Navigation


RSS : Articles / Comments


அவலங்கள் சிறுகதை தொகுப்பு ..முன்னுரை கருணாகரன் .

12:23 PM, Posted by sathiri, No Comment

உண்மை மனிதர்களின் கதைகள்

-     கருணாகரன்



 “ஆயுத எழுத்து“ என்ற புனைவின் ஊடாக தமிழ்வாசிப்புப் பரப்பில் அதிகமாக அறியப்பட்டவர் சாத்திரி. குறிப்பாக “ஆயுத எழுத்து“ முன்வைத்த அரசியலுக்காகவும் அது வெளிப்படுத்திய உள்விபரங்களுக்காகவும் உண்டாகிய சர்ச்சைகள், விவாதங்கள் மூலமாக சாத்திரி பரவலான அறிமுகத்தையடைந்தார். அதற்கு முன்பாக அவர் “ஒரு பேப்பர்“ என்ற பத்திரிகையிலும் “அவலங்கள்” என்ற தன்னுடைய இணையத்தளத்திலும்  பத்திகளையும் கதைகளையும் எழுதியிருந்தார். அவையும் சர்ச்சைகளைக் கிளப்பியதுண்டு. சாத்திரியின் அரசியற் பார்வை, பெண்ணிய நோக்கு, வரலாற்றுக் கண்ணோட்டம், யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும்முறை போன்றவற்றில் பலருக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகளும் மறுப்புகளும் உண்டு. தனக்கெதிராகக் கடுமையான மறுப்புகளும் விமர்சனங்களும் உண்டென்று சாத்திரிக்கும் நன்றாகத் தெரியும். அவற்றின் தாற்பரியங்களையும் அவர் அறிவார். ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டை அவர் எதன்பொருட்டும் விட்டுக் கொடுப்பதில்லை. தான் தேர்ந்து கொண்ட முறையில் தன்னை முன்கொண்டு செல்வதிலேயே குறியாக இருப்பார். தன்னுடைய இலக்கை எட்டுவதே இதனுடைய அடிப்படை. இதற்கு ஒரு அடிப்படைக்காரணமும் பின்னணியும் உண்டு.



விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் சாத்திரி.  தாம் கருதும் இலக்கை அடைவதையே குறியாகக் கொள்வது புலிகளுடைய இயல்பும் குணாம்சமுமாகும். அதற்கிடையில் உள்ள பிரச்சினைகளில் அவர்கள் கவனமோ கரிசனையோ கொள்வது குறைவு. மைய இலக்கே கவனப்புலத்தில் துலங்கும் குறி. அதை நோக்கியே முன்னகர்வர். இதுவே புலிகளைப் பெருந்தளத்தில் அடையாளப்படுத்தியது. இந்தக் குணாம்சம் சாத்திரியிடத்திலும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். இந்தக் குணாம்சத்தை எதிர்ப்போரும் தவிர்க்கமுடியாமல் இதையும் இந்தக் குணாம்சம் உண்டாக்கும் விளைவுகளையும் கவனிக்கத் தவறுவதில்லை. சாத்திரி மீதான கவனமும் இப்படித்தான். சாத்திரியை ஆதரிப்போர் மட்டுமல்ல, அவரை எதிர்ப்போரும் அவரைத் தவறாமல் கவனிக்கிறார்கள். இதனால்தான் சாத்திரி அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறார். புலிகளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு சாத்திரியின் எழுத்துகளைப் பற்றி, புலிகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் எதிர்நிலையில் இருப்போரிடத்திலும் ஆதரிப்பும் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு. புலிகளின் கடந்த காலத்தைத் தன்னுடைய எழுத்துகளின் வழியாக சாத்திரி, திறந்து வருகிறார். இதனால் பொதுவெளி அறியாதிருந்த புலிகளுடைய பல விசயங்கள் வெளியே தெரியவந்தன. இன்னும் அப்படி திறக்கப்பட்டு வருகின்றன. இதுவே சாத்திரி மீதான கவனிப்புக்கும் விமர்சனங்களுக்கும் காரணமாகின்றன.



இருந்தாலும் சாத்திரி அதற்கெல்லாம் அப்பால், இன்னும் புலிகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறார். அதேவேளை அதிலிருந்து இன்னொரு வழியில் மீறிக்கொண்டுமிருக்கிறார். இந்த மீறலின் விளைவாக, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் உண்டாகியிருக்கும் தமிழ் மக்களுடைய அரசியற் பிரச்சினையை அணுகுவதிலும் அதற்கான தீர்வு முறையிலும் சாத்திரி சற்று வேறான புரிதலையும் பார்வையையும் கொண்டிருக்கிறார். அதை அவர் பகிரங்கமாகவே எழுதி வெளிப்படுத்தியும் வருகிறார். இவையும் சாத்திரியைச் சர்ச்சைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் சாத்திரியின் சிறப்பான அம்சம் என்னவென்றால், அவர் தன்னை ஒளித்து, மறைத்து விளையாடுவதில்லை. ஆட்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றமாதிரி வளைந்து நெளியும் இயல்பு சாத்திரியிடம் கிடையாது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த அமைப்பிலிருந்த பலர் சத்தமின்றி ஒதுங்கி விட்டனர். வாழ்க்கைச் சிரமங்களில் அவர்களுடைய நாட்களும் மனமும் கரைந்து போய்விடுகிறது. ஒருசாரர் இன்னும் தீவிரமாகப் பேசி வருகின்றனர். அவர்களுடைய கற்பனைச் சித்திரங்கள் அதற்கேற்ற வகையில் விரிந்து கொண்டே போகின்றன. சிலர் அமுங்கிக்கொண்டு, தங்களுடைய கைகளில் நியாயத் தராசை எடுத்து வைத்து, எல்லாவற்றையும் நிறுத்துத் தீர்ப்பெழுதிக் கொண்டிருக்கின்றனர். சாத்திரி, இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு, தனக்குப்பட்டதை பகிரங்க வெளியில் வைத்து விவாதிக்கிறார். விவாதிக்கக் கோருகிறார். இப்படியான ஒரு நிலையிலேயே, அவர்  பிரபாரகனுடைய மரணம் பற்றிய குழப்பமான கதைகளின் போது, அவருக்கான அஞ்சலியைச் செலுத்தி, தான் அஞ்சலி செலுத்தும் படத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதுவும் சாத்திரி மீது சர்ச்சைகளை உண்டாக்கியது. தொடர்ந்து தமிழ் நாட்டின் “புதிய தலைமுறை“ என்ற வார இதழில் “அன்று சிந்திய இரத்தம்“ என்ற தொடரையும் எழுதினார். அதுவும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இப்படியே சாத்திரி சர்ச்சைகளின் நாயகனாக கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது சாத்திரி எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டு, ஒன்றாக வருகின்றன. இவையும் சர்ச்சைகளை உண்டாக்கக்கூடிய குணாம்சங்களைக் கொண்டேயிருக்கின்றன.



சாத்திரி யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து வளர்ந்தவர். அங்கிருந்தே தமிழீழத்தைக் கனவு கண்டவர். அந்தக் கனவுக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பல ஆண்டுகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த செயற்பட்ட சாத்திரி, இப்பொழுது ஒரு பிரான்ஸ்வாசி. இலங்கையில் தனிநாட்டுக்காக, தமிழீழத்துக்காகப் போராடிய சாத்திரிக்குக் கிடைத்தது இரவல்தாய்நாட்டில் விதிக்கப்பட்ட வாழ்க்கையே.  இதுதான் இன்று பல்லாயிரக்கணக்கான தனிநாடு காண்பிகளின் நிலவரமும் யதார்த்தமும் உண்மையும். சாத்திரியிடம் இப்பொழுதிருப்பது பிரான்ஸ் நாட்டுப் பாஸ்போட். பிரான்ஸ் குடியுரிமை. தமிழீழம் கனவாகி விட்டது. நினைவுகளில் கொதித்துத் ததும்பும் கனலாகியுள்ளது சொந்த ஊரும் போராட்டமும். சாத்திரியின் இந்தக் கதைகளும் ஏறக்குறைய அப்படியானவையே. நினைவும் கனவும் கொதிப்பும் கொந்தளிப்புகளும் நிறைந்தவை. இந்த நினைவுகளையும் கொதிப்பையும் கனவையும் அவர் காண்பிக்கின்ற மனிதர்களும் கொண்டிருக்கிறார்கள். சாத்திரியும் சாத்திரியின் மனிதர்களும் வெவ்வேறானவர்களல்ல. ஒருவருடன் ஒருவர் ஒன்றித்து வாழ்ந்தவர்கள். அது ஊரிலென்றாலும் சரி, ஊர்விட்டுப்பெயர்ந்து இந்தியாவிலோ, பிற புலம்பெயர் நாடுகளிலோ என்றாலும் சரி, பிற நாடுகளில் சந்திப்பவர்களாக இருந்தாலும் சரி, எந்தத் திசைக்குப் பெயர்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகவே இருப்பவர்கள். எனவேதான் சாத்திரியின் கதைகள் அவரையும் அவரோடிணைந்த மனிதர்களையும் இவர்களெல்லாம் இயங்கும் காலத்தையும் சூழலையும் ஒரு தொடர்கோட்டில் மையப்படுத்தியிருக்கின்றன. இந்த மையப்படுத்தல் பல கதைகளை புனைவுக்குப் பதிலாக அ புனைவு போல உணரச் செய்கிறது. மறுவளமாக அ புனைவுகள் புனைவுருக்கமாகின்றன. இது சாத்திரியிடமுள்ள பண்பு மட்டுமல்ல, தம்முடைய அனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்தி எழுவோருடைய பண்பாகும்.



அனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்திப் புனைவை உண்டாக்கும்போது அடிப்படையில் ஒரு பிரச்சினை உண்டாகிறது. புனைவின் சாத்தியங்களும் நுட்பங்களும் போதாமையாக இருந்தால், அது தனியே சம்பவங்களின் விவரிப்பாகவும் ஒருவருடைய டயறிக் குறிப்பாகவும் சுருங்கித் தட்டையாகி விடும். அதற்கப்பால், அனுபவங்களையும் புதிய உணர்கையையும் வரலாற்றின் வேர்களில், காலத்தின் சுவடுகளில் வைத்து புனைவாக்கம் செய்யும்போது அது ஒரு வகையான மாயத்தன்மையைப் பெற்றுக்கொள்கிறது. இது புனைவை மேம்படுத்தி, வரலாற்றுக்கும் அனுபவத்துக்கும் புனைவுக்குமிடையில் அந்தரத்தில் மிதக்க வைக்கிறது. இந்த அந்தர மிதப்பில் மிதக்கும் வாசகர்கள், வரலாற்றிலும் அனுபவத்திலும் புதிய உணர்கை என்ற கற்பனையிலும் அவ்வப்போது தொட்டும் பட்டும் கொள்ளும்போது, ஒருவிதமான ரசாயனத்தன்மையை உணர்ந்து கொள்கின்றனர். இதுவே புனைவை அவர்களோடு ஒன்றச் செய்கிறது. அல்லது புனைவோடு அவர்கள் ஒன்றிவிடும்படியாகிறது. இப்படி வரும்போது, அவர்கள் வரலாற்றைத் தொட்டுச் செல்லும் அல்லது வரலாற்றின் மீது தனது படைப்பைக் கட்டியெழுப்பும் படைப்பாளியைச் சந்தேகிப்பதற்கோ கேள்விக்குட்படுத்துவற்கோ சந்தர்ப்பங்கள் குறைவு. கலையின் வெற்றி இங்கேதான் வலுவாகிறது.



ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி”,  பாவண்ணனின் “சிதைவுகள்”, சு. வெங்கடேசனின் “காவல் கோட்டம்”,  ஜெயமோகனின் “வெள்ளையானை”, ரங்கசாமியின் “சாயாம் மரண ரயில்”, பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” சி.சு.செல்லப்பாவின் “சுதந்திரதாகம்” கி.ராவின் “கோபல்ல கிராமம்” தோப்பில் முகமதுமீரானின் நாவல்கள், அர்ஷ்யாவின் நாவல்கள், கே. டானியலின் ”கோவிந்தன்”, “அடிமைகள்”, “தண்ணீர்” சோபாசக்தி, யோ.கர்ணன் எனப் பலருடைய புனைவுகள், சயந்தனின் “ஆதிரை“, விமல் குழந்தைவேலின் ”கசகறணம்“ வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதனோடிணைந்த பாத்திரங்களையும் புனைவுப் பாத்திரங்களோடும் புனைவு நிகழ்ச்சிகளோடும் கலந்து நமக்கு முன்னே இன்னொரு வரலாறாகவும் புனைவாகவும் விரிந்திருக்கின்றன. சாத்திரி, ஆயுத எழுத்தில் மெய்யான மனிதர்களையும் மெய் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு, புனைவை உருவாக்கியதைப்போல, இங்கேயுள்ள கதைகளும் மெய்வரலாற்றின் அடித்தளத்தில், மெய்யான மனிதர்களுடன் மங்கியதொரு புனைகளமும் புனையப்பட்ட மனிதர்களுமாகக் கலந்து ஒரு கதைவெளியை உண்டாக்குகின்றன. இந்தக் கதை வெளியை சாத்திரி தன்னுடைய அனுபவத்தில் விரிந்த எல்லைகளின் வழியாக விரிக்கிக் காட்டுகிறார்.



2006 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் எழுப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் 1970 களில் இருந்து 2016 வரையான காலப்பகுதியைக் கொண்டியங்குகின்றன. இந்தக் காலவெளியில் ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் ஊடாடும் பிற புலங்களிலும் அவர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் சந்தித்த சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கை நெருக்கடிகளே இந்தக் கதைகளின் பொருள்மையம். அதிலும் கூடுதலான கதைகளில் பெண்களுடைய பிரச்சினைகளே பேசப்படுகின்றன. சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்கள் எப்படியெல்லாம் ஆண் நிலைச் சமூகத்தினால் பாதிப்படைகிறார்கள், சுரண்டவும் அடக்கவும் படுகிறார்கள் என்பதைக் கவனப்படுத்தியிருக்கிறார் சாத்திரி. அநேகமான கதைகளின் தலைப்பே ”ராணியக்கா“, ”மலரக்கா”, “மல்லிகா”, ”கைரி”, ”அலைமகள்”, என்றே உள்ளன. கதைகளின் மையப்பாத்திரமே பெண்கள்தான். இதில் “கைரி“ என்ற கதை இந்தத் தொகுதியின் ஆன்மா எனலாம். மிக எளிய அடிநிலைப் பெண் ஒருத்தி, சமூக (சாதி) ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலிகொள்ளப்படுவதைச் சாத்திரி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தக் குற்றமும் செய்யாத, குற்றங்களையே விரும்பாத ஒரு முதிய கூலிப்பெண் எப்படி அரசியல் படுகொலையொன்றில், அநியாயமாகப் பலியிடப்படுகிறார் என்பதையும் ஆயுதம் தூக்கியவர்கள் எப்படியெல்லாம் தீர்ப்புகளை வழங்கினர் என்பதையும் சாத்திரி எதார்த்தமாக விளக்கி விடுகிறார். கைரியைப்போல இந்த மண்ணில் பலியிடப்பட்டவர்கள் ஒன்று இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். தன்னை எல்லாவகையிலும் சுரண்டவும் பலியிடவும் முனைகின்ற அனைவரையும் நல்லவர்கள் என்று எண்ணுகின்ற கைரியின் மனம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆயிரமாயிரம் விழிகளைத் திறக்க முனைகிறது. கைரியின் மனமே மனித வாழ்க்கையின் சாரம்சமாக கால நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம். கோடிக்கணக்கான சாமானிய மக்களின் அறம் வாழ்க்கையோடிணைந்து, இப்படித்தான் உலகெங்கும் உள்ளது. ஆனால், அவர்களே பலியிடப்படுகிறார்கள். அப்படியென்றால், இத்தகைய பேரன்புடைய மனதை எப்பொழுதும் இந்த உலகத்தின் அதிகார அடுக்குகள் தினமும் பலியெடுத்துக்கொள்கின்றன என்று சொல்லலாமா? என்றால், நிச்சயமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், இலங்கையில் ஆயுதம் தாங்கியவர்கள் எப்படியெல்லாம் பொது மக்களை இலக்காக்கினார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு இரத்த சாட்சியம்.



கைரிக்கு நிகரான இன்னொரு கதை “மலரக்கா“. பதின்ம வயது ஆணின் மனவுலகையும் வயது கூடிய ஆணைக் கணவனாகத் திருமணம் முடித்து வைப்பதால் ஏற்படும் பெண்ணின் வாழ்க்கை நெருக்கடிகளையும் பாலியல் பிரச்சினைகளையும் சொல்லும் இந்தக் கதையும் நம்மை நோக்கிக் கேள்விகளை எழுப்புவதே. மலரக்காவை முழுமையாகப் புரிந்த கொண்ட ஆணாக இருப்பவனே, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக, ஒரு கட்டத்தில் கூட இருக்கத்தயாரில்லாத யதார்த்தத்தையும் உண்மையையும் கோழைத்தனத்தையும் சாத்திரி தெளிவாக்குகிறார். இப்படி மறைவிடங்களில் பதுங்கும் கள்ள இதயங்களை நோக்கி ஒளியைப்பாய்ச்சும் வேலைகளே சாத்திரியின் முயற்சிகள்.



“கைரி“ முன்வைக்கின்ற நிலைக்கு மாறான இன்னொரு முன்வைப்பைக் கொண்ட கதை “பீனாகொலடா“. தமிழ்நாட்டில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்சிசுவை வெறுக்கும் சமூகக் கொடுமையை வைத்து எழுதப்பட்டது. பெண் குழந்தைகளையே பெற்றதற்காக வெறுத்து ஒதுக்கப்படும் மல்லிகா, பின்னாளில் அதே சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதற்கிடையிலான வாழ்க்கையைக் குறித்த முன்வைப்பைச் செய்யும் கதை. மல்லிகாவின் இடைப்பட்ட வாழ்க்கை மீதான பண்பாட்டுக் கேள்விகளைவிட பொருளாதார மினுக்கமே எல்லாவற்றையும் மதிப்பீடு செய்கிறது என்பதைக் கதை உணர்த்துகிறது.



ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் ஊடாடும் புலம்பெயர் சூழலிலும் இந்தியா மற்றும் சிங்கப்புரிலுமாக இந்தக்கதைகளின் களங்கள் விரிக்கப்பட்டுள்ளன.. ஆனால். கதைகளில் இடங்கள் குறிப்பிடப்படுகின்றனவே தவிர, அவற்றைப்பற்றிய கால, இடச் சித்திரிப்புகளோ, காட்சிப்படுத்தலோ குறைவு. சாத்திரியின் முயற்சியே கதைகளைச் சொல்லி விடுவதில்தான் கவனமாக உள்ளது. அவற்றைச் சித்திரிப்பதில் அல்ல. அவருக்கு கதையே முக்கியம். அதைச் சொல்லி விடவேணும். அவ்வளவுதான். அந்தக் கதைக்குள்ளால் அவர் பேச முற்படும் உண்மைகளை உணர்த்தி விடுவது. இதற்காக அவர் கதையை சுவாரசியப்படுத்துவதற்கான விசைகூடிய மொழிதலைக் கொள்கிறார். சுவாரசியமான மனநிலைகளையும் சம்பவங்களையும் சேர்த்துக்கொள்கிறார். இதில் கூடுதலான ஈர்ப்பை அளிப்பன, விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்பான கதைகள். ”முகவரி தொலைத்த முகங்கள்“ சாத்திரியின் ஆயுத எழுத்தை ஞாபகப்படுத்துகிறது. புலிகளின் ஆயுதக்கப்பல்களைப்பற்றிப் பலரும் கேள்விப்பட்டதுண்டு. அந்த ஆயுதக்கப்பல்களை ஓட்டிக்கொண்டிருப்போரைப்பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் அநேகருக்குத் தெரியாது. சாத்திரி அந்த வாழ்க்கையை இந்தக் கதையில் திறக்கிறார். இதைப்போல, இன்னொரு தளத்தில், இறுதிப்போர்க்காலத்தில், புலிகளை ஆயுத ரீதியாகப் பலப்படுத்துவதற்காக என்று கூறி, புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டார்களும் பெரும் நிதிச் சேகரிப்புகளில் ஈடுபட்டனர். இதற்காகப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள், தங்களுடைய சக்தியையும் மீறி, வங்கிகளில் பெருந்தொகைப்பணத்தைக் கடன்பட்டுக் கொடுத்திருந்தனர். புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் அந்த நிதி உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. அந்த நிதிக்கான கணக்குகளும் காட்டப்படவில்லை. இதனால் புலம்பெயர் தமிழர்களில் பலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடக்கம், அகதி அந்தஸ்துக்கோருவதற்காக முயற்சிக்கும் வழிமுறைத்தவறுகளின் விளைவுகள், இறுதி விளைவுகளை எப்படி உண்டாக்குகின்றன என்பது வரையில் புலம்பெயர் சமூகத்தின் கதைகளையும் அவலங்களையும் சாத்திரி பேசுகிறார். போர் முடிந்த பிறகும் பயங்கரவாத முத்திரையை எப்படிச் சாதாரணமானவர்களின் மீது சட்டம், நீதி, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் சென்று இலங்கை அரசாங்கம் குத்துகின்றது என்பதை “அகதிக் கொடி“ என்ற கதையில் வெளிப்படுத்துகிறார். இப்படி சாத்திரியின் கத்திகள் பல தரப்பிலும் விழுகின்றன. அப்படியே அது இந்தியப்படைகள், இலங்கை அரசு, அதன் படைகள் மீதும் விழுகிறது. சமூகத்தின் மீதும், பண்பாட்டின்மீதும் இயக்கத்தின் மீதும் விழுகிறது. தான் வாழும் காலத்தையும் வரலாற்றையும் அதிகார அமைப்புகளையும் விசாரணை செய்யாமல் ஒரு எழுத்தாளன் இருக்க முடியாது என்பது சாத்திரியின் நம்பிக்கை. இதற்காக அவர் தன்னையும் ஒரு வகையில் பலிபீடத்தில் வைக்கிறார். அதேவேளை இன்னும் இந்தச் “சக்கைச் சிறி” வெடிகுண்டுகளோடுதான் திரிகிறார். கந்தகம் நிரப்பப்பட்ட கதைகளின் வெடி குண்டுகளோடு.



இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒரு காலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச் சொன்னால் உண்மை மனிதர்களின் கதைகள் இவை. என்பதால் வலியும் துயரும் மகிழ்வும் வாசனையும் அழுக்கும் தூய்மையும் விருப்பும் வெறுப்பும் இனிப்பும் கசப்பும் இவற்றில் உண்டு.




கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து

4:08 AM, Posted by sathiri, No Comment

கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம்  தொகுப்பிலிருந்து ..

கேள்வி ..புலிகள் அமைப்பில் சிறந்தவியூகங்களை அமைத்து சிறப்பாகப் படை நடத்துபவர்கள் என்றால் முதன்மையானவர்களாக யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்.

பதில் ..புலிகள் அமைப்பில் எல்லாத் தளபதிகளிற்குமே தனித்தமையான சிறப்புக்கள் திறைமைகள் இருந்தது.படை நடத்தலை இரண்டு விதமாகப் பிரிக்லாம் ஒன்று சரியான தகவல்களோடு திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி படைநடத்துவது அதில் இழப்பு அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கை அடைய முடியாத நிலை வந்ததும் நடவடிக்கையை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு திட்டத்தை தயாரித்து தாக்குதலை தொடருதல் இப்படி படை நடத்தும் பல திறைமையான தளபதிகள் இருந்தார்கள். ஆனால் அடுத்த வகையான படை நடத்தல் என்னவெனில் யுத்தகளத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் மாற்றங்களை அவதானித்தபடியே  மறுதரப்பின் வியூகங்களை தகர்ப்தற்காக சண்டைக்களத்தில் நின்றவாறே யுத்தத்தை நிறுத்தாமல் யுக்திகளை உடனுக்குடன் மாற்றியமைத்து இலக்கை அடையும்வரை படை நடத்தும் இராணுவ வல்லுணர்களாக  நான் பார்த்தவர்கள் கிட்டு.பால்ராச்.கருணாவை சொல்வேன்.இவர்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்வதனால்  முதலில் கிட்டு ..

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை  புலிகள் ஆதரவு எதிர்ப்பு அல்லது அரச தரப்பு என்று யார் எழுதினாலும் கிட்டு என்கிற பெயர் தவிர்க்க முடியாதாகும். ஆளுமை உள்ள ஒருவர் .நல்லதொரு சமையற்காரன்.முற் கோபக்கரன்.  ரத்த கொதிப்புக்காரன். . திறைமையான  தளபதி. மற்றைய இயக்கங்களை மோசமாக அழித்த கொலைகாரன்.படை நடத்துவதில் சிறந்த ராணுவ வல்லுனன்.ஆணாதிக்கவாதி.சிறந்த கலைஞன் ஓவியன். இப்படி  எல்லா கோணங்களாலும் எல்லாராலும் பார்க்கப் பட்டதொரு மனிதன்தான் கிட்டு.1985 ம் ஆண்டு தை மாதம் அச்சுவேலி பகுதியில் இருந்த புலிகள் முகாம் மீது   இலங்கை இராணுவத்தால் நடத்தப் பட்ட சுற்றி வழைப்பு தாக்குதலில் அன்றைய யாழ் மாவட்ட தளபதி பண்டிதர் கொல்லப் பட்டதும் அதற்கு அடுத்ததாக  யாழ் மாவட்ட பொறுப்பை யாரிடம் கொடுக்கலாமென   பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு  நடாவை   பொறுப்பாக போடலாமென  தலைமை  முடிவெடுத்தபோது  நடா அதனை மறுத்து கிட்டு அல்லது அருணாவிடம் பொறுப்பை கொடுக்குமாறு சொன்னதால் இறுதியாக கிட்டுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.கிட்டு யாழ் மாவட்டத்தை பொறுப்பு எடுத்த காலகட்டமானது முக்கியமானதாதொரு கலகட்டமாக அமைந்தது.

இலங்கையரசிற்கெதிரான  ஆயுத  போராட்டம் என்று சுமார் முப்பத்து மூன்று  இயக்கங்கள் தோற்றம் பெற்று அதில் பல மறையத் தொடங்கியும்  ஒரு இயக்கத்தால் மற்றைய இயக்கங்கள்  தடை அல்லது அழிக்கப் படவும் தொடங்கியிருந்த கால மாகும். இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் 85 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வடக்கில் இலங்கை இராணுவத்தின் தொகையை விட ஈழ விடுதலை வேண்டி தொடங்கப் பட்ட இயக்கங்களின் உறுப்பினர்களின் தொகை அதிகமாக இருந்தது  ஆனால் அவர்களிடமான  ஒற்றுமை யின்மை என்பது  கசக்கும் உண்மை.
 ஆரம்பிக்கப் பட்ட இயக்கங்களில் இந்தியாவின் ஆசீர் வாதம் பெற்ற  ரெலோ.ஈ.பி.ஆர்.எல்.எவ்.புலிகள்.ஈரோஸ் என்பன.இந்தியாவின் நிதி உதவியோடும் அவர்களது பயிற்சிகளோடும். பெரும் இயக்கங்களாக வளரத் தொடங்கியிருந்தன.புளொட் அமைப்பானது அப்போ இந்தியஅரசின் நேரடி  உதவிகள் பெறாமல் ஒதுங்கியிருந்தது ஆனால் இந்தியாவில் பல அமைப்புகளின் உதவி அதற்கு இருந்தது.இந்தியாவின் உதவியின்றி தம்பாபிள்ளை  மகேஸ்வரனின் T.E.A  ஜெகனின்  T.E.L.E என்பன ஓரளவு பலத்தோடு இயங்கிய இயக்கங்களாக இருந்தது. இவை அனைத்தும் இணைந்த கூட்டு முயற்சியில் யாழ் குடாவில் முதலாவதாக யாழ் கோட்டை இராணுவ முகாம் இலங்கையிலேயே முதன் முதலாக  கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டதொரு இராணுவ முகாமாக மாறியிருந்தது.இதன் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு இயக்கங்கள் பாதுகாப்பரண் அமைத்து பாது காக்கத் தொடங்கியிருந்தனர்.

கோட்டை இராணுவ முகாமானது நகரின்  மத்தியில் அமைந்திருந்ததால்  அதன் வீதி  அமைப்பு மற்றும் நெருக்கமான கட்டிடங்கள்  இயக்கங்களிற்கு  பாதுகாப்பானதாவும் இலகுவில் கட்டுப் பாட்டிற்குள்  கொண்டு வருவது சுலபமாகவும் இருந்தது.அதே நேரம் பலாலி. நாவற்குழி.காரைநகர். பருத்தித் துறை  இராணுவ முகாம்களை   புளொட்டும். ரெலோவும் .புலிகள் அமைப்பும் காவலரண்கள் அமைக்கத் தொடங்கியிருந்தாலும் அது அமைந்திருந்த  இடம் தோட்டங்களையும் பற்றை காடுகளாவும். வெளிகளாகவும். இருந்ததால்  சிரமப் பட்டு பல இழப்புக்களை சந்தித்து அவ்வப்போது இராணுவம் வெளியேறுவதும் சண்டைகளும் நடந்து கொண்டேயிருந்தது.கிட்டு பொறுப்பு எடுத்ததுமே யாழ் குடா எங்கும் இராணுவம் மீதான தாக்குதல்களை தீவிரப் படுத்தியிருந்தார்.அதே நேரம் ரெலோ மீதான தாக்குதலை தொடுத்து அது அழிக்கப் பட்டதையடுத்து மற்றைய இயக்கங்களுடனும்  அவ்வப்பொழுது  ஏற்பட்ட  மோதல்களினால்  அவர்களும் இராணுவ முகாம்களை  சுற்றியிருந்த  தங்கள் காவல் நிலைகளை விலக்கிக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் மற்றைய இயக்கங்களின் மீதும் தாக்குதல்களை தொடுத்தும் தடையும்  செய்ததன் பின்னர்  புலிகள் மட்டுமே தனிப் பெரும் சக்தியாக உருவெடுக்கத் தொடங்கினர்.

இங்கு  மற்று இயக்கக் காரர்களிற்கும் அதன் ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட கிட்டு மீதே அதிக கோபம் இருந்தது. அதே நேரம் இலங்கை இராணுவத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள். மன்னாரில் நடந்த தாக்குதலில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை  இலங்கையரசிடம் ஒப்படைப்பு  செய்து  புலிகள் அமைப்பின் அருணா மற்றும் காமினி ஆகியோரை மீட்ட முதலவது கைதிப் பரிமாற்றத்தையும் கிட்டு செய்திருந்தார்.அன்றைய காலகட்டத்தில்  உள்ளுர் பத்திரிகைகள் முதல் பொதுமக்கள் அனைவர் வாயிலும் எங்கும் கிட்டு எதிலும் கிட்டு என்கிற பெயரே உச்சரிக்கப் பட்ட காலங்களாயிருந்தன.எந்த  இராணுவ முகாமில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தாலும்  சிறிது நேரத்தில்  கிட்டுவின் பச்சை நிற  ரொயோட்டா லான்சர்  கார் அங்கு வேகமாக வந்து பிறேக் அடிக்கும் தனது மக்னம் ரக கைத் துப்பாக்கியை  சுழற்றியபடி  கிட்டு கீழே இறங்குவார். சில நேரங்களின் கிட்டு சாப்பிட்ட கையை கூட கழுவாது விரலை சூப்பியபடி காரை ஓடிக்கொண்டு வருவார்..   "கையை கழுவிற நேரத்திற்குள்ளை   ஆமி யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவாங்கள் அதுதான் கையை கூட கழுவ நேரமில்லாமல் கிட்டு  வாறான்டா".. என்று சக போராளிகளே கிண்டலடிப்பார்கள்.கிட்டுவின் லான்சர் கார் என்கிறபோது நினைவிற்கு வரும் விடயம்  இயக்கங்கள் அனைத்துமே அன்றைய காலத்தில் பொது மக்களிடமிருந்து வாகனங்களை கடத்துவதில்  நீ நான் போட்டி போட்டு செய்து கொண்டிருந்தனர். புளொட்டும்  ரொலோவும்  யாழில் வாகனக் கடத்தலில் பெயர் பேனவர்களாக இருந்தனர்.  யாழ்ப்பாண நகரிற்கு போயிருந்த  சண்லிப்பாயை  சேர்ந்த மதன் என்கிற ரெலோ உறுப்பினர்  வீடு வருவதற்காக  ஒரு  இலங்கை போக்குவரத்து சபை  பேருந்து ஒன்றை கடத்திக் கொண்டு வந்து   வீட்டிற்கு அருகில் வைத்து அதை கொழுத்தி விட்டு வீட்டிற்கு போன  சம்பவமும் நடந்திருந்தது.

 இது போன்ற சம்பவங்களால் பொது மக்கள்  இவர்கள் மீது வெறுப்படைந்திருந்தாலும்  அவர்கள் கைகளில் ஆயுதம் ஒன்று இருந்ததால்  மனதிற்குள் திட்டியபடி மெளமாக  இருந்தார்கள். அன்றைய காலங்களில் புலிகள் அமைப்பு  தமிழ் மக்களிடம்  இருந்து  வாகனங்களை கடத்தி கெட்ட பெயர் எடுக்காமல்  அவர்கள் சிங்கள பகுதிகளில் போய் வாகனங்களை கடத்திக்கொண்டு வருவார்கள். முக்கியமாக  மடு மாதா திருவிழா தொடங்கி விட்டிருந்தால் ஒரே கொண்டாட்டம்தான்  தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் பணக்காரர்களின் வாகனங்களை  காட்டுப் பகுதிகளில் வைத்து கடத்திகொண்டு போய் விடுவார்கள்.யாழில் உருந்துளியில்  பயணம்  செய்துகொண்டிருந்த  கிட்டுவிற்கும்  சொகுசு வாகனத்தில்  பயணம் செய்ய ஆசை வந்திருந்தது தனக்கொரு வாகனத்தை கடத்திக் கொண்டுவருமாறு கட்டளையிட்டிருந்தார்.மன்னார்  கண்டி வீதியை இணைக்கும்  கெப்பிற்றி கொலாவ  பகுதியில்  மதியமளவில் தென்னிலங்கை  வாகனங்களிற்காக புலிகள் காத்திருந்தார்கள்  பச்சை நிற  ரொயோட்டா  லான்சர் காரொன்று  வந்து கொண்டிருந்தது  மரக் குற்றியை  வீதியின் குறுக்கே  உருட்டி காரை மறிந்தவர்கள்  துப்பாக்கியை நீட்டினார்கள்  காரில் இரண்டு பிள்ளைகளோடு வந்தவர்  எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு தங்களை  ஒன்றும் செய்து விட வேண்டாமென சிங்களத்தில் கெஞ்சினார். அவர்களை  இறக்கிவிட்டு புலிகள் காரை கொண்டு போகும் வழியில்  காரின் ஆவணங்களை எடுத்து பார்த்தபோதுதான் அது ஒரு தமிழரின் கார் என்று  தெரிய வந்திருந்தது.அந்த காரில்  வந்திருந்தவர் நீர்கொழும்பை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர்  அவர்  தனது கார் யாழில் கிட்டு பாவிப்பதை  உறவினர்கள் மூலம் அறிந்துகொண்டு சில காலங்களின் பின்னர் யாழ் வந்தபோது கிட்டுவிடம் சென்று பணம் தரலாம் தான் ஆசையாக  வெளிநாட்டில் இருந்தே  இறக்குமதி செய்த கார்  தனக்கு ராசியானதும் கூட எனவே அதனை தந்து விடுமாறு கேட்டிருந்தார்.அதற்கு கிட்டு நானும் இப்பொழுது ஆசையாக  ஓடித் திரிகிறேன் ராசியாகவும் இருக்கின்றது என்றபடி தனது கைத் துப்பாக்கியை  எடுத்து துணியால் துடைத்தபடி கூறவே  வைத்தியர்  தலையை குனிந்தபடி வந்தவழியே போய் விட்டார்.  இது இப்படியிருக்க...

