Navigation


RSS : Articles / Comments


மலரக்கா

6:11 AM, Posted by sathiri, One Comment



இந்தவருடம் கோடை விடுமுறையில் கட்டாயம் பாரிசிற்கு டிஸ்னிலாண்டிற்கு கூட்டிப்போவதாக மகளிற்கு ஊறதியளித்திருந்தேன். பயணத்திற்காண திட்டமிடலுடன் இரயில் தங்குமிட விடுதி பதிவுகள் எல்லாம் செய்தபின்னர் திடீரென கையில் ஒரு சிறிய சத்திர சிகிச்சை செய்யவேண்டிவந்திருந்தது . பாரிசிற்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னரே சத்திர சிகிச்சையை முடித்துக்கொண்டு ஒற்றைக்கையை கழுத்தில் கட்டித் தொங்கவிட்டபடியே பாரிசிற்கு குடும்பமாக பயணமாயிருந்தேன். பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நான் இருக்கும் நகரத்திற்கு அன்றுமாலை திரும்பவேண்டும்.அதற்கு முன்னர் அன்று பாரிசில் கொஞ்சம் கடைத்தெருவில் உலாவியபொழுதுதான் மனைவி என்னிடம். "என்னப்பா எங்கடை இடங்களிலை கோயில்கள் இல்லைத்தானே வந்தஇடத்திலை இஞ்சை ஏதாவது ஒரு கோயிலுக்கும் போயிட்டு போகலாம்" என்றாள்..

எனக்கு கோயில்களில் ஆர்வம் இல்லை. எண்டாலும் மந்திர சொல்லை தட்டமுடியாதுதானே. லாசப்பல் பக்கம் போனால் பழைய நண்பர்கள் சிலரையும் சந்திக்கலாமென நினைத்து லாசப்பலிற்கு அருகில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போகலாமென முடிவெடுத்தேன் . அங்கிருந்த ஒரு கோயிலிற்கு மதியமளவில் போயிருந்தோம். கோயிலில் மதியகாலத்து பூசை ஆரம்பமாகியிருந்தது. மனிசி பூசையில் கலந்துவிட கோயிலின் உள்ளே போய் ஒரு சுற்றி விட்டு நானும் மகளும் கோயில் வெளியே வந்துவிட்டோம்.மகளிற்கும் என்னைப்போலவே கோயில்களில் அதிக ஆர்வமில்லை. வெளியே வந்த நாங்கள் கோயில் வாசற்படியில் அமர்தபடி மகளும் நானும் தொலைபேசியில் கேம் விழையாடத் தொடங்கியிருந்தோம்.அப்பொழுது அவசரமாக வந்த வயதான பெண்ணெருத்தி எங்களை கடக்கும் பெழுது என்னைப்பார்த்து தம்பி பூசை தொடங்கிட்டுது வரேல்லையோ என்றார். ஒரு செக்கன் மட்டுமே அவரை நிமிர்ந்து பார்த்த நான் சிறிய வியாபார புன்னகை ஒன்றை எறிந்துவிட்டு மீண்டும் கேம் விழையாடத் தொடங்கினாலும் அந்த ஒரு செக்கனில் அவரது முகத்தை எனது மூளை ஸ்கான் செய்திருந்தது.மீண்டும் அவரை திரும்பிப்பார்த்தேன் வெள்ளைக்குதிரையின் வாலைப்போல நரைத்திருந்த நீண்ட தலைமுடி கோயிலிற்குள் நுளைந்துவிட்டார்.என் பின் மூளை சூடானது. இவரைத்தெரியும். ஜபோனில் இணைய தொடர்பை ஏற்படுத்தும் போதும் திரையில் சுற்றும் தேடல் வட்டத்தைப்போல எனது முளையிலும் வட்டம் ஓடிக்கொண்டிருந்தது. தெரியும் ..நன்றாகத் தெரியும்..யார்??யார்??..

ஒருநாள் பரிசிலிருந்த எனது சிறுவயது நண்பன் இருள்அழகன் தொலைபேயில் கதைக்கும் பொழுது

டேய் உனக்கு மலரக்காவை தெரியுமல்லோ
ஓ அவாவை மறக்கேலுமோ அவாவுக்கு என்ன
அவா இஞ்சைதான் இருக்கிறா.கோயில்லை கண்டனான் கோயில்லைதானாம் இருக்கிறாவாம்.
கோயில்லைஇருக்கிறாவோ??ஏன் அவாவின்ரை சகோரங்கள் இஞ்சை தானே இருக்கினம்.
ஓமடா அவவின்ரை சகோதரங்கள் மட்டுமில்லை பிள்ளையளும் இஞ்சைதான் ஆனால் அவையள் அண்டுறேல்லையாம்.கோயில்லைதானாம்.

இருக்கலாம்.அவவாயிருக்கலாம்.

வா உள்ளை போவம்...

அப்பா என்னை விழையாடவிடு..

பிறகு விழையாடலாம் வா..

மகளையும் இழுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுளைந்து பக்கவாட்டாக சுவரோடு நின்றபடி கண்களால் துளாவினேன்.
கேம் விழையாட்டை குழப்பிய கோபத்தில் மகள் முறைத்தபடி தரையை பார்த்தபடி நின்றிருந்தாள்.
ஜயர் ஒவ்வொரு தீபமாக சாமிக்கு காட்டிய இன்னமும் சமஸ்கிருதத்திலேயே ஏதோ சொல்லியபடியிருந்தார்.தமிழ்தான் நீச பாசையெண்டால் பிரெஞ்சிலையாவது பூசையை செய்திருக்கலாம்.

கைகூப்பி கண்களை மூடியபடி நின்றிருந்த எனது மனைவிக்கு பக்கத்திலேயே அவரும் நின்றிருந்தார். அவரை கீழிருந்து மேலாக ஆராச்சி செய்துகொண்டிருந்தபொழுது தற்செயலாக திரும்பி எங்களை கவனித்த மனைவி. வந்த இடத்திலும் தன்னை தன்னுடைய கணவன் பத்திரமாக கவனித்தபடி நிற்கிறான் என பரவசமடைந்திருக்கலாம்.சிறிய புன்னகையுடன் மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் இறங்கிவிட்டிருந்தாள்.


பூசை முடிந்து ஜயர் விபூதி குடுத்து முடிந்ததும் அவர் வேகமாக அங்கிருந்த அறை ஒன்றில் நுளைந்து அன்னதானம் வைத்திருந்த அண்டாக்களை திறந்து அதனை பரிமாறத்தயாராகிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அவரை முழுதாகப் பாரக்கமுடிந்தது. ஆனாலும் எனது மூளையில் சுற்றிய தேடும் வளையம் சுற்றி முடிந்திருக்கவில்லை.
பாரிசிற்கு வந்து பலநாளாய் பட்டினி கிடந்தவர்களைப்போல சிலர் முண்டியடித்துக்கொண்டு அங்கிருந்த கடதாசிக்கோப்பைகளை எடுத்தவாறே அன்னதானத்திற்கு ஓடிப்போய் வரிசையில் நின்றனர். வரிசை நகர்ந்துகொண்டிருந்தது.வரிசையில் நின் பெண்ணொருத்தர் என்ன மலர் எப்பிடியிருக்கிறாய்.என்றாதற்கு அவர் புன்னகைத்தபடி ஏதே கடவுள் புண்ணியத்திலை இருக்கிறம்.என்றார்.


அவரேதான்.மலரக்காதான். எனது தேடும் வளையம் நின்றது. கடைசியாய் அவரை பார்த்து எப்படியும் இருபத்தைந்து வருடங்களிற்கு மேல் இருக்கும் ஆனாலும் பழைய அவரது உருவங்கள் எனது மனத்திரையில் மாறி மாறி இறக்கிக்கொண்டிருந்தது. நானும் கையில் ஒரு பிளாஸ்ரிக்கோப்பையை எடுத்தபடி வரிசையில் நகர்ந்தேன்.


மனிசி மகளிடம் அப்பாக்கு ஞானம் கிடைச்சிட்டுதுபோலை என்றாள்.அப்பா இப்பதானே வரமுதல் டிஸ்னிகடையிலை பங்கு ஆட்டிறைச்சிக்கறியோடை சோறு சாப்பிட்டவர்.பிறகேன் கோப்பையோடை வரிசையிலை நிக்கிறார் என யோசித்து தலையை சொறிந்தாள்.
வரிசையில் எனது முறை வந்தது கோப்பையை நீட்டினேன். வெண்பொங்கலை கரண்டியால் அள்ளி அவர் கோப்பையில் வைக்கும்போது "மலரக்கா என்னை ஞாபகம் இருக்கோ" உற்றுப்பார்த்தவர் தெரியேல்லை என்பதற்கு அடையாளமாய் தலையாட்டினார். நான்தான் சிறி.சங்கக்கடை சாமான் துக்கிகொண்டு.........வசனத்தை முடிக்கவிலை.அவர் முகத்தில் சட்டென்று பல மாற்றங்கள்.மகிழ்ச்சியா அழுகையா என்று தெரியவில்லை கண்கள் கலங்கியது.படபடப்பாய்
ஓம்.. ஜயோ உன்னை எத்தினை வருசமாய் தேடினனான்.இரு வாறன் என்றவர் அங்கிருந்த ஒருவரிடம் கரண்டியை கொடுத்துவிட்டு ஒரு ஓரமாய் வந்தவர் சேலைத்தலைப்பால் கண்களை ஒற்றியபடி.எங்கையிருக்கிறாய்? எப்பிடியிருக்கிறாய்?.கலியணம் கட்டிட்டியா?பிள்ளையள் இருக்கா? கேள்விகள் மட்டுமே வந்து கொண்டிருந்தது.
ஓம் கட்டிட்டன் ஒரு மகள் அவையளும் வந்திருக்கினம்.நீங்கள் இஞ்சை இருக்கிறதாய் கேள்விப்பட்டனான் ஆனால் நான் இருக்கிறது வேறை சிற்றியிலை.ஆயிரம் கிலோ மீற்றர் தூரம்.நீங்கள் எப்பிடியிருக்கிறியள்.


என்னத்தை சொல்ல கடவுள் எல்லாத்தையும் தந்தவர் எனக்குத்தான் அதை சரியா பயனபடுத்தத் தெரியேல்லை.இப்ப அனுபவிக்கிறன். அதுதான் கடைசியாய் கடவுளே கதியெண்டு இஞ்சை வந்திட்டன்.வாழ்க்கை ஏதோ போகுது.
பிள்ளையள்??உங்கடை சகோதரங்கள்.?
சகோதரங்கள் முந்தியே கதைக்கிறேல்லை.எனக்கு மூண்டு பிள்ளையள்.இரண்டு பெடியங்கள் சுவிசிலை கட்டிட்டாங்கள். கடைசி மகள் இஞ்சைதான் தங்கச்சியோடை. அதுகளும் என்னோடை கதைக்கிறேல்லை.


நான் கோப்பையோடு வரிசையில் நின்றதன் காரணம் அப்பொழுதுதான் மனிசிக்கும் மகளிற்கும் புரிந்திருக்கவேண்டும். எங்களை நோக்கி வந்தார்கள்.அவர்களை மலரக்காவிற்கு அறிமுகப்படுத்தினேன். மகளை குனிந்து கொஞ்சியவர். உன்ரை கொப்பரின்ரை பூனைக்கண் அப்பிடியே மகளிட்டை இருக்கு என்றவர். உன்னோடை கனக்க கதைக்கவேணும் நேரமிருக்குமோ??

இல்லையக்கா.நாங்கள் இப்ப திரும்ப போறம் உங்கடை கான்போன் நம்பர் இருந்தால் தாங்கோ நான் பிறகு ஆறுதலாய் அடிக்கிறன்.
என்னட்டை கான்போன் இல்லை எனக்கெதுக்கு அதெல்லாம்.உன்ரை வீட்டு நம்பரைத்தா நான் இஞ்சை கோயில்லையிருந்து கதைக்கலாம்.பிறீதான்.
பொக்கற்றினுள் கையை வைத்து பாவித்த ரெயில் றிக்கற்றில் 04.93...என்று தொடங்கி இலக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டு விடைபெற்றோம்.

எங்கள் இரயிலுக்கான நேரமும் மட்டுமட்டாக இருந்ததனால் அவசரமாக ஓடிவந்து எங்கள் ஊரிற்கு செல்லவேண்டிய அதிவேக இரயிலை பிடித்து அமர்ந்துகொண்டோம்.இரயில் வேகமெடுக்கத்தொடங்கியது.பயணக்களைப்பு மனிசியும் மகளும் இருக்கையில் சரிந்துகொண்டனர்.நானும் கண்களை மூடியிருந்தேன் நித்திரை கொள்ளவில்லை.அதிவேக இரயிலின் வேகத்தை விட பலமடங்கு வேகமாக என்நினைவுகள் பின்நோக்கி நகரத்தொடங்கியது........

.சிறிய வயதிலிருந்து நான் அம்மம்மா வீட்டில்தான் தங்கியிருப்பது வழைமை அங்கிருந்துதான் பாடசாலைக்கும் போய்வருவேன்.எனக்கு பதின்நான்கு வயதேயான காலம் .மலரக்கா அம்மம்மா வீட்டிற்கருகில் பின்னால் இருந்த ஒரு ஒழுங்கையில்தான் திருமணமாகி நான்று வருடங்களாககுடியிருந்தார்.பாதி கட்டி முடிக்கப்பட்ட கல்வீடு மேலே கூரை க்கு தகரம் போட்டிருந்தார்கள்.அப்போ அவரிற்கு ஒரு மகனும் இருந்தார் மூன்று வயதிருக்கலாம்.கணவரை மொட்டை மூர்த்தி என்றுதான் எல்லாரும் கூப்பிடுவோம்.ஏன் அப்பிடி கூப்பிடுறனாங்கள் என்று உங்களிற்கு விளக்கமாய் எழுதத் தேவையில்லையெண்டு நினைக்கிறன். மலரக்காவுக்கும் அவருக்கும் குறைஞ்சது பதினைஞ்சு வருச வித்தியசமாவது இருக்கும் அவருக்கு வயசு அதிகம்..சங்கானை முதலாளி ஒருவரிடம் சம்பளத்திற்கு கொழும்பு லொறி ஓடுபவர்.சரியான குடிகாரர்.பெரிய வசதியற்ற குடும்பம்.மலரக்காவை பார்த்தால் அந்தக்காலத்து நடிகை மஞ்சுளாவை பார்த்தமாதிரியே இருக்கும்அவ்வளவு அழகானவர்..நல்ல நீண்ட தலைமுடி இடுப்பிற்கு கீழே ஆடும். பெரும்பாலும் நீண்ட பாவாடை சட்டைதான் போடுவார்.அவரிற்கு பின்னால் விசிலடிக்கும் இளைஞர் கூட்டமும் ஒன்று இருந்தது. என்னை எப்பொழுதாவது வீதியில் பார்த்தால் ஒருபுன்னகையை பரிமாறுவோம்.என்னை விட பத்து வயது மூத்தவர்.இவ்வளவுதான் பதின்நான்கு வயதுவரை எனக்கு தெரிந்த மலரக்கா.
Posted Image

நான் அம்மம்மா வீட்டிலையே அதிகம் வளந்ததாலை சின்ன வயதிலை சரியான சாமி பக்தி சுத்த சைவம். அது மட்டுமில்லை படுக்கப் போக முதல் ஒவ்வொருநாள் இரவும் அம்மம்மா கதையள் சொல்லுவா புராணக்கதையள் அரச கதையள் மட்டுமில்லை இடைக்கிடைபேய்க்கதையளும் சொல்லுவார். அம்மம்மா சொன்ன எல்லா பேய்கதையளிலையும் பேய்கள் புளியமரத்திலைதான் இருந்தது ஏணெண்டுதெரியாது. அதாலை சின்னவயசிலை எனக்கு இரவிலை புளியமரத்துக்கு கீழை போறதெண்டாலே பேய்ப்பயம். மலரக்கா வீட்டுக்கு போற ஒழுங்கையிலையும் பெரியதொரு புளியமரம் நிண்டது.பேய்க்கதை கேட்ட அண்டைக்கு நான் மூத்திரம் பெய்யப் போறதெண்டால் அம்மம்மாவையும் பக்கத்திலை கூட்டிக்கொண்டுதான் போவன்.

இப்படி ஒவ்வொரு நாளும் கதைசொல்லி முடிய இலவச இணைப்பாய் பொய் சொல்ககூடாது எண்டிற குட்டிகதையும் கட்டாயம் இருக்கும்.அதை உங்களிற்கும் சொல்லிவிடுறன். மேல்லோகத்திலை கடவுளிட்டை எங்கடை பெயர் எழுதின பல குடுவைகள் இருக்குமாம். எங்கடை சந்திக்கடை ரவியண்ணை கடையிலை வைச்சிருக்கிற இனிப்புப் போத்தில்கள் மாதிரி.நாங்கள் ஒவ்வொருக்காலும் பொய் சொல்லேக்குள்ளை கடவுள் ஒரு கூழாங்கல்லிலை எங்கடை பெயரை எழுதி அந்தக் குடுவைக்குள்ளை போட்டுவைப்பாராம். நாங்கள் எத்தினை பொய் சொல்லுறமோ அத்தனை கூழாங்கல் சேரந்திருக்குமாம்.கடைசியாய் நாங்கள் கடவுளிட்டை போகேக்குள்ளை அவ்வளவு கல்லையும் கட்டாயம் கடிச்சு தின்னவேணுமாம்.அதுக்கு பிறகுதான் சொர்க்கத்துக்குள்ளை விடுவாராம்.கதை எப்பிடியிருக்கு விசர்க்கதைமாதிரி இருக்கல்லோ? அதாலை கடைசியாய் இந்தக் கதை சொல்லத்தொடங்க நான் நித்திரையாயிடுவன். ஆனாலும் பொய் சொல்லப்பயம் சங்கக்கடை அரிசியிலை வாற சின்னகல்லு சோத்திலை அம்பிட்டாலே பல்லுப்பட்டால் உயிர் போற வலி வலிக்கும்.இதுக்குள்ளை கூழாங்கல்லை எப்பிடி கடிச்சுத்தின்னிறது எண்டபயத்திலையே பொய்சொல்ல வாயெடுக்கும்போதெல்லாம் கடவுள் கையிலை கூழாங்கல்லையெடுக்கிற நினைப்பு வந்திடும்.


