Navigation


RSS : Articles / Comments


உருக்கும் உண்மைகள் 3

2:59 PM, Posted by sathiri, No Comment

விரக்தியே வாழ்வாய்போன விதுசன்

விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியையும் பிடித்தபடி செல் வந்தபோதெல்லாம் வீ்ழ்ந்து படுத்தபடி ஓடிக்கொண்டேயிருந்தான். அப்படித்தான் கடந்த வருடம் பங்குனி மாதம் ஒரு காலையில் செல்கள் சீறிவரும் சத்தம் கேட்டது விதுசனும் பங்கரை தேடி ஓடமுதல் வீழ்ந்து வெடித்த செல்களின் சத்தங்களிடையே ..அய்யோ அம்மா என்றொரு சத்தத்துதடன் விதுசன் மயங்கிப்போனான்..

அவன் கண்விழித்துப்பார்த்தபொழுது செஞ்சிலுவைச்சங்க தற்காலிக மருத்தவ முகாம் ஒன்றில் படுத்திருந்தான் .அருகில் அவனது அப்பாவும் அழுதபடி தம்பியும் நின்றிருந்தனர்.. உடம்பின் இடப்பக்கம் ஒரே வலியாய் இருந்தது.இரு கைகளையும் ஊன்றி எழுந்திருக்க முயன்றான் அவனது வலக்கையை மட்டுமே ஊன்றக்கூடிதாகவிருந்தது..இடக்கையை ஊன்றமுடியவில்லை. அவனது இடக்கை முங்கைக்கு மேலே காணவில்லை..அந்த இடத்தில் ஒரு பந்தம் போல கட்டுப்போட்டிருந்தது..."அப்பா என்ரை கை என்று" அழுதான்..அவனது தந்தையும் அழுதார் அவனது தம்பியும் அழுதான் ..அவர்களால் அது மட்டுமே முடிந்தது..இது இவனிற்கு வீழ்ந்த இரண்டாவது இடி.. இராணுவம் முன்னேறிக்கொண்டேயிருந்தது மாத்தளனை நெருங்கிவிட்டார்கள்.ஒரு மாதமளவில் தற்காலிக மருத்துவ மனைகளையும் மூடிவிட்டு செஞ்சிலுவைச்சங்க வைத்தியர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். விதுசன் தங்கியிருந்த மருத்துவமனையும் மூடப்பட்டது. மிக மோசமான காயக்காரர்களை மட்டும் செஞ்சிலுவைச்சங்கக் கப்பலில் எற்றிக்கொண்டு புறப்பட்ட வைத்தியர்களிடம்.. "டொக்ரர் எனக்கு கை இன்னும் நோகுதுஎன்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ "என்றழுதான் அவர்கள் போய்விட்டார்கள்...புது மாத்தளன் பகுதியில் இறுதிப் பேரவலத்தின் முதலநாள் 16 ந்திகதி அதிகாலை 4' மணியளவில் இருளைக்கிழித்துக்கொண்டு மீண்டும் ஒரு குண்டுமழை... குண்டுச்சத்தங்களையும் மீறிய மனித ஓலம். இலட்சக்கணக்கான மக்கள் சில கிலோ மீற்றர் தூரத்தற்குள் பொறிக்குள் அகப்பட்டவர்களாய் யார் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். குண்டுச்சத்தத்தில் நித்திரையால் திடுக்கிட்டு விழித்த விதுசனும் அருகில் படுத்திருந்த தன் தம்பியின் கையை பிடித்தபடி தந்தைய தேடினான்.காணவில்லை

.அப்பா ..அப்பா ..என்று அலறியபடி தந்தையை தேடி ஓடிய விதுசனையும் தம்பியையும் யாரே ஒரு பதுங்கு குழிக்குள் இழுத்துப் போட்டார்கள்...சிலமணி நேர குண்டுச்சத்தம் புழுதியும் புகையுமாய் ஓய்ந்து போனது. மெல்ல சூரியவெளிச்சம் எழுந்தபொழுது ஒல்லோரும் சரணடையும்படி தமிழில் ஒலிபெருக்கி சத்தம கேட்டது அதைத்தொடர்ந்து சிங்களத்தில் கதைக்கும்சத்தங்கள்..இராணுவத்தின் நீட்டிய துப்பாக்கிகள் முன்னால் உடலில் உயிர் ஒட்டியிருந்த அனைவரும் கைகளை துக்கியபடி அவர்கள் காட்டிய பகுதியால் போய்க்கொண்டிருந்தனர்.விதுசனும் தன் ஒற்றைக்கையை துக்கியபடி தம்பியுடன் போய்க்கொண்டிருந்தான்..போகும் வழியெங்கும் பின்னர் அடுத்தடுத்து மாற்றப்பட்ட முகாம்கள் எங்கும் தன் தந்தையின் முகத்தை தேடினான்..காணவில்லை.. இது இவனிற்கான மூன்றாவது இடி....ஆறுமாதகால தடுப்பு முகாம் வாழ்க்கை முடிந்து தம்பியுடன் வடமராட்சி மணல்காடு இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பப்பட்டான்..அங்கு சென்ற அவனிற்கு மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. வடமராட்சி பகுதியில்தான் அவனது அம்மம்மா.(தாயின் தாயார்) வசித்துவந்தார்.முன்னர் தாய் தந்தையுடன் அவர்கள் வீட்டிற்கு போய்வந்த ஞாபகத்தை வைத்துக்கொண்டு தம்பியையும் அழைத்தபடி அம்மம்மாவின் வீட்டைத்தேடிப்போனான்.தன் மகளை இழந்து தவிக்கும் அம்மம்மா தங்களைக்கண்டதும் ஆசையில் ஓடிவந்து கட்டியணைப்பாரென தவிக்கும் கனவுகளுடன் அவர்களது கதவைத் தட்டியவனிற்கு ஏமாற்றமே..

