Navigation


RSS : Articles / Comments


கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.4

2:18 PM, Posted by sathiri, One Comment

காமம்.
பயிற்சி முகாம்.



23 ந்திகதி  யூலை மாதம்  83 ம் ஆண்டு  வழைமைபோலவே விடிந்தது  அவனும்  அந்த ஆண்டு   க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால்  நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள்.

எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினிபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்கு சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர். எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர்.

தோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.

ஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன்?? இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன?? மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி ?? கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன்?? தடுக்க முடியாதா??அடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா?? முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.
00000000000000000000000000000
அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைத்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள்??. முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.
0000000000000000000000000000000000
பரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநாள் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.இரவில் தொடையில் கைகள் தடவத்தொடங்கியது. இந்தப் பிரச்சனை பொதுவாக எல்லா இயக்க பயிற்சி முகாம்களிலுமே இருந்ததுதான். அதுவும் வயது குறைந்தவனாகவும் கொஞ்சம் நிறமாகவும் இருந்தாலே போதும் அவன்தான் அந்த பயிற்சிமுகாமின் கவர்ச்சிக் (கண்ணன்)கன்னி. அந்த முகாமில் அப்பிடியான ஒருசிலரில் அவனும் ஒருத்தன். சிலநாள் கழித்து பயிற்சி முகாமை பார்வையிட வந்த பொன்னம்மான் பெடியள் உங்கடை பிரச்சனையளை சொல்லலாம் எண்டதும் அவன் கையை உயத்தி இரவிலை படுக்க விடுறாங்கள் இல்லையண்ணை எண்டான். மஞ்சளை என்னதான் அள்ளிப்போட்டாலும் இவங்கடை தொல்லை தாங்கேலாது சரி சரி இன்னம் கொஞ்சம் கூடுதலாய் போடச்சொல்லுறன் எண்டு சொல்லிசிரித்துவிட்டு போய்விட்டார்.ஆனாலும் காத்தாலை விசில் அடித்ததும் எல்லாரும் ஓடிப்போய் முகத்தை கழுவும் நேரம் முதலில் தொடையை கழுவும் சிலரில் அவனும் ஒருத்தனாகவே போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் பயிற்சி ன் போது தடுப்புச் சுவர்போல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்குத்திக்கு மேலாலை ஏறிப்பாயேக்குள்ளை கால்வழுக்கியதில் இரண்டு தொடை பகுதியும் சிராய்ப்பு காயங்கள். ஒரே எரிச்சலாயிருந்தது. பயிற்சி முகாமிலை சின்னகாயங்களிற்கு என்ன மருந்து எண்டு பெரும்பாலானவைக்கு தெரிந்ததுதான் புழுதியையோ சேத்தையோ அள்ளி பூசிப்போட்டு அடுத்தவேலையை பாக்கவேணும். அவனும் சேத்தை அள்ளி பூசிப்போட்டு படுத்துவிட்டான். அன்றும் அவன் தொடையில் ஒன்று முட்டியது ஏற்கனே எரியிது இதுக்கை இவனொருத்தன் எண்படி ஒருதடைவை தட்டிவிட்டான். ஆனால் பக்கத்தில் படுத்திருந்தவனோ விடா முயற்சி விக்கிரமாதித்தன். இவன் எட்டிப்பிடித்து விக்கிரமாதித்தனின் ஆயுதத்தைமுறுக்க அவன் ஜயோ எண்டு கத்த எல்லாரும் நித்திரையாலை எழும்பி ஓடிவர இரண்டுபேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்திச்சினம். விலக்கு பிடித்த பயிற்சி ஆசிரியர் இரண்டு பேருக்கும் விடியவரைக்கும் சென்றி(காவல்கடைமை)என்று தண்டைனை கொடுத்தார். பிழை விட்டது அவன் எனக்கு எதுக்கு தண்டனை என்றான். சொல்லுறதை செய்யவேணும் கேள்வி கேக்கக்கூடாது அதுதான் எங்கடை இயக்கம் எண்டு விளக்கம் வேறை குடுத்திட்டு அவர் போயிட்டார்.நாட்டை விடுவிக்க போராட்டம் நடந்தவந்த இடத்திலை தொடையை விடுவிக்க போராட்டம் நடத்தவேண்டியிருக்கவேண்டியிருந்தது
000000000000000000000000000
அடுத்நாள் காத்தாலை மற்றவன் இவனை முறைத்து பாத்தபடி தாண்டித்தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். இரவு சாப்பாடு முடிஞ்சதும் பெடியள் ஒருத்தரும் கையை காலை போடாமல் ஒழுங்கா படுக்கவேணும் அப்பதான் காத்தாலை ஓடேக்குள்ளை களைக்காது என்று அறிவுரை சொல்லிவிட்டு போய்விட்டார்.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். இரண்டு மூண்டு நாள் போயிருக்கும் அவரும் கையை போட்டார். ஆனால் வற்புறுத்தமாட்டார்.சினிமாவிற்கு நடிக்கவரும் நடிகைகள் பலரின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க யாராவது ஒரு நடிகருடன் ஒட்டிக்கொள்வதைப்போல அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான். அவனிற்கும் அவனது காதலியின் நினைவுகள் வரும்போது அவர்மீது கையை போடுவான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.பயிற்சி முகாம்களிலும்சரி பின்னர் முகாம்களிலும்சரி ஆண்களிடம் இருந்த இந்த பிரச்சனைகள் பெரியளவு பிரச்சனையானதில்லை சின்ன சின்ன சண்டைகளுடன் முடிவிற்கு வந்துவிடும். ஆனால் பெண்கள் முகாம்களில் பலர் இயக்கத்தை விட்டு போகின்ற அளவிற்கு அது பெரிய பிரச்சனையாகவேயிருந்தது.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.3

10:40 AM, Posted by sathiri, One Comment

காதல் ..
 யுரேகா
அவனது கிராமத்தில் இருந்த ஒருசில கிறீஸ்தவ குடும்பங்களில் யுரோகாவின் குடும்பமும் ஒன்று. அவளிற்கு மூத்த ஒரு ஒரு சகோதரி இருந்தாள். யுரேகா அவனது ஆண்டுதான் பாடசாலை வேறு. சிறு வயதிலிருந்தே அவனிற்கு யுரேகாவை பழக்கம் என்றாலும் பெரியளவு அவளுடன் கதைப்பது குறைவு.அப்பொழுது அவர்கள் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த நேரம். அதுவரை திருகோணமலையில் ஆசிரியையாக இருந்த அவனது சின்னம்மா மாற்றலாகி ஊரிற்கு வந்து சேர்ந்திருந்தார்.இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த அவனது பாடங்களில் சின்னம்மா அதிக கவனமெடுத்தார். அப்பொழுது யுரேகாவும் அவனது சின்னம்மாவிடம் படிப்பதற்கு வரத்தொடங்கியிருந்தாள்.அவன் மீண்டும் என்னதான் கஸ்ரப்பட்டு படிச்சாலும் கணக்குமட்டும். அவனிற்கு கணக்குவிட்டுக்கொண்டிருந்தது. யுரோகாவை பார் கணக்கிலை கலக்கிறாள் எண்டு எண்டு சின்னம்மா குட்டிக் குட்டி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.ஆனாலும் ஏறவில்லை. ஆனால் அவளிற்கு தமிழ் தடக்கியது விஞ்ஞானம் விண்ணாமாய் தெரிந்தது . அதனால் அவளும் அவனும் ஒரு ஒப்பந்தம் போட்டனர். பாடசாலை நேரம் சின்னம்மாவின் மேலதிக பாட நேரம் தவிர்ந்து அவன் அவளிற்கு தமிழிற்கும் விஞ்ஞானத்திற்கும் உதவுவது . அவள் கணக்கு சொல்லிகொடுப்பது. அவனது ஆசிரியரும் சின்னம்மாவும்வெருட்டி உருட்டு சொல்லி கொடுத்தபோதும் புரியாத கணக்கு அவள் அருகிலிருந்து புள்ளி வைத்து கோடு போட்டு பெருக்கி கூட்டி விடையை காட்டியபொழுது அவனின் மனதை கூட்டிப் பெருக்கி புள்ளி வைத்து கோலம் போட்டது போல் இருந்தது.அருகே அவளின் மூச்சுக்காற்று பட்டதுமே முக்கோணம். வட்டம் விட்டம்.ஆரை என அனைத்தின் பாகைகளும் பட்டென மனதில் பதிந்தது.அதே போல அவன் விஞ்ஞானம் விளங்கப் படுத்தியபொழுது அவளிடம் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் தமிழ் பாடம்தான் அவர்களை இணைத்ததுஅப்பொழுது அவர்கள் படித்தது பத்தாவது.

டேய் எனக்கொரு கட்டுரை வேணும் சொல்லித்தாவன்.

என்னத்தை பற்றி .

 மீனவர்கள் பற்றினது .

சின்னப் பிரச்சனை சொல்லுறன் எழுது

அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஒரு மீனவன் மனைவி பிள்ளைகளிடம் விடைபெற்று கட்டுமரமேறினான் என்று தொடங்கியவன் அன்றைய காலத்தில் அவன் படிக்கத்தொங்கியிருந்த மார்க்சியம். செஞ்சீனம். கியூபாவும் விடுதலையும். வியட்நாம். எரித்தியா .மாக்சிசம். நாசிசம். யூதாயிசம். சியோனிசம். கசம். பூசம். ரசம் எண்டு என்னென்ன இசங்களை கலக்க முடியுமோ அத்தனையையும் கலந்து ஒரு கட்டுரையை சொல்லி முடித்தான்.கட்டுரையை படித்த அவளதுதமிழாசிரியை தலையை சொறிந்தோடு உண்மையிலேயே நீதான் எழுதினியா எண்டு கேக்க அவளும் ஓமெண்டு தலையாட்ட .அவரும் வேறை நாலைஞ்சு ஆசிரியர்களிடம் காட்டிவிட்டு கடைசியிலை காலத்திற்கேற்ற கட்டுரையெண்டு முதலாவதாய் தேர்தெடுத்திருந்தார்கள்.அவளிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி அன்று அவனிடம் வந்தவள் நன்றி கூறிவிட்டு. ஜயோ.... உனக்கு எதாவது தரவேணுமே என்னவேணுமென்றாள். என்ன கேட்டாலும் தருவியா என்றான். ஓமடா என்ன வேணுமெண்டாலும் தாறன். என்ன வேணுமெண்டாலும்?? . ஓமடா ..என்ன வேணுமெண்டாலும்???எத்தினை தரம்தான் கேட்ப்பாய் அப்பிடி என்னதான் வேணும்.சரி அப்ப ஒரு அஞ்சுரூபா குடு குமார் கடையிலை போண்டாவும்சாப்பிட்டு ஒரு பிளேன் ரீயும் குடிக்கவேணும். என்றான். தனது கொம்பாசை திறந்து அஞ்சுரூபாவை எடுத்து நீட்டி விட்டு அவன்போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். டேய் தின்னி பண்டாரம் இந்த நேரம் அஞ்சுரூபாயா கேட்பாய் இப்பவாவது உன்ரை காதலை சொல்லி வேறை எதையாவது கேட்டிருக்கலாமே என்று மனம் அவனை திட்டியதுஆனாலும் அவனுடை அன்றைய சந்தர்ப சூழ்நிலைகளும் அவளது குடும்ப நிலையிலும். அவன் அடக்கிவாசிக்க வேண்டிய நிலை. இன்னொருநாள் அவள் அவனிடம்

 டேய் எனக்கொரு கவிதை வேணும்..

கவிதை எதைபற்றி ??

 காதல்பற்றி அவள் குரல் கம்மியது.

 காதலா??

யாரையாவது காதலிக்கிறியா??

 எனக்கில்லை என்ரை சினேகிதிக்கு அவள் ஒருத்தனை லவ்பண்ணிறாள் அதுதான் என்னட்டை கேட்டாள் நான் உன்னட்டை கேக்கிறன். வேண்டாமடி இப்பிடித்தான் நான் என்ரை சினேதனுக்கு ஒரு காதல் கவிதை எழுதி குடுத்து அது வாத்திட்டை பிடிபட்டு அவனைவிட நான்தான் சாறிட்டை(மானிப்பாய் இந்துவின் அதிபர்) குனியவிட்டு குண்டியிலை வாங்கினனான். நீ பயந்தால் வேண்டாம். இவளவை இப்பிடித்தான் பப்பாவிலை ஏத்துவாளவை சரி சொல்லுறன் எழுது அவன் சொல்ல சொல்ல அவள் எழுதினாள்.சிலநாள் கழித்து அவர்களிற்கு கணிதபாடம் கற்பிப்பதற்காக அவனது சின்னம்மா அவனது புத்தகத்தை புரட்டியபொழுது அதற்குள் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்கதொடங்கினார். அவளது முகம் மாறிப்போய் விட்டிருந்தது கடிதத்தை படித்து முடித்த சின்னம்மா அவனிடம் டேய் இது எத்தனை நாளாய் நடக்குது என்றார். இவள் இப்பிடித்தான் எங்கையாவது மாட்டிவிடுவாள் எனக்குத் தெரியும் என்று மனதில் நினைத்தபடி உவள்தான் யாரோ சினேகிதிக்கு எண்டு கேட்டாள் அதுவும் ஒருக்காதான் சொல்லிகுடுத்தனான் எண்டான். சின்னம்மா ஒண்டும் புரியாமல் இரண்டுபேரையும் மாறி மாறி பார்க்க அவள் கண்கள் கலங்க நடுங்கியபடி அங்கிருந்து எழும்பி ஓடிவிட்டாள். அவன் கடிதத்தை வாங்கி படித்தான். அதில் அவன் சொன்ன கவிதை வார்த்தைகளோடு அவள் அவனிற்காக எழுதியிருந்த காதல்கடிதம். சே.. தன்ரை காதலை சொல்லவே சொந்தமாய் நாலுவரி எழுதத்தெரியாதவள் என்ன செய்யப்போறாள் என்று அலுத்துக்கொண்டான்.
                                                   000000000000000000000000000000
 இரண்டு குடும்பத்தினரும் கூடிக்கலந்து பேசி பல்கலைக்கழகம் படித்து முடிஞ்சதும்தான் கலியாணம். றோட்டு தெருக்களிலை சுற்றக்கூடாது வீட்டிலை இருந்து கதைக்கலாம். என்கிற சில கண்டிப்பான உத்தரவுகளுடன் அவர்களது காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தனை இலகுவாக அவர்களது காதலை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதற்கு அவர்கள் காதல் புனிதமானது என்றோ அல்லது காதலை வாழவைக்கவோ இல்லை. இரண்டு பக்கமுமே வலுவான வேறு காரணங்கள் இருந்தது. யுரேகாவின் மூத்த சகோதரி கா.பொ.த உயர்தரம் படித்தக்கொண்டிருந்தபொழுது சக மாணவன் ஒருத்தனை காதலித்திருந்தாள். அவன் சைவக்காரன் வேறை. அந்த காதலை தடுக்க அவளது பெற்றோர் மென்முறை வன்முறை எல்லாம் பாவித்து தோற்றுப்போயிருந்தனர். கடைசியாள் அவள் தற்கொலை முயற்சிவரைபோய் அந்தக்கதையே கொஞ்சக்காலம் ஊர்சனங்களில் வாயில் அவலாய் நிறைந்திருந்தது. எதுவும் செய்ய முடியாமல். காதலை ஏற்றுக்கொண்டனர். காதலித்த பெடியன் குடும்பத்தினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆனால் ஆனால் அவன் கிறீஸ்த்தவத்திற்கு மதம் மாறமாட்டான் என்று அடித்து சொல்லிவிட்டார்கள். இப்படியே இழுபறிப்பட்டு பல்கபலைக்கழக படிப்பு முடிந்ததும் சாதாரணமாக பதிவுத் திருமணம் செய்துவைத்து இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவது என முடிவு செய்திருந்தனர். அவர்களும் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்தக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் மீண்டும் இவளது காதலால் அவர்களது குடும்பக்கதை ஊர்வாயில் அவலாகிவிடக்கூடாது என்பது அவர்களது பக்கத்து கவலையோடு கூடிய காரணம்.

 இவன்பக்கத்தில் என்னவென்றால் அப்பொழுது இயக்காரரோடு அதிகமாய் திரியத்தொடங்கியிருந்தான். அந்த வருசம் சோதினையில் கோட்டை விட்டுவிடுவானொ என்று பயம்வேறை. கொஞ்சம் இறுக்கமாய் கண்டிச்சால் அடுத்தநாளோ இயக்கத்திற்கு ஓடிவிடுவானோ என்கிற கவலை அதாலை இந்தகாதலாவது அவனை கட்டிப்போட்டு படிக்கவைக்கும் என்று நினைத்தார்கள்.இந்தக்காரணங்களால் அவர்கள் காதலில் எரிந்த பச்சைவிளக்கு வெளிச்சத்தின் பலாபலன்களை நன்றாகவே அனுபவித்தனர். சின்ன சின்ன சில்மிசங்கள். கிடைக்கும் இடங்களிலெல்லாம் கிடைத்த சந்தர்ப்பங்களை அவன் தவறவிடுவதில்லை. அவளும் அளவோடு அனுமதித்திருந்தாள் என்பதைவிட அவளிற்கும் அது பிடித்திருந்தது. எல்லை மீறும்பேதெல்லாம் நுள்ளிவிடுவாள்.

எப்பிடித்தான் இவளவை அடக்கிறாளவையோ என்று அவனிற்கு எரிச்சலாகவும் இருந்தது. ஆனாலும் ஏதோ கிடைத்தவரை லாபம் என்கிறமாதிரி அவனது காதல் போய்க்கொண்டிருந்தது. அதேநேரம் அவனது இயக்கத்தின் தொடர்புகளை குறைக்கச்சொல்லி அவளது நச்சரிப்பும் கூடிக்கொண்டே போனது.அவளின் நச்சரிப்பு கூடும்பேதெல்லாம் அவளது உதடுகளை இவனது உதடுகள் மூடிவிடும். ஆனாலும் ஒருநாள் அவள் விடவில்லை நீ என்னை ஏமாத்துறாய் உண்மையா என்னை விரும்பிறியா?? உனக்கு எப்பிடி அதை நிருபிக்கிறது?? அதை நீதான் செய்யவேணும். வீட்டிற்கு போயிருந்தவன் எப்பிடி இவளவைக்கு நிருபிக்கிறது யோசித்தவன். வயர் துண்டு ஒண்டைதேடியெடுத்தான்.அதைவாயில்வைத்துகடித்து அதன்கம்பியைமட்டும்இழுத்தெடுத்தன்.அதன்நுனியை u வடிவில் வளைத்தவன். அதை நெருப்பில்சூடாக்கி இடக்கை மணிக்கட்டில் மெதுவாய் வைத்து அமத்தினான் .ஸ் ..என்கிற சத்தத்துடன் எரிந்தது. பொங்கிவந்த இடத்தில் தேய்த்தான் அந்த இடத்தில் u என்கிற அடையாளம் தோலில் சிவப்பாய் தெரிந்தது . கை மணிக்கட்டில் ஒரு துணியை சுற்றி கட்டினான் இந்தநேரம் அவளின்ரை அப்பாவும் அக்காவும் நிக்கமாட்டினம் என்று நினைத்தபடி அவள் வீட்டிற்கு போயிருந்தான். ஜயையோ கையிலை என்ன காயமா?? பதறினாள். அவிழ்த்து காட்டினான் u சிவப்பாய் தெரிந்தது எனக்கு வேறை வழிதெரியேல்லை ureka என்றவனிற்கு.சும்மா ஏதோ கோபத்திலை சொல்லிட்டன் அதக்கு இப்பிடிபோய் செய்திட்டியே.. என்றவளின் கண்ணீர்த்துளியொன்று uஎழுத்தின் மீது விழுந்தது. ஏற்கனவே எரியிது இதுக்கை இவள்வேறை கண்ணீர் ஊத்தி எரியவைக்கிறாள் எண்டு அவன் எரிச்லை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தபொழுது ரீ கொண்டு வந்து வைத்து விட்டு கொடுப்பிற்குள் ஒரு நமட்டு சிரிப்புடன் அவளது தயார் போனார். தன்ரை மகளை கையிலை கையிலையே குத்திட்டான் இனி கைவிடமாட்டான் என அவர் நினைத்திருக்கலாம்.அடுத்தநாள் கோயிலடியில் அவனது கையை பார்த்த அவனது நண்பன் ஒருத்தன் டேய் என்னடா கையிலை பு னா எண்டு சூடுவைச்சிருக்கிறாயெண்டான்.

