Navigation


RSS : Articles / Comments


ஆயுத எழுத்து நாவல் .ஒரு பார்வை ...ஆஸ்திரேலியாவில் இருந்து முருக பூபதி அவர்கள் ...

11:26 PM, Posted by sathiri, No Comment


சாத்திரியின் ஆயுத எழுத்து

படித்தோம் சொல்கிறோம்
po முருகபூபதி
தாயும் இன்றி தந்தையும் இன்றி தான் ஒரு இஸ்லாமியன் என்ற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டு இயக்க முகாமில் தேநீர் தயாரித்துதரும் கிச்சான் என்ற சிறுவனுக்கும் ஜீகாத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கரிகாலன் என்பவர் அவனைக்கொண்டே கிடங்கு வெட்டச்செய்து அவனது தலையில் போடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறார்.
கிச்சானின் மரணவாக்குமூலம் இவ்வாறு பதிவாகிறது:
” அண்ணே… எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப்பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சுப் பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையால கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே. அண்ணே நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூட கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தே போயிற்றுது. அதாலைதான் இது அல்லாஹ் தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே நீங்கள் போய் கரிகாலன் அண்ணையை கூட்டிவாங்க.”(பக்கம் 321)
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலின் பெயரைப்பார்த்ததும் எனக்கு மாதவன், – இயக்குநர் பாரதிராஜா நடித்து மணிரத்தினம் இயக்கிய ஆயுதஎழுத்து திரைப்படமும் அதன் பெயரளவில் நினைவுக்கு வந்தது.
வடக்கில் இந்தியத் திரைப்படங்களை புலிகள் தடைசெய்திருந்த காலப்பகுதியில் – தமிழர் கலாச்சாரத்திற்கு அந்தப்படங்கள் ஊறுவிளைவிக்கின்றன என்றே அவர்களின் தலைவர் நியாயம் சொன்னார்.ஆனால், அவர் பாதுகாப்பாக பங்கருக்குள் இருந்து ஆயுத எழுத்து திரைப்படம் பார்த்துவிட்டு, தன்னைப்பார்க்க வந்திருந்த முள்ளுமலரும் மகேந்திரனிடம், ” பாரதிராஜா அந்தப்படத்தில் நடித்திருப்பது அநாவசியமானது ” என்றும் விமர்சனம் சொல்லிவிட்டு மகேந்திரனுக்கு பல திரைப்படங்களின் சி.டி.க்களையும் அன்பளிப்பாக கொடுத்தனுப்பினார்.
தற்பொழுது பிரான்ஸில் புகலிடம்பெற்று வதியும் முன்னாள் விடுதலைப்புலிப்போராளி
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை அவுஸ்திரேலியாவில் வதியும் இலக்கிய நண்பர் டொக்டர் நடேசனிடம் பெற்று படித்தேன்.
யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த கௌரிபால் சிறி என்ற சாத்திரி, 1984 இல் தமது பாடசாலைப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டவர் என்பது தெரிகிறது. 2001 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் பல பிரிவுகளிலும் உள்நாட்டு வெளிநாட்டு கட்டமைப்புகளிலும் பணியாற்றியிருப்பவர். அவர் பெற்ற அனுபவம், அவரது ஆயுத எழுத்தாக எமது முன்னால், 386 பக்கங்களில் விரிந்திருக்கிறது.
” படியுங்கோடா…படியுங்கோடா ” என்ற பல்லவிதான் அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் பேசுபொருளாகவும் நீடித்தது. இளைஞர்கள் மட்டுமன்றி இளம் யுவதிகளும் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டு சயனைட்டும் அணிந்து ஆயுதமும் ஏந்தத்தொடங்கியதும் அந்த அப்பாவி பெற்றோர்களின் கனவுகள் யாவும் குலைந்துபோனது. புலிகளின் தாகம்; தமிழீழ தாயகம் என்று இளம்தலைமுறை பாடத்தொடங்கியதும் அந்தப்பெற்றோர் கையாலாகாதவர்களானார்கள்.
இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் அறிமுகமானபொழுது கல்வியையே மூலதனமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இந்த மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடும் தந்திரோபாயமான போராட்டத்திலிருந்து தப்பவைப்பதற்கே பெரிதும் முயன்றனர்.
