Friday, November 18, 2016

காடுவரை உறவு ..இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக.

காடுவரை உறவு
இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக  (சாத்திரி)

குடியேற்றவாசிகளின் காடு  அமேசன் காடு பற்றி அறிந்திருப்போம்.இதென்ன குடியேற்றவாசிகளின் காடு? இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் பிரான்சின் கடைசி நகரமான CALAIS யில் தான் குடியேற்றவாசிகளின் காடு அமைந்துள்ளது. பிரான்சில் குளிர்காலம் தொடங்கும்போதும் தேர்தல் காலத்திலும் இந்த குடியேற்றவாசிகளின் காடு  ஊடகங்களின் முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அரசியல் வாதிகளின் வாயிலும் பேசுபொருளாக மாறிவிடும்.இந்த வருட இறுதி குளிர்,தேர்தல் இரண்டுமே ஓன்று சேர்ந்து வருவதால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத்தான் .சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்று முடியாமல் போனவர்கள் சிலர் CALAIS இரயில் நிலையத்திலும் வீதியோரங்களிலும் தங்கத் தொடங்கியிருந்தார்கள்.


அவர்களால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல்கள் ஏற்படத் தொடங்கவே பிரான்சின் கத்தோலிக்க உதவி அமைப்பானது 1999 ம் ஆண்டின் இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் சில தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் குடியேற்றவாசிகளை தங்கவைத்து உணவும் வழங்கத் தொடங்கினார்கள்.
சில பத்துப் பேரோடு தொடங்கிய முகாம்.வளைகுடா யுத்தம்,ஆப்கானில் தலிபான்கள் மீதான யுத்தம்,என்று விரிவடைத்து,அரபு வசந்தம் என்கிற பெயரில் எகிப்து,துனிசியா,லிபியா,சிரியா..உள்நாடுக் கலவரங்களாக வடிவெடுத்து இன்று ஐ.எஸ்.ஐஎஸ் .மீதான தாக்குதலாக  இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரந்து விரிந்திருப்பதைப் போலவே.இந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த மக்களால் குடியேற்றவாசிகளின் காடானது சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களோடு பரந்து விரிந்து நிற்கிறது.மிக அமைதியானதும் மீன்பிடிமற்றும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இந்தக் நகரம்  பலவருடங்களாகவே குடியேற்றவாசிகளால் நின்மதியிழந்து போயுள்ளது.

தங்கள் பண்ணைகள்,வயல்கள்,கடைகள்,வீடுகள் என்று எங்கும் ஒரே திருட்டு.வீதியிலும் நின்மதியாக நடமாடமுடியவில்லை.திடிரென வந்து எல்லாவற்றையும் பறித்துப் போகிறார்கள்.பணத் தேவைக்காக பாலியல்தொழில்,போதைப்பொருள் வியாபாரம் என குற்றங்களும் அதிகரித்துள்ளது. எனவே இவர்களை CALAIS நகரத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என அந்த நகரத்து மக்கள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது மட்டுமலாது வெளிநாடவர்கள் மீதான உச்ச கட்ட வெறுப்பையும் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.இவர்களின் வெறுப்பானது கடந்த உள்ளட்சிச் தேர்தலிலும் எதிரொலித்தது.குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துடைய தீவிர வலதுசாரிக் கட்சியான front natinal க்கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்தது.

இப்படி குடியேற்றவாசிகளுக்கு எதிராக நகர மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது.அவர்களுக்கான கழிப்பறை ,போதிய உணவு உடை என்கிற அடிப்படை வசதிகள்,குழந்தைகளுக்கான கல்வி,பெண்களுக்கான பாதுகாப்பு  எதுவுமே இல்லை எனவே அவற்றை அரசு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக் கிறார்கள்.அதே நேரம் இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையை பிரிக்கும் 30 கி.மீ  தூரக்கடலை கடப்பதற்காக சிலர் சிறிய படகுகளிலும் நீந்தியும், இரயிலின் பின்னல் தொற்றிக்கொண்டும் ஆபத்தான பயணங்களை முயற்சி செய்து இறந்தும் போயிருக்கிறார்கள். இங்கிலாந்தும் கடற்கரை பகுதியில் முட்கம்பி வேலியமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது .

தொடர்ச்சியான பல போராட்டங்களின் பின்னர் பிரான்சில் பதினோரு இடங்களில் முகாம்களை அமைத்து அங்கு அனைவரையும் தங்கவைப்பதோடு குடியேற்றவாசிகளின் காட்டிற்கு முடிவு கட்டுவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டம் கட்டமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுகிறார்கள்.ஒரு பக்கத்தால் குடியேற்றவாசிகளை வெளியேற்றிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற இருபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காரணம் இங்கிலாந்து என்பது என்பதுதான் அவர்களது கனவு தேசம்.அதற்குள் நுழைந்து விட்டால் தங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் .இதே பிரச்னை எம்மவர்களிடமும் உள்ளது.ஐரோப்பவில் மற்றைய நாடுகளில் வதிவிட அனுமதி,வீட்டு வசதி,நல்ல வேலை என அனைத்தும் இருந்தும் பெரும்பாலான தமிழர்கள் இங்கிலாந்து நோக்கியே ஓடுகிறார்கள்.அதற்கு காரணம் ஆங்கில மோகம் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை .

இது இப்படியிருக்க எங்களின் வரிப்பணத்தை வீணடித்து எதற்காக இவர்களை வைத்து பராமரிக்க வேண்டும்?எனவே  குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என  front natinal க்கட்சியும் தீவிர வலதுசாரிகளும் எதிப்பு தெரிவிக்கிறார்கள்.இவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.அது மட்டுமல்ல இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே குடியேற்றவாசிகளின் பிரச்சனை யால்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
அடுத்த வருடம் சித்திரை மாதம் பிரான்சில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலிலும் குடியேற்றவாசிகளின் பிரச்சனையே முக்கிய பேசுபொருளாக இருக்கப்போவது மடுமல்லாமல் அவர்களின் தலைவிதியையும் அதுவே தீர்மானிக்கும் என்பது நிச்சயம்.

இதே நேரம் இந்த வருடம் மட்டும் கடல் வழியாக சுமார் நான்கு இலச்சம் குடியேற்றவாசிகள் இத்தாலிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.அவர்களை சமாளிக்க முடியாமல் இத்தாலி விழி பிதுங்கி நிற்கும் அதே வேளை .அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னை கை விட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் .அதில் மூவாயிரம் பேர் வரை பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைவதற்காக எல்லையில் காத்துக் கிடக்கிறார்கள்.இத்தாலி பிரான்ஸ் எல்லையில் இன்னொரு குடியேற்ற வாசிகளின் காடு உருவாகிக்கொண்டிருக்கின்றது ..



Thursday, November 03, 2016

இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..

இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..
புதிய தலைமுறைக்காக..  சாத்திரி.

இலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக "ஆவா" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது .

 இந்தக் கட்டுரை எழுதும் நேரம் வரை  தமிழர்கள் பெரும்பான்மையாக்கள் வாழும் வடகிழக்கு முழுதும்  கடையடைப்பு,பணிப்புறக்கணிப்பு ஆகியவற்றால் நகரம் வெறிச்சோடிக்கிடப்பதோடு.அங்கங்கே காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலும் போராட்டம் நடந்துள்ளது .அது மட்டுமல்லாது சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை தமிழக கட்சிகள் சில முற்றுகையிட்டு போராட்டம் என நிமிடத்துக்கு நிமிடம் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது.

இனி விடயத்துக்கு வருவோம். அண்மைக்காலமாக யாழ் நகரத்தில் பாலியல் வன்முறை,திருட்டு,போதைப்பொருள் கடத்தல் ஆகியன அதிகரித்திருப்பதால்,நகரம் முழுவதும் ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடவேண்டும் என்று யாழ் நீதிபதி இளஞ்செழியன் கடுமையான உத்தரவொன்றினை  பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவு அமுலுக்கு வந்த சில நாட்களில் 22 ந் திகதி இரவு நேரம் 11.50 வீதியில் மோட்டார் பைக்கில்  சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
மறுநாள் காலை இது விபத்து என்றே செய்திகள் வெளியானது.இளவட்டங்கள் வழமை போல தண்ணியடிச்சிட்டு கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டியிருப்பாங்கள் என்று அனைவரும் நினைத்திருந்த வேளை  மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருப்பதால் கொலை என்கிற செய்தி மதியம் வெளியானது. இதன் பின்னரே பரபரப்பு பற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றது.சம்பவம் நடந்த இடத்துக்கு ஊடகவியலார்களோ பொதுமக்களோ போக முடியாமல் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தடவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு சென்றபோது துப்பாக்கியால் சுட்ட தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது."துப்பாக்கி சூட்டில்" மரணம் என்கிற மருத்துவர்களின் அறிக்கை ஊடகங்களில் வெளியான பின்னர்தான் தவறுதலான துப்பாக்கி சூட்டினால் மாணவர்கள் இறந்து போனார்கள்.இரவு ரோந்தில் இருந்த காவல்துறையினர் பைக்கில் வந்தவர்களை மறித்தபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றதால்  கொளையர்கள் என நினைத்து துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டார்கள்.சம்பவத்துடன் தொடர்புடைய 5 போலிசாரையும் கைது செய்துள்ளோம் என்கிற அறிக்கை காவல்துறை திணைக்களத்தால் வெளியிடப்பட்கின்றது .

