Navigation


RSS : Articles / Comments


பிப்பிலிப் பேய்

11:22 AM, Posted by sathiri, No Comment

பிப்பிலிப் பேய்


கதையின் காலம் 1984..



"ஆஆஆஆஆஆஆஆஆஆ".............."ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"..
 ஜயோ".......

.வழைமையாய் இரவு பத்துமணிக்கு பிறகு கேட்கும் அந்த பெண்ணின் அலறல் அன்றைக்கும் கேட்டது. மருதடி பிள்ளையார் கோயில் தேர் முட்டியில் அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேரும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள்.

"டேய் பேய் கத்துதடா நேரமும் பத்தரையாகிது வாங்கோடா போவம்".. என்று லேசாய் நடுக்கியபடி சொன்னான் இருள் அழகன் சிவா .

" டேய் அது பேயில்லை மகேந்திரத்தாரின்ரை இரண்டாவது பெட்டை தேவரதிக்கு விசர் பிடிச்சிட்டுதாம். அவள்தான் கத்துறாள். சீரணி மலையாள சாத்திரியிட்டை தொடங்கி மட்டக்கிளப்புவரை கொண்டு போய் பேயோட்டி பாத்திட்டினமாம். ஒண்டும் சரிவரேல்லை".. என்றான் காந்தன்.

"விசர் பிடிச்சிட்டுதா நல்ல படிச்ச பெட்டையல்லோ யாழ்ப்பாணம் கற்றன் நசினலிலை (வங்கி)வேலை செய்தவள்" இது நான். வேலைக்கு போய் வாற நேரத்திலை மினிபஸ் கொண்டெக்கரர் பெடியன் ஒருத்தனை லவ் பண்ணினவளாம் அது தெரியவந் து தகப்பன் காரன் சரியான அடியாம். பிறகு வேறையிடத்திலை மாப்பிளை தேட வெளிக்கிடேக்குள்ளை பெட்டைக்கு விசர் பிடிச்சது எண்டினம் சிலபேர் . ஆனால் செய்வினை செய்ததிலை பேய் பிடிச்சிட்டுது எண்டும் சொல்லினம். இரவிலை அவளை சங்கிலியிலை கட்டித்தானாம் வைக்கிறது. சரியா உண்மை பொய்தெரியேல்லை என்று நீண்ட விளக்கத்தை சொன்னான் சசி.

"அவள் கத்துறது சரி ஆனால் இரவிலை வீடுகளுக்கு கல்லெறியிறது ஆராம்"?? கேட்டுவிட்டு எல்லாரையும் பார்த்தேன். மற்றவர்களும் ஆளையாள் பார்த்தார்கள்.

சத்தியமா பேய்தானாம் உலாவுறது போன கிழைமை சாமத்திலை போன யாரோ சங்கனை காரனுக்கு அடிச்சு அவன் ரத்தம் ரத்தமா சத்தியெடுத்தவனாம்.உது கனவருசமா உலாவுதாம். ஆனா இடைக்கிடைதானாம் இப்பிடி தன்ரை வேலையை காட்டுமெண்டுஅம்மா சொன்னவா . என்று சொல்லும் போதே இருள் அழகனின் முகத்தில் பேயறைந்தது போலவே பயம் தெரிந்தது.


இன்னொரு விசயம் தெரியுமோ முக்கியமா சனி ஞாயிறு இரவிலைதான் பேய் உலாவுதாம் அண்டைக்குத்தானம் அனேகமா கல்லெறி விழுறது . பேய் லீவுநாளிலைதான் உலாவவேணும் எண்டுஏதும் சட்டம் இருக்குதோ தெரியாது எண்டு தனது திக்கு வாயால் திக்கி திக்கி சொல்லி முடித்து விட்டு சிரித்தான் பிறேம். நானும் கேள்விப்பட்டனான் சனி ஞாயிறுகளிலைதானாம் கல்லெறி விழுறது எண்டு றோட்டுக்கரையிலை இருக்கிற சனங்கள் சொல்லினம். சிலநேரம் ரோந்து போற ஆமிக்காரன்தான் எறியிறானோ எண்டும் பயத்திலை அவை வெளியாலை வந்து பாக்கிறேல்லை... என்று  நான் சொல்லி முடிக்க முதலே சரி இந்த சனி ஞாயிறு நாங்கள் ஒருக்கா ரோந்து போய் பாப்பம் எண்டான் காந்தன்.