இந்த நாவலில் வரும் அவன் என்ற பாத்திரத்துக்கு பெயர் இல்லை. கிட்டு, மாத்தையா, பொட்டு அம்மான், கரிகாலன், ஸ்ரீசபாரத்தினம், லோரன்ஸ் திலகர், யோகி, இப்படி எல்லோரும் தமிழ் உலகம் அறிந்த பெயருடன் வருகிறார்கள். ஆனால் இந்நாவலின் நாயகன் பெயர் அவன். இந்த அவனில் பலர் இருக்கலாம். ஏன் நீங்களாகவும் இருக்கலாம் … என்று ஒவ்வொரு ஈழத்தமிழ் இளைஞனின் தலையிலும் அனைத்தையும் வைக்கிறார் சாத்திரி.
விடுதலைக்காக என்னவோ எல்லாம் செய்துவிட்டு, எத்தனையோ சகோதரப்படுகொலைகளையும் அழிவுகளையும் சந்தித்துவிட்டு தமிழ் ஈழத்தின் பெயரால் எத்தனையோ பாதகங்களையும் குற்றங்களையும் புரிந்துவிட்டு விபசாரிகளின் அரவணைப்பில் எல்லாம் சுகித்துவிட்டு, இறுதியில் தலைவர் போர் நிறுத்தத்திற்கு தயாராகிவிட்டார், சிறிதுகாலத்துக்கு எல்லாவற்றையும் நிறுத்துமாறு சொல்லிவிட்டார், முதலான பணிப்புரைகள் வந்த பின்னர்தான் இந்நாவலின் நாயகன் அவனுக்கு, தனது வாழ்வாதாரம் எதிர்காலம் பற்றிய சிந்தனை வருகிறது.
உணவு விடுதியில் எச்சில்கோப்பை கழுவும் பொழுதான் சுடலைஞானம் பிறக்கிறது.
” ஊர் சுத்தாமல் படியடா படியடா ” என்று அவனது அப்பா திட்டிய திட்டுக்கள் திரும்பத்திரும்ப அவன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.
மது, புகைத்தல், உடலுக்கு தீங்குவிளைவிக்கும் போதைவஸ்து முதலானவற்றை அடியோடு வெறுத்தவர்தான் அவனுக்கும் அவனைப்போன்ற பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கும் ஆதர்சமாக விளங்கிய தலைவர். ஆனால் அவர் அரசியல் ஆதாயம் கருதியோ தந்திரோபாயமாகவோ போர்நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதும் அவர் தவிர்க்கச்சொன்னவற்றை நாடி ஓடி இறுதியில் மதுவெறியிலேயே அவன் காரை செலுத்திச்சென்று பள்ளத்தில் வீழந்து மடிவதுடன் நாவல் முடிகிறது.
தலைவரின் கொள்கைகள் கோட்பாடுகள் ஈழத்தமிழனுக்கு மட்டுதான் விதிக்கப்பட்டிருந்ததா…? ஈழப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் நிதி சேகரிக்கவும் புகலிட நாடுகளில் தஞ்சமடைந்த இளைஞர்களுக்கு விதிக்கப்படவில்லையா?
ஒரு தடவை விமானத்தில் பறந்துகொண்டிருந்தபொழுது விமானப்பணிப்பெண் அருந்தத்தந்த பியரின் பெயர் டைகர். புலியின் பெயரிலும் பியர் இருப்பது எனக்கு அன்றுதான் தெரியும். சாத்திரி எழுதியிருக்கும் ஆயுதஎழுத்து நாவலின் இறுதியிலும் மலிவுவிலையில் விற்கப்படும் சோழன் பியர்வருகிறது. என்ன ஒற்றுமை. சோழமன்னனின் புலிக்கொடியுடன் இரண்டு பியர்களையும் ஒப்பிட்டுப்பார்க்க மனம் கூசியது.
நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத்தேர்தலில் ஒரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரை எப்படியாவது அதிகூடிய விருப்பு வாக்குகளினால் வெல்லவைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பிரயத்தனப்பட்டு, ” சோழன் பரம்பரையே எழுந்து வாடா” என்ற பாடலையும் அவருக்கு சார்பான இணையத்தளம் ஒன்று அடிக்கடி ஒலிபரப்பியது.
கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய தமிழன் பரம்பரையில் சோழமன்னனும் இடையில் புகுந்துகொண்டான். இந்தப்பரம்பரையின் சரித்திரம் தெரியாத யாரோ ஒரு மதுப்பிரியன் டைகர் பியரும் – சோழன் பியரும் கண்டுபிடித்துவிட்டான்.
இன்று யாழ்ப்பாணம்தான் சாராய விற்பனையில் இலங்கை அரசுக்கு வரிவழங்குவதில் முன்னிலை வகிப்பதாக நல்லாட்சிக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் ஆதரவு வழங்கப்பட்ட புதிய ஜனாதிபதியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியவரும் இந்நாவலின் நாயகனின் தலைவர்தான். ஈழம் கேட்ட தலைவரின் வழித்தோன்றல்கள் தற்பொழுது பாராளுமன்றில் நியமன அங்கத்தவர் பதவிகேட்டதிலும் வடமாகண முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதிலும் போராடிக்கொண்டிருக்கிறது.
இந்நாவலின் ஆசிரியர் அவன் என்ற பாத்திரம் ஊடாக தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொண்டு புலிகள் இயக்கத்தையும் அதன் போராளித்தலைவர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களையும் பிற ஆயுதம் ஏந்திய இயக்கங்களையும் அரசியல் தலைவர்களையும் உள்நாட்டு வெளிநாட்டு அரசுகளையும், உளவுத்துறைகளையும் விமர்சித்துக்கொண்டு ஒரு கதைசொல்லியாக இந்நாவலை நகர்த்திச்செல்கிறார்.