ஆங்கில எழுத்து தமிழில் அர்த்தத்தையே மாற்றிவிட்டது அப்பொழுதுதான் அவனிற்கு புரிந்தது.

 உன்ரையாளிற்கு என்னடா பேர்.??

 மலர்....

மலரெண்டால் ம எண்டெல்லோ வரும் அதென்ன பு..??

புஸ்பம் எண்டும் சொல்லலாம்.

அதுதான். டேய் அது பல்லில்லாத வாதியின்ரை பழைய பகிடி உண்மையை சொல்லடா.

 டேய் வெங்காயம் தமிழிலை யோசிக்காமல் இங்கிலிசிலை யோசி.. கொஞ்சம் உத்துப்பாத்தவன் u அட யுரேகாவா?? வாயை பிளந்தான்   
                                                            000000000000000000000000000                                                                                                                                                                                                                               
அன்று கா.பெ.த. சாதாரணம் இறுதிப் பரீட்சை எழுதிமுடித்துவிட்டு வெளியே வந்தான் நல்லமழை கொட்டிக்கொண்டிருந்தது . நண்பர்களிடம் விடைபெற்றவன் சைக்கிளை மிதித்தான் அந்தோனியார் கோயிலின் முன்னால் இருந்த பஸ் நிலையத்தில் சைக்கிளோடு அவள் காவலிருந்தாள். சைக்கிளை விட்டு இறங்கியவன் அவளோடு சேர்ந்து நனைந்தபடி சைக்கிளை உருட்டினான் அவளிடம் குடை இருந்தது விரிக்கவில்லை.
நல்லா எழுதினியா??

 ம்..ஏதோ எழுதியிருக்கிறன்.

 இந்த நாலுமாத லீவிலை என்ன செய்யப்போறாய்.

என்ரை எலெக்றொனிக் சாமான் திருத்திற படிப்பை தொடருவம் றிசல்ட் வந்தாபிறகு யோசிப்பம்.

 டேய் இது எங்கடை வாழ்க்கை பிரச்சனை நீ சர்வசாதாரணமாய் சொல்லுறாய்.

 அதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுறாய்.

 நாங்கள் இரண்டு பேருமே யூனிவசிற்றி போனால்தான் எங்கடை வாழ்க்கையே.

 ஓ... பெயில் விட்டால் கழட்டிவிட்டிடுவியா??

ஏனடா இப்பிடி கதைக்கிறாய் நான் எவ்வளவு கனவுகளோடை இருக்கிறன் தெரியுமா??

எனக்கும்தான் நிறைய கனவுகள் இருக்கு ஆனால் உன்னை மாதிரி சுயநலக்கனவுகள் இல்லை.
அப்பொழுது அவர்கள் மருதடி பிள்ளையார் கோயிலின் முன்னால் வந்திருந்தார்கள். எனக்குத்தெரியும் நீ என்ன நினைக்கிறாயெண்டு எனக்கொரு சத்தியம் பண்டு . என்னவெண்டு?? நீ இயக்கத்துக்கு போகமாட்டனெண்டு என்ரை தலையிலை சத்தியம் பண்டு. அந்தோனியார் அறிய நான் இயக்கத்துக்கு போகமாட்டன். அந்தோனியார் வேண்டாம் பிள்ளையார் மேலை சத்தியம் பண்ணு. அந்தோனியார்தானே உங்கடை கடவுள். அதாலைதான் சொல்லுறன் உங்கடை கடவுள்மேலை பண்ணு. சந்தர்பம் பாத்து அடிக்கிறதிலை பெட்டையள் கெட்டிக்காரியள் என்று மனசிலை நினைச்சவன். மருதடி பிள்ளையாரை திரும்பி பாத்தபடி பிள்ளையாரே உனக்குமேலை சத்தியம்பண்ண மனசுக்கு கஸ்ரமாயிருக்கு என்று நினைத்தவன் பிள்ளை......ஆர் மேலை சத்தியமாய் இயக்கத்துக்கு போகமாட்டன் அவள் தலையில் அடித்தான்.அவளிருந்த உணர்ச்சி வேகத்தில் பிள்ளைக்கும் ஆருக்கும் இருந்த இடைவெளியை கவனிக்கவில்லை.கொம்பாசை திறந்து பத்துரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டிவிவிட்டு அவன் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

000000000000000000000

அவனது நண்பன் சுரேஸ் புளெட் இயக்கதில் இருந்தவன் அவனிடம் தன்னுடைய சைக்கிளை கொடுத்து வீட்டில் கொடுத்துவிட சொல்லிவிட்டு மானிப்பாயில் இருந்த இரகசிய முகாமில் அன்புவை சந்தித்தான். நீங்கள் சொன்னமாதிரி சோதினை எழுதியாச்சு இங்கை இருந்தால் வீட்டு காரர் தேடி பிடிச்சிடுவினம். அதாலை கெதியா அனுப்புங்கோ என்றான். அன்றே அன்பு அவனை மாதகல் கொண்டுபோய் சேர்த்து பீற்றரிடம் ஒப்படைத்திருந்தான்.அவனோடு சேர்த்து ஏழுபேர்பீற்றரின் பொறுப்பில் பண்ணத்டதெரிப்பு பத்திமாதா கேயிலிற்கு அருகில் யாருமற்ற பாழடைந்த வீடு ஒன்றில் தங்கியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் சொந்தமாக வள்ளங்கள் அதிகம் இருந்ததில்லை பெரும்பாலும் கடத்தல் காரர்களின் வள்ளங்கள் அல்லது மீனவர்களிடம் வாடைகைக்கு எடுக்கும் வள்ளங்களையே பாவித்தனர். அனைத்து இயக்ககங்களின் நிலைமையும் அப்பிடித்தான். அடைமழையும் காற்றுமாக இருந்த காரணத்தால் எந்த கடத்தல் வள்ளங்களும் இந்தியாவிற்கு போகவில்லை . ஏதாவது வள்ளம் இந்தியாவிற்கு போகிறதா என ஒவ்வொருநாளும் பீற்றர் கடற்கரைக்கு போய் விசாரித்துக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஒருவரோடு ஒருத்தர் அதிகம் கதைக்காமலேயே இருந்தனர் அதைவிட இயக்கத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக சொந்த பெயர் ஊர் விபரம் மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது பொதுவான் விதி. ஆனால் இரண்டுநாள் பொனதுமே அவர்களிற்கு கதைக்க ஒரு விசயமும் இல்லாமல் போக தாங்களாகவே தங்கள் கதைகளை சொல்லத் தொடங்கியிருந்தனர்.

அதில் ஒருத்தனை காதலிச்சவள் ஏமாத்திவிட்டாளாம். அவனின்ரை காதல் கதை எங்கள் பொழுதை போக்க பெரிதும் உதவியது. ரெயினிங் முடிஞ்சு வந்ததும் முதல்வெடி அவளுக்குத்தான் எண்டு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அன்று அஞ்சாவது நாளாகி அடைமழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அன்று மாலை கடற்கரைக்கு போயிருந்த பீற்றர் 'இண்டைக்கு இரண்டு வண்டிபோகுது அதிலை ஒண்டிலை இடமிருக்காம் இண்டைக்கு நீங்கள் போகலாமெண்டான்' அப்பொழுதுதான் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி.ஏழுபேராக காத்திருந்தவர்களில் இரண்டா ம் நாள் ஒருத்தனும் மூன்றாம் நாள் ஒருத்தனும் வீட்டிற்கு போய்விட ஜந்து பேர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். ஒருத்தலும் கனக்க உடுப்பு எடுக்கவேண்டாம். காற்சட்டைக்கு மேலை ஒரு சாறம். ஒண்டுக்மேலை இன்னொன்றாய் இரண்டு சேட்டு மட்டும் போடச்சொல்லியிருந்தான். ஏதோ வெளிநாட்டிற்கு போறது போல சூட்கேசில் உடுப்பபுக்களை கொண்டு வந்திருந்தவர் கவலையோடை மூண்டாவது சேட்டை போட்டுக்கொண்டார். இரவு எட்டுமணியளவில் அனைவரையும் பீற்றர் கடற்கரைக்கு அழைத்துப் போயிருந்தவன்.அங்கு நின்றவர்களிடம் கதைத்துவிட்டு அவர்களை கடற்கரையோரமாய் இருந்த கொட்டிலுக்குள் அமர வைத்துவிட்டு போய்விட்டான் .இருவர் வள்ளங்களில் பொருட்களை ஏற்றிமுடித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டிருந்தனர்.

 நேரம் ஓடிக்கொண்டிருந்தது . இப்பிடியே எங்களை கடற்கரையிலை விட்டிட்டு போயிட்டானோ? என்றான் ஒருத்தன். சே ..பீற்றர் அப்பிடி செய்யமாட்டான் அவனை எனக்கு நல்லாத்தெரியும். என்றான் இவன். சிலநேரம் ஆமிக்காரன் வந்தால் என்ன செய்யிறது எந்தப்பக்கமாய் ஓடுறது எண்டான் இன்னொருத்தன். ஆமிவந்தால் கடல்பக்கமாய் ஓடி தண்ணிக்கை படுக்கலாம். சே .சே எனக்கு நீந்தத் தெரியாது மற்றப்பக்கம் பனை பக்கமாய் ஓடுறதுதான் நல்லது. ஓடினால் கட்டாயம் சுடுவாங்கள் பேசமல் இப்பிடியே இருக்கிறதுதான் நல்லது அவங்கள் வந்து கேட்டால் நாங்கள் மீன்பிடிக்கிற ஆக்கள் எண்டு சொல்லுவம். இப்பிடியான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே வேறு நாலு பேருடன் பீற்றரும் வந்து கொண்டிருந்தான்.அவர்களை கண்டதும்தான் அவர்களிற்கு நெஞ்சுக்கை தண்ணி வந்தது மாதிரி இருந்தது.அவர்கள் எல்லாருமாக சேந்து வள்ளங்களை கடலிற்குள் தள்ளிக்கொண்டிருக்க . அவர்களிடம் வந்த பீற்றர் என்ன பயந்துட்டியளோ..ஓட்டி ஒருத்தான் தண்ணியடிச்சிட்டு எங்கையே படுத்திட்டான் தேடி பிடிச்சுக்கொண்டுவர நேரம்போட்டுது. கெதியவாங்கோ என்று அவர்களை அழைத்துப்போய் பொருட்கள் குறைவாய் இருந்த வள்ளத்தில் நால்வரும் மற்றையதில் ஒருவருமாய் ஏறச்சொன்னான். அவனிற்கு இதுதான் முதல் கடற்பயணம். அவனிற்கு அவனுடன் வந்த மற்றையவர்களிற்கும்தான். வள்ளம் புற்படும் முன்னர் ஓட்டி அவர்களை பாத்து . பெடியள் கவனமா கேளுங்கோ நல்லா முன்பக்கமாய் போய் ஆளோடை ஆள் நெருக்கமாய் இருங்கோ. யாருக்காவது சத்தி வந்தால் அப்பிடியே பின்னாலை வந்து இந்த கயித்தை பிடிச்சுக்கொண்டு கடலுக்கை எடுக்கவேணும் சொல்லிப்போட்டன். போட்டுக்கை யாராவது சத்தியெடுத்தால் கடலுக்கை தூக்கியெறிஞ்சு போட்டு போடுவன். சத்தியெடுத்தால் கடல் தண்ணியிலை வாயை கொப்பிளிச்சுபோட்டு கொஞ்சம் குடியுங்கோ பிறகு வராது என்று பயமுறுத்தும் பிரசங்கம் ஒன்றை வைத்துவிட்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து நெஞ்சில் சிலுவை போட்டுக்கொண்டவன். வள்ளத்தில் பூட்டியிருந்த மூன்று இயந்திரத்தில் ஒன்றை இயக்கினான். அவர்களிற்கு கைகாட்டிக்கொண்டிருந்த பீற்றரும். மாதகல் கடற்கரையும் மெல்ல மறையத்தொடங்கியிருந்தது.

சாறத்தால் கழுத்துவரை போர்த்துக்கொண்டு குந்தியிருந்தவனின் நினைவுகள் அப்பொழுதுதான் அவளை நினைக்கத்தொடங்கியிருந்தது. ஜஞ்சு நாளாச்சு இப்ப எப்பிடியும் ஊருக்கே விசயம் தெரிஞ்சிருக்கும்.அவளிற்கும் தெரிஞ்சிருக்கும். என்ன செய்திருப்பாள்??. அழுதிருப்பாள்..சிலநேரம் தற்கொலை முயற்சிஏதும்..?? சே..சே..அப்பிடியெல்லாம் அவள் போகமாட்டாள் சரியான அழுத்தக்காரி. ஒரு சொல்லுக்கூட சொல்லேல்லையெண்டு கேவத்திலை என்னை மறந்திடுவாளோ?? சே என்னை மறக்கமாட்டாள். நான் வரும்வரைக்கும் காவலிருப்பாள்.. அவள் காவலிருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை நான் அவளுக்கு செய்து குடுத்த சத்தியம் எல்லாத்தையும் மீறிட்டன். அவள் தொடந்து படிப்பாள். என்ரை படிப்பு இதோடை முடிஞ்சுது.அதோடை இயக்கத்திலை வேறை காதலிக்கக்கூடாது எண்டு சட்டம்வேறை .அவளை காதலிக்காமலேயே இருந்திருக்கலாம். காதலிக்கேக்குள்ளையும் கட்டிப்பிடிக்கேக்குள்ளையும் எங்கை போனது இந்தப் புத்தி. சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும்.. வள்ளத்தின் மூன்றாவது இயந்திரமும் இயக்கப்பட அது கடல் நீரை இன்னும் வேகமாகக் கிழிக்கத்தொடங்கிருந்தது.அந்தக் கும்மிருட்டில் இடக்கையின் மணிக்கட்டை பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை வலது கையால் அந்த இடத்தில் தடவிக்கொண்டான்

                                                        0000000000000000

வருடங்கள் உருண்டோடி விட்டிருந்தது அவன் அவளை பின்னர் இரண்டொரு தடைவை கண்டிருந்தாலும் கதைத்தில்லை. கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று செய்திகள் அவனிற்கு கிடைத்து. ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிக்கவில்லை நான்கு வருடத்திலேயே அவளின் கணவனிற்கு மூளைப்புற்றுநோய் தாக்கியதில் மரணமடைந்து விட்டான். சில காலங்களின் பின்னர் அவளது விலாசத்தை கண்டு பிடித்து இரத்மலானை கடற்கரை பக்கமாக இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். அவளது மாமியார் கதவைத் திறந்தார் பின்னால் மானார். நான் யுரேகாவின்ரை பிறெண்ட். யுரோகாவை பாக்கலாமோ??என்று இழுத்ததும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்ற அவர்களிடம். அருணும் எனக்கு பிறெண்ட்தான் ஆனால் அவனின்ரை பிரச்சனை நடக்கேக்குள்ளை நான் வெளிநாட்டிலை. இப்பதான் வந்தனான். அதுதான் வந்தனான் .இப்பிடி பல தான்..நான்..ற்கு பிறகுதான் வாங்கோ என்றபடி கதவு திறந்தது கையில் ஒன்று பின்னால் ஒன்று யுரேகா வந்துகொண்டிருந்தாள். கொழும்புத்தண்ணிக்கு முன்னை பாத்ததைவிட கொஞ்சம் நிறமாய்தான் இருந்தாள் கொஞ்சம் உடம்பும் வைத்திருந்தது ஆனாலும் அழகு கட்டுக்குலையாமலத்தான் இருந்தது. நீயா எப்பிடி வீட்டை கண்டு பிடிச்சனி. ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள்.அதே கணம் மாமன் மாமியை பார்த்து விட்டு அகலத்தை உடைனேயே குறைத்துக்கொண்டாள். வழைமையான விசாரிப்புக்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் போது மாமியார் தேனீரை கொண்டு வந்து வைத்துவிட்டு போனதன் பின்னர். பேச்சு அவர்கள் பக்கம் பக்கமாய் திரும்பியது. கடைசியாய் உன்னை எவ்வளவோ தேடினனான் உன்ரை அம்மா கூட உன்ரை தகவல் ஒண்டும் தெரியாது எண்டிட்டா. நீ இருக்கிறியா இல்லையா எண்டு கூட தெரியாத நிலைமை. எனக்கும் வேறை வழி இருக்கேல்லை. அருணும் நல்வர் எந்தக் குறையும் இல்லை ஆனால் என்ரை விதி அவ்வளவுதான். அவளின் கண்கள் கலங்கியது. பின்னர் அவன் பேச்சை மாற்றி வேறு விடயங்களை பேசியபின்னர் விடைபெற்றபொழுது வெளியே வாசல்வரை வழியனுப்ப தனியே வந்தவளிடம். அதுவரை தொண்டையில் உருண்டுகொண்டிருந்த விடயத்தை மெதுவாய் துப்பினான்.

