Navigation


RSS : Articles / Comments


தாலி பெண்ணுக்கு வேலியா ? சோலியா ?

7:05 AM, Posted by sathiri, 2 Comments

(07டிசம்பர் ஒரு பேப்பரில் வெளியான இவ்வாக்கத்தை தமிழ்மணம் வாசகர்களுக்காகத் தருகிறோம்)

ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ..? நனென்னபாவம் செய்தனான்..? ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....'

24.11.07 மதியப்பொμதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.

45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.

நோய்வாய்ப்பட்டு 21.11.07 அன்றுஇறந்து போன ஒரு தமிழ்க் கணவனின் இறப்பின்பின் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்து முடிந்த கொடுமைக்கு தமிழ்ப்பண்பாடு என்று முத்திரையிட்டு எல்லாம் முடிந்த கதை இனி அதைப்பற்றி என்ன கதையென்று அங்கலாய்ப்போருக்கெல்லாம் இந்தப்பத்தி ஏற்படுத்தப்போகும் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்.

ஒரு இனத்தின் அடையாளத்தை காவும் காவிகள் பெண்களாக முற்கால சினிமா முதல் இக்கால சின்னத்திரை வரையும் உரைத்து உரைத்து மூளையில் பதியப்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்து வளர்ச்சியடைந்த நாடுகளில் தங்கள் சந்ததியை பதியவிட்டிருக்கும் எம்மவர்களுக்குள்ளும் தென்னிந்திய சினிமாவும் சின்னத்திரையும் செலுத்தும் ஆதிக்கமானது புதிதுபுதிதாக சடங்குகளையும் அறிமுகப்படுத்துகிறது.

நித்திரையால் எழும்போதே கல்கிகுஷ்புவும் கோலங்கள் அபியும் இரவு என்னசெய்யப் போகிறார்கள் என்பதே பலரதுமனதில் ஆறாத்துயராக உள்ளது.

சின்னத்திரையும் சினிமாவும் எங்கள் உலகமாக இருக்க உலகில் மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் சாதனைகள் என விண்வெளிவரை பெண்களின் சாதனைகள் உயர்ந்து ஓங்கியிருக்கிறது.

தேச விடுதலையுடன் தமிழீழத் தாயகத்தில் பெண்விடுதலையும் மாற்றங்களும் சத்தமில்லாமல் நடக்க அந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் இன்னும் சம்பிரதாயம் சடங்கு என பெண்களை வருத்தும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

கணவன் இறந்தால் மனைவிக்கு வெள்ளைச்சேலை கொடுத்து சிறுவயது முதலே வைத்தபொட்டும் பூவும் பறிக்கப்பட்டு மூளியாக்கிமங்கலம் என அடையாளமிடப்படும் நிகழ்வுகளிலிருந்து பெண்ணை ஒதுக்கி வைத்தது தமிழ்ப்பண்பாடு. கணவன் பிணத்தின் முன் மனைவியின் மகிழ்ச்சிகளையெல்லாம் பறித்தெடுத்தபோலிப்பண்பாட்டை விதித்து வைத்த ஆதிக்கமனப்பான்மை மிக்கவர்களால் பெண்ணாகப்பிறப்பதே பாவம் என்ற நிலையையே மீதம்வைத்தது.

நூற்றாண்டுகள் கடந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் அங்கங்கே மேற்படி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருப்பது இந்த நூற்றாண்டில் இப்படியுமா என வியக்க வைக்கிறது. இதுவெல்லாம் தமிழ்ப்பண்பாடு எனகொக்கரிப்போருக்கு இந்த நாடுகளின் சட்டத்தை நாடி தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில் யேர்மனிய நகரொன்றில் நடந்த மரணம். இன்னும் 2மணித்தியாலங்களில் உனது கணவன் உயிர் பிரியப் போகிறது என மருத்துவமும் மருத்துவர்களும் சொன்னதன் பின் இருந்த நம்பிக்கைகள் இழந்துஅழுதபடி பக்கத்தில் நின்று தன் துணையின்சாவைச் சந்தித்தாள் ஒருத்தி.

சுவாசத்துடிப்பு ஒவ்வொன்றாய் குறையக் குறைய தந்தையின் இரு காதுகளுக்குக் கிட்ட நின்று குழந்தைகள் 'அப்பா...அப்பா....என அழ....என்ரை தெய்வமே என்னை விட்டிட்டுப் போகாதை...என அவள்கதற....அந்தச்சாவு நிகழ்ந்தேறியது. ஒருகனவு போல அந்தச்சாவு அந்தக் குடும்பத்தை ஆறாத்துயரில் விμத்திவிட்டிருந்தது.