எதுக்கும் சுடலையில் பிணம் எரிக்கும் சந்திரனிட்டை பேயை பற்றி கேட்டுப் பாக்கலாமெண்டு யோசிச்சாலும். அவனிட்டை கேட்டு பேயை அலேட் ஆக்காமல் நாங்களாகவே தேடி பிடிக்கிறதெண்டு முடிவாயிட்டுது.
சரி இந்த சனி இரவு பேய் பிடிக்கிறதெண்டு முடிவாகியது.

"பேயோடையெல்லாம் விழையாடாதையுங்கோ நான் வரேல்லை"..என்று அடம்பிடித்த இருள்அழகனையும் விடாப்பிடியாய் எங்களோடு கட்டாயம் வரவேணும் இல்லாட்டி எங்களோடை சேரக்கூடாது எண்டு சொல்லியாச்சு அவனும் மெளனமாய் தலையாட்டியிருந்தான்.

திட்டத்தை போடத்தொடங்கினோம்.பேய் பிடிக்கப் போவதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. நானும் பிறேமும் புலிகள் இயக்கத்தில் இருந்ததால் எங்களிடம் ரி.என்.ரி ரக கைக்குண்டுகள் இருந்தது. அடுத்தது காந்தன் அவன் புளொட் அவனிடமும் பென்ரலைற் குண்டு ஒன்று இருந்தது.சசி ஈ.பி யிலை இருந்தவன் அவனிட்டை குத்திப்போட்டு எறியிற குண்டு இருந்தது இறுதியாக குணம் மற்றும் இருள் அழகன் இவர்கள் எந்த இயக்கங்களையும் சாராது கல்வியே கண்ணாயிருந்தவர்கள். . அவர்களிற்கு ஆயுதத்திற்கு என்ன செய்யலாமென யோசித்த பொழுதுதான். கோயிலில் ஜயர் வேட்டை திருவிழாவிற்கு வாழை வெட்டும் வாள் நினைவுக்கு வந்தது. இரண்டு வாள்கள் கோயில் வாகன சாலையில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும்.
யாருக்கும் தெரியாமல் அதை எடுப்பது என்று முடிவானது.


அன்று சனிக்கிழைமை இரவு பதினொன்றை தொட்டுக்கொண்டிருந்தது பேய் பிடிக்கப்போகும் ஆறு பேர் கொண்ட எங்கள் அணி ஆளிற்கு ஒவ்வொரு ரோச் லைற்றும் ஆயுதங்களோடு தயாராகியிருந்தது. எங்கள் திட்டப்படி பிறேமும் இருள்அழகனும் மானிப்பாய் மருதடிக்கும் பிப்பிலிக்கும் இடையில் வரும் வயல் வெளியில் இடையில் உள்ள நாயுருவி பத்தைக்குள் போய் ஒழித்திருப்பது. அங்கிருந்து நீளமான வீதியில் இரண்டுபக்கமும் பாக்கலாம் ஆமி ரோந்துவந்தால் அதை அவர்கள் கவனிக்வேண்டும். ரோந்து வருபவர்கள் பேசாமல் நேரை போனால் அப்படியே பதுங்கியிருக்கவேணும். அவங்கள் இறங்கி றோட்லை வீடுகளிலை சோதனை செய்ய தொடங்கினால் குண்டு அடிக்கிறது.. அப்ப நாங்கள் எல்லாரும் வீடுகளிற்கு போய்விடுவது.