நான் கடவுள் பக்தியெண்டதாலை ஒவ்வொருநாளும் பின்னேரப் பூசைக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறது வழக்கம். வயது வளர. நானும் வளர பூசை முடிய கோயிலடியிலை கொஞ்ச நேரம் பள்ளிக்கூட ஊர் சினேகிதங்களோடையும் நிண்டு அரட்டையடிச்சிட்டு போறது வழக்கமாகி போனது.வயதும் பதின்நாலாகிபோனதால் எங்கள் அரட்டைகளும் பள்ளிப்படிப்பை தாண்டி சினிமா அரசியல் ஊர்க்கதையள் ஊரில் உள்ள பெட்டையள் என்று விரிவடைந்தது.அப்பிடித்தான் ஒருநாள் ஒருத்தன் டேய் உங்களுக்கு மலரக்காவை தெரியுமல்லோ அவவுக்கும் எங்கடை சங்கக்கடை மனேச்சருக்கும் அதுவாம்.என்றுதொடங்கினான் ஆரம்பத்தில் எனக்கு அதில் பெரியளவு ஆர்வமில்லாமல் இருந்தாலும் அவன் கதை சொன்ன விதத்திலும் ஏற்கனவே எங்களிற்குள் புன்னகை பரிமாறும் அளவு பழக்கம் இருந்ததாலும் ஆர்வம் தூண்டியது.


அதே நேரம் பள்ளிக்கூட லீவும் வந்துவிட்டதால் மலரக்காவை கண்காணிக்கத்தொடங்கினேன்.அதே நேரம் சங்கக்கடை மனேச்சரை பற்றியும் சொல்ல மறந்திட்டன்.இவர் வேறை ஊர்காரன்.ஆளைப்பாத்தால் அன்றைய நடிகர் சுதாகர் மாதிரி இருப்பார்.முன்பக்கம் நெளிவைத்த தலையிழுப்பு உடுப்பும் அதேமாதிரி யானைக்கால் பெல்பொட்டம் கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டால் பட்டின் தெறிக்கிற மாதிரி இறுக்கமான சேட்டு. சங்கக்கடைக்கு பின்னாலையே ஒரு அறை இருக்கு அதுக்கு பின்பக்கமாய் கதவும் இருக்கு கிழைமைநாள் முழுக்க அங்கைதான் தங்குவார். வெள்ளிக்கிழமை பின்னேரம் சங்கத்தை பூட்டிப்போட்டு ஊருக்கு போயிடுவார்.சங்கக்கடை மத்தியானம்12 மணிக்கு பூட்டி 3 மணிக்குத்தான் திறக்கும்.இவருக்கு மத்தியானச்சாப்பாடு கொண்டுபோய் குடுக்கிறது மலரக்காதான்.நான் தொடர்ந்து துப்பறிஞ்சதிலை கண்டு பிடிச்ச விசயம். பிள்ளையை பக்கத்து வீட்டிலை விட்டிட்டு மனேச்சருக்கு தூக்குச்சட்டியிலை சாப்பாட்டோடை மத்தியானம் கடை பூட்டினால் பிறகு அக்கம் பக்கம் பாத்திட்டு பின்பக்க கதவாலை சங்கக் கடைக்குள்ளை புகுந்தால் ஒரு ஒண்டரை இரண்டு மணிக்கு அரிசி சாமானோடை வெளியிலை வருவா..


அப்பிடித்தான் ஒருநாள் சங்கக்கடையிலிருந்து வாங்கிய சாமான்களை தூக்க முடியாமல் வைத்து வைத்து தூக்கியபடி போய்க்கொண்டிருந்தார் வேகமாய் சைக்கிளில் போய் பக்கத்தில் பிறேக்அடித்த நான் .
மலரக்கா பாரமோ தாங்கோ நான் கொண்டுவந்துதாறன்.

வேண்டாம் எதுக்கு உனக்கு கரைச்சல்

சே ......இதிலையென்ன கரைச்சல் தாங்கோ ...நானே சைக்கிளின் பின் கறியரின் கிளிப்பை இழுத்து அதற்குள் சாமான்பையை திணித்தபடி வீட்டு படலயடியிலை வைச்சுவிடுறன்.என்றபடி சைக்கிளை மிதித்தேன்.

படலையை திறந்து உள்ளை வைச்சுவிடடா.கவனமாய் போ..

மலரக்காவுடன் கதைத்து விட்ட சந்தோசம்.எனக்குள்ளே ஒரு பிலாக்கொட்டைக்குருவி சிறகடித்தது. இண்டைக்குப் பின்னேரம் இதை கோயிலடி சினேதங்களிட்டை சொல்லவேணும்.மலரக்கா வீட்டு படலையை திறந்து சாமான் பையை வைத்துவிட்டு போய்விட்டேன்.
அன்று மாலை கோயிலடி மடத்தடியில் வழைமையான கூட்டம் நான் தான் கீரோ..சாதரணமாய் பள்ளிக்கூட பின்வாங்கில் படக்கதை சொல்லுறதெண்டாலேயே கதை. வசனத்தை இசையோடை சுவாரசியமாய் சொல்லுறனான். மலரக்காவின்ரை கதையை சொல்லறதுக்காக நடிப்பு டைரக்சன் எண்டு மேலும் இரண்டு வேலை கூடிப்போச்சுது. இவை அத்தனையையும் கலந்து கலர்ப்படக் கதையொண்டை எல்லாருக்கும் சொல்லிப்போட்டு படத்தின்ரை கடைசியிலை ஏதாவது மெசேச் சொல்லத்தானே வேணும் அதாலை .இண்டைக்கு மலரக்காவின்ரை சங்கக்கடை சாமானை சைக்கிள்ளை ஏத்தினனான்..நாளைக்கு மலரக்காவை ஏத்துவான் ..நாளையிண்டைக்கு..வசனத்தை முடிக்காமல் எல்லாரையும் பாத்து கண்ணடிச்சன்.

சிலர் தங்கள் வாயை துடைத்தார்கள்.சிலரின் எப்பிடிடா??? எண்டிற பெருமூச்சு என்னில் பட்டுத்தெறித்தது . ஆனால் இருள் அழகன் மட்டும் முகத்தை உம்ம்ம்....எண்டு வைச்சுக்கொண்டு டேய் நீ உன்ரை படத்துக்கு நீ ஒட்டின போஸ்ரர் என்னவோ கிளுகிளுப்பாத்தான் இருக்கிது. ஆனால் போஸ்ரறிலை இருக்கிற கிளுகிளுப்பு கன படங்களிலை இருக்கிறேல்லை.உன்ரை கதையும் அப்பிடித்தான்போகப்போகுது எண்டான். வந்த கோபத்திற்கு அவனை அப்பிடியே ......ஆனாலும் அடக்கிக்கொண்டு டேய் ஒரு நாளைக்கு நடக்கும் பாரடா அண்டைக்கு நீதாண்டா எனக்கு காவல். விரலை சுண்டி சவால் விட்டேன்.

இரண்டு மூண்டு தடைவை சங்கத்து சாமான்களை ஏத்தி இறக்கியாச்சு.சமான் ஏத்தி இறக்கினதையே எத்தனை தரம்தான் கோயிலடியிலை பெடியளிட்டை மாத்தி மாத்தி வித்தியாசமாய் சொல்லமுடியும் அவங்களுக்கும் அது அலுப்படித்தது.இண்டைக்கு மலரக்காவை எப்படியும் சைக்கிளிலை ஏத்திறதெண்டு சவாலேடை முடிவெடுத்தன். நண்பன் இருள் அழகனுக்கும் சொல்லி வைச்சட்டன். எதிர்பாத்தபடியே மலரக்கா சாமான்களோடை வந்துகொண்டிருந்தா அவவிட்டை சாமான் பையை வாங்கி கரியரிலை வைச்சிட்டு மெயின் றோட்டு கடந்து கொஞ்சத்தூரம் சைக்கிளை உருட்டினபடிஒழுங்கை வரை வந்ததும்.

மலரக்கா சரியான வெய்யில் எதுக்கு சும்மா நடந்துகொண்டு.நீங்களும் ஏறுங்கோ கொண்டு போய் விடுறன்.

டேய் என்னையும் வைச்சு உழக்குவியோ..

இதென்ன நீங்கள் பெரிய பாரமே ஏறுங்கோ..

மலரக்காவை ஏத்தியச்சு ஆனாலும் மனதுக்குள்ளை பிள்ளையாரே சினேகிதங்கள் மட்டும் யாராவது காணவேணும் ஆனால் வீட்டுகாரர் யாரும் காணக்கூடாது கண்டால் அவ்வளவுதான்.என்ரை நேத்திக்கடன் வீண்போகேல்லை நான் செற்றப் பண்ணினபடி இருள்அழகன் எதேச்சையாக வருவது போல எதிரே வந்துபோனான்.வீட்டுக்காரர் ஒருத்தரும் காணேல்லை.பெரிய ஒழுங்கை முடிஞ்சு மலரக்கா வீட்டை போற சின்ன கையொழுங்கைக்குள்ளை இறங்கிட்டன்.அது மணல் ஒழுங்கையெண்டபடியாலை சைக்கிளை மிதிக்க கஸ்ரமாயிருந்தது. கஸ்ரமெண்டால் இதிலை இறக்கிவிடடா என்றார்.சே இதென்ன கஸ்ரம் பேசாமல் இருங்கோ என்றபடி சைக்கிளை எழும்பி மிதிக்கத் தொடங்கினேன்.

முதன் முதலாக மலரக்காவுடன் உரசிக்கொண்டேன்.ஏன் முதன் முதலாக ஒரு பெண்ணுடனான உரசலும் அதுதான்.சைக்கிளை மேலும் வேகமாக மிதித்தேன்.என் முகம் அவரது முகத்திற்கு மிக அருகருகாக வந்து போனது.அவரது தலைமுடியின் சண்சில்க் சம்பூ வாசனை எனது நாசியில் இறங்கி உடல் முழுதும் பரவியது.இதயத்துடிப்பு அதிகரித்து வழைமையை விடஅதிகமாய் வியர்த்து என் காற்சட்டையும் விறைத்தது.மலரக்காவை படலையடியில் இறக்கிவிட்டு வேகமாக வயற்பக்கமாக சைக்கிளை மிதித்தேன் அங்கு உயரமாய் வளர்ந்து மஞ்சள் மயமாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த சணல் வயலிற்குள் மறைந்துபோனேன்.

""ஆத்தா நான் வயசுக்கு வந்து விட்டேன்"".............................

அடுத்தடுத்தநாட்களும் நான் மலவரக்காவை சைக்கிளில் ஏற்றிச்செல்வதும். பின்னர் சணலிற்குள் மறைந்து போவதும் கோயிலடியில் கதை சொல்வதுமாய் நன்றாய்தான் போய்க்கொண்டிருந்தது.அண்டைக்கும் அப்பிடித்தான் மலரக்காவை ஏத்திக்கொண்டு மணல் ஒழுங்கையில் எழும்பி எழும்பி சைக்கிளை மிதித்தபடிபோய்கொண்டிருந்போது எதிரே மரியம்மா வந்துகொண்டிருந்தா..மரியம்மா எங்கடை மாட்டிற்கு புல்லும் அம்மம்மாவிற்கு ஊர் கதையளையும் காவி வருபவர். அவரைக்கண்டதுமே எனக்கு வால்கட்டையை புடுங்கிவிட்டதுபோல இருந்தது.எங்களை கடந்த.. மரியம்மா நின்று நிதானித்து திரும்பிப் பார்த்துவிட்டு போய்கொண்டிருந்தார். மலரக்காவை இறக்கிவிட்டு வழைமைபோல் வயற்பக்கம் போகாமல் வேகமாய் அம்மம்மா வீட்டிற்கு சைக்கிளை மிதித்தேன்.நல்லவேளை மரியம்மா அப்பொழுதுதான் வந்துகொண்டிருந்தார்.அவர் வந்து மாட்டிற்கு புல்லுப்போட்டுவிட்டு அம்மம்மாவுடன் அரட்டை தொடங்கும்வரை அவருக்கு பக்திலேயே நிண்டேன்.

ஊர்க்கதைகள் கதைக்கும்போது என்னை அருகில் வைத்திருக்கமாட்டினம்.காரணம் நான் சின்னப்பெடியனாம்.அதாலை கோயில் பூசைக்கு நேரமாச்சு போடா என்று அம்மம்மா என்னை துரத்தினார்.அந்த நேரம் பாத்து கோயில் பூசை மணியும் அடிச்சது.பிள்ளையாரப்பா என்னை கைவிட்டிடாதை என்று நேர்ந்தபடி மரியம்மாவை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்துவிட்டு போய்விட்டேன்.நான் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. என்னைத்தேடி கோயிலடிக்கு வேகமாக வந்த அம்மம்மா என்னட்டை


டேய் அந்தத் தேவடியாள் மலரை சைக்கிள்ளை ஏத்தினனியா?


இல்லையெண்டு சொல்ல வாயெடுத்தாலும் கடவுளும் கூழாங்கல்லும் நினைவிற்கு வந்தது அதே நேரம் கோயிலடியில் நின்றே பொய் சொல்ல முடியவில்லை அதனால்

ஓம் அவா சாமான் பாரத்தோடை வந்தவா அதுதான் ......என்று இழுத்தேன்

அவளிற்கு சாமான் பாரமெண்டால் நீயோ கிடைச்சனி இரு அவளை என்ன செய்யிறன் பார்..

என்றபடி வேகமாக மலரக்கா வீட்டை நோக்கி போனார். கொஞ்சத்தூரம் இடைவெளி விட்டு அம்மமாவிற்கு பின்னாலையே நானும் போனன்.மலரக்காவின்ரை கஸ்ரகாலம் அவா அம்பிட்டிட்டா அவாவின்ரை நீண்ட தலைமுடியை பிடிச்சிழுத்த அம்மம்மா ஏண்டி தோறை உனக்கு சங்கக்கடை மனேச்சர் சந்திக்கடை ரவியர் காணாதெண்டு இப்ப சின்னபபெடியள் தேவைப்படுதோ என்று இரண்மூன்று அடி விழுந்தது.

சங்கக்கடை மனேச்சர் மட்டுமில்லை சந்திக்கடை ரவியரும் எண்டு எனக்கு அப்பதான் தெரிஞ்சது. ஆனாலும் மலரக்கா அடியாதேங்கோ எண்டு அம்மம்மாவிட்டை கெஞ்சினதும் அவாவின்ரை பிள்ளை வீரிட்டு அழுததும் எனக்கு என்னவோ மனசுக்கு கஸ்ரமாத்தான் இருந்தது அதுக்கிடையிலை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து ஆக்கள் வந்து விலக்கு பிடித்து விட்டனர்.?கோபமாய் வந்த அம்மம்மா எனக்கும் மண்டையில் ஓங்கி ஒரு குட்டுப்போட்டு விட்டு இனி அவளோடை கண்டதெண்டு கேள்விப்பட்டன் உன்னை கொம்மானிட்டை கொழும்புக்கு அனுப்பிப்போடுவன் என்று பேசிவிட்டு போய்விட்டார்.


அதன் பின்னர் நானும் மலரக்காவை கனநாளாய் பாக்கேல்லை அவாவின்ரை முகத்தை எப்பிடி பாக்கிறதெண்டும் அந்தரமாய் இருந்தது. பள்ளிக்கூடமும் தொடங்கிட்டதாலை பாக்கிற சந்தர்ப்பமும் கிடைக்கேல்லை.நான் கோயிலடியிலை கதை சொல்லுறதும் நிண்டுபோச்சுது. எண்டாலும் மனசு கேக்கேல்லை சைக்கிளிலை ஏத்தி உரசுறது சங்கக்கடை மனேச்சர் போலை நானும்.... என்கிற கற்பனைகளைத்தாண்டி மலரக்காவை பாக்கவேணும் போல மனது அந்தரித்தது."வேதாளம் திரும்பவும் முருங்கையை அண்ணாந்து பாத்தது."என்ரை சைக்கிள் மலரக்காவின்ரை ஒழுங்கைக்குள்ளை இறங்கியது. பொழுது சாயத்தொடங்கியிருந்ததால் ஒழுங்கையில் யாரும் இல்லை மெதுவாக மலரக்காவின் படலையை துறந்தேன். ஏழுகடல் தாண்டி ஏழுமலைதாண்டி பாதாள உலகத்தின் புதையல் குகையின் கதவைத் திறப்பது போல் மனசில் ஒரே படபடப்பு. என்னைக்கண்டதும் நல்ல பேச்சு விழலாம் இல்லாட்டி சில நேரம் புருசன் காரன் மொட்டை மூத்தி நிண்டால்?? சரி நடக்கிறது நடக்கட்டும் என்று உள்ளே போய் மலரக்கா என்று கூப்பிட்டேன் வாய் மட்டும்தான் அசைந்தது சந்தம் வரவில்லை அடுத்த தரம் தொண்டையை சரிசெய்தபடி

மலரக்கா .....

பிள்ளையை இடுப்பில் தூக்கியபடி வெளியில் வந்தவர்

ஓ நீயா?உனக்கு வீட்டிலை நல்ல அடிவிழுந்திருக்போலை இந்தப்பக்கம் காணேல்லை.

எனக்கொண்டும் பெரிசாய் விழேல்லை திட்டுத்தான் விழுந்தது அது பிரச்சனையில்லை. நீங்கள்தான் பாவம்.எல்லாம் என்னாலைதானே..அந்த லூசு மனிசி அப்பிடி உங்களை அடிக்குமெண்டு நான் நினைக்கேல்லை .என்னிலை கேவமில்லைதானே??