ஆளுக்கு ஒரு சம்பிரதாயம் ஊருக்கு ஒருபண்பாடு உள்ள பெருமை மிக்க இனம் நாமென்ற மார்தட்டலுடன் இறந்த மனிதனை இந்துமத முறைப்படி எரிப்பது என முடிவாகியது. எரிந்து முடியும் சாம்பலை யேர்மனியில் பாதியும் பிறந்த மண்ணில் பாதியும் சடங்கு செய்து கரைப்பது என முந்திரிக்கொட்டை முதலாளிகள் சிலர் முடிவு செய்தனர்.

யேர்மனிய சட்டப்படி பொதுவான தண்ணீர் ஓடும் இடங்களில் சாம்பல் கரைத்தலுக்கு அனுமதியில்லையென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். `உங்கினை ஓடுற ஆறுகளில நாங்கள்கரைச்சா உவங்களென்ன செய்வாங்கள்'சாம்பல் கரைப்புப்பற்றிய கதை முற்றுப்பெறாமல் முணுமுணுப்புகளுடன் நிறைகிறது. கடவுள் இல்லை மதம் இல்லை மனிதமே மேலென்று மார்தட்டுவோர் கூட இத்தகைய போலிச்சடங்குகளை அங்கீகரித்து ஒப்புதல் கொடுப்த்தது ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடிகண்ணே என்ற பதத்தை நினைவூட்டுகிறது.

22.11.07 அன்று இறந்துபோன கணவனின்படத்தைப் பார்த்து அவனால் கட்டப்பட்ட தாலியைப் போடுமாறு சம்பிரதாயச் சாக்கடைக்குள் புதைந்து கிடக்கும் பெண்ணொருத்தியால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அந்த வேண்டுகையை ஏற்கமறுத்து அந்தப்பெண் கதறல்தான் வீட்டில் கேட்டது.

தமிழ்ப்பண்பாட்டின்படி கணவன் கட்டியதாலியை அவன் இறந்தவுடன் கழுத்தில் மாட்டி எரியும் நாளில் கழற்ற வேண்டும், அதுதான்ஒரு பெண் தனது கணவனுக்கு விசுவாசமானவள் என்பதற்கு அடையாளம், தமிழ்ப்பண்பாட்டின்படி தாலி கட்டியவள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும் இந்து சமயம் இதைத்தான் சொல்கிறது, இதைச் செய்யத் தவறினால் இறந்த கணவனின் ஆத்மா சாந்தியடையாதுஎன பலவாறான புலம்பல்கள் புதுக்கதைகள்சொல்லப்பட்டன.

24.11.07 அன்று உறவினர் நண்பர்கள் முன்னிலையில் மரணக்கொண்டாட்டம் நடைபெற்றது. வரவிருந்த ஐயர் வராமல் முக்கியமானவர்கள் என சிலர் முன்னின்று மரணக்கொண்டாட்டம் நடந்தது.

கடுங்குளிரில் மனைவி சேலையுடுப்பிக்கப்பட்டு தாலி அணிவிக்கப்பட்டு இறந்தவரின் சவப் பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சடங்கு ஆரம்பமாகியது.

கதிரையில் வைக்கப்பட்ட நிழற்படத்துக்கு அரப் பெண்ணை, வாய்க்கரிசிபோட்டு இறுதி நிகழ்வாக தாலிகழற்றல்,மணநாளில் முதல் மனைவி கட்டிய கூறைச்சேலையை சவப்பெட்டியில் வைத்தல் ஆரம்பமாகியது.

மேடைக்கு முன்னின்று ஆண்கள் சிலர் சொல்லச் சொல்ல அப்பிடிச் செய் அப்பிடிச் செய்யென அருகில் துணை நின்ற பெண்ணொருவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.

ஐயோ நானிந்தக் கூறையை ஆசைக்குக்கட்டேல்லயே...
கவனமாயெல்லோ காத்துவைச்சிருந்தனான்.....
ஐயோ நானென்னண்டு இதை உங்கடை பெட்டியிலை போட....
சிலநிமிடம் கதறலுடன் கூறைச் சேலை சவப்பெட்டிக்கு விரிக்கப்படுகிறது.

ஐயோ நான்பொட்டு வைக்காமல் வெளியில போகமாட்டேனே என்ரை சந்தோசமெல்லாத்தையும்கொண்டு போட்டியளேயப்பா....
ஓயாத அந்தப்பெண்ணின் அμகை....
மரண வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டவர்களையும் அந்தக் கதறல் கலவரப்படுத்தியது.

இறுதி நிகழ்வாக தாலி கழற்றல் ஆரம்பம்.
ஐயோ நான் கழட்ட மாட்டேன்....
என்னைவிடுங்கோ....
இல்லை நீங்கள் கழற்றி வைச்சால்தான்உங்கடை கணவன்ரை ஆன்மா சாந்திபெறும்கழட்டுங்கோ...
கழட்டுங்கோ....
முன்னின்றஆண்களின் கட்டளைகள் இவை.

