Navigation


RSS : Articles / Comments


ஒரு போராளியின் அனுபவங்கள்...

10:37 AM, Posted by sathiri, No Comment

ஒரு போராளியின் அனுபவங்கள்...

 http://www.senguruthi.com/


ஆயுத எழுத்துசாத்திரி 
திலீபன் பதிப்பகம் | விலை:400/-
நிறுவனமயப்பட்ட அனைத்துமே  அதிகாரம் சார்ந்ததுதான் .அதிகாரம் ஏனையோரை ஒடுக்குகிற கருவியாக உருமாறக்கூடியது என்பது எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதே .அது ஒரு புரட்சிகர அமைப்பாக இருக்கலாம், கலகக்குழுவாக இருக்கலாம், வர்க்க சாதிய விடுதலையை கோருபவையாக இருக்கலாம் அல்லது ஈழ மக்களின் துயர் தோய்ந்த நீண்ட நெடுநாளைய போராட்டமாக இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் மேற்கண்ட கூற்று எல்லாவற்றுக்குமே பொருந்தக்கூடியதே!
புறத்திலும் அகத்திலுமாய் விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பல்வேறு தகவல்களை நாம் வாசித்தும் கேட்டும் இருக்க கூடும் ஆனால் அந்த இயக்கத்தின் உள்நாட்டு வெளிநாட்டு பிரிவுகளின் நீண்ட வருடங்கள் பணியாற்றிய சாத்திரி கூறுகிற போது  சுவாரஸ்யம் மேலிடுகிற அதே சமயம் வெறுப்பும் உடனிணைந்து கொள்கிறது.
ஒருமொழி பேசும் இனமக்ககளை இன்னொரு மொழிபேசும் இனமக்கள் பூர்வகுடிகள் என்கிற ஒற்றை அதிகாரத்தை கொண்டு எல்லா வகைகளிலும் ஒடுக்க முனைவதை யாவராலும் ஏற்க முடியாது.அதை ஒடுக்க அல்லது வேரறுக்க கிளர்ந்தெழும் விடுதலை வேட்கைகொண்ட இயக்கங்கள் அச்சமூகத்தை நன்கு ஆராயாமல் அதன் வரலாற்று தன்மைகளை நிகழ்காலத் தேவைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் பேசும் சகல பண்பாட்டு வேறுபாடுகள் உடையவர்களையும் புறக்கணித்து தமிழ் இந்துக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று புறப்படுகிற போது என்ன வகையான விபரீதங்கள் எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் என்னென்ன வரலாற்று தவறுகளை உணர்ச்சிக்கு ஆட்பட்டு மனிதாபிமானமே இல்லாமல் செய்ய வேண்டி இருக்கும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் தான் விடுதலை புலிகள் இயக்கம்.
ஒரு இயக்கத்துக்கான கோட்பாடு அத்தலைமையினாலே மீறப்படும் போது அதை எதிர்த்து கேள்வி கேட்க்காமல் அப்படியே ஏற்று செயல்பட வேண்டிய மனோநிலையும் தலைமை செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் அல்லது அதை எதிர்த்து  நமக்கு நாமே சாவை தேடிக்கொள்ள வேண்டுமா  என்பதான கீழ்படிதல் ஒவ்வொரு இயக்கத்தின் சர்வாதிகார தனத்தை நிரூபிப்பதாக இருக்கிறது.இன விடுதலையின் பேரால் தமிழ் பேசும் பகுதிகளில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லீம்களின் உடமைகளையும் வலுகட்டாயமாக பறித்துக்கொண்டு வெறும் கையோடு வெளியேற்றிய கொடூரத்தை புனைவில்லாமல் சொல்லும் காட்சி நெஞ்சை கணக்க செய்கிறது.
ஒரு புரட்சிகர இயக்கம் தன் ஆயுத தேவைக்காகவும் இன்னபிற தேவைக்காகவும் என்னென்ன வேலைகளிலெல்லாம் ஈடுபட வேண்டி இருக்கும் என்பதை சாகசத்தோடு வெளிநாடுகளில்  நடைபெற்ற சம்பவங்களின் ஊடே சொல்லி இருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.இதுநாள்வரை நமக்கு சொல்லப்பட்ட செய்திகளை கடந்து புலிககளின் சர்வதேச தொடர்புகளையும் அவர்களின் வலைப்பின்னலும் பிரம்மாண்டமானதும் சாகசத்தன்மை வாய்ந்தது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