உன்னிலை பிழையில்லை சைக்கிள்ளை ஏறினது என்னிலைதான் பிழை.உன்னிலை ஒரு கோவமும் இல்லை உனக்கு அடிவிழுந்திருக்கும் எண்டு நினைச்சு கவைலைப்பட்னான்.

என்ன இருந்தாலும் சங்கக்கடை மனேச்சர் சந்திக்கடை ரவியரையெல்லாம் இழுத்து அவா உங்களை அப்பிடி திட்டியிருக்கக்கூடாது..

"அந்த மெல்லிய இருளிலும் மலர் வாடியது தெளிவாய் தெரிந்தது"


என்னத்தை சொல்ல என்ரை விதி . என்ரை அப்பரம்மா சரியாய் இருந்திருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்காது.இப்பிடி திட்டு பேச்சு வாங்கவேண்டிய தேவையும் இருந்திருக்காது.எனக்கு அதெல்லாம் இப்ப பழகிட்டு.உன்ரை கொம்மம்மாவும் ஒண்டும் புதிசாய் திட்டேல்லை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

அப்ப அதெல்லாம் உண்மையோ..

உதெல்லாம் உனக்கெதுக்கு நீ சின்னப்பெடியன் ஏதாவது குடிக்கிறியா??

என்னை சின்னப்பெடியன் எண்டது எனக்கு கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கிய இலங்கை வேந்தனின் நிலைமையாய் இருந்தது.ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு

நான் இப்ப சின்னப்பெடியன் இல்லை வயது வந்த பெடியன்தான் எனக்கு சொல்லுங்கோ இல்லாட்டி நான் இந்த இடத்தை விட்டு போகமாட்டன். என்று அடம்பிடித்தாலும் மனதிற்குள் ஒரு பயத்துடன் மூத்தியண்ணை இன்னமும் வரேல்லையோ.எண்டு கேட்டன்.

அந்தாள் வர நாலைஞ்சு நாளாகும்.சில நேரம்தான் வீட்டை வரும் சிலநேரம் வராது.அது இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்.

மூத்தியர் வரமாட்டார் எண்டது நிச்சயம் பண்ணிக்கொண்டு"?? கொஞ்ச தண்ணி தாங்கோ குடிப்பம்" தண்ணி குடிக்கிற சாட்டிலை சைக்கிளை விட்டு இறங்கி திண்ணையிலை இருந்து இண்டைக்கு எப்பிடியும் முழுக்கதையும் கேட்டிட்டுத்தான் போறது.
பிள்ளையை கீழே இறக்கிவிட்டு உள்ளே போய் தண்ணியெடுத்து வந்தார் இருட்டிவிட்டிருந்தது நல்ல நிலவு எறித்துக்கொண்டிருந்ததால் விளக்கு இன்னமும் ஏற்றவில்லை.செம்பில் கொண்டுவந்த தண்ணீரை வாங்கி சில முறடு குடித்துவிட்டு.திண்ணையில் அமர்ந்தபடி சரி கதையை சொல்லுங்கோ எண்டன்.

நீ கதை கேக்காமல் போகமாட்டாய் போலைத்தான் கிடக்கு எண்டவர் எனக்கு பக்கத்திலே திண்ணையில் வந்து அமர்ந்தார்.அந்தத் திண்ணைமட்டும் அலாவுதீனின் பறக்கும் கம்பளமாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்.பிள்ளையை அங்கையே விட்டிட்டு நானும் மலரக்காவும் பறந்து போய்...... சே.. வேண்டாம் மனக்குரங்கை இழுத்து அடக்கிவைத்தேன்.
குடும்பத்திலை நான்தான் மூத்தது எனக்கு பின்னாலை மூண்டு பெட்டையள் எண்டபடியாலை நல்லா ஏ.எல் படிச்சுக்கொண்டிருந்த எனக்கு மச்சான் முறை காரன் .படிப்பும் இல்லை மண்டையிலை மயிரும் இல்லை. லொறி ஓடுறவனை அவரசமாய் கட்டி வைச்சிட்டினம்.அதோடை படிக்கிற கனவெல்லாம் போட்டுது.பிறகுதான் அவரின்ரை பொட்டுக்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் தெரியவந்திச்சுது.அவருக்கு ஏற்கனவே ஆராச்சிக்கட்டைக்கு அங்காலை ஒரு சிங்களத்திக்கு பிள்ளையும் இருக்காம்.அது மட்டுமில்லை கண்ட கண்ட இடங்களிலையெல்லாம் படுத்தெழும்பி நசல் பிடிச்சு தயிர் மருந்து பூசிக்கொண்டு திரிஞ்சதிலை அவளும் கலைச்சு போட்டாளாம் .இதெல்லாம் தெரிஞ்சும் மச்சான் எண்டதுக்காக எங்கடை வீட்டுக்காரர் கட்டி வைச்சிட்டினம். கட்டின புதிசிலை அவரின்ரை வருத்தம் எனக்கும் பிடிச்சு நடராசா பரியாரியிட்டை நாட்டு வைத்தியம் செய்து நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.அதுக்கு பிறகு நானும் பக்கத்திலை அடுக்கிறேல்லை.அடுக்கினாலும் பிரயோசனமில்லை வெறும் புஸ்வாணம்.அதுவும் தண்ணியடிச்சிட்டு வந்து லேகியத்தை விழுங்கிட்டு படுத்திடும். காசும் தாறேல்லை..இப்ப வாறதும் குறைஞ்சிட்டுது.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் கண்ணிலிருந்துமுத்து முத்தாய் விழுந்த துளிகள் மார்புகளிடையே வழிந்தோடி மறைந்து போனது இடையிடையே கையால் துடைத்தபடி தொடர்ந்தார்.நானும் எங்களிற்குள் இருந்த இடைவெளியை குறைத்துக்கொண்டேன்.அவர் தோள்களுடன் எனது தோள் தொட்டுக்கொண்டிருந்தது.


அப்ப மனேச்சரோடை........எ .. ப்.. பி .. டி.. மிண்டி விழுங்கினேன்.

குனிந்து பாவாடையால் முகத்தை துடைத்து மூக்கையும் சீறிவிட்டு தொடர்ந்தார். அந்த நேரத்திலைதான் கூப்பன் சாமான் வாங்கபோற நேரத்திலை மனேச்சரோடை பழக்கம். நான் கலியாணம் செய்ய மனசிலை கற்பனை பண்ணி வைச்சிருந்தவரை போலவே இருந்தார். நல்ல மனுசன் எல்லா உதவியளும் செய்யிறார்.என்ரை குடும்பம் ஓடுறது அவராலைதான்.அதுக்கு உபகாரமா கொடுக்கிறதுக்கு என்னட்டை என்னைத்தவிர வேறையொண்டும் கிடைக்கேல்லைஅவரும் என்னை கட்டச்சொல்லி கேக்கேல்லை நானும் அவர் என்னை கட்டுவாரெண்டு நினைக்கேல்லை ..ஏதோ காலம் ஓடுது..

சந்திக்கடை ரவியர் எண்டது........

அப்பிடியொண்டும் இல்லை அது நான் அவனின்ரை கடைக்கு காய்கறி வாங்க போன இடத்திலை காய் கறியை தந்திட்டு காசு வேண்டாம் கடைக்கு பின்னாலை வரச்சொல்லி கேட்டான் ..நான் கோவத்திலை எல்லாத்தையும் எறிஞ்சு போட்டு வந்திட்டன் .. அதாலை அவனே கதையை கட்டி விட்டிட்டான் ஊரும் நம்பிட்டுது.. என்று சொல்லும்போதே விம்மி வெடித்து கைகளால் கண்களை பொத்தியபடி அழத்தொடங்கிவிட்டார்.

அழாதேங்கோ மலரக்கா. அவர்தலையை நிமித்தி கண்ணீரை துடைத்தேன்.டக்கென்று என்னை கட்டிப்பிடித்தவர் என்ரை தலையை தன் மார்போட இறுக்கிப்பிடிச்சபடி அழுதுகொண்டிருந்தார் சூடான அவரது கண்ணீர் என்தலையில் பாரமாய் விழுந்து கொண்டிருந்தது. திரிசங்கு சொர்க்கம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.அண்டைக்குத்தான் அது என்னவெண்டு தெரிஞ்சுது.விழையாடிக்கொண்டிருந்த குழந்தை அழத்தொடங்கியதால் என்னை விடுவித்தார்...சே .இன்னும் கொஞ்சம் கட்டிப்பிடித்தபடி இருந்திருக்கலாமேயென தோன்றியது.

சரியடா பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கவேணும்.உன்னையும் குழப்பிப் போட்டன் நீ போ இந்தப் பக்கம் இனி வராதை உனக்குத்தான் பிரச்சனை ..போட்டுவா..

அவரிடம் எதுவுமே சொல்லாமல் சைக்கிளை எடுத்து மிதித்தேன் கோயிலில் இரவு ஒன்பது மணி டாண் ..டாண்..என அடிக்கத்தொடங்கியிருந்தது. வழைமையாய் புளியமரத்திற்கு பயப்பிடும் நான் புளியமரம் கடந்ததே தெரியாமல் சைக்கிளில் வயற்கரை பக்கம் பேயிருந்தேன்.சணலாய் சலசலத்த வயல் மரவள்ளியாய் மாறியிருந்தது. மரவள்ளியின் உள்ளே நுளையவில்லை.வரம்பிலை சைக்கிளை போட்டு விட்டு அங்கேயே ஆகாயத்தை பாத்தபடி படுத்திருந்தேன்.என்னை ஒரு வெறும் தகர றம் ஒன்றில் போட்டு யாரே உருட்டிவிட்டது போல இருந்தது.சிந்தனைகள் குழம்பி குழம்பி எங்கொல்லாமோ ஓடியது. ஒரேயொரு தடைவையாவது மலரக்காவினுள் புதைந்து எழுந்தாலே போதுமென்று சுற்றித்திரிந்த என் மனதில் மாற்றங்கள் தொடங்கியிருந்தது. பாவம் மலரக்கா இனி மலரக்காவை பற்றி கோயிலடியிலை கதைக்கிறேல்லை யாராவது கதைச்சாலும் பல்லை உடைக்கவேணும்.

அதே நேரம் மலரக்காவின் மார்பிலேயே காலமெல்லாம் களிக்கவேணும் என்று சிந்தனைகள் சுற்றிக்கொண்டிருக்க.நேரம் போனதே தெரியவில்லை.அங்கிருந்த காவற்கொட்டில் ஒன்றிலிருந்த றேடியோவில் இரவின் மடியில் நிகழ்ச்சி தொடங்கி ""இது மாலை நேரத்து மயக்கம் இது கால தேவனின் கலக்கம்"என்கிற பாடல் காற்றில் கலந்து காதில் புகுந்து கொள்ளத்தான் நேரம் போனதையறிந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி மிதித்தேன்..

எங்கள் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கிவிட்டிருந்தது.கலர் கலராய் டியூப் லைற்றுகள்.நாலு வீதியிலையும் லவுஸ்பீக்கர். வாழை தோரணம் என்று நானும் நண்பர்களுடன் சேர்ந்து அலங்கரித்தோம்.கொடியேத்தத்திற்கு மலரக்கா பட்டுச்சீலை உடுத்தபடி வந்திருந்தார். சீலையோடை நான் அவரை பாத்தது அதுதான் முதல் தடைவை.நல்ல வடியவாயிருந்தார். இன்றுவரை பெண்களிற்கு கவர்ச்சியான உடை எது எண்டு கேட்டால் சேலை தான் எனது முதலாவது தெரிவு. இரண்டாவது ஜுன்ஸ்.ரீசேட்.. கோயிலடியில் எப்படியாவது கதைக்கலாமெண்டால் முடியேல்லை சுத்திவர சொந்தக்காரர்.தெரிஞ்சாக்கள். அவரும் நானும் புன்னகைகளை மட்டும் பரிமாறிக்கொண்டம்.அந்த நேரம்தான் எங்கடை ஊரிலை ஒரு காதல் ஜேடி சாதி மாறி காதலிச்சவை விசுவமடுவுக்கு ஓடிட்டினமாம் எண்டு கதை அடிபட்டது.அந்த நேரம் காதலிச்சு ஊரை விட்டு ஓடுபவை விசுவமடு அக்கிராயன் பக்கம் ஓடிட்டினம் எண்டு கதை அடிபடும் .அந்த ஊர்கள் எங்கை எந்தப்பக்கம் இருக்கொண்டு எனக்குத்தெரியாது.நான் யாழ்ப்பாணம் ரவுணுக்கு இரண்டு மூண்டுதரம் போயிருக்கிறன் அதுக்கங்காலை நாவக்குளி கோப்பாய் பாலத்தை தாண்டினது கிடையாது. திருவிழா நேரம் விசுவமடு அக்கிராயன் எங்கை யிருக்கொண்டு சிலரிட்டை விசாரிச்சன் அவை சொன்ன விபரங்கள் பிடிபடேல்லை.அந்த நேரம் எங்கடை ஊர் காரர் வன்னியிலை தோட்டம் செய்யிறவர் திருவிழாவுக்கு வந்திருந்தார். அவர் வன்னியாலை வரேக்குள்ளை மரைவத்தல் பண்டியிறைச்சி தொங்குமான் இறைச்சியெண்டு கொண்டுவந்து ஊருக்குள்ளை விக்கிறவர்.அவர் என்ரை மாமாவின்ரை சினேதன் அவரை கோயில்லை கண்டு பிடிச்சன் .
அண்ணை நீங்கள் வன்னியிலைதானே காணி செய்யிறியள் அது எங்கை??

அது பூவரசங்குளம்
அது எங்கையிருக்கு
அதுவந்து தம்பி வவுனியா மன்னார் றோட்டிலையிருக்கு
அங்கை எப்பிடி போறது கன தூரமோ??
நீ சண்முகத்தின்ரை மருமேனனல்லோ உனக்கேன் உந்த விபரங்கள்.
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வன்னியிலை காணி செய்யவேணுமெண்டு கேட்டார் அதுதான்....
அவரை என்னட்டை வரச்சொல்லு விளக்கமாய் சொல்லுறன் நீ சின்னப்பெடியன் உனக்கு இதுகள் விளங்காது...
அவரின் சின்னப் பெடியன் எண்ட வசனம் என்னை கோபப்படுத்தியது. ஆனால் எனக்கு வன்னிக்கு போகிற வழிமட்டும் சரியாய் தெரியவேயில்லை.மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லவேணும். அவா எப்பிடியும் ஓமெண்டுவா அவாவை கூட்டிக்கொண்டு எங்கையாவது ஓடிடவேணும்.ஆனால் எங்கையெண்டுறதுதான் தெரியாது.யாழ்ப்பாணத்திலை எங்கையும் ஓடமுடியாது எல்லாப்பக்கமும் சொந்தக்காரர் பிடிச்சிடுவாங்கள்.வன்னிக்கு போகவும் வழிதெரியேல்லை.சினேதங்களிட்டை கேக்கவும் விருப்பம் இல்லை அவங்களுக்கு இதை சொன்னால் பயத்திலை உடைனையே வீட்டிலை சொல்லிடுவாங்கள்.ஒரு வழியும் இல்லையெண்டால் படங்களிலை வாற மாதிரி தற்கொலைதான்.சாகிறதுக்கும் பயமாய்தான் இருந்தது.ஆனால் மலரக்காவை கட்டிப்பிடித்தபடியே தற்கொலை செய்தால் பயம் இருக்காது.ஆனால் தூக்கு மட்டும் போடக்கூடாது கயிறு கழுத்தை இறுக்கிற மாதிரி நினைத்துப்பார்க்கவே கைகால் நடுங்கியது.கிணறு ..வேண்டாம் மூச்சடக்கும் எனக்கு நீந்தத் தெரியும் .அதாலை பொலிடோல்தான்.முடிவுசெய்தேன்.

எதுக்கு உடைனையே தற்கொலை முடிவெல்லாம் முதல்லை மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லுவம். எங்கை ஓடிப்போறதெண்ட ஜடியாவை அவாவிட்டை கேப்பம்.அவாக்கு ஏதும் வழி இருக்கலாம்.பிறகு யோசிக்கலாம்.கொஞ்ச பூவரசம் இலையளை புடுங்கி சுருட்டி கோயில் கேணிசுவரில் சிறி..மலர் என்று எழுதினேன். 5ம் திருவிழாவுக்கிடையிலை எப்பிடியாவது மலரக்காவிட்டை என்ரை காதலை சொல்லுறது அதுக்கிடையிலை ஓடிப்போறதுக்கு கொஞ்ச காசு சேர்க்கிறதெண்டு முடிவெடுத்தன்.வீட்டிலை அம்மம்மா காசு வைக்கிற மல்லிப் பேணி மிளகாய்ப்பேணி எல்லாத்தையும் திறந்து பாத்து எங்கை எவ்வளவு இருக்கெண்டு கணக்கெடுத்து வைச்சிருந்தன்.எல்லாம் கடைசி நாளண்டுதான் எடுக்கவேணும்.மலரக்காவை ஏத்திக்கொண்டு ஓடுறதத்துக்கு என்னட்டை சைக்கிள் நிண்டது.ஆனால் அவாவின்ரை பிள்ளை?? திரும்பவும் பிரச்சனை அவா பிள்ளையை விட்டிட்டு வருவாவோ ??பிள்ளையையும் கொண்டு ஓடுறதெண்டால் இருக்க இடம் எல்லாம் ஒழுங்கு பண்ணிட்டுத்தான் போகவேணும்.ஒரே குழப்பம்.அதுவும் அவாவிட்டையே கேப்பம்.


