Navigation


RSS : Articles / Comments


இருளில் தெரிந்த தேவதை

11:46 PM, Posted by sathiri, No Comment

இருளில் தெரிந்த தேவதை.

கடந்த மார்கழி 13 ந் திகதி விடுமுறைக்கான பயணம்.இலங்கைக்கு செல்லக்கூடிய சாதகமான சூழல் இன்னமும் சரி வராததால் வழைமை போல இந்தியாவிற்கான பயணம்.ஒன்ரரை மாதங்கள் விடுமுறைக்காலம் என்பதால் எனது நண்பர்களையும் சந்தித்து போவது என முடிவெடுத்து முதலில் மும்பையில் இறங்கி அங்கு நான்கு நாட்கள் பின்னர்  கோவா.கர்நாடகா.தமிழ்நாடு என பயணப் பாதை திட்டமிடப் பட்டது.மும்பையில் எனது மனைவியின் தம்பி ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பொறியியலாளராக இருப்பதால் அவனும் விடுமுறை  எடுத்து எங்களிற்காக காத்திருந்தான்.மும்பையில் இரண்டாம் நாள் மாலை மனைவி தனது தம்பியுடன்  பொருட்கள் வாங்க போய்விட  நான் எனது நீண்டகால  நண்பன் டோனியலை சந்திப்பத்காக அவன் கடை வைத்திருக்கும் மலை மாதா ஆலயத்தடிக்கு சென்றிருந்தேன்.அங்கு அவனோடு வழைமை போல பல பழைய  புதிய விடயங்கள் அரசியல் என கதைத்துக் கொண்டேயிருந்தோம்.அது மட்டுமல்ல அவன் திருமணம் முடித்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது .குழந்தை ஒன்பது மாதங்கள்.எனவே தான் காதலித்து திருமணம் முடித்த கதைகளையும் சொல்லிக்கொண்டிருந்தான்.தமிழீழம் கிடைத்த பின்னர்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து காத்திருந்தவன் திருமணம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.


அன்றிரவு எங்களை அவன் தனது வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்.மனைவியும்  மச்சினனும் நேராக அவன் வீட்டிற்கு வருவார்கள். எனவே இரவு எட்டு மணியளவில் டோனியல் கடையை அடைத்து விட்டு அவனது வீட்டிற்கு போகலாமென முடிவெடுத்து விட்டு இரண்டு ரீயை வாங்கி உறுஞ்சியபடி கதைத்துக்கொண்டிருந்தோம் கோயிலிற்கு அருகே நின்றிருந்த பெரிய மரமென்றின் கீழ் வெளிச்சமற்ற பகுதியில் திடீரென ஒரு சல சலப்பு கோயிலிற்கு வந்தவர்கள் கடை வைத்திருந்தவர்கள் என பலரும்அங்கு கூடத் தொங்கியிருந்தார்கள்.நானும் டோனியலும் என்ன நடக்கின்றது என்று விடுப்பு பார்ப்பதற்காக அங்குபோய் கூட்டத்தை விலத்தி பார்த்தோம். நடுவில் ஒரு பெண் கையில் ஒரு பெண்குழந்தையோடு அழுதபடியே ஏதோ சொல்லிக் கொணடிருக்க அவளை பலர் ஏசியும் கோபமாக திட்டிக் கொண்டும் இருந்தார்கள்.அழுதபடி நின்ற பெண் மராட்டியில் கதைத்தால் எனக்கு ஒன்றும் புரியவில்லை எனவே டோனியலைப் பார்த்து என்னவாம் என்றதும்.

இது அந்த பெண்ணின் இரண்டு மாத குழந்தையாம் ஏற்கனவே இவளிற்கு மூன்று பிள்ளைகளாம்.கணவன் சந்தை ஒன்றில் லாறிகளிற்கு பொருள் ஏற்றும் வேலை செய்பவன்.அவன் ஏதோ விபத்தில் சிக்கியதால் ஒரு மாதமாக வைத்திய சாலையிலாம்.அதனால் வருமானம் இல்லை சாப்பாடு இல்லை.சாப்பாடு சரியாக இல்லாததால் பிள்ளைக்கு பால் கொடுக்க முடியவில்லை.அதே நேரம் இந்த பிள்ளை பிறந்த நேரம்தான்  கணவனிற்கு விபத்து நடந்தது என்று நினைத்து இந்த ராசியில்லாத குழந்தையை கோயிலடியில் போட்டு போகலாமென முடிவெடுத்து அவள் கோயில் படிக்கட்டில் குழந்தையை போட்டு விட்டு போகும்போது சிலர் கண்டதால் கூட்டம் கூடிவிட்டது என்று சுருக்கமாக சொல்லி முடித்தான்.
கூட்டத்தை விலக்கி அவளருகே போய் கையிலிருந்த குழந்தையை பார்த்தேன் அது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தது.சிலர் போலிசை கூப்பிடு என்று கத்திக் கொண்டேயிருந்தார்கள்.