அவரது உதாரணங்கள் சில: நட்சத்திர நாடு – அமெரிக்கா, நட்சத்திர நாய்கள் அமெரிக்கா சி.ஐ.ஏ உளவமைப்பு, மற்றும் அவர்களுக்காகப் பணத்துக்கு வேலை செய்பவர்கள். உடைந்த நாடு: ரஷ்யா.
இளைஞர்களை உணர்ச்சியினால் உசுப்பேற்றிய தமிழ்த்தலைவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அவர்களில் சிலர் தம்மால் உசுப்பேற்றியவர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆயுதமுனையில் எச்சரிக்கப்பட்டார்கள். ஒரே கொள்கையுடன் உருவான இயக்கங்கள் அனைத்தும் ஆயுதம்தான் ஏந்தின. முடிந்தவரையில் சகோதரப்படுகொலைகளை நடத்திவிட்டு, இறுதியில் தம்மால் ஆயுதம் களையப்பட்ட புளட், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கங்களை தேர்தலுக்காக ஒரு கூட்டமைப்பாக இணைத்த தலைவர், தாமும் தமது இயக்கமும் மட்டுமே ஆயுதங்களையும் சயனைட்டுகளையும் நம்பியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
இவர்கள் அனைவரும் இந்நாவலில் இடம்பெறும் சம்பவங்களில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த நாவலின் தொனிப்பொருள் சுயவிமர்சனம்தான். அதிலிருந்துதான் உண்மைகளை வாசகர்கள் தேட வேண்டும். தேடுதலுடன் நின்றுவிடாமல் செய்த பாவங்களுக்கு விமோசனமும் தேட வேண்டும். அவ்வாறு பாவசங்கீர்த்தனம் செய்தால் அதுவே இந்நாவலின் வெற்றி.
இல்லையேல் பத்தோடு பதினொன்றாக ஈழப்போராட்ட நாவல்களில் சாத்திரியின் ஆயுதஎழுத்தும் ஒன்று என்ற வரிசைக்குள் வந்துவிடும்.
அல்சர் நோய் உடலில் எந்தப்பாகத்தில் வரும் என்பதும் தெரியாத அப்பாவியாகவும் இளம்குறுத்துக்கள் இந்த இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை யாழ்குடாநாட்டில் காலம்காலமாக வாழ்ந்த முஸ்லிம்மக்களின் வாழ்வின் மறக்கமுடியாத நாள். அவர்களின் வெளியேற்றம் குறித்தே நாவலின் 36, 37, 38, 39 ஆவது அத்தியாயங்கள் பேசுகின்றன.
சிங்கள அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் பிறந்த ரெஜினா என்ற இளம் யுவதி எப்படி கரும்புலியாகி ஒரு முக்கிய சிங்கள அரசியல் தலைவருடன் சிதறிப்போனாள், அரசின் புலனாய்வுப்பிரிவு சித்திரவதைக்கூடத்தில் முன்னாள் ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தில் இணைந்திருந்த ராணி என்ற பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் அவனை பாலியல்ரீதியில் துன்புறுத்தி உண்மையை வரவழைக்கப்பார்க்கிறாள்.
அவள் எவ்வாறு ஒரு விடுதலை இயக்கத்திலிருந்து போராடப்புறப்பட்டு புலிகளில் இருந்த ஒரு சொந்தக்காரப்பெடியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவளது காதல் கணவன் (அவனும் அந்த இயக்கத்தில் இருந்தவன்) சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக இவளும் அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைந்து தன் கணவனைக்காட்டிக்கொடுத்தவனை பழி தீர்த்துவிட்டு ஒரு பெண் கரும்புலிக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்பட்ட அவனை சித்திரவதை முகாமில் விதையை நசுக்கி வதைக்கிறாள்.
ஈழ விடுதலைக்காக புறப்பட்டு பணத்துக்காக காதலர்களை பிரிக்கும் பரிசுகெட்ட வேலைகளிலும் ஒவ்வொருவர் தனிப்பட்ட வாழ்விலும் மூக்கை நுழைத்து அவர்களின் வாழ்வை சீரழித்த கதைகளையும் இந்நாவல் சித்திரிக்கிறது.
இந்நாவல் இவ்வாறு தனிநபர், சமூகம், விடுதலை இயக்கம் பற்றியெல்லாம் விமர்சிக்கிறது. அதனால்தானோ இதன் வெளியீட்டு அரங்கு சென்னையில் நடந்தபொழுது அதனை கண்டுகொள்ளாமல் பலர் கள்ளமௌனம் அனுட்டித்தனர்.
ஒரு காலகட்டத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் தன்னைப்பினைத்துக்கொண்ட சாத்திரி காலம் கடந்து ஆழமாக சிந்தித்ததன் பெறுபேறுதான் ஆயுதஎழுத்து. அதனை அவர் நாவல் வடிவில் இலக்கிய உலகிற்கு வரவாக்கியுள்ளார்.
அதன்மூலம் அவர் பாவசங்கீர்த்தனமும் செய்துகொண்டார். மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்….? என்ற வினாவையும் இந்நாவல் செய்தியாக்கியுள்ளது.
—0—