ஐயோ பாரப்பா எழும்பி கழட்டிக்க வேண்டாமெண்டு சொல்லப்பா...
நானென்ன பாவம் செய்தனானான்....
உன்னொடை வாழத்தானேயப்பா வெளிநாடு வந்தனான்.....
எனக்கேனிந்த நிலை....
நான் கழட்டிப்போடுறதுக்காக அவரிதை எனக்குக் கட்டேல்ல நான் போடத்தான்இதைக் கட்டினவர்....
நான் கழட்டமாட்டேன்என்னை விடுங்கோ....
உங்களுக்கு உங்களுக்கெண்டு வந்தாத்தான் என்ரை நிலை விளங்கும் என்னை விடுங்கொ.....
ஐயோ கடவுளே ஏனிப்பிடியொரு சம்பிரதாயத்தைப் படைச்சியோ....
என்ரை சந்தோசமெல்லாம் போகுதே.....

இந்தக் கதறலைக் கேட்ட பின்னும் யாரால்தான் அமைதியாக நிற்க முடியும். சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டினேன்.
அவவை விடுங்கோ அவவிரும்பாததை செய்ய வேண்டாம்.

சம்பிரதாயம் என்ற போர்வையில் ஒரு பெண்ணின் விருப்பம் நிராகரிக்கப்பட்டு கட்டாயப்படுத்தலை என்னைத் தவிர சபையில் இருந்த எந்தப் பெண்ணுக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லாமல் போய்விட்டது.

கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஊட்டாமல் ஒவ்வொன்றாய் பறித்தெடுத்தல் எந்தச் சட்டத்தில் எழுதப்பட்ட விதி? கணவன் இறந்தால் உன் கதை சரி என்ற விதியா பெண்ணுக்கு? இதை யார் இயற்றினார்?

முதலில் மனைவி இறந்தால் ஆணுக்கு இப்படியொரு சடங்கு இந்து மதத்தில் இதுவரை இயற்றப்படவில்லையா ?

சபையில் நின்ற ஒரு மனிதர் சபையில் இருந்த தன் உறவுக்காரப் பெண் ஒருவரை அழைத்து போயதைக் கழட்டிவிடுங்கோ அது கழட்டுதில்லை என அழைக்க, சினிமாக்களில் பார்த்தவில்லத்தனமான பாத்திரம் போல அந்தப்பெண் எழும்பி வந்து 'கழட்டுங்கோ எனஅருகில் லண்டனிலிருந்து வருகை தந்திருந்தபெண்ணுமாகச் சேர்ந்து கழட்டு கழட்டென்றுகத்திக் குழறி அந்தப் பெண்ணின் தாலிகழற்றப்பட்டு சவப்பெட்டியின் மேல் போடப்படுகிறது.

இரத்த உரித்துடைய ஆண்களும் பெண்களும் தாலியறுப்புக்குக் காரணமானவர்களும் சேர்ந்து ஒப்பு வைத்துக் கதறி தாலியறுத்து முடிந்தது.

இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத எனது கோபத்தைப் பார்த்த ஒரு பெண் சொன்னார்.

` சாந்தி நாங்கள் முதலில செத்துப்போயிடவேணும் இல்லாட்டி எங்களுக்கும் உந்த நிலைதான் என்றார்'

இதென்ன விதியிது கணவனின் இறப்புடன் மனைவியின் வாழ்வை முடிப்பதா ?

`இப்பவே சாவுங்கோ இளமையிலை போனா இன்னும் நல்லமே.' சொல்லத்தான் வாய் எழுந்தது. ஆனால் அதைச் சொல்லவில்லை நான். நல்லவேளை நெருப்பிருந்தால் நெருப்புக்குள்ளும் அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டிருப்பார்கள். `கணவன் இறந்த துயர் தாளாமல்மனைவி தீயில் எரிந்தாள்' என தலைப்புச்செய்தி வந்திருக்கும்.

எல்லாம் முடிந்து சவப்பெட்டியை சவக்காலை எடுத்துச் செல்லுமுன் அந்த அதிகாரி கேட்டார். கூறைச் சேலையைக் காட்டி பிணத்தை எரிக்கும் போது இதையும் எரிக்கிறதா?
எரிக்கச் சொல்லுங்கோ என்று பலர் சொன்னார்கள். தாலியை அறுத்தவர்கள் தாலியைப் பையொன்றில் திரும்பப்போட்டு பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்தார்கள்.

`தாலி தங்கமென்றதாலை வீட்டுக்குக் கொண்டு போகலாம் கூறைச்சேலை தங்கத்தைவிடமலிவு ஆகையால் எரிக்கலாம்' அந்த இடத்தில் நின்றவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிவிட்டு கனத்த மனதோடு வெளியேறுகிறேன்.

