Navigation


RSS : Articles / Comments


கடிகாரம் ஓடுமுன் ஓடு

11:51 AM, Posted by sathiri, No Comment

ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்..


ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்கூடு ஒண்டு வரவேற்பறையிலை இருந்தது பாக்கிறதுக்கு ஒரு அலுமாரி மாதிரி இருக்கும். ஒரு ஆள்அளவு உயரம். மேலை மணிக்கூடு கீழை தோசைத்தட்டு மாதிரி ஒரு வட்டம் ஆடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அதுக்கு சாவி குடுக்கவேணும் நான் சின்னவயசிலை ஒரு கதிரை வைச்சு ஓறித்தான் அதுக்கு சாவி குடுக்கிறனான். ஒவ்வொரு மணித்தியாலமும் அது அடிக்கிற சத்தம் கோயில் மணி அடிச்சமாதிரி இருக்கும். அதை முன்னேறி பாச்சல் நடவடிக்கை நேரம் சந்திரிக்கா அனுப்பின குரங்குகள் உடைச்சு போட்டுதுகள் எண்டு அம்மா கவலையோடை சொன்னா.. இஞ்சை வெளிநாட்டிலை பாத்தமெண்டால் கழிவறையிலை குளியலறையிலை படுக்கையறையிலை வரவேற்பறையிலை எல்லா இடமும் மணிக்கூடுதான். பத்தாததுக்கு கைத்தொலைபேசியிலை கணணியிலை பாக்கிற ரிவியிலை எண்டு நேரம் ஓடிக்கொண்டிருக்கும் காத்தாலை அலாரச்சத்தத்தோடை எழும்பி கழிவறைக்கு போறத்திலையிருந்து பல்லுத்தீட்டிறது குளிக்கிறது (இதுகள் செய்யாதவைக்கு பிரச்சனையில்லை ) உடுப்பு போடுறது எண்டு தொடங்கி வேலைக்குப் போய் வந்துஇரவு ரி.வி பாக்கிறது. குடும்ப காரர் எண்டால் பிள்ளையளோடை குடும்பத்தோடை மினக்கெடுறது. ஏன் கணவன் மனைவி உறவு கூட எல்லாத்தையுமே நேரம் பாத்துப் பாத்துத்தான் செய்யவேண்டியிருக்கும்.


ஒரு நாள் இப்பிடித்தான் நான் தண்ணியடிச்சிட்டு நல்லாயிருக்கெண்டு பொரிச்ச மிளகாயை கனக்க அள்ளித் திண்டிட்டன் அடுத்தநாள் காத்தலை கழிவறைக்குள்ளை அஞ்சு நிமிசம் கூடுதலாயிருக்கவேண்டி வந்திட்டு பிறகு அந் அஞ்சு நிமிசத்தை குளிக்கேக்குள்ளை அவசர அவசரமாய் சவுக்காரம் போடாமல் குளிச்சு நிவர்த்தி பண்ணிட்டன். ஜரோப்பாவிலை ஒருநாள் ஞாயிறு மட்டும் அலாரசத்தம் இல்லாமல் நிம்மதியாய் விரும்பின நேரத்திற்கு எழும்பி விரும்பினதை செய்யலாம். அனால் இந்த லண்டனிலை இருக்கிறவையள் போன பிறப்பிலை பாவம் செய்த பிறவியள். அதுகளிற்கு ஞாயிறும் நிம்மதியில்லை கிழைமையிலைஏழுநாளும் ஓட்டம்மதான். இப்பிடித்தான் ஒருக்கால் லண்டனிலை உள்ள என்ரை சினேகிதன் ஒருத்தனுக்கு பிறந்தநாள் அவனுக்கு வாழ்த்தும் சொல்லிட்டு. கொஞ்சம் ஊர்கதையளும் கதைப்பம் எண்டு இரவு போனடிச்சன் . போனை எடுத்தவன் மச்சான் ஓடிக்கொண்டிருக்கிறன் கொஞ்சம் பொறுத்து எடு எண்டான். கார் ஓடிக்கொண்டிருக்கிறான் எண்டு விளங்கிச்சிது. கொஞ்சத்தாலை திருப்ப அடிச்சன் அவனின்ரை மனிசி எடுத்து அவர்இப்பதான் வந்தவர் குளிக்கிறார் கொஞ்சத்தாலை அடியுங்கோ எண்டா. திரும்ப ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு எடுத்தன். அவன் போனை எடுத்து மச்சான் என்ன அலு....வ்......வ்.....வ்...வல் எண்டான். சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எண்டு விளங்கிச்சுது அவசரமில்லை ஆறுதலாய் அடிக்கிறன் எண்டிட்டு நான் நித்திரையாய் போயிட்டன்.