அண்டைக்குகுமாரசாமியரின்ரை 5ம் திருவிழா வாணவேடிக்கை சின்னமேளம் எண்டு திருவிழா களைகட்டும்.எனக்கு காலையிலை இருந்தே ஒரே பதட்டம் என்ரை நண்பர் எல்லாரோடையும் போய் சும்மா பாத்து கதைச்சன்.பகல் திருவிழாவிலை மலரக்காவை பாத்து இரவு திருவிழாவுக்கு வருவார் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.திருவிழா முடிய கோயில்லையே அன்னதானத்தை சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்து விட்டேன் இரவு திருவிழா தொடங்கியது எல்லாரும் வரத் தொடங்கிச்சினம்.மலரக்கா பிள்ளையோடை வந்திருந்தா.சங்கக்கடை மனேச்சரும் நிண்டார்.அம்மம்மாவும் கோயிலடியிலைதான் நிண்டா.உடைனையே வீட்டை ஓடிப்போய் பேணியளிலை அவா போட்டு வைச்சிருந்த காசு எல்லாத்தையும் எடுத்து எண்ணிப்பாத்தன் ஒரு 150 ருபாய் வரை இருந்தது எடுத்துக்கொண்டுகோயிலடிக்கு வந்திட்டன்.சாமி வீதிஉலா எல்லாம் முடிஞ்சு 9 மணியளவிலை ஊரிலை உள்ள குமருகள் எல்லாம் வீடுகளுக்கு போட்டினம். மலரக்காவும்அவரது பக்கத்து வீட்டுகாரரோடை போய்கொண்டிருந்தா.அவர் வீதிக்கு வந்ததும் ஓடிப்போய் என்ன போறிங்களோ எண்டு கேட்டன். பிள்ளைக்கு சாப்பாடு குடுத்திட்டு பக்கத்து வீட்டிலை படுக்கவைச்சிட்டு சீலையை மாத்திக்கொண்டு திரும்பவும் வில்லுப்பாட்டு பாக்க வருவன் எண்டா. மனேச்சரும் போக வெளிக்கிட்டார் அவர் மலரக்கா வீட்டுப்பக்கம் போகிறாரா என வேவு பார்த்தோன். அவர் கடைப்பக்கமாய் போய்க்கொண்டிருந்தார்.அப்பாடா என்றொரு நிம்மதி பெருமூச்சு ஒண்டை விட்டன்.

மேளச்சமா முடிந்து சின்னமணியின் வில்லுப்பாட்டுத் தொடங்கியிருந்தது நளன் தமயந்தி கதையை நளினத்தோடை சொல்லிக்கொண்டிருந்தார்.மலரக்கா கையில் ரோச்லைற்றோடை பக்கத்து வீட்டுக்கார மனிசியோடை வந்துகொண்டிருந்தார் அவர் வரும்வரை காத்திருந்த நான் அவரிட்டை போய் மெதுவாய் காதிலை "நீங்கள் திரும்ப வீட்டை போகேக்கை தனியா வாங்கோ உங்களிட்டை ஒரு விசயம் சொல்லவேணும்" என்று விட்டு ஓடிவிட்டேன் அவர் என்னையே ஆச்சரியமாய் பார்த்தபடிபோய்விட்டார்.

வில்லுப்பாட்டு முடிந்திருந்தது நேரம் பன்னிரண்டை தொட்டுக்கொண்டிருந்தது. அடுத்ததாய் சின்னமேளம் தொடங்க ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.கோயிலடியில் மிச்சம் மீதமிருந்த பெண்களும் சின்ன பெடியள்கூட வீடுகளிற்கு போகத் தொடங்கியிருந்தனர்.கோயில் நிருவாகத்திலையிருந்த பெருசு ஒண்டு யாராவது சின்னப் பிள்ளையள்.இளம் பெண்கள் இருக்கினமோ எண்டு கவனித்து அவையளை வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.பெரும்பாலும் வயதான ஆண்களும் ஆண்டு அனுபவிச்சு முடிஞ்ச கிழவியளும்தான் மிச்சம்.மலரக்காவும் பக்கத்து வீட்டு மனிசியும் போவதற்கு தயாரானார்கள். மலரக்கா அவரிடம் ஏதோ சொல்லி அனுப்பிவிட்டு வடக்கு வீதியில் என்னைப்பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரருகில் போய்
சைக்கிள்ளை ஏறுங்கோ.

ஆரும் கண்டாலும் எதுக்கு .முதல் வாங்கிக் கட்டினது காணாதோ.
எல்லாரும் சின்னமேளம் பாக்க குந்திக்கொண்டிருக்கினம் கெதியாய் ஏறுங்கோ
ஏதோ கதைக்கவேணும் எண்டுபோட்டு இப்ப சைக்கிள்ளை ஏறச்சொல்லுறாய்.
அதை சொல்லுறதுக்குத்தான் ஏறச்சொல்லுறன்.
அவர் கையை பிடித்து இழுத்து சைக்கிளில் ஏத்தியபடி சைக்கிளை மிதித்தேன். சின்னமேளம் தொடங்கிவிட்டிருந்தது ஒலிபெருக்கியில்....

ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ
ஓ… ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ…ரசிக்கும் சீமானே வா
வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.
ஓ…ரசிக்கும் சீமானே வா


பராசக்தி பாடல் போய்க்கொண்டிருந்தபொழுதே மலரக்கா வீட்டு ஒழுங்கைக்குள் இருந்த புளியமரத்தடிக்கு வந்துவிட்டேன்.ஒரே கும்மிருட்டாய் இருந்தது சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினேம். ஒருவருக்கொருவர் அருகருகே நின்றாலும் நிழலாய்தான் தெரிந்தது.
என்னத்தை சொல்லப்போறாய் அதுவும் புளியமரத்துக்குக் கீழை கும்மிருட்டிலை வைச்சோ உனக்கு சொல்லவேணும்.பாம்பு கீம்பு வந்து கொத்தப் போகுது
என்றபடி மலரக்கா ரோச்வெளிச்சத்தை அடிச்சு நிலத்தை பாத்திட்டு என்னை நோக்கி வெளிச்சத்தை அடிச்சார்.அவர் கையிலிருந்த ரோச்சை பறித்து நிற்பாட்டி விட்டு
மலரக்கா நான் உங்களை லவ் பண்ணுறன்.
கொல்லென்று சிரித் தார் இருட்டில் அவரது முகபாவத்தை பார்க்கமுடியவிலை.
சரி சரி சைக்கிளை எடு போவம்.
மலரக்காவை இறுக்க கட்டிப் பிடித்தேன்
பகிடியில்லை மலரக்கா சத்தியமா. பிள்ளையாரான அம்மாளான உங்களை லவ் பண்ணுறன்.மாட்டன் எண்டு மட்டும் சொல்லிடாதேங்கோ.

என்னுடைய பிடியை பிரித்தெடுத்தவர் அந்த இருட்டிலும் குறி தப்பாமல் என் கன்னத்தில் பளாரெண்டு அவரது கை இறங்கியது.

டேய் உனக்கென்ன விசரா.என்ன கதைக்கிறாய். நான் ஏதோ சின்னப்பெடியன் எண்டு நினைச்சால்.நீ பெரிய...

நான் சின்னப் பெடியன் இல்லை..இல்லை..இல்லை..

சரி ஆனால் நான் அப்பிடியெல்லாம் நினைச்சு உன்னோடை பழகேல்லையடா.

அப்ப அண்டைக்கு உங்கடை கதையெல்லாம் சொன்னது என்னை இறுக்கி கட்டிப்பிடிச்சது.கொஞ்சினது.

எனக்கொரு தம்பி மாதிரி நினைச்சுத்தான்ரா அதெல்லாம் சொன்னான் ஏதோ என்ரை ஏலாத்தன்மை கட்டிப்பிடிச்சன்.

அதெல்லாம் எனக்கு தெரியாது.....

சரி நீ பெரிய பெடியன் .நான் உன்னோடை வாறன்.என்னை வைச்சு காப்பாத்துவியா? உனக்கு வருமானம் இருக்கா வேலை இருக்கா?

என்னட்டை 150 ருபாய் இருக்கு..

டேய் லூசு மாதிரி கதைக்காதை உன்ரை 150 ருபாயிலை ஒருகிழைமை தின்னலாம் பிறகு.என்ன செய்யிறது

எங்கையாவது ஓடிப்போகலாம்.நான் ஏதாவது வேலை செய்வன்.

எங்கை ஓடுறது??உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?? ஓடிப்போற இடத்திலையும் வயித்தை கழுவ நான் ஒரு சங்கக்கடை மனேச்சரைத்தான் பிடிக்கவேணும்.எங்கை ரோச்லைற்ரை கொண்டுவா

அழுதபடி கோவத்தில் ரோச்லைற்றை பத்தைக்குள் வீசி எறிந்துவிட்டு
அதெல்லாம் எனக்குத் தெரியாது.நான் உங்களை லவ் பண்ணுறன். நீங்கள் இல்லையெண்டால் நான் தற்கொலை செய்திடுவன்.

மீண்டும் கட்டிப்பிடிக்கப் போன எனக்கு அதே கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது
சரி வா....

அவரின்ரை வீட்டுக்கு என்ரை கையை பிடிச்சு இழுத்துக்கொண்டு போனார்.

என்ரை சைக்கிள்..

அது கிடக்கட்டும்வா ..

வீட்டிற்கு இழுத்துப் போனவர் முத்தத்தில் கிடந்த சாக்கு கட்டிலில் வேகமாய் என்னை தள்ளி என்ரை சேட்டை இழுத்துக் கழட்டினார்.தன்ரை சட்டையையும் உள் சட்டையையும் கழட்டியவர் என்னுடைய தலையை மார்போடு அணைத்தார்.
இந்தா இதுதானே உனக்கு வேணும்.இதுதான் உன்ரை காதல்.இதுக்குத்தானே தற்கொலை செய்யப் போறன்எண்டனி.

அவரின் வெறும் மார்பு என்முகத்தில் பட்டதும் நெருப்பு சட்டி பட்டது போலை இருந்தது.விம்மி விம்மி அழத்தொடங்கியிருந்தேன். மலரக்காவும் அழுதார்.சில நிமிட அழுகைளின் பின்னர் மெளனம்.

அய்யோ இல்லை மலரக்கா இதுக்காக லவ் பண்ணேல்லை..

அப்ப எதுக்கு??

தெரியேல்லை....

என்னை நெற்றியில் முத்தமிட்டவர்.சாக்குக்கட்டிலில் சரிந்து படுத்தக்கொண்டு என்னையும் இழுத்து அணைத்துக்கொண்டார்.இருவருமே ஆள் பாதி ஆடை பாதி.எனக்குள் எந்த உணர்ச்சியும் இல்லை காற்சட்டை விறைக்கவில்லை...இருவருமே ஆடாமல் அசையாமல் ஆகாயத்தை பார்த்தபடி படுத்திருந்தோம்.சிறிது நேரத்து மொளத்தை அவரே கலைத்தார்.

எனக்கு தெரியும். ..நீ நல்ல பெடியன்.இப்பிடியெல்லாம் குறுக்காலை போற மாதிரி யோசிக்காமல் நல்லபடியாய் படி பெரியாளாய் வா உனக்கு நல்ல மனிசி கிடைப்பா.சரிதானே.

ம்.........

எனி தற்கொலை அது இதெண்டு சொல்லுவியா??

இல்லை...

இப்பவும் என்னை லவ் பண்ணுறியா???

...........................................................................மொளனம்.

அவரும் எழும்பி சட்டையை போட்டபடி
சரி எழும்பு சேட்டை போடு....

ம்......................

புறப்படத்தயாரானேன்.
டேய் கிட்டவா

ம்.........

என்ரை கையை தனது தலையில் எடுத்து வைத்தவர்.போகமுதல் எனக்கு இரண்டு சத்தியம் பண்ணிட்டுபோ..

என்னது.....

உனக்கு உண்மையிலையே என்னிலை அன்பு இருந்தால்.நீ தற்கொலை செய்யிறணெண்டு போகக்கூடாது.அடுத்தது இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது. என்னை எங்கை கண்டாலும் கதைக்கவும்கூடாது நானும் கதைக்கமாட்டன்.சத்தியம் பண்ணு.

சத்தியம்.....

நான் சொன்னதை திருப்பி சொல்லி சத்தியம் பண்ணு....

அவர் சொன்னவைகனை திரும்பச்சொல்லி சத்தியம் பண்ணிவிட்டுபுளியமரத்தடிக்கு வந்து சைக்கிளை எடுத்தன் ஆனாலும் வீட்டை போக மனம் இல்லை அங்கையே புளியமரத்து வேரிலை கொஞ்சநேரம் இருந்தன். புத்தனுக்கு போதி மரம் எண்டு படிச்சிருக்கிறன் எனக்கு புளியமரம்.

அதுக்கு பிறகு அம்மம்மா வீட்டிலை இருக்கப் பிடிக்காமல் வீட்டிற்கே வந்து விட்டிருந்தேன். மலரக்காவை சந்திக்கவேயில்லை. அவரது செய்திகள் மட்டும் கிடைத்துக்கொண்டிருக்கும்.

மொட்டை மூத்தி செத்துப்போச்சாம்...
மனேச்சருக்கும் மலரக்காவுக்கும் ஒரு பிள்ளை பிறந்ததாம்.
மலரக்கவை விட்டிட்டு மனேச்சரும் கலியாணம் கட்டி வேறை ஊருக்கு போட்டாராம்.
மலரக்காவின்ரை சகோதரங்கள் வெளிநாடு வந்து கலியாணம் கட்டிட்டினமாம்.
மலரக்காவின்ரை பிள்ளையளையும் மலரக்காவையும் சகோதரங்கள் வெளிநாட்டுக்கு கூப்பிட்டவையாம் பிள்ளையள் இரண்டும் வந்திட்டுதாம்.மலரக்கா தாய்லாந்திலை பிடிபட்டு ஜெயில்லையாம்.
ஜெர்மனியிலையிருந்து போன ஒரு ஏஜென்சி மலரக்காவை ஜெயில்லை இருந்து வெளியாலை எடுத்து ஜெர்மனிக்கு கொண்டு வந்திட்டாராம்.மலரக்கா இப்ப அந்த ஏஜென்சிகாரனோடைதானாம். ஒருபிள்ளையுமாம்.அவர் ஏற்கனவே கலியாணம் ஆனவராம்.
ஏஜென்சிக்காரன் வேறையொரு பெட்டையோடை தொடர்பாம் அதாலை மலரக்கா பிள்ளையோடை பிரான்சுக்கு வந்திட்டாவாம்
மலரக்காவின்ரை தங்கச்சிக்காரி ஒண்டுக்கு பிள்ளையள் இல்லாததாலை கடைசி பிள்ளையை அவா தத்தெடுத்திட்டாவாம்.மலரக்கா பாரிஸ் 12 லை தனியா றூமெடுத்து தங்கியிருக்கிறாவாம்.
மலரக்காவோடை சகோதரங்கள் பிள்ளையளும் கதைக்கிறேல்லையாம் இப்ப கோயில்லைதானாம் அவாவின்ரை சீவியம் போகுது.


அதிவேக இரயில் ஒரு நிறுத்தத்தில் நின்றது பயணிகள் பலர் ஏறவும் இறங்கவும் செய்தனர். நான் கண்ணை விழித்துப்பார்த்தேன்.மனைவியும் குட்டித் தூக்கதிலிருந்து எழுந்துவிட்டாள்.மகள் நல்ல நித்திரை ..

யாரவா..

எவா கோயில்லை கண்டவாவோ.??

ஓம் அவாதான்..

எங்கடை ஊர்க்காரி..

சொந்தமே??

இல்லை நல்ல பழக்கம்.

கோயில்லைதான் இருக்கிறனெண்டு ஏன் சொன்னவா குடும்பம் பிள்ளையள் இல்லையோ?

புருசன் இல்லை.பிள்ளையள் சகோதரங்கள் இஞ்சைதான் இருக்கினம். ஆனால் ஒருத்தரும் அவாவை அடுக்கிறேல்லை.

பிள்ளையளுமா??

ஓமாம்..

ஏன் அப்பிடி??

அது வந்து..அவாக்கு வாழ்க்கை சரியாய் அமையேல்லை அதாலை அவாவும் ஊரிலை கொஞ்சம் அப்பிடி இப்பிடி..ஆளும் நல்ல வடிவெண்டபடியாலை உண்மையை விட பல பொய்வதந்தியள்தான் உலாவினது.

பாத்தனான் இப்பவே நல்ல வடிவாய்தான் இருக்கிறா.அந்தநேரம் இளமையிலை இன்னும் வடிவாய் இருந்திருப்பா. நீங்களும் பின்னாலை திரிஞ்சனியளோ.

கொஞ்சம் பதறியவனாய் ""சேச்சே அப்பிடியெல்லாம் இல்லை "" கடவுள் உள்ள கல்லிலேயே பெரிய கூழாங்கல்லாய் தேடியெடுத்து எனது பெயரை எழுதி குடுவையில் போடும் சத்தம் கேட்டது.

அப்ப எதுக்கு வீட்டு நம்பரை பிழையாய் எழுதிக்கொடுத்தனீங்கள்.

அன்று நள்ளிரவில் அதே புளியமரத்தின் கீழே வைத்து அதே அறை விழுந்ததுபோல் ஒரு பிரமை.கன்னத்தை மெதுவாய் தடவியபடி. "அதை கவனிச்சிட்டியா.??"

சரி நடந்ததை விளக்கமாய் சொல்லுறன்".அப்ப எனக்கு பதின்நாலு வயசு என்று தொடங்கிய நான். அனைத்தையும் விபரமாய் சொல்லி.அவா கேட்டமாதிரியே இனிமேல் உங்களை எங்கை கண்டாலும் கதைக்கமாட்டன் என்று மலரக்கா தலையில் அடித்து சத்தியம் பண்ணிட்டன்.இண்டைக்கு ஏதோ தற்செயலாய் சந்திச்சிட்டன். சிலநேரம் மலரக்கா என்னட்டை சத்தியம் வாங்கினதையே மறந்திருக்கலாம்.ஆனால் நான் மறக்கேல்லை அதுதான் வீட்டு நம்பரை பிழையாய் எழுதிக்குடுத்தனான். என்ரை சத்தியத்தை நான் காப்பாத்திட்டன்.