இந்திய அரசியல் ,இந்திய அரசியலுக்கு ஈழப் பிரச்சனைகள் கொடுத்த நெருக்கடிகள் ,நெருக்கடிகளால் இந்திய இராணுவ வருகை,வருகைக்கு பின்பாக ஈழத்தில் நடைபெற்ற அக்கிரமங்கள் அந்த அடாவடித்தனத்துக்கு புலிகளின் எதிர்வினை ,நள்ளிரவில் பிரபாகரனை சுட்டுக்கொல்ல டெக்ரா டூனில் இருந்து வான்வழியாக வந்திறங்கும் ஆயுதப்படை .இரவோடு இரவாக நடந்த சண்டையில் வந்த அநேகரும் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் மரித்துப்போக இது மேலும் சிக்கலை கொடுக்குமோ என்கிற பயத்தில் பின்வாங்கிய இந்திய ராணுவம் என ஒவ்வொரு காட்சியாக இந்திய -இலங்கை அரசுகளுக்குமான  தொடர்புகளின் வழியே அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி.ஆரின் உதவிகள் என ஈழ மக்களின் மீதான பரிவு விடுதலைப் புலிகளின் தமிழக ஆயுத பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும் முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இடம் பெற்றிருக்கிறது.கன்னி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேக போராட்ட யுக்தியாக இருந்தது என்பதை இந்நூலின் மூலம் காண முடிகிறது.அதே வேலை எத்தகைய மனோநிலையில் அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள் மரணத்தை முன் வந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கான புறச்சூழலையும் உணர்த்துகிறது.
பிரான்ஸ்,தாய்லாந்து,ஜெர்மனி,சுவிஸ்,இங்கிலாந்து,சிங்கப்பூர்,ருமேனியா,கம்போடியா,செக் குடியரசு,கிழக்கு ஆப்ரிக்கா,மியான்மார்,இத்தாலி,ரஷ்யா,பெல்ஜியம்,போலாந்து,இஸ்காண்டிநோவியா,இந்தோனேசியா,நைஜீரியா மற்றும் இந்நூலில் அரசியல் சூழல் கருதி குறிப்பிட முடியாமல் போன நாடுகளும் சேர்த்து உலகம் சுற்றும் வாலிபனாக வளம் வரும் வெளிநாட்டு பிரிவு ஊழியர்கள் மருந்து,ஆயுதம் மற்றும் இதர கொள்வினை செய்யும் போது எதிர்கொள்ளும் துனீ கர செயல் குறிப்பாக ஆப்ரிக்க கள்ளச்சந்தை தலைவனிடம் ஆயுத கொள்வினைக்காக சந்திக்கும் தருவாயும் இந்தியாவின் பெங்களூரில் துறைமுக அதிகாரியிடம் மருந்து கொள்வினைக்காக இசைந்து போகவேண்டிய சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் ஆண் தன்மையை உணர்த்துவதோடு..... இயக்க உறுதிமொழிகளும் கட்டுப்பாடுகளும் இங்கு எடுபடாது என்பதை நடைமுறை எதார்த்தத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.          
மொத்தம் 32 விடுதலைக் குழுக்கள் இயங்கியதாக சொல்லும் சாத்திரி ஒவ்வொரு குழுவும் யாருடைய நிதியின் மூலம் இயங்கின அவைகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் சக குழுக்களோடு கொண்ட முரண்பாடு முற்றி பகையுணர்வாக உருமாறி ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்ட சம்பவங்கள் பின் அதன் தொடர்ச்சியாய் புலிகளால் அனைத்து குழக்களும் ஒழித்துகட்டபட்ட கதைகள் என நீள்கிறது. சமகால படிப்பினையாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தோற்றமும் மறைவும் நம் கண்முன்னே மனிதத் தன்மையற்ற ஒரு காட்சியாய்  இன அழிப்பாய் நடந்துமுடிந்தபோதிலும் ஒரு புரட்சிகர இயக்கம் சரியான திசைவழியில் பயணிக்காமல் போனால் அது தானாகவே நீர்த்துப்போகும் என்பதன் சமகால எடுத்துக்காட்டு தான் ஈழப் பிரச்சனையில் விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவமாகும்.
புலிகள் அமைப்பின் தலைவர்கள் கிட்டு,பொட்டு அம்மன்,ஆண்டன் பாலசிங்கம்,அவரின் மனைவி அடேல்,மாத்தையா,கருணா,நடேசன்,குமரன் பத்மநாபன்,எல்லாவற்றுக்கும் முன்பாக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் என ஒரு இன விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கூறுகளை அதன் அரசியல் தத்துவார்த்த நடைமுறை முரண்பாடுகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது ஆயுத எழுத்து.
நெருக்கடி ,உல்லாசம்,காமம்,வேட்கை,காதல்,சாகசம்,சுவாரஸ்யம் என மனித வாழ்நிலையின் பல்வேறு அம்சங்களை சுமந்து நிற்கும் ஒரு இயக்கப் போராளியின்  அனுபவங்கள் நிறைந்த இத்தொகுப்பு முழுமையானதல்ல மிக சொற்பமான பகிர்வுகளே என்கிற போதும் உணர்ச்சி வேகத்தில் எடுக்கிற முடிவுகள் ஒருபோதும் நன்மை பயக்காது மாறாக விபரீதத்தில் தான் கொண்டு நிறுத்தும் என்பதை தான் சிறுவயது அனுபவத்தோடு சுட்டிக்காட்டி இருப்பது தான் இத்தொகுப்பின் தனித்தன்மையாக அமைந்திருக்கிறது.அப்பவே   படி....   படினு.... சொன்னாங்க நான் தான் கேக்கல.... என மனசாட்சி மறுகும்  மனித தடுமாற்றம் இயல்பானதே!

No Comment