பிறகு அடுத்தநாள் அவனுக்கு வாழ்த்தாவது எஸ். எம். எஸ் அனுப்புவம் எண்டு நினைச்சு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எண்டதை முழுசா எழுத எனக்கு நேரமில்லை.வேலைக்கு போற நேரம் கார் சிவப்பு சிக்னல்லை நிக்கிற நேரமாய் பாத்து அவசரமாய் W...U... H....B.....DAY எண்டு வாழ்த்து சொல்லி ஒரு எஸ் எம்.எஸ் சை போட்டிட்டு வேலைக்குபோயிட்டன் . அதை அவன் வாசிச்சு விளங்கி T.K.S எண்டு பதிலும் போட்டிருந்தான். இது இப்பிடி அண்டாட வாழ்க்கை போய்க்கொண்டிருக்க என்னை தினமும் நித்திரையாலை எழுப்பிற என்ரை அலார மணிக்கூடு ஒருநாள் பழுதாய் போயிட்டுது. பதினைஞ்சு வருசத்துக்கு முதல் பாரிசிலை ஒரு அறையிலை நாலு தனிக்கட்டையள் (பெடியள்) சேந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கேக்குள்ளை வாங்கினது. பிறகு ஒவ்வொருத்தராய் கலியணம் கட்டி தனிக்குடித்தனம் போய் அறையிலை இருந்த ஒவ்வொரு பொருளாய் பாகப் பிரிவினை செய்யேக்குள்ளை நான் இந்த அலார மணிக்கூட்டை தூக்கிக் கொண்டு வந்திட்டன். காரணம் இது நான் தான் தேடி வாங்கினனான். ஓடுற டிக்..டிக்.. சத்தம் கேக்காது மணிக்கூடு ஓடுற சத்தம் கேட்டால் எனக்கு நித்திரை வாராது எரிச்சலதான் வரும் ஆனால் அது அலாரம் அடிக்கிற சத்தம் அந்த ஏரியாவுக்கே கேட்கும். பதினைஞ்சு வருசம் ஓடி ஓய்ந்து போன மணிக்கூட்டை திருத்தலாம் எண்டு நான் கடை தேடி அலைய மனிசி சொல்லிச்சிது உந்த பழசை கொண்டு அலையாதையுங்கே இப்பதானே விதம் விதமாய் புது எலெக்றோனிக் அலாம் மணிக்கூடுகள் வாங்கலாம். சத்தமும் வராது உதை குப்பையிலை எறியுங்கோ நான் புதுசு வாங்கியாறன் எண்டாள்.