ஊகும்....இவர் பெரிய சத்தியவான்.காப்பத்திட்டாராம். இன்னும் இப்பிடி எத்தினை கதை இருக்கோ??..மனைவியிடமிருந்து ஒரு பெருமூச்சு ஒன்று வெளியானது.

நாங்கள் வசிக்கும் நகரத்திற்கு வந்துவிட்டதாக இரயிலில் அறிவித்தபடி வேகம் குறையத் தொடங்கியது. மகளை தட்டிஎழுப்பினேன்.






பயணம் .....................

12:04 PM, Posted by sathiri, No Comment

விமானம் இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு தரையிறங்கவேண்டும் விமானம் மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இறங்கத் தொடங்குகின்றது என்கிற விமானியின் அறிவிப்பை கேட்டதுமே மனைவின் முகம் இறுகிப் போயிருந்தது..மனதிற்குள் ஊரிலுள்ள எல்லா கோயிலிற்கும் நேத்திக்கடன் வைத்திருப்பாள் என எனக்கு தெரியும் .விமனம் தரை தட்டியதும் உங்கடை சினேகிதங்களிற்கொல்லாம் நீங்கள் வாற விபரம் குடுத்திட்டீங்கள்தானே ஒரு பிரச்சனையும் வராதுதானே என்றாள்.ஒரு பிரச்சனையுமில்லை பேசாமல் வா என்று அவளை அதட்டினாலும் எனக்கு ஏ சி குளிரிலும் வியர்ப்பதைப்போல ஒரு உணர்வு இருந்தது. விமானம் நின்றதும்பயணிகள் வெளியேறத் தொடங்கினார்கள். முதல் வகுப்பு பகுதியிலிருந்த எனக்கு தெரிந்த நம்மவர் எனக்காக காத்திருந்தவர் என்னைக் கண்டதும் முதலில் எங்கை இந்தியாவுக்கோ என்று கேட்டு அசடு வழிந்ததை மனதில் வைத்து இந்தத் தடைவை எங்கை மெட்ராசுக்கோ என கேட்காமல் மிக அவதானமாக..அடுத்த மெட்ராஸ் பிளேனுக்கு இன்னும் 6 மணித்தியாலம் காத்திருக்க வேணும் வா ஏதாவது லோஞ்சிலை போய் டீ குடிச்சபடி கதைக்கலாமென்றவரிற்கு. நான் மெட்ராஸ் போகேல்லை இஞ்சை பொம்பேயிலை வெளியாலை போறன் என்றதும். பொம்பேயிலையா??யார் இங்கை இருக்கினம் ஏதும் பிசினஸ்சோ? என்றவர் முடிக்கு முதலேயே ஓமோம் இஞ்சை பால்தக்கரேயை ஒருக்கா சந்திக்கவேணும் திரும்பவும் பிரான்ஸ் வந்ததும் போனடிக்கிறன் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டு குடிவரவு குடியகல்வு(இமிக்கிறேசன்) பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


பால்தக்கரேயா? என்று தலையை சொறிந்தவர் நான் உண்மையிலேயே வெளியேதான் போகிறேனா என எட்டியெட்டிப்பார்த்து உறுதி செய்தவர் தனது விமானம் மாறும் பக்கத்தை தேடிப் போய்விட்டார். இமிக்கிறேசனில் எனது முறை வந்தது நான் எனது மற்றும் மனைவியின் கடவுச்சீட்டுக்களை அதிகாரியிடம் நீட்டினேன். எனது கடவுச்சீட்டை பிரித்து விசாவினைப்பார்த்தவர் கடவுச்சீட்டை கணணிஇயந்திரத்தில் ஒரு இழுப்பு இழுத்து பார்த்துவிட்டு வெளியேறும் சீலை எடுத்து ஒரு குத்துக் குத்தினார் அப்பொழுது மனைவியை லேசாய் திரும்பிப் பார்த்தேன் அப்பொழுழுதான் அவள் கண்களில் கொஞ்சம் மகிழ்ச்சி இழையோடியது.அடுத்ததாய் மனைவியின் கடவுச்சீட்டை பிரித்தவர் முன்னும் பின்னுமாய் பிரட்டினார் மனைவியையும் கடவுச்சீட்டையும் மாறிமாறிப்பார்த்தார்.பின்னர் எங்கே பழைய பாஸ்போட் என்றார். பழைய பாஸ்போட் பிரான்சில். கொண்டுவரவில்லை என நான் பதில் சொன்னதுமே மனைவி முந்திக்கொண்டு அது முடிந்ததால்தான் பிரான்ஸ் இந்திய தூதரகத்தில புதிதாய் எடுத்தோம் என்றாள். கடுப்பான அதிகாரி அது எனக்கு தெரியும் அதுதான் பழையதை கேக்கிறேன் என தொடங்கியவர் அதுவரை புழக்கத்தில் இருந்த ஆங்கிலம் இருவரிடமும் கிந்திக்கு தாவியது. எனக்கு பாதி புரிந்ததும் புரியாமலும் போகவே அப்பாடா நம்ம பிரச்சனை முடிஞ்சுது நான் ஒரு ஓரமாய் நிக்கலாமென ஒதுங்கிக்கொண்டாலும் .என்னைத்தான் ஏதாவது நோண்டுவார்கள் என நினைத்துப்போனால் மனைவியை போட்டு நோண்டிக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாகவும் இருந்தது. மனைவிக்கும் அவரிற்குமான சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர்.மனைவியின் கடவுச்சீட்டிலும் சீலை ஓங்கி ஒரு குத்தி அனுப்பிவிட்டார்.

வெளியே வந்ததும் விமான நிலைய வாசலில் பெரிய மண்மூடைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பரண்களில் இந்திய இராணுவத்தினர் காவலில் இருந்தனர். இலங்கையில் இந்தியப்படை காலத்தில் எஸ்.எல். ஆர். மற்றும் எஸ்.எம்.ஜி துப்பாக்கிகளுடன் மட்டுமே பார்த்துப்பழக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கைகளில் ஏ.கே m s. T 56 தூக்கியபடி அங்குமிங்குபும் திரிந்தனர். ஆனால் வெளியில் காவல்த்துறையினரின் கைகளில் இன்னமும் மூங்கில் கொட்டான்களுடன்தான் திரிகின்றார்கள். வெளியே வந்ததும் வரவேற்பு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றிருந்தார்கள்.பாரிசில் சைபர் பாகை குளிரில் புறப்பட்ட எனக்கு 33 பாகை வெப்பம் முகத்திலறைந்து வரவேற்றது. விமான நிலையத்தில் எங்களை வரவேற்பதற்காக மனைவியின் தம்பியும் எனது நண்பன் டோனியலும்(டானியல்)வந்திருந்தார்கள்.அங்கிருந்த கூட்டத்தில் அவர்களை தேடி கண்டு பிடிப்பதே சிரமமாக இருந்த. அங்குமிங்கும் மிலாந்தியபடி நின்ற என்னை பார்த்து சியாம் என கத்தியபடியே பூங்கொத்துடன் ஒடிவந்த டோனியல் மனைவியின் கையில் பூங்கொத்தினை திணித்துவிட்டு என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டான். ஒரு சில செக்கன் மௌனம் மட்டும் பேசியது எங்களை விடுவித்துக்கொண்டு ஒருவரையொருவர் நேராக பார்த்போது எங்கள் இருவரின் கண்களுமே கலங்கியிருந்தது.

டோனியலால் அடக்கமுடியவில்லை அழுதேவிட்டான் அவனை தட்டி தேற்றியபடி மனைவியின் சகோதரரையும் தேடிப்பிடித்தோம். அங்கேயும் சில நிமிட பாசபரிமாற்றங்கள் முடிந்தபின்னர் ஒரு வாடைகைக் காரில் ஏறினோம்.கார் நகரத் தொடங்கியது .ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று சொல்லப்படும் தாராவிப் பகுதியில்தான் எனது நண்பன் குடியிருந்தான். எனக்காக அந்தப் பகுதியிலேயே ஒரு விடுதியை பதிவு செய்து வைத்திருந்தான். விடுதி நோக்கி போய்கொண்டிருக்கும் போதே டோனியலின் பேச்சு முழுதுமே நடந்து முடிந்த இறுதி யுத்தம் பற்றியதாகவேயிருந்தது.இடையிடை எல்லமே வீணாய் போச்சுதே என்று சொல்லிக்கொண்டே வந்தான். நானும் வெளியால் நோட்டம் விட்டபடியே அவனிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். மும்பை வெகுவாகவே மாறி விட்டிருந்தது அதிவேக வீதிகள் ..அகலப்படுத்தப்பட்ட சாலைகள் கட்டிடங்கள் என முன்னேறியிருந்தாலும் அதிகமான வாகனங்கள் புழுதி என்றும் முன்னேறியிருந்தது. நாங்கள் விடுதியயை வந்தடைந்ததும் மனைவியும் அவளது சகோதரரையும் விடுதியில் தங்கவைத்துவிட்டு நான் டோனியலுடன் அருகேயிருந்த அவனது அறைக்கு சென்றேன். குளவிக்கூடுகள் போல் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கள் நாற்றமெடுத்த சாக்கடை வாசனை குறுகலான பாதை தாண்டி அவனது அறைக்குள் நுளையும் போது பார்த்துவா தலையில் அடிபடப்போகுது என்றான்.

குனிந்து உள்ளே நுளைந்தேன். ஒரு பிளாஸ்ரிக் பாயை விரித்துவிட்டு உக்காரு என்றவன் ஒரு துணிப்பையிலிருந்து இரண்டு பியரை எடுத்து வாயால் கடித்து துறந்தபடி கிளாஸ் வேணுமா என்றான்.வேண்டாமென சொல்லி ஒரு போத்தலை வாங்கிய நான் அறையினை ஒருதடைவை மேயந்தேன்.ஒரு 3 மீற்றர் நீளம் இரண்டு மீற்றர் அகலம் மட்டுமே கொண்டதொரு அறை டோனியலும் அவனது நண்பனும் குடியிருந்தனர் ஒரு சிறிய தொலைக்காட்சிப்பெட்டி எந்தத் தளபாடங்களும் கிடையாது சுவரில் ஒரு கலண்டல் அதில் சிரித்தபடி ஜஸ்வர்யாராய். சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டு உடுப்புப் பெட்டிகள் இவ்வளவுதான். இந்தப் பகுதிகள் எனக்கு ஏற்கனவே பழகியிருந்தாலும் சுத்தமாக இருந்த ஜரோப்பாவில் நீண்டகாலம் இருந்துவிட்டு சாக்கடை நாத்தமும் அழுக்கான ஒரு இடத்தில் நுளையும் போது கொஞ்சம் சங்கடமாகத்தானிருந்தது.அதனை நண்பனிடம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அங்கிருந்து வெளியேறவேண்டும் போல இருந்தது.வாயேன் முன்னையை போல கடற்கரையில் போயிருந்து பியரடிக்கலாமென்றேன். கடற்கரை முன்னையை போல இல்லடா. அந்த அட்டாக்கிற்கு பிறகு (மும்பைத்தாக்குதல்)இரவிலை சரியான கெடுபிடி கண்டபாட்டிற்கு போலிஸ்காரன் அடிப்பான் இரவு நேரத்திலை கடற்கரையோரமா ஒதுங்கிற ஜோடிகளை கூட போலிஸ் விட்டுவைக்கிறதில்லை.நீயும் வெளிநாட்டிலையிருந்துவந்து அடிவாங்கப் போறியா என்றான்.

போலிசிடம் அடிவாங்கிறதை விட இந்த நாத்தமே பறவாயில்லை என்று தோன்றியது. பியரை உறிஞ்சினேன். என்னடா இப்பிடியாயிட்டுதே என்கிற டோனியலின் புலம்பலை தவிர்ப்பதற்காக பொம்பே இப்ப எப்பிடி என்று தொடக்கினேன். பொம்பே இப்பொழுது கொலைகள் கொள்ளைகள் குறைந்திருக்கிறது. ஆனாலும் தாதா கும்பல்களின் கள்ள வியாபாரங்கள் தொடர்ந்து நடக்கிறது.அவர்களிற்குள் மோதல்கள் குறைந்துள்ளது.கலவரங்களை தொடர்ந்து பெரும்பாலான முஸ்லிம்கள் பொம்பேயை விட்டு வெளியிடங்களிற்கு சென்றுவிட்டார்கள்.என்று மும்பைபையை பற்றி பேசினாலும் அடிக்கடி முள்ளிவாய்க்காலிற்கும் போய் வந்தோம் நேரம் அதிகாலை 5 மணியாகிவிட்டிருந்தது என்னை விடுதிவரை கொண்டு வந்து விட்டவன் மறுநாள் சந்திப்பாதாக விடைபெற்றான்.
இந்த இந்தியப் பயணத்தில் நான் பல நண்பர்களையும் சந்தித்திருந்தாலும் எமக்கு ஒரு தேசம் தேவை என்பதற்காக தங்கள் வாழ்வு முழுவதையுமே அர்ப்பணித்த மூன்று முக்கியமான நண்பர்களை பற்றி இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த மூன்று பேரில் முதலாவதாக நான் இப்பொழுது சந்தித்திருப்பவன்தான் டோனியல் இவனைப்பற்றி பயணத்தில்...................

பயணம் .....................

1:59 PM, Posted by sathiri, No Comment

பயணம் .....................

பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந்தவர்கள எமக்காகவே வாழ்ந்தவர்கள்;. அவர்கள் அனைவரும் முள்ளிவாயக்கால் முடிவின் பின்னர் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்து போயிருந்தார்கள் எனவே அவர்களனைவரையும் மீண்டும் சந்தித்து கதைத்து இனி தமிழனால் ஆயுதப் போர் சாத்தியமாகாது அடுத்தது பொருளாதாரப்போர்தான் தமிழனை காப்பாற்றும் என்பதால் இதுவரை ஆயுதப் போரிற்கு உதவியவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் பொருளாதாரப் போரிற்கு உதவ வேண்டும் எனக் கேட்டு அடுத்தகட்டமாக அவர்களது ஆற்றல் அறிவு பொருளாதரவளம் என்பவற்றை மீண்டும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தற்கு உதவ வழிவகை செய்வதே எனது நோக்கமாக இருந்தது

எயார் பிரான்ஸ் விமானத்தில் நான் வசிக்கும் நகரத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த விமானத்தில் நேராக மும்பை செல்லவேண்டும் அதன்படி பாரிசில் மும்பைக்கான விமானத்தில் ஏறியதும் பிரெஞ்சுக்கார விமானப்பாணிப்பெண்ணின் என்னைப்பார்த்து நமஸ்த்தே என்றாள் நான் சிரித்தபடி பிரெஞ்சில் ( bonjour )என்றதும் சிரித்தபடி அவளும் பதிலுக்கு bonjour சொன்னாள்.விமானத்தில் உள்ளே முதல்வகுப்பு பகுதியை கடத்து போகும்பொழுது நோட்டம்விட்டேன். பத்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் வெள்ளையர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் முதல் வகுப்பு பகுதி இந்தியர்களால் நிரம்பியிருந்து ஒருசில வெள்ளைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிவருகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் என மனதில் நினைத்தபடி நடந்துகொண்டிருந்தபொழுது எனக்குத்தெரிந்த நம்மவரும் ஒருத்தர் அங்கு அமர்ந்திருந்தார்.

அவரும் ஒரு குட்டித் தொழிலதிபர்தான். என்னைக்கண்டதும் கையசைத்து ஆ....எப்பிடி சுகம் எங்கை இந்தியாவுக்கோ?? எண்டொரு கேணைத்தனமான கேள்வியையும் கேட்டார். இல்லை இடையிலை டுபாயை கடக்கேக்குள்ளை குதிக்கலாமெண்டிருக்கிறன் என்றேன். அசடுவழிந்தவராய் உனக்கு எப்பவும் நக்கல் சரி சீற்நம்பர் என்ன என்றார். எப்பவும் போலை கடைசி வாங்குதான் சரி இடத்தை தேடிப்பிடிச்சிட்டு ஆறுதலாய் வாறன் என்படி முன்னேறினேன்;.அதற்கு மேலும் அங்கு நின்றால் எனக்கு பின்னால் நிற்பவர்கள் என்னை ஏறிமிதித்தபடி போய்விடுவார்கள். எனது இருக்கையை தேடிப்பிடித்து கைப்பையை மேலே வைத்துவிட்டு அமர்ந்ததும் பக்கத்தில் இருந்த கொஞ்சம் நடுத்தர வயதான பிரெஞ்சு காரசோடியை பார்த்து சிறிய புன்னகையுடன் மரியாதை வணக்கம் ஒன்றை வைத்தேன். பதில் வணக்கம் சொன்வர்கள் உடைனேயே நீங்கள் இந்தியரா எந்த பகுதி எந்தமொழி என்று விசாரணையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள்

இப்படியான கேள்விகள் நீண்டதூர விமான 'இரயில் பயணங்களில் நேரத்தினை போக்கடிப்பதற்காக ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கேட்பது ஒன்றும் புதிதானதல்ல ஆனால் எனக்கு இந்தக் கேள்வி முதல் தடைவையாக மனதில் எரிச்லை தந்தது. ஏனெனில் முன்பெல்லாம் இப்படியான கேள்விகளை யாராவது கேட்டால் அவர்களிற்கு நான் இந்தியர் அல்ல இலங்கைத் தீவில் வடபகுதியை சேர்ந்த தமிழர் எனத் தொடங்கி எமது போராட்டம் பற்றியதொரு சிறு விளக்கத்தையும் கொடுத்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். வென்றுகொண்டிருக்கின்றோம் விரைவில் வெற்றி பெற்று சுதந்திர நாடு அமைத்துவிடுவோம் என நம்பிக்கையுடன் சொல்லி முடிப்பேன் அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர்களும் உங்களிற்கு சுதந்திர நாடு கிடைக்க வாழ்த்துக்கள் என வாழ்த்திப் போவார்கள். ஆனால் இந்தமுறை கேள்வி கேட்டவரிற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபொழுதுதான் எரிச்சல் வந்தது ஆனாலும் வேண்டா வெறுப்பாய் பிரெஞ்சுக்காரன் என்றேன். நான் கொடுத்த பதில் அவன் காதிற்குள் நுளையமுன்னரேயே ஓ நல்லது அப்படியானால் உனது வேர் என்ன? இந்தியாவா? என்றான்.மீண்டும் எரிச்சல்.....

