரும் சிரமாக இருந்தது. எனவேதான் மீண்டும் மக்களிடம் நிதி சேகரிக்க புதிய புதிய யுக்திகளை கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டார்கள். சிறையிலிருக்கும் போராளிகளை வெளியே எடுக்கிறோம் . யுத்தத்தில் காயமடைத்த போராளிகளுக்கு உதவி . மறு வாழ்வு உதவிக்கு என்று இவர்களின் நிதி சேகரிப்புகள் தொடர்ந்து கொண்டே தானிருந்தது. ஆனால் கடந்த கால அனுபவங்களால் மக்கள் இவர்களை நம்பாமல் முடிந்தளவு நேரடியாகவும் தங்கள் உறவுகள் மூலாமாகவுமே உதவிகளை செய்யத் தொடங்கி விட்டிருந்தார்கள். இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் சிலர் சேர்ந்து பெரியளவில் ஒரு நிதி சேகரிப்பை செய்துவிட்டு அதோடு ஒதுங்கி விடுவது என்கிற முடிவை எடுக்கின்றனர் அப்படி சுவிஸ் நாட்டை சேர்ந்த அப்துல்லா என்கிற செல்லையா ஜெயபாலன் தலைமையில் கிருபாகரன் (பிரான்ஸ் ) சேரமான் என்கிற சிறீஸ் கந்தராஜா (இங்கிலாந்து ) அருணா (இவர் பிரபாகனின் மனைவி மதி வதனியின் மூத்த சகோதரி இங்கிலாந்து ) இன்பரசா (இலங்கை ) சிவாஜிலிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை) மற்றும் தமிழக்கத்திலிருந்து நெடுமாறன். காசியானந்தன். வ. கவுதமன் ஆகியோர் ஒரு கூட்டணி அமைக்கின்றார்கள். இப்படி அவர்கள் அமைத்த பெரிய கூட்டணியின் குரல் தரவல்ல அதிகாரிகளாக நெடுமாறனும் காசியானந்தனும் நியமிக்கப் படுகிறார்கள்.வழமை போல இவர்கள் கூட்டணியில் சேர்ந்து கொள்ளும் வை. கோவும் .. திருமாவும் இம்முறை நழுவி விட்டிருந்தார்கள் . அவர்கள் ஆளும் தி. மு. க கூட்டணியில் அங்கம் வகிப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் . சீமானையும் இந்தக் கூட்டணியில் இணைப்பதுக்காக சில முயற்சிகள் நடந்தது . ஆனால் அவரே பிரபாகரன் உயிரோடு இல்லை என்கிற துணிவில்தான் ஆமைக்கறி . அரிசிக்கப்பல் என்று கதை விட்டு தன் அரசியலை நடத்திக்கொண்டிருக்கும்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லும் கூட்டணியில் சேர்ந்து தனக்குத தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ள மாட்டார் . அதனால்தான் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்கிற நிருபர்களின் கேள்விகளுக்கு அப்படியா வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நழுவிப் போய்கொண்டிருந்தார் நெடுமாறனும் காசியானந்தனும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரபாகரன் வருகிறார் என்று அறிவித்த பின்னர் இவர்கள் திட்டத்தின் படி இந்த வருட மாவீரர் தினத்தில் பிரபாகரனின் குரலில் ஒரு உரை ஒலிப்பதிவை தயாரித்து வெளியிடுவதே இவர்களின் நோக்கமாகும் . அதுக்காக தமிழகத்தில் சில மிமிக்கிரி கலைஞர்களை நாடியிருக்கிறார்கள் . அவர்களோ .. பிரபாகரன் குரலா ஐயையோ ஆளை விடுங்க சாமி என்று ஓடிவிட்டார்கள். அதை விட வேறு சிக்கல்களும் இருந்தது தமிழக உளவுத்துறையிடமோ காவல் துறையிடம் மாட்டினாலோ அவ்வளவுதான் . அடுத்த சிக்கல் கதைப்பவர் யாழ்ப்பாண பேச்சுமொழியிலும் கதைக்க வேண்டும். எந்தவொரு தமிழகத்தவராலும் யாழ்ப்பாண பேச்சு மொழியில் கதைக்கவே முடியாது ஏதாவதொரு உச்சரிப்பில் பிழை விட்டு விடுவார். இது பொதுவாகவே ஒரு வட்டார வழக்கில் பேசும் மொழியை இன்னொரு வட்டார மொழி பேசுபவரால் நூறு வீதம் சரியாக பேச முடியாது இது எல்லா வட்டார மொழிகளுக்கும் பொருந்தும். எனவே அந்த திட்டம் கி விடப்பட்டது .. ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் அடுத்ததாக துவாரகாவை களமிறக்க முடிவு செய்தனர். இம்முறை சற்று மாறுதலுக்காக வழமையான நெடுமாறன் காசியானந்தனை தவிர்த்து அருணா மூலம் துவாரகா உயிரோடு இருக்கின்றார் அவரோடு பிரபாகரன் மதி வதனி மட்டுமல்ல 150 போராளிகளும் கூடவே இருக்கின்றார்கள் நான் அவர்களை நேரில் சந்தித்து பேசினேன் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் .அதனை பார்த்த எல்லோருமே இவர்களுக்கு பைத்தியம் முத்தி விட்டது என்று நினைத்து தங்களுக்குள் சிரித்தபடி கடந்து போய் விட்டிருந்தனர். அந்த அறிவிப்புக்கு பெரியளவில் எதிர்வினை எதுவும் வராததால் மக்கள் அதனை நம்பி விட்டதாக நினைத்தவர்கள் துவாரகாவையும் அவரது செல்லக் குரலுக்கான தேடலையும் தொடங்கினார்கள் அவர்களின் தேடலில் கிடைத்தவர்தான் சுவிஸ் நாட்டில் வசிக்கும் மித்துஜா என்கிற பெண் . இவர் விவாகரத்து பெற்று ஒரு குழந்தையோடு தனியாக வாழ்ந்து வருபவர் மட்டுமல்ல ஒரு ஏமாற்றுப் பேர்வழி . இவர்தான் துவாரகா என்னும் பெயரில் உரையாற்றியிருந்தார் . அதனை யாரும் நம்பவில்லை என்பதோடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்கள் கடும் எதிர்பினையும் வெளியிட்டதையடுத்து இவை யாவும் இந்தியா உளவுத்துறையின் சதி வேலையென சொல்லி சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர் .. உண்மையில் இந்தியா இப்படியொரு வேலையை செய்திருப்பின் நான்கு திட்டமிட்டு ஓட்டு மொத்த இந்தியா முழுதும் அலசி துவாரகாவின் உருவத்தையொத்த ஒருவரை தேடிப்பிடித்து அவருக்கு மேலும் சிகிச்சைகள் மூலம் துவாரகா போலவே மாற்றியமைத்து ஒரு ஈழத்து பெண்ணை பேச வைத்து அதனை அவர்கள் தயார் செய்த துவாரகாவின் வாயசைவுக்கு ஏற்றதுபோல எடிட் செய்து எல்லோரும் நம்பும் படியானதொரு காணொளியை தயாரித்திருக்க முடியும் அதுக்கான வசதியும் தொழில் நுட்பமும் இன்று உண்டு . இப்படி அவசரமாக தயாரிக்கப்பட்ட மோசமான காணொளியை வெளியிட்டிருக்க மாட்டார்கள் .. அடுத்து இலங்கை விடயத்தில் இலங்கையில் இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியா நேரடியாக முதலீடுகள் மூலமாக தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தொடங்கி விட்டது எனவே இது போன்ற சிறு பிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட வேண்டிய தேவையில்லை இன்றைய வளர்ந்து விட்ட தொழில் நுட்ப காலத்தில் அப்படி செய்யவும் முடியாது அம்பலப்பட்டு விடும் .. உடலை வளைத்து வேலை செய்யாமல் அடுத்தவர் பணத்திலேயே வாழ்ந்து பழக்கப் பட்டு விட்டவர்களே இனியும் மக்களை ஏமாற்ற முடியாது எனவே இனிமேலாவது உழைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்

ஆயுத எழுத்து நூல் வெளியீட்டுக்கு வ.கவுதமன் என்கிறவரின் எதிர்ப்பு பத்திரிகை அறிக்கை

9:58 AM, Posted by sathiri, No Comment

என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! எங்கேயாவது, எப்பொழுதாவது தமிழ் இனத்திற்கு ஒரு விடியல் பிறந்து விடாதா என உலக தமிழினம் காத்து கிடக்கின்ற வேளையில் எதிரிகள் இடைவிடாது துன்பங்களையும், துயரங்களையும் தந்து கொண்டேயிருப்பது ஒரு புறமென்றால், எம் இனத்தில் பிறந்து எம் மொழி பேசும் வேறு சிலரோ அதனினும் கொடிய நிகழ்வுகளில் ஈடுபடுவதுதான் துயரத்திலும் துயரமாக மனசெல்லாம் வலிக்கிறது. 