 யாழ் குடாவின்  சிறுவர்கள் கூட  ஒழித்து  பிடித்து விழையாட்டு  கள்ளன் பொலிஸ் விழையாட்டுக்களை  கை விட்டு இடுப்பில் ஒரு கயிற்றையே   பனம் நாரையோ  கட்டிக்கொண்டு  அதில் ஒரு  தடியை  அல்லது திருவிழா துப்பாக்கியை  செருகிக் கொண்டு  கிட்டு மாதிரி நடந்து   ஆமி  இயக்கம் என விழையாடத் தொடங்கியிருந்தார்கள் இளைஞர் யுவதிகள் மனதில்  சினிமா கதாநாயகர்களின்  இடங்கள் அழிக்கப்பட்டு  கிட்டு சாகசங்கள் நிறைந்த   கதாநாயகன் ஆகியிருந்தார்..  இந்த காலகட்டமே  மாத்தையா கிட்டு விரிசல்களிற்கு காரணமாக இருந்தது என்பதோடு பிரபாகரனிற்கும் கிட்டு மீதான ஒரு எச்சரிக்கை பார்வை இருந்து கொண்டேதான் இருந்தது. அன்றைய காலத்தில் பிரபாகரன்  மாத்தையாவையே  ஆதரிப்பவராக இருந்தார் என்பதே உண்மை. ஆனால் இன்றும் மற்றைய இயக்கங்களை  அழித்ததால்தான் தம்மால் போராட முடியவில்லை  அவர்களிடம் ஜன நாயகம் இல்லை  ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கினார்கள்  அதனால் தமிழீழம் எடுக்க முடியவில்லையென வெளிநாடுகளில் வசிக்கும் மாற்று இயக்கஉறுப்பினர்கள் தொடர்ந்தும் சொல்லி வருகின்றார்கள். .மற்றைய இயக்கங்களிடம்  உட் படுகொலைகளோ மாற்று இயக்கங்கள் மீதான  தாக்குதல்களோ வன்முறையோ மக்கள் மீதான தாக்குதல்கள் கடத்தல் கொலைகளோ துரோகிகள் என்று மண்டையில் போட்டுத் தள்ளிய  இரத்தக் கறை படித்த கைகள்  எங்களிடம் இல்லை நாங்கள் சுத்தமான  ஜனநாயகவாதிகள் என்று யாரும் தங்கள் கைகளை உயர்த்த முடியாதவர்களே.ஆனால் உண்மை என்னவெனில்  மாற்று இயக்கங்களும் அவ்வப்பொழுது  புலிகள் மீதான தாக்குதல்களை  சிறு அளவில் நடத்தியிருந்தாலும் அன்று அவர்களால் புலிகளை அழிக்க முடியவில்லை .கை முந்தியவன் சண்டியன் என்றொரு பழமொழி  ஊரில் உண்டு புலிகளை அன்று அவர்கள் அழிப்பதற்கான ஆயுதவசதி    மனவுறுதி மற்றும் திட்டமிடல் இருக்கவில்லை  இவை அனைத்தும் புலிகளிடம் அல்லது கிட்டுவிடம்  இருந்ததால்  அவர்கள் கை முந்தி  சண்டியர்களாகி அனைத்தையும் செய்து முடித்திருந்தார்கள் .

கிட்டு கதா நாயகன்ஆனார்.இறுதியாக  புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர்   புளொட்டிற்கு  பயந்து என்.எல்.எவ்.ரி . அமைப்பினரின் பாதுகாப்பில் இருந்தபடியே  அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். வினரின் தயாரிப்பு கைக்குண்டினை கிட்டு  இரவு வேளை தனது காதலியான சிந்தியாவை சந்திக்க  சென்றிருந்தபோது  கிட்டுவை  நோக்கி மீது எறிந்திருந்தனர். ஆனால் குண்டு வெடித்த நேரம் கிட்டு கார் கதவை திறந்து வெளியே இறங்கிய நேரம் அவரிற்கு பின்னால் இருந்த அவரது மெய் பாதுகாவலர் சாந்தா மணியும் பின் கதவை திற்ததால்  வெடித்த குண்டின் சிதறல்கள்  திறக்கப்பட்ட கார் கதவுகளால் தடுக்கப்பட்டு  கிட்டுவின் காலையும் சாந்தாமணியிலன் கைகளையும் பதம் பார்த்திருந்தது கிட்டுவின் காலும் சாந்தாமணியின் கையும்  சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டிருந்தது.இததோடு கிட்டுவின் சகாப்தம்  யாழில் முடிவிற்கு வந்திருந்தது.  இந்த குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக இதனை  மாற்று இயக்கங்கள்  செய்திருக்கலாமென நினைத்து கைது செய்யப் பட்ட பலரோடு சிறு குற்றங்கள் மற்றும் நிதி கொடுக்க மறுத்தனால்  கைது செய்யப்பட்டு வைத்திருந்த யாழின் பிரபல  நகைக்கடை வியாபாரி  ஒரு வரும்  தடுத்து வைக்கப் பட்டிருந்த  யாழ் ஸ்ரான்லி வீதியில்  இருந்த  அரசரட்ணம்  என்பவரின்  வீட்டில்வைத்து அருணாவினால்   64 பேர் சுட்டுக் கொல்பட்டிருந்தார்கள்.  இதனையே  கந்தன்  கருணை படுகொலை  என இன்றுவரை  அடையாளப் படுத்தப் படுகின்றது. ஆனால் இது  யாழ்  நல்லூர்  வீதியில்  இருந்த  புலிகளின்  விசாரணை  முகாம்.  கந்தன்  கருணை  என்கிற  வீட்டில் நடந்ததாகவே  பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

மாத்தையாவே இதனை செய்திருக்கலாமென வதந்திகளும் பரவியிருந்தது. ஆனால் பலம் வாய்ந்த புலிகளின் புலனாய்வு பிரிவினரால் குண்டெறிந்த  தீப் பொறி குழுவினரை  உடனடியாக கண்டு பிடிக்க முடிந்திருக்கவில்லை  காலப்போக்கில் குண்டெறிந்தவர்களின் விபரங்கள் தெரிந்தபோது  அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள்.
இது கிட்டுவின் ஒரு பக்கம் என்றால் மறு பக்கமானது அவர்  ஜரோப்பா  வரும்வரை  ஒரு ஆணாதிக்க வாதியாகவே இருந்தார்.புலிகள் அமைப்பிற்காக பெண்களை இணைத்துக்கொள்ளும்படி  தொடர்ச்சியாக பிரபாகரன் கோரிக்கை வைத்ததுக்கொண்டிருந்தபோதும்  பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும்  பாட்டியின் அல்லது  ஒரு ஆண் துணையோடு போகின்ற  பயம் கொண்ட எமது  பெண்களால்  ஆயுதங்களை தாங்கி காடு மேடுகளில் கடினமாக  திரித்தும் எதிரியோடு போரிடும் மன நிலை அவர்களிடம் இல்லை எனவே அவர்களை  இயக்கத்தில் இணைக்க முடியாது என நேரடியாகவே  பிரபாகரனிடம் தெரிவித்திருந்ததோடு இயக்கத்தில் பெண்களை சேர்ப்பதை எதிர்க்கவும் செய்தார்.ரெலோ இயக்கத்தில் இணைந்து தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சென்று கைவிடப் பட்ட மற்றும் பெரும்பாலும்  யாழ் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களில் இருந்து புலிகளில் இணைந்த 53 பெண்களிற்கு  தமிழ் நாட்டில் சிறுமலை பகுதியில் பயிற்சி  முடித்து அவர்களை யாழிற்கு அனுப்ப பிரபாகரன் முடிவெடுத்திருந்ததும் அதனை கிட்டு எதிர்த்ததால் அவர்களை கரன்(சங்கரின் சகோதரர்  இவர் ஒரு திறைமையான  மாலுமி  குமரப்பா புலேந்திரன் அகியோரின்  பயண வள்ளத்தை செலுத்தியவரும் அவர்களோடு கைதாகி குப்பியடித்து இறந்து போனார்) முலம் மன்னாரில்  கொண்டுவந்து  மன்னார் மாவட்ட தளபதி விக்ரரிடம் பொறுப்பு கொடுக்கப் பட்டிருந்தது.  மன்னாரில் விக்கரரின் மரணத்தோடு மன்னாரின் பெரும்பகுதி இராணுவத்தின்  கைகளிற்கு போய்விட பெண்கள் அணி வன்னிக்கு மாத்தையாவின் பொறுப்பில் கொடுக்கப் பட்டிருந்தனர். பின்னர் தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன்  யாழ் வந்த பின்னரே  பெண்கள் அணியினர் யாழிற்கு வர வழைக்கப் பட்டு யாழ் கோப்பாய்  பகுதியில் முகம் அமைத்திருந்தனர்.

அதோடு பிரபாகரன்  தொடர்ந்தும் பெண்களை  இயக்கத்தில் இணைப்பதற்கான முயற்சியை  கிட்டுவிடம் சொன்னபோது அதை கிட்டு நடை முறைப் படுத்தாதனால் அதன் பொறுப்பு அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபனிடம் ஒப்படைக்கபட்டிருந்தது.
ஆனால்  எடுத்த எடுப்பிலேயே  பயிற்சி  ஆயுதம் போராட்டம்  என்று  நேரடியாக  இயக்கத்திற்கு   எமது பெண்களை  உள் வாங்குவது கடினம் என்று  புரிந்திருந்ததால் சுதந்திர பறவைகள்  என்கிற ஒரு அமைப்பை  உருவாக்கி முதலுதவி பயிற்சி  அரசியல் பரப்புரை என்று தொடங்கி பின்னர் ஆயுதப்  பயிற்சிகள் கொடுக்கலாமென முடிவெடுத்து  சுதந்திர பறைவகள் என்கிற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் யாழ் குடாவில்  சுமார் நூற்று கணக்கான பெண்களை  உள்வாங்க முடிந்திருந்தது அப்படி வடமராச்சி  பகுதியில் சுதந்திர பறைகைள் அமைப்பில் இணைந்த ஒருவர்தர்தான் Niromi de Soyza என்பவர். அவர் தமிழ்புலிகள் என்கிறதொரு புத்தகத்தை  ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதில் தான் ஆயுதப் பயிற்சி பெற்றதொரு பெண்புலி போராளி என்று எழுதியியுமிருந்தார். உண்மையில் இவர் புலிகளின் சுதந்திர பறைவைகள் அமைப்பில் இணைந்திருந்தவர்.  பெண்களிற்கான முதலாவது பயிற்சி முகாம் வடமராச்சி திக்கம் பகுதியில் தொடங்கப் பட்டு சுதந்திர பறைவைகள் அமைப்பை சேர்ந்த பெண்களிற்கு ஆயதப் பயிற்சி கொடுக்கத்தொடங்கியிருந்தனர்.அந்த பயிற்சி முகாமும் ஒப்பிறேசன் லிபரேசன் நடவடிக்கையால்  பாதியில் நின்று போக அதில் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் வீடுகளிற்கு போய் சேர்ந்துவிட பலர் இயக்கத்தில் தொடர்ந்தும் இருந்தார்கள்.அப்படி பாதி பயிற்சியின்போது  வீடுகளுக்கு  சென்றவர்களில் ஒருவர்தான் Niromi de Soyza .

 கிட்டு களத்தில் இருந்து அகற்றப் பட்ட பின்னரே பெண்கள் கட்டமைப்பு பலம் பெற்றிருந்தது. அடுத்ததாக கிட்டு லண்டன் வந்து சேர்ந்ததும்  அவரே அவரது வாழ்வின் இன்னொரு பாகத்தினை பார்க்கத் தொடங்கியிருந்தார்.லண்டன் வந்த புதிதில் கிட்டுவை   லண்டன் வாழ் தமிழர்கள் தினமும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வீடுகளிற்கு விருந்திற்கு அழைக்கத் தொடங்கியிருந்தனர். கிட்டு ஒரு  போர்குற்றவாளி  பல கொலைகளிற்கு காரமானவர்  எனவே அவரிற்கு லண்டனில் புகலிடம் கொடுக்கக் கூடாது என மனிதவுரை அமைப்புக்களும் அவரால் பாதிக்கப் பட்ட மாற்று இயக்ககக் காரர்களும் சட்டரீதியான போராட்டங்களை நடாத்தத் தொடங்கியிருந்தனர். அது மட்டுமல்லாமல் புலிகளின்  அனைத்துலகப் பிரிவில் வெளிநாடுகளில் நிதி மேசடிகளில் ஈடுபட்டவர்கள் என கிட்டுவால் விரட்டப் பட்டவர்களும்  கோபத்தில் கிட்டு நடவடிக்கைககள் நடமாமாட்டங்களை  இங்கிலாந்து புலனாய்வு பிரிவிற்கு தகவல்களாக வழங்கிக்கொண்டிருந்தார்கள்.  அதே நேரம்  இந்தியாவும் கிட்டுவிற்கு  இங்கிலாந்து விசா கொடுக்காமல்  இருப்பதற்கான அழுத்தங்களை கொடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது  அதன் பின்னர் கிட்டு சட்ட ரீதியாக  அகதி தஞ்சக் கோரிக்கை வைத்திருந்தார்.அதுவும் நிராகரிக்கப் பட்டிருந்தது. கிட்டுவிற்கு சட்டப் பிரச்சனை என்றதுமே வீட்டிற்கு வில்லங்கத்திற்கு அழைத்து விருந்து கொடுத்தவர்கள் எல்லாரும் கிட்டுவை கண்டாலே ஒழிந்து ஓடத் தொடங்கியிருந்தார்கள். அதன் பின்னர் கிட்டு சுவிசிற்கு வந்தவர் பிரான்ஸ்  யெர்மனி என்று மற்றைய நாடுகளிலும் தஞ்சக் கோரிக்கையை  வைத்தார் இந்த நாடுகளும் அவரது தஞ்சக் கொரிக்கையை நிராகரித்து விட்டிருந்தது.யாழ் வீதிகளில் கதாநாயகனாக வலம் வந்த கிட்டு ஜரோப்பாவில் ஒழிந்து மறைந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.அதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா புலிகளுடன்  அதிகார பூர்வமற்று சில இரகசிய பேரங்களையும். அதே நேரம்  இலங்கை பிரச்சனைக்கு தமிழீழம் அல்லாத ஒரு தீர்வையும் பற்றி பேசுவதற்கு முடிவெடுத்திருந்த நிலையில் தம்முடன் பேசுவதற்கு யாராவது ஒரு புலிகளின் முக்கியமானவரை தெரிவு செய்து அனுப்பும்படி புலிகளின் தலைமைக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.வழைமையாக  இது போன்ற வெளிநாட்டவர்களுடனான ராஜதந்திர பேச்சுக்களை அன்ரன் பால சிங்கம் அவர்களே செய்வது வழைமை ஆனால் அன்றைய காலத்தில் கிட்டு ஜரோப்பாவில் விசா பிரச்சனையில் இருந்ததால் அவரை அமெரிக்க அதிகாரிகளுடன் பேசுவதற்காக  அமெரிக்கா அல்லது கனடாவிற்கு அனுப்பிவிடுவது பின்னர் கிட்டு அங்கேயே தங்கியிருந்தபடி இயங்கலாம் என நினைத்த புலிகள் அமைப்பு தமது பக்கம் இரகசிய பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்புவதாக  தெரிவித்து விட்டிருந்தார்கள். கிட்டுவிற்கு ஐரோப்பில் விசா பிரச்சனை என்பதால்  அவர் பெருமளவான தமிழர்களும் தமிழ் சட்டவாளர்களும்  வாழும் அமெரிக்காவிற்கோ  கனடாவிற்கோ வந்தால் அங்கு  அகதி தஞ்சக் கோரிக்கைகையை  வைத்து விட்டு  சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்தலாமென  அமெரிக்கா நினைத்தது.  அதே நேரம்  தாம் நடத்தும்   இரகசிய பேச்சு வார்த்தை விடயங்களும் கசியலாம் எனவே புலிகள் ஒன்று நினைக்க அமெரிக்கா  ஒன்றை நினைத்திருந்தது. அவர்கள் சந்திப்பிற்காக  தெரிவு செய்த நாடு  மெக்சிக்கோ. வேறு வழியின்றி  சுவிசில் இருந்து  மெக்சிக்கோ சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

பேச்சு வார்த்தைகள முடிந்ததும்  கிட்டு மீண்டும் ஜரோப்பிற்கு திரும்பவதற்கு எந்த நாடும் விசா வழங்கவில்லை  கிட்டு மீண்டும் பிரபாகரனை சந்திக்கப் போவதற்கான  எந்த உதவிகளையும்  அமெரிக்கவும் செய்யவில்லை காரணம்  அன்றைய காலத்தில்  புலிகளின் தந்திரமான  சர்வதேச வலையமைப்பு  எப்படிப்பட்டது என்று அவர்களிற்கும் தெரியும்.கிட்டு எப்படியும் பிரபாகரனிடம் போய் சேர்ந்து விடுவார் என்பதும் தெரியும். அதே நேரம்  கிட்டுவை பின் தொடர்ந்து  கண்காணித்து இந்த வலையமைப்புக்களை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்கா உளவுவுப் பிரிவு தீவிரமாக இருந்தது. ஆனால் கிட்டு தந்திரமாக  உக்கிரெனிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் போலந்தில் சில காலங்கள் தங்கியிருந்தார்.அடுத்ததாக அவர் பிரபாகரனை சந்திக்கப் போக வேண்டும். ஆனால் மீண்டும் வெறுங்கையுடன் ஊரிற்கு போக விரும்பாத கிட்டு சில ஏவுகணைகளையாவது பெற்றுக்கொண்டு போகும் முயற்சிகளில் ஈடு பட்டிருந்தார். கே.பி கொம்பனியால் கொள்வனவு செய்யப் பட்ட ஆயுதங்களோடு போய் சேருவதென முடிவானது. உக்கிரெனியில் வாங்கிய ஆயுதங்கள் தாய்லாந்திற்கு கொண்டு சேர்க்கப் பட்டதும் கிட்டுவும் தாய்லாந்து போய் சேர்ந்திருந்தார். தாய்லாந்தின் புக்கெற் பகுதியில் இருந்த சிறிய தறை முகம் ஒன்றில் இருந்து   M.V. YAHATA. என்கிற கப்பலில் அமெரிக்காவின்   சமாதான பேச்சு வார்த்தைகளிற்கான குவோக்கர்  என்கிற தீர்வு திட்ட வரைபுகளோடும்  ஆயுதங்களோடும்  கிட்டு கப்பலில் ஏறியிருந்தார். கிட்டுவோடு எப்பொழுதும் கூடவே ஒட்டியிருக்கும்    மானிப்பாயை சேர்ந்த குட்டி சிறி உட்பட புலிகள் உறுப்பினர்கள் ஒன்பது பேருடனும் கப்பல் மாலுமி சிப்பந்திகள் ஒன்பது பேருடனும் கப்பல் புறப்பட்டிருந்தது.