நான் மரம் இல்லை வேர் வைப்பதற்கு.. மனிதன் இந்தா பாக்கிறியா என்று எழும்பி என் பின்பக்கத்தை காட்டி பதில் கொடுக்கலாமா என யோசித்தாலும்.அறிந்துகொள்ள ஆவலில்தானே கேட்கிறான் அதுவும் பத்து மணிநேரம் பக்கத்தில் கூடவே வரப்போகிறவன் எதுக்கு பகைத்தக்கொள்வான் என நினைத்து எனது வேர்கள் இலங்கைத்தீவில் இருக்கிறது என்றேன்.


அவரும் ஓகோ சிறிலங்காவா? நான் பலதடைவை பயணம் செய்திருக்கிறேன் அழகான நாடு ஆனால் நான் அங்கு நான் சென்ற காலங்களில் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருந்தது அதனதல் சிறீலங்கவின் எல்லா பகுதிகளிற்கும் போக முடிந்திருக்கவில்லை ஆனால் தற்சமயம் உள்நாட்டு போரிற்கான தீவிரவாதக்குழு அழிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாமே இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளிற்கும் போகலாமென நினைக்கிறேன். அங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது தமூழ்(தமிழ்) என்கிற தரப்பு அவர்கள் வட கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். மற்றையவர்கள் சிங்களே(சிங்களவர்) நான் இவர்களுடன் தான் அதிகம் பழகியிருந்தேன் மிகவும் நல்லவர்கள் அன்பானவர்கள். கண்டி நுவரெலியா அழகான இடங்கள் நீ சிங்களேயா என்றார்... இல்லை நான் தமூழ் வடபகுதியை சேர்ந்தவன். இதுவரை நீங்கள் சொன்ன தீவிரவாத குழுவின் பலஆண்டுகால செயற்பாட்டாளன் என்றுவிட்டு எனக்கு முன்னால் இருந்த திரைத்தொடுகை தொலைக்காட்சியை தட்டத்தொடங்கினேன்.

என்னை ஆச்சரியமாக தலையை திருப்பிப் பார்த்தவாறு நீங்கள் தமிழ் புலியில் உறுப்பிராக இருந்தவரா என்றபடி அவசரமாக அவன் தனது கைப்பையை திறந்து ஒரு அடையாள அட்டையை எடுத்தபடி நான் வடக்கின் குரல்( la voix du nord )என்கிற பத்திரிகையில் ஆசிரியராகவிருக்கிறேன் . அடையாள அட்டையை காட்டியபின்னர் உங்கள் அமைப்பினை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ஏனெனில் நான் அறிந்தவற்றைவிட நீங்கள் சொல்வது உங்கள் பக்கத்து உண்மைத்தன்மையாக இருக்குமல்லவா என்றான். அவனிற்கு பதிலாக நானும் நீயென்ன பெரிய புடலங்காய் பத்திரிகையாளன் நானும்தான் பத்திரிகையாளன் என மனதில் நினைத்தபடி எனது எல்லைகளற்ற பத்திரிகையார் அமைப்பின் பதிவு அடையாள அட்டையை தூக்கி காட்டி நானும்தான் என்றேன். உடைனேயே மகிழ்ச்சியடைந்தவனாய் எனது கைகளை தானாகவே பிடித்து குலுக்கியபடி இந்தப் பயணம் எதிர்பாராத இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக மகிழ்ச்சியை தருகிறது போராடிக்கொண்டிருந்தவர்கள் தரப்பில் எவரையும் எனக்கு சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை பாரிசில் நிறைய தமிழர்கள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் யுத்தத்தின்போது பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்திகளும் கிடைத்திருந்தது . உங்களிற்கு அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கலாம் எங்கே சொல்லுங்கள் என்றான் .

அதுவரை அவனது பேச்சினை எரிச்சலாகவும் அவனை ஏளனமாகவும் பார்த்த எனக்குள்ளும் ஒரு மாற்றம் வந்தது அதுவரை அவன் என்னை நீங்கள் என்று மரியாதையாய் அழைத்த பொழுதுகளிலெல்லாம் நான் ஒருமையில் அவனை நீயென்றே பேசிக்கொண்டிருந்த தால்.நான் அவனைப்பார்த்து இதுவரை நான் பேசியதில் உங்களிற்கு ஏதாவது சங்கடமேற்பட்டிருந்தால் மன்னிக்கவும் என்றபடி எமது போராட்டம் பற்றியதொரு நீண்ட விளக்கத்தினை ஆரம்பித்தேன்


முன்பெல்லாம் பயணங்களின் பொழுது எமது போராட்டம் பற்றி பதினைந்தே நிமிடத்தில் கொடுத்த விளக்கத்தினை தற்சமயம் இவரிற்கு ஒண்டரை மணித்தியாலத்திற்கு மேலாக கொடுத்தபின்னர் நாங்கள் தோற்றுவிட்டோம் உரிமைக்காக போராட தொடங்கியவர்கள் இன்று உணவிற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் அதில் எமது தவறுகளும் உண்டு சர்வதேசத்தின் தவறுகளும் உண்டு எங்களிடம் எண்ணெய் வளம் இருந்திருந்தால் இன்று நேட்டோ படைகள் எமது நிலத்தை பாதுகாத்திருக்கும். என்று முடித்தேன்;. அதுவரை எனது விளக்கத்தினை கேட்டவர் ஒரு பெரு மூச்சுடன் தனது இருக்கையை சரித்து அமர்ந்தவராய் உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது அது சரியாக எம்மிடம் எடுத்துவரப்படவில்லை அதே நேரம் உங்கள் அமைப்பு தற்கொலைத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது நடத்தாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பிரதிநிதிகளை தற்கொலை தாக்குதல் மூலம் கொலைகள் செய்ததும் அதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் பெரும் குற்றமாகத்தான் நாங்கள் பாரக்கிறோம் என்றார்...

அதைதான் நானும் சொன்னேன் எமது பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றது. ஆனால் பொதுமக்களை இலங்கையரசும்தானே கொன்றது அது தவறில்லையா என்றேன்.அதுமட்டுமல்ல பிரெஞ்சு புரட்சின் போது லியோன் நகரத்தில் மட்டும் அரசு சார்ந்தவர்களின் நாற்பதாயிரம் பேரின் தலைகள் புரட்சியாளர்களால் வெட்டப்படவில்லையா ? அது கொலைகள் இல்லையா என்றேன்..அவர் அமைதியாக உங்கள் நாட்டில் நடந்தது மக்கள் புரட்சியா?? இல்லைத்தானே ஏனெனில் நானும் ஒரு பத்திரிகையாளன் உங்கள் தேசத்தில் தமிழ் எத்தனை சதவிகிதம் அங்கு எத்தனை சதவிகிதம்பேர் போராடினார்கள்என்கிற அண்ணளவான விபரங்களின் தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும் என்றார்.அதற்கான பதில் என்டம் இருக்கவில்லை ஏனெனில் எனக்கே தெரியும் எமது சனத்தொகையில் குறைந்தது வட கிழக்கு 35 இலட்ச்சத்தில் வெறும் பத்து சத வீதத்தினர்கூட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. வன்னியில் கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே யாழில் புதுவருட கொண்டாட்டமும் நல்லுரில் திருவிழாவும் கொண்டாடியவர்கள் நாங்கள். என்னிடம் பதில் இல்லை எனவே அவரிடம் எனக்கு நித்திரை வருகிறது இரவு வணக்கங்கள் என சொல்லிவிட்டு எனது இருக்கையை பின்பக்கமாக சரித்தபடி படுத்துக்கொண்டேன்....

பயணம் தொடரும்...................................

மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும்.

4:17 AM, Posted by sathiri, 3 Comments


மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும்.

இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள். இராணுவ முகாம்களினுள் புகுந்து வேவுபார்த்தார்கள். கடலிலும் தரையிலும் சமர்கள் செய்தார்கள். இப்படி எதிர்மறையானதொரு மாற்றத்தினை கொண்டிருந்தார்கள். சமூகத்தில் ஒரு ஆணை எதிர்த்து பெண் கதைத்தாலே அவளை அடங்காப்பிடாரி என்றும்.உடைகளில் மாற்றங்களை கொண்டிருந்தாலே அர்த்தங்கள் சொல்லமுடியாத பல பட்டங்களை அள்ளி வழங்கும் தமிழ் சமூகம் பின்னர் சமராடிய அதே பெண்களை அணைத்து ஆனந்தக்கூத்தாடி அவர்களை ஆயுதம் தரித்த பெண்தெய்வங்களான துர்க்கை காளிமாதா என்று போற்றி கொண்டாடியது.

பெண்கள் மீதான பார்வையே தனிமதிப்பாகிப்போனது.அவர்களின் வீரக்கதைகள் விதவிதமாகப் பேசப்பட்டது. ஆனால் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்டு ஆயுதப்போரும் முடிவிற்கு வந்தபின்னர். ஆயுதங்களற்ற அதே துர்(கா);கைகளும் காளிகளும் அதே சமூகத்தால் தெரு நாயினும் விடகேவலமாய் பாரக்கப்படுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அவர்கள் போற்றப்படுவதில்லை. கொண்டாடப்படுவதில்லை. எங்களை போற்றவேண்டாம். தூற்றாமல் இருந்தாலே போதும் என்று மனதினுள் அழுகின்றார்கள் முன்னைநாள் பெண்போராளிகள்.இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து விசாரணைகள் சித்திரவதைகள் மனஉழைச்சல்கள் என்று அத்தனையையும் தாண்டி விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கைக்கு திரும்பிய பல நூறு பெண்களின் கதைகள் ஒரு கட்டுரை மூலமாக அத்தனையும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இன்று தமிழ் சமூகத்தால் ஒதுக்கபடுவதற்கான முக்கிய காரணங்களாக பாதிக்கப் பட்ட பெண்கள் கூறுவது முதன்மையானது. 1)சாதியம்(திருமணமானவர்கள்) 2) பிரதேசம் 3)யுத்தத்தில் அவர்கள் அடைந்தஅடைந்த ஊனம். 4)வறுமை என்று தரம் பிரிக்கலாம்.


1)சாதியம்...இங்கு அதிகமாகப் பாதிப்படைந்தவர்கள் நீண்டகாலம் போராளிகளாக இருந்து இயக்கத்திலேயே திருமணமாகி யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களே. புலிகள் அமைப்பின் எழுச்சிகாலகட்டங்களில் அமைப்பில் சாதிகளற்ற கலப்பு காதல் திருமணங்களே ஊக்கிவிக்கப்பட்டது. அது புலிகள் அமைப்பில் இருந்தவர்களிற்கு மட்டுமல்ல சாதாரணமான பொதுமக்களிலும் சாதி மாறி காதலித்தவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர்.இப்படி சாதி மாறி திருமணம் செய்தவர்கள் யுத்தத்தில் கணவர்களை பறி கொடுத்தபின்னர் தங்கள் குழந்தைகளுடன் வாழவழியற்று வருமானமும் இல்லாத நிலையில் கணவனின் உறவுகளாலும்; ஏற்றுக்கொள்ளப்படமல் பெண்ணின் உறவுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனியே தவிப்பது மட்டுமல்லாது சமூகத்து ஆண்களின் தவறான கண்ணோட்டங்களும் இவர்கள் மீதே அதிக அழுததத்தினை கொடுக்கின்றது இவர்களே அதிகம் பாதிக்கபட்டவர்களாகின்றனர்.

2)பிரதேசம்..இங்கு அதிகம் பாதிப்படைவது கிழக்கு மாகாண பெண்களே முகாம்களிலிருந்து வெளியே வந்த பெணகள் தங்கள் சொந்த ஊரிற்கு திரும்ப முடியாத நிலை அதற்கான காரணங்கள் அவர்களின் கிராமங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களாகி விட்டது .அல்லது அவர்களிற்கு உறவுகள் யாரும் இல்லை அல்லது தொடர்புகள் அறுந்து பலவருடங்களாகியிருக்கும். முக்கிய காரணமாக அவர்கள் போராளிகளாய் இருந்த காலத்தில் உயர்நிலை பதவிகளில் இருந்திருப்பார்கள்.அல்லது ஊரில் சிறு பிரச்சனைகளிற்காக யாரிற்காவது தண்டனைகள் வழங்கியிருப்பார்கள். இவர்கள் சொந்த ஊரிற்கு திரும்பி சாதாரண வாழ்வில் ஈடுபடும்பொழுது பாதிக்கப்பட்டவர்களாலேயோ அல்லது அவரிற்கு வேண்டதவர்களால் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வாளர்களால் கைது செய்யப்படலாம் அல்லது உயிராபத்து ஏற்படலாமென நினைத்து வேறு பிரதேசங்களில் குடியேறியவர்கள். அப்படி வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தாலும் மேலே சொன்ன அனைத்து பிரச்சனைகளுடன் பிரதேசவாதமும் அவர்களை ஒதுக்குகின்றது.

3) யுத்தகாலத்தில் ஊனமடைந்த போராளிகள் புலிகளின் காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததோடு அவரவர்களின் திறைமைகளிக்கேற்ப இயலுமான வேலைத்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் ஊனமடைந்த பெண்போராளிகளின் நிலை அவர்களது உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.அவர்களை தனியாக பராமரிக்க இயலாது அதே நேரம் சாதாணமாள பெண்களிற்கே திருமணம் செய்வதற்கு சீதனம் செலவுகள் என பணம் தேவைப்படும் இந்த நிலையில் ஊனமான பெண்ணை வைத்து என்ன செய்வது என்பது அவர்களது காரணங்களாகின்றது. அண்மையில் ஒரு முன்னைநாள் போராளிப் பெண்ணொருத்தி என்னுடன் தொலைபேசியில் கதைத்தபொழுது சொன்ன விடயங்கள்.அவள் யுத்தத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுடன் இழந்தவள்.பின்னர் அவளது குரல் வளத்தால் அவள் புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவள். யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி அவனது வீட்டிற்கு சென்ற பொழுது தாய் தந்தை அவளை துரத்தி விட்டார்கள் தனக்கு யாரையும் தெரியாது எங்கேயும் போக முடியாதென வீட்டு வாசலில் அழுதபடி இருந்தவளை அவளது சகோதரன் மீதமிருந்த முழங்கால்களில் பிடித்து தரதரவென இழுத்துவந்து வீதியில் எறிந்துவிட்டு போய்விட்டானாம். பின்னர் அவளின் நண்பர்கள் மூலம் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியதில் அவளை பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்த்து அடிப்படை உதவிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு உதாரணம்தான்.

4)வறுமை என்பது நான் முதலில் எழுதியிருக்கும் காரணங்களுடன் சேர்ந்தே வருகின்ற ஒரு விடயம்தான். யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் காயங்களோ அற்ற திருமணமும் செய்திருக்காத பெண்கள் உடல் ரீதியிலான தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் உளரீதியான தாக்கங்கள் நிறையவே உள்ளது. புலிகள் அமைப்பில் பலவருடங்கள் இருந்துவிட்ட காரணத்தால் இவர்களது கல்வியை தொடராது இருந்தவர்கள். இன்றைய வேகமான வளர்ச்சிகண்ட உலகில் இவர்களது கல்வி அடிப்படைகளை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. திருமணம் என்று வரும்பொழுது புலிகள் அமைப்பில் இருந்தது ஒரு காரணத்தடையாக முன்னே நிற்கின்றது. அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் பிரான்சில் வசிப்பவர் தனது மகனிற்கு ஊரில் ஒரு நல்ல பெண்ணாக தேடுவதாக சொன்னார் நான் அவரிடம் எனக்கு தெரிந்த நிறையபெண்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இப்போ வெளியில் வந்து சரியாக சிரமப் படுகிறார்கள் வேணுமானால் விபரம் தருகிறேன் போய் பார்த்து விரும்பினால் திருமணத்தை நடத்து என்றேன்.உடனே அவர் பதறியவராக ஜயோ புலியிலை இருந்தவளா அதுகள் குடும்பத்துக்கு சரிவராது என்றார்.

இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றை மட்டும் நாம் வெகு இலாவகமாய் மறந்து விட்டோம் அல்லது மறந்தது போல் நடிக்கிறோம் இவர்கள் போராட பேனது யாரிற்காக?? எம்சமூகத்திற்காகவும் எம்மினத்திற்காகவுமேஅதற்காக அவர்பட்ட சிரமங்கள் வலிகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் வெற்றிகளை கொண்டாடிய சமூகம் தோல்விகளை துரத்துவது ஏன். அன்று அவர்கள் கைகளில் ஆயுதங்களை கொடுத்து இன்னொரு இனத்துடன் போராட தள்ளிவிட்டோம். ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்களற்றவர்களாயும் தோற்று போனவர்களாயும் களைத்துப்போயிருந்தாலும் எமது சமூகச்சாக்கடைகளுடன் போராட தள்ளியிருக்கிறோம். எனவே அவர்கள் முன்னைநாள் பெண் போராளிகளல்ல.......... இன்னமும் போராளிகளே..

நன்றி சாத்திரி
தொடர்புகளிற்கு sathiri@gmail.com

ஒரு கடிதம் எழுதலாமா??

2:35 AM, Posted by sathiri, 2 Comments



வருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது.


ஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டாலும். கரண்டுபில்.வாடைகை துண்டு.அடையாள அட்டை.வீட்டு வாடைகை .தொலைபேசி பில் இப்பிடி ஒரு கட்டு கடுதாசி கொண்டு போகவேணும். அது பத்தாதெண்டு போற இடத்திலைவேறை பல கடுதாசியளிலை கையெழுத்து வாங்கி அவங்கள் வேறை கொஞ்ச கடுதாசியளை தலையிலை கட்டிவிடுவாங்கள். இப்பிடி இந்த கடுதாசியளை வைக்கிறதுக்கெண்டே தனி அலுமாரி ஒண்டு வேணும்.அதுமட்டுமில்லை கடிதப்பெட்டியை நான் கடிதப்பெட்டியெண்டு சொல்லுறதில்லை பில் பெட்டி எண்டுதான் சொல்லுறனான் ஏணென்டால் இப்ப வளந்த தொழிநுட்பத்தாலை யாரும் எனக்கு கடிதம் போடுறதும் இல்லை நானும் யாருக்கும் கடிதம் எழுதிறதும் இல்லை. மின்னஞ்சலும் ஸ்கைப்பும்தான். அதனாலை தபால் பெட்டிக்குள்ளை தனிய காசு கட்டவேண்டிய பில்லுகளும் விளம்பரமும் மட்டும்தான் கிடக்கும் .சுற்றுசூழல் பாதுகாப்பு காரணமாய் கடுதாசி விழம்பரங்களை குறைக்கசொல்லி பிரான்ஸ் அரசாங்கம் ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தார்கள் ஆனாலும் கடுதாசி குறைந்தபாடில்லை.பீசா கடை. தனியார் வங்கிகள். கிளியோசியம் நாடியோசியம் எண்டு ஏதாவது ஒரு கடுதாசி கட்டாயம் பெட்டிக்குள்ளை கிடக்கும் அதுகளை தனியா பிரித்தெடுத்து எறியிறதெண்டுறதே பெரியவேலை. சிலநேரம் அதுகளோடை சேத்து முக்கியமான கடுதாசிகளையும் சேத்து எறிஞ்சுபோட்டு பிறகு அவதிப்பட்டும் இருக்கிறன்.கடிதம் எண்டதும் தான் ஞாபகத்திற்கு வருகிது .முன்பு ஊரில் இருந்த காலங்களில் தபால் காரனை கண்டாலே யார் முதலிலை ஓடிப்போய் கடிதத்தை வாங்கிறதெண்டு என்னுடைய சகோதரங்களோடை ஒரு ஓட்டப் போட்டியே நடக்கும்..


பழுப்பு நிற உறையெண்டால் எண்டால் உள்ளுர் கடிதம் கரையிலை சிவப்பு நீல கோடு போட்ட உறையெண்டால் வெளிநாட்டு கடிதம். இந்த வெளிநாட்டு கடிதத்திற்காகத்தான் நாங்கள் அடிபடுறது காரணம் கடிதம் படிக்கிறதற்காக இல்லை அதிலை உள்ள முத்திரைக்காக . அதை கிழிச்செடுத்து சேகரித்து வைக்கத்தான். கையிலை பேனை பிடிச்சு கடிதம் எழுதி எத்தினை வருசமாகிறது??என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சுமார் பதினைந்து இருபது வருசங்களிற்கு முன்னர்அம்மாவிற்கு உறவுகளிற்கு நண்பர்களிற்கு என்று யாரிற்காவது கடிதம் எழுதுவது என்றாலே ஒரு தனி சுகமான அனுபவம்.அதுவும் முக்கியமாக காதலி(களிற்)க்கான கடிதம். அதென்ன காதலிகள் என்று பன்மையில் எழுதியிருக்கிறேன் என யோசிக்க வேண்டாம். என்வாழ்வில் பலகாலகட்டங்களில் பலரை காதலித்திருக்கிறேன் பலராலும் காதலிக்கப்பட்டும் இருக்கிறேன். உண்மையை சொல்லத்தானே வேணும்..அதே நேரம் கடிதம் எழுதும் அந்தந்த இடங்களிற்கு ஏற்றால் போல் சின்னதாய் ஒரு கவிதை ..பொன்மொழிகள். அடுக்கு மொழி..எதுகை மோனை என்று போட்டு கடிதத்தை அழகு படுத்தி நாலு ஜந்து பக்கத்தில் எழுதியவற்றை எல்லாம் சரியாக எழுதியிருக்கிறோமா என் ஒன்றிற்கு பல தடைவை சரிபார்த்;து என்பலப்பில் போட்டு ஒட்டி அனுப்பி விட்டு அதற்கான பதில் வருகிறதா என கடிதக்காரனையும் தபால் பெட்டியையும் பார்த்;து ஏங்கிய காலங்கள்.எத்தனை....அது மட்டுமில்லை வாழ்த்து மட்டைகள் அனுப்புவதற்காக ஒவ்வொருவருக்கும் எப்படியான வடிவங்கள் அல்லது படங்கள் பிடிக்குமென தெரிந்து கொண்டு அதற்கேற்றால் போல் அவர்களிற்கான வாழ்த்து மட்டைடைகளை பல கடைகளில் ஏறி இறங்கி தெரிவுசெய்து அவரவருக்கு ஏற்றால் வசனங்களை எழுதி அனுப்புவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இந்த வருடம் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் எல்லாம் எஸ்.எம்.எஸ்சிலும் ..தொ.பேசியிலும். மின்னஞ்சலிலும் வருடப்பிறந்த சில நிமிடங்களிலேயே முடிந்து போய்விட்டது. நான் பல வருடங்களாய் நாடு நாடாய் அலைந்து திரிந்த காலங்களிலும் சில கடிதங்களை தவற விடாமல் பொக்கிசமாய் சேர்த்து வைத்திருக்கிறேன் அவற்றில் முதல் காதலியின் கடைசிக்கடிதம்... தற்சயம் உயிரோடு இல்லாது போய்விட்ட சில நண்பர்களினது கடிதங்கள்...அம்மாவினது சில கடிதங்கள். என்பன முக்கியமானது. பேனை பிடித்து எழுதாததாலை என்ரை கையெழுத்து என்ன வடிவத்திலை இருக்குமெண்டதே மறந்து போச்சு. இப்ப பேனையை தொடுறதே எங்காவது அலுவலகங்களில் கையெழுத்து போடவும்.(முக்கியமாய் வங்கியில் கடன் பத்திரங்கள் )வீட்டு வாடைகை கட்டுவதற்கு காசோலையை நிரப்பி கையெழுத்து போட மட்டும்தான். மற்றும்படி இந்த கதையை எழுதியதைப்போலை கணணிக்கு முன்னாலை இருந்து டொக் .... டொக் ..... டொக்...தான்.. விரைவில் இதுவும் மாறி ஸ்கிறீன்டச் திரை தொடுகை எழுத்து கணணி வாங்கிட்டால் டொக் ..டொக் சத்தமும் வராது. காலப்போக்கிலை நாங்கள் மனசிலை நினைக்கிறதே கணணி திரையிலை எழுத்துக்களாய் விழுகிற காலம் வந்தாலும் வரலாம்..அப்பிடி நேர செலவு மிச்சம் எண்டு சந்தோசப்பட்டாலும்.. மனதிலை நினைக்கிறதெல்லாமே.......கணணி திரையிலை எழுத்தாய் விழுந்தால் என்ன நடக்கும் ஜயோ நினைக்கவே பயமாய் இருக்கு வேண்டாம்...

யார் இந்த சிறீதரன் எம்.பி? பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல்! மாவீரர் குடும்பம் ஒன்றின் சோகக்கதை

3:31 AM, Posted by sathiri, No Comment




மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது.

அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இலங்கைப் படையை விட யுத்தம் முடிந்தவுடன் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதில்…அப்பாவிகளைத் தனது வலைக்குள் சிக்க வைப்பதில் இந்தத் தமிழன் இன்று கில்லாடி…

அப்பாவிப் பெண்களை, அபலைகளை ஏமாற்றலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், தற்போது வெளிச்சத்துக்கு வந்தவர்கள் சிலரே. வர வேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். வெளியில் தமிழ்த் தேசியம்.... உள்ளே அனைத்தும் வேஷமாகச் செயற்படும் இவர் யார்? என்ன செய்கிறார்?

தனது குடும்ப வறுமையைத் தனக்குத் தெரியாமலே விளம்பரப்படுத்தி தனது உறவுகளிடையே சிக்கல்களை உருவாக்கி தனக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் இல்லாமல் செய்து விட்டார் என மனமுடைந்து போன இந்தத் தாய்… உதவியும் வேண்டாம்.

எனது பிள்ளைக்குச் சத்திர சிகிச்சையும் வேண்டாம். தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு மண்டியிட்டுக் கெஞ்சும் இந்தத் தாயின் வாழ்க்கையே இன்று மனிதாபிமானமற்றவர்களால் அழிக்கப்படும் நிலை…

கணவனையும் இழந்த நிலையில் வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை விளம்பர வியாபாரியாக்கி பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றவர் யார்…?

வன்னி மண்ணில் சிங்களவர்களால் மனிதர்கள் தான் புதைக்கப்பட்டார்களென்ற செய்தியை இன்று மிஞ்சி நிற்கிறது ஒரு தமிழனால் புதைக்கப்பட்டுப் போன மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தைப் புதைத்த தமிழன் தான் யார்?

தமிழினத்தின் வாக்குக்களால் வென்று இத்தகைய பெண்களின் வறுமையை விளம்பரமாக்கும் மேன்மை தங்கிய மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தான். அது மட்டுமல்ல.. ஸ்ரீதரனின் செயலாளரான பொன்காந்தனால் இன்று அந்தப் பெண் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.

இணையத்தள வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சமான்யப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பிக் கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

அந்தப் பெண் இன்று தன் நிலை அறிந்து எதுவும் செய்ய முடியாத நிலமையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வளவுக்கும் ஆளான அந்தப் பெண் யார்..? அவளின் கதை என்ன படியுங்கள்..

இந்த விடயம் தொடர்பில் நேசக்கரம் அமைப்பினால் எமக்கு வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனின் கோரிக்கைககு இணங்க ஜெர்மனியில் இயங்கும் அமைப்பான உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு 22.12.2010 இல் தமிழ் வின் இணையத்தளத்தில் பிரபாகரன் கலாரஞ்சினி என்ற ஒரு பெண்ணின் கோரிக்கையொன்றை வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கான உதவிகள் அவரது பிள்ளைக்கான வைத்திய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பன நேசக் கரம் அமைப்பினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மகன் தமிழன்பன் என்பவரின் சிகிச்சைக்காகக் கொழும்பில் சுமார் ஆறுமாதங்கள் முயற்சி செய்த பின்னர் தமிழ் நாட்டிலும் வைத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.


தமிழ் நாட்டு வைத்தியர்களினாலும் அவரது குறைகள் என்பன பிறப்பில் இருந்தே இருப்பதால் அவருக்குக் காது கேட்பது கதைப்பது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியாதெனக் கூறி விட்டனர். ஏற்கனவே பணம் பிடுங்கிகள் சிலர் 25 லட்சரூபாய் தந்தால் குழந்தையை பேசவும் காது கேட்கும் வலுவையும் ஏற்படுத்துவோம் என இப்பெண்ணிடம் கேட்டிருந்தனர்.

இந்த விடயம் எம்மையும் எட்டியதால் எம்மிடம் வருகின்ற மருத்துவ உதவிகளுக்கான மிகப்பெரும் உதவியாக இருக்கும் மருத்துவருக்கு இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். நேரடியாக உரிய மருத்துவர் இப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம்பிடுங்கிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

அத்தோடு துறைசார் மருத்துவர் ஒருவரையும் நியமித்து கலாரஞ்சனிக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறித்த மருத்துவர் குழந்தை தமிழன்பனின் மருத்துவ அறிக்கைகளை தமிழ்நாடு வைத்தியர்களை நாடி மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் குழந்தையின் மருத்துவத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய மருத்துவக் குழுவின் பிரதான மருத்துவரும் உடனுக்குடன் தகவல்களை எமக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதன் விளக்கங்களை ஏற்று நாமும் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கான உதவிகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் நேசக்கரம் அமைப்பு சேமித்து வைத்துள்ளது.

அப்படி அவரது தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்பெண்ணுக்கான உதவிகள் கோரி மீண்டும் தமிழ் வின் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து குழப்பமடைந்த நாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிதரன் (பா.ம.உறுப்பினர்) பற்றியும் அவர் உரையாடிய உரையாடல்களும் மற்றும் கலாரஞ்சனி தெரிவித்த விடயங்களும் எம்மை அதிர்ச்சிக்கும் மிகுந்த கவலைக்கும் உள்ளாக்கின.

சிறீதரன் உதவுவதாகக் கூறி இந்தப் பெண்ணை ஒருவர் சிறீதரனிடம் அழைத்துச் சென்றபோது, சிறீதரன் அவர்கள் தானும் போராளிகளுடனும் போராட்டத்துடனும் மிகவும் ஒன்றியிருந்ததாகவும் மனம் திறந்து தன்னிடம் அவரது குறைகளைக் கூறுமாறும் அந்தப் பெண்ணிடம் கேட்ட போது தனது குறைகளை அவர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு நிரந்தர அரச தொழில் வாய்ப்பை சிறீதரன் பெற்றுத் தருவார் என்று நம்பிப் போன காலரஞ்சினி சிறீதரனின் சாதுரியமான கதைகளை நம்பி தனது கணவர் குடும்பம் குழந்தையின் நிலமைகளையும் கூறியுள்ளார். சிறீதரனோ தனது நண்பர் ஒருவரின் குழந்தையும் இதே பிரச்சினையில் இருப்பதாகவும் பிறப்பிலுள்ள குறைபாட்டை 28 லட்சம் ரூபா செலவு செய்து மாற்றியுள்ளார்கள் எனவும் கூறி உங்கள் மகனை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று சத்திர சிகிச்சை செய்து குறைகளைத் தீர்க்கலாமென வாக்குறுதியளித்து தான் உதவுவதாகவும் கூறியிருந்தார்.

அந்நேரம் கலாரஞ்சினியையும் அவரது குழந்தையையும் சிறீதரன் நிழற்படமும் எடுத்துள்ளார். ஒரு தாயாக தனது பிள்ளையின் குறைபாடு நீங்கி தனக்காக உள்ள ஒரே குழந்தை ஆரோக்கியமடையலாம் என்ற நப்பாசையில் தனது துயரங்களை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். (நாம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருப்பின் இந்த வெளிப்பாடு இயல்பானது.)

இன்றைய இன்டெர் நெட் வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சாமானியப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பி கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையங்களில் சிறீதரன் அனுப்பிய செய்தியும் வீடியோப் பதிவும் வெளியாகிய அதேநேரம் யாழ் தினக்குரலில் கலாரஞ்சினியினதும் தமிழன்பனினதும் படத்தையும் பிரசுரித்து பண உதவி கோரிய விபரங்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதே தனது விபரங்களை சிறீதரன் ஊடகங்களில் வெளியிட்டு பணம் சேகரிக்கும் விடயம் தெரியவந்தது.

ஏற்கனவே பல வகைகளில் பாதிக்கப்பட்டு கணவனையும் இழந்து வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்ற சிறீதரனை கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாத நிலமையில் எம்மிடம் மீண்டும் உதவி கோரியிருந்தார் கலாரஞ்சினி.

சிறீதரனின் பொறுப்பற்ற விளம்பரத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார் இந்தப்பெண். தனக்கு இத்தகையதொரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது பற்றி சிறீதரனுக்குத் தெரிவித்த போது சிறீதரன் பதவியில் இருக்கும் அதிகாரத்துடன் பதிலளித்தமை அவளை மேலும் துன்புறுத்தியுள்ளது.

தன்னிடம் உதவி கோரி வந்தால் இதுவெல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்தச் செய்தியால் ஏற்பட்ட அசௌகரியம் சில நாட்களில் மாறி விடும் என்றும் அதுவரையில் வேறொரு தொலைபேசியைப் பாவிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு காலரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது குடும்ப வறுமையை விளம்பரப்படுத்தி ஏனைய தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கி இருந்த கொஞ்ச நிம்மதியையும் குலைத்த சிறீதரனால் ஏதாவது விபரீதம் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர் கலாரஞ்சனியும் அவரது குடும்பத்தினரும்.

தன்னைப் பற்றிய விளம்பர வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட சிறீதரனின் சகோதரரின் இணையங்களான லங்காசிறி, தமிழ்வின்னிலிருந்து அழிக்குமாறு வேண்டியும் இதுவரை சிறீதரன் எவ்வித அக்கறையும் எடுக்காதுள்ளார்.

இச்செய்தி தொடர்பாக உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் யேர்மனி கணேசலிங்கம் அவர்களிடம் கேட்டபோது சிறீதரன் சொன்னார் நாங்கள் செய்தியைப் போடச் சொன்னோம் என்றும் பொறுப்புமிக்க ஒரு பா.ம.உறுப்பினர் தரும் தகவல் உண்மையென்பதாலேயே தாம் தமது பெயரில் செய்தி போட ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி வீடியோவை பொன்காந்தன் (சிறீதரனின் செயலாளர்) தந்ததாகவும் கூறியிருந்தார்.

அடுத்து சிறீதரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது செய்தியாளர் இச்செய்தியை வெளியிட்டதாகவும் தன்னிடம் வரும்போது இப்படியெல்லாம் செய்தி வருமென்பதை அறியாதது கலாரஞ்சனியின் பிழையெனவும் இன்ரநெற் என்றால் என்ன ஊடகம் என்றால் என்ன என்பது பற்றி அறியாது இருப்பது கலாரஞ்சனியின் பிழையெனவும் கூறிய அதே நேரம் அவருக்கென சேகரிக்கப்பட்ட பணத்தை தாம் வேறு உதவி தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.