 காரணம் அப்பஎங்களிடம் வோக்கியோ செல்போன்களோ இல்லாத காலம்.
அடுத்ததாய் நானும் காந்தனும் தோட்டவெளிகளுக்குள்ளாலை சுடலைக்குள் போய் பார்ப்பது சசியும் குணமும் எங்களோடு வந்து இடையில் பிரிந்து சுடகை்கு இறங்கும் ஒழுங்கைக்குள் போய் கவனிப்பது அதற்கு அருகில்தான் விசர் பிடிச்ச தேவரதியின்ரை வீடும் இருந்தது. புறப்படத் தயாரானதும் இருள் அழகன் விபூதியை எடுத்து நெத்தியிலும் கொஞ்சத்தை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டான்.


தோட்டங்களிற்குள்ளால் இறங்கி நடக்கத் தொடங்கினோம். மெல்லிதான நிலவு வெளிச்சமும் இருந்தது .பிறேமிற்கு அடுத்ததாக கடைசியாய் இருள் அழகன் வந்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் டேய் அ...அ....அ....வனை கா...கா....கா...ணேல்லையடா எண்டு கத்தினான். எல்லாரும் நிண்டு திரும்பி பார்த்தோம் . இருள் அழகளை காணவில்லை ஓடிவிட்டான். ஒராள் குறைந்ததால் திட்டத்தை மாற்றவேண்டி வந்தது. பிறேமும் சசியும் பிரதான வீதிய கவனிப்பதற்காக இடையில் பிரிந்து போய் பற்றைக்குள் படுத்ததும் எங்களிற்கு ரோச் லைற் முலம் சிக்னல் தந்தனர். நாங்கள் மூவரும். சுடலைப்பக்கமாக போய் எட்டிப்பார்த்தோம் அன்று பிணம் எதுவும் இல்லாததால் சுடலைக்காவற்காரளையும் காணவில்லை..

மயானம்  மயான அமைதியாய் இருந்தது..மயானம் அப்பிடித்தானே இருக்கும்.பின்னர் வேலியோடு ஒட்டியபடி பதுங்கியபடி பிரதான வீதிப் பக்கமாக முன்னேறிக்கொண்டிருந்தபொழுது மீண்டும் அதே "ஜயோ".....அலறல்.அப்படியே நின்று ஒருத்தரை ஒருத்தர் பாத்துவிட்டு மீண்டும் நடக்கத்தொடங்கிய பொழுது ஒழுங்கையின் மறு பக்கத்திலிருந்து ஒதிரே ஒரு உருவம் மெதுவாக பிரதான வீதிக்கு வந்தது அங்கும் இங்கும் பார்த்தது.


நாங்கள் ஆளையாள் சுரண்டி "டேய் பேய்"..எண்று மெதுவான குரலில் சொல்லிவிட்டு அப்டியே அமர்ந்து கவனித்தோம். "டேய் பேயின்ரை கால் நிலத்திலை முட்டுதா வடிவா பார் முட்டாட்டி பேய்தான் ஓடிப் போயிடுவம்" என்றான் குணம். உற்று பாத்தோம் மெல்லிய வெளிச்சம் எண்டாதை கால் முட்டின மாதிரியும் இருந்தது முட்டாத மாதிரியும் இருந்தது. பேய் வெள்ளை உடுப்போடையல்லோ வரும் இதென்ன ஒரே கறுப்பாயிருக்கு என்று காந்தன் கிசு கிசுக்க . சிலநேரம் வைரவராயும் இருக்கலாமெண்டன்.

உருவம் வீதியை கடந்து எங்கள் பக்கமாய் ஒழுங்கைக்குள் இறங்கியது எங்கள் இதயத்துடிப்பும் கொஞ்சம் அதிகரித்தது. நான் கைக்குண்டினை இறுக்கி பிடித்திருந்தேன். மறுபக்கம் இறங்கிய உருவம் குனிந்து சில கற்களை எடுத்து அருகில் இருந்த வீடுகளிற்கு எறிந்தது மீண்டும் தேவரதியின் அலறல்.

உருவம் வேலியோரமாக இருட்டிற்குள் இறங்கியது .
"டேய் பேய் மறைஞ்சிட்டுதடா வாடா ஓடிடுவம்" மீண்டும் குணம்.