இதனையடுத்து யாழில் தொடங்கிய ஆர்பாட்டம் ஊர்வலங்கள் மற்றைய நகரங்களுக்கும் பரவி  சென்னையையும்  தாண்டி தமிழர்கள் வாழும் நாடுகளுக்கும் பரவியுள்ளது.ஒரு காலத்தில் தமிழனுக்கு ஒரு பிரச்சனைஎன்றால் வீட்டுக்குள்ளேயே  அழுதுவிட்டு ஊருக்குள்ளேயே அந்த செய்தி அடங்கிப்போய்விடும்.ஆனால் இன்றைய தொழில்நுட்பம் ஒரு செக்கனிலேயே உலகத் தமிழரை ஒன்றிணைக்கிறது என்பது நல்ல விடயம்தான்.ஆனால் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் 30 ஆண்டு காலப் போர் கொடுத்த இழப்பும் வலியும் மீண்டுமொருமுறை வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களிடம் முகத்தில் கவலையும்.இந்த சம்பவத்தை பெரிதாக்கி மீண்டும் இன மோதலாக்கி சுயலாபம் தேட நினைப்பவர்கள் நாக்கில் எச்சில் ஊறவும் தொடங்கிவிட்டது .

இதே வேளை "வடக்கு கிழக்கில் நடக்கும் கலவரங்களுக்குப்பின்னல் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு உள்ளது".. என ஒய்வு பெற்ற காவலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்தை சாதரணமாக கடந்துபோய் விட முடியாது.காரணம்இப்போதுள்ள அரசானது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளோடு,மேற்குலகின் ஆசிர்வாதத்தோடும்,குறைந்தளவு பெருன்பான்மையோடு உருவான கூட்டு அரசே.மகிந்தாவை அரசியல் அநாதையாக்க அவர்மீதும் அவரது குடும்ப அங்கதவர்கள்மீதும் தொடர்ச்சியாக பாயும் வழக்குகளாலும் கைதுகளாலும் அவர் திணறிப்போயிருந்தாலும். புலிகளை தோற்கடித்ததனால் இராணுவம்,காவல்துறை,அரச அதிகாரிகள் மட்டுமல்ல சிங்கள மக்களின் பெரும் ஆதரவு இப்போதும் மகிந்தவுக்கு உள்ளது.

இப்போதுள்ள அரசை நெருக்கடிக்குள் தள்ளி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு  மகிந்த ஆதரவாளர்களே இதுபோன்ற சம்பவங்களை தூண்டிவிடுவதாகவே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.அதுமட்டுமல்ல நீண்ட காலமாகவே வன்முறையில் ஈடுபடும் குழுவென ஆவா குழு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .அது மட்டுமல்ல 2009 ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த  பின்னர் காவல்துறை அதிகாரிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமைகோரிய பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணம் அவர்கள் காவல்துறையின் ஆதரவோடு இயங்க வேண்டும்.அல்லது இராணுவப்புலனாய்வுப்பிரிவினரே அதனை இயக்கவேண்டும் என்கிற சந்தேகத்தை பாராளுமன்றத்திலேயே பல உறுப்பினர்கள் எழுப்பியுள்ளார்கள்.

எது எப்படியிருப்பினும் நடந்த சம்பவத்திற்கு கடந்த காலங்களைப் போலவல்லாது உடனடியாக சம்பத்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு .அரச தலைவர் முதற்கொண்டு சிங்களத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,காவல்துறை அதிகாரிகள்,பத்திரிகைகள்,மாணவர்கள் பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்கள்.எனவே இன அழிப்பு,இன்னுமொரு போராட்டம் என போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.நடந்தது சட்ட ஒழுங்குப்பிரச்சனையே.அதனை சட்டப்படி எதிர்கொள்வதோடு இனிவருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போராட்டங்களை நடத்துபவர்கள் ஆவாகுழு போன்ற வன்முறைக்குழுக்களை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வைத்தே போராடவேண்டும் ..