 யுரேகா தயவு செய்து குறை நினைக்காதை நீ விரும்பினால் நான் உ..............ன்...............னை..........க..............லி. அவன் முடிக்கவில்லை. பிளீஸ் ஸ்ரொப்பிற். என்றாள் அவள் ஸ்ருப்பிற் என்றது மாதிரி அவனிற்கு கேட்டது. நான் உன்னட்டை காதலைத்தான் எதிர்பாத்தனான். கருணையை இல்லை..நான் உன்னிலை வைச்ச காதல் இப்பவும் அப்பிடியேதான் இருக்கு. நான் சாகும் வரைக்கும் அது அப்பிடியேதான் இருக்கும். எனக்கு நல்ல புருசன் கிடைச்சார். அதே நேரம் தங்கடை மகளை பாக்கிறமாதிரி நல்ல மாமா..மாமி. என்னை பாக்கினம். இனி என்ரை பிள்ளையளை நல்லா வளக்கிறதுதான் என்ரை நோக்கம். நீ இப்பவும் உங்கடையாக்களின்ரை வேலையாய்தான் கொழும்பக்கும் வந்திருப்பாய். தயவுசெய்து இனி என்னை பாக்கஇங்கை வராதை. இதுதான் நாங்கள் சந்திக்கிறது கடைசியாய் இருக்கட்டும். என்டு படபடத்து முடித்தவள் அவனது கையை இழுத்து தனது கையில் சுருட்டி வைத்திருந்த சில ரூபாய் தாள்களை திணித்துவிட்டு போ இனிவராதை என்றுவிட்டு வேகமாய் உள்ளே போய்விட்டாள். காதுக்கு பக்கத்தில் 50 கலிபர் ஒண்டு அடிச்சு ஓய்ஞ்சது போல இருந்தது தன்னை சுய நினைவிற்கு கொண்டு வந்தவன் கையை விரித்து பார்த்தபோது சில 500 ரூபாய் தாள்கள் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதை திரும்ப அவளிடம் கொடுக்கலாமென நினைத்து பார்த்தபொழுது கதவு சாத்தப்பட்டுவிட்டிருந்த. என்னங்கடா இவளவை காதல் அப்பிடியே இரக்குதாம் கலியாணம் கட்ட கேட்டால் மாட்டாளாம். புரிஞ்சு கொள்ளவே முடியிதில்லை. ஒரு லயன் லாகர் 75 ரூபாய்தானே கையிலை 3000 ஆயிரம் ரூபாய் இருந்தது கடற்கரை பக்கமாய் இருந்த BAR ஒன்றை நோக்கி நடந்தபோது இடக்கை மணிக்கட்டை பார்த்தான் எந்த அடையாளமும் இல்லை. பி.கு. அன்று இயக்கத்தில் மாதகல் கரை பொறுப்பாக இருந்த பீற்றர் பின்னர் சயனைற் உட்கொண்டு இறந்துவிட்டான். அதன் விபரங்கள் நான் எழுதும் நாவலில் சேர்த்திருக்கிறேன்.
 கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.1

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை 2

நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம்

12:41 PM, Posted by sathiri, No Comment

18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ---------------------------------------------------------------------------- காயங்களின் எழுத்து ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர் இலக்கியம்.அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும்.அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச்செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது.அதாவது உண்மையை அதிகம் நெருங்கி வரும்போது யுத்த சாட்சியம் சமநிலையானதாக சாம்பல் நிறமுடையதாக அமைகின்றது. உண்மையிடம் இருந்து விலகிச் செல்லும்போது அது அதிகமதிகம் கறுப்பு வெள்ளையாக மாறுகின்றது. இங்கு கறுப்பு, வெள்ளை , சாம்பல் எனப்படுவதெல்லாம் நான் பேச முற்படும் விடயத்தை விளங்கப்படுத்த ஒரு வசதிக்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே.இங்கு ஒன்றை முதலில் தெளிவாகச் சொல்லவேண்டும். கறுப்பு வெள்ளை இரண்டுமே ‘ரிலேட்டிவ்’ ஆன அதாவது சார்பு நிலை வார்த்தைகள் தான்.அவரவர் நோக்கு நிலைகளுக்கு ஏற்ப அவை மாறமுடியும்.எனக்கு வெள்ளையாக இருப்பது இன்னொருவருக்கு கறுப்பாகத்தெரியலாம்.இன்னொருவருக்கு வெள்ளையாகத் தெரிவது எனக்கு கறுப்பாகத்தோன்றலாம்.ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள் என்ற அர்த்தத்திலேயே இங்கு கறுப்பு வெள்ளை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும். அரசியல் அர்த்தத்தில் கறுப்பு வெள்ளை இருமை எனப்படுவது - ‘பைனறி ஒப்பசிஷன்’ எனப்படுவது- துருவ நிலைகளைக் குறிக்கிறது.கறுப்பு, வெள்ளை அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் இருமையைக் குறிக்கவில்லை.அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை அது ஓர் ஒற்றைப்பரிமாண அரசியலே.அதாவது ஏகத்துவ அரசியலே.கறுப்பின் இருப்பை வெள்ளை ஏற்றுக்கொள்வதில்லை.வெள்ளையின் இருப்பை கறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை.ஒன்று மற்றதைத் தோற்கடிப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ தன்னை மட்டும் ஏகப் பெரும் சக்தியாக ஸ்தாபிக்க முற்படுவதே கறுப்பு வெள்ளை அரசியல் ஆகும்.எனவே கறுப்பு வெள்ளை அரசியலைன் இறுதி இலக்கு ஏகத்துவமே.எதிர்த்தரப்பினை இல்லாமல் செய்ய முற்படுவதென்பது ஏகத்துவம் தான்.அங்கே பன்மைத்துவத்துக்கு இடமில்லை.’டைவர்சிற்றிக்கு’ இடமில்லை. மாறாகச் சாம்பல் எனப்படுவது கறுப்பையையும் வெள்ளையையும் ஏற்றுக்கொள்வது.ஏனெனில் கறுப்பும் வெள்ளையும் கலந்தால் தான் சாம்பல் வரும்.கலக்கப்படும் விகிதங்கள் மாறுபடும்போது சாம்பலின் தன்மையும் மாறுபடும். சாம்பல் எனக்கூறப்படுவது அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை பன்மைத்துவத்தைத்தான் குறிக்கிறது.அதாவது ஏகத்துவத்துக்கு எதிரானது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நாம் இனி யுத்த சாட்சியங்களைப் பார்க்கலாம் உண்மைக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு யுத்த சாட்சியம் உண்மையின் எல்லாப்பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும்.எனவே ஆகக்கூடிய பட்சம் அது சாம்பல் நிறமுடையதாகக் காணப்படும். எனவே ஒரு முழுமையான யுத்த சாட்சியம் எனப்படுவது நிச்சயமாக கறுப்பு வெள்ளை இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இத்தகைய சாம்பல் நிற யுத்த சாட்சியங்களே அதியுச்ச படைப்பாக்க உன்னதங்களை அடையக் கூடிய ஆகக்கூடியபட்ச சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ஈழத்துப்போர் இலக்கியங்களைப் பொறுத்தவரை யுத்த சாட்சியத்தின் தன்மை குறித்து 3 பிரதான போக்குகள் உண்டு. 1.போரைப்போற்றுகின்ற வீரத்தையும் தியாகத்தையும் வழிபடுகின்ற ஒரு வீர யுகத்தைப் பாடுபொருளாகக் கொண்ட படைப்புக்கள்.இப்போக்கினை மரணத்துள் வாழ்வோம் போக்கு எனலாம். 2. போரை,விமர்சிக்கின்ற அல்லது போராட்ட இயக்கங்களுக்குள் காணப்படும் உட்கட்சிப்பூசல்களையும் சகோதரப்படுகொலைகளையும் பாடுபொருளாகக் கொண்டது.இவர்களைப் பொறுத்தவரை மரணத்துள் வாழ்வோம் என்பது சிங்களத்துப்பாக்கிகள் தரும் மரணம் மட்டுமல்ல. தமிழ்த்துப்பாக்கிகள் தரும் மரணமும் தான்.புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வீரத்தையும் தியாகத்தையும் விமர்சிகின்ற ஒளிவட்டங்களைச் சிதைக்கின்ற ஒரு போக்கே இது.1980 களின் நடுக்கூறில் கவிதைகளில் வெளிப்படத்தொடங்கி கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலில் துலக்கமாகத் தெரியத்தொடங்கிய ஒரு போக்கே இது. இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு போக்கு உண்டு. போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள்.மேற்சொன்ன இரு போக்குகளின் விளிம்பில் இருப்பவர்களும் இந்தப்போக்கிற்குள் வருவதுண்டு.ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் சாம்பல் நிறப்பிரதேசம் இது . ஈழத்துப்போரிலக்கியத்தின் வெற்றி பெற்ற படைப்புக்களில் அநேகமானவை இந்தப் போக்குக்கு உரியவை தான். ஈழப்போரின் ஒப்பீட்டளவில் முழுமையான யுத்த சாட்சியம் இங்குதான் இருக்கிறது.மே-18 க்குப் பின் இப்போக்கினை துலக்கமாக அடையாளம் காணத்தக்க படைப்புக்கள் அடுத்தடுத்து வரக்காண்கிறோம். சயந்தனின் ஆறாவடுவும் அப்படியொரு சாம்பல்நிற இலக்கியம் தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளும் சாம்பல் நிறமுடையவை தான்.பா.அகிலனின் சரமகவிகளும் சனாதனனின் முடிவுறாத்தோம்பும் அத்தகையவை தான்.நந்திக்கடல் வீழ்ச்சிக்குப்பின் காலச்சுவட்டில் கருணாகரன் எழுதிய கட்டுரைகளும், யோ.கர்ணனின் கதைகளும் , ஷோபாசக்தியின் ;கப்டனும்; இணையத்தளங்களில் ஐயர் என்பவர் எழுதிய கட்டுரைகளும் கறுப்பு வெள்ளை விகித வேறுபாடுகளை உடைய சாம்பல் பரப்புக்குள் வருபவை தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளின் இலக்கியத்தரம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.ஆனால் யுத்தசாட்சியம் என்று வரும்போது, புனிதங்களை உடைக்கும் ஒரு கதை சொல்லியாக சாத்திரி துருத்திக் கொண்டு தெரிகிறார்.அவருடைய கதாநாயகன் வெளிநாட்டுச் சர்வதே வலையமைப்புக்குள் இயங்கும் ஒரு போராளி.வரையறையற்ற பாலியல் சுதந்திரம் உடைய ஒரு சர்வதேசப்பரப்புக்குள் ஊடாடும் கதாபாத்திரங்கள். அங்கெல்லாம் எத்தகைய ஒழுக்கக்கட்டுப்பாடும் இன்றி, பாலியல் இன்பத்தை துய்த்தபடி தமக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கிறார்கள். ஆயுதக்கடத்தல் மற்றும் ஆயுத பேரங்கள் நிகழும் உலகின் தலைநகரங்கள் தோறும் ஊடாடும் மேற்படி கதாபாத்திரங்கள் ஒரு புறம் ‘ப்றீ செக்ஸை’ அனுபவிக்கிறார்கள்.இன்னொரு புறம் கொழும்பில் தமக்கு தரப்பட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறார்கள்.அவர்கள் வன்னியில் இருந்திருந்தால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக மே -18 வரை பங்கருக்குள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.அவர்கள் அனுபவிக்கும் ‘ப்றீ செக்ஸ்’ அவர்களுடைய இலட்சியங்களுக்கு குறுக்கே நிற்கவில்லை.அதாவது சாத்திரியின் கதை மாந்தர்களில் போராளியைப் பற்றிய புனிதமான படிமங்கள் அப்படியே உடைகின்றன.இங்கேதான் அவர்கள் சாம்பலுக்குள் வருகிறார்கள். கருணாகரனும் கர்ணனும் சொல்வதெல்லாம் உண்மை. 4ஆம் கட்ட ஈழப்போரின் தவிர்க்கப்படவியலாத யுத்த சாட்சியங்கள்.இவர்கள்.ஆனால் அவர்களின் சாட்சியத்தின் சாம்பல் நிறத்தில் தொனிவேறுபாடுகள் உண்டு. உண்மையின் ஒரு பக்கத்தை அவர்கள் வெளியே கொண்டுவருகிறார்கள்.ஆனால் உண்மை எப்போதும் பல பக்கங்களை உடையது. பா.அகிலனின் சரமகவிகளும் உண்மையின் ஒரு பக்கத்துக்கு சாட்சியம் செய்யும் ஒரு சாம்பல் நிற இலக்கியம் தான். ஆனால் சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ உண்மையின் பன்முகத்தன்மைக்கு மேலும் நெருக்கமாக வருகின்றது.அது ஒரு ஓவியனின் தொகுப்பு என்று பார்க்கும் போது அதன் கலைப்பெறுமதி குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.அதேசமயம் ஒரு யுத்த சாட்சியம் என்று பார்க்கும் போது, ஒப்பீட்டளவில் முழுமைக்கு கிட்ட வரும் அதாவது சாம்பல் நிறத்தன்மை அதிகம் உடைய ஒரு மென்யுத்த சாட்சியம் அது.வீடுகளைப் பற்றிய 75 பேர்களது ஞாபகக்குறிப்புக்களினதும் அந்த வீடுகளைப் பற்றி அவர்களே வரைந்த தள வரைபடங்களினதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடப் படவரைகலைஞர் வரைந்த தொழில்சார் தள வரைபடங்களினதும், இவற்றோடு முக்கியமாக வீடுகளைப் பற்றிய சாட்சியங்களுக்கு ஊடாக தான் பெற்றவைகளின் அடிப்படையில் சனாதனன் வரைந்த ஓவியங்களினதும் தொகுப்பே அந்நூல்.வீடுகளைப் பற்றிய ஞாபங்கள் என்று வரும்போது எல்லாத்தரப்பையும் அந்த நூல் கவனத்தில் எடுத்திருக்கிறது. பணக்காரன். ஏழை, முஸ்லிம்(சிங்களவர்கள் இல்லை) என்று அநேகமான தரப்புக்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.வீட்டைப் பற்றிய ஞாபகம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையும் ஒரு யுத்த சாட்சியம் தான். வீடு யாரால் உடைக்கப்பட்டது?அல்லது வீடு ஏன் இல்லாமல் போனது? அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை? அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள்? என்பதெல்லாம் யுத்த சாட்சியங்களே.சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ என்பது சாம்பல் நிற மென்யுத்த சாட்சியமே. மேற்சொன்னவைகளில் ஆகப்பிந்தியவோர் யுத்த சாட்சியமாக ஆறாவடு வந்திருக்கிறது.முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம். எத்தகைய அரசியல் விளக்கமுமற்ற ஓர் அப்பாவிக் கிராமத்து இளைஞன். ஆசைஆசையாக சோலாப்புரிச்செருப்புகளை வாங்குகிறான்.அதை அந்த ஊரில் இருக்கும் நன்கு தெரிந்த ஒரு திருடன் திருடிவிடுகிறான். திருடனைக் கதாநாயகனும் நண்பர்களும் பிடித்துக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.ஒரு கண்ணாடிப்போத்தலை உடைத்து அவனது வயிற்றில் குத்துவது போலவெருட்டுகிறார்கள்.ஆனால் ஐ.பி.கே.எப்.புடன் சேர்ந்தியங்கும் திருடனோ இவர்களைப் புலிகள் என்று ஐ.பி.கே.எப்பிடம் முறைப்பாடு செய்துவிடுகிறான்.ஐ.பி.கே.எப் இவர்களைப் பிடிக்கின்றது.பயங்கரமான சித்திரவதைகளின் பின் ஐ.பி.கே.எப்புடன் சேர்ந்தியங்கும் தமிழ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.அந்த அமைப்பு சுடலைக்கு அழைத்துச் சென்று மேல்வெடி வைத்து கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உயிர்வேண்டுமென்றால் தங்களுடன் இணையவேண்டுமென்று நிபந்தனை போடுகிறார்கள்.தப்பிப்பிழைப்பதற்காக அவர்களோடு இணைந்து இவர்கள் ரி.என்.ஏ (தமிழ் தேசிய இராணுவம்) படையாட்களாக மாறுகிறார்கள். இவர்களில் ஒருவன் விடுமுறையில் வீட்டுக்குப் போய் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு நிற்கும்போது புலிகளால் கொல்லப்படுகிறான். ஏனையவர்கள் ஐ.பி.கே.எப் வெளியேறிய பின் புலிகளால் பிடிக்கப்படுகிறார்கள். புலிகளும் உயிருக்கு பேரம் பேசுகிறார்கள்.தங்களோடு இணைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே கதாநாயகன் புலியாகிறான். சண்டைகளுக்கு போகிறான்.ஒரு சண்டையில் காலை இழக்கிறான்.பிறகு இன்னொரு சமாதானம் வருகின்றது.காலிழந்த போராளி அரசியல்துறையில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே ஒரு காதல் வருகின்றது.மாற்று இயக்கத்தோடு ஒரு மோதலும் வருகிறது. யுத்தநிறுத்த விதிகளை மீறியதற்காக வன்னிக்கு மீள அழைக்கப்படுகிறான்.இது காரணமாகவும், காதல்காரணமாகவும் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறான்.இத்தாலிக்கு போவதற்காக நீர்கொழும்பில் இருந்து படகேறுகிறான்.படகில் சிங்களவர்களும் ஏறுகிறார்கள். ஆனால் படகு இத்தாலியை சென்றடையவில்லை.நடுக்கடலில் அலைகளுக்கு இரையாகின்றது. இதுதான் கதை. இங்கே ஒரு விடயம் துலக்கமாக வெளிவருகின்றது. அதாவது எல்லோருமே பிறக்கும் போது போராளிகளாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப விபத்துக்களினாலும் தப்பிப்பிழைப்பதற்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் போராளிகளாக ஆனவர்களும் உண்டு. அற்ப காரணங்களுக்காகப் போராட்டத்தில் இணைந்து அற்புதமான தியாகங்களைச் செய்த பலரை நான்அறிவேன். புதுயுகம் பிறக்கிறது நாவலிலும் அத்தகைய பாத்திரங்கள் உண்டு.சயந்தனின் கதாநாயகனும் அப்படி ஒருவன் தான்.ஐ.பி.கே.எப் காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவன் ‘ துரோகியாக’ இறந்திருப்பான். புலிகளோடு இருந்த போது கொல்லப்பட்டிருந்தால் ‘மாவீரனாக’ இறந்திருப்பான். ஆனால் முன்னாள் போராளியாக கடலில் இறந்தபோது அவனுக்கு ‘டைட்டில்’ எதுவும் இருக்கவில்லை. ஆயின் அவன் யார்? தப்பிப்பிழைப்பதற்காகவே அவன் ஆயுதமேந்த நேரிடுகிறது. வேறெந்தப் புனிதமான காரணங்களுக்காகவும் அல்ல.தப்ப முயன்று தப்ப முயன்று ஒரு அமைப்புக்குள் இருந்து இன்னொரு அமைப்புக்குள் போய் முடிவில் எல்லாவற்றிடம் இருந்தும் தப்ப முயன்று பேரியற்கையிடம் தோற்றுப் போய்விடுகிறான். அதாவது பாதிக்கப்பட்டவனே தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறான்.காயப்பட்டவனே தொடர்ந்தும் காயப்படுகிறான்.காயங்களின் மீதே காயங்கள் ஏற்படுகின்றன. ஆறாவடு என்பதே ஒரு மாறாக்காயம் தான்.உளவளத்துணை நிபுணர்கள் ஆறாவடு என்பதை ‘ட்ரோமா’ என்கிறார்கள். ஆறாவடு ஒரு ட்ரோமா(மனவடு) இலக்கியம் தான். இது ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தை எழுதிச்செல்கிறது. பா.அகிலனின் சரமகவிகளின் போதும் நான் இதைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.சனாதனனின் தோம்புவும் அதுதான்.கருணாகரன் எழுதியது, கர்ணன் எழுதியது, ஷோபாசக்தி எழுதியது , சாத்திரி எழுதியது ஐயர் எழுதியது, குளோபல் தமிழ் நியூஸில் குருபரன் எழுதுவது , தினக்கதிர் இணையத்தளத்தில் துரைரத்தினம் எழுதுவது எல்லாமே போருக்குப் பின்னான காயங்களை திறக்கும் அல்லது காயங்களை வாசிக்கும் முயற்சிகள் தான்.இது காயங்களை வாசிக்கும் காலம். காயங்களைத் திறந்து திறந்து, காயங்களை எழுதி எழுதி, காயங்களை வாசித்து, காயங்களைக் கடக்க வேண்டிய காலம். டச் நாவலாசிரியரான ஆர்ணன் கிறண்பேர்க் என்பவர் ட்ரோமா இலக்கியம் பற்றிக் கூறும் போதுஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறார். “மனவடுவை மனவடுவாக அணுகாமல்அதை ஒரு பாடுபொருள் ஆக்கும் போது,அது எமக்கு நெருக்கமாகின்றது” என்று. அதாவது ஆறாக்காயமாகப் பார்ப்பதை விடவும் ஒருபடைப்பின் பாடுபொருளாக மாற்றும் போது அது தரும் அச்சம், வலி,அருவருப்பு என்பவை குறையத்தொடங்கும்.சயந்தனின் ஆறாவடுவும் ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தைப் பாடுபொருளாக்குகிறது. மட்டுமல்ல நாவலின் இறுதிப்பகுதியில் அந்தக்கூட்டுக்காயத்தை உலகளாவிய கூட்டுக்காயமாக மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெறுகின்றது.நாவலின் கடைசிப்பகுதியில் உடைந்த படகின் சிதிலங்களும் , பிணங்களும் எரித்திரியக்கடற்கரையில் ஒதுங்குகின்றன.அங்கே ஒரு எரித்திரியக்கிழவன் .முன்பு எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன். போரில் ஒரு காலை இழந்தவன். பொய்க்கால் வாங்க காசில்லாதவன்.கடலில் மிதந்து வரும் பொருட்களிடை சூரியஒளியில் மினுங்கும் ஒரு பொருளைக்காண்கிறான்.அதுதான் சயந்தனின் கதாநாயகனுடைய பைபர் கிளாஸாலான ஒரு பொய்க்கால்.அந்தக்கிழவன் நொண்டி நொண்டி நடந்து போய், கரையொதுங்கும் அந்தப்பொய்க்காலை ஆசைஆசையாக அள்ளி எடுக்கிறான். ஒரு முன்னாள் எரித்திரியப்போராளியின் துண்டிக்கப்பட்ட காலுக்கு ஒரு முன்னாள் தமிழ்ப்போராளியின் பொய்க்கால் பொருந்தி வருகிறது. சயந்தன் ஈழத்தமிழ்க்கூட்டுக்காயத்தை எரித்திரியக்கூட்டுக்காயத்துடன் பொருத்தும் இடத்தில் நாவல் ஒரு சாம்பல் நிற இலக்கியமாக வெற்றி பெறுகின்றது.சாம்பல் பரப்பில் நிற்பதனால் தான் சயந்தனுக்கு இது சாத்தியமாகின்றது. அண்ணைக்கு எல்லாம் தெரியும் என்பது ஒரு சமயத்தில் மதிப்பாகவும் இன்னொரு சமயத்தில் எள்ளலாகவும் வருவதென்பது சாம்பற்தனம் தான்.படித்த மத்தியதர வர்க்கத்தின் குரலாக வரும் நேரு ஐயா என்கிற பாத்திரமும் சாம்பல் நிறம் தான்.சாம்பல் பரப்பினுள் நின்றால் தான் நாங்களே எங்களை சுயவிசாரணை செய்யலாம்.இறந்தகாலத்தை ‘போஸ்ட்மோர்ட்டம்; செய்யலாம்.எங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்தலாம். யுத்த சாட்சியங்களை நிராகரிக்கப்படமுடியாத அளவுக்கு முழுமையானவைகளாகவும், அனைத்துலகப் பெறுமானம் மிக்கவையாகவும் மாற்றலாம். நான் சாம்பல் என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. எனது தனிப்பட்ட கண்டுபிடிப்புமல்ல. அது ஒரு வாழும் யதார்த்தம். இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக்கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக்கிராமம் தான். எதுவும் அதன் ஓரத்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது.அதுதான் சாம்பல். அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது.இது ஒரு தொழினுட்ப யதார்த்தம்.இது ஒரு பொருளாதார யதார்த்தம்.இது ஒரு சமூகவியல் யதார்த்தம்.இது ஓர் உளவியல் யதார்த்தம்.இது ஓர் இலக்கிய யதார்த்தம்.இது ஓர் அரசியல் யதார்த்தம். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது, கூறியதைப்போன்று “ இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவுசுழிவுகளோடும்” ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது. நிலாந்தன். யாழ்ப்பாணம்.03/03/2012. நன்றி த.பிரபாகரன்

சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை

1:41 AM, Posted by sathiri, 2 Comments

சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை
சாத்திரி ஒரு பேப்பர்





அண்மையில் என்னுடைய பதிவுகளில்  சிறுவர்கள் மீதான பாலியல் விடயத்திளையும் எனக்கு சிறியவயதில் நடந்ததொரு அனுபவத்தினையும் எழுதியிருந்தேன்.  அதனை படித்த பலரும் தங்களிற்கும் நடந்த சம்பவங்களை பகிர்ந்திருந்தனர்.  பொதுவாக இதனைப்பற்றி  எமது தமிழ் சமூகத்தில்  நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு.ஆனாலும் எமது சமூகத்தில்  எமது குடும்ப உறவுகளாலோ அல்லது  குடும்பத்தின் நெருங்கிய நட்புக்களாலோ  சிறுவர்கள் மீதான  பாலியல் வன்முறை  நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது ஆனால் அது வெளியில் வருவதில்லையென்பதுதான் சோகமானது. இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையே விபரிக்கலாம்.வெளிநாடுகளில் எம்மவர்கள் பணம் சேர்ப்பதை மட்டுமே குறியாக நினைத்து பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.

அதற்காக பெரும்பாலான குடும்பத்தவர்கள் தங்கள் வீடுகளில் தனியானவர்களை தங்கவைத்து வாடைகை வாங்குவார்கள். சில வருடங்களிற்கு முன்னர் பாரிஸ் புறநகர் பகுதியில் யரடயெல ளழரள டிழளை வசிக்கும் எனது நண்பன் ஒருவனிற்கு நடந்த சம்பவத்தையும் இங்கு எழுதுகிறேன்.நண்பனிற்கு ஒரேயொரு மகள் இருந்தாள் அவளிற்கு அப்பொழுது 11 வயது ஆகியிருந்தது நண்பன் தன்னுடைய மனைவியின் நெருக்கிய உறவுக்காரர் ஒருத்தரை தனது வீட்டில் தங்கவைத்திருந்து (அவரும் திருமணமானர் மனைவி பிள்ளைகள் ஊரில் இருந்தனர்) வாடைகைப்பணமும் அதைவிட சாப்பாட்டு காசும் தனியாக வாங்கிக்கொண்டிருந்தார். ஒருநாள் நண்பனும் மனைவியும் வேலைக்கு போயிருந்த நேரம் அந்த நபர் தண்ணியடித்து விட்டு கணணியில் நீலப்படத்தை போட்டுவிட்டு அந்த சிறுமியை பார்க்கும்படி வற்புறுத்தியதோடு பலாத்காரம் செய்யவும் முயன்றிருக்கிறார் சிறுமி அவர் கையை கடித்து விட்டு தப்பியோடி குளியலறையில் புகுந்து கதவை பூட்டிக்கொண்டு இருந்துவிட்டாள். விடயம் பிழைத்துப் போனதால் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். பின்னர் வீடுவந்த தந்தையிடம் சிறுமி அழுதபடி விடயத்தை சொல்லவே என்ன செய்வதென்று தெரியாமல் அவர் எனக்கு போனடித்து ஆலோசனை கேட்டிருந்தார். உடனடியாக காவல்த்துறையில் முறையிட்டுவிட்டு மகளை வைத்தியரிடம் அழைத்துப்போகவும் மிகுதியை அவர்கள் பார்ப்பார்கள் என்று ஆலோசனை கூறியிருந்தேன். ஆனால் அவரது மனைவி அதற்கு உடன்படவில்லை காரணம் சம்பந்தப் பட்டவர் அவரது நெருங்கிய உறவினர்.
சொந்தத்திற்குள் சண்டை வரும் என பயந்தார்.அடுத்தது போலிஸ் வழக்கு என்று போனால் மகளின்எதிர்காலம்கெட்டுவிடும்.

இந்த இரண்டு பயத்தாலும் அவர்கள் சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் மகளிடமும் இந்த விடயத்தை யாருடமும் சொல்லகூடாது என மிரட்டியதோடு பாடசாலைக்கு போனால் அவர்களிடம் மகள் சொல்லி விடுவாள் அல்லது அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்கிற பயத்தில் சிலநாட்கள் அவளை பாடசாலைக்கும் அனுப்பவில்லை. ஆனால் வழக்கு பதிவு செய்ததாகவும் போலிசார் சம்பந்தப்பட்டவரை தேடுவதாகவும் அவன் என்னிடம் பொய் சொல்லியிருந்தான். சிலநாள் கழித்து நான் அவனிற்கு போனடித்து என்ன நிலைமை என கேட்ட பொழுது போலிஸ் இன்னமும் ஆளை தேடுவதாக சொன்னான் . உடனேயே நான் அவனிடம் சம்பத்தப்பட்டவனின் பெயர் விபரம் அதே நேரம் அவனின் படம் என்பனவற்றை எனக்கு உடனடியாக அனுப்பும்படி
சொன்னதும் நண்பனிற்கு புரிந்துவிட்டது நான் எங்காவது எழுதிவிடுவேன் அல்லது வானலைகளில் கதைத்துவிடுவேன் என்கிற பயத்தில் வழக்கு பதியவில்லை என்கிற உண்மையை சொல்லியதோடு மகளும் இப்பொழுது வழமைக்கு திரும்பி பாடசாலை போகிறாள் பிரச்சனையில்லை பேசாமல் விடு என்றான்.ஆனால் நான் விடாமல் நண்பனோடு சண்டை பிடித்தபொழுது எங்கடை பிள்ளையை கவனிக்க எங்களுக்கு தெரியும் உவர் ஏன் தேவையில்லாமல் எங்கடை பிரச்சனைக்குள்ளை தலையை விடுறார் என்று அவனது மனைவியின் குரல் எனக்கு கேட்டது. நீ தவறு விடுகிறாய் இதற்கான விலை பெரிதாய் இருக்குமெண்டு நான் நண்பனிடம் சொல்லிவிட்டு தொ.பேசியை துண்டித்துவிட்டேன்.


அதன்பின்னர் நானும் அவனுடன் தொடர்பு கொள்வது கிடையாது ஆனால் சம்பவம் நடந்ததன் பின்னர் மிகவும் கெட்டிக்காரியான அந்த சிறுமி பாடங்களில் கவனத்தை செலுத்தவில்லை தாய் தந்தை பொய் சொல்லு என்று சொல்லிக் கொடுத்த பொய்யை தாய் தந்தையருக்கே சொல்த் தொடங்கினாள்.13 வது வயதில் பாடசாலை நேரம் வேறு சிலருடன் கஞ்சா பத்திக்கொண்டிருந்த அவளை காவல்துறை பிடித்து தந்தையிடம் ஒப்படைத்தது. கோபத்தில் தந்தை இடுப்பு பட்டியை கழற்றி மேசமாக அடித்ததில் அவளே காவல்துறையை அழைத்தாள். கவல்துறை அவனை கைது செய்தது மகள் பாராமரிப்பு நிலையத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டாள். அவனிற்கு ஒண்டரை வருசம் சிறை சிறையால் வெளியே வந்தவன் எனக்கு போனடித்து விபரத்தை சொல்லி எனக்கு மகளை பாக்கவேணும் ஏதாவது உதவி செய்யடா என்றான். நானும் முயற்சித்தேன் ஆனால் மகள் மறுத்துவிட்டாள்.நண்பனின் மனைவியும் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில். நான் நண்பனிடம் சொன்னது நீ அதிக விலை கொடுத்துவிட்டாய் ஒன்றுக்கும் உதவாத கௌரவம் பார்த்து நீ உன்னுடைய உற்றார் உறவினர்களிற்காகவும் போலியான மரியாதைக்காகவும் இன்று நடு றோட்டில்.

உளவியல் மருத்துவர்கள்  இது பெடோபிலியா என்கிற நோய்   இப்படியானவர்களை மருத்துவம்    மூலமே குணப்படுத்தவேண்டும் தண்டனை கொடுக்கக்கூடாது  என்கிறார்கள்.   உளவியல் மருத்துவர்களே இப்படித்தான் அண்மையில் நோர்வே நாட்டில் ஒரு தீவில்  கூட்டத்தில் புகுந்து 80 பேரிற்கு மேல் சுட்டுக்கொன்ற ஒருவனை  மனநோயாளி மருத்துவம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள். இதுவே மேலை நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட அமைப்பில்  உள்ள ஒருவர் செய்தால் வன்முறை   தண்டனை கொடுக்கவேண்டும் என்கிறார்கள். உளவியலை விட்டுவிடுவோம். ஆனால் நாம் எமது குழந்தைகளை  இப்படியானவர்களிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்.தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம்.

1)குழந்தைகளிற்கு  மற்றையவர்களின் சாதாரண தொடுகை   விபரீதமான தொடுகை இரண்டிற்குமான வித்தியசங்களை சொல்லிக் கொடுங்கள்.
2)அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.
3)ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்..
4)சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
5)நெருங்கிய  உறவினர்களாக  இருந்தாலும் அவர்கள் அனாவசியமாக  முத்தமிடுவதை தவிர்க்க சொல்லுங்கள்.
அண்மையில் இந்தியாவில்  சிறுவர் பாலியல்  துஸ்பிரயோகம் செய்த ஒருவர் மீதான வழக்கின் தீர்ப்பில்  துஸ்பிரயோகம்  செய்பவர்களின் ஆண்மையை  நீக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்படவேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்தார். அதாவது  ஊர்பாசையிலை சொல்லப்போனால் நலமடிப்பது. இது பல நாடுகளில் சட்டமாகவே உள்ளது.  சிறுவர்களை  பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் ஆண்களிற்கு   இந்தச் சட்டத்தை போடலாம் ஆனால் பெண்களிற்கு  யாமறியோம் பராபரமே...

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.2

7:01 AM, Posted by sathiri, No Comment

நட்பு

அவள்பெயர் மல்லிகா(உண்மைப்பெயர்தான்)சிறியைவிட அவளிற்கு இரண்டுவயது குறைவு தலைக்கு எண்ணெய்வைத்து வழித்து இழுத்து பின்னப்பட்ட இரட்டைப்பின்னல். கறுப்பாக இருந்தாலும் களையான முகம். சிறியின் வீட்டிற்கு மாலை நேரத்தில் புல்லுக்கட்டு தலையில் சுமந்து வரும் அவளது தாயின் பின்னால் கையில் ஒரு தடியை வைத்து மரம் செடிகளிற்கு அடித்து அவைகளை உறுக்கி வெருட்டி குழப்படி செய்யக்கூடாது ஒழுங்கா படிக்கவேணும் என்று அவைகளோடு விழையாடியபடியே வருவாள்.அவளின் தாயார் வீடுகளிற்கு போய் மாவிடிப்பது கூட்டிபெருக்குவது வயல்களில் கூலிவேலை செய்வது இதுதான் அவரது தொழில். தந்தை அதிகம் படிக்காதவர். ஆனால் வாக்கு வேட்டைக்காக சிறிலங்கா சுததந்திரக்கட்சியின் வேட்பாளர் வினோதனின் புண்ணியத்தில் அவரிற்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாசல் காவலாளி வேலை. லீவுநாள்களில் ஊரில் உள்ளவர்களின் வீடுகளிற்கு வேலியடைப்பது குளைவெட்டுவது என்கிற வேலைகளை செய்வார் மல்லிகா ஒரேயொரு மகள்தான் அவரது இலட்சியமெல்லாம் தானும் தன்னுடைய சமூகமும் அதிகளவு படிப்பறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள் எனவே மல்லிகாவை எப்படியாவது பெரிய படிப்பு படிப்பித்து பெரியாளாக்குவது மட்டுமே அவரது இலட்சியம்.அவர்கள் கோயில் காணியில் ஒரு குடிசைபோட்டு வசித்துவந்தனர்.அவனின் வீட்டிற்கு வேலைக்காக வரும் காலங்களில் அவர்களிற்கு தேனீர் குடிப்பதற்கென்றே தனியாக சில கிளாசுகள் வீட்டின் பின்பக்கம் வைக்கப்பட்டிருக்கும் அதனை அவர்களே எடுத் கழுவி நீட்டினால்தான் அதில் தேனீர் கொடுக்கப்படும். தாயர் வேலை செய்யும பொழுது மல்லிகா அவளுடைய புத்தகங்களை கொண்டுவந்து படித்துக்கொண்டிருப்பாள். ஒருநாள் அவள் சிறியிடம் எனக்கு நெல்லிக்காய் பிடுங்கி தாறியளோ என்றதும் நெல்லி மரத்தில் பாய்ந்து ஏறியவன் அதன் கிளைகளை பிடித்துஉலுப்ப கீழே விழுந்த நெல்லிக்காய்களை ஓடியோடி மல்லிகா பொறுக்கி சேர்த்தாள். மரத்தைவிட்டு கீழே இறங்கியவனிடம் உங்களுக்கு வேணுமோ என ஒரு நெல்லிக்காயை நீட்ட அவனும் அதைவாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்க அதை கவனித்த அவனது அம்மம்மா அவசரமாக வீட்டிற்குள்ளே கூப்பிட்டவர்
அவன் காதில் பிடித்து முறுக்கியபடி

உனக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன் அவளோடை சேராதையெண்டு கேக்கமாட்டியா?? வீட்டிலைதானே நெல்லிமரம் நிக்கிது அவளிட்டையா வாங்கி தின்னவேணும்.??

ஏன் அவளிட்டை வாங்கி திண்டால் என்ன??

அவங்களிட்டை ஒண்டும் வாங்கி தின்னக்கூடாது அவங்கள் வேறை சாதி நாங்கள் வேறை சாதி.

நெல்லிக்காய் எங்கடைதானே

வாய்க்குவாய் கதையாதை அவளோடை நீ இனி சேந்ததை கண்டால் இனி அடிதான் கவனம்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை வீட்டிற்கு தெரியாமலேயே வயல்களில் அவளோடு சேர்ந்து வெள்ளரி பிஞ்சுகளை களவெடுத்து தின்பது பட்டம்விடுவது . காய்ந்து கிடக்கும் வழுக்கையாற்று மணலில் விழையாடுவது மழைக்காலங்களில் வால்பேத்தை பிடிப்பது அவ்வப்பொழுது அவளுடன் அவனை அவனது உறவுகள் யாராவது கண்டால் திட்டு அல்லது ஓரிரண்டு குட்டுவிழும்.
0000000000000000
வருசாவருசம் கோயில் திருவிழா தொடங்க முதல் கோயிலின் சட்ட விழக்குகள் அனைத்தும் கழற்றி எண்ணெய் கழிம்புகளை துடைத்து சுத்தம் செய்வது வழைமை ஒரு சட்டவிளக்கில் 108 விளக்குகள் இருக்கும் . அப்படி ஒவ்வொரு வாசலிற்கும் ஒவ்வொரு சட்டவிளக்கு பொருத்தியிருந்தார்களை அவைகளை சுத்தம் செய்வது பெரியவேலை நாள்கணக்கில் துப்பரவு வேலை நடக்கும். அப்படித்தான் அந்த வருடமும் சிறியும் அவனது சித்தப்பாவோடு அவனது நண்பன் ஒருவருமாக சட்டவிளக்குகளை துடைத்துக்கொண்டிருந்தபொழுது தேனீர் எடுத்துவருவதற்காக சித்தப்பா வீட்டிற்கு போயிருந்தார். அந்த நேரம் கோயிலில் வெளியே வந்த மல்லிகா கற்பூரம் கொழுத்தி கும்பிட்டுவிட்டு விபூதி குடுவையில் கையை விட்டாள் விபூதி இல்லை அங்கிருந்தபடியே சிறியிடம் உள்ளே விபூதி எடுத்துத் தரும்படி கேட்டாள் சிறி தனது கைகளைகாட்டி கையெல்லாம் எண்ணெய் நீயே உள்ளை வந்து எடு என்றான் உள்ளே வந்தவள் விபூயை எடுத்து தான்பூசிவிட்டு கையில் கொஞ்சத்தை எடுத்தவள் அம்மாக்கு காச்சல் அதுதான் கற்பூரம் கொளுத்தின்னான் விபூதி கொண்டு போய் பூசிவிடப்போறன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனீருடன் வந்த சித்தப்பா அவளை கண்டதுமே ஏனடி உள்ளை வந்தனி என்று கத்தியபடி அவளை விரட்ட கையில் பொத்திப் பிடித்த விபூதியுடன் அவன் ஓடித்தப்பிவிட்டாள்.

முச்சுவாங்கியபடி வந்த சித்தப்பா அவளை ஏன் உள்ளை விட்டனீங்கடளா என்று அவர்களை பாத்து கத்த சிறியின் நண்பன் இவன்தான் அவளை உள்ளை கூப்பிட்டவன் என்று போட்டுக்கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். சித்தப்பாவின் கோபம் பல பூவரசந் தடிகளை முறியவைத்தது. கோயிலில் இருந்து வீடுவரை கலைத்து கலைத்து அடித்து ஓய்ந்தார்.மல்லிகா அவரது கண்களில் படாமல் ஒழித்துத் திரிந்தாள்.