கப்பல் புறப்பட்டதுமே அதன் செய்தி பிரபாகரனிற்து தாய்லாந்தில் இருந்து குமாரால்  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அந்த செய்தியை  வெளிநாட்டு தொலைத் தொர்பிற்கு பொறுப்பாகவும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த கிருபன் பெற்றுக் கொள்கிறார்.கப்பல்  சர்வதேச கடலிற்குள் இறங்கியதும் வழைமைபோல M.V. YAHATA.என்றிருந்த பெயரில் சில எழுத்துக்களை  அழித்து    AHATA என்கிற பெயரிற்கு மாறி ஆவணங்களும் மாற்றப் பட்ட நிலையில் பயணத்தை தொடந்து கொண்டிருந்தது. அதே நேரம் பிரபாகரனிற்கு தெரிவிக்கும்படி குமாரால் கிருபனிற்கு கொடுக்கப் பட்ட செய்தி முதலில் இந்திய உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவரிற்கு போய் சேருகின்றது  பின்னரே பிரபாகரனிற்குதெரிவிக்கப் படுகின்றது அதனை கொடுத்தவர் கிருபனே.கிட்டுவை போட்டுக் கொடுத்தவர் மாத்தையா என்றே பொதுவாக பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனை செய்தது கிருபன் என்பது பலரிற்கு தெரியாத விடயம். கிருபனிற்கும்  இந்திய உளவு அதிகாரிகளிற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் கொஞ்சம் பார்த்து விடலாம்.
                                                          
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி பின்னர் புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும்  சண்டை தொடங்கிய பின்னர் தமிழ் நாட்டில் தங்கியிருந்த  புலிகளின்  முக்கிய மூன்று நபர்களை  இந்திய உளவுப் பிரிவான றோ அமைப்புஅவர்களிற்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து  தங்கள் பக்கம் இழுத்து தம்வசமாக்கி புலிகள் அமைப்பை அழிப்பதோடு அதன்  தலைமைக்கு குறி வைத்தனர். அந்த முக்கிய மூன்று நபர்கள்  இஞ்சினியர் எனப்படும் மகேந்திரன். இவர் புன்னாலைக் கட்டுவனை சேர்ந்தவர்  இவரின் சகோதரர் வாசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் யாழ் குருநகர் பகுதியில் இராணுவ சுற்றிவழைப்பில் மரணம் அடைந்தவர். இஞ்சினியர்  மாத்தையாவின் நெருங்கிய நண்பர்  இவரைப் பற்றி  இன்னொரு பக்கத்தில் விபரமாக பார்க்கலாம்.அடுத்தவர்  இந்திய படை மோதல் காலத்தில் தமிழ்நாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கிட்டு . என்னது கிட்டு றோவிற்காக இயங்கினாரா ??என பலரிற்கு ஆச்சரியமாக இருக்கும்.கிட்டு றோ அதிகாரிகளிற்கு ஒத்துளைப்பது போல் போக்கு காட்டியிருந்தார் ஆனால் கிட்டு தங்களிற்கு உண்மையிலேயே ஒத்துளைப்பதாக நம்பிய றோ அதிகாரிகள்  கிட்டுவின் வீட்டுக் காவலை விலக்கியிருந்ததோடு  அவரிற்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களே  கிட்டுவை கொண்டு போய் வன்னியில் இறக்கி  பிரபாகரனை சந்திப்பதற்காக அனுப்பியும் வைத்திருந்தனர். ஆனால் கிட்டு தங்களிற்கு தண்ணி காட்டியதை  பல காலங்களிற்கு பின்னரே அதவது ராஜுவ் காந்தி கொலை  செய்யப் பட்ட பின்னரே  அவர்களிற்கு தெரிய வந்திருந்தது.அதனாலேயே இந்தியாவும் கிட்டு மீது கடும் கோபத்தில் இருந்தது இதனாலேயே  கிட்டுவிற்கு எந்த நாடும் தங்குமிட அனுமதி வழங்காமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த மூன்றாவது நபர்தான் கிருபன்  வடமராச்சியை சேர்ந்தவர்  இவர் பிரபாகரனிற்கு நெருக்கமானவர்.

கிட்டு  தமிழ் நாட்டில் தங்கியிருந்தாலும்  பிரபாகரன் கிட்டுவை பெரியளவு நம்பாமல் கிருபனையே  தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமித்திருந்தார்.கிருபன்  மதுரையில் இருந்தபடி வேதாரணிய  கடற்கரையை  மையமாக வைத்து புலிகளிற்கு வேண்டிய பொருட்களை அனுப்பிக் கொண்டிருந்தார். கிருபன் மதுரையில் தங்கிருந்ததை  அறிந்த கிட்டு  அவரை தொடர்பு கொண்டு தன்னுடைய  அதிகார தோரணையில்  சில வேலைகளை செய்யச் சொல்லி சொன்னபோது கிருபன் மறுத்ததோடு இது யாழ்ப்பாணமும் இல்லை நீ பொறுப்பாளரும் இல்லை இங்கு நான்தான் பொறுப்பாளர்  எனக்கு நீ கட்டளையிட முடியாது என்றதும் கிட்டுவும்  வழைமைபோல் தூசணத்தால் திட்டிவிட  கிட்டுவிற்கும் கிருபனிற்கும் முறுகல் உருவாகியிருந்தது. கிட்டு வன்னிக்கு சென்ற பின்னர்  கிருபன் மதுரையில் கைது செய்யப் பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கபட்டிருந்தார். ஒருநாள்  அவரை நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டபோது தப்பியோடி விட்டதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. றோ அமைப்பினரே கிருபனை தங்கள் பக்கம் இழுத்திருந்ததோடு  தப்பியோடிய நாடகத்தை நடத்தி அவரை வேதாரணியம் வழியாக  வன்னிக்கு அனுப்பியும் வைத்திருந்தனர். கிருபன் உண்மையிலேயே தப்பி வந்துவிட்டதாக நினைத்த பிரபாகரனும் மீண்டும் அவரை தனது பக்கம் வைத்திருந்ததோடு அவரிடம் சர்வதேச தொலைத் தொடர்பு பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். ஆனால் கிருபன் றோ அதிகாரிகளிற்கு முழுக்க  முழுக்க விசுவாசமாக நடந்து கொண்டிருக்காவிட்டாலும்  கிட்டு மீது இருந்த தனிப்பட்ட கோபத்தை பழி தீர்த்துக் கொள்வதற்காக  கிட்டு கப்பலில் வரும் செய்தியை அவர்களிற்கு கொடுத்து விட்டிருந்தார்.

கிட்டுவின் கப்பலை கண்காணிக்கத் தொடங்கிய  இந்தியக் கடற்படை சர்வதேசக் கடலில் வைத்து கிட்டுவின் கப்பலை இடை மறித்தார்கள். இந்த செய்தி  கப்பலில் இருந்து தாய்லாந்திற்கும் வன்னிக்கும் அறிவிக்கப் பட்டது. புலிகளின் தலைமை உடனடியாக  தமிழ் நாட்டில் இருந்த தங்கள் ஆதரவாளர்களான நெடுமாறன்.வை.கோ. கொளத்தூர் மணி .சுப.வீர பாண்டியன் ஆகியோரோடு தொடர்பு கொண்டதையடுத்து  அவர்கள்  இந்திய  அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  கப்பல் சர்வதேச கடலில் போய்க்கொண்டிருப்பதால் அதனை நிறுத்த சட்டப்படி முடியாது எனவே அதனை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டனர். கப்பல் சர்வதேசக் கடலில் சென்றாலும் அதில் ஆயுதங்கள் கடத்தப் படுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவே இந்து சமூத்திர பிராந்தியத்தில் சட்ட விரோத ஆயுதக் கடத்தலை தடுக்கும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது. எனவே கப்பலை சோதனையிட்டு  அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லாவிட்டால் நாங்கள் அவர்களை  தொடர்ந்து பயணிக்க அனுமதிப்போம் என்று பதிலை கொடுத்திருந்தனர். புலிகள்  கப்பலில் கிட்டு சமாதான செய்தியோடு வருகிறார்  என்று மட்டுமே  இந்திய அதிகாரிகளோடு பேச்சு வார்த்தையில் ஈடு பட்ட  தங்கள் ஆதரவாளர்களிற்கு தெரிவித்திருந்ததால் அவர்களும் கப்பலில் ஆயுதங்கள் இல்லை எனவே நீங்கள் தாராளமாக சோதனையிடலாம் ஆனால் யாரையும் கைது செய்யக்கூடாது என உறுதியளிக்கவேண்டும் என கேட்டிருந்திருனர்.  இந்திய அதிகாரிகளும் உறுதியளித்திருந்தார்கள். இதற்கிடையில் கிட்டுவின் கப்பலை மறித்திய இந்தியக் கடற்படை   கிட்டு வந்த கப்பலை சோதனையிட வேண்டும் எனவே  இந்திய கரை நோக்கி செல்லுமாறு கட்ளையிட்டதும் அதை மறுத்தததோடு  தங்கள் கப்பலிற்கு அருகில் இந்திய கப்பல் வந்தால் தங்கள் கப்பலை தகர்த்து விடுவோம் என்றும் மிரட்டியிருந்தார்கள். அதனை  இந்திய கடற்படை கப்பலில் இருந்தவர்கள் டெல்லிக்கு  தங்கள் மேலதிகாரிகளிற்கு தெரியப் படுத்திவிட்டு அடுத்த நடவடிக்கைகாக காத்திருந்தனர். கிட்டு தங்கள் கப்பலை  இந்தியக் கரைக்கு செலுத்த மறுத்தததை அறிந்த  இந்திய  அதிகாரிகள்  கிட்டுவின் கப்பலில் உலங்கு வானூர்தி(கெலிகொப்ரர்) மூலம் அதிரடிப்படையினரை  இறக்கி சோதனையிட நடவடிக்கை எடுத்தனர். அந்தமான் தீவுப் பகுதியில் இருந்த இந்திய கடற்படையின் கப்பலொன்று அதிரடிப்படையினர் மற்றும் உலங்கு வானூர்தியை தாங்கியபடி கிட்டு இருந்த கப்பலை அண்மித்திருந்தது.

அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்த கிட்டு  கப்பல் பணியாளர்கள் ஒன்பது பேரையும்  தற்பாது காப்பு  படகில் ஏற்றி அவர்களை போகச் சொல்லி விட்டு கப்பலில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார்  சிறிய படகில் பணியாளர்கள்  சிறிது தூரம் சென்றதுமே  கிட்டுவின் கப்பல் பாரிய வெடிச் சத்தங்களுடன் வெடித்து சிதறத் தொடங்கியிருந்தது. கிட்டு எனும் அலையும் அவரோடு மற்றைய ஒன்பது பேரும்  இந்திய பெருங்கடலில் அடங்கிப்போனார்கள். கப்பல் பணியாளர்களை இந்திய கடற்படை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.சில வருடங்களிற்கு  பின்னர் கப்பல் பணியாளர்கள் குற்றமற்றவர்கள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று அவர்கள் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள்.

கக்கூஸ் ...(கதையல்ல கலாய் ...)

5:04 AM, Posted by sathiri, No Comment

கக்கூஸ்
கதையல்ல கலாய் ...
ஜீவநதிக்காக..சாத்திரி .

வாஷிங்டன் சிட்டிசியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள் இழுத்துக்கொண்டு  வந்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
கையில் ஒரு பைலோடு செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்.கதிரையை காலால் தள்ளியபடி எழுந்த தலைவர் கோபமாக  "யோவ் என்னதான்யா நடக்குது .வழிக்கு வருவாங்களா இல்லையா"..

"இல்லை சார் ..அவங்கள் வழிக்கு வர மாட்டாங்களாம்.மன்னிக்கோணும் " என்றார்  பவ்வியமாக .

இதை சொல்லவா உனக்கு கோட்டு சூட்டு வாங்கி தந்து.டிக்கெட்டும் போட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வைச்சனான்.இது ஒண்டும் கந்து வட்டிக்கு காசு குடுக்கிற ஏரியா ரவுடியோ.. பணத்தை வாங்கிட்டு ஏமாத்திர பைனான்ஸ் கம்பனியோ அல்ல.. உலக த்தில உள்ள வங்கிகளுக்கே கடன் குடுக்கிற உலக வங்கி .188 நாடுளிலை கிளையும் ..88 நாடுகளில்லை வேரும் வைச்சிருக்கிறோம் தெரியுமா?".. என்று கத்தியபடி . மௌனமாக தலை குனித்து நின்ற செயலாளரின் "டை". யில் பிடித்து  யன்னலோரம் இழுத்துப் போனவர்."பார்   நல்லாப் பார் ..ஒட்டு மொத்த மீடியாவும் இங்கைதான் நிக்கிறாங்கள்."உலக வங்கியால் போடப்பட்ட திட்டம் படு தோல்வி"  என்று கொட்டை எழுத்திலையும், பிரேக்கின் நியூசிலையும்   போட்டு கிழி ,கிழி ,கிழி எண்டு கலா மாஸ்டரை விட மோசமா கிழிக்கப் போறாங்கள்.வெளியிலை தலை காட்ட முடியாது.பதவியை விட்டு விலகி பன்னி மேக்கப் போகவேண்டியதுதான்.

"சார் நீங்களே ஒரு தடவை நேரிலை போய் பார்த்தால் தான் உங்களுக்கு நிலைமை புரியும்.வரும்போதே என்னோடை பதவி விலகல் கடிதத்தை கொண்டு வந்திட்டேன்.நான் தோத்துப் போயிட்டேன் சார்.கடைசியா எனக்கு கொஞ்சம் கடன் கொடுத்தால் நானே சொந்தமா நாலு பன்னியை வாங்கி பிளைச்சுக்குவேன்"..என்றபடி கடிதத்தை நீட்டவே..அதை வாங்கி கிழித்து குப்பைக் கூடையில் போட்டவர் .."நானே ஸ்ரீலங்கா போறேன்.நான் வாறேன் எண்டு போன் பண்ணி சொல்லு"..  வேகமாக அங்கிருந்து வெளியேறினார் ஜிம் யோங் கிம் ......
000000000000000000000000000000000000000000

அன்றைய  தினக்கறள் பத்திரிகையோடு கழிப்பறைக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு குந்தியிருந்தபடி பேப்பரை விரித்த அருணனுக்கு பேரதிர்ச்சி.."உலக வங்கி திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட நவீன கழிப்பறைத் திட்டம் கை விடப் படுமா?..உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ஸ்ரீலங்கா விரைகிறார் ..வடமாகாண சபை முதலமைச்சர் முக்கினேஸ்வரன் அவர்கள் கழிப்பறை சம்பந்தமான முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாண  அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளார்"..செய்தியை படித்த அருணனுக்கு லேசாய் தலை சுற்றியது. அருகிலிருந்த தண்ணி வாளியைப்  பிடித்தபடியே அவசராம இருந்து முடித்து கழுவியவன். "ச்சே  போச்சு..என்னுடைய கனவு; கற்பனை;ஆசை எல்லாமே போச்சு"..என்றபடி அங்கிருந்து வெளியேறி வேகமாக வந்து சத்தி டி.வி யைப் போட்டான்.  "நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி"  என்று பிரேக்கின் நியூஸ் போய்க்கொண்டிருந்தது..

அருணனின் பள்ளித்தோழன் பாலன் இலங்கையில் பிரச்சனைகள் தொடங்கியதுமே ஆஸ்திரேலியா போனவன்தான். இப்போ பிரச்சனைகள் முடிந்ததும் ஊருக்கு வந்து சண்டையிலை இடிந்து போயிருந்த வீட்டை முழுதுமாக இடித்து மாடி வீடாக கட்டி முடித்து குடி பூருதலுக்காக அருணனையும் அழைத்திருந்தான்.அதிசயத்தோடு ஒவ்வொரு அறையாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவனுக்கு "இது தான் கக்கூசு".. என்று பாலன் கதவை திறந்து காட்டியதுமே ஆச்சரியம்.வெள்ளை வெளேரென்ற பளிங்கு கற்கள்  பெரிய காண்டிகள் பதித்து வண்ண விளக்குகளோடு இருந்த கழிப்பறையில் கொமேட்டுக்கு உறை வேறு போட்டிருந்தது.தொட்டுப் பார்ப்பதற்காக கையை பக்கத்தில் கொண்டு போனதுமே சர் ...என்று தண்ணீர் பாய திடுக்கிட்டு நின்றவனை ... "பாத்தது போதும் வாடா".. என்று கையில் பிடித்து இழுத்து வெளியே கொண்டு போய் விட்டான் பாலன் .