மேற்படி சடங்குபற்றி எல்லோருமே திருப்திப்பட நானும் என்னவனும் முரண்பட்டுக் கொண்டது புதுமையுமில்லை புரட்சியுமில்லை பெண்ணியமுமில்லை. ஒரு இறப்பிற்கு விலை இன்னொரு உயிரை வதைத்தல் இல்லையென்றமனிதாபிமான எண்ணமே தான்.

சடங்கென்று பெண்ணை் கொடுமைப்படுத்தி மரண வீட்டில் வதைப்பது இன்னொரு திருமணத்தைப்பெண் விரும்பாமலிருப்பதற்கான முன்னோரின் உத்தி. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்துமதச் சடங்கு தமிழ்ப்பண்பாடு என பம்மாத்துப் பண்ணுவது சம்பந்தப்பட்டவர்களின்அறியாமைதான்.

தாலிகழற்றலை முன்னின்று செய்வித்தவர்களும் சம்பிரதாயப் பம்மாத்துக்காரர்களும்`சாந்தியென்றவ யார் உதைப்பற்றிக் கதைக்க ?உவவென்ன புரட்சியோ செய்யப்போறா ? உவாக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?உவாடை ஊரிலை உப்பிடியில்லைப்போலை ?உவவுக்கேன் நோகுது ? நாடுநாடாக தொலைபேசியில் என்னைச் சபிப்பவர்கள் அனைவருமே சபியுங்கள். எனக்கு எந்தவித கவலையுமில்லை.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

தர்மஅடி

9:39 AM, Posted by sathiri, No Comment

தர்மஅடி

இந்த வார ஒரு பேப்பரிற்காக

தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம வெளியில் சொல்ல மனம் வராது எப்பவாவது மனசுக்குள்ளை நினைத்து சந்தோசப்பட்டு கொள்ளுவிங்கள். அதே போல நானும் ஒரு மறை தர்ம அடி வாங்கியிருக்கிறேன் என்பதை பெருமையுடன் சொல்வது மட்டுமல்ல அதை நான் மட்டும் மனதுக்:குள்ளேயே நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் வஞ்சக எண்ணம் எனக்கு இல்லை எனவே உங்களிற்கும் தாராள மனதுடன் சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறேன்.இந்த தர்மஅடி விழுகிறது என்றாலே உடனேயே சொல்லி விடலாம் யாராவது பெட்டையுடன் சேட்டை விட்டிருப்பினம் அல்லது ஏதாவது காதல் பிரச்சனையாய் இருக்கும்.

இவை இரண்டையும் தவிர்த்தால் வேறு காரணங்கள் குறைவாகத்தான் இருக்கும்.சரி விசயத்துக்கு வாறன் இதுவும் 80 களில் நடந்த கதைதான்.எங்கள் ஊரில் எங்கள் கோயில் மடத்து நண்பன் ஒருவனிற்கு அளவெட்டி கிராமத்தில் உறவுக்காரர்கள் இருந்தார்கள். அவனும் அந்த உறவுக்காரர்கள் வீட்டிற்கு போய்வந்து கொண்டிருந்த பொழுது அவர்களது அயல் வீட்டு பெண்ணொருவருடன் கடலையை போட்டு காதல் ஏற்பட்டு விட்டது. அந்தக்காதல் கதை கொஞ்சம் ஊருக்குள் கசியத்தொடங்கவே எனது நண்பனை அவனது உறவுக்காரர்கள் தங்கள்: வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விடவே அவனும் எப்படியோ கஸ்ரப்பட்டு வேறு வழிகளில் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து கதைத்த கொண்டுதான் இருந்தான். இது இப்பிடி இருக்க அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கியது. பிறகென்ன ஊரிலை கோயில் கொடி ஏறினாலே இளசுகளிற்கு கொண்டாட்டம் தானே.

இவனும் ஏறிய பிள்ளையார் கோயில் கொடியை தன்னுடைய காதல் கொடி ஏறியதாகவே நினைத்து நம்ம நண்பனுக்கு தலைகால் தெரியாத சந்தோசம் ஏணெண்டால் இனி 25 நாழும் அவனுடைய ஆள் கோயிலுக்கு தவறாமல் வரும் இவனும் கோயிலுக்கு போகிற சாட்டிலையே கச்சானோ சோழப்பொரியோ வாங்கி தின்றபடி தன்னுடைய ஆளுடன்: கடலை போடலாம் அதுதான் அவனது சந்தோசத்துக்கு காரணம். ஆரம்பத்தில் தனியாகவே ஏதோ பக்தி முத்தினவனைப்போல காலையும் மாலையும் போய் அந்த பெண்ணின் தரிசனம் வாங்கி வந்து கொண்டிருக்கவே இவன் போய் வந்தது பெண்ணின் வீட்டு காரருக்கு தெரிந்து பெண்ணை மாலை திருவிழாவிற்கு போக விடாமல் தடுத்து விட்டனர். பகல் திருவிழாவிற்கு அதுவும் யாராவது துணையுடன்தான் அனுப்புவினம். இது நம்ம சினேகிதனுக்கும் கொஞ்சம் பயத்தை கொடுக்கவே. அவனும் எங்களிற்கு சோடா கச்சான் வாங்கி தருவதாக கொல்லி எங்களையும் கெஞ்சி கூத்தாடி துணைக்கு கூட்டிக்கொண்டு போவான்.

