Navigation


RSS : Articles / Comments


நானும் பில்லாவும்.

2:08 PM, Posted by sathiri, One Comment

நானும் பில்லாவும்.
சாத்திரி ஒரு பேப்பர்.

Posted Image

நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான  ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால்  ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு  வாற ஞாயிற்று கிழைமை  படம்  நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது  இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன்  இந்தியாவிலை போய் எடுத்த படமாயிருக்கும் எண்டுதான் நான் நினைச்சன். காரணம் என்ரை இடத்திலை என்ரை குடும்பத்தை விட்டால் வேறை இரண்டு தமிழ் குடும்பம்தான் தூரத்திலை இருக்கினம். அதாலை தமிழ் படம் எடுத்து ஓடுறதுக்கான சாத்தியம் எதுவும் இல்லை. வீட்டை வந்து தபால் பெட்டியை திறந்து பாத்தால்  பில்லா 2 எண்டு எழுதி ஒரு நோட்டிசும் 3 றிக்கற்றும் இருந்திச்சிது  எனக்கு சரியான புளுகம். ஏனென்டால் எங்கடை சிற்றியிலை ஓடுற முதல் தமிழ்படம் அதுவும் பிரெஞ்சு கொம்பனியே எடுத்து போடுறாங்கள்.

அதைவிட ஓசி றிக்கற் வேறை இதுக்கு மேலையும் படத்தை பாக்க போகாமல் விட்டால் நான் தமிழனேயில்லை எண்டு முடிவுக்கு வந்திட்டன். ஆனால் தலையின்ரை படம் பேர் வேறை பில்லா  படத்திலை தலை எப்பிடியும் ஒரு பிஸ்ரலாலை மகசீன் மாத்தாமலேயே ஆயிரம் குண்டுகளால் குறைஞ்சது  50 பேரையாவது சுட்டுத்தள்ளுவார்.  வன்முறை காட்சிகளாக இருக்கும் அதாலை மகளை விட்டிட்டு நானும் மனிசியும் போறது எண்டு முடிவெடுத்தன். பொதுவா பிரான்சிலை ஓடுற படங்களிற்கு வயது கட்டுப்பாடு 10..12...16..18...வயது எண்டு நாலாய் பிரிச்சிருப்பாங்கள். அந்த வயதுக்குட்பட்டவையை உள்ளை விடமாட்டாங்கள்.  ஆனால் பில்லா படத்துக்கு இந்தியன் சென்சார் போட் குடுத்த  U சேட்டிபிக்கற்ரை பாத்திட்டு பிரெஞ்சு காரன்  வயது கட்டுப்பாடு எதுவும் போடேல்லை. சரி இப்ப தியேட்டர் வாசல்லை வந்து இறங்கியாச்சு தியேட்டர் நிருவாகம்  ஒருமாதமாய் விளம்பரம் செய்ததிலை 60 கிமீற்றர் தூரத்திலையிருந்தும் தமிழாக்கள் வந்திருந்திச்சினம்.பலவருசம் காணாத பலரையும் காணக்கூடியதாய் இருந்தது. ஆனாலும் மெல்லிதாய் ஒரு தலையாட்டல் ஒரு புன்னகை இதோடை சரி மிஞ்சிப் போனால் எப்பிடி இருக்கிறியள் எண்டொரு கேள்வி அவ்வளவும்தான். ஒரு 50 அல்லது ..60 எங்கடையாக்கள்  பாண்டிச்சேரி தமிழர்கள் ஒரு இருபது பேரளவில் இருந்தனர் அதோடை 12 பிறெஞ்சுக்காரர் எண்ணிப் பாத்தனான்.