அப்படியான ஒரு நாளில்.மாரிக்காலம் .மழை வெள்ளம் வரும் காலங்களில் குடிசைகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து அங்குள்ள தேவாலயத்திலோ அல்லது பாடசாலையிலோ குடிபெயர்வது வழைமை. அந்த வருடமும் பெருவெள்ளத்தில் இடம் பெயர்ந்தவர்களில் மல்லிகாவின் குடும்பமும் ஒன்று. மாரிக்காலம் முடிந்து பாடசாலை தொடங்கும் போது மல்லிகாவின் பாடசாலை சீருடை வீட்டில் புகுந்த வெள்ளத்தில் பழுதாகிப் போய்விட்டதால் சாதாரண சட்டையுடன் பாடசாலைக்கு போன மல்லிகாவை சீருடை போடாமல் பாடசாலைக்கு வரவேண்டாமென அவளது வகுப்பு ஆசிரியை திட்டி அனுப்பியிருந்தார்.புது துணிவாங்கி சீருடை தைத்து வரும்வரை பாடசாலை போகமுடியாதென மல்லிகா அவனிடம் சொல்லி கவலைப்படவே அவனிற்கு ஒரு யோசனை தோன்றியது நேராக தன்னுடைய வீட்டிற்கு போனவன் அவனது தங்கைகளின் சீருடைகளில் ஒன்றை களவாய் எடுத்துக்கொண்டு போய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். ஆனால் அவனது தங்கைகள் படித்தது மானிப்பாய் மகளிர் கல்லூரி மல்லிக படித்தது சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயம்.மானிப்பாய் மகளிர் கல்லூரி சீருடைகளில் மானிப்பாய் மகளிர் கல்லூரி என்கிற சுருக்கம் MLC என சிறியதாய் ஒரு பட்டி வைத்து தைக்கப்பட்டிருக்கும்.அதைப்பற்றி அவனும் யோசிக்கவில்லை மல்லிகவிற்கும் அதைப்பற்றி சிந்திக்கின்ற வயது இல்லை.

அவள் அந்த சீருடையுடன் பாடசாலைக்கு போனதும் வகுப்பு ஆசிரியை சீருடையை கவனித்துவிட்டு யாரிட்டை களவெடுத்தாயென கேட்டு அவளிற்கு அடிக்கவே அவளும் நடந்த விடையத்தை சொல்லியிருக்கிறாள். அந்த ஆசிரியை அவனிற்கு உறவுக்காரர்வேறு பிறகென்ன ஏதோ இழவு செய்திபோல அவனது உறவுக்காரர்கள் எல்லாரிற்கும் செய்தி பரவியது.அன்று மாலையே அவனது அம்மம்மா வீட்டில் கண்டன கூட்டம் கூடியிருந்தது.அக்கம் பக்கத்து வீட்டு வேலிகளிலும் தலைகள் முளைத்திருந்தது.மல்லிகாவின் தாயும் தந்தையும் கைகளை கட்டியபடி வீட்டு முற்றத்தில் பவ்வியமாக தலையை குனிந்தபடி நின்றிருந்தனர். அவரகளிற்கு பின்னால் மிரண்ட விழிகளுடன் மல்லிகா மறைந்து நின்றிருந்தாள்.சிறியின் குடும்பத்தினர் அனேகமானவர்களுடன் அந்த ஆசிரியையும் வந்திருந்தார். பஞ்சாயத்தை தாத்தா தொடக்கினார்.

ஏனடா நடந்தது உனக்கு தெரியாதே??

இல்லை ஜயா நடந்தது சத்தியமா எனக்கு தெரியாது நான் வேலைக்கு போட்டன் இவளும் புத்தியில்லாமல் சட்டையை போட்டு பிள்ளையை பள்ளிக்கூடத்தக்கு அனுப்பிப் போட்டாள்.

தாத்தா மல்லிகாவின் பக்கம் பார்வையை திருப்பினார்.

ஜயா வழக்கமா நீங்கள் பழைய உடுப்புக்கள் தாறனீங்கள் தானே. தம்பி அப்பிடித்தான் இதையும் தாறார் எண்டு நான் நினைச்சிட்டன் சட்டை தோச்சு எடுத்துக்கொண்டந்திருக்கிறன் இந்தாங்கோ .

என்று சட்டையை முன்னால் நீட்டவே .கோபமாக யாருக்கடி வேணும் இந்த சட்டை என்று அதை பறித்து முற்றத்தில் எறிந்த அவனின் தாயார். என்ன திமிர் இருந்தால் அவள் போட்ட சட்டையை என்ரை மகளுக்கு போடச்சொல்லி திரும்ப கொண்டுவருவாய் என்று ஒரு அறையும் மல்லிகாவின் தாயார் கன்னத்தில் விழுந்தது.
பிழை முழுக்க இவனிலை அதுகளிலை கோவிச்சு பிரயோசனம் இல்லை முதல்லை உன்ரை மகனை திருத்து என்று தாத்தா மகளை சாந்தப் படுத்தினார்.

என்னட்டையும் உந்த வயசிலை இரண்டு பெட்டையள் இருக்க உவன் ஏனோ தெரியாது உந்த நளத்திக்கு பின்னாலைதான் திரியிறான். என்று தன்னுடைய எதிர்கால கவலையை மாமி வெளிட்டார்.
மாமியை அவன் முறைத்து பார்க்கவே .இஞ்வை பாருங்கோ என்னையே முறைக்கிறான் என்று மாமாவை உருப்பேத்த . மாமாவின் கையில் பூவரசந்தடி. உடனேயே அவனது அப்பாவிற்கு கௌரவப்பிரச்சனையானது மாமாவின் தடியை வாங்கி அவரே மாமிட்டை மன்னிப்பு கேளடா என்றபடி அவனில் அடித்து முறித்தார். அவன் அழக்ககூட இல்லை அசையாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அங்கு வந்த சித்தப்பா நேராக மல்லிகாவிடம் போனவர் அவளது தலைமயிரை பிடித்து இழுத்து கன்னத்தில் ஒரு அறைவிட்டவர். அண்டைக்கு தப்பிஓடிட்டாய் நாயே இண்டைக்கு உன்னை விடமாட்டன் என்றபடி அவளை நிலத்தில் போட்டு கையாலும் காலாலும் அடிக்க அவளது தாய் மல்லிகாமீது விழுந்து தடுக்க ஒரே கூச்சல். அவன் எதுவும் செய்ய முடியவில்லை அப்பொழுதுதான் அவனிற்கு அழுகை வந்தது.

அதற்கிடையில் அவனது அம்மம்மா விலக்குபிடித்து மல்லிகா குடும்பத்தை அனுப்பிவிட்டதோடு இனி அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம் எனவும். அதனையும் மீறி அவன் மல்லிகாவுடன் கதைத்தால் அவனை பாடசாலை விடுதியில் சேர்த்துவிடுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழுதபடியே இரத்தம் கலந்த எச்சிலை துப்பியபடி மல்லிகா அவனை திரும்பி திரும்பி பார்த்படி போய்க்கொண்டிருந்தாள்.
00000000000000000000
1984 ம் ஆண்டு அதே சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில் திருவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தமுறை திருவிழாவிலை பெடியள் எல்லாரையும் உள்ளை விடப்போறாங்களாம்..
இப்பிடித்தான் பத்து வருசத்துக்கு முதலும் சிலபேர் உள்ளை போகவெளிக்கிட்டு வெட்டு குத்திலை முடிஞ்சு ஒரு கொலையும் விழுந்து மூண்டு வருசமா திருவிழாவும் இல்லாமல் இருந்தது. திரும்பவும் அந்தநிலைதான் வரும் போலை.
இந்தமுறை பெடியளல்லோ முன்னுக்கு நிக்கிறாங்கள் அவங்களிட்டை துவக்கல்லோ இருக்கு இவையின்ரை வாளுகள் பொல்லுகளாலை ஒண்டும் செய்யேலாது கட்டாயம் அவங்கள் உள்ளை விடத்தான் போறாங்கள். இப்படி ஊரில் கதை நடந்துகொண்டிருந்தது.


திருவிழாவிற்கு முதல்நாள் இரவு கோயிலின் தேர்முட்டியில் இளைஞர்கள் குழுவும் கோயிலின் உள்ளே கோயில் நிருவாகக் குழுவும் ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தார்கள். சிறியும் அவனது நண்பன் நந்தனும் தங்கள் நண்பர்களிற்கு அடுத்தநாள் திட்டத்தை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேணுமெண்டால் எங்கடையாக்களையும் (புளொட்)வரச்சொல்லுறன் எண்டான் காந்தன். எங்கடை தோழர்களையும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கூப்பிடவா எண்டான் மதி. யாராவது எதிர்த்து கதைச்சா போட்டு தள்ளிட்டு அடுத்த வேலையை பாப்பம்;எண்டான் யோகராஜன்(ரெலோ).வேண்டாம் நாங்கள் சார்ந்த இயக்கங்களை இதுக்கை இழுக்காமல் முடிந்தளவு நாங்கள் இந்த ஊர்காரர் எண்ட அளவிலையே பிரச்சனையை முடிப்பம் இதுவே சிறியினதும் நந்தனுடையதும் முடிவாக இருந்தது.


அப்பொழுது கோயில் நிருவாக சபையில் இருந்த வயதானவரான ஆனால் எல்லாராலும் மதிக்கப்படுபவரான பழைய சிங்கப்பூர் பெஞ்சனியர் அமுதராசா அங்கு வந்தார். அவர் இளையவர்களின் செயற்பாடுகளிற்கு ஆதரவு கொடுப்பவர். அதனாலேயே கொயில் நிருவாகம் அவரை பெடியளுடன் கதைக்க அனுப்பியிருந்தது. அங்கு வந்தவர் தம்பியவை நான் இருந்தசிங்கபூரிலை கோயிலுக்கை எல்லாரும் போகலாம். ஆனால் இஞ்சை அப்பிடியில்லை அவங்கள் சுத்தபத்தம் இல்லாமல் தண்ணியடிச்சிட்டு வருவாங்கள் அதாலைதான் உள்ளை விடேலாது மற்றபடி வேறை பிரச்சனை ஒண்டும் இல்லை. எதுக்கும் யோசியுங்கோ எண்டார். ஜயா எல்லாரும் குளிச்சு சுத்தமாய் வேட்டியோடைதான் வருவினம். தண்ணியடிச்சிட்டு யாராவது வந்தால் நாங்களே உள்ளை விடமாட்டம் நாளைக்கு பிரச்சனை பண்ணாமல் பேசாமல் இருக்கச் சொல்லுங்கோ . பிரச்சனை பண்ணினால் பிறகு நாங்கள் வாயாலை கதைக்கமாட்டம் எண்டதை மட்டும் அவையிட்டை சொல்லிவிடுங்கோ.
0000000000000000
மறுநாள் திருவிழா தொடங்கிவிட்டிருந்தது ஏதும் பிரச்சனைகள் வந்தால் பாதுகாப்பிற்கென புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் சிலர் ஒரு வானில் வெளிவீதியில் ஆயுதங்களுடன். வானிற்கு உள்ளேயே இருந்தனர். மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கோயிலின் உள்ளே போய்விட்டிருந்தனர். கோயிலுக்குள்ளை வந்திட்டாங்கள் ஆனால் என்ன நடந்தாலும் உவங்களை சாமிதூக்கவிடுறேல்லை என்று கோயில் நிருவாகத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். திருவிழாவின் இறுதிகட்டம் நெருங்கியது சாமிதூக்கவேண்டும். ஊர் இளைஞர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே தயாராய் நின்றவர்களை விலக்கிவிட்டு ஊர் இளைஞர்களே சாமியை தூக்கினார்கள்.இதை கோயில் நிருவாகம் எதிர்பார்க்கவில்லை காரணம் சாமி தூக்கிய இளைஞர்கள் எல்லாருமே அவர்களது உறவுகள் என்பதால் ஆளையாள் பார்த்தபடி நின்றனர். சாமியை தூக்கியவர்கள் சிறிது தூரம் வந்ததும் தயாராய் நின்றிருந்தவர்களிடம் தோள் மாறியது. அப்பொழுதான் பெடியங்கள் தங்களை சுத்திப்போட்டாங்கள் என்பது அவர்களிற்கு புரிந்தது. என்ரை பிணத்தை தாண்டித்தான் இண்டைக்கு சாமி போகும் என்றபடி வெறிநாயைப்போல பாய்ந்து வந்தஅவனது சித்தப்பாவின் முகத்தில் ஓங்கி அவனது கை அறைந்தது. தட்டுத்தடுமாறி நிமிர்ந்தவரின் பட்டுவேட்டியில் அவரது முக்கிலிருந்து ஒழுகிய இரத்தம் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. வேறு சிலரும் சாமிதூக்கியவர்கள் மீது பாய இழுபறியில் சாமியை நிலத்தில் வைத்துவிட்டு கைகலப்பு தொடங்கவே நிலைமை மோசமாவதை உணர்ந்த நந்தன் வேகமாக வெளியே வானிற்கு ஓடிப்போனவன் அதிலிருந்த எஸ். எம்.ஜி துப்பாக்கியை எடுத்தவன் வானத்தை நோக்கி சில குண்டுகளை தீர்த்துவிட்டுஇண்டைக்கு சிலபேர் செத்தால்தான் திருவிழாநடக்குமெண்டால் சாக விரும்பிறவன் எல்லாம் வெளியாலை வா ..என்று கத்தினான்.

துப்பாக்கி சத்தத்திற்கு எல்லாரும் பயந்துபோயிருந்தனர்.அங்கு எரிந்துகொண்டிருந்த கற்பூரத்தின் மீது ஆவேசமாக அடித்து இனி செத்தாலும் நான் இந்த கோயில் பக்கம் வரமாட்டன் என்று சத்தியம் செய்த அவனது சித்தப்பா பிள்ளையாரே நீ உண்மையான சாமியாய் இருந்தால் அடுத்த திருவிழாவுக்குள்ளை இவங்களுக்கு நீ யாரெண்டு காட்டு என்று சாபமும் போட்டுவிட்டு சித்தி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார். கோயில் நுளைவின் எதிர்ப்பாளர்களும் பயந்துபோன சில குடும்பத்தவர்களும் அங்கிருந்து போய்விட சாமி ஊர்வலம் வழைமைபோல நடந்து முடிந்தது.இறுதியாக சாமியின் அலங்காரங்களை அகற்றி தீபாராதனை காட்டும்வரை ஒருவர் பஞ்சபுராணம் பாடவேண்டும். வழைமையாக பஞ்சபுராணம் பாடும் பாலுஅண்ணர் முன்னாலைவந்து தலைக்குமேல் கைகளை கூப்பி திரச்சிற்றம்பலம் என்று தொடங்கவும். அவர் அருகில் போன அவன்' அண்ணை இண்டைக்கு உங்களுக்கு வேறை வேலை போய் பஞ்சாமிர்தம் குடுக்கிறவேலையை பாருங்கோ பஞ்சபுராணம் வேறை ஒராள் பாடுவார் ' எண்டதும் அவர் அங்கிருந்து போய்விட அதுவரை உள்ளே வராமல் வெளியிலேயே நின்றிருந்த மல்லிகா வைஅவன் அழைத்தான். தயங்கியபடி உள்ளே வந்தவளிடம் கெதியாய் போய் பஞ்சபுராணத்தைபடி ஜயர் காவல் நிக்கிறார் என்றவும். முன்னால் சென்ற மல்லிகா கைகள் கூப்பி கண்களை மூடி திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி கண்களில் நீர் செரிய பஞ்சபுராணங்களை பெருத்த குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.
000000000000000000000
திருமணமாகி கொலண்டில் இரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலுக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.
00000000000000000000
இந்தியப்படை முல்லைத்தீவு அலம்பில் காட்டுபகுதியில் புலிகளின் தலைமையை குறிவைத்து முற்றுகையிட்டபொழுது அதனை உடைப்பதற்காக ஒரு குழுவிற்கு தலைமைதாங்கி போரிட்டு நந்தன். கப்ரன் நந்தனாக வீரச்சாவடைந்துவிட்டான் .சிறுவயது நண்பனின் நினைவுகளுடன் இந்த பதிவை எழுதியிருந்தேன் . அடுத்த வாரம் அடுத்த பதிவில் சந்திப்போம்.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.

3:21 PM, Posted by sathiri, No Comment

இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா?? இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோதல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர்.

ஆனாலும் இத்தனை நடந்து முடிந்தபின்னரும் 30 வருட யுத்தமும். புலம்பெயர் வாழ்வு மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேய சிந்தனைகளாவது தமிழ் சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை மாற்றியிருக்கின்றதா என்று பார்த்தால் அதன் பலாபலன் ஏமாற்றத்தினையே தருகின்றது. இப்படியான தொரு தமிழ் சமுகத்தில் அதுவும் யாழ்ப்பாண குடியில் பிறந்து இதே சமூகத்துடனானதும் ஆயுதத்தை கையில் தூக்கிய ஒரு இயக்கதிலும் ஒரு இலட்சியத்தோடு சேர்ந்து பின்னர் புலம் பெயர்ந்துவாழும் என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.இந்தத் தொடரை படிக்கும் போது என்னைப் போலவே படிக்கிறவர்களும் அதே பேன்ற சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றை உங்களால் எழுதவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ முடியாமல் போகலாம் ஆனால் அந்த சம்பவங்கள் உங்கள் மனக்கண்ணில் ஒரு தடைவை நிச்சயம் வந்து போகும். அதே நேரம் நான் என்னுடைய அனுபவங்களை நாவலாகவும் எழுதத் தொடங்கியிருப்பதால். அந்த நாவலில் இந்த விடையங்களும் சேர்ப்பதற்கு இலகுவாகவும் இருக்குமென்பதால் என்னுடைய பெயரிலேயே சிறி என்கிற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி இந்தத் தொடரில் உலாவ விடுகிறேன். சிறியோடு நீங்களும் பயணியுங்கள்......

பி.கு என்னுடைய மனைவிக்கு ஏற்கனவே என்னைப்பற்றிய விபரங்கள் பெரும்பாலும் தெரிந்திருந்தது பின்னர் என்னைப்பற்றிய சகல விபரங்களையும் அவரிற்கு தெரிவித்த பின்ரே எங்கள் திருமணம் நடந்தது எனவே இதை எழுதுவதும் அவரிற்கு தெரியும் எனவே எங்கள் தனிப்பட்ட வாழ்கையிலும் எவ்வித பிரச்சனைகளும் வராது என்பதை உறுதி செய்தபின்னரே எழுதத் தொடங்குகிறேன்.

சிறியின் சின்ன வயதுப்பராயம். ஒருவயதாக இருக்கும் போதே சிறுநீரக நோயினால் தாக்கப்பட்டதில் சிறப்பாக கவனிக்கப்படவேண்டிய காரணத்தால் அவனது அம்மம்மாவினால் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றான். நினைவு தெரியாத காலத்திலேயே அம்மம்மாவுடன் வளர்ந்ததால் அவனிற்கு நினைவு தெரிய வந்த காலங்களில் அவன் அம்மம்மாவையே அம்மா என்று அழைக்கத் தொங்கியது மட்டுமல்ல எவ்வித கவலைகளுமற்ற செல்லப்பிள்ளையாக வளர்ந்துவந்த காலங்கள். அவனிற்கு அப்பொழுது ஒன்பது வயது அவனது வீட்டிற்கு அருகிலேயே நகைசெய்யும் ஒருத்தர் இருந்தார்(பத்தர் அல்லது தட்டார்) அவரிற்கு ஒரு நகைக்கடையும் இருந்தது கடையின் பிற புறத்தில் நகை வேலைகள் செய்வார்கள். அவரது மகனிற்கும் சிறிக்கும் ஒரேவயது மட்டுமல்ல இருவரும் ஒரே வகுப்பிலேயே படித்தும் வந்தனர். சிறி மாலை நேரங்களில் அவனுடன் விழையாடப் போவதோடு அங்கு நகை செய்வதையும் வேடிக்கை பார்ப்பான். நகை செய்பவர்கள் துருத்தியில் நெருப்பை பெரிதாக்கி அந்த நெருப்பை வாயில் ஒரு சிறிய குளாயை வைத்து ஊதி நெருப்புச்சுவாலையை வேகமாக ஒரு இடத்தில் குவியவைத்து அதன் நுனியில் தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ உருக்குவதை மாயவித்தைபோல பார்த்து ரசிப்பது அவனது வழமை. சிலநேரங்களில் அந்த நகை செய்பவர் தன்னுடைய மகனை தன்மடியில் இருத்தி குளாயால் நெருப்பை ஊதவைத்து பொன்னை எப்படி உருக்குவது என்று பழக்குவார் சிறிக்கும் அதைபோல செய்து பார்க்கவேண்டும் போல் இருக்கும். நீண்டநாட்களதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறியை ஒருநாள் அவர் நீயும் செய்து பாரக்கப்போகின்றாயா என்றதும் சிறிக்கு அளவற்ற சந்தோசம். அவர் சிறியை அழைத்து தனக்கு முன்னால் மடியில் இருத்தி ஒரு மரத்தண்டில் பொற்கம்பியை வைத்து குளாயை அவனது வாயில் வைத்து ஊதச்சொன்னார்.பெற்கம்பி உருகியது. வீட்டிலும் மறுநாள் பாடசாலையிலும் அவன் அதை பெருமையாக சொல்லி ஆனந்தப்பட்டான்.