பிறகென்ன எங்களிற்கும் வீரம் பிறந்துவிடும் டேய் நாங்கள் இருக்கிறம் கவலைப்படாதை நீ பயப்பிடாமல் போய் உன்ரை ஆளோடை கதை நாங்கள் பாத்து கொள்ளுறம் என்றபடி உள்ளுக்கை உதறல் எடுத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவன் வாங்கி தந்த சோடாவை உறுஞ்சியபடி கோயில் வீதியை சுற்றி வந்து கொண்டிருந்தோம். அவனும் எப்படியாவது அந்தப்பெண்ணை சந்தித்து ஒரு வசனமாவது பேசி விட்டு வந்து விடுவான். ஆனால் கோயில் திருவிழாவும் முடிந்து தேர்த்திருவிழாவை நெருங்க நெருங்க அந்த பெண்ணிற்கும் பாதுகாப்பு கூடிக்கொண்டே போனது.அதனால் ஆரம்பத்தில் நண்பனிற்கு உதவியாய் இரண்டு மூன்று பேர் மட்டுமே போய் கொண்டிருந்த நாங்களும் பாதுகாப்பிற்காக ஆக்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டி வந்தது.அதாவது தேர்த்திருவிழா அன்று வழைமை போல நாங்கள் ஒரு எட்டுப்பேரளவில் போயிருந்தோம். கும்பிளாவளை பிள்ளையார் கோயில் பிரபலமான ஒரு கோயில் என்பதால் பல ஊர்களிலும் இருந்து வந்திருந்த பக்தர்காளால் நிரம்பியிருந்தது.

எனவே அதற்குள் அவனது ஆளை தேடிப் பிடிப்பதென்பது சிரமமாய் இருந்தது .உடனே போனடிச்சு " கலோ நீ எந்த வீதியிலை நிக்கிறாய்" எண்டு கேப்பதற்கு அந்தக்காலத்தில் என்ன கைதொலைபேசியா இருந்தது. இப்ப நானும் மனிசியும் இஞ்சை சுப்பர்மாக்கற்றுக்கை போனாலே மனிசியை காணாமல் நான் சில நேரம் போனடிச்சு எங்கையப்பா நிக்கிறாய் எண்ட மனிசி பின்னாலை நிண்டு நுள்ளிப்போட்டு ஏனப்பா கத்துறாய் பின்னாலைதான் நிக்கிறன் எண்டும்.சரி திரும்ப அளவெட்டிக்கே போவம்.சன நெருக்கம் கூட இருந்ததாலை நாங்கள் இரண்டு பிரிவா பிரிஞ்சு அந்த பெண்ணை தேடுறதெண்டு முடிவெடுத்தம். எனக்கு அந்த பெண்ணை தெரியும் எண்டதாலை என்னோடை ஒரு குறூபும் நண்பனோடை மற்ற ஒரு குறூப் எண்டு தேடுறது கடைசியாய் தேரடியிலை சந்திக்கிறது எண்டு முடிவெடுத்து தேடதொடங்கினம். எனது நண்பனும் ஒரு பக்கற் சோழப்பொரியை வாங்கிக்கொண்டு தனது காதலியை தேடபோய் விட்டான்.உள்வீதி வெளிவீதி எண்டு மாறி மாறி சுத்தியும் அவளை கண்டு பிடிக்கமுடியவில்லை.

பூசை முடிஞ்சு தேரும் இழுத்து முடிஞ்சு அன்னதானமும் தொடங்கி விட்டிருந்தது. நண்பனின் கையில் இருந்த சோழப்பொரியும் கசிந்த வியர்வையில் நசிந்து போயிருந்தது.நான் நண்பனிடம் சொன்னன் டேய் அவள் வரேல்லை போலை அன்னதானமும் தொடங்கிட்டு பசிக்கிது அதாலை வா பேசாமல் சாப்பிட்டு போவம் எண்டவும்.நண்பனோ விடுவதா இல்லை "இல்லையடா கட்டாயம் எப்பிடியும் வருவன் எண்டவள் சனம் கூடவா இருக்கு அதாலைதான் கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு கொஞ்சம் பொறுப்பம் சனம் குறைய எப்பிடியும் சந்திக்கலாம்" எண்டான். அவனைப்பாக்கவும் பாவமாய் இருந்தது. அப்பதான் குழந்தையை தவற விட்ட யாரோ ஒருவர் தன்னுடைய பிள்ளையின் வயது போட்டிருந்த சட்டையின் நிறம் எல்லாம் சொல்லி ஸ்பீக்கரில் அறிவித்துக்கொண்டிருந்தார்஼br />?ள். அப்பதான் எனக்கு திடீரெண்டு ஒரு யொசினை வந்தது.