"பேசாமல் இரடா கொஞ்சநேரம் பாப்பம் இல்லாட்டி லைற் அடிச்சு பாக்கலாம்" எண்றுவிட்டு இருக்கும் போதே மீண்டும் இன்னொரு உருவம் ஒழுங்கையில் இறங்கியது."டேய் ஒண்டில்லையடா இரண்டுபேய்" என்றேன் மெதுவாக.

இப்பொழுது இருளில் நின்ற உருவம் வெளியே வந்து ஒழுங்கையில் இறங்கிய மற்றைய உருவத்தோடு சேர்ந்து நாங்கள் பதுங்கியிருந்த பக்கமாக வரத்தொடங்கியது. அருகில் வரும்பொழுதுதான் ஒன்று ஆண் மற்றது பெண் என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஆண் உருவம் மீண்டும் சில கற்களை எடுத்து வீடுகளிற்கு எறிந்து விட்டு எங்களை அண்மித்து விட்டார்கள். நாங்கள் வேலியோரமாக தரையோடு ஒட்டி படுத்துகொண்டோம். எங்களை தாண்டி அவர்கள் சுடலைக்கு பக்கத்திலிருந்த காணிக்குள் புகுந்துகொண்டார்கள்.

 நாங்கள் மெதுவாக பதுங்கியபடி காணிக்கு புகுந்து கொண்டோம். அந்தக் காணிக்குள் ஒரு கிணறு இருந்தது அதன்முன்பக்கம் சீமெந்து தரைபோட்டிருந்தார்கள். சீமெந்து தரையில்மேல் போய் சேர்ந்த இரு உருவங்களிற்கும் நாங்கள் மெதுவாக போனதில் சருகு சத்தம் கேட்டிருக்கவேண்டும் கொஞ்சநேரம் அப்படியே நின்று சுத்திவர பார்த்தார்கள்.
நாங்கள் அசையாமல் நின்று கொண்டதும். ஆண் உருவம் தனது சாரத்தினை கழற்றி தரையில் விரித்தது பின்னர் இருவரும் அதில் படுத்துக்கொள்ள அவர்களிற்கு அருகாக முன்னேறியிருந்த நாங்கள் ஆளையாள் சுரண்டி சமிக்கை செய்துவிட்டு முன்று பேருமாக சேந்து ரோச் வெளிச்சத்தை அடித்படி "அசையாதை".. என்று கத்தினோம்.

ஆண் முழு நிருவாணமாக குந்தியிருந்தார் பெண் அப்பொழுதுதான் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கியிருந்தார். வெளிச்சம் அவர்கள் மீது பாய்ந்து கொண்டிருந்ததால் அவர்களால் எங்களை பாரக்கமுடியவில்லை அதனால் அவர்கள் ரோந்து வந்த ஆமிக்காரர்கள் நாங்கள் என நினைச்சு மாத்தையா எங்களை ஒண்டும் செய்யாதேங்கோ எண்டு நிலத்தில் படுத்து கும்பிட்டார்கள்.ரோச் வெளிச்சத்தை நிறுத்திவிட்டு அவர்களிட்டை உடுப்பை போட சொல்லிப்போட்டு விசாரித்தோம்.

 ஆண் எங்கள் ஊரில் வீடுகளில் கூலிவேலைகளிற்கு போவபர் அதோடு சீவல் தொழிலாளி நல்ல உடற்கட்டானவர். அந்த பெண்ணின் வீட்டிற்கும் போய் எடுபிடி வேலைகள் செய்வார்.பெண்ணின் கணவர் அரபு நாடு ஒன்றில் கட்டிட பொறியியவாளர். இரண்டு பிள்ளைகள். மாமன் மாமியாருடன் வசித்து வந்தவர்.

மாமனார் சனி ஞாயிறு நாட்களில் யாழ்ப்பாணம் நவீன சந்தை இரவு காவல் கடைமைக்கு போய் விடுவார். பெண் மாமியாருடன் பிள்ளைகளை படுக்கவைத்து விட்டு வெளியேறிவிடுவார்.இதனால்தான் சனி ஞாயிறுகளில் மட்டும் பேய் உலாவியிருந்தது.அதே நேரம் விசர் பிடித்த தேவரதியின் அலறலும் இரவு ஆமிரோந்தும் இவர்களிற்கு கை கொடுத்திருந்தது. ஆண் தான் வந்து விட்டதை அறிவிக்கத்தான் கல்லால் எறிவார். இப்படி இவர்களை விசாரித்துக்கொண்டிருக்கும் போது குண்டு வெடித்த சத்தம் ஊரே அதிர்ந்தது.