பின்னர் பலதடைவைகள் அவர் தன்மடியில் அவனை இருத்தி அதேபோல ஊதவிட்டிருக்கிறார். அன்றும் ஒருநாள்மாலை அப்படித்தான சிறி நண்பனைத்தேடி அவன் வீட்டிற்கு சென்றபொழுது நண்பனின் தந்தையைத்தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை .அன்று லீவுநாள் கடை பூட்டியிருந்தது. அவர் மட்டும் நகை செய்து கொண்டிருந்தார்கடையின் பின்பகுதியில் வழைமைபோல அவரது வேலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை தன்னுடைய மடியில் இருத்தியவர் ஊதும் குளாயை கொடுத்தார். சிறியும் ஊதிக்கொண்டிருக்கும் பொழுது அவரது நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை அவதானித்தான். அவரது கை அவனது தொடைகளை தழுவத் தொடங்கியபெழுது திடுக்கிட்டு எழுந்திருக்முனைந்தபொழுதுதான் பார்த்தான் அவர் உடுத்தியிருந்த வேட்டியை முழுதுமாக விலக்கியிருந்தார். ஓட வெளிக்கிட்டவனை இழுத்து பிடிக்கவே அவன் பலத்தசத்தமாய் சத்தம்போட்டு அழத்தொடங்க இங்கை நடந்ததை வீட்டிலை சொல்லாதை அப்பிடி சொன்னாயெண்டால் கடையிலை மோதிரத்தை களவெடுத்திட்டாயெண்டு எல்லாரிட்டையும் சொல்லுறதோடை மட்டுமில்லாமல் பொலிசிலை பிடிச்சு குடுத்துடுவன் என்று மிரட்டி அனுப்பி விட்டிருந்தார்.

அவன் வீட்டிலும் எதுவும் சொல்லவில்லை எப்படி சொல்வதென்றும் அவனிற்கு தெரிந்திருக்கவில்லை ஆனால் அவன் அன்றிலிருந்து நண்பனுடன் கதைப்பதை நிறுத்திவிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல். அவரை கண்டாலே அவனிற்கு வெறுப்பும் பயமும் வரும் அவரை பார்ப்தையும் தவிர்த்துவந்தான். ஆனால் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மனநிலை மீண்டுவர நீண்டகாலங்கள் எடுத்தது. இப்பொழுது அவனிற்கு பதினேழு வயது அவர் மீதான பயம் போய் விட்டிருந்தது. ஆனாலும் அந்த சம்பவத்திற்காக அவரை பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கான தருணமும்வந்தது அந்த வருடம் அவர்கள் கோயில் திருவிழா . திருவிழா முடிவதற்கிடையில் பத்தனிற்கு பாடம் படிப்பிப்பது என்று திட்டம் போட்டு அதற்கு உதவியாக இன்னொரு நண்பனையும் சேர்த்துக்கொண்டான். அன்று அவர்களது திருவிழா நாள் அன்றிரவு திருவிழா முடிந்து அவரது மனைவி பிள்ளைகள் எல்லாரும் வீட்டிற்கு போய்விட அவர்மட்டும் கடைசியாக கணக்கு வழக்கு முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு போகும் வழியில் இருந்த வீதி விளக்கை சிறி ஏற்கனவே கல்லெறிந்து உடைத்துவிட்டு இருட்டில் அவனது நண்பனுடன் பதுங்கியிருந்தான்.

அவர்களது கைகளில் தேடித்தேடி சேகரித்த காச்சோண்டி (காஞ்சவண்டி)குளைகளும் நாயுருவி குளைகளையும் சேர்த்து கடிட்டி தயாராக வைத்திருந்தார்கள். தேவாரம் பாடியபடி வந்தவரை பாய்ந்து நிலத்தில் விழுத்தி வேட்டியை உருவிவிட்டு உச்சிமுதல் உள்ளங்காலவரை கையிலிருந்த குளைக்கட்டுக்களால் அடிக்க அவரது ஜயோ சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரோச் லைற்றுடன் வரும்பொழுது அவரது வேட்டியையும் எடுத்தக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.மறுநாள் நேற்று ராத்திரி யாரோ பத்தனுக்கு காஞ்சோண்டியாலை அடிச்சுப்போட்டாங்களாம் உடம்புமுழுக்க வீங்கிபோச்சுதாம் உடம்புமுழுக்க சுடுசாம்பல்தடவி வாழையிலை கிடத்தியிருக்காம். ஊர்சனத்தின்ரை நகையிலை சேதாரம் எண்டு பவுண் உரஞ்சுற உவனுக்கு உது வேணும் எண்டு ஊர்ச்சனங்கள் கதைத்தார்கள். ஆனால் அடிச்சவங்கள் ஏதும் கோபமெண்டால் தடி பொல்லாலை அடிக்காமல் எதுக்கு காஞ்சவண்டியாலை அடிச்சவங்கள் அதுவும் வேட்டியை ஏன் கோயில் மடத்திலை போட்டிருந்தவங்கள் என்கிற ஆராச்சிகளும் நடக்காமலில்லை. ஆனால் அடிவாங்கியவரிற்கு யார் அடித்தார்கள் ஏன் அடித்தார்கள் என்பது தெரியும் அவரும் அதை வெளியில் சொல்லவில்லை.

இங்கு பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவேளை தனக்கு நடந்ததை அன்றே கூறியிருந்தால் பெரியவர்கள் கேட்டிருப்பார்களா?? அவன் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா அல்லது நகைக்கடைக்காரர் மோதிரத்தை களடிவடுத்துவிட்டான் என்பது தான் பெரிதளவும் நம்பப்பட்டிருக்கும். சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாதே என்று அவனை யே மீண்டும் அவனது உறவுகள் மிரட்டிஅடக்கியிருக்கும். அல்லது அவனது வீ¨ட்டிற்கும் நகைக்கடைக்காரரிற்கும் இதுபற்றி பேசாமல் வேறு ஏதாவது தகராறு நடந்திருக்குமே தவிர பாதிக்கப்பட்டவனிற்கான எவ்வித ஆறுதலோ உளவியல் சிகிச்சைகளோ நிச்சயம் நடந்திருக்காதது மட்டுமல்ல குற்றவாளிக்கும் எவ்வித தண்டனையும் கிடைத்திருக்காது ஏனெனில் எமது சமுதாயஅமைப்பே அப்படியானதுதான்.

சொல்லமுடியாத கதை

2:15 PM, Posted by sathiri, One Comment

அவனைச்சுற்றி நின்று அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான் விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில் தரையிற்ங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள் விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது

0000000000000000

நானும் விதவைதான் எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும் என்றபடி சமாதான விதவைத் தேவதையாக வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில் அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா தேர்தலில் நிற்கும் பொழுதே புலிகளிற்கும் அவரிற்கும் சில இரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து சில உறுதி மொழிகளும் பரிமாறப்பட்டிருந்தது.இவை சந்திரிக்காவின் சிறுவயது தோழரும் அவரின் குடும்ப நண்பருமான குமாரசாமி வினோதன் ஊடாக நடைபெற்று முடிந்திருந்தது

000000000000000

தாய்லாந்தின் தலைநகரிற்கு வெளியே ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அவனிற்கு இலங்கைக்கு போகும்படி உத்தரவு கிடைத்தது. தன்னிமிருந்த கடவுச்சீட்டுக்களையெல்லாம் எடுத்து வரிசையாய் அடுக்கி பிரித்துப்பார்த்தவன். அதில் இரண்டை தெரிவுசெய்து எடுத்து இந்தமுறை சிங்கப்பூர் கிறீன்காட் இலங்கை பாஸ் போட்டிலையே போவம்.அது நல்லது எண்டு முடிவு செய்தவன். வேறொரு கடவுச்சீட்டில் தாய்லாந்திலிருந்து வெளியேறியவன். சிங்கப்பூரில் சிறீலங்கா கடவுச்சீட்டில் உள் நுளைந்தான். அன்றிரவே மீண்டும் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு செல்லவேண்டும். இலங்கையில் சிலரிற்கு பரிசு கொடுப்பதற்காக சில வாசனை திரவியங்களை (பெர்பியூம்) வாங்கினான். உலகத்திலை எத்தினை விதமான நல்ல வாசனைத்திரவியங்கள் விதவிதமாய் இருந்தாலும் எங்கடையளிற்கும் சிங்களவனுக்கும் சாளியை விட்டால் விட்டால் வேறையொண்டும் தெரியாது எண்டு நினைத்தபடி சாளி பெர்பியூம் நலைந்து லோக்கல் றே பன் கூலிங்கிளாஸ் நாலைந்து. லஞ்சம் எல்லாம் வாங்கியாச்சு என்று நினைத்தவன். காய்..லா என்று லா போட்டபடி .அவளும் வந்து சேர அவர்களின் பொரும்பாலும் ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்தஉரையாடல் தொடங்கியது. அவளுடன் சேர்ந்து சாப்பிடலாம் வா தாய்லாந்திலை நாசிகொறியிங்கும். மீ கொறியிங்கும் சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு சிரங்கூன் பக்கம் போய் அன்னபூரணாவிலை தோசை சாப்பிடுவம் என்று புறப்பட்டார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே அவளிடம் தன்னுடைய கடவுச்சீட்டை கொடுத்தவன். வழமையாய் சொல்லுற விசயம்தான் கொழும்பிலை இருந்து வேறை யாருடையதாவது போன்வந்தால் உடைனை உன்னட்டை இருக்கிற யெர்மன் நம்பருக்கு தெரிவிச்சுவிடு அவ்வளவுதான்.

எப்படா இந்த தொழிலை விடப்போறாய் .. டா

மை கோட்..இது தொழிலில்லை லா.. இது வேறை...லா.

இதையேதான் எப்பவும் சொல்லுறாய்.லா.

இதையேதான் நீயும் திரும்ப திரும்ப கேட்கிறாய் சரி சண்டையை விட்டிட்டு வேறை ஏதாவது பேசலாமா.லா

ஓ கே இன்றைக்கு என்ன புறோக்கிறாம்.

பெரிசா ஒண்ணுமில்லை நான் இரவே கொழும்பு போறேன். லா

ஓ தோசை தின்னத்தான் கூப்பிட்டியாடா??

கோபிக்காத லா. சீக்கிரமே திரும்ப வந்திடுவன்.வந்து பெரிய விருந்தே வைக்கிறன் என்று சொல்லி கண்ணடித்தான்
சாங்கி விமான நிலையத்தில் அவளின் உதட்டில் ஒரு முத்தம் வைத்து விட்டு உள் நுளைந்தவன். யாராவது வியாபாரிகளை எதிர்பார்த்து சுற்று முற்றும் பாக்கும் போதே கொழும்பா போறீங்கள் என்றபடி ஓடி வந்தவர்கள். ஓவர்ஸ்ரேயா காசு வேணுமா என்றார்கள். அப்படி வந்தவர்களில் ஒரு முஸ்லிம் வியாபாரியின் பொதியை வாங்கியவன் ஓவர் ஸ்ரே யெல்லாம் இல்லை உங்க ஆளிட்டை என்னை கொழும்பிலை கொண்டு போய் இறக்கிவிடச்சொல்லி போனிலை செல்லிடுங்க. என்றான். உங்க பேர் என்ன என்றவரிடம் கடவுசீட்டில் இருந்த பெயரை ஞாபகப்படுத்தி சொல்லிவிட்டு உள் நுளைந்தான்.

0000000000000000

கொழும்பு விமான நிலையத்தில் வெளியே வந்தவன் அங்கு சிங்கப்பூர் பொதிகளிற்காக தயாராக நின்ற முஸ்லிம் வியாபாரியிடம். பொதிகளை கொடுத்தவன். தன்னை ஏதாவது நல்லதொரு லொட்ஜில் இறக்கிவிடச்சொன்னதும். அவரும் தனக்கு தெரிந்த ஒரு லொட்ஜ் இருப்பதாக சொல்லி ஜம்பட்டா வீதியில் இருந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான லொட்ஜில் இறக்கிவிட்டிருந்தார். கொழும்பு போய்க்கொண்டிருக்கும் பொழுதே தான் வந்துவிட்ட செய்தியை சிலரிற்கு கைத்தொலைபேசி மூலமாக தெரிவித்துவிட்டிருந்தான்.

அன்றிரவு ஜிந்துப் பிட்டியில் இருந்த வேணிபாரில் ஒரு சந்திப்பு. அங்கு சந்தித்தவர்களுடன் தண்ணியடித்துவிட்டு அங்கேயே கோழி புரியாணியும் சாப்பிட்டுவிட்டு நல்ல போதையில் ஆட்டோவில் ஏறிவந்து லொட்ஜ் றூம் கட்டிலில் அப்படியே விழுந்தவன் கண் அயர்ந்து போகும் போதே யாரோ கதவில் பலமாக தட்டினார்கள்.எவண்டா இந்த நேரத்திலையெண்டு நினைத்தபடி கதவைதிறக்கவும் தயாராய் சாதாரண உடையில் நின்றிருந்த இருவர் பாய்ந்து அவனை கட்டிலில் தள்ளி கையில் விலங்கை போட்டவர்கள். அவனின் உடுப்பு பையை ஒருவன் துளாவ மற்றையவன் அவனின் கைத் தொலைபேசியை நோண்டினான். அவனிற்கு விடயம் ஓரளவிற்கு புரிந்தது. ஆனால் எப்படி என்று புரியவில்லை. எது எப்பிடியானாலும் ஆங்கிலத்லேயே கதைப்தாக முடிவெடுத்தவன். ஆங்கிலத்தில் நீங்கள் யார் என்ன வேணும் என கத்தினான். கள்ள நாயே என்றபடி ஒரு உதைதான் விழுந்தது. அதற்குமேல் எதுவும் பேசாதவர்கள். அவனது கடவுச் சீட்டையும் அவனது பையையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து அங்கு நின்ற ரொயோட்டா டொல்பின் ரக வானில் உள்ளே தள்ளினார்கள். உள்ளே இன்னொருத்தனும் ஒரு பெண்ணும் இருந்தார்கள்.
உள்ளையிருந்த பெண் நாம்பன் மாட்டுக்கு பல்லை பிடிச்சு பாக்கிற மாதிரி அவனின்ரை நாடியை ஒரு கையாலை பிடிச்சு வலம் இடமாக திருப்பி பாத்திட்டு சிங்களத்தில் இவனை தெரியேல்லையெண்டவள். அவனிடம்.

டேய். பு....மகனே நீ புலிதானே

எக்ஸ்சியூஸ் மீ ஜ டின்ட் அண்டஸ்ராண்.

தமிழிலை கதையடா வேசைமேனே எண்டபடி அவளின் பங்கிற்கு அவனின் கதைப் பொத்தி ஒரு அறை விட்டாள்

அவனின் சேட் ஒன்றை எடுத்து ஒருத்தன் அவனது கண்ணை கட்டினான். வான் ஒரு இருபது நிமிசமாய் ஓடிக்கொண்டிருந்தது. இப்பிடித்தான் அவன் பாத்த ஒரு இங்கிலிஸ் படத்திலை கீறோவை கண்ணை கட்டி கொண்டு போவார்கள். கீறோ போகிற வழியை அக்கம் பக்கத்திலை கேக்கிற சத்தத்தை வைச்சு அடையாளம் பிடிப்பார். பிறகு அதே மாதிரி ரஜனியும் ஒரு படத்திலை நடிச்சிருந்தார். இவனும் அது மாதிரி வெளியிலை என்ன சத்தம் கேக்குதெண்டு காதை குடுத்துப் பாத்தான். ஆனால் சிங்களவன் புத்திசாலி வானிலை சிங்கள பாட்டை சத்தமாய் போட்டிருந்தான். அதலை ஒண்டும் கேக்கேல்லை.கடைசியிலை றெயின் ஒண்டு கோணடிச்ச சத்தம் மட்டும் கேட்டது. அது ஏதோ அவனிற்கு கடைசியா ஊதின சங்கு மாதிரியே இருந்தது.

வான் ஒரு இடத்தில் நிண்டது அவனை இறக்கி போனவர்கள் கண்கட்டை அவித்து விட்டதும் சுத்திவர பார்த்தான். அது போலிஸ் நிலையம் அல்ல. சாதாரண ஒரு வீடு போல இருந்தது.ஆனால் புலனாய்வு பிரிவின் இரகசிய சித்திரவதைக்கூடம் என்று மட்டும் புரிந்தது. அவனை கதிரையில் இருத்தியதும். அவள் தான் விசாரணை தொடங்கினாள். இதா பார் ஒழுங்கா உண்மையை ஒத்துக் கொண்டா நீ உயிரோடை போகலாம்.கணணியில் கிராபிக் செய்த ஒரு படத்தையும் அதே படத்தை கையால் ஓவியமாய் கீறியிருந்த படத்தையும் காட்டியபடிசெல்றா இந்த பெடிச்சியை உனக்கு எப்படி தெரியும்.நீ புலிதானே .அவளின் வட்டார வழக்கு பேச்சிலிருந்து அவள் மட்டக்கிளப்பு அல்லது அம்பாறை எண்டு புரிந்தது.

நோ சிஸ்ரர் எண்டவனிற்கு பேந்தும் பார் இங்கிலிசு எண்டு இன்னொரு அறை விழுந்தது. "சொறி "வளந்தது படிச்சது எல்லாமே சிங்கப்பூர். வேணுண்ணா என்னோடை டொக்கிமென்ன்ஸ் செக் பண்ணி பாருக்க . எனக்கு தமிழ் இப்பிடித்தான் வரும்.என்றான்.
அவளின் விசாரண நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்த மேசையில் அவனது பொருட்களை பரப்பி வைத்து அவனிடமிருந்த விசிட்டிங் காட்டுகள். அவனது சிங்கப்பூர் ஆவணங்களை மற்றையவன் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.