2009 வரை எங்கள் ஈழ தலைமையையும், எங்கள் போராளிகளின் புனிதத்தையும் புகழ் பாடியவர்களும், அல்லது வாய்மூடி மவுனித்து கிடந்தவர்களும் இப்பொழுது மார்த்தட்டிக் கொண்டு படைப்புகள் செய்து நீதிமான்களாக காட்டிக்கொள்வது என்பது வெட்கத்திலும் வெட்கக்கேடான செயல். "ஆயுத எழுத்து" இந்த படைப்பு யாருக்கு சாதகமாக எழுதப்பட்டது. தமிழினத்திற்காகவா? தமிழினத்தை அழிக்க நினைக்கின்ற எதிராளிகளுக்காகவா? "சனல்4 "தயாரித்த ஆவணப்படத்தினை வெள்ளையர்களே அதுவும் ஐநா மன்றத்தில் பார்த்து கதறி கதறி அழுதார்களே, அதனைப்பற்றி தமிழ் இரத்தம் ஓடுகின்றவர்கள் எத்தனை பேர் எழுத்தில் ஆவணமாக்கினீர்கள்! எம் போராளி பெண்களை ஆடை களைந்து இறந்த நிலையில் சிங்கள காடையர்கள் வன்புணர்ச்சி செய்தார்களே... எத்தனை பேர் எழுத்தில் செதுக்கினீர்கள்! எங்கள் நிலம் இன்றும் பறிக்கப்படுகிறதே, எங்கள் சகோதரிகள் நான் எழுதி நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே இதனைப்பற்றி ஏன் உங்கள் விரல்கள் எழுதவில்லை? எழுதாது... உங்கள் விரல்கள் அடங்கி உள்ளங்கைகள் எங்கள் எதிரிகளிடம் "பலமாக" கைக்குலுக்கியிருக்கின்றன. என் மண்ணை, எங்கள் மக்களை, எம் உரிமைகளை - ஆளவந்த, அழிக்க வந்த,அபகரிக்க வந்தவர்களை எதிர்ப்பதற்க்குத்தான் எங்கள் தலைமை ஆயுதப்போராட்டத்தை கையிலெடுக்க நேர்ந்தது. அதற்காகத்தான் எங்கள் குடும்பத்திலிருந்தே எங்கள் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து போராடினார்கள். இவ்வளவு பேசும்,எழுதும் நீங்கள் சொல்லுங்கள் - எங்கள் போராளிகள் யாராவது ஒரு சிங்கள பெண்ணை சிதைத்ததாக ஆதாரம் காட்ட முடியுமா? ஒரேயொரு அப்பாவி சிங்கள குடும்பத்தையாவது கொண்று போட்டதாக ஆவணங்களை எடுத்து வைக்க முடியுமா? கிட்டத்தட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் போராளி தெய்வங்களை கொச்சைப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வி.சேகர் "ஆயுத எழுத்து" புத்தக விவாதத்தில் அவரும் பங்குபெறுவதாக அறிந்து சொல்ல முடியாத வேதனையோடு அவரை தொடர்பு கொண்டு நான் பேசிய போது "உன் உணர்வை புரிஞ்சுக்கிறேன், இரவு அந்த படைப்பை படித்துவிட்டு உன்னிடம் பேசுகிறேன்" என்றார்- நேற்று 6.01.2015 மதியம் 1.30க்கு நான் அந்த விழாவை புறக்கணிக்கின்றேன், தமிழர்களுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கெடுக்க மாட்டேனென்று உறுதியளித்தது- மனதுக்கு ஆறுதலாக இருந்தது, மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாருக்கும் இல்லாத அக்கறை இவனுக்கு மாட்டும் ஏன் என்று என் இனத்தில் எதிரிகளும் என் இனத்திற்குள்ளாகவே வாழும் விதண்டாவாதிகளும் கேட்கக்கூடும் . தமிழன் ஒருவனுக்கு இந்த உலகின் எந்த மூலையில் தீங்கு நேர்ந்தாலும் அதனை தட்டி கேட்கின்ற உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற முறையிலும் , அதுவும் அந்த தவறு நாங்கள் வாழ்கிற தமிழ் மண்ணில் நடக்கும் போது கைக்கட்டிக் கொண்டு சும்மா வேடிக்கை பார்க்கமுடியாது என்கிற நிலையிலும், எல்லாவற்றிக்கும் மேலாக தாய்தமிழ் மண்ணில் "இனி என்ன செய்ய போகிறோம் " "இறுதி யுத்தம்" : விழவிழ எழுவோம்" எங்கள் அப்பா இப்படி எண்ணற்ற ஆவண படைப்புகளினுடாக தமிழர் மனங்களில் தணலாக எரியவிட்ட ஆவண படைப்பாளன் என்கின்ற உரிமையிலும் இதற்கு கண்டனம் தெரிவிப்பது எனது தார்மீக உரிமை என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கின்றேன் 09-01-15 அன்று நிகழ்விக்கும் நிகழ்வில் பங்கு கொள்ளது மானத்தோடு வெளிவந்த இயக்குநர் வி.சேகர் அவர்களை போன்று -எம் மண்ணுக்காகவும் , மக்களுக்காகவும் வாழ்கின்றேன் என்று சொல்பவர்கள் அந்த விழாவினை புறக்கணித்து வெளிவரவேண்டும். இல்லையென்றால் காலம் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டும். "இவர்கள் எம் இனத்தின் துரோகிகள்" என்று. நன்றி இப்படிக்கு வ. கௌதமன்