Navigation


RSS : Articles / Comments


கூர் வாளும்.. சாகாளும்...

2:05 PM, Posted by sathiri, No Comment

கூர் வாளும்.. சாகாளும்...

புது விசைக்காக

சாத்திரி.


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிரணித் தலைவியாகவிருந்த  தமிழினி அவர்கள் எழுதி காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட ஒரு கூர் வாளின் நிழலில் என்கிற அவரது சுய வரலாற்று புத்தகம் பெரும் சர்ச்சையையும் சமுக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களையும் கிளப்பியிருந்தது  அனைவரும் அறிந்ததே.விவாதங்கள் இன்னமும் முடிந்தபாடில்லை.தமிழினி தன் வரலாற்றை எழுதும் விடயத்தை அவரோடு உரையாடிய ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூறிய பொழுது அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு புத்தகம் வெளியான பின்னர் புத்தகம் பற்றிய விமர்சனத்துக்குப் பதிலாக வரப்போகும் கடும் எதிப்புக்களையும் வசவுகளையும் தாங்குவதற்கு தயாராக இருக்கும்படியும் கூறி விட்டிருந்தேன்.பின்னர் அவரது புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்ததால் புத்தகம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டே யிருந்தது.இறுதியில் அவரது மரணத்தின் பின்னர் கணவர் ஜெயன் தேவா "கூர் வாளின் நிழலை" காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிக்கொண்டு வந்தார் .


 மறு பக்கம் .தமிழியின் புத்தகம் வெளிவரப் போகின்றது என்கிற செய்தி கசியத் தொடங்கியதுமே புலம் பெயர் மற்றும் தமிழ் நாட்டு தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் அதனை நிராகரிக்க அல்லது எதிர்க்க தங்களை தயார்ப்படுத்த தொடக்கி விட்டிருந்தனர்.அதனுள் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை .அதனை அறிய வேண்டிய தேவையும் அவர்களுக்கில்லை .காரணம் ஈழத்துக்கான  இறுதி யுத்தத்தின் தோல்வியின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்லது அதன் எதோ ஒரு கட்டமைப்பின் உறுப்பினராக இருந்தவர்களால் எழுதப் பட்ட கட்டுரையோ ,கவிதையோ ,புத்தகமோ, எதுவாக இருப்பினும் இறுதி யுத்தத்தின் போது புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை கடும் விமர்சனங் களுக்குள்ளாக்கியதோடு கேள்விகளுக்குமுள்ளாக்கியிருந்தது.


விடுதலைப் புலிகளின் நடவடிக்கை மீதான கேள்விகள் என்பது அவர்கள் இல்லாதவிடத்து தீவிர தமிழ்த் தேசியவாதிகள் தங்கள் மீதான கேள்விகளாவே பார்த்து பயப்படத் தொங்கினார்கள் .காரணம் அது அவர்களது இருப்பு மற்றும் பிழைப்பு மீதான கேள்விகளாகவே அவர்களுக்கு படுகின்றது .
எனவே தங்கள் இருப்பை கேள்விக்குளாகி அசைத்துப் பார்க்கும் எந்தவொரு படைப்பையும் அல்லது படைப்பாளியை கண்ணை மூடிக்கொண்டு மூர்க்கமாக எதிர்ப்பது அவர்களது தலையாய கடைமையாகி விட்டிருக்கிறது.தமிழினியின்   புத்தகதில் உள்ளடக்கப் பட்டிருப்பது அத்தனையும் பொய் என  ஒட்டு மொத்தமாகவே எப்படி அதனை நிராகரிக்கலாமென்கிற  தேடலில் ஈடு பட்டிருந்தவர்களுக்கு அதன் பின் அட்டையில் இருந்த   "புலிகளின் வீர வரலாறு புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும்" என்று தொடங்கும் வாசகத்தில் கீழ் தமிழினி என்று அச்சிடப் பட்டிருந்தது .


அந்த வாசகமானது தமிழினி சிறிலங்கா அரச படைகளால் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரேமாவதி என்பவரால் தமிழினிக்கு எழுதிய கடிதத்தில் வருகின்ற வரிகளே.தவறுதலாக தமிழினியின் வரிகள் என்று அச்சிடப் பட்டிருந்தது .எனவே அத்தனையும் பொய் என நிராகரித்தார்கள் .


பின்னர் அப் புத்தகத்தை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் பின் அட்டை விடயத்தில் தவறு நடந்து விட்டது என மன்னிப்புக் கோரியதோடு அந்த வரிகளை நீக்கியிருந்தார்கள்.தமிழினியின் கணவர் ஜெயக்குமாரும் அது சம்பந்தமாக மன்னிப்புக் கோரி விளக்கமளித்திருந்தார் .ஆனாலும் எதிர்ப்பவர்கள் விடுவதாயில்லை.அட்டையில் ஏற்பட்ட தவறைப்போலவே உள்ளடக்கத்திலும் இடைச் செருகல்கள்,தவறுகள் உள்ளது என்கிற  அடுத்த வாதத்தை தூக்கிப் போட்டார்கள்.