ஒரு தடவையாவது அதிலை ஒண்ணுக்கு அடிக்க வேணும் என்று அருணனின் மனது தவியாய் தவித்தாலும் அடக்கிக்கொண்டு அவனுக்குப் பின்னால் போய் விட்டான்.விருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது வயிற்றை தடவியபடி "டேய்  லேசா கலக்குது ஒருக்கா".. என்று கெஞ்சியவனிடம். "எல்லாமே புதிசாய் இருக்கு உனக்கு இந்த  வெஸ்டர்ன்  கக்கூஸ் எல்லாம் பழக்கமிருக்காது நாறடிச்சிடுவாய்  பின்னலை பெரிய பனங்காணி இருக்கு".. என்று அனுப்பி விட்டான்.அருணனுக்கு பெருத்த அவமானமாகிப் போய் விட்டது. ஒரு நாள் ..என்றைக்கவது ஒரு நாள் இதுக்காகவே கொழும்புக்கு போய் ஹோட்டேல் போட்டு ஆசையை தீர்த்துவிடுவது என்று சபதமெடுத்திருந்தவனுக்கு." உலக வங்கியின் நிதியுதவியோடு  முகமாலையில் நவீன கழிப்பறை திட்டம்".. என்கிற செய்தியைப் படித்த போது முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த முழு சுதந்திரத்தை அனுபவிப்பது போன்றதொரு உணர்வு. "அடே நண்பா உன்னை வெல்வேன்"..  என்று சத்தமாக கத்தியபடியே பத்திரிகையை கிழித்தெறிந்து ஆனந்ததில் துள்ளிக் குதித்தவன்
இரண்டு தடவை முகமாலைக்குப் போய் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப் பட்ட இடத்தைக் கூட சுற்றிப் பார்த்து கைத் தொலைபேசியில் படமெடுத்து  பேஸ் புக்கிலும் போட்டு விட்டிருந்தான் .அத்திவாரம் வெட்டப்பட்டு அபிவிருத்தி அமைச்சரால் அடிக்கல்லும் நாட்டப் பட்ட நிலையில் .. "கழிப்பறையை முகமாலையில்  கட்டக் கூடாது இயக்கச்சியில் தான் கட்ட வேண்டும்"..என்று தமிழ் தோசைக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் பிரச்சனையை கிளப்பியுள்ளதால் நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி.என்பதுதான் இப்போதுள்ள பிறேக்கிங் நியூஸ் .
0000000000000000000000000000000000000000000000000000

யாழ் நாவலர் கலாச்சார மண்டபம்  அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாலர்களாலும் நிரம்பியிருந்தது.மத்தியில் மேசைமீது நவீன கழிப்பறைக் கட்டிடத்தின் வரைபடமும் அதன் மினியேச்சர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.கழுத்தில் மாலையோடு கையில் இருந்த செவ்விளநீரை ஸ்ட்ரா போட்டு உறுஞ்சியபடி நின்றிருந்த தலைவர் ஜிம் யோங் கிம் மிற்கு  .உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி விளக்கத்  தொடங்குகிறார். "சார் இதுதான் நாங்கள் கட்டப் போகும் கழிப்பறைகள்  .இதற்கான நீர் வழங்கலை இரணைமடுக் குளத்திலிருந்து கொண்டு வரப் போகிறோம் .இதன் கழிவுகளை குழாய் வழியாக பரந்தன் வரை கொண்டு சென்று அங்குள்ள இரசாயனத் தொழிற்சாலையில் சேமித்து எரி வாயுவாக மாற்றும் திட்டம் உள்ளது அதனை யேர்மனிய  பயர் நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.எரிவாயு எடுத்து முடிந்த மீதிக் கழிவுகள் கிளிநொச்சிவரை கொண்டு சென்று அங்கு வயல்களுக்கு பசளையாக பயன்படுத்தப்படும்" ..என்று சொல்லி விட்டு நிமிர்ந்தார் .

ஜிம் யோங் கிம் குடித்து முடித்த இளனிக் கோம்பையை  ஓடோடிப் போய் வாங்கிய கிரிதரன். "..ஐயா திட்டமெல்லாம் நல்லது ஆனால் முகமாலையில் வேண்டாம்.யாழ்ப்பாணத்தாரின்  கழிவுகளை வன்னியிலை கொட்ட அனுமதிக்க முடியாது.அதே நேரம் அவங்கள் கழுவுறதுக்கு இரணைமடுவிலையிருந்து தண்ணியும் குடுக்க முடியாது இயக்கச்சியிலை தான் கட்ட வேணும் என்று முடிக்க முன்னரே ." இது கழுவிற மேட்டர் இல்லை.துடைக்கிற மேட்டர்  இது கூடத் தெரியாமல் எம்.பி யாம்.தமிழனுக்கு குடிக்கிற தண்ணியால தான் பிரச்னை என்றால் கழுவுற தண்ணியாலும் பிரச்சனை "..என்று தாடியை தடவியபடி சிரித்தார்  தயானந்தா.
அதுவரை மினியேச்சரை உத்துபார்த்துக்கொண்டிருந்த சிவாஜிசிங்கம்   உரத்த  குரலில்.. "இது தமிழரின் கட்டிடக்கலை இல்லை,ஆரியக் கட்டிடக்கலை.கழிப்பறைக் கட்டிடம் என்கிற பெயரில்  இது திட்டமிட்ட கலாசார அழிப்பு இதற்கு அனுமதிக்க முடியாது .கக்கூஸ் என்பதே அடிமைச் சின்னம்.அதனால் தான்  1985 ம் ஆண்டே நாங்கள் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தை தாக்கும்போதே முதலாவதாக அங்கிருந்தத .கக்கூசை குண்டுவைத்து தகர்த்தோம்.எங்கேயும் எபோதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எமது கொள்கை.கடந்த தேர்தலில் மகிந்த்தாவையே எதிர்த்துப் போட்டியிட்டவன் .இந்த அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமா பெண்டாட்டி கிலாரி வெற்றிபெற நல்லூரில் ஆயிரம் தேங்காயை அசராமல் அடித்துடைத்தவன்".. என்றார்.

சிவாஜி சிங்கம் சொன்னதை அப்படியே ஜிம் யோங் கிம்  மிற்கு உதவியாளர் மொழிபெயர்த்து கூறி முடித்ததும் அவருக்கு வியர்த்து வழியத் தொடங்க கோட்டை கழற்றி கதிரையில் போட்டுவிட்டு"உண்மையிலேயே  இந்தாள் லூசா..இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா. கக்கூஸ் கட்டிடத்திலை என்ன கலை வேண்டிக் கிடக்கு இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ".என்று நினைத்தபடி முகத்தில் வழிந்த வியர்வையை  துடைத்துக் கொண்டார்.
அதற்கிடையில் கிம்  மிற்கு முன்னால் நின்றவர்கள் இரண்டாகப் பிரிந்து நின்று  "முகமாலையில் தான் கட்டவேணும் ..இலையில்லை இயக்கச்சியில் கட்ட வேணும்" என்று வாய் தர்க்கத்தில் இறங்கத் தொடங்கவே.அப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த கனகேந்திரன் "வருகிற வழியிலை சைக்கிளுக்கு காத்து போயிட்டுது அதான் பிந்திட்டுது"..என்றவர் சைக்கிளை நிறுத்திவிட்டு.  "வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு" ..என்று கத்திக்கொண்டிருக்க.அங்கு வந்த சமந்திரன் ."டேய்  வெள்ளைக்காரன் நாடைவிட்டுப் போய் 67 வருசமாச்சு"..

 நான் சொன்னது இந்த வெள்ளைக்காரனை ..

இவர் வெள்ளைக்காரன் இல்லை.ஜப்பான்காரன் ..

பார்க்க வெள்ளையாய் தானே இருக்கிறார் .."வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு"..தொடர்ந்து கத்தினார் ..

"சைக்கிள் காத்துப் போனாலும் இவங்கள் திருந்த மாடான்கள்".. என்றபடியே சமந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.இத்தனை களோபரங்களுக்கு மத்தியிலும் ஒருவர் மட்டும் ஒரு கதிரையில் சாய்ந்து அமைதியாக கொர் ...கொர் ..விட்டுக்கொண்டிருக்க அத்தனையையும் பார்த்த ஜிம் யோங் கிம்  கடுப்பாகி உதவியாளரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறவே  "சார் உங்கடை கோட்டை மறந்துவிட்டு போறிங்கள் "..என்று சத்தம் கேட்டது.திரும்பி பார்க்காமலேயே  "அதை நீங்களே போட்டு கிழியுங்கடா".. என்று விட்டு கிழம்பிவிட்டார் .
00000000000000000000000000000000000

மீண்டும் வாஷிங்டன் சிட்டியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள்.கையில் எந்த பைலும் இல்லாமல் செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்."சார் ஸ்ரீலங்கா போனிங்களே என்னாச்சு?வெளியே மீடியா எல்லாம் காவல் நிக்கிறார்கள் என்ன சொல்ல"...

சொல்லு ..போய் சொல்லு ..திட்டத்தை அமேசன் காட்டுக்கு மாத்தியாச்சு எண்டு போய் சொல்லு ...

அமேசன் காட்டுக்கா ?...அங்கைதான் மனிசரே இல்லையே ....

பரவாயில்லை அனகொண்டா இருந்திட்டுப் போகட்டும் ...
செயலாளர் அங்கிருந்து வெளியேறினார் ...
.......................................................................................................................................................
குமணன் வீட்டிலிருந்த பழைய கதிரை ஒன்றை எடுத்து அதன் நடுவில் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தான் ...



காடுவரை உறவு ..இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக.

1:51 PM, Posted by sathiri, No Comment

காடுவரை உறவு
இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக  (சாத்திரி)

குடியேற்றவாசிகளின் காடு  அமேசன் காடு பற்றி அறிந்திருப்போம்.இதென்ன குடியேற்றவாசிகளின் காடு? இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் பிரான்சின் கடைசி நகரமான CALAIS யில் தான் குடியேற்றவாசிகளின் காடு அமைந்துள்ளது. பிரான்சில் குளிர்காலம் தொடங்கும்போதும் தேர்தல் காலத்திலும் இந்த குடியேற்றவாசிகளின் காடு  ஊடகங்களின் முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அரசியல் வாதிகளின் வாயிலும் பேசுபொருளாக மாறிவிடும்.இந்த வருட இறுதி குளிர்,தேர்தல் இரண்டுமே ஓன்று சேர்ந்து வருவதால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத்தான் .சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்று முடியாமல் போனவர்கள் சிலர் CALAIS இரயில் நிலையத்திலும் வீதியோரங்களிலும் தங்கத் தொடங்கியிருந்தார்கள்.


அவர்களால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல்கள் ஏற்படத் தொடங்கவே பிரான்சின் கத்தோலிக்க உதவி அமைப்பானது 1999 ம் ஆண்டின் இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் சில தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் குடியேற்றவாசிகளை தங்கவைத்து உணவும் வழங்கத் தொடங்கினார்கள்.
சில பத்துப் பேரோடு தொடங்கிய முகாம்.வளைகுடா யுத்தம்,ஆப்கானில் தலிபான்கள் மீதான யுத்தம்,என்று விரிவடைத்து,அரபு வசந்தம் என்கிற பெயரில் எகிப்து,துனிசியா,லிபியா,சிரியா..உள்நாடுக் கலவரங்களாக வடிவெடுத்து இன்று ஐ.எஸ்.ஐஎஸ் .மீதான தாக்குதலாக  இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரந்து விரிந்திருப்பதைப் போலவே.இந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த மக்களால் குடியேற்றவாசிகளின் காடானது சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களோடு பரந்து விரிந்து நிற்கிறது.மிக அமைதியானதும் மீன்பிடிமற்றும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இந்தக் நகரம்  பலவருடங்களாகவே குடியேற்றவாசிகளால் நின்மதியிழந்து போயுள்ளது.

தங்கள் பண்ணைகள்,வயல்கள்,கடைகள்,வீடுகள் என்று எங்கும் ஒரே திருட்டு.வீதியிலும் நின்மதியாக நடமாடமுடியவில்லை.திடிரென வந்து எல்லாவற்றையும் பறித்துப் போகிறார்கள்.பணத் தேவைக்காக பாலியல்தொழில்,போதைப்பொருள் வியாபாரம் என குற்றங்களும் அதிகரித்துள்ளது. எனவே இவர்களை CALAIS நகரத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என அந்த நகரத்து மக்கள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது மட்டுமலாது வெளிநாடவர்கள் மீதான உச்ச கட்ட வெறுப்பையும் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.இவர்களின் வெறுப்பானது கடந்த உள்ளட்சிச் தேர்தலிலும் எதிரொலித்தது.குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துடைய தீவிர வலதுசாரிக் கட்சியான front natinal க்கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்தது.

இப்படி குடியேற்றவாசிகளுக்கு எதிராக நகர மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது.அவர்களுக்கான கழிப்பறை ,போதிய உணவு உடை என்கிற அடிப்படை வசதிகள்,குழந்தைகளுக்கான கல்வி,பெண்களுக்கான பாதுகாப்பு  எதுவுமே இல்லை எனவே அவற்றை அரசு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக் கிறார்கள்.அதே நேரம் இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையை பிரிக்கும் 30 கி.மீ  தூரக்கடலை கடப்பதற்காக சிலர் சிறிய படகுகளிலும் நீந்தியும், இரயிலின் பின்னல் தொற்றிக்கொண்டும் ஆபத்தான பயணங்களை முயற்சி செய்து இறந்தும் போயிருக்கிறார்கள். இங்கிலாந்தும் கடற்கரை பகுதியில் முட்கம்பி வேலியமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது .

தொடர்ச்சியான பல போராட்டங்களின் பின்னர் பிரான்சில் பதினோரு இடங்களில் முகாம்களை அமைத்து அங்கு அனைவரையும் தங்கவைப்பதோடு குடியேற்றவாசிகளின் காட்டிற்கு முடிவு கட்டுவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டம் கட்டமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுகிறார்கள்.ஒரு பக்கத்தால் குடியேற்றவாசிகளை வெளியேற்றிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற இருபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காரணம் இங்கிலாந்து என்பது என்பதுதான் அவர்களது கனவு தேசம்.அதற்குள் நுழைந்து விட்டால் தங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் .இதே பிரச்னை எம்மவர்களிடமும் உள்ளது.ஐரோப்பவில் மற்றைய நாடுகளில் வதிவிட அனுமதி,வீட்டு வசதி,நல்ல வேலை என அனைத்தும் இருந்தும் பெரும்பாலான தமிழர்கள் இங்கிலாந்து நோக்கியே ஓடுகிறார்கள்.அதற்கு காரணம் ஆங்கில மோகம் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை .

இது இப்படியிருக்க எங்களின் வரிப்பணத்தை வீணடித்து எதற்காக இவர்களை வைத்து பராமரிக்க வேண்டும்?எனவே  குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என  front natinal க்கட்சியும் தீவிர வலதுசாரிகளும் எதிப்பு தெரிவிக்கிறார்கள்.இவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.அது மட்டுமல்ல இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே குடியேற்றவாசிகளின் பிரச்சனை யால்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
அடுத்த வருடம் சித்திரை மாதம் பிரான்சில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலிலும் குடியேற்றவாசிகளின் பிரச்சனையே முக்கிய பேசுபொருளாக இருக்கப்போவது மடுமல்லாமல் அவர்களின் தலைவிதியையும் அதுவே தீர்மானிக்கும் என்பது நிச்சயம்.

இதே நேரம் இந்த வருடம் மட்டும் கடல் வழியாக சுமார் நான்கு இலச்சம் குடியேற்றவாசிகள் இத்தாலிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.அவர்களை சமாளிக்க முடியாமல் இத்தாலி விழி பிதுங்கி நிற்கும் அதே வேளை .அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னை கை விட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் .அதில் மூவாயிரம் பேர் வரை பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைவதற்காக எல்லையில் காத்துக் கிடக்கிறார்கள்.இத்தாலி பிரான்ஸ் எல்லையில் இன்னொரு குடியேற்ற வாசிகளின் காடு உருவாகிக்கொண்டிருக்கின்றது ..



இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..

2:52 AM, Posted by sathiri, No Comment

இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..
புதிய தலைமுறைக்காக..  சாத்திரி.

இலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக "ஆவா" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது .

 இந்தக் கட்டுரை எழுதும் நேரம் வரை  தமிழர்கள் பெரும்பான்மையாக்கள் வாழும் வடகிழக்கு முழுதும்  கடையடைப்பு,பணிப்புறக்கணிப்பு ஆகியவற்றால் நகரம் வெறிச்சோடிக்கிடப்பதோடு.அங்கங்கே காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலும் போராட்டம் நடந்துள்ளது .அது மட்டுமல்லாது சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை தமிழக கட்சிகள் சில முற்றுகையிட்டு போராட்டம் என நிமிடத்துக்கு நிமிடம் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது.

இனி விடயத்துக்கு வருவோம். அண்மைக்காலமாக யாழ் நகரத்தில் பாலியல் வன்முறை,திருட்டு,போதைப்பொருள் கடத்தல் ஆகியன அதிகரித்திருப்பதால்,நகரம் முழுவதும் ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடவேண்டும் என்று யாழ் நீதிபதி இளஞ்செழியன் கடுமையான உத்தரவொன்றினை  பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவு அமுலுக்கு வந்த சில நாட்களில் 22 ந் திகதி இரவு நேரம் 11.50 வீதியில் மோட்டார் பைக்கில்  சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
மறுநாள் காலை இது விபத்து என்றே செய்திகள் வெளியானது.இளவட்டங்கள் வழமை போல தண்ணியடிச்சிட்டு கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டியிருப்பாங்கள் என்று அனைவரும் நினைத்திருந்த வேளை  மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருப்பதால் கொலை என்கிற செய்தி மதியம் வெளியானது. இதன் பின்னரே பரபரப்பு பற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றது.சம்பவம் நடந்த இடத்துக்கு ஊடகவியலார்களோ பொதுமக்களோ போக முடியாமல் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தடவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு சென்றபோது துப்பாக்கியால் சுட்ட தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது."துப்பாக்கி சூட்டில்" மரணம் என்கிற மருத்துவர்களின் அறிக்கை ஊடகங்களில் வெளியான பின்னர்தான் தவறுதலான துப்பாக்கி சூட்டினால் மாணவர்கள் இறந்து போனார்கள்.இரவு ரோந்தில் இருந்த காவல்துறையினர் பைக்கில் வந்தவர்களை மறித்தபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றதால்  கொளையர்கள் என நினைத்து துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டார்கள்.சம்பவத்துடன் தொடர்புடைய 5 போலிசாரையும் கைது செய்துள்ளோம் என்கிற அறிக்கை காவல்துறை திணைக்களத்தால் வெளியிடப்பட்கின்றது .

இதனையடுத்து யாழில் தொடங்கிய ஆர்பாட்டம் ஊர்வலங்கள் மற்றைய நகரங்களுக்கும் பரவி  சென்னையையும்  தாண்டி தமிழர்கள் வாழும் நாடுகளுக்கும் பரவியுள்ளது.ஒரு காலத்தில் தமிழனுக்கு ஒரு பிரச்சனைஎன்றால் வீட்டுக்குள்ளேயே  அழுதுவிட்டு ஊருக்குள்ளேயே அந்த செய்தி அடங்கிப்போய்விடும்.ஆனால் இன்றைய தொழில்நுட்பம் ஒரு செக்கனிலேயே உலகத் தமிழரை ஒன்றிணைக்கிறது என்பது நல்ல விடயம்தான்.ஆனால் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் 30 ஆண்டு காலப் போர் கொடுத்த இழப்பும் வலியும் மீண்டுமொருமுறை வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களிடம் முகத்தில் கவலையும்.இந்த சம்பவத்தை பெரிதாக்கி மீண்டும் இன மோதலாக்கி சுயலாபம் தேட நினைப்பவர்கள் நாக்கில் எச்சில் ஊறவும் தொடங்கிவிட்டது .