இனி சரிவராது எங்கடை வழைமையான விசாரணையை தொடங்க வேண்டியதுதான் என்று அவள் சிங்களத்தில் சொன்னதும். இருவர் வந்து அவனது உடுப்புக்களை கழற்றி நிருவாணமாக்கி அங்கிருந்த இரண்டு தூண்களிற்கிடையில் அவனது கைகளையும் காலையும் அகட்டி கட்டினார்கள்.டவின்சியின் மான் பவர்(man power) ஓவியத்தை போன்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்தவனை
ஒருவன் வளைந்து கொடுக்கும் ஒரு வித பிளாஸ்ரிக் குளாயால் அவனது பின் பக்கம் முழுதும் முடிந்தவரை ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான்.அவன் ஏற்கனவே தண்ணியடித்திருந்ததால் வாங்கிய அடி நிருவாணமாக்கப்பட்ட கூச்சம் தூண்களில். தொங்கிய வலி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை.ஆனால் அவன் வாய் மட்டும் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒருத்தன் சாராய போத்தலுடனும் சாப்பாட்டு பார்சல்களுடனும். உள்ளே நுளைந்தான் . வாங்கோ காசிம் நானா. என்று வரவேற்றார்கள். இவனை தொங்கவிட்டு அவர்கள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களின் சிங்களத்திலான உரையாடல்களில். அவளின் பெயர் ராணி.இன்னொருத்தன். உடுகொலஇவன்தான் அந்தக் குழுவின் பொறுப்பாளர்.. மற்றையவன்.பெர்ணான்டோ. அடுத்தவன் றஜித். என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது. கையில் சாராய கிளாசுடன் வந்த ராணி அவனின் வாயில் வைத்து பருக்கினாள்.. அவனிற்கும் அது தேவையாக இருந்தது. பின்னர் தன்து கைகளை கீழே கொண்டு சென்றவள். அவனது உறுப்பை விரலால் தட்டியபடி நீ எப்பவுமே இப்பிடித்தான் கிறீன் சேவ் செய்வியா என்றவும். மற்யைவவர்கள் கிறீன் சேவ் இல்லை கிளீன் சேவ்..ராணி தன்னுடைய வேலையை தொடங்கிட்டாள் என சொல்லி சிரித்தனர்.
மீண்டும் மேசைக்கு போனவள் ஒரு கிளாஸ் சாராயத்தை ஒரு மடக்கில் குடித்துவிட்டு திரும்ப வந்தது இனி உனக்கு தமிழ் தானாய் வரும் என்றபடி ஒற்றைக் கையை கீழே கொண்டு போனாள். இப்பொழுது அவளது உள்ளங்கையில் அவனது இரண்டு விதைகளும். உள்ளடங்கியிருந்ததுமெதுவாக கையை இறுக்கி பிசைய தொடங்கினாள். வலி உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்க அவன் கால்கள் நெம்பி பெருவிரல்கள் தூணைத்தொட்டது. வானத்திலிருந்த நட்சத்திரங்கள் இறங்கிவந்து அவனது தலையை சுற்றி வட்டமிட கண்கள் இருண்டது. மீண்டும் கண்விழித்தபொழுது அவர்கள் உணவருந்தியபடி இருந்தார்கள். ஆனாலும் அசையாமல் அவர்கள் பேசுவதை கேட்டான்.

தவறான ஆளை பிடிச்சிட்மோ. ??

ஏன் அப்படி சொல்லுறாய்???

அனிட்டை இருந்த விசிட்டிங் காட்டுகள் எல்லாம் பெரிய பிஸ்னெஸ் ஆட்கள். அரசியல் வாதிகள். போலிஸ் அதிகாரிகள் பெயர்கள் இருக்கு.

சும்மா எங்கையாவது பொறுக்கியெடுத்து சேர்த்து வைச்சிருந்திருப்பான். எதுக்கும் நாளைக்கு அந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு கேட்டு முடிவு செய்வம்.

எதுக்கும் சலாவுதீன் வரட்டும். அவனுக்குத்தான் யாப்பாணியளை தெரியும். ..இல்லாட்டி குணாளனிற்கு கட்டாயம் தெரியும்.

குணாளன் இப்ப சி.பி.சி.ஜ.டி. நிலாப்தீனோடையல்லோ??. அவங்களிட்டை குடுக்கக்கூடாது நாங்களே கண்டுபிடிக்கவேணும்.

சிலநேரம் இவனின்ரை தொடர்புகள் பெரிய இடமெண்டால் எங்களிற்கும் பிரச்சனை இவனை அந்தப் பெண்ணோடை சிலர் பாத்திருக்கிறதா சொலலியிருக்கிறாங்கள். எதற்கும் நாளைக்கு அந்த லொச்சிற்கு நேரடியா அவனையும் கொண்டு போய் விசாரிக்கலாம். காசிம் நானா நீங்கள் இவனை படமெடுத்து மட்டக்களப்பிற்கு போய் விசாரிட்டு வாங்கோ.

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது இருமல் அவர்கள் பார்வையை திருப்பியது
தொங்கிய தலையை நிமிர்த்தி பிளீஸ் வோட்டர். வோட்டர்.. இவனுக்கு எப்பிடியடிச்சாலும் தமிழ் வருதில்லையென்றபடி ராணி திரும்பவும் சாராயத்தை போத்தலோடு எடுத்துப்போய் அவன் தலையை நிமிர்த்தி ஆட்டுக்கு தவிட்டுத் தண்ணி பருக்குவது போல பருக்கினாள். அவனிற்கு அதற்கு மேலும் முடியாமல் குமட்டிக்கொண்டுவரவே ஊவேக்......
வேணிபார் கோழிப்புரியாணி கூழாக பாய்ந்ததில் பாதி ராணியையும் நனைத்துவிட கோபமடைந்த ராணியின் உள்ளங்கைகளில் மீண்டும் அவனது விதைகள்.

0000000000000000000000

அதிகாலையளவில் கண் விழித்திருந்தான்.அவன் மயங்கியிருந்தானா அல்லது நித்திரையாகிப் போயிருந்தானா?என்பது நினைவில் இல்லை. அவன் எடுத்திருந்த சத்தியின் நாத்தம் அந்த அறையெங்கும் பரவியிருந்தது. தாகம் தொண்டையை அடைத்தது. அப்பொழுதுதான் அவனிற்கு உடல்வலியனைத்தும் தெரிந்தது. தலையில் பெரியதொரு பாறாங்கல்லை கட்டிவிட்டது போல பாரமாயிருந்ததோடு தலை வெடித்துவிடுகிற அளவிற்கு தலைவேறு வலியெடுத்தது. மூத்திரம் பெய்யவேண்டும் போல் முட்டியிருந்தது இருந்தது ஆனாலும் முடியவில்லை அவனது விதைகள் இரண்டும் வீங்கி நாவல் நிறமாய் மாறிவிட்டிருந்தது.மெதுவாய் முக்கியபடி சொட்டுச் சொட்டாய் பெய்து முடித்தவனிற்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.


ஆனால் அந்த இடத்திலேயே பெய்ததால் மீண்டும் அடிவிழலாம் என அவன் எதிர்பார்த்தான். அடுத்து என்ன செய்வார்கள். கொலைசெய்து எங்காவது வீசி விடுவார்களா? அல்லது நான் யாரென்பதை கண்டு பிடித்து சிறையில் வாழ்க்கை கழியப்போகின்றதா? நேற்று அவனை சந்தித்தவர்கள் அவனை தேடியிருப்பார்களா? சிங்கப்பூரிற்கு செய்தி போயிருக்குமா? இப்படி ஆயிரம் கேள்விகளை திரும்ப திரும்ப அவன் மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் போதே விடிந்துகொண்டிருந்தது.
காலை கதவைத்திறந்த ஒருத்தன் நாற்றத்தில் முகத்தை சுழித்தபடி மீண்டும் கதவை சாத்தினான். சில நிமிட நேரத்தில் மீண்டும் கதவு திறந்தது அவனுடன் இன்னொருத்தன் கையில் வாளித் தண்ணீரும் துணியோடும் நின்றிருந்தான். வந்தவன் சே இவங்கள் என்ன மனிசரா மிருகங்களா இரவு முழுக்க தொங்கவிட்டிருக்கிறாங்கள் என சிங்களத்தில் திட்டிய படியே அவனது கட்டுக்களை அவிழ்த்து கிழே இறக்கவும் அவன் நிற்க முடியாமல் கீழே விழுந்து படுத்துக்கொள்ள. அவனை தூக்கியபடி சிங்களம் தெரியுமா? என்றான். அவன் பேசாமல் இருக்க யு ஸ்பீக் சிங்களம் என்றான். அவன் இல்லையென தலையாட்டி விட்டு தண்ணிகுடிக்கவேணும் என சைகை மட்டும் செய்தான். அவனை கதிரையில் இருத்தி ஒரு போத்தலில் தண்ணியை கொண்டு வந்து கொடுத்தவன். அந்த இடத்தை துப்பரவு செய்து கொண்டிருந்தவனை ரவி இவனை கொண்டுபோய் குளிக்கவிடு என்றான்.
அவனை குளிப்பதற்கு கூட்டிப்போன ரவி

நான் வடமராச்சி பிடிச்சு அஞ்சுமாதமாகிது டீ..ஓ .போட்டிட்டு இஞ்சை வேலைக்கு வைச்சிருக்கிறாங்கள். வெளிநாடு போக வந்தனான் சந்தேகத்திலைதான் பிடிச்சவங்கள். நீங்கள் ஊரிலை எந்த இடம்?

சிங்கப்பூர்

ஊரிலை சிங்கப்பூரா?? அது எங்கையிருக்கு?

சிங்கப்பூரிலை இருக்கு.

இந்த வாய்க்கொழுப்புக்குத்தான் பிடிச்சிருப்பாங்கள். போய் குளி.

குளித்து முடித்து வந்தவன் அந்த சிங்கள அதிகாரியிடம் வலிக்குளிசை கேட்டு வாங்கி போட்டுக்கொண்டான் அவன் பால்த்தேனீரும் வாங்கி கொடுத்திருந்தான்.
0000000000000
முதல்நாள் அவனைப் பிடித்த குழுவினருடன் மேலும் இருவர் வந்திருந்தனர். புதிதாய்வந்தவர்களில் ஒருவன் என்ன மச்சான் எப்பிடி இரிக்கிறாய். என்னை ஞாபகம் இரிக்கா என்றான். அவன் இல்லையென்று தலைமட்டுமஆட்டினான் நான் நம்பத் திறீயிலை செல்வா வீட்டிலையெல்லாம் இரிந்தனான் என்னை தெரியாதா?? மீண்டும் அவனது கேள்விக்கு இவனது தலையசைப்பு மட்டுமே பதிலானது. அவனும் உடுகொல மட்டும் வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் உள்ளே வந்த உடுகொல சலாவுதீனிற்கு தெரியாதாம் என்றான். புதிதாய் வந்த மற்றையவன் அவனை சுவரோடு நிற்க வைத்து கையில் ஒரு சிலேற்றில் சில இலக்கங்களை எழுதிக்கொடுத்து பிடிக்கச் சொல்லி பல கோணங்களில் படம் எடுத்தான். காசிம் நானா நீங்கள் படங்களை பிறின்ட் போட்டு மட்டக்களப்பிற்கு போய் விசாரிச்சு விபரங்களை கொண்டுவாங்கோ என்று உத்தரவிட்ட உடுகொல ராணி நாங்கள் இவனை அந்த லொட்சிற்கு அழைத்து போகலாமென்றான்.

அவன் கண்கள் கட்டப்பட்டது .இப்பொழுது அவர்கள் பயணித்தது போலீஸ் ஜீப் ஆனால் அனைவரும் சாதாண உடையில் தான் இருந்தனர் கட்டியிருந்த அவனது கண்களை அவிழ்த்தனர். போலீஸ் ஜீப் கிறீன் வீதியிலிருந்த பாரிஸ் லொட்ஜின் முன்னால் நின்றது. இது இலங்கையின் பிரபல பயண முகவரான பாரிஸ் தவம் என்பவரிற்கு சொந்தமானது. போலீஸ் ஜீப்பை பார்த்துமே அனைவரும் அறைகளிற்குள் பதுங்கிக்கொண்டனர். காரணம் அங்கிருந்தவர்கள் அனைவருமே வெளிநாடு போவதற்காக ஏஜென்சிகளிடம் காசுகட்டிவிட்டு காத்திருந்தவர்கள். கைவிலங்கிட்ட அவனை இறக்கியவர்கள். லொட்ச் மனேச்சரிடம் போய் விபரத்தை சொல்லி உடுகொல தன் கையிலிருந்த அந்த பெண்ணின் படத்தையும் அவனையும் காட்டி இவர்களை இங்கு தங்கிருந்தாரகளா? என்றான். பழைய மனேச்சர் காசை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டதால் தான் புது ஆள் வேலைக்கு சேர்ந்து கொஞ்சக்காலம்தான். அங்கை இருக்கிற பழைய ஆட்களை கேட்கச் சொல்லி சொன்னார்.
அப்பொழுது அங்கு வந்த றூம் போய்(லொட்சினை கூட்டிதுப்பரவாக்கி அங்குள்ளவர்களின் தேவைகளை கவனிப்பவன்.)அவனிடமும் அதே கேள்வியை கேட்டதும் அவனை ஆழமாக பார்த்தவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு லொட்சில் இருந்த மற்றையவர்களை கதவைதட்டி வெளியே வரும்படி சொல்லிக்கொண்டே போனான். வெளியே வந்த பலரும் அவனைத் தெரியாதென்றே சொன்னவர்கள் பெண்ணின் ஓவியத்தை பார்த்து தலையை சொறிந்தனர். ஒருத்தி மட்டும் அவனை அங்கு கண்டதாகவும். ஆனால் அந்த பெண்ணை தெரியாது என்றும் சொன்னாள். அவனைத் தெரியும் என்றதுமே ..இரடி வெளியாலை வந்ததும் முதல்வேலையா வந்து உனக்கு காதைப்பொத்தி போடுறன் எண்டு மனதில் நினைத்துக்கொண்டான். அங்கிருந்து புறப்படும் பொழுது றூம் போயை பார்த்து கண்களால் நன்றி சொன்னவன். செய்தி சிங்கப்பூரிற்கு போய்விடும் என்கிற நம்பிக்கை அவனிற்கு பிறந்திருந்தது.


அவர்கள் அருகிலிருந்த பியூட்டி லொட்ச்.மற்றும் விவேகானந்தர் லொட்ச் ஆகியவற்றிலும் விசாரித்தார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தெரியாதென்றும் சிலர். பார்த்மாதிரி இருக்கு என்றும் பதில் சொன்னதால்.அவர்களிடம் ஏதோ வெறுப்பணர்வு தோன்றியிருந்தது இப்பொழுது அவனது கண்கள் கட்டப்படவில்லை ஜீப் மருதானை காவல் நிலையத்திற்கருகில் இருந்த காவல்த்துறையினரின் குடியிருப்பில் நுளைந்தது. அந்த அறையில் நுளைந்தபொழுதுதான் அவன் அங்குதான் முதல்நாள் இரவு தங்கவைக்கப்பட்டிருத்தான் என்று அவனிற்கு புரிந்தது. இப்பொழுது அவனிற்கு பசி வயிற்றை விறாண்டியது. மீண்டும் தலைவலிக்கத்தொங்கியிருந்தது.அப்பொழுது உடுகொலவின் கைத்தொலைபேசியடிக்க அதை எடுத்தவன் வெளியே போனான். சில நிமிட நேரத்தின் பின்னர் உள்ளே வந்தவன். மற்றயவர்களையும் வெளியே அழைத்தான். சிங்கப்பூரிற்கு தொலைபேசி போயிருக்குமோ என்று அவன் நினைத்துக்கொண்டான்.

00000000000000

மீண்டும் உள்ளே வந்தவர்கள் உடுகொல அவனிடம்

வினோதனை உனக்கெப்படி தெரியும்.

அவர் என்னுடைய றிலேசன் அங்கிள் முறை.

ஓ அப்பிடியா?

அவனது முகம் மாறியது உன்னை தேடி எல்லா போலிஸ் ஸ்ரேசனிற்கும் போன் போயிருக்கு.

ஓ றியலி ??

என்ன சாப்பிடுகிறாய்.

பிறியாணி.

00000000000000000

அன்றிரவு பொறளை இராணுவ மற்றும் காவல்த்துறை குடியிருப்பின் ஒரு தொடர்மாடி குடியிருப்பில் அவனது ஒற்றைக்கை மட்டும் ஜன்னலுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தது. குளித்து முடித்து சுடிதார் அணிந்து வந்த ராணி அவன் முன்னால் ஒரு முறை சுழன்றவாறு நான் எப்பிடி இருக்கிறேன் என்றாள்.. ஊகூம்..பெரிய நதியா எண்டு நினைப்பு.கோயில் தேரிற்கு சீலையால் போர்த்தது போல இருக்கு என்று சொல்லாமென நினைத்தாலும் சுப்பர் என்றான். கதவைத் தட்டிய ஒரு போலிஸ்காரன் சாராயம் பியர் சோடா இரண்டு பிரியாணி பாசலை கொடுத்து விட்டு பவ்வியமாக விடைபெற்றான்.கைவிலங்கை கழற்றியவள் விலங்கின் இரண்டு பக்கத்தையும்காப்புப் போல் ஒரு கையிலேயே பூட்டினாள். இன்றிரவு நீ என்னுடைய பாதுகாப்பில்தான் இருக்கப் போகிறாய். ஒத்துளைத்தால் உனக்கு நல்லது இல்லாட்டில் நேற்றை இடத்தில் தொங்கவேண்டிவரும் என்றாள்.

என்னவேணும் பியரா சாராயமா ?

fist பாத்றூம் next பசி சைகையுடன் சேர்த்தே சொன்னான்.

வீட்டையும் நோட்டம்விட்டான் யாரும் தப்பிஓடிவிடாதபடி யன்னல் வெளியே இரும்புக்கம்பிகளால் ஒட்டப்பட்டிருந்தது.துணியெல்லாவற்றையும் கழற்றிவிட்டு போக சொன்னாள். கழிவறைக்கு போனவன் அப்படியே குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அங்கிருந்த புளிச்ச நாத்மெடுத்த துவாயால் முன் பக்கம் மட்டும் மறைத்தபடி வந்தவனை ஏற இறங்க பார்த்த ராணி அவன் துவாயை பறித்துவிட்டு மீண்டும் கைகளை பின்பக்கமாக விலங்கிட்டு கதிரையில் தள்ளினாள்.தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது அவனது விதைகள் அவளது உள்ளங்கைகளில் ஆனால் நசிக்கவில்லை .அவனின் காலகளை அகற்றி முழங்காலில் குனிந்தாள். உன்னை அவள் இவ்வளவு நசிச்சும் உனக்கு உனக்கு புத்திவரேல்லை. கீழே பார்த்து திட்டினான்.. அசையாதை அசையாதை .கொச்சிக்கடை அந்தோனியாரே வெள்ளவத்தை பிள்ளையாரே நேத்திக்கடன் வைத்தான். இரண்டு பேருமே கைவிட்டு விட்டனர். விலங்கிட்டிருந்த கைகளை சில வினாடிகள் இறுக்கப் பொத்திப் பிடித்தான் கைகளை விலங்கு அழுத்தியது மீண்டும் கைகள் லேசானது.அவளது பெருத்த உடம்பிற்கான காரணம் இப்பொழுது அவனிற்கு புரிந்தது .ம்.பரவாயில்லையே என எழுந்தவள் பியரை உடைத்து சில மடக்குகள் குடித்துவிட்டு அவனது ஒரு கை விலங்கை அகற்றி அவனது கையில் பியரை கொடுத்தாள். விலங்கின் திறப்பை ஒவ்வொருதடைவையும். பாதுகாப்பாக அங்கிருந்த அறையில் கொண்டுபோய் வைத்து கதவை பூட்டிவிடுவாள். அவளின் செய்கைகள் அனைத்தும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதொரு புலனாய்வு அதிகாரியாகவே காணப்பட்டாள்.

00000000000000

நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது வீதி விளக்கின் வெளிச்சம் மெல்லிதாய் அறையை நிறைத்திருந்தது. அந்த படுக்கையறையின் கட்டிலில் அவனின் இடக்கை கட்டிலோடு மேற்பக்கமாக விலங்கிட்ட நிலையில் கலந்து முடித்த இருவரிற்கும் மூச்சுவாங்கியபடியிருக்க. அவளின் பருத்த உடல்பாதி அவன் மீது படர்ந்திருந்தது. அவன் கன்னத்து குழியினை விரலாம் மெதுவாய் வருடியவள் .எனக்கு உன்னிலை பிடிச்சதே இந்தக் குளிதான்.

நீ புலியில்லை எண்டு விசாரணயள்ளை தெரியிது.

அப்ப விடவேண்டியதுதானே ??

காசிம் நானா மட்டக்கிளப்பாலை விசாரண முடிச்சு வந்ததும் அங்கையும் உன்னை தெரியாதெண்டு சொல்லியிருந்தா உன்னை கோட்டிலை கொண்டுபோய் ஒரு ஜச்சிற்கு முன்னாலை லோக்கல் பொலிசிட்டை குடுத்திடுவம் பிறகு உன்ரை சொந்தக்காரங்கள் யாராவது வந்து கையெழுத்து போட்டு கூட்டிக்கொண்டு போகலாம்.

எதுக்கு என்னை அரஸ்ற் பண்ணீங்க??