உடனை நண்பனிட்டை சொன்னன் சரி உன்ரை ஆள் கோயிலுக்கு வந்திருந்தால் கட்டாயம் சந்திக்கலாம் அதுக்கு என்னட்டை ஒரு ஜடியா இருக்கு வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு மைக் செற் இருந்த இடத்துக்கு போய் மைக் காரரிடம் நண்பனைக்காட்டி "அண்ணை நாங்கள் கோயிலுக்கு வந்த இடத்திலை இவரின்ரை தங்கச்சியை மாற விட்டிட்டம் இப்ப அவசரமா வீட்டை போகவேணும் அதாலை ஒருக்கா மைக்கிலை அறிவிக்க வேணும்" எண்டவும். மைக்காரர் பெயர் வயசு போட்டிருந்த சட்டை நிறம் எண்டு விசாரணையை தொடங்க நான் சொன்னன் "அண்ணை அவாவுக்கு வயசு 15 நீங்கள் அவாவின்ரை பெயரை மட்டும் சொல்லி இவனின்ரை பெயரையும் சொல்லி இவர் தேடுறார் அதாலை உடைனை தேரடிக்கு வரச்சொல்லி விடுங்கோ எண்டவும்.

மைக்காரருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திரக்க வேணும் எங்களை ஒரு மாதிரியாய் பாத்தபடியே அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவரது அண்ணன் தேடுகிறார் உடனடியாக தேரடிக்கு வரவும் எண்டு என் நண்பனின் பெயரையும் அறிவித்து விட்டார். நாங்கள் உடனடியாக தேரடிக்கு போய் நின்று கொண்டோம்.சரி இனித்தான் கிளைமாக்ஸ். சனக்கூட்டமும் குறைந்திருந்தது கொஞ்ச நேரத்தில் திடீரெண்டு எங்களுக்கு முன்னாலை அந்த மைக்செற் காரர் எங்களை பாத்து இவங்கள் தான் ஆக்கள் என்டு கையை காட்டினார்.அவருக்கு பின்னாலை பி.வாசுவின்ரை படங்களிலை வாற வில்லனின்ரை கையாட்கள் மாதிரி வெள்ளை வேட்டி சட்டையோடை ஒரு பத்து பதினைஞ்சு பேர் எங்களை நோக்கி பாஞ்சினம்.என்ன நடக்கபோகுது எண்டு நினைக்கிற அந்த செக்கனிலேயே அடிவிழத்தொடங்கியது.அளவெட்ட༢r />?? பகுதி பெரும்பாலும் விவசாயம் செய்யிற ஆக்கள் மண்வெட்டி பிடி்ச்ச கையாலை அடிவாங்கினால் எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கால் கற்பனை பண்ணிப்பாருங்கோ.

யாருக்கு எப்பிடியெல்லாம்அடி விழுந்தது எண்டு தெரியாது . காதைப்பொத்தி எனக்கும் ஒரு அடி விழுந்தது. ஏதோ யாழ்தேவி றெயின் இடம்மாறி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் வீதியாலை ஓடினது மாதிரி எனக்கு ஒரு உணர்வு. அதே நேரம் பின்னாலை இருந்து யாரோ சேட்டிலை பிடிச்சு இழுக்க நல்லவேளை நான் போட்டிருந்தது கொஞ்சம் பெரிய சேட்டு அது மட்டுமில்லை கழுத்திலை போட்டிருந்த சங்கிலி வெளியாலை தெரியட்டும் எண்டு இரண்டு தெறியையும் களட்டிவிட்டிருந்த படியால் சுலபமாய் சேட்டை உருவி கழட்டிவிட்டு ஓடிப்போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு அளவெட்டி தோட்டவெளி வரம்பாலை ஓடி ஒரு மாதிரி வீட்டை வந்து சேந்திட்டன். எங்களோடை வந்த ஒருநண்பன் சைக்கிளைக்கூட எடுக்கவில்லை ஓடியந்திட்டான்.மறுநாள் எனக்கு காதில் இரைச்சல் குறைந்திருந்தாலும் ஒரு பக்கத்துகாது சரியாய் கேட்காத மாதிரி ஒரு உணர்வு தலையை சரித்து காதுக்குள் விரலை விட்டு குடைந்தபொழுது காய்ந்துபேன இரண்டு சோத்து பருக்கை வெளியில் வந்தது.அப்பதான் விழங்கியது பாவிப்பயல் யாரோ அன்னதானத்திலை சாப்பிட்டிட்டு கையை கழுவாமலேயே சோத்துக்கையாலை அடிச்சிருக்கிறான்.