உதவியும் வேண்டாம் பிள்ளைக்கு சத்திர சிகிச்சையும் வேண்டாம் தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு கலாரஞ்சனியும் நாங்களும் சிறீதரனிடம் கேட்டும் அது செவிசாய்க்கப்படாதுள்ளது எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மட்டுமல்லாமல் சிறீதரன் பா.உறுப்பினர் மீது பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.


தற்போதைய வன்னி நிலமைகளை அறிந்து கொண்டுள்ள சிறீதரன் அவர்கள் அதுவும் இந்தப்பெண் போன்ற நிலமையில் இருக்கும் ஒருவருக்கு இவரது இத்தகைய விளம்பரப்படுத்தல் நிதிசேகரிப்பு மூலம் எத்தகைய நெருக்கடிகள் வரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சாதாரணமான ஒருவரல்ல.


வன்னிக்குள் எத்தனையோ விரும்பத்தகாத முறைகேடுகள் பெண்கள் மீதான அத்துமீறல்கள் துன்புறுத்தல் நடப்பது சிங்களவர்களால் மட்டுமல்ல சிறீதரன் போன்றவர்களாலும் என்பதனையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

பல பெண்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள் தொலைபேசி அழைப்புக்களிலிருந்து பலரது கோர முகங்களும் அவர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதனையும் உணர முடிகிறது.

ஆனால் இத்தகைய செல்வாக்கு மிக்கவர்களுடன் சமானமாக நின்று போராடும் வலுவை நாம் இழந்து போனோம் என்பதனையும் வேதனையுடன் கூறிக்கொள்கிறோம். இதேவேளை, இந்த அப்பாவிப் பெண் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, தான் விற்றுப் பிழைக்கப்பட்டுள்ளதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலைக்கும் தயாரானாதாகவும் நெஞ்சை நெருடும் தகவல் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.
http://www.youtube.c...player_embedded

http://www.youtube.com/watch?v=JC6EsXyv3i8
பிற்குறிப்பு :-
மேலே இணைக்கப்பட்டுள்ள உரையாடல் சிறிதரன் எம் பியின் உதவியாளர் பொன் காந்தனிற்கும் நேசக்கரம் சாந்தி ரமேசிற்கும் இடையில் நடந்ததாகும்.
கலாரஞ்சனி விடயத்தைக் கையண்டவர்களுடனான ஒலிப்பதிவுகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் யாவும் உள்ளன. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடுவோம் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

மேலும் உதவிக் கரம் நீட்டும் தர்மக் கரங்களும் உதவி கோரும் எமது உறவுகளும் இவ்வாறான இடைத் தரகர்களையும் விற்றுப் பிழைப்போரையும் நம்பி ஏமாற வேணடாம் என்ற ஒரு செய்தியினையும் இங்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்..

உங்கள் குழந்தைகளிற்கு கல்வியினை கொடுங்கள்.. நேசக்கரம் இணைப்பாளர் தீபச்செல்வன்

3:01 PM, Posted by sathiri, No Comment




நேசக்கரம் அமைப்பினால் 09.11.01 அன்று கிளிநொச்சி மாவட்டம் மணியன்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களிற்கான சுயஉதவித்தொழில் திட்ட அடிப்படையில் பதினைந்து குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாய்கள் உதவிகள் வழங்கப்பட்டதுடன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குமான உதவியாக இலங்கைரூபா 170000ரூபா(ஒருஇலட்சத்து எழுபதாயிரம்ரூபா) இவ்வுதவிகளை நேசக்கரம் அமைப்பின் இணைப்பாளர் தீபச்செல்வன் அவர்கள் நேரடியாக அம்மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருந்தார்.

இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வின்போது த.தே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்களின் உதவியாளர் கவிஞர் பொன்காந்தன்.மணியன்குளம் கிராம சங்கத்தலைவர் திரு சூரி மற்றும் மாதர்சங்கத் தலைவி ரஜனி ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன்.அந்த மக்கள் நம்பிக்கைகளை இழந்து போகாமல் மீண்டும் அவர்கள் வாழ்வினைக் கட்டியெழுப்ப உறுதியோடு உழைக்கவேண்டும் என்பதோடு அவர்களின் குழந்தைகளிற்குக் கல்வியினைக் கட்டாயமாகவும் தொடர்ச்சியாகவும் வழங்க முன்வர வேண்டுமென்றும், அதற்கான உதவிகளையும் வழிவகைளையும் அந்த மக்களிற்குப் பெற்றுக்கொடுப்பதற்காக என்றென்றும் நேசக்கரம் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் உறுதுணையாக இருப்போம் என்கிற உறுதியினையும் தீபச்செல்வன் அவர்கள் அம்மக்களுடனான உரையாடலின்போது தெரிவித்திருந்தார்.



இந்த மக்களிற்கான உதவிகளை வழங்கி அவர்களிற்கான உங்கள் பாசக்கரங்களை நீட்டிய அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நேசக்கரம் அமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
உதவி வழங்கல் மற்றும் மணியன்குளம் கிராமம் பற்றி கருத்துக்களோடு தீபச்செல்வனுடனான உரையாடல் ஒலிப்பதிவினைக் கேட்க இந்த இணைப்பில் அழுத்தவும்.
உதவி வழங்கல் படங்களை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்தவும்.

Akka please call me…after 13.00pm

1:57 PM, Posted by sathiri, No Comment

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.
எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.
ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?
கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

1:51 PM, Posted by sathiri, 2 Comments

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்
போக்குவரத்து 100 ரூபாய்
உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய்
மொத்தம் 3000 ரூபாய்

ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய்






உதவ விரும்புவர்கள் நேசக்கரத்துடன் மின்னஞ்சல் முலமாகவோ அல்லது தொ.பே மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்..

இங்குள்ள பிள்ளைகளின் விபரங்கள் மற்றும் படங்களை நேசக்கரத்தின் அனுமதியின்றி வேறு அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ பயன்படுத்தி மேசடிகளில் ஈடுபட்டால் நேச்கரம் அமைப்பு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கும் என்பதனை அறியத் தருகின்றோம்.

இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு

9:47 AM, Posted by sathiri, No Comment

இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.வந்தவரையெல்லாம் வாழவைத்த வளமான வன்னி மண்ணின் சொந்தக்காரர்களிற்கு வந்த இடத்தில் கிடைத்தெல்லாம் வசைச்சொற்கள் மட்டுமே.அத்தனையையும் தாங்கி அனாதையாய் நின்றவர்களிற்குக் கைகொடுத்தது காமினி மகாவித்தியாலம் மட்டும்தான். இங்கு தற்சமயம் தங்கள் உடல் அவயவங்களையும் பெற்றோர்களையும் இழந்துபோன 84 மாணவர்களிற்கான கல்வி அடிப்படை வசதிகளையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இன்று அந்த பாடசாலை மாணவர்களின் நிலைமைபற்றி அதன் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்களிடமே கேட்போம்.

ஒலிப்பதிவினை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்

நன்றி

பல்கலைக்கழகமாணவர்கள் தற்கொலைகள் பகிர்கிறார் தீபச்செல்வன்

12:10 PM, Posted by sathiri, No Comment

நேசக்கரம் அமைப்பின் யாழ்மாவட்ட தொடர்பாளர்களில் ஒருவரும் யாழ்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளலுமான தீபச்செல்வன் அவர்களுடனான ஒரு உரையாடல்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களிடையே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயான தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாகிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது அவை வெறும் அன்றாட சம்பவங்களாகி போய்விட்டதொரு நிலைமையே தொடர்கின்றது.

இத்தகைய நிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த புலம்பெயர் சமூகம் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுடன் இதோ தீபச்செல்வனை தொடர்பு கொள்கிறோம்.

முன்னாள் போராளி முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்

1:14 AM, Posted by sathiri, One Comment

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவில் இருந்து ஆனையிறவு மீட்புப் போரில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பின்னரும் பெண்போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழில் நுட்பப்பிரிவில் தொடர்ந்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 16ந்திகதிவரை தன்னுடைய பங்களிப்பனை வழங்கிய ஒரு முன்னாள் போராளி இன்று தன் மருத்துவ செலவுகளிற்காக உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறான் அதே வேளை முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்..இங்கு அழுத்தி கேழுங்கள்..

உருக்கும் உண்மைகள் 3

2:59 PM, Posted by sathiri, No Comment

விரக்தியே வாழ்வாய்போன விதுசன்

விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியையும் பிடித்தபடி செல் வந்தபோதெல்லாம் வீ்ழ்ந்து படுத்தபடி ஓடிக்கொண்டேயிருந்தான். அப்படித்தான் கடந்த வருடம் பங்குனி மாதம் ஒரு காலையில் செல்கள் சீறிவரும் சத்தம் கேட்டது விதுசனும் பங்கரை தேடி ஓடமுதல் வீழ்ந்து வெடித்த செல்களின் சத்தங்களிடையே ..அய்யோ அம்மா என்றொரு சத்தத்துதடன் விதுசன் மயங்கிப்போனான்..

அவன் கண்விழித்துப்பார்த்தபொழுது செஞ்சிலுவைச்சங்க தற்காலிக மருத்தவ முகாம் ஒன்றில் படுத்திருந்தான் .அருகில் அவனது அப்பாவும் அழுதபடி தம்பியும் நின்றிருந்தனர்.. உடம்பின் இடப்பக்கம் ஒரே வலியாய் இருந்தது.இரு கைகளையும் ஊன்றி எழுந்திருக்க முயன்றான் அவனது வலக்கையை மட்டுமே ஊன்றக்கூடிதாகவிருந்தது..இடக்கையை ஊன்றமுடியவில்லை. அவனது இடக்கை முங்கைக்கு மேலே காணவில்லை..அந்த இடத்தில் ஒரு பந்தம் போல கட்டுப்போட்டிருந்தது..."அப்பா என்ரை கை என்று" அழுதான்..அவனது தந்தையும் அழுதார் அவனது தம்பியும் அழுதான் ..அவர்களால் அது மட்டுமே முடிந்தது..இது இவனிற்கு வீழ்ந்த இரண்டாவது இடி.. இராணுவம் முன்னேறிக்கொண்டேயிருந்தது மாத்தளனை நெருங்கிவிட்டார்கள்.ஒரு மாதமளவில் தற்காலிக மருத்துவ மனைகளையும் மூடிவிட்டு செஞ்சிலுவைச்சங்க வைத்தியர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். விதுசன் தங்கியிருந்த மருத்துவமனையும் மூடப்பட்டது. மிக மோசமான காயக்காரர்களை மட்டும் செஞ்சிலுவைச்சங்கக் கப்பலில் எற்றிக்கொண்டு புறப்பட்ட வைத்தியர்களிடம்.. "டொக்ரர் எனக்கு கை இன்னும் நோகுதுஎன்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ "என்றழுதான் அவர்கள் போய்விட்டார்கள்...புது மாத்தளன் பகுதியில் இறுதிப் பேரவலத்தின் முதலநாள் 16 ந்திகதி அதிகாலை 4' மணியளவில் இருளைக்கிழித்துக்கொண்டு மீண்டும் ஒரு குண்டுமழை... குண்டுச்சத்தங்களையும் மீறிய மனித ஓலம். இலட்சக்கணக்கான மக்கள் சில கிலோ மீற்றர் தூரத்தற்குள் பொறிக்குள் அகப்பட்டவர்களாய் யார் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். குண்டுச்சத்தத்தில் நித்திரையால் திடுக்கிட்டு விழித்த விதுசனும் அருகில் படுத்திருந்த தன் தம்பியின் கையை பிடித்தபடி தந்தைய தேடினான்.காணவில்லை

.அப்பா ..அப்பா ..என்று அலறியபடி தந்தையை தேடி ஓடிய விதுசனையும் தம்பியையும் யாரே ஒரு பதுங்கு குழிக்குள் இழுத்துப் போட்டார்கள்...சிலமணி நேர குண்டுச்சத்தம் புழுதியும் புகையுமாய் ஓய்ந்து போனது. மெல்ல சூரியவெளிச்சம் எழுந்தபொழுது ஒல்லோரும் சரணடையும்படி தமிழில் ஒலிபெருக்கி சத்தம கேட்டது அதைத்தொடர்ந்து சிங்களத்தில் கதைக்கும்சத்தங்கள்..இராணுவத்தின் நீட்டிய துப்பாக்கிகள் முன்னால் உடலில் உயிர் ஒட்டியிருந்த அனைவரும் கைகளை துக்கியபடி அவர்கள் காட்டிய பகுதியால் போய்க்கொண்டிருந்தனர்.விதுசனும் தன் ஒற்றைக்கையை துக்கியபடி தம்பியுடன் போய்க்கொண்டிருந்தான்..போகும் வழியெங்கும் பின்னர் அடுத்தடுத்து மாற்றப்பட்ட முகாம்கள் எங்கும் தன் தந்தையின் முகத்தை தேடினான்..காணவில்லை.. இது இவனிற்கான மூன்றாவது இடி....ஆறுமாதகால தடுப்பு முகாம் வாழ்க்கை முடிந்து தம்பியுடன் வடமராட்சி மணல்காடு இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பப்பட்டான்..அங்கு சென்ற அவனிற்கு மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. வடமராட்சி பகுதியில்தான் அவனது அம்மம்மா.(தாயின் தாயார்) வசித்துவந்தார்.முன்னர் தாய் தந்தையுடன் அவர்கள் வீட்டிற்கு போய்வந்த ஞாபகத்தை வைத்துக்கொண்டு தம்பியையும் அழைத்தபடி அம்மம்மாவின் வீட்டைத்தேடிப்போனான்.தன் மகளை இழந்து தவிக்கும் அம்மம்மா தங்களைக்கண்டதும் ஆசையில் ஓடிவந்து கட்டியணைப்பாரென தவிக்கும் கனவுகளுடன் அவர்களது கதவைத் தட்டியவனிற்கு ஏமாற்றமே..

» "என்ரை மகளே இல்லாமல் போட்டுது அது பெத்த நீங்கள் எனக்கென்னத்துக்கு அதிலை ஒரு சனியனிற்கு கைவேறை இல்லை உங்களை வைச்சு சோறு போட என்னாலை ஏலாது போய் தொலையுங்கோ" என்று துரத்தி விட்டாள்.ஆசையாசையாய் தேடிப்போன அம்மம்மாவும் துரத்திவிட்ட கவலையில் நான்காவது இடியையும் தாங்கியபடி தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மீண்டும் மணற்காட்டு முகாமிற்கு திரும்பிய அண்ணனும் தம்பியும். அங்கு முகாமில் தங்கியிருக்கு இன்னொரு தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் குடிசையில் முடங்கிப்போனார்கள்..இப்படியான நேரத்தில்தான் கடந்த மாதம்.(பங்குனி.2010.) எமது நேசக்கர உறுப்பினரான கமலாதேவி அவர்கள் மணற்காட்டு முகாமிற்கு சென்றவேளை விதுசனையும் அவனது தம்பியின் நிலைமைகளை தெரிந்து கொண்டு அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்கி பாடசாலைக்கும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் விதுசனின் எதிர்காலத்திற்காக வங்கியில் ஒரு தொகை பணமும் வைப்பிலடப்பட்டது.வழைமைபோல இந்த மாதம் குழந்தைகளிற்கான உதவிகளை வழங்குவதற்காக பாடசாலை சென்ற நேசக்கரம் உறுப்பினர்களிற்கு விதுசன் ஒரு வாரமாக பாடசலை வரவில்லையென்று அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களாய் அவனைத் தேடத் தொடங்கினார்கள். அவன் தங்கியிருந் வயதான பெண்ணின் வீட்டிலும் அவன் இல்லை அவனது தம்பிக்கும் அவன் எங்கு போனான் எனத்தெரியவில்லை. அவனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் தொடர்ச்சியான தேடுதலில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டான்.அப்பொழுதுதான் அவன் மீது விழுந்த 5 வது இடி பற்றிய விபரம் தெரியவந்தது..

விதுசனிற்கு நேசக்கரம் கல்வி உதவியுடன் பணஉதவி செய்த விபரம் அறிந்துகொண்ட அவனது சித்தப்பா முறையான ஒருவர். ஒருநாள் பாடசாலையால் வீடு திரும்பிக்கொண்டிருந்த விதுசனை அழைத்துப்போய் தன்னுடன் தங்கி இனி படிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி நேசக்கரம் ஊடாக கிடைத்த பணத்தினை தன்னிடம் தரும்படியும் வேறு யாரிடமும் கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.ஆனால் நேசக்கரம் அவனிடமோ வேறு யாரிடமோ பணத்தினை கொடுத்திருக்கவில்லை அவனது பெயரில் வங்கி கணக்கு ஒன்றினை தொடங்கி அதில் நிதந்தர சேமிப்பாகவே அந்தப் பணத்தினை இட்டிருந்தது. அதே நேரம் விதுசன் 18 வயதான பின்னர்தான் அவன் அந்தப் பணத்தினை வங்கியிலிருந்து எடுக்கலாம்..இந்த விபரங்கள் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அவனது சித்தப்பா கோபத்தில் விதுசனை அடித்து உதைத்திருக்கிறார். அவரிடம் இருந்து தப்பியோடி வந்த விதுசன் மீண்டும் சித்தப்ப்பா தன்னை தேடிவரலாம் என்கிற பயத்தில் பாடசாலைக்கும் போகாமல் முன்னர் தங்கியிருந்த வீட்டிற்கும் போகாமல் வேறொரு தெரிந்தவர்கள் வீட்டில் ஒழிந்திருந்தவேளை நேசக்கரம் உறுப்பினர்கள் அவனை மீண்டும் மீட்டெடுத்துள்னர்.தற்சமயம் அவனும் அவனது தம்பியும் வவுனியாவில் உள்ள நேசக்கர இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் அங்கிருந்தபடியே கல்வியினை தொடர்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன..


விதுசனின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..நன்றி