போலிசை கூப்பிடுவதாலேயோ அந்தப் பெண்ணை திட்டி கலைப்பதாலேயோ எதுவும் நடந்து விடப் போவதில்லை அவள் அந்தக் குழந்தையை  வேறு இன்னொரு இடத்தில் வீசி விட்டு போகத்தான் போகிறாள்.அவளை  உற்றுப் பார்த்தேன் மெலிந்த தேகம் அழுக்கான உடைகள் அழுது கொண்டே சேலையில் சுற்றிய குழந்தையை  பிடித்தபடி போலிசை கூப்பிட வேண்டாம் என கைகளை கூப்பிய படி அழுது கொண்டே நின்றவளிடம் பிள்ளையை வளக்கத் தெரியா நீயெல்லாம் எதுக்கடி பெத்துக்கிறீங்கள் என்று வீர வசனம் எல்லாம் பேச மனம் வரவில்லை.டோனியலிடம் அவளை தனியாக  அழைத்து வா என்றதும் அவன் புரிந்தவனாக அங்கு நின்றவர்களை சத்தம் போட்டு விரட்டிவிட்டு அவளை தனது கடைக்கு அழைத்து வந்தான்.மற்றையவர்கள் தூரத்தே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

 அவளிற்கு  சாப்பாடும் ரீயும் வாங்கி கொடுத்து விட்டு அடுத்தது என்ன செய்யலாமென யோசித்தபடி டோனியரை பார்த்தேன்.அவனோ மச்சான் எனக்கு இப்பதான் ஒரு மகன்பிறந்திருக்கிறான் என்று தலையை சொறிந்தான்.உடனே மனைவிக்கு போனடித்து அங்கு வரச் சொன்னேன். சில நிமிடங்களிலேயே மனைவியும் மச்சினனும் வந்து சேர்ந்தார்கள்.அவர்களிற்கு விபரத்தை சொன்னேன்.குழந்தையை பார்த்த மனைவி நாங்களே எடுத்துக்கொண்டு போகலாம் என்றாள்.அது முடியாது நிறைய சட்டச் சிக்கல் சம்பிரதாயங்கள் உள்ளது அது மாதக் கணக்கோ வருசமோ ஆகும் இப்போ உடனடி தீர்வு தேவை என்றதும் மச்சினனோ எனக்கு  ஏற்கனவே மூன்று ஆண் குழந்தைகள் எனவே தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்கிற விருப்பம் தான் எடுத்து வளர்ப்பதாக சொன்னான். அதற்கிடையில் விபரம் அறிந்து தேவாலய பாதிரியாரும் அங்கு வந்திருந்தவர் குழந்தையை திருச்சபை பொறுப்பொடுத்து வளக்கதயார் என்று சொல்லியிருந்தார்.நித்திரையால் எழுந்த குழந்தை சாப்பிட்டு முடித்திருந்த தாயிடம் பால் குடித்துவிட்டு எங்களைப் பார்த்து அழகாய் சிரித்தது.
அதன் சிரிப்பை பார்ததுமே மச்சினன் தனக்கு அந்தக் குழந்தை வேண்டும் என அடம் பிடிக்கத் தொடங்கியிருந்தான்.