பசிக்கிறவைக்கு சோறு போட்டால் தர்மம் எண்டிறவை .அதுமாதிரி சோத்து கையாலை அடிக்கிறதைத்தான் தர்மஅடி எண்டு எனக்கு அப்பதான் விழங்கினது. அடுத்தநாள் வழைமைபோல நாங்கள் எங்கடை கோயில் மடத்திலை சந்திச்சு எவருமே அடிவாங்காத மாதிரி கதைத்து கொண்டோம். எனது நண்பனோ பிறகு தன்னுடைய காதலியை காணமுடியாமல் சோகத்தில் சில நாட்கள் திரிந்தான் ஒரு நாள் மாலை வழைமையாய் கோயில் மடத்திற்கு வந்தவன் கலகலப்பாய் கதைத்துவிட்டு எங்கள் எல்லோருக்கும் பணிஸ்சும் சோடாவும் வாங்கித்தந்தவன் அன்றிரவு தங்கள் தோட்டத்திற்கு போய் பொலிடோலை(பூச்சிமருந்து) குடித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டான்.

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

11:33 AM, Posted by sathiri, 7 Comments

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவது செய்து தொடர்ந்து செய்யவேணும் என்று அடிச்சு சொல்லிபோட்டு இருக்க.

பாரிசிலை என்ரை நண்பன் ஒருதனின்ரை மகளும் பருவமடைஞ்சிட்டுது. அவன் அதை கொண்டாட பெரிய மண்டபம் எடுத்து காட் எல்லாம் அடிச்சிட்டு எனக்கு செய்தியை சொல்ல போனடிச்சு கதைச்சு கொண்டிருக்கும்பொழுது சொன்னான் டேய் பாரிசிலை ஏன் யுரோப்பிலையே ஒருத்தரும் செய்யாத அளவுக்கு விசேசமா மகளின்ரை சாமத்திய வீட்டை செய்யவேணும் எல்லாம் ஏற்பாடு செய்திட்டன் ஆனாலும் எல்லா நிகழ்ச்சியிலையும் முக்கியமானது இந்த வீடியோ ஏணெண்டால் அதைதான் விழாவுக்கு வரஇயலாத ஆக்கள் மற்றது ஊரிலை உள்ளவை எல்லாருக்கும் அனுப்பிறது. அது மட்டுமில்லை பிறகும் வீட்டுக்கு வாற ஆக்களுக்கும் போட்டுக்காட்டி பெருமையடிக்கிற ஒரு முக்கியமான சாமான் அதாலை இந்த வீடியோவிலையும் இப்ப எல்லாரும் ஒரு வித்தியாசத்தை செய்யினம். அதாலை எல்லாரும் மற்றசாமத்திய வீடுகளிலை எடுக்காத மாதிரி அந்த வீடியோ ஆரம்பத்தை அதாவது ஓப்பினிங் வித்தியாசமா வாற மாதிரி சினிமாப்பட ரேஞ்சுக்கு ஒரு யோசனை சொல்லு எண்டான்.

எனக்கு தலை சுத்த தொடங்கிட்டுது இதென்னடா வில்லங்கம். செய்யிறது சாமத்திய வீடு இதிலை வித்தியாசமான ஓப்பினிங் வேணுமெண்டால் நான் எங்கை போறது எண்டு யோசிக்க.அவனும் விடுறமாதிரி இல்லை .நீதானே கதையெண்ட பேரிலை எத்தினை அறுவையளை எழுதிறாய் அதாலை கட்டாயம் நீ கொஞ்ச யொசனை சொல்லத்தான் வேணுமெண்டு அடம்பிடிக்க நானும் "சரி கஸ்ரப்பட்டு யோசிக்கிறதை உனக்கு மட்டும் சொல்லாமல் எல்லாரும் பாக்கிறமாதிரி வழைமை போல பேப்பரிலையே எழுதி போடுறன் அதிலை விருப்பமானதை எடுத்து உன்ரை ஓப்பினிங்கிலை போடு என்று சொல்லி விட்டன். இதோ உங்கள் மகள்களும் வயதுக்கு வந்துவிட்டார்களா வீடியோவில் வித்தியாசமான ஆரம்பத்துடன் படமாக்க வேண்டுமா பெரும்சிரமப்பட்டு யோசித்தில் எனக்கு தோன்றிய சில யோசனைகள்.