இதே வேளை "வடக்கு கிழக்கில் நடக்கும் கலவரங்களுக்குப்பின்னல் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு உள்ளது".. என ஒய்வு பெற்ற காவலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்தை சாதரணமாக கடந்துபோய் விட முடியாது.காரணம்இப்போதுள்ள அரசானது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளோடு,மேற்குலகின் ஆசிர்வாதத்தோடும்,குறைந்தளவு பெருன்பான்மையோடு உருவான கூட்டு அரசே.மகிந்தாவை அரசியல் அநாதையாக்க அவர்மீதும் அவரது குடும்ப அங்கதவர்கள்மீதும் தொடர்ச்சியாக பாயும் வழக்குகளாலும் கைதுகளாலும் அவர் திணறிப்போயிருந்தாலும். புலிகளை தோற்கடித்ததனால் இராணுவம்,காவல்துறை,அரச அதிகாரிகள் மட்டுமல்ல சிங்கள மக்களின் பெரும் ஆதரவு இப்போதும் மகிந்தவுக்கு உள்ளது.

இப்போதுள்ள அரசை நெருக்கடிக்குள் தள்ளி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு  மகிந்த ஆதரவாளர்களே இதுபோன்ற சம்பவங்களை தூண்டிவிடுவதாகவே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.அதுமட்டுமல்ல நீண்ட காலமாகவே வன்முறையில் ஈடுபடும் குழுவென ஆவா குழு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .அது மட்டுமல்ல 2009 ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த  பின்னர் காவல்துறை அதிகாரிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமைகோரிய பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணம் அவர்கள் காவல்துறையின் ஆதரவோடு இயங்க வேண்டும்.அல்லது இராணுவப்புலனாய்வுப்பிரிவினரே அதனை இயக்கவேண்டும் என்கிற சந்தேகத்தை பாராளுமன்றத்திலேயே பல உறுப்பினர்கள் எழுப்பியுள்ளார்கள்.

எது எப்படியிருப்பினும் நடந்த சம்பவத்திற்கு கடந்த காலங்களைப் போலவல்லாது உடனடியாக சம்பத்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு .அரச தலைவர் முதற்கொண்டு சிங்களத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,காவல்துறை அதிகாரிகள்,பத்திரிகைகள்,மாணவர்கள் பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்கள்.எனவே இன அழிப்பு,இன்னுமொரு போராட்டம் என போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.நடந்தது சட்ட ஒழுங்குப்பிரச்சனையே.அதனை சட்டப்படி எதிர்கொள்வதோடு இனிவருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போராட்டங்களை நடத்துபவர்கள் ஆவாகுழு போன்ற வன்முறைக்குழுக்களை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வைத்தே போராடவேண்டும் ..

க..பூ..க..போ . (சிறுகதை)

1:43 AM, Posted by sathiri, No Comment

க..பூ..க..போ .
இம்மாத  அம்ருதாவில் .
சாத்திரி ..

இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணிக்கு மேலாகி விடும் அதற்குப் பிறகு அங்கு தங்குவதற்கு அறை தேடிக்கொண்டிருக்க முடியாது எனவே நண்பன் ஒருவனுக்கு போனடித்து ஹோட்டல் அறை ஒன்று புக் பண்ணி விடுமாறு சொல்லி விட்டிருந்தேன் .நான் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்குவேன் என்பதால் நண்பனும் அதற்கு அருகில் வடபழனியில்  ஹோட்டல் ஒன்றில் அறையை புக் செய்துவிட்டு அதன் விலாசத்தை எனக்கு எஸ். எம். எஸ் அனுப்பியிருந்தான் .
கோயம்பேட்டில் இறங்கி ஆட்டோவை பிடித்து அறைக்குச் சென்று பயணப் பையை வைத்து விட்டு.அன்றைய பயணத்தின்போது  வீதி முழுதும் வாரி வாங்கி வந்த தூசியை உடலை விட்டு போக்க  ஒரு குளியல் போட எண்ணி குளியலறையை திறந்து லைற்றை போட்டதும் சுவரின் மூலையில் கூட்டம் போட்டு தமிழ் நாட்டின் அரசியல்  பற்றி  தீவிரமா விவாதித்துக்கொண்டிருந்த பல கரப்பான்பூச்சிகள் விர் ..என்று சுவர் இடுக்குகளுக்குள்ளும் தண்ணீர் போகும் குழாயினுள்ளும் ஓடி மறைய ஒரேயொரு பூச்சி திசை தவறி என்னை நோக்கிவர. கிண்ணத்தில் தண்ணீரை பிடித்து அதன்மீது ஓங்கியடித்து தண்ணீர் குழாயுள் தள்ளிவிட்டு சுற்றி வர பார்த்தேன்.எல்லாம் ஓடி மறைத்து விட்டிருந்தது .நீண்ட காலத்துக்குப் பிறகு கரப்பான்பூச்சியை கண்டதும் எனது கலியாணமும் முதலிரவும் மீண்டும் நினைவுக்கு வரவே ஷவரை திறந்துவிட்டு சில்லென்ற தண்ணீரில் நனையத் தொடங்கினேன் ..எல்லாம் சரி  என் கலியானதுக்கும் கரப்பான்பூச்சிக்கும் என்ன சம்பந்தம்? ..எல்லோருக்கும் அறிய ஆவலாயிருக்கும் எனவே இங்கே கட் பண்ணி அங்கே ஒப்பின் பண்ணுகிறேன் .
0000000000000000000000000000000000000

கல்யாணம் செய்துபார் வீட்டை கட்டிப்பார் என்றொரு பழமொழி .இப்போவெல்லாம் கலியாணம் செய்வது சுலபம் வீடு கட்டுவதுதான் சிரமம் .இன்றைய காலத்தில் வீடு கட்டுறதென்ன ஒரு வீடு வாடைக்கு எடுக்கிறதே சிரமமாகிவிட்ட காலம்.கலியாணம் என்னமோ ஒரு பிரச்னையும் இல்லாமல் காதலிச்சு சிம்பிளா பதிவுத் திருமணமா முடிச்சிட்டேன் .அதுவரைக்கும் பச்சிலரா ஒரு அறையில் ஆறு நண்பர்களோடு இருந்த எனக்கு குடும்பஸ்த்தன் என்கிற பிரமோசன் கிடைத்து விட்டிருந்தது .முதலிரவுக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களது கல்யாணப் பரிசாக  நட்சத்திர விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்துவிட்டிருந்தர்கள்.திருமணம் முடிந்து ஒரு ரெஸ்ராரண்டில் அனைவருக்கும் விருந்து.அது முடிந்ததும் எல்லோரும் பரிசுப் பொருட்களை தரத் தொடங்கினார்கள்.எனக்கு இப்போதைக்கு வீடு இல்லாதாதால் அதை வைக்க இடமும் இல்லாததால் நண்பர்கள் தரவிரும்பும் பரிசை பணமாகவே தரும்படி அழைப்பிதழிலேயே அச்சடித்து விட்டிருந்தேன். அதனால் அனைவரும் கொடுத்த என்வலப்புகளை வாங்கி பாக்கெட்டில் செருகிவிட்டு கடைசியாய் மனைவியிடம் "போகலாமா" ..என்றதும்
எங்கே ..

ஹோட்டலுக்கு தான் .

என்னது ஹோட்டலா ..

ம் ...ஸ்டார் ஹோட்டேல் ..கண்ணை சிமிட்டினேன் .

நானெல்லாம் அந்த மாதிரி பொம்பிளை இல்லை ..

ஐயையோ ..நீ தப்பா நினைக்காதை இது பிரெண்ட்ஸ் ஏற்பாடு ..

நினைச்சேன் ..உங்களை கெடுக்கிறதே அவங்கள்தான் ..

சரி இப்ப என்னதான் சொல்லுறாய் ..

முதல்லை ஒரு வீடு தேடிப் பிடியுங்கோ .பிறகுதான் எல்லாம் ...பாய் .சொல்லிவிட்டு அவளது நண்பிகளோடு போய் விட்டாள் .
என்னை மாதிரி மத்திய தர குடும்பம் ஒன்றுக்கு கொழும்பு, சென்னை மாதிரி நகரங்களிலேயே எங்களுக்கு பிடித்தமாதிரி வீடு வாடகைக்கு கிடைப்பதென்பது குதிரைக் கொம்பு மாதிரி என்றால் பிரான்சில் ஒரு பெரு நகரத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்து அதில் குஞ்சம் கட்டி அழகு பார்த்த மாதிரி. எங்களுக்கு பிடிக்கிற பிகரை விட கிடைச்ச பிகரோடை சந்தோசமா வாழவேண்டும் என்கிற மாதிரி .. பிடிக்கிற வீட்டை விட வடைகைக்கு கிடைச்ச வீட்டிலை சந்தோசமா வாழப்பழக வேணும்.
நானும்அவசரமா  நாலு வீட்டு ஏஜென்சில பதிவு செய்து ஏஜென்சிக்கு என்னுடையதும் மனைவியுடையதும் சம்பள விபரம் எல்லாம் குடுத்து . இருபது வீடு ஏறி இறங்கி எங்கள் இருவரது வேலையிடதுக்கும் கிட்டவாக ஒரு வாரத்திலேயே ஒரு அப்பாட்மென்டில் முதல் மாடியில் வீட்டு ஏஜென்சிக் காரனுக்கு பிடித்தமான ஒரு  வீடு பார்த்து சரி சொல்லி இரண்டு மாத வாடகை அட்வான்ஸ் கொடுத்து கையெழுத்தும் வைத்தாச்சு .  முதல் வாங்கியது கட்டில் .பால்காய்ச்சி வீடு குடி புகுந்தாச்சு.கலியாணமாகி ஒரு வாரம் கழித்து  முதலிரவு. அண்ணாந்துபார்த்த படியே கட்டிலில் படுத்திருந்தேன். வெள்ளைச்  சுவற்றில் ஒரு கறுப்புப் புள்ளி.."முன்னர் குடியிருந்தவன் எதாவது ஆணி யடித்திருப்பனோ".. என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவியும் உள்ளே வர அந்த கறுப்புப் புள்ளி அசையத் தொடங்கியது.அதைக் கண்டதுமே ஆ ...., என்று கத்தியபடி கட்டிலில் ஓடியந்து ஏறியவள். கரப்பான்பூச்சி ....கரப்பான்பூச்சி ..என்று கண்ணை மூடிக் கத்தினாள்  ..

ச்சே ..எதுக்கு கரடியை கண்ட மாதிரி கத்துறாய் ..கரப்பான்பூச்சி  தானே ..அதுவும் குட்டிப் பூச்சி .

"முதல்லை அதை அடியுங்கோ" திரும்பவும் கத்தினாள் .

பல்கனியை திறந்து தும்புத்தடியை எடுத்துவந்து பூச்சியை தட்டியதும்  அது கீழே மல்லாந்து விழுந்தது கிர் ...என்று பம்பரம் போல சுத்திக் கொண்டிருக்கவே அப்படியே நசித்துவிட காலை உயர்த்தவும் .கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கியவள் உயர்த்திய காலைக் கட்டிப் பிடித்தபடி .
 "வேண்டாம்.. அத்தான் வேண்டாம்..அதனை காலால் நசித்து விடாதீர்கள் .

"இவளுக்கு கரப்பான்பூச்சியில்  பயமா ? பாசமா" ??..  எதுக்கடி நசிக்கக் கூடாது ..

"கரப்பான்பூச்சியை காலால் நசிக்கும் போது அதில் இருக்கும் முட்டைகள் காலில் ஒட்டிவிடும்.பிறகு நீங்கள் நடக்குமிடமெல்லாம் அதன் முட்டைகள் பரவி அதன் இனம் பெருகி விடும்" ....

இங்கை ஒருத்தன் முதலிரவே நடக்காமல் கடுப்பில இருக்கும்போது கரப்பான்பூச்சி இனப்பெருக்கம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் .."சரி இப்போ என்னதான் செய்ய" ? ..

அதை அப்பிடியே பிடிச்சு வெளியாலை எறிஞ்சு விடுங்கோ ..

 சுற்றிக்கொண்டிருந்த பூச்சியை ஒரு கடதாசியில் போட்டு பொட்டலம் செய்து யன்னலால் வெளியே எறிந்துவிட்டு வந்து  "அப்பாடா " என்றபடி லைட்டை நிப்பாட்டவும்..

"எதுக்கு லைட்டை நிப்பாட்டுரீங்கள்" ?..பதட்டத்தோடு கேட்டாள் .

முதலிரவன்று இதெல்லாம் ஒரு கேள்வியா ?....அப்போ  .....................

"எனக்கு சின்ன வயசிலை இருந்தே கரப்பான்பூச்சி க்கு சரியான பயம்.முதல்ல பூச்சியை இல்லாமல் பண்ணுங்கோ .இல்லாட்டி வேறை வீடுட்டுக்கு மாறுவம்.இப்ப லைட்டை போடுங்கோ."..

எனக்கு லைட்டை போட்டால் எதுவுமே வராது ..ச்சே ..நித்திரை வராது ...

எனக்கு பூச்சியை பார்த்தால் நித்திரை வராது .  என்றவள் போர்வையால் இழுத்து போர்த்துக்கொண்டு படுத்து விட்டாள் .

லைட்டை போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்து ஷவரை திறந்து சில்லென்ற தண்ணீரை தலையில் சிதற விட்டுக் கொண்டிருக்கும்போது காலடியில் ஒரு கரப்பான்பூச்சி .அது என்னைப் பார்த்தே சிரிப்பது போல இருந்ததது.காலால் நச்சென்று நசித்து குழாயில் தள்ளி விட்டேன் .
..........................................................................

அந்தவார இறுதி லீவு நாட்களான சனி,ஞாயிறு கரப்பான்பூச்சி ஒழிப்பு நாட்களாக பிரகடனம் செய்து .எப்படியும் மருந்தடித்து பூச்சியை ஒழித்து விடுவேன் என்று மனைவியின் காலைப் பிடித்து செய்த சத்தியத்தின் பின்னரே மறுநாள் அதிகாலை முதலிரவாய் விடிந்திருந்தது .அடுத்தடுத்த நாட்கள் கரப்பான்பூச்சியை கண்டு அவளின் அலறலோடும் . இரவு முழுதும் லைட்டை எரிய விட்டு அரைகுறை நித்திரையோடும்  கழிந்தது. வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் நான் செய்த சத்தியத்தை நிறைவேற்ற மருந்துக் கடை ஒன்றில் புகுந்தேன் .

"வாங்க... எலியா ,எறும்பா ,புளுவா ,பூச்சியா எதனால் பிரச்னை".. என்றபடியே வரவேற்றவளின் சிரிப்பு.. மருந்தடிக்காமலேயே என்னை கொன்றுவிடும் போல இருந்தது .என் பார்வையை மேலிருந்து கீழ் இறக்கிய படியே ..
"பூச்சி ...பூச்சி ..கரப்பான் பூச்சி க்கு  மருந்து "என்று தட்டித் தடுமாற ..
ஓ ..கரப்பான்பூச்சியா ? ஒரே நாளில் ஒழித்துவிடும். என்றபடி ஒரு ஸ்பிரேயை எடுத்து வைத்தவள். இது அபாயமான மருந்து. எனவே கைகளுக்கு கிளவுசும் முகத்துக்கு மாஸ்க்கும் அணிந்து அவதானமாக பாவிக்கவும். என்றபடி நான் கேட்காமலேயே அவற்றையும் எடுத்து வைத்து பில்லை நீட்டினாள் .
சனிக்கிழமை காலை கைகளுக்கு கிளவுஸ் ,மாஸ்க் எல்லாம் அணிந்து ஒப்பிரேசன் கரப்பான்பூச்சி ஆரம்பமானது. மூலை முடுக்கு எல்லாம் ஸ்பிரே அடித்து முடித்து ஒரு பூச்சி கூட வெளியே தப்பிப் போய் விடாதபடி  ஜன்னல்கள்  கதவு எல்லாம் சாத்தி விட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.பகல் வெளியே சாப்பிட்ட பின்னர்  நகரை சுற்றி விட்டு மாலை வீடு வந்து கதவை திறந்ததும் இறந்து கிடந்த பூச்சி களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் "சக்சஸ்"  என்று கத்தியபடி மனைவியை கட்டிப் பிடிக்க. "ச்சே ..கையை எடுங்கோ முதல்லை வீட்டை கிளீன் பண்ணுங்கோ" என்றாள் .வேகமாய் வீட்டை கூட்டி சுத்தம் செய்து  இறந்து போன பூச்சிகளில் இருந்து ஒரு முட்டை கூட தவறி  குஞ்சு பொரித்து மீண்டும் அதன் வம்சம்  உருவாகி விடக்கூடாது என்கிற குரூரத்தோடு அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு கொளுத்தி சாம்பலை கொண்டுபோய் கடலில் கொட்டி  திவசம் கொடுத்து விட்டு வீடு வந்து குளித்து முடித்து கட்டிலில் போய் விழுந்தேன்.
............................................................................
 எந்தப் பூச்சியும் இல்லாமல் எங்கள் வாழ்க்கை சில வாரங்கள் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்ததொரு நாளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த மனைவி நிலத்தை துடைப்பதற்காக பிரிஜ்சை  கொஞ்சம் தள்ளியவள் ..ஆ ........ஐயோ ..

அவசரமாய் ஓடிப்போய் .."என்னடி" ?

பூச்சி .பிரிஜ்சுக்கு  பின்னலை பூச்சி ..முதல்லை வீட்டை மாத்துங்கோ ..

பொறடி.. எதுக்கெடுத்தாலும் உடனே வீட்டை மாத்துங்கோ எண்டு கத்தாதை..மாஸ்க் ,கிளவுசோடை  சேர்த்து வாங்கின ஸ்பிரேயும் வேலை செய்யேல்லை .  ஊருக்கு போனடிச்சு அம்மாவிட்டை கேட்டுப் பார்ப்பம் எதாவது ஐடியா சொல்லுவா ..