பட்டிலங்தையிலை வெடிச்சு செத்த பெட்டையோடை கடைசியா ஒருத்தன் இரண்டுநாள் பாரிஸ் லொட்ச்சிலை தங்கியிருக்கிறான்.அவள் மட்டக்கிளப்பு மாமங்கம். அததான் காசிம் அங்கை போயிரக்கிறார் . அவனின்ரை பொலிஸ் பதிவு ஜடென்டி காட்டிலை திருக்குமார் எண்டு பெயர் இருக்கு அந்த ஜடென்டி படத்தை எடுத்து எல்லா லொட்ச் கோட்டல்கள் பொலிஸ் ஸ்ரேசன்கள் எல்லாம் அனுப்பி வைச்சனாங்கள். அப்பதான் ஒரு லொச்சிலை அதே மாதிரி ஒருத்தன் தங்கியிருக்கிறதா தகவல் வந்திச்சி. அதுதான் நீ...

இது லொட்ச் காக்காவின்ரை வேலையா என மனதிற்குள் நினைத்தவன். ..பட்டிலந்தை.. லேடி.. திருக்குமார் ..வெடிச்சது எதுவுமே புரியல்லை.என்னை பாத்தா அவன் மாதிரி இருக்கா??

உனக்கு எதுவுமே விளங்க வேண்டாம் வேண்டாம் அதுதான் நல்லது .

ஒண்ணு கேட்டா கோவிச்சசுக்க மாட்டீங்களே நீங்க சி ஜ டியா.

இப்ப அப்பிடித்தான் ஆனால் மின்னை அப்பிடியில்லை

அப்பிடின்னா??

அவள் கைகள் அவனது மார்பை வருடியபடியே ..நானும் சிங்களவனிற்கு எதிராதுவக்கு தூக்கினவள்தான். எங்கடை ஊரிலை ஈ;பி.ஆர்.எல்.எவ்வுக்கு போன முதல் பெடிச்சி நான்தான். இயக்கத்திலையே ஒருத்தரை காதலிச்சிருந்தனான் புலியள் ஈ.பி யை தடைசெஞ்சாப்பிறகு என்னையும் அவரையும் விசாரிச்சிட்டு விட்டிட்டாங்கள். நாங்கள் கலியாணம் செய்து எனக்கு பிள்ளையும் பிறக்க அவர் கட்டாறுக்கு போயிற்றார். எல்லாம் நல்லபடியாய்தான் போய்கொண்டிருந்தது. என்ரை அவரும் லீவிலை ஊருக்கு வந்திருந்தார் அந்த நேரம் இந்தியனாமிக்கும் புலியளிற்கும் சண்டை நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலை நிண்ட பழைய இவற்ரை சினேதங்கள் ஈ.பி பெடியளும் ஊருக்கை இந்தியனாமியோடை திரிஞ்சவங்கள். இவர் வந்து நிண்டதை கேள்விப்பட்டு அடிக்கடி வந்திட்டு போவாங்கள். நாங்களும் வராதையெண்டு சொல்லோது. ஒருநாள் இரவு இதே மாதிரித்தான் நானும் அவரும் படுத்திருந்த நேரம் எங்கடை சொந்தக்கார பெடியன் ஒருத்தன் புலியிலை இருந்தவன். தீசன் எண்டு பேர் கதவிலை தட்டி என்ரை பேரை சொல்லி கூப்பிட்டான் அவசரமா துணியை சுத்திக்கொண்டு நான்தான் போய் கதைவை திறந்தன் இவரோடை கதைக்கவேணும் வரச்சொல்லுங்கோ எண்ட அவரும் பின்னாலை வந்திட்டார். என்னவெண்டாலும் இங்கை கதை அவர் வெளியிலை வரமாட்டார் எண்டு நான் அம்பிடிக்க . ஜயோ அக்கா ஒரு பிரச்சனையுமில்லை கதைக்கத்தான் எண்டு அவனும் அடம்பிடிக்க சொந்தக்கார பெடியன்தானே ஒண்டும் செய்யமாட்டானெண்டு அவரை வெளியாலை விட்டாலும் நானும் கொஞ்சம் பின்னாலை போனன் படலையடிக்கு போனதும் வெடிச்சத்தம் கேட்டிச்சு. மண்டை வெடி அவர் அதிலையே........ என்று சொல்லும் போது ராணியின் குரல் தளுதளுத்தது நின்று போய் அவனது மார்பில் சூடான சிலகண்ணீர் துளிகள் விழுந்ததை அவன் உணர்ந்தான். சில நிமிட அமைதியை அவனே கலைத்தான்.


அப்புறம் என்னாச்சு.??

அதோடை என்ரை விதியும் மாறிப்போச்சு. என்ரை மனிசனை சுட்டவனை கொல்லாமல் விடுறெல்லையெண்டு முடிவெடுத்தன். என்ரை புள்ளையை அம்மாட்டை குடுத்திட்டு ஆமியோடை போய் சேந்திட்டன்.அவனை மட்டுமே தேடினன் ஒம்பது மாதத்துக்கு பிறகு அவனை போட்டாப் பிறகுதான் என்ரை மனசு கொஞ்சம் ஆறிச்சிது.

ஓ அவனும் குளோசா?? பிறகெதுக்கு இப்பிடி நீங்க தொடந்தும்....இழுத்தான்.

பிறகு எங்கையாவது போய் என்ரை பிளையோடை வாழலாமெண்டுதான் நினைச்சனான். ஆனா புலியை பத்தி உனக்கு தெரியாது அது எங்கை போனாலும் விடாது. ஏதாவது அரபு நாட்டுக்கு போகலாமெண்டு நினைச்சன் அதக்கு என்னட்டை வசதியும் இருக்கேல்லை. வெளிநாடு போனாலும் உன்னை மாதிரி நான் படிச்ச ஆளும் இல்லை ஏதாவது வீட்டு வேலையள்தான் செய்யவேணும். அதோடை முதல்லை வெறும் மெசேச்குடுக்கிற ஆளாய் இருந்த என்னை சி.ஜ.டி யிலை சேர்த்து பயிற்சியளும் தந்து குவாட்டஸ் சம்பளம் எல்லாம் தாறாங்கள்.
என்னவோ ஒண்ணும் புரியல்லை ஆனா உங்களோடை ஸ்ரோறி பீலிங்கா இருக்கு சொறி. எனக்கு நீங்க அடிச்ச அடி ஒரே வலியா இருக்கு இன்னும் கொஞ்சம் விஸ்கி பிளீஸ் ..அப்பதான் தூங்கலாம்.
இப்ப எனக்கும் கவலையாத்தான் இருக்கு ஆனால் ஒண்டுமே செய்யேலாது என்றவள். அவன் மீதிருந்த நிரம்பிய ஆணுறையை உருவியெடுத்தவாறே துணியால் தன்னை சுற்றிக்கொண்டு அயையை விட்டு வெளியேறினாள்.

000000000000000


ஒரு கிளாஸ் நிரப்பி சாராயத்தை ஊற்றிவந்து அவனிடம் நீட்டியவள் அவன் குடித்து முடியும்வரை காத்திருந்து கிளாசை வாங்கியபடி உனக்கு இன்னொரு விடயத்தையும் சொல்லவேணும் நாளைக்கு உன்னை ஜட்சிற்கு முன்னாலை விடுதலை செய்யேக்கை நான் இப்பிடி நடந்ததா நீ வாயே திறக்கக்கூடாது அதுதான் உனக்கு நல்லது . அப்பிடி ஏதாவது நடந்தால் நீ எப்பிடியும் எங்களோடை கண்காணிப்லைதான் இருப்பாய் பிறகு கடல்லையோ களனி ஆத்திலையோ மிதக்கவேண்டிவரும். என்றவள் அவன்மீது போர்வையை போர்த்திவிட்டு "சரி படு நான் இஞ்சை வெளியிலைதான் படுத்திருப்பன்" என்படி விலங்கு சரியாய் பூட்டியிருக்கா என்று பார்த்து உறுதி செய்தவள் கதைவை பூட்டிவிட்டு போய்விட்டாள்.

000000000000

காசிம்மின் மட்டக்கிளப்பு அறிக்கை N.I.B அறிக்கை எல்லாம் வந்தது அவனை மருதானை நீதவான் முன்னிலையில் புறக்கோட்டை பொலிசாரிடம் C.I.D யினர் கையளித்தனர். அங்கேயே தயாராய் நின்ற வக்கீல் கையெழுத்திட்டு அவனை விடுதலை செய்தார். அங்கு வந்த ராணி அவனிடம் தனது கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து உனக்கு எங்கை என்ன உதவி தேவையோ தராளமாய் எனக்கு போனடி தனது இலக்கத்தை கெடுத்துவிட்டு போனார்.அதன் பின்னர் அவனும் பாகிஸ்தானிற்கு தேங்காய் ஏற்றுமதி வியாபாரத்தினை அவனது பங்காளி சுமானந்த தேரரோடு தங்குதடையில்லாமல் தொடர்ந்ததோடு அடிக்கடி பொரளை ராணியின் குவாட்டசிற்கு பியரோடும். ஓல்ட் அரக்கோடும் போய்வருவதுமாய் அவர்களது நட்பு தொடர்ந்தது.

00000000000000

01.31.1996 திங்கள் அதிகாலை மீன்கள் பதனிடும் தொழிற்சாலையொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி ஒன்றினுள் அவன் தனியாக ஜட்டிமட்டும் அணிந்தபடி வியர்வையும் புளுதியுமாய் சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் அதிகளவு சத்தம் எழுப்பாமல் கவனமாய் ஆனால்பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தவன். நேரத்தை பார்தான் அதிகாலை இரண்டை தொட்டுக்கொண்டிருந்தது அவனிற்கு பக்கத்தில் மசாயிர் அவனிற்கு உதவிக்கொண்டிருந்தான். சரிமச்சான் எல்லாம் முடிஞ்சுது இனி பின்னாலை கருவாட்டு கூடையளை அடுக்கினால்சரி என்றபடி வேகமாக இன்னொரு லொறியிலிருந்த கருவாட்டு கூடைகளை அந்த லொறிக்கு மாற்றிஅடுக்கி முடித்தவர்கள் அங்கு தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரில் உடலை கழுவி உடுப்பை மாற்றிபடியே அவன் மசாயிரிடம்..
மச்சான் நேரமாகுது நீ லொறியை எடு நான் காரிலை முன்னாலை போறன். என்றான்.

மச்சான் உன்னை நம்பித்தான் இரிக்கிரன் ஒண்டும் பிசவாது தானே

டேய் நான் அ..அ வின்ரை ஆள் ஒண்டும் பிசவாது லொறியைஎடு எண்டவன் காரிற்கு போய் அதற்குள்ளிருந்த jony walker போத்தலை திறந்து சில முறடுகள் விழுங்கி தொண்டையை கனைத்துவிட்டு பார்த்பொழுது. மசாயிர் தலையில் தொப்பியை போட்டபடி அவனது ஜீன்சில் இருந்த கைக்குட்டையை எடுத்து நிலத்தில் விரித்து முழந்தாளிட்டு தொழுதுகொண்டிருந்தான். இவன் வேறை நேரம்காலம் தெரியாதவன்.என்று சலித்துக்கொண்டான்.
தொழுது முடிந்த மசாயிரிடம் டேய் உன்ரை அல்லா பகிடி வெற்றி தெரியாதவர். கவனம். எல்லாம் பிழைக்கபோகுது .

அதில்லடா மனசாட்சியெண்டு இரிக்கல்லே அதுதான் என்படி மசாயிர் லொறியில் ஏறி அதை இயக்கினான்.

அவர்களது வாகனங்கள் கொழும்பு நகரினுள் நுளையும் முக்கிய சோதனை சாவடியை நெருங்க காவலரணில் இருந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருத்தன் ரோச் லைற் வெளிச்சத்தை காட்டி முன்னால் வந்த காரை மறித்தான். அவனும் அவர்களும் சிங்களத்தில் உரையாக்கொண்டிருக்கும்போதே லொறி அவர்களைத்தாண்டிப்போய்க்கொண்டிருந்ததுகாரிற்குள் மக்கால்வாசியளவில் இருந்த போத்தலை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் மசாயிருடன் இணைந்துகொண்டான். புறக்கோட்டை பகுதியில் காலை சந்தைக்காக லொறிகள் பொருட்களுடன் வந்து நிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. மசாயிரும் அந்த லொறிகளிற்கிடையில் ஒரு இடத்தில் நிறுத்தினான். அந்த லொறியை ஒருவனிடம் கையளித்து விடுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடும். காரை நிறுத்தியவன் ஒரு தொ.பே இலக்கத்தை அழுத்தினான். அங்கேயே மேம்பாலத்திற்கு அருகில் சாறத்தால் போர்த்துக்கொண்டு படுத்திருந்த ஒருவன் கரைநோக்கி வந்தான். சில சங்கேத மொழிகள் பரிமாறப்பட்டு இருவருமே சரியான ஆட்கள்தான் என உறுதி செய்து கொண்டபின்னர் அவன் லொறிக்கு புதியவனை அழைத்து போனாவன். மாசாயிர் கீழே இயங்கிக் கொள்ள இருவரும் லொறிக்குள் ஏறினார்கள். இங்கை சீற்றுக்கு பக்கத்திலைதான் சுவிச் வைச்சிருக்கிறன்.பிழைக்காது. அப்பிடி சிலநேரம் ஏதாவது பிழைச்சாலும் பின்பக்கமாய் ஒரு அடிகுடுத்தா போதும். என்றவனிடம் . அவன் ம்..என்று மட்டும் பதில் கொடுத்தான். விடைபெய முன்னர் அவனது பெயரை கேட்கலாமா என யோசித்தாலும் அது அவனது வேலையல்ல என நினைத்தபடி அங்கிருந்து வெளியேறினான். கார் கொழும்பிற்கு வெளியே பேலியகொடை பாலத்தை தாண்டி ஓடி கந்தானை பகுதியில் ஒதுக்குப் புறமாக ஒரு தென்னந்தோப்பில் நின்றது. கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு இருவரும் நித்திரையாகிப் போனார்கள்.

00000000000000

அவர்களது காரை யாரோ உலுப்புவது போல் இருக்கவே திடுக்கிட்டு விழித்தார்கள். எருமை மாடு ஒன்று காரில் சொறிதேய்த்தபடி நின்றது. அவன் எருமை மாடு என்று திட்டிவிட்டு நேரத்தை பார்தான் ஆறரை மணியாகியிருந்தது. சே இன்னம் கொஞ்சநேரம் நித்திரை கொண்டிருக்கலாம். என்றவன் காரை இயக்கி பிரதான வீதி நோக்கி ஓடிக்கொண்டிருக்க மசாயிர் திரும்பவும் சுருண்டு படுத்துக்கொண்டான். கந்தானை சந்திக்கு வந்தவர்கள் அங்கிருந்த முஸ்லிம் சாப்பாட்டுக்கடையில் போய் முகம் கழுவி காலைக்கடன்களை முடித்துவிட்டு ரீயும் மாலுபணிசும் சாப்பிட்டார்கள். கார் இப்பொழுது கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது மசாயிர் காரை ஒடிக்கொண்டிருந்தான்.

மசாயிர் இதுவரைக்கும் என்னோடை இருந்து செய்த உதவிக்கு தாங்ஸ்சடா மச்சான்.

என்ன இப்பிடி சொல்லிட்ட நீ எனக்கு எவ்வளோ உதவி செஞ்சிரிக்காய். நானும் இன்னும் மூண்டு நாளிலை டுபாய் போயிடுவன்.
நீ போறவரைக்கும் காரை வைச்சிரு இன்னும் பத்துநாளைக்கு காசு கட்டியிருக்கு நீ போற அண்டைக்கு கொண்டு போய்விடு.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இறுதி சோதனைச்சாவடி..
சரி மச்சான் இதிலை நான் இறங்கிறன். தேவையில்லாமல் கொழும்பிற்கு உள்ளை போகாதை கவனம். ஏதும் அவசரமெண்டால் மட்டும் சிங்கப்பூர் நம்பருக்கு போனடி இல்லாட்டி டுபாய் போனதும் போனடி
சரிமச்சான் சந்திப்பம் ..மசாயிரிடமிருந்து விடைபெற்றவன்.காரில் தயாராய் வைத்திருந்த பொதியை எடுத்து அதிலிருந்த ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் நுளைந்தவன் வழைமையான சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் தங்கியிருக்கும் கூடத்தில் தங்கியிருந்தபொழுது அவன் எதிர்பார்த்திருந்த ராணியின் அழைப்பு வந்தது. விமான நிலைய அறிவித்தல் ஏதும் செய்துவிடக்கூடாது என்று நினைத்தபடியே
கைத்தொலைபேசியை காதில் வைத்து கலோ..என்றான்.

டேய் நீ சொன்ன இடத்துக்கு வந்திட்டன் ஏதோ அவசரமா வரச்சொன்னாய் என்ன ஏது எண்டும் சொல்லேல்லை எங்கை நிற்கிறாய்.

நேரத்தை பார்த்தான்..ஓ வந்திட்டீங்களா. நான் இங்கை பக்கத்திலைதான் சதாம் ஸறீற்றிலை நிக்கிறன் ஒரே ராபிக் பத்து நிமிசத்திலை வந்துடறேன்.

என்ன விசயம் எண்டாவது சொல்லன்.

அதை நேரிலை சொல்லுறன்அங்கை நீங்கள் 1st Floor போய் mony exchange பண்ணிற இடத்திலை நில்லுங்கோ. வந்ததும் சொல்லுறன்.

சரி கெதியாய் வா.

1st Floor லையே நில்லுங்க பிறகு உங்களை தேடஏலாது

சரி சரி அங்கையே நிக்கிறன். எத்தினையோ பேரை நான் ஓடவைக்கிறன் நீ என்னை ஓடவைக்கிறாய் எல்லாம் என்ரை விதி ..

தொலைபேசியை அவன் முழுதுமாக நிறுத்தினான். சிங்கப்பூர் விமானத்திற்கான பயணிகளை தயாராகும்படி அறிவித்தார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். விமானம் ஓடுபாதையில் உருளத்தொங்கியது நேரத்தினை பார்த்தான். கொழும்புநகரம் ஒருமுறை அதிர்ந்து அமைதியானது.ஒரு தவறை இன்:னொரு தவறால் சரிசெய்திருந்தான். அது சரியா தவறா என்பதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை. அதைப்பற்றியெல்லாம் அவன் யோசிப்பதும் இல்லை.விமானம் மேலே கிளம்பியதும் போர்வையால் மூடியபடி நித்திரையாகிப்போனவனிற்கு கனவில் ராணியினால் விதை நசிக்கப்பட்டவர்களும் கொலை செய்யப்பட்டவர்களும் அவனைச்சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கதையின் முதலாவது பந்தியை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

00000000000000000000000000000

கதை உண்மை சம்பத்தை தழுவியது

பிற்குறிப்புக்கள். 90 களில் தென்னிலங்கையில் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்படுபவர்கள் ராணியை அடையாளம் கண்பதற்கோ அல்லது விசாரணை செய்யவதற்கோ ஒரதடைவையாவது சந்திரப்பார்கள்.

சலாவுதீன். புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தவன். மட்டக்கிளப்பை சேர்ந்தவன் யாழ்ப்பாணத்தில் புலிகள் முகாம்களில் இருந்தவன். புலிகள் இயக்கத்தில் ஜிகாத் அமைப்பு ஊடுருவி விட்டது என்று அறிந்ததும். புலிகள் அமைப்பிலிருந்த அனைத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு களையெடக்கப்பட்டபொழுது தப்பிவந்தஒருவன்.

குணாளன் . புலிகள் அமைப்பில் இருந்தவன் வடமராச்சி கரவெட்டியை சேர்ந்தவன். இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்திற்கு பெரும் தலையிடியாய் இருந்தவன். பின்னர் புலிகள் அமைப்புடன் முரண்பட்டு இலங்கை புலனாய்வு பிரிவுடன் இணைந்திருந்தான்.