பழசுகளை எறியிறதெண்டால் உன்னையும் தான் எறியவேணும் எண்டு முணு முணுத்தபடி கவலையோடை அதை குப்பை வாளிக்குள்ளை போட்டிட்டு நான் மணிக்கூடு வாங்க வெளிக்கிட திரும்பவும் மனிசின்ரை சத்தம் ''எங்கை மணிக்கூடு வாங்கவே போறியள் நீங்கள் போனால் நிண்டு நிதானிச்சு வடிவாய் பாத்து ஒண்டையும் வாங்கமாட்டியள் கையிலை அம்பிட்டதை தூக்கிக் கொண்டு வந்துடுவியள் .பக்கத்திலை சீனா சாமான் கடையொண்டு இருக்கு நான் போய் நல்லதாய் பாத்து வாங்கியாறன்'' எண்டாள். எடியேய் நிண்டு நிதானிச்சு எல்லாத்தையும் செய்யிறதெண்டால் உன்னையுமல்லோ செய்திருக்கமாட்டன் எண்டு சத்தமாவே சொன்னன். மசினி முறைச்சு பாத்திட்டு போயிட்டுது.. போய் சீனாக்கடையிலை எலெக்றோனிக் மணிக்கூடு ஒண்டை வாங்கியந்து தந்திட்டு இந்தாங்கோ எதுவும் உருப்படியாய் செய்யத் தெரியாது நேரத்தை யாவதுஒழுங்கா பிடிச்சு விடுங்கோ என்று,விட்டு போய்விட்டாள் எனக்கென்னவோ அது உள் குத்துமாதிரி தெரிஞ்சது. ஆனாலும் சரி எதையோ நான் ஒழுங்கா பிடிச்சு விடேல்லை போலை கிடக்கு எண்டு நினைச்சபடி பேசாமல் மணிக்கூட்டு பெட்டியை பிரிச்சன் . மணிக்கூடு பாவிப்பது எப்படி எண்டொரு விளக்கக் கடுதாசி இருந்திச்சிது. ஊரிலை முத்தத்திலை விழுகிற நிழலை வைச்சே எத்தனை மணி எண்டு சரியா சொல்லுற எங்களுக்கு இவங்கள் மணிக்கூடு எப்பிடி பாவிக்கிறதெண்டு சொல்லித்தாறாங்கள் எண்டு கொவத்திலை அதை எடுத்து முதல் வேலையா கிழிச்சு குப்பையிலை போட்டிட்டு வந்து மணிக்கூட்டை எடுத்து கறண்டை குடுத்தன். மணிக்கூடு 88 மணி88 நிமிசம் எண்டு காட்டிச்சிது. சீனாக்கடைக்காரன் மனிசியை பேய்க்காட்டிப் போட்டான் எண்டு விளங்கிச்சிது. மனிசிட்டை எடியேய் பாத்தியோ அப்பவும் சொன்னனான் சீனாக்கடைக்காரனிட்டை போகாதையெண்டு அவன் உன்னை சுத்திப்போட்டான் வந்துபார் மணிக்கூடு 88:88 எண்டு காட்டுது எண்டன் . ஜயோ அது எலெக்றோணிக் மணிக்கூடு அப்பிடித்தான் காட்டும் அதுக்குத்தான் நேரத்தை பிடிச்சு விடச்சொன்னனான் எண்டு பதில் வந்தது .

சாதாரணமாய் உலகம் முழுக்க 24 மணித்தியாலமும் 60 நிமிசமும்தானே அதெப்பிடி சீனாக்காரனின்ரை மணிக்கூடு மட்டும் கூடுதலாய் 88.88 நிமிசம் காட்டும் .மணிக்கூடு எப்பிடி பாக்கிறதெண்ட செய்முறை கடிதாசியைவேறை கிழிச்செறிஞ்சு போட்டன் மணிக்கூட்டிலைவேறை நாலைஞ்சு பட்டின் கிடக்கு எப்பிடி நேரம் பிடிக்கிறதெண்டு புலம்பிக்கொண்டிருக்க அதுவரைக்கும் எங்கடை சண்டையை கண்டும் காணாதபடி கணணியிலை விழையாடிக்கொண்டிருந்த மகள் எழும்பி வந்து என்னட்டை மணிக்கூட்டை பிடுங்கி நேரத்தை பிடிச்சு விட்டிட்டு அப்பா காத்தாலை எத்தனை மணிக்கு அலாம் வேணுமெண்டாள். ஆறு மணிக்கெண்டன். அலார சத்தம் மியூசிக் வேணுமா இல்லை றேடியோ ஏதாவது வேணுமா எண்டாள்..ஓ அதெல்லாம் இருக்கா சரி காலங்காத்தாலை எழும்பேக்குள்ளை எங்களை சுத்தி என்ன நடக்கிதெண்டு அறியிறது நல்லது தானே அதாலை 24 மணி நேர செய்தி றேடியோவிலை விடு எண்டன்.எல்லாம் சரி செய்திட்டு இனி இரண்டு பேரும் சத்தம் போடக்கூடாது எண்டிட்டு போயிட்டாள். அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு அலாரம் றேடியோ வேலை செய்தது..துருக்கியில் நிலநடுக்கம்.பலநூறுபேர் பலி ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. தாய்லாந்தில் மழைவெள்ளம். இதுவரை இருநூறுபேர் பலி. ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டு வெடிப்பு முப்பது பேர் பலி இருபது பேர் காயம் எண்டு தொடர .. இதென்ன காலங்காத்தாலை ஒரே இழவு எண்டு றேடியோ மணிக்கூட்டு வயரை இழுத்து பிடிங்கிப் போட்டு வேலைக்கு தயாரானேன். கடைசியாய் ஒரு கேள்வி. சீனாக்காரனின்ரை எலெக்றோணிக் மணிக்கூடு ஏன் அடிக்கடி 88:88 நிமிசம் காட்டுதெண்டு யாருக்காவது தெரியுமோ

No Comment