தியேட்டருக்குள்ளை போய் இருந்தாச்சு எனக்கு வலப்பக்கம் ஒரு பாண்டிச்சேரி குடும்பம் இடப் பக்கம் கொஞ்சம் வயதான பிரெஞ்சு சோடியொண்டு.பிரெஞ்சுக்காரி என்னை பாத்து நமஸ்த்தே எண்டாள் நான் வணக்கம் எண்டன். வெள்ளைக்காரி குழம்பிட்டாள் அதுக்கிடையிலை என்ரை மனிசி புகுந்து நமஸ்தே போட்டு வைக்க நான் பிரெஞ்சிலை  பொன்சு(bonjour) எண்டிட்டு பேசாமல் இருந்திட்டன். படம் எழுத்தோட்டம் தொடங்கிச்சுது  இராணுவ ராங்கி. கெலி கொப்ரர் .துவக்கு சூடு எண்டு எழுத்தோட்டம் போகத் தொடங்கவே இது ஈழத் தமிழனிட்டையிருந்து தொடங்கப் போகுதெண்டு எனக்கு விளங்கிட்டுது .மணிரத்தினம் மாங்குளத்திலை மலையை காட்டினமாதிரி இதிலை மன்னாரிலை மலையையோ இல்லாட்டி யாழ்ப்பாணத்திலை தொப்பிக்கலை காட்டையோ காட்டப் போறாங்கள் எண்டு நினைச்சு நிமிந்து இருந்தன்.ஆனால் படம் பயங்கர சண்டையிலை தொடங்கிச்சுது ஒரே விசிலடி கைதட்டல் கனபேர் தலையெண்டும் தலைவா எண்டும் கத்தினாங்கள். நானும் மனிசியும் பக்கத்திலையிருந்த பிரெஞ்சுக்காரியும் ஒருத்தரை யொருத்தர் பாத்தம். கனகாலத்துக்கு பிறகு  எங்கடை படம் பாக்கிற மகிழ்ச்சி அதுதான் கத்துறாங்கள் எண்டு பிரெஞ்சு காரியிட்டை சொல்ல அவள் அதை அடுத்ததாய்யிருந்த தன்ரை மனிசனிட்டை கடத்தினாள்.

அஜித் ஒருத்தனின்ரை கழுத்திலை கத்தியை வைச்சு சறக்கொண்டு அறுக்க பின் வரிசையிலை தாயின்ரை மடியிலையிருந்த ஒரு பெண் குழந்தை 3 வயதுதானிக்கும் வீரிட்டு அழத் தொடங்கிச்சிது. அதை அவர் ஓராட்டி பாத்து களைச்சு வெளியாலை தூக்கி கொண்டு போயிட்டார். ஒரு படத்திலையே சண்டை வன்முறை காதல் காமம் உணர்வு எண்டு எல்லாத்தையும் கலந்து அரைச்சு குடுக்கிற தமிழ் படங்களிற்கு குழந்தையளை அதுவும் 12 வயதுக்கு குறைஞ்சவையை கூட்டக்கொண்டு போக கூடாது எண்டது என்ரை கருத்து. சண்டை முடியத்தான் கதை தொடங்கிச்சுது தமிழ்நாட்டு கடற்கரையிலை அஜித் அகதியாய் படகிலை வந்து இறங்குவார். ஈழத்தமிழ் கதைச்சு கொலைவெறி வரப்பண்ணப் போறான் எண்டு நினைச்சன் நல்லவேளை அப்பிடியொண்டும் நடக்கேல்லை.முகாமிலை பதியிறவரிட்டை தான் பவளத்துறையிலை இருந்து வாறதாய் சொல்லுவார். எனக்கு சந்தேகம் மனிசியை மெல்ல சுரண்டி பவளத்துறையா பருத்தித்துறையா? எண்டன்.

உனக்கு காதும் மங்கிப்போச்சுது பவளத்துறையாம் எண்டாள்.அப்ப அவர் ஈழத்து அகதியில்லை இந்தியாவுக்கு கீழை இலங்கையை தவிர வேறையொரு நாடும் இருக்கு எண்டு அப்பதான் எனக்கு தெரிஞ்சிது. என்ரை பூகோள வாத்தி  பூலோகம் சுத்திப்போட்டான் சொல்லித்தரேல்லை. அங்கையும் தமிழர் இருக்கினம் சண்டை நடக்கிது அங்கையிருக்கிற பவளத்துறையிலையிருந்துதான் இவன் அகதியா வந்திருக்கிறான். எதுக்கும் வீட்டை போன உடைனை  கூகிழ் மப்பிலை தேடிப்பாக்கவேணும் எண்டு நினைச்சபடி படத்தை பாத்தக்கொண்டிருந்தன். அதுக்கிடையிலை பிரெஞ்சக்காரிக்கு ஒரு சந்தேகம் வந்திட்டுது அவள் என்னட்டை  மன்னிக்வேணும் ஒரு சந்தேகம் எண்டாள். என்னை மாதிரி எல்லாம் தெரிஞ்ச ஒருத்தன் பக்கத்திலை இருக்கேக்குள்ளை  தாரளமாய் கேக்கலாமெண்டன்.  இந்த கதை இந்தியாவிலை எந்த பகுதியிலை நகருது எண்டாள். இது  சவுத் இந்தியா தமிழ் நாட்டு கடற்கரையிரை நகருது ஆனாலும் நத்தை வேகம் எண்டன். ஆனால் அடுத்த சந்தேகம். அவர் எந்த நாட்டிலையிருந்து அகதியா வாறார் எண்டாள். அது சஸ்பென்ஸ்  படத்தின்ரை கடைசியிலைதான் சொல்லுவாங்கள் எண்டு நான்தான் கதைவசனம் எழுதினமாதிரி சொன்னன்.

தொடந்து  நடந்த சண்டைக்கு இடைவேளை விட்டாங்கள். இங்கத்தைய படங்களுக்கு இடைவேளை விடுறேல்லைதானே . அதாலை இடைவேளையோடை கன வெள்ளையள் படம் முடிஞ்சுதெண்டு வீட்டை போட்டாங்கள். எனக்கு பக்கத்திலை இருந்தவைக்கு படம் முடியேல்லையெண்டு சொன்னதாலை அவங்கள் போகேல்லை. கடைசியா நாலு வெள்ளையள்தான் மிச்சம். படத்திலை கீழை பிரெஞ்சிலை மொழி பெயர்ப்பு ஓடிக்கொண்டிருந்ததாலை அஜித்தை பார்வதி ஓமணகுட்டன்  மாமா எண்டு கூப்பிறநேரமெல்லாம் பிரெஞ்சிலை oncle(uncle)எண்டு மொழி பெயர்ப்பு  போய்க்கொண்டிருந்தது ஆனால் இரண்டு பேரும் லவ்பண்ணி பாட்டும் தொடங்க  பக்கத்திலை இருந்த பிறெஞ்சுக்காரி குளம்பிட்டாள். உங்கடை ஊரிலை மாமனை கட்டுறவங்களா? எண்டாள். ஜயோ இது என்ரை ஊரில்லை  இந்தியா அங்கை இப்பிடித்தான் வரைமுறை  பழக்கவழக்கம் தெரியாததுகள் மாமனையும் கட்டுங்கள் மச்சானையும் கட்டுங்கள் .அவங்கள் கட்டுறாங்களோ இல்லையோ  சினிமாகாரர் வருசக்கணக்கா  இப்பிடித்தான் காட்டுறாங்கள் எண்டு சொல்ல நினைச்சனான்.

பார்வதி ஓமணகுட்டன்
ஆனால் என்ரை மனிசி பெங்களுர்காரி  பிறகு அவள் என்னை  டேய் நீ என்ரை மாமனா உன்னை எப்பிடி நான் கட்டினான் எண்டு கேட்டால் வில்லங்கமாயிடும் .அதோடை இரவு நுளம்புக்கடியோடை பல்க்கனியிலைதான் படுக்கவேணும். அது..அது  வந்து இஞ்சை புருசன் பெண்சாதி செல்லமா  மை பேபி எண்டு கூப்பிடுற மாதிரி அங்கை மாமா எண்டு சும்மா கூப்பிடுறவை அதைத்தான் மொழி பெயர்த்தவன் பிழையா மொழி பெயர்த்துப் போட்டாங்கள் எண்டன் அப்பாடா.. படம் ஒரு மாதிரி முடிஞ்சு வீட்டை வந்ததும் முதல் வேலையா கொம்புயூட்டரை போட்டு கூகிழ் மப்பிலை உலகப்படத்தை எடுத்தன். இண்டைக்கு  பவளத்துறையை  கண்டு பிடிக்காமல் விடுறேல்லை ஏனெண்டால் இப்பிடித்தான்  கொஞ்ச காலத்துக்கு முதல்  இவன் நடிச்ச படம் ஒண்டை பாத்திட்டு  அத்திப்பட்டியை  தேடி களைச்சுப்போனன். இந்தியாக்கு கீழை உள்ள நாடுகளை நேட்டம் விட்டன் . ஆ கண்டு பிடிச்சிட்டன்  படத்தை கொஞ்சம் பெரிசாக்கினன்.  அப்பதான் விளங்கிச்சிது  மெளசை வேகமாய் இழுத்திட்டனெண்டு  ஜயோ அது அவுஸ்ரேலியா..

என்னடா  படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பாங்கள் படிச்சிட்டு படத்தை பாக்க போகலாமெண்டு நினைச்சிருப்பியள்.  படத்திற்கு விமர்சனம் எழுதலாம் ஆனால் சண்டைக்கு  எப்பிடி விமர்சனம் எழுதிறது அதுக்கு இராணுவ ஆய்வுதான் எழுதலாம். அது எனக்கு தெரியாது

One Comment

தீபிகா(Theepika) @ 9:27 PM

எள்ளலும், கிண்டலும் நிறைந்த ரசிக்க வைத்த விமர்சனம்.