"பூச்சியை  கொல்ல வைரசிட்டை ஐடியா கேக்கப் போறாராம்" ...புறு புறுத்தாள் ..

என்னடி நக்கலா  ?..

ஒண்டும் இல்லை.. தாராளமாய் உங்கட  அம்மாவிட்டை ஐடியா கேளுங்கோ .தம்பி கொஞ்சம் காசு அனுப்பு எண்டு கேட்பா ..அதையும் ரெடி பண்ணுங்கோ ..என்று விட்டு போய் விட்டாள் .

அம்மா விற்கு போனடித்து பிரச்சனையை சொன்னதும் " மகனே இது சின்னப் பிரச்னை வீட்டிலை எல்லா இடமும் மஞ்சள் தண்ணியை தெளிச்சுட்டு  ஒவ்வொரு மூலையிளையும் வேப்பமிலையை கட்டிவிடு " என்றார் ..

மஞ்சள் இங்கை கிடைக்கும்.கருவப்பிலையையே  கஞ்சா கடத்துற மாதிரி கஷ்டப்பட்டு கடத்தி தான் கொண்டு வாறாங்கள்.இதுக்கை வேப்பமிலைக்கு எங்கை போறது ?.

அதுக்கான தீர்வையும் அம்மாவே சொன்னார் ." கவலைப் படாதை மகனே .வேப்பமிலை நானே பார்சல் பண்ணி விடுறேன் .ஒரு ஐம்பத்தாயிரம் ரூபா அனுப்பி விடு "..

வேப்பமிலைக்கு ஐம்பத்தாயிரமா?..

பின்னை மரத்திலை ஏற ஆள் பிடிக்க வேணும், நல்ல இலையா பார்த்து பிடுங்க வேணும் ,பார்செல் பண்ண வேணும்,போஸ்ட் ஆபிஸ் கொண்டு போக வேணும்,எல்லாம் சும்மாவா ?.

சரி, சரி என்று விட்டு போனை வைத்து விட்டு மனைவியை பார்த்தேன்..நல்ல வேளையாக அவள் பால்கனியில் நின்றபடி வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் .
.....................................................................................
ஊரிலிருந்து பார்சலில் வந்த வேப்பமிலையை எல்லா மூலையிலும் கட்டித் தொங்க விட்டு உள்ளூர்  ஆசியன் கடையில் வாங்கிய மஞ்சளும் தெளிச்சு களைத்துப் போயிருந்தேன்.கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை காய்ந்து சருகாகிப் போயிருந்ததே தவிர  பிறிச்சுக்கு பின்னாலும்,குளியலறையும் கரப்பான்பூச்சியின் பிரதான ரியல் எஸ்டேட் குடியிருப்பாக மாறிவிட்டிருந்தது.மனைவியின்  ஆ ....ஐயோ ..சத்தமும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது .
அடுப்படிக்குள் போகவே மனிசி பயந்ததாலை கரப்பான்பூச்சிகளின் அடுக்கு மாடி குடியிருப்பான  பிரிஜ்சை  மாற்றி விடுவதென முடிவெடுத்தேன்.அதை  முதலாவது மாடி வரை தூக்கி வரவேண்டும்.உதவிக்கு கூடவே வேலை செய்யும் மமாடுவை அழைத்திருந்தேன்.மமாடு ஆபிரிக்க செனெகல் நாட்டை சேர்ந்தவன்.பிறிச்சை தனியாகவே தூக்கும் உடல்வாகும் பலமும் கொண்டவன் .அவனின் உதவியோடு புதிய பிரிஜ்சை  கொண்டு வந்து வைத்தாகி விட்டது.
மறுநாள் வேலைக்கு போனதும் மமாடுவை பார்த்து வணக்கம் சொன்னதும் அவனும் வணக்கம் சொன்னான்.. வாய் அசைந்ததே தவிர சத்தம் வரவில்லை.
"என்னாச்சு".. நேற்று பிரிஜ்சை தூக்கியதாலை ஏதும் ஆகியிருக்குமோ ? என்று நினைத்தபடி   "என்ன ஆச்சு"... என்றதும் ..

கோபமாக தன் சட்டைப்பையில் கையை விட்டு காய்ந்துபோன சில இலைகளை எடுத்து மேசையில் எறிந்தவன் "இது என்ன "..என்றான் ..

உற்றுப்பார்த்தேன் .."அடடே  இது வீட்டிலை கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை ..இது எப்பிடி இவனிட்டை"? ..

அவனே சைகையில் சொல்லத் தொடங்கினான் .."நேற்று உன் வீட்டுக்கு வந்தனா" ...

ஆமா ...

டாய்லேட் போனனா ....

ஆமா ......

அங்கை ஒரு மூலையிலை இது தொங்கிட்டு இருந்திச்சா ....

ஆமா .....

"அதை உருவிக்கொண்டு போய் கசக்கி பத்தினன் ..சவுண்டு போயிட்டுது"..என்றான் ..

"ஏன்டா  டேய்" ..ஒரு ஆசியா காரன் வீட்டிலை காய்ந்துபோன எந்த இலை கிடந்தாலும் உடனையே அது கஞ்சா தான் எண்டு எப்பிடிடா முடிவு பண்ணுறீங்கள் ..சரி ஒண்டும் ஆகாது உடம்புக்கு நல்லது. மிகுதியையும் கசக்கி பத்து.. என்று அவனை தேற்றினேன் ..
........................................................................................
எப்பிடியோ கரப்பான் பூச்சிகள் . புது பிறிச்சுக்கு பின்னாலும் பால் காச்சி குடி கொண்டு விட்டிருந்தன. வீட்டை மாத்துங்கோ என்கிற மனைவியின் நச்சரிப்பு.வாழ்க்கை வெறுத்துப்போய் அந்த சோகத்தில் இரண்டு பியரை வாங்கி ஒன்றை மமாடுவிடம் கொடுத்து சியர்ஸ் சொல்லி உறுஞ்சிய படியே அவனிடம் சோகத்தை பகிந்து கொண்ட போது ..கை தட்டி விழுந்து புரண்டு சிரித்தான் ..

எதுக்கடா சிரிக்கிறாய் ....

இதெல்லாம் ஒரு பிரச்சனையா ??...

அடேய் ..இது தாண்டா பிரச்சனையே ...

இதை முதல்லையே என்னிடம் கேட்டிருக்கலாமே .சூப்பர் ஐடியா சொல்லியிருப்பேன் ..

சரி இப்போ சொல்லு ..

கண்ணீர் புகை அடி.  எல்லாம்  ஒரே நாளிலை முடிஞ்சிடும் ..

கலகத்தை அடக்கத் தானே கண்ணீர் புகை அடிப்பாங்கள் ..கரப்பான்பூச்சியை அடக்கவுமா ??..

அடிச்சு பார்த்திட்டு அப்புறமா சொல்லு ..

சரி கண்ணீர்ப்புகை சின்ன அளவு ஸ்பிரே தானே வாங்கலாம்.ஒவ்வொரு கரப்பான்பூச்சியா பிடிச்சி கண்ணிலையா அடிக்க முடியும் .

கவலையை விடு.செக்கியூரிட்டி சேர்விசிலை  எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கிறான் அவனிட்டை சொன்னால் ஆயுதம் விக்கிற கடையிலை கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி  கொடுப்பான்  .ஒரேயொரு குண்டு..  "புஸ்ஸ்" ...எல்லாம் குளோஸ் ..

" என்னது குண்டா"... இது சட்டப்படி குற்றமில்லையா? ஏதும் பிரச்னை வராதே ??..

கரப்பான்பூச்சி  போலிஸ் ஸ்டேசனிலை போய் வழக்கு போடாத வரைக்கும் உனக்கு பிரச்சனையில்லை ..பயப்பிடாதை .

மமாடு கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுத்து எப்படி இயக்குவது என்றும் சொல்லிக்  கொடுத்து விட்டிருந்தான்.பயங்கர ஆயுதம் கடத்துவது போலவே.. பயந்தபடி கார் சீட்டுக்கு கீழே ஒளித்துவைத்து கொண்டு வந்து சேர்த்தாச்சு ..அடுத்த சனிக்கிழமை தாக்குதலுக்கான நாளும் குறித்து விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அது பற்றிய விபரம் மனைவிக்கும் தெரியாமல் இரகசியம் காக்கப் பட்டது ..
......................................................
சனிக்கிழமை  காலை  அந்த திக் ..திக் ..நிமிடங்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் மனைவியிடம்  கரப்பான்பூச்சிகள் மீதான எனது தாக்குதல் திட்டத்தை விளக்கிவிட்டு  கட்டிலுக்கடியில் ஒழித்து வைத்திருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து டக்கென்று மேசையில் வைத்தேன் .ஆச்சரியத்தாலும் பயத்தாலும் அகல விரித்த கண்களால் என்னைப் பார்த்து .. "ஒண்டும் பிரச்சனை வராதா"..

இல்லையடி  மமாடு இதை அடிச்சுத்தான் பூச்சியை ஒழிச்சவன் ..

ஓ எல்லாம் அந்த  கறுப்பன் கொடுத்த ஐடியாவா ?..

கருப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டி ..

காய்ஞ்ச வேப்பமிலையை மட்டும் களவெடுப்பானாக்கும் ..

சரி" கெதியா வெளிக்கிடு இண்டைக்கு இரவு ஹொட்டேல்லை தான் தங்கவேணும்  அதுக்கான உடுப்பு எல்லாம் ரெடி பண்ணு ..என்று சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து மிகுதி எல்லாவற்றையும்பிரிஜ்ச்சில்   அடைந்து விட்டு சிறிய பையில் துணியோடு தயாராய் நின்றிருந்தவளை  "நீ ஓடிப்போய் காரிலை இரு.. நான் குண்டை எறிஞ்சிட்டு ஓடி வாறன் "..என்றதும் "சரி கவனமா வாங்கோ" ...என்று விட்டு போய் விட்டாள் .
வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் சரியாக சாதப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வெளியே வந்து போத்தல் வடிவில் இருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து " அப்பனே முருகா ,பிள்ளையாரே, அல்லாவே, அந்தோனியாரே ,பெரியாரே"  ..என்று எல்லா மத கடவுளையும் .மனதில் வேண்டியபடி அதன் பாதுகாப்பு கிளிப்பை இழுத்து வீட்டுக்குள் எறிந்துவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்தி பூட்டிவிட்டு படிகளில் வேகமா இறங்கிக்கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் தனியாக வசிக்கும் பிரெஞ்சுக் கிழவி மேலே ஏறிக்கொண்டிருந்தார் .
போகிற வேகத்தில் அவருக்கு ஒரு வணக்கம் சொன்னேன் .பதில் வணக்கம் சொல்லாமல் என்னை முறைத்து விட்டு போய்க்கொண்டிருந்தார் ."ஆரம்பத்தில நல்லா சிரித்து கதைச்ச கிழவி இப்பவெல்லாம் முறைக்குது.என்னவாயிருக்கும்".. என்று நினைத்தபடி போய் விட்டேன் .
அன்றைய பகல் பொழுதும் தெருத் தெருவாக அலைந்தே கழிந்து போய் மாலையானதும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலிவான ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம் .நம்ம ஹோட்டலுக்கும் யாரோ வந்திருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியில் எழுந்து நின்று விழுந்து விழுந்து ஒருத்தன் வரவேற்றான் .
அவனிடம் .."றூம்  இருக்கா" ?...

இருக்கே ..லக்ஸ்சறி  ? ஸ்டாண்டர்ட் ..எது வேணும் ..

ஸ்டாண்டர்ட்  போதும் ..

எத்தினி நாளைக்கு ?..

நாங்கள் இந்த ஊர் காரங்கள் தான்.  ஒரே இரவுக்கு மட்டும் போதும் ..

மனிசியை பார்த்து லேசாய் கொடுப்புக்குள் சிரித்தபடி  "ஓ ...ஒரே ஒரு இரவுக்கு மட்டுமா"..என்றான் .

"டேய் ..டேய் ..அது என்னோடை பெண்டாட்டி"" எண்டு சொல்லி அவனுக்கு அறைய வேண்டும் போல் இருந்தது . எதுக்கு வம்பு என்று உள்ளுக்குள்ளே உறுமிக்கொண்டிருந்த சிங்கத்தை சாந்தப்படுத்தி விட்டு.பெயர் விபரத்தை கொடுத்து அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதும் ."என்ஜோய்"  என்று கண்ணடித்த படியே அறை சாவியை எடுத்து நீட்டினான் .சிங்கம் மீண்டும் ஒரு முறை சிலிர்த்துக் கொள்ள.. அடக்குவதை தவிர வேறு வழியில்லை .

அவன் கையிலிருந்த சாவியை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு அறையை தேடிப்பிடித்து நுழைத்ததும் கட்டிலில் விழுந்தபடி..  "அவனின்டை மூஞ்சியும், முகரகட்டையும்.பரதேசி" .

யாரை திட்டுறீங்க? ..

ரிசெப்சனில் நின்டவனை ...அவனின்டை பார்வை ,பேச்சு சரியில்லை ..

அப்பிடி எதுவும் வித்தியாசமா எனக்கு தெரியலையே ..

"இல்லடி  உனக்கு புரியாது"..என்று அவளுக்கு விளக்கம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் "ஓ..கோ  அப்பிடியான பெண்ணுகளை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறிங்களா"? ..என்று அடுத்த கேள்வி வந்து விழும் .சனியனை பிடித்து எதுக்கு பனியனுக்குள்ள விடவேணும்.என்று நினைத்தபடி பேசாமல் படுத்து விட்டேன் .

மறுநாள் மதியமளவில் வீட்டுக்கு போய் பார்த்தேன் சில பூச்சிகள் மயங்கி கிடந்தன .கண் எரிச்சலாக இருக்க யன்னல் கதவு எல்லாம் திறந்து விட்ட பின்னர் வழக்கம்போல் வீட்டை கூட்டி பூச்சிகளை கொளுத்தி டாய்லெட்டில் போட்டு தண்ணீரை இழுத்து விட்ட பொழுது சமையலறையில் இருந்து   "ஆ ..ஐயோ "..ஓடிப்போய் பார்த்தேன் .கதிரைக்கு மேல் ஏறி நின்றபடி   "ஓவனுக்குபின்னலை ..பின்னலை" .. கத்தினாள் .

ஓவனை நகர்த்திப்பார்த்தேன் .சிறிய சந்தில் இருந்தபடி தினாவெட்டா என்னைப் பார்த்து மீசையை ஆட்டிக்கொண்டிருந்தது.கொலைவெறியோடு மீசையில் பிடித்து இழுக்க அதை அறுத்துவிட்டு ஒட்டிவிட்டது.அறுந்த பாதி மீசையோடு மனைவியை திரும்பிப்பார்த்தேன் ..

"நீங்களும் உங்கடை கண்ணீர்ப்புகை ஐடியாவும் .ஊகும் .. சமைக்கிற வேலையை பாருங்கோ".

சமைக்கிறதா ? பேசாமல் பீட்சா  ஒடர் பண்ணவா ?

என்னது பீட்சாவா ? அதோடை முதல் எழுத்தே சரியில்லை எனக்கு வேணாம்..

எழுத்தை எதுக்கடி பாக்கிறாய் பேசாமல் தின்ன வேண்டியதுதானே ..

அதை நீங்களே தின்னுங்க எனக்கு சமைச்சு வையுங்க .நான் குளிச்சிட்டு வாறன்" ..என்றபடி குளியலறைக்கு போய் விட்டாள் .

ச்சே ..கறுப்பன் தந்த ஐடியாவும் பெயிலியர் .என்கிற கோபத்தில் பிரீசரில் இருந்த கோழியை எடுத்து மைக்குரோனில் வைத்து சூடாக்கி இளகவைத்து கத்தியால் ஓங்கி ஒரு வெட்டு வெட்டிய போதே அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது . "யாராயிருக்கும்"?..என்று நினைத்தபடியே கதவின் துவாரத்தால் பார்த்தேன்.வெளியே ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள் .

"ஐயை.. யோ .. கரப்பான்பூச்சிக்கு கண்ணீர்ப்புகை அடிச்சது தெரிய வந்திருக்குமோ"..என்று லேசாய் உதறல் எடுக்கவே பயத்தை காட்டாமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு கதவைத் திறந்ததும்.சட்டென்று இருவரும் துப்பாக்கியை உருவியபடி  "கத்தியை கீழே போடு கையை உயர்த்து ".. என்று  கோரஸில் கத்தினார்கள் ..

கத்தியை கீழே போட்டு விட்டு கையை உயர்த்தவும் போலீஸ்காரன் என்னை சுவரோடு தள்ளி துப்பாக்கியை தலையில் அழுத்தியபடி என்  கால்களை அகல வைக்கச்சொல்லி உத்தரவிட்டவன். உடலை  மேலிருந்து கீழாக ஒரு தடவை தடவி முடித்து விட்டு   போலீஸ்காரியிடம்  "வேறு ஆயுதங்கள் எதுவும் இல்லை".. என்றான்  .நல்ல வேளை நான் உள்ளே ஜட்டி போட்டிருந்ததால் தப்பித்தேன் .

அதே நேரம் சத்தம் கேட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த மனைவி  பதறிப்போய்  "என்ன பிரச்னை"  என்றவும் ..அவளை ஓடிப்போய் கட்டிப்பிடித்த போலீஸ்காரி "மேடம்.. பயப்பட வேண்டாம் உங்களை கொலை முயற்சியில் காப்பாற்றி விட்டோம் .இனி உங்கள் கணவரால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது "..என்றவளின் கையை உதறியவள்  "கொலை முயற்சியா யார் சொன்னது"? ..

"உங்களை கணவர் போட்டு அடிப்பதாகவும் அதனால் உங்கள் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாக எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.இப்பொழுதும் உங்களை கொலை செய்ய முயற்சித்ததால் தானே குளியலறையில் போய் ஒழிந்துகொண்டீர்கள் .நல்ல வேளையாக நாங்கள் வந்து காப்பாற்றி விட்டோம்" ..