அதனை நிருபிக்க ஜெயக்குமாரின் கடந்தகால வரலாற்று ஆராய்சியில் சிலர் இறங்கி அவர் முன்னர் எத்தனை திருமணம் செய்தார் ? எத்தனை பிள்ளைகள்.அவரின் கடந்த கால அரசியல் நிலைப்பாடு என்ன என்கிற ஆராய்சிகளில் .அவர் கடந்த காலத்தில் புலிகளை கடுமையாக விமர்சித்தவர்.எனவே புலிகளை பழிவாங்கவே திட்டமிட்டு தமிழினியை திரு மணம் செய்தது மட்டுமல்லாமல்,தமிழினி புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை செய்யவென வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு செய்து மோசடி செய்தார்.அதே போலவே தமிழினி எழுதியது போல ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்று  ஆராய்சியின்  இறுதியில் கண்டு பிடித்தார்கள் .


புலிகள் அமைப்பின் மீது விமர்சனம் கொண்ட ஒருவர் அந்த அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் கைதாகி சிறை சென்று புனர்வாழ்வு பெற்று வந்த ஒருவரை திருமணம் செய்வதன் மூலம் எப்படி அந்த அமைப்பை பழிவாங்க முடியும்.?..அடுத்து மக்களுக்காக போராடப்புறப்பட்ட தமிழினி மட்டுமல்ல. சிறையிலிருந்து வெளியே வந்த ஆயிரமாயிரம் போராளிகள்  தங்கள் வாழ்வாதாரதுக்காக போராடிக் கொண்டிருக்கும்போது எவரையுமே ஏறெடுத்தும் பார்க்காத தேசிய வாதிகள் தமிழினியின் மருத்துவ செலவுக்கு ஒன்றும் கொட்டிக் கொடுத்திருக்கவில்லை.


தனிப் பட்ட முறையில் ஒரு சிலரே தங்களால் முடித்ததை உதவினார்கள்.இத்தனை ஆராய்சிகள் செய்த தீவிர தமிழ்த் தேசிய வாதிகளிடம் சில கேள்விகள் ??புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த எத்தனை பெண் போராளிகளை உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்திருக்கிறார்கள்? ஒருவரை காட்ட முடியுமா?.சிறைக்கு போய் வந்தவர்கள் என்று ஒரு மாதிரியாகத் தானே பார்க்கப் படுகிறார்கள்.இதோ தமிழீழம் ..இறுதி யுத்தம் என்று சேகரித்த மில்லியன் கணக்கான நிதியை பதுக்கி வைத்து விட்டு இன்று இலங்கையரசோடு சேர்ந்து கூட்டு வியாபாரமும் செய்து கொண்டு தமிழ்த் தேசியப் போர்வையை போர்த்தியிருப்பவர்களுக்கு
யார் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் ஒரு எழுத்துப்பிழையை கண்டு பிடித்தாவது ஒட்டு மொத்த புத்தகத்தையும் நிராகரிப்பதுதான் அவர்கள் நோக்கம்..எதிர்ப்பதென்று முடிவெடுத்து விட்ட பின்னர் எந்த விளக்கத்தையும் புலிகளின் தலைமையைப் போலவே  தீவிர தமிழ் தேசியவாதிகள் கேட்பதில்லை .இது கடந்த கால வரலாறு.



அடுத்து.. தமிழ் விமர்சன உலகம் என்பது இப்போது ஒரு படைப்பை விமர்சனம் செய்வதை விடுத்தது படைப்பாளியை போட்டுத் தாக்குவது என்பதுதான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கின்றது.தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் ஒருபடி மேலே போய் எமக்கு உவப்பிலாத எதையும் யாரும் எழுதவே கூடாது என்பதுதான் அவர்களது விமர்சனம்.தமிழினியின் ஒரு கூர் வாளின் நிழலில் புத்தகம் வெளியானபோது தமிழினியை மோசமாக விமர்சிக்க நினைத்து அகரமுதல்வன் என்பவர்  "சாகாள்".. என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார். அகரமுதல்வன்  என்பவர் தற்போதுதான் வளர்ந்துவரும் வரும் தீவிர தமிழ்தேசியம் பேசும் ஒரு இளம் கவிஞர் என அறியப்பட்டவர்.நாய் பார்க்கிற வேலையை கழுதை பார்க்கக் கூடாது என்றொரு பழமொழி உண்டு .அகரமுதல்வன் பார்த்த வேலை அதுதான்.