1)வீடியோ ஸ்ராட். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் சிறீதேவி ஓடிவந்து ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிப்பார் அப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தியபடி கதை வசனம் டைரக்சன் பாரதிராஜா எண்டு எழுத்து விழும் அது போலவே உங்கள் மகள் அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிக்கும் போது அப்படியே அந்தரத்தில் அவரை நிறுத்தி விட்டு பூப்புனித நீராட்டுவிழா என்று எழுத்தோட்டம் போடலாம்.

2)இப்ப வெளிநாடுகளிலை தமிழ்கடை காரரிட்டை சொல்லி இந்தியா தாய்லாந்து ஆகிய நாடுகளிலை இருந்து குருத்தோலை முதல் காவேலை வரை இறக்குமதி செய்யலாம். எனவே தென்னிந்திய கிராமங்களில் வயசுக்கு வந்த பெண்ணை பரிசம் போடுவது போல . நீங்களும் தென்னோலை வரவழைத்து உள்கள் வீட்டு குளியலறையில் கூடுமாதிரி கட்டி தாய்மாமனை விட்டு தண்ணீர் ஊற்றசொல்லி வீடியோ எடுக்கலாம். வசதியெண்டால் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏதாவது பூங்கா இருந்தால் அங்கும் தென்னோலையால் கூடு கட்டி செய்யலாம்.இயற்கையாகவும் நல்ல ஓப்பினிங்காகவும் இருக்கும்.ஆனால் உங்கள் மாநகரசபை உங்கள் மீது வழக்கு போட்டால் நான் பொறுப்பு அல்ல.

3)அடுத்ததா ஒரு சங்கர் பட ஸ்ரைலில் உங்கடை பெண்ணிற்கு மேற்கத்தைய மொடேண் உடுப்பு மினியோ மிடியோ கையில்லாத முண்டா பெனியனோ போட்டு அவாவோடை படிக்கிற ஒரு பத்து வெள்ளைக்கார பெட்டையளை பிடிச்சு பாவாடை தாவணியை போட்டு அவையை உங்கடை மகளை சுத்திவர ஆடவிட்டு பின்னணியிலை ஒரு பாடலை போட்டு ஒரு ஓப்பினிங்கை குடுக்கலாம். பின்னணி போடக்கூடிய சில பாடல்கள் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தவை
1) சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி எப்படி
2)பூசைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யாரதை பாத்தது
3)நான் ஆளான தாமரை ரெம்ப நாளாக தூங்கலை

4)அடுத்ததாக எல்லா வீடியோ காரரரையும் போலை ஆரம்பத்திலை சோடினையளையும் இயற்கைக்காட்சியளையும் காட்டாமல் பெண்ணின் தகப்பனை காட்டலாம். அவர் பாரதிராஜா ஸ்ரைலில் இரண்டு கையையும் தலைக்கு மேலை தூக்கி கும்பிட்டபடி "என் இனிய சொந்த பந்தங்களே புதிதாய் பூப்படைந்து புறப்பட்டு வருகிறாள் என் புத்திரி.அவளிற்காய் வட்டிக்கு பணமெடுத்து பெருமெடுப்பில் விழா எடுக்கிறான் இந்த தந்தை.நீங்கள் வாயார வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை வயிறார சாப்பிட்டதற்கு வஞ்சகம் பண்ணாமல் பொய் செக் (காசோலை)எழுதிதராமல் மெய்யாய் மொய் எழுதிபோகும்படி கேட்டுகொள்கிறேன்.நன்றி

இப்பிடி கனக்க யோசனையள் இருக்கு ஆனால் எல்லாத்தையும் இஞ்சை எழுதஏலாது வெட்டிபோடுவாங்கள். எழுத்தை மட்டுமில்லை என்னையும் சேத்துதான். அதாலை மேலதிக ஆலோசனை தேவைப்படுகிற ஆக்கள் என்னோடை மின்னஞ்சலிலை தொடர்பு கொள்ளுங்கோ.சரி கடைசியா ஒரு ஆலோசனை இந்த சாமத்தியபட்ட பிள்ளையளுக்கு வாழ்த்து சொல்லுறவை றேடியோவிலையோ இல்லாட்டி தொலைக்காட்சியிலையோ வாழ்த்து சொல்லுற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம். அது மட்டுமில்லை வாழ்த்து சொல்லுறவை கொஞ்சப்பேர் ஒண்டாய் சேர்ந்து தங்கடை பெயர்களை போட்டு ஒரு வாழ்த்து நோட்டிஸ் அடிச்சு தமிழ் ஆக்கள் அதிகமாய் இருக்கிற இடங்களிலையும் ஒட்டலாம் நன்றி சாத்திரி