» "என்ரை மகளே இல்லாமல் போட்டுது அது பெத்த நீங்கள் எனக்கென்னத்துக்கு அதிலை ஒரு சனியனிற்கு கைவேறை இல்லை உங்களை வைச்சு சோறு போட என்னாலை ஏலாது போய் தொலையுங்கோ" என்று துரத்தி விட்டாள்.ஆசையாசையாய் தேடிப்போன அம்மம்மாவும் துரத்திவிட்ட கவலையில் நான்காவது இடியையும் தாங்கியபடி தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மீண்டும் மணற்காட்டு முகாமிற்கு திரும்பிய அண்ணனும் தம்பியும். அங்கு முகாமில் தங்கியிருக்கு இன்னொரு தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் குடிசையில் முடங்கிப்போனார்கள்..இப்படியான நேரத்தில்தான் கடந்த மாதம்.(பங்குனி.2010.) எமது நேசக்கர உறுப்பினரான கமலாதேவி அவர்கள் மணற்காட்டு முகாமிற்கு சென்றவேளை விதுசனையும் அவனது தம்பியின் நிலைமைகளை தெரிந்து கொண்டு அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்கி பாடசாலைக்கும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் விதுசனின் எதிர்காலத்திற்காக வங்கியில் ஒரு தொகை பணமும் வைப்பிலடப்பட்டது.வழைமைபோல இந்த மாதம் குழந்தைகளிற்கான உதவிகளை வழங்குவதற்காக பாடசாலை சென்ற நேசக்கரம் உறுப்பினர்களிற்கு விதுசன் ஒரு வாரமாக பாடசலை வரவில்லையென்று அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களாய் அவனைத் தேடத் தொடங்கினார்கள். அவன் தங்கியிருந் வயதான பெண்ணின் வீட்டிலும் அவன் இல்லை அவனது தம்பிக்கும் அவன் எங்கு போனான் எனத்தெரியவில்லை. அவனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் தொடர்ச்சியான தேடுதலில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டான்.அப்பொழுதுதான் அவன் மீது விழுந்த 5 வது இடி பற்றிய விபரம் தெரியவந்தது..

விதுசனிற்கு நேசக்கரம் கல்வி உதவியுடன் பணஉதவி செய்த விபரம் அறிந்துகொண்ட அவனது சித்தப்பா முறையான ஒருவர். ஒருநாள் பாடசாலையால் வீடு திரும்பிக்கொண்டிருந்த விதுசனை அழைத்துப்போய் தன்னுடன் தங்கி இனி படிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி நேசக்கரம் ஊடாக கிடைத்த பணத்தினை தன்னிடம் தரும்படியும் வேறு யாரிடமும் கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.ஆனால் நேசக்கரம் அவனிடமோ வேறு யாரிடமோ பணத்தினை கொடுத்திருக்கவில்லை அவனது பெயரில் வங்கி கணக்கு ஒன்றினை தொடங்கி அதில் நிதந்தர சேமிப்பாகவே அந்தப் பணத்தினை இட்டிருந்தது. அதே நேரம் விதுசன் 18 வயதான பின்னர்தான் அவன் அந்தப் பணத்தினை வங்கியிலிருந்து எடுக்கலாம்..இந்த விபரங்கள் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அவனது சித்தப்பா கோபத்தில் விதுசனை அடித்து உதைத்திருக்கிறார். அவரிடம் இருந்து தப்பியோடி வந்த விதுசன் மீண்டும் சித்தப்ப்பா தன்னை தேடிவரலாம் என்கிற பயத்தில் பாடசாலைக்கும் போகாமல் முன்னர் தங்கியிருந்த வீட்டிற்கும் போகாமல் வேறொரு தெரிந்தவர்கள் வீட்டில் ஒழிந்திருந்தவேளை நேசக்கரம் உறுப்பினர்கள் அவனை மீண்டும் மீட்டெடுத்துள்னர்.தற்சமயம் அவனும் அவனது தம்பியும் வவுனியாவில் உள்ள நேசக்கர இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் அங்கிருந்தபடியே கல்வியினை தொடர்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன..


விதுசனின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..நன்றி

No Comment