அவனது மனைவிக்கு போனடித்து விபரம் சொல்லி அனுமதி கேட்கசொன்னேன். வேண்டாம் ஏற்கனவே தான் ஒரு பெண் குழந்தையை தத்து எடுப்பது பற்றி மனைவியுடன் பேசியுள்ளேன் எனவே அவனிற்கு விபரம் சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்என்று விட்டான். அடுத்ததாக சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவே டோனியலிற்கு தெரிந்த ஒரு வக்கீலையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு போனோம்.அங்கு அதிகாரி இருக்கவில்லை அவர் ரவுண்ஸ்(நகரவலம்)போயிருப்பதாக சொல்லி அவரிற்கு வோக்கியில் தகவல் கொடுத்தார்கள்.அரை மணித்தியாலம் கழித்து அங்கு வந்த அதிகாரி அதிகார தோரணையோடு கிந்தியில்  யாரப்பா நீங்களெல்லாம்  பிள்ளை வியாபாரம் பண்ணுறவங்களா.உங்களுக்கு என் னவேணும்.எல்லாரையும் உள்ளை தள்ளிடுவன் என்று சத்தமாக எங்களைப் பார்த்து சொல்ல. நான் எனது கடவுச் சீட்டையும் பத்திரிகையாளன் என்கிற அடையாள அட்டையையும் காட்டியபடி  ஆங்கிலத்தில் விபரத்தை சொன்னதும்.அமையான அதிகாரி இந்தியாவில் உள்ள அனைத்து கிரிமினல்களும் இங்கு மும்பையில்தான் இருக்கிறார்கள் அதுதான் அப்படி கதைத்து விட்டேன் என்றதும் டோனியல் மெதுவாய்  கொடுப்பிற்குள் சிரித்தான்..

அந்தப் பெண்ணை தனியாக அழைத்து விசாரித்து விட்டு அடுத்தநாள் காலை அனைவரையும் வரும்படி சொன்ன அதிகாரிஇ இரண்டு காவலர்களை  அந்தப் பெண் வசிக்கும் இடத்திற்கு போய் பெண்ணின் தகவல்கள் சரியானதா என விசாரித்துவரச்சொல்லி அனுப்பிவிட்டார். மறுநாள் காலை அனைவரும் காவல் நிலையம் போய்சேர்ந்தோம் வக்கீலும் போலிசாரும் தயாரித்த தத்து கொடுக்கும் கடிதங்களில் அந்தப் பெண்ணும் மச்சினனும் சாட்சியாக நாங்களும் கையெழுத்து போட்டு குழந்தையை பெற்றுக் கொண்டதும் காவல்துறை அதிகாரி எங்களிற்கு வாழ்த்து சொன்னதோடு அந்தப் பெண்ணை  வைத்திய சாலைக்குப்போய் கருத்தடை செய்யச் சொல்லி கோபமாய் திட்டி அனுப்பினார்.வெளியே வந்ததும் நான் அந்தப் பெண்ணை அழைத்து கொஞ்சம் பணத்தை அவளிடம்கொடுத்து மற்றைய பிள்ளைகளை  நன்றாக கவனிக்க சொன்னதும் கைகூப்பி கும்பிட்டபடி பணத்தை வாங்கிக் கொண்டு பிள்ளையை பார்க்காமலேயெ நடந்து போய்விட்டாள்

குழந்தையை மச்சினன் வீட்டிற்கு கொண்டுபோனதுமே அனைவரிற்கும் மகிழ்ச்சி. குழந்தைக்கு ஏற்கனவே முஸ்லிம் பெயர் இருந்ததால்  அதற்கு வேறொரு பெயர் வைக்கவேண்டும் என முடிவு செய்யப் பட்டது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன் மொழிந்தார்கள்.எனக்கு குழந்தையை பார்த்ததுமே தேவதை என்று பெயர் வைக்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன்.எனவே மற்றையவர்கள் சொன்னஅனைத்து பெயர்களையும் துண்டுக்கடதாசியில் எழுதி சுருட்டி குலுக்கிப்போடுவது என முடிவானது. நான் கடதாசிகளில் பெயர்களை எழுதி சுருட்டி குலுக்கிப் போட்டேன்.மனைவியின் தங்கை மகன் ஒரு கடதாசி சுருனை எடுத்துத் தந்தான் அதை விரித்து அனைவரிற்கும் காட்டினேன் ஏஞ்சல் என்றிருந்தது குழந்தைக்கு ஏஞ்சல் என்கிற பெயர் முடிவானது.நான் மற்றைய கடாசிகளை எடுத்து கிழித்து குப்பையில் எறிந்துவிட்டு குழந்தையை தூக்கி ஏஞ்சல் என்று அழைத்தபடி முத்தம் கொடுத்தேன்.நான் அனைத்துக் கடதாசிகளிலும் ஏஞ்சல் என்றே எழுதி சுருட்டிப் போட்டிருந்தேன்.ஏஞ்சல் இப்பொழுது எங்கள் வீட்டுப் பிள்ளை .


No Comment