ஆமி வந்திட்டான் எனவே அவர்களையும் இழுத்துக்கொண்டு பின்னால் தோட்டங்களிற்குள் புகுந்து பதுங்கிக் கொண்டோம்.சிறிது நேரம் துப்பாக்கி சூட்டு சத்தங்களும் கேட்டது ஆமி சந்தியில் நிண்டு சுட்டு விட்டு மாகல் நோக்கி போய்க்கொண்டிருந்தான். முன்னால் போய்கொண்டிருந்த ஜுப்பில் பெரிய லைற் ஒன்றை பூட்டி சுத்திவர அடித்து பாத்தக்கொண்டே போனார்கள். இனி இந்த பேய் விழையாட்டு விழையாடினால் சந்தியில் கட்டுவைச்சு போடுவம் எண்டு எச்சரித்து அவர்களையும் கலைத்து விட்டோம்.

அடுத்தநாள் குண்டு சத்தத்தை பற்றித்தான் ஊரிலை சனத்தின்ரை கதையாயிருந்தது. நாங்கள் கோயிலடிக்கு வந்திருந்தம் இருள் அழகன் மட்டும் வரவில்லை. அங்கு தோட்டம் செய்யும் ஒருவர் கோயில் வாளை கையில் தூக்கியபடி வந்துகொண்டிருந்தார். அவரை அப்படியே மடக்கினம். "தம்பியவை இது கோயில் வாள். காத்தாலை தோட்டத்துக்கு போனனான் வரம்புகரையிலை கிடந்தது எப்பிடிவந்தது எண்டு தெரியேல்லையெண்டார்".

"ஜயா இரவிலை பிள்ளையார் உலாவுறவராம் அவர்தான் கொண்டுவந்து உங்கடை தோட்டத்திலை போட்டிருப்பார் இனி உங்களுக்கு நல்லகாலம்தான்".என்றபடி  வாளை வாங்கிட்டன்.அவரோ. "பிள்ளையரே நீதான் காப்பாத்தவேணும்" எண்டு கோயிலிலை விழுந்து கும்பிட்டிட்டு வீபூதியை எடுத்து பூசிக்கொண்டு போயிட்டார். இனி இருள் அழகனை தேடி போகவேணும் அவனின்ரை வீட்டுக்கு எல்லாருமாய் போனம்.

"குறுக்காலை போவாரே என்ரை பிள்கை்கு என்னடா செய்தனீங்கள் அவனுக்கு ஒரே குலைப்பன் காச்சல் காசாயம் காச்சி குடுத்திருக்கிறன். குறயைாட்டி சாமியாரிட்டை கொண்டு போய் விபூதி போடவேணும் ராத்திரி நீங்கள் தான் குண்டும் எறிஞ்சிருப்பியள் இனி இந்தப் பக்கம் வரக்கூடாது".. என்று திட்டி  அவனின் தாயார் எங்களை கலைத்துவிட்டார்.நாலைந்து நாள் கழித்து தலையை தொங்கப் போட்டபடி மீண்டும் இருள் அழகன் எங்களை தேடி கோயிலடிக்கு வந்திருந்தான்.

பி.கு.. அன்று என்னுடன் பேய் பிடிக்க வந்தவர்களில் பிறேம். புலிகள் இயக்கம். உயிருடன் இல்லை.
காந்தன் முதலில் புளொட் பின்னர் புலிகள்..உயிருடன் இல்லை
சசி ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் உயிருடன் இல்லை.
குணம்.வைத்தியர் அவுஸ்ரேலியா
இருள்அழகன்.(சிவா)பிரான்ஸ் . செய்யாத தொழில் இல்லை ஆறு மாதம் முதலாளி ஆறுமாதம் தொழிலாளி.

No Comment