"கடவுளே நான் அலறுவது உண்மைதான் ..கணவன் அடிப்பதால் அல்ல ..கரப்பான்பூச்சியால் .இப்பவும் அவர் என்னை கொல்ல வரவில்லை ..ஏற்கனவே கொலை செய்து  ஆறு மாதமாய்  பிரிஜ்ச்சில் அடக்கம் செய்யப் பட்டிருந்த கோழியைத்தான் வெட்டிக் கொண்டிருந்தார்.அந்த நேரமா பார்த்து நீங்கள் வந்து பெல்லை அடிச்சிட்டீன்கள்" ..என்று சொல்லி முடித்த பின்னர்தான் என் தலையில் அழுத்தியிருந்த துப்பாக்கியை எடுத்தான் .
ஆனாலும் போலீஸ்காரி விடுவதாய் இல்லை..  "மேடம் கணவருக்கு பயந்து பொய் சொல்ல வேண்டாம் உன்மையிலேய அவர் உங்களை அடித்தால் உடனேயே எங்களுக்கு போன் பண்ணுங்கள் .டைவோஸ் எடுக்கிறதுக்கான சட்ட ஆலோசனை,லாயர் ,எல்லாம் இலவசமாகவே கொடுப்போம்".. என்று சொல்லியவள் என்னை லேசாய் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் .

"பார்ரா ..ஒரு குடும்பத்தை பிரிக்கிறதுக்கு என்னமா பாடு படுறாங்கள் ..போனடித்து போட்டுக் குடுத்து யாரா இருக்கும்"?.. என்று நினைத்தபடி வெளியே எட்டிப் பார்த்தபோது ..எதிர் வீடுக் கிழவி ஆமை தலையை இழுத்தது போல கதவுக்கு உள்ளே தலையை இழுத்தாள்.என்னைப் பார்த்து முறைததுக்கான அர்த்தம் அப்போ தான் எனக்கு புரிந்தது ..
..........................................................................................
இந்த சனியனை ஒழிக்க என்னதான் வழி என்று கூகிளில்  "கரப்பான்பூச்சியை ஒழிப்பது எப்படி".. என்று அடித்துப் பார்த்தேன் .ஒரு கட்டுரை வந்து விழுந்தது ..கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த உயிரினம்  என்று தொடங்கியது ..
"அடாடா  நம்மள மாதிரியே கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியிருக்கு நமக்கு நெருங்கிய உறவு.அதுதான் சுத்திச்  சுத்தி வருது"..என்று நினைத்தபடி அரை மணித்தியால கட்டுரையை பொறுமையாய் படித்தேன்.. இந்த பூமிப் பந்து சுற்றிக்கொண்டிருக்கும் வரை அதனை அழிக்க முடியாது என்று  முடிந்திருந்தது ..""அடங்"".....

பூமி சுத்திறதை நிப்பாட்ட முடியாது.எனவே பூச்சி இல்லாத புது வீடு பார்கிறதாய் முடிவெடுத்து வீட்டு ஏஜென்சியில் போய் பதிவு செய்ததும்..   "உங்களுக்கு என்னென்ன வசதிகளோடை வேணும்"  என்றான் ..

"தண்ணி, கரண்டு, இல்லாவிட்டலும் பரவாயில்லை கரப்பான்பூச்சி இல்லாமல் இருக்க வேணும்". என்ற என்னை ஏற இறங்க பார்த்தவன் ..  புது பில்டிங்,புது பெயிண்ட் ,நாலாவது மாடி ஒரு வீடு இருக்கு பார்க்கிறின்களா?.என்றதும் தலையாட்டி விட்டு அவன் பின்னலையே போய் பார்த்தேன் .வீடு பிடித்திருந்தது.பூச்சி இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை ..

"என்ன வீடு பிடிச்சிருக்கா".  என்றவனிடம் ..

பிடிச்சிருக்கு  ஆனால் இரவிலும் ஒருக்கா பாக்க முடியுமா ?

இரவிலையா  எதுக்கு ?..

"ஒரு வேளை பகலிலை பூச்சி எங்கையாவது ஒழிச்சிருக்கும் .இரவிலை வெளியை வரும்.அதாலை இரவும் ஒருக்கா பார்த்திட்டேன் எண்டால் மனதுக்கு திருப்தியா இருக்கும். நாளைக்கே அட்வான்ஸ்  குடுத்திடுவேன் " ....என்று இழுத்தேன்.

"உனக்காக நான் நைட் டியூட்டி எல்லாம் பாக்க முடியாது.இந்தா சாவி .விடிய விடிய இங்கயே இருந்து பாத்திட்டு காத்தாலை சாவியை கொண்டுவந்து கொடுத்திட்டு போ" ..என்று தந்துவிட்டு போய்விட்டான் .

அன்றிரவு நீளக்கருப்பு கோட்டு,தொப்பி,கறுப்புக்கண்ணாடி,கையில் டார்ச் லைட்  என்று பழைய படங்களில் வரும் ஜேம்ஸ்பாண்ட் போலவே வெளிக்கிட்டு கொண்டிருக்கும்போது .."என்னங்க இது கோலம் .இரவிலை கறுப்புக் கண்ணாடி வேறை"..

அப்போ தாண்டி கரப்பான்பூச்சிக்கு என்னை அடையாளம் தெரியாது ..

நானும் கூடவே வரவா ?..

வேண்டாம். நீ சத்தம்போட்டு ஊரையே கூட்டிடுவாய்.பூச்சி ஓட்டிடும் ..என்று விட்டு கிளம்பி விட்டிருந்தேன் .அப்பார்ட்மெண்ட் கதவை மெதுவாக திறந்து பூனையைப்போல அடிமேல் அடிவைத்து உள்ளே போய் டார்ச் லைட்டை திடீர் திடீரென எல்லாப் பக்கமும் அடித்துப் பார்த்தேன் . ""அப்படா எந்தப் பக்கமும் பூச்சி இல்லை"" .

மறு நாளே அட்வான்ஸ் கொடுத்து .வீட்டு ஏஜென்சிக் காரன் காட்டிய இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டு திறப்பும் வாங்கியாச்சு.அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாக சாமான்கள் எல்லாம் பெட்டிகளில் பொதி செய்யத் தொடக்கி விட்டிருந்தோம்.புது வீட்டுக்கு லிப்ட் வசதி இருந்தது ஆனால் வீடு மாறுபவர்கள் பொருட்களை லிப்டில் ஏற்றக் கூடாது  என்று எழுதி ஒட்டியிருந்தார்கள் பாவிகள் .கண்ணீர்ப்புகை புகழ் மமாடுவும் உதவிக்கு வந்திருந்தான்.வார இறுதி இரண்டு நாளும் பொருட்களை புது வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாகி விட்டது.நாலாம் மாடிக்கு பொருட்களோடு ஏறி இறங்கி நாக்கு தள்ளிவிட்டது.

மறுநாள் காலை அலாரம் சிணுங்கியது.வேலைக்கு கிளம்ப வேண்டும். உடம்பு அடித்துப் போட்டது போல அலுப்பாக இருந்தது. "என்னங்க நீங்கள் பாத்ரூம் போறிங்களா இல்லை நான் போகட்டா "?...

"நீயே .. போ..நான் இன்னும் ஒரு பத்து நிமிசம் படுக்கிறேன்"..  என்று விட்டு போர்வையால் இழுத்து மூடிக் கொண்டேன் .

இன்னமும் ஒழுங்கு படுத்தப் படாமல் வீடெங்கும் பரவிக் கிடந்த பொருட்களை தாண்டியபடி குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திய சத்தம் கேட்டது .ஒரு நிமிடம் சென்றிருக்கும் .......

என்னங்க ..ஐயோ ..ஆ ஆ ஆ.......................................................
க .பூ ..க ..போ ..கரப்பான்பூச்சியும் கடந்து போகும்

உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் .

1:57 PM, Posted by sathiri, No Comment


உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள் .
புதிய தலைமுறை  வார இதழுக்காக ..
சாத்திரி பிரான்ஸ் .



அக்டோபர் மாதம் 3ம் திகதி அமெரிக்காவின் முன்னணி தொலைக்கட்சி தொகுப்பாளரும் மாடல் அழகியுமான kim kardashian என்பவரின் பத்து  மில்லியன்  யூரோ பெறுமதியான நகைகள் பாரிஸ் நகரில் அவர் தங்கியிருந்த  நட்சத்திர விடுதியில் வைத்து கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.இந்திய மதிப்பிற்கு  74 கோடி ரூபாய்கள் .உலகக் கொள்ளை வரலாற்றிலேயே ஒரு தனி நபரிடம் இவ்வளவு பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் இதுதான் . இது வரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.இவ்வளவு கச்சிதமான கொள்ளையையை நிச்சயம் ஊதாப்புலிகள் தான் செய்திருப்பார்கள் என்கிறனர் பிரெஞ்சு காவல் துறையினர் .

 யாரிந்த  ஊதாப்புலிகள்.   Pink Panther என்றதுமே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது அமெரிக்காவை சேர்ந்த Friz Freleng  என்பவரால் குழந்தைகளுக்காக உருவாக்கப் பட்ட கதா பாத்திரமும் அவர்களுக்கு   பிடித்தமான காட்டூன் படங்களும்   தான். ஆனால் நான் இங்கு  சொல்ல வருவது உலகின் மிகப் பயங்கர கொள்ளையர்களான ஊதாப் புலிகளைப் பற்றியது.

சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் அதன் ஆளுகையின் கீழிருந்த மேலும் பல நாடுகளும் பிரிந்து தனித் தனி சுதந்திர நாடுகளாக உருவெடுத்தன.அப்படி உருவான யுகோஸ்லாவியா நாட்டின் ஆளுகைக்குள் இருந்த நாடுகள் மீண்டும் உடைந்து பல நாடுகள் உருவானதில் செர்பியா தனி நாடாக இயங்குகின்றது.சோவியத் யூனியனின் உடைவின் போது செர்பிய இராணுவத்தினரே ஊதாப் புலிகள் என்கிற கொள்ளை  அமைப்பை 1996 ம் ஆண்டு உருவாக்கினார்கள். இவர்களின் தொகை சுமார் அறுநூறில் இருந்து ஆயிரம் பேர் வரை இருப்பார்கள் என்கிறனர் சர்வதேசப் புலனாய்வுப் போலீசார்.

உலகம் முவதும் சுமார் 110 க்கும் அதிகமான கொள்ளைகளை நாடாத்தி முடித்துள்ளனர்.இதுவரை காலமும் உலகை உலுக்கிய இத்தாலியில் தோன்றிய மாபியா கொள்ளைக் கும்பலை பின்னுக்குத்தள்ளி இன்று சர்வதேச பொலிசாரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் முன்னணி கொள்ளையர்களாக மாறிவிட்டிருகிரர்கள் .
இவர்களின் ஸ்பெசாலிட்டி  விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளை குறிவைத்து கொள்ளையடிப்பதுதான்.

அது நகைக்கடையாகட்டும்,வங்கியாகட்டும்,அல்லது தனி நபர்களாக இருக்கட்டும் இவர்களது குறி விலையுயர்ந்த வைரங்கள் பதித்த நகைகளே.அதே நேரம் கொள்ளைகளின் போது  யாருக்கும் பயங்கர காயங்கள் ஏற்படுத்துவதோ, சுட்டுக்கொலை செய்வதோ கிடையாது .அது அவர்களது தொழில் தர்மம் .பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் 250 மில்லியன் யூரோ பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
பாதுகாப்பும் தொழில் நுட்ப வசதிகளும் வளர்ந்து விட்ட மேற்கு நாடுகளில் பொலிசாருக்கு சவால் விட்டபடி எப்படி இவர்களால் அதுவும் பட்டப் பகலிலேயே கொள்ளைகளை நடத்தமுடிகிறது என்றால் அவர்களின் துல்லியமான இலக்குத் தெரிவும் .கண்ணிமைக்கும் வேகமுமே காரணம் .ஒரு வேளை இலக்குப் பிழைத்து விட்டல் மேலதிகமாக எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.

இவர்களின் கொள்ளையின் வேகத்துக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம்.2009 ம் ஆண்டு 13ந் திகதி ஜூலை மாதம் பிரான்சின்  கேன்ஸ் நகரில் பிரபலமான  Cartier நகைக் கடைதான் இவர்கள் இலக்கு .கடைக்கு நேரே எதிரில் வீதியை கடந்தால் வெறும் பத்து மீற்றர் தூரத்தில் தான் காவல் நிலையம்.மதியமளவில் வேகமாக வந்த கார் ஓன்று நகைக்கடை கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து கொள்ள அதிலிருந்து இறங்கிய இருவர் வேகமாக நகைகளை அள்ளி பைகளில் போட்டுக்கொண்டு தப்பிவிடுகிறார்கள்.கடைக்குள் கார் பாய்ந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சுய நினைவுக்கு வந்து அங்கு என்ன நடக்கின்றது என்று அங்கிருந்தவர்களும் பொலிசாரும் உசாரடைவதற்க்குள் கொள்ளையடித்தவர்கள் வேலையை முடித்துக்கொண்டு பறந்து விட்டார்கள்.இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 41 செக்கன்கள் தான்.கொள்ளையடித்த நகைகளின் பெறுமதி 15 மில்லியன் யூரோக்கள் .

ஆனாலும் இதுவரை உலகம் முழுதும் ஊதாப்புலிகள் ஏழு பேர் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.இந்த அமைப்பின் முக்கியமான மூளை எனப்படும் இருவரை அவர்கள் மாறு வேடத்தில் இருந்தபோது 2007 ம் ஆண்டு மொனாகோ போலீசார் சர்வதேச பொலிசாரின் உதவியுடன்  ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து கைது செய்தனர்.மாறு வேடமென்றால் நம்பியார் போல கன்னத்திலை மச்சம் வைத்த மாறுவேடமல்ல.நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள் பிரேசிலில் சென்று  பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் பழைய அடையாளங்கள் எதுவுமே தெரியாத மாதிரி முகத்தையும் உடலையும் மாற்றிக் கொண்டு மொனாக்கோ வங்கியில் பல மில்லியன் பணத்தை வைப்பிலிட வந்திருந்தபோதே கைது செய்யப் பட்டனர்.மொனாக்கோ வங்கியும் சுவிஸ் வங்கியைபோலவே கறுப்புப்பணத்தை வைப்பிலிடலாம்.எந்தக் கேள்வியும் கிடையாது.எனவே இந்திய அரசியல் வாதிகள் கவனத்திலெடுக்கவும்.

இவர்களின் கைதின் பின்னர் பிரான்சில்  ஊதாப் புலிகளின் நடவடிக்கைகள் குறைந்திருக்கிறது என்று போலீசார் நிமதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த வேளை  கடந்த வருடம் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவிற்கு அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சுவிஸ்லாந்து நாட்டு நகைக்கடை ஓன்று காட்சிப் படுத்த கொண்டு வந்த நகைகளில் 103 மில்லியன் யூரோ பெறுமதி வாய்ந்த வைரம் பதித்த நகையை பகல் 11.30 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொள்ளையடிக்கப்பட்டது. C.C. TV கமெராவில் ஒருவர் கண்ணாடியிலான பாதுகாப்பு பெட்டியை திறந்து வைரநகையை எடுப்பது பதிவாகியுள்ளது.ஆனால் நபரின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை.
கொள்ளையடித்தவர் யார் எங்கே போனார் என்கிற எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் தாடையை சொறிந்துகொண்டிருக்கும் போதே பாரிசில் வைத்து kim kardashian னிடம் அடுத்த கொள்ளை நடந்துள்ளது.

தற்சமயம் பிரான்சில் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் மூலை முடுக்கெல்லாம் பொலிசாரும், இராணுவமும் பாதுகாப்பு கடமையில் இருக்கும்போது.kim kardashian தங்கியிருந்த விடுதிக்கு காலை  சைக்கிள்களில்  வந்த ஐவரில் ஒருவர் வாசலில் காவல் நிற்க .இருவர் தங்களை சிவில் போலீசார் என அறிமுகப்படுத்தி ரிசெப்சனில் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றைய இருவர் முதலாம் மாடியிலிருந்த kim kardashian தங்கியிருந்த அறைக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.அதேநேரம் kim குளியலறையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

கொள்ளையடித்தவர்கள் சாவகாசமாக சைக்கிளிலேயே தப்பிச்சென்றுள்ளார்கள்.குளியலறையிலிருந்து வெளியே வந்த kim நகைகள் அடங்கிய தனது பையை காணாது ஹோட்டேல் பணியாளர்களை அழைத்த பின்னர்தான் விபரம் தெரியவந்தது.கொள்ளையர்கள் அனைவரும்  40 திலிருந்து  50 வயதுக்குள்ளனவர்கள் என்று விடுதி ரிசெப்சனிஸ்ட்  கூறியுள்ளார். அவர்கள் தப்பிச்செல்லும்போது  வைரம் பதித்த சிலுவையோடு கூடிய செயின் ஒன்றை வழியில் தவறவிட்டு சென்றுள்ளார்கள்.அதனை போலீசார்  தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அதில் கொள்ளையர்களின் கை ரேகை அடையாளம் பதிந்திருக்குமா ? இல்லையா ? என்பதற்குமபால் ..கொள்ளை நடந்தபோது kim kardashian னின் மெய் பாதுகாவலர் உட்பட விடுதி ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.சி சி டிவி கமராவில் அவர்கள் பதியப்படாமல் போனது எப்படி .

kim குளியலறையில் இருந்தபோது துல்லியமாக கொள்ளையர்கள் அறைக்குள் புகுந்தது எப்படி.அந்த தகவலை யார் கொடுத்தது.அதி உயர் பாதுகாப்பு கொண்ட விடுதி அறையின் கதவை எப்படி அவர்கள் திறந்தார்கள்?என கொள்ளையடிக்கப் பட்ட பத்து மில்லியன் யுரோவுக்கும் அதிகமான கேள்விகள் மிஞ்சிக் கிடக்கின்றது..விடை கிடைக்குமா தெரியாது ..கொள்ளையடித்தவர்கள் ஊதாப் புலிகள் என்பதைத் தவிர.. இதுவரை வேறெந்த தகவல்களும் இல்லை ..கொள்ளையர்கள் பிடிபடும்வரை kim kardashian னைப் பார்த்து.. "ஊதாக் கலரு ரிப்பன்.. யார் கொள்ளைக்கு  அப்பன்" ..என்று பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் ..