கவிதைகளை தவிர்த்து சில கதைகளையும் எழுதினார் .அவர் எழுதியது கதைகள் என்பதற்கு பதிலாக கண்மூடித் தனமான பிற்போக்கு தீவிர  தமிழ்தேசியத்தை கண்டிப்பவர்கள் மீது காழ்ப்புணர்வோடு  நடத்தப்பட்ட தாக்குதல்கள் அவை.அதுவரை அகரமுதல்வனின் காழ்ப்புக்களை கதை என்று சொல்லி காவித்திரிந்து கூவிக் கும்மாளமிட்டு மகிழ்ந்த தீவிர தமிழ்த் தேசிய வாதிகள் "சாகாள்"  கதை வெளிவந்ததுமே சட்டென பல்டியடித்து "சாகாள்"  கதைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள் .ஆணாதிக்க வாதி,பெண் போராளிகளை கேவலப் படுத்திய மன நோயாளி என்று திட்டித்தீர்த்து பதிவுகள் போட்டார்கள் .






அப்படி திட்டுமளவுக்கு அந்தக் கதையில் என்னதான் இருக்கின்றது என்று பார்த்தால்  இறுதி யுத்தத்தின்போது புலிப் பெண் போராளி ஒருவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைகிறாள்.அவளை இராணுவம் நிர்வாணமாகக்கி  இருபத்து மூன்று தடவைகள் வன்புணர்வு செய்கிறார்கள்  (சரியாக கணக்கெடுத்திருக்கிறார் )கடைசியில் அவள் புற்றுநோய் வந்து இறந்து போகிறாள்.இந்தக் கதை தேசிய வாதிகளுக்கு பிரச்சனையாக இருந்திருக்காது.ஆனால் கதையின் நாயகிக்கு பெயர் தமிழினியின் சொந்தப் பெயரான சிவகாமி என்று வைத்ததே பிரச்சனைக்கு காரணம்.இங்குதான் தீவிர தமிழ்த் தேசியம் தனது புத்திசாலித் தனத்தை கட்டியது .தமிழ் ஈழ விடுதலையை மட்டுமல்ல தமிழ் கலாச் சாரத்தையும் தாங்களே ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர்கள் என்று நிரூபித்ததோடு.தமிழினியின் புத்தகத்தை எதிர்த்தவர்கள் சாகாள் கதையையும் எதிர்த்து தங்களை நடு நிலை வாதிகளாக்கி கட்டிக் கொண்டார்கள் .


வழக்கம் போலவே இந்தக் கதையும் ஆகா ,ஓகோ ,என்று காவிச் செல்லப் படுமென எதிர்பார்த்திருந்த அகரமுதல்வனுக்கு அதிர்ச்சியாத் தான் இருந்திருக்கும் ..தீவிர தமிழ்த் தேசியத்தை சரியாக கணக்குப் போட தவறியதன் விளைவு. அவர் வீசிய வாள் இரண்டு பக்கமும் கூர் கொண்டது அவரையே பதம் பார்த்து விட்டது.ஆனால் என்னைப் பொறுத்தவரை சாகாள் கதையில் சிவகாமி என்கிற பெயரை நீக்கி விட்டு அபிராமி என்றோ ராமாயி என்றோ போட்டு படித்தால் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பெண் போராளிகளுக்கு நடந்த கொடுமைகளை சொல்லும் ஒரு கதைதான் அது.


படங்களாகவும், வீடியோ கிளிப்புகளாகவும்,நேரடி சாட்சியங்களாகவும்  எவ்வளவோ ஆதாரங்கள் வெளிவந்துள்ளது.அவற்றையெல்லாம் கலாச்சா காவல் என்கிற போர்வையில் மூடி மறைக்கவே விரும்புபவர்கள் ஐ.நா  சபை விசாரணை வேண்டும்,போர் குற்ற விசாரணை வேண்டும் பதிக்கப் பட்ட எங்கள் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று கூவிக் கொண்டு வருடா வருடம் ஜெனீவா விற்கு காவடி எடுக்காமல்.இறுதி யுத்தத்தின்போது .சரணடைந்த அனைவரையும் இலங்கை இராணுவம் வடை பாயாசத்தோடு விருந்து வைத்து வரவேற்று பெண்களை கடவுளாக நினைத்து காலில் விழுந்து வணங்கி பத்திரமாக பல்லாக்கில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள் என்றொரு அறிக்கையை விட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்க போகலாம். எது எப்படியோ ..புத்தகம் வெளி வந்தபோது நல்ல வேலை தமிழினி உயிரோடு இல்லை .இல்லாவிடில் அவரை வசை பாடியே கொன்றிருப்